Monday, December 12, 2011

டைம் கரன்ஸி!

கீழ் வரும் சீன்களைப் படித்துவிட்டு கடைசியில் “**********”க்கு அப்புறம் படிக்கலாம். அல்லது “***********”க்கு கீழ் படித்துவிட்டும் மேலிருந்து சீன்களைப் படிக்கலாம். உங்கள் விருப்பம்.

கொத்தடிமைகள் போல வரிசையாக நின்று கவுண்டருக்குள் கை நீட்டிச் சம்பளம் வாங்குகிறான் ஹீரோ.  ஆனால் சம்பளம் கரன்ஸிகளாக இல்லை!

ஓப்பனிங் சீன்
அது ஒரு மங்கலான வெளிச்சத்தில் இயங்கும் நட்சத்திர மது விடுதி. அறை முழுக்க ஆக்ஸிஜெனில் போதையிருந்தது. நீட்டிமுழக்கி நாலு பேர் ”ழ்..ழ்ழ்.ழ்ழ்.” என்று வழுக்கும் ஆங்கிலம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நெருக்கிப் போடப்பட்டிருக்கும் டேபிள் சேர்களை கண்ணெதிரே மறைய வைக்கும் சிகரெட் புகை. புதிதாய் நுழைபவர்கள் வெண்புகைக்குக் கண் பழகிய பின் தான் எவரையும் பார்க்கமுடியும். பார் சிப்பந்தி ஷெல்ஃபிலிருந்து எடுத்து மது கொடுக்கும் கவுண்டர் அருகே போடப்பட்டிருக்கும் கழுத்து நீண்ட க்ரோர்பதி சேரில் உட்கார்ந்து சில அனுபவஸ்தர்கள் நிதானமாக மதுவருந்திக் கொண்டிருக்கிறார்கள். குடிமகன்களின் டேபிள் சேர்களை சுற்றி ’ஒரு மாதிரி’யான மாதுக்கள் சிலர் குட்டைப் பாவாடையோடு கையில் போத்தல்களுடன் நளினமாக குனிந்து நிமிர்ந்து வளைய வருகிறார்கள். ஒரு சாந்தமான வாலிபன் தனியனாய் சத்தமில்லாமல் மக் பீர் அடித்துக்கொண்டிருக்கிறான். ஹீரோவும் அவனுடைய நண்பனொருவனும் உள்ளே நுழைகிறார்கள். சரக்கு ஆர்டர் செய்யும் முன்  திடீரென்று விடுதி வாசலில் ”ஆ.. ஊ...” என்று கூச்சல். ரகளை. தொடர்ந்து துப்பாக்கி வெடிக்கும் சத்தம். உற்சாகபானமருந்திக்கொண்டிருந்த அனைவரும் யோகநிலை கலைந்து தலைதெறிக்க ஓடுகிறார்கள். கையில் பிஸ்டலுடன் மூக்கு விடைக்க வில்லன் பாருக்குள் எண்ட்ரீ கொடுக்கிறார்.

வில்லன் பீர் பையன் அருகில் வந்து நம்பியார் சிரிப்பு சிரித்து அவன் கையைப் பிடித்து இழுத்து கை குலுக்கப் பார்க்கிறார். அவன் உதறிவிட்டுத் தப்பி ஓடுகிறான். வில்லனிடமிருந்து தப்பித்து டாய்லெட்டில் ஒளிந்த அவனைக் காப்பாற்றி விடுதிக்கு வெளியே இழுத்துக்கொண்டு ஓடுகிறான் ஹீரோ. போக்குவரத்து நெரிசல் இல்லாத நிர்ஜனமான சாலைகளில் வேகமாய் ஓடுகிறார்கள். சிறிது தூரத்தில் சுவரேறிக் குதித்து, இரும்பு ஷட்டர் திறந்து முதல் மாடியில் ஒரு மறைவிடத்தில் போய் ஆசுவாசமடைகிறார்கள். இரவுப் பொழுது அங்கேயே கழிய காலையில் சூரியன் கண்ணைக் குத்த சேரில் உட்கார்ந்த வண்ணம் தூங்கியிருந்த ஹீரோ எழுந்து பார்க்கையில் பக்கத்தில் இருந்தவனைக் காணவில்லை. ஜன்னல் வழியாக பார்த்தால் எதிரே இருக்கும் பாலத்தின் கட்டைகளில் ஏறி நின்றுகொண்டிருக்கிறான் அவன். ஏதோ நினைவுக்கு வந்தவனாய் ஹீரோ தனது வலது மணிக்கட்டுக்கும் முழங்கைக்கும் இடையில் பார்க்கிறான். அவனது ஆயுட்காலம் அந்த பீர் பையனால் மேலும் நூறு வருடங்களாக அதிகரித்திருக்கிறது. பார்த்துக்கொண்டிருக்கும்போதே அந்த பீர் பையனின் ஆயுள் முடிந்து மரக்கிளை முறிவது போல ”மளுக்”கென்று ஒடிந்து சரிந்து கீழே ஓடும் நதியில் விழுகிறான்.

செண்டிமெண்ட் சீன்
தனது பிள்ளையைப் பார்க்க பஸ்ஸேரி செல்ல முயல்கிறாள் தனது வாழ்நாளின் இறுதிக்கட்டதிலிருக்கும் ஒரு தாய். பிரயாணத்திற்காக தனது வாழ்நாளை கொஞ்சம் தியாகம் செய்ய வேண்டும் என்பது பொது விதி. அதுதான் டிக்கெட் எடுக்க பேருந்துக் கட்டணம். தேவைப்படுவது பதினைந்து நிமிஷங்கள். அவளிடம் எஞ்சியிருப்பதோ பத்து நிமிஷங்கள். அதையும் கொடுத்துவிட்டால் பிள்ளையைப் பார்க்க முடியாது. ஓடலாம் என்று முடிவெடுக்கிறாள். தாய்ப் பாசத்துடன் இரைக்க இரைக்க ஓடி அவனது இருப்பிடைத்தை அடைகிறாள். நான்கு தெருக்கள் சந்திக்கும் ஓரிடத்தில் இருவரும் எதிரெதிராக ஓடிவர, நொடிகள் கரைய, ஓடிவர, நொடிகள் கரைய, மகன் தனது சக்தியனைத்தையும் ஒன்று திரட்டி வேங்கையாய்ப் பாய்ந்து வர, தடுமாறாமல் ஜாக்கிரதையாக தாய் விரைய இருவரும் நீட்டிய கையோடு கை கோர்க்கும் சமயத்தில் தாயின் வாழ்நாள் மணித்துளிகள் 00:00:00:00 ஆகி கரைந்து ஜீவன் பிரிகிறது.

காதல் சீன்
செத்துப்போன மக் பீர் பையன் கொடுத்த வாழ்நாள் மணித்துளியையும் சேர்த்து ஹீரோவின் கணக்கில் நிறைய மணிநேரங்கள் சேர்ந்துவிடுகிறது. காஸினோ க்ளப்பில் சென்று சூதாட்டம் விளையாடுகிறான். எதிராளி மில்லியன் வருடங்கள் வாழ்நாள் தன் பங்கில் இருக்கும் பில்லியனர். ஆட்டத்தில் வென்ற ஹீரோ மில்லியன் வருடங்கள் வாழும் வல்லமை படைத்தவராகிறார். இரவு க்ளப்பில் தோற்ற மணிச் செல்வந்தரின் வீட்டில் ஒரு பார்ட்டி அட்டெண்ட் செய்கிறார். இயற்கையாகவே அவர் மேல் அந்த தனவானின் பெண்ணான அந்த ஹீரோயினுக்கு காதல் மலர்கிறது. அவரிடம் அடியாளாய் வேலை பார்க்கும் வில்லன் கோஷ்டி ஹீரோவின் வாழ்நாள் மணிகளை உள்ளடக்கிய “மணிச் சொத்தை” அபகரிக்க திட்டமிடுகிறான். துரத்துகிறான். பறிக்கிறான். காதலர்கள் தப்பிக்கிறார்கள். எதிர் கோஷ்டியினர் துரத்துக்கிறார்கள். காதலர்கள் தப்பிக்கிறார்கள்.

படம் முழுக்க காலம் உயிர் போன்றது என்று காட்டப்படுகிறது. ஜீவனோடு இப்புவியிலிருக்கும் கால அவகாசம் கடனாகக் கொடுக்கப்படுகிறது. வாழ்நாள் மணித்துளிகளை லோன் கொடுப்பதற்கு நிறைய வங்கிகள் இருக்கின்றன. ஸேஃப் டெப்பாசிட் லாக்கர்கள் இருக்கிறது. குற்றவாளிகளைப் பிடித்துக்கொடுப்பவர்களுக்கு இன்னும் பத்து வருடங்கள் அவர்களது வாழ்நாளுக்கு பரிசாக வழங்கப்படுகிறது. அங்கேயும் அம்மா செண்டிமெண்ட், காதல், துரோகம், நட்பு, அடிதடி என்று சகலமும் இருக்கிறது.

க்ளைமாக்ஸில் ஹீரோவும் ஹீரோயினியும் கையோடு கை கோர்த்துக்கொண்டு சில்ஹூட்டில் சந்தோஷமாகச் செல்கிறார்கள்.

***************

வியாபாரங்களில் பண்டைய காலத்தில் பண்ட மாற்று முறை இருந்தது, அதற்கப்புறம் இப்போது கரன்ஸி பயன்படுகிறது. எதிர்காலத்தில் உலக மக்களுக்கு 25 வருடங்கள் ஆயுள் என்று பிறக்கும்போது நிர்ணயம் செய்து, வேலை செய்தால் பணத்துக்கு பதில் வாழ்நாள் மணித்துளிகளை சம்பளமாக கொடுத்தால்? இந்த விபரீத கற்பனைதான் கதைக் கரு. ஊருக்கு பிரயாணம் போக வேண்டுமா? காருக்கு டீசல் போடவேண்டுமா? கார் வாங்கவேண்டுமா? டெலிபோன் பேச வேண்டுமா? காதலிக்கு வைர மோதிரம் பரிசளிக்க வேண்டுமா? ஹோட்டலில் சாப்பிட மற்றும் தங்க வேண்டுமா? எதுவாகினும் வலது கை மணிக்கட்டுக்கும் முழங்கைக்குமிடையே பச்சையில் நொடி நொடியாகக் கரைந்து ஒளிரும் நமது ஆயுளின் மணித்துளிகளை பணமாகக் கொடுத்தால் அது கிடைக்கும்.

25 வருடங்கள் தான் வாழ்க்கை என்ற தலையெழுத்தை கையில் எழுதி ராக்கெட் விடும் கவுன்டவுன் மாதிரி லைஃப் க்ளாக் பச்சையாய் ஒளிர்ந்து ஒவ்வொருப் பிரஜையின் கண்ணெதிரேயும் நொடி நொடியாகக் கரைகிறது. இன்னும் எவ்வளவு நாட்கள் உயிர்வாழ்வோம் என்று ஒவ்வொரு பிரஜைக்கும் சத்தியமாகத் தெரிந்துவிடுவதால் டுபாக்கூர் ஜோசியர்கள், அடாவடி சாமியார்கள் இல்லாத மற்றும் சாமி கும்பிடாத சமதர்ம சமுதாயமாக இருக்கலாம். எங்கு சென்றாலும், எதை வாங்கினாலும், எதற்கும் எவரும் காசு கேட்பதில்லை. பதிலாக கையோடு கை கோர்த்தோ அல்லது ஸ்வைப்பிங் கருவியிலோ வாழ்நாளின் மணித்துளிகளை தியாகம் செய்தால் நீங்கள் விரும்பியதை அடையலாம்.

இதன் ட்ரெய்லர் சுட்டி.
http://www.youtube.com/watch?v=efNzhEKm3w4

#இது ஆங்கிலப் படமான IN TIME என்பதன் கதை. படத்திலிருக்கும் சீன் வரிசை எனது எழுத்தில் துளியூண்டு மாறியிருக்கலாம். அது என்னுடைய ரசனைக்காக அப்படி எழுதப்பட்டது. நிறைய சீன் சீனாக எழுதலாம் என்றிருந்தேன். மக்கள் பிழைத்துப்போகட்டும் என்று பெரியமனது பண்ணி இத்தோடு நிறுத்திவிட்டேன்.

##தமிழில் ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் போன்றவர்களின் உழைப்பிலும் கைவண்ணத்திலும் நியர் ஃப்யூச்சரில் தமிழ்ப் படமாக்கப்படலாம். நல்ல சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம்.

Friday, December 9, 2011

வென்னிலா ஐஸ்க்ரீமும் வம்பு பண்ணும் காரும்

”வென்னிலா ஐஸ்க்ரீம் வாங்கினா உங்க வண்டியில ஸ்டார்டிங் ட்ரபிள் இருக்கு. வேற ஃப்ளேவர் ஐஸ் வாங்கினா ப்ராப்ளம் இல்லாம சட்டுன்னு ஸ்டார்ட் ஆகுது” என்று உச்சியில் ”டியர் சார்” போட்டு உடம்பு முழுக்க சகட்டுமேனிக்கு திட்டி வந்திறங்கிய ஒரு கஸ்டமர் ஈமெயிலில் அகிலமெங்கும் கிளை விட்டு ஆலமரமாகப் படர்ந்திருக்கும் அந்தக் கார் கம்பெனியின் சர்வீஸ் துறை அதிர்ந்துவிட்டது.

இந்த வினோத வழக்கைக் கண்டு அஞ்சிய சர்வீஸ் மேனேஜர் "It's Funny" என்று கையைப் பிசைந்தார். பழுது என்ன என்பதைக் கண்டறிய ஒரு சர்வீஸ் எஞ்சினியரை அந்தக் கஸ்டமரிடம் அனுப்பினார். அந்தப் ப்ராப்ளமாட்டிக் காரின் உரிமையாளர் ஒரு கம்பெனியில் உயர்பதவி வகிப்பவர். காலையில் அவரின் இல்லத்திற்குச் சென்றார் அந்த எஞ்சினியர்.

“சார்! வாங்க வாங்க. கிளம்பலாமா?” என்று உற்சாக வரவேற்பளித்தார் அந்த பிக் கஸ்டமர்.

“போலாம் சார்” என்று சோகையாக சொன்னார் அந்த கம்ப்ளையிண்டின் வீரியம் தெரிந்த அந்த எஞ்சினியர்.

“இப்ப பாருங்க. ஸ்டார்ட் பண்றேன். ஒரு ப்ராப்ளமும் இருக்காது” என்று சாவியைத் திருகினார்.

உடனே வண்டி ஸ்டார்ட் ஆனது. சௌகரியமாக ஆபீஸுக்கு சென்றடைந்தார்கள். எஞ்சினியருக்கு வண்டியில் எள்ளளவும் சந்தேகம் வரவில்லை. சாயந்திரம் மறுபடியும் வீட்டிற்கு கிளம்பினார்கள். எஞ்சினியர் அவருக்குப் பக்கத்து சீட்டில் பழுதை ஆராயும் துடிப்புடன் அமர்ந்திருந்தார்.

“எங்க குடும்பத்தில எல்லோரும் ஐஸ்க்ரீம் பிசாசு. போற வழியில ஐஸ்க்ரீம் வாங்கிக்கிட்டு போகலாம்” என்றார்.

அது ஒரு புகழ் பெற்ற விஸ்தாரமான சர்வதேச தரமிக்க ஐஸ்க்ரீம் பார்லர்.

“இப்ப பாருங்க. இன்னிக்கி நான் ஸ்டாராபெர்ரி ஃப்ளேவர் வாங்கப்போறேன். வண்டி எந்த பிரச்சனையும் பண்ணாம ஸ்டார்ட் ஆயிடும்” என்று சொல்லிக்கொண்டே கடைக்குள் போனார்.

வெளியே வந்து ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீமை எஞ்சினியருக்குக் காண்பித்துவிட்டு வண்டியை ஸ்டார்ட் செய்தார். மறுப்பேதும் சொல்லாமல் ஸ்மூத்தாக கிளம்பியது.

“பாத்தீங்களா” என்று இளித்தார். “சரி நாளைக்கு பார்க்கலாம்” என்று நினைத்துக்கொண்டார் அந்த எஞ்சினியர்.

“நாளைக்கும் கண்டிப்பாக சாயந்திரம் வாங்க” என்று அன்புக் கட்டளை இட்டார். மறுநாள் மாலை நேரே அவரின் அலுவலகத்திற்கு சென்றார் அந்த எஞ்சி. இருவரும் கி்ளம்பினார்கள். அதே ஐஸ்க்ரீம் கடையில் நிறுத்தம்.

“இன்னிக்கி நான் சாக்லேட் ஃப்ளேவர் வாங்கப் போறேன். வண்டி ஸ்டார்ட் ஆயிடும்” என்றார்.

கையில் ஐஸை ஏந்திக்கொண்டே வந்தார். எஞ்யின் முகத்துக்கு எதிராக ஃப்ளேவர் நிரூபிக்க நீட்டினார். “பார்த்துக்கோங்க. இது சாக்லேட் ஃப்ளேவர். இப்பவும் வண்டி ஸ்டார்ட் ஆயிடும்”. சாவி போட்டு திருகினார். வண்டி சந்தோஷமாகக் கிளம்பியது.

பக்கத்தில் எஞ்சியைப் பார்த்து சிரித்தார். ”நாளைக்கும் வாங்க” என்றார். மறுநாளும் சென்றார் அந்தத் தளர்வடையாத இளம் எஞ்சி.

“ஜெண்டில்மேன். இன்னிக்கி நான் பட்டர்ஸ்காட்ச் வாங்கப்போறேன். இன்னிக்கிம் நோ ப்ராப்ளம்” என்றார். அவர் சொன்ன சொல்லுக்கு கட்டுப்பட்டதைப் போல வண்டி சண்டித்தனம் செய்யாமல் பதவிசாக நடந்து கொண்டது.

மறுநாள் மாலை சென்றார். “இன்னிக்கி க்ளைமாக்ஸ். நான் வென்னிலா ஃப்ளேவர் வாங்கப்போறேன். வண்டி ஸ்டார்ட் ஆகாது பாருங்க” என்றார். எஞ்சினியருக்கு அது என்ன என்று பார்த்துவிடும் ஆர்வம் பொங்கியது. சந்தர்ப்பத்திற்காக காந்திருந்தார். அதே ஐஸ்க்ரீம் கடை வந்தது. சிரித்துக்கொண்டே வண்டியை அணைத்துவிட்டு இறங்கினார் அந்த கஸ்டமர்.

கடையிலிருந்து ஒரு கையில் வென்னிலா ஃப்ளேவர் ஐஸ்கிரீமோடு வெளியே வந்தார்.

“இப்ப ஸ்டார்ட் பண்ணட்டுமா?”

“ம்”

சாவியைத் திருகினார்.

”க்ரிகிர்கிர்......கிர்கிரி..கிரி..கிர்...” வண்டி உதறியது.

திரும்பவும் படிக்காதவன் ரஜினியின் “லெக்ஷ்மி ஸ்டார்ட்..” வசனத்தோடு திருகினார்.

”க்ரிகிர்கிர்......கிர்கிரி..கிரி” இப்போது வண்டிக்குக் கமறியது.

எவ்வளவோ பிரயத்தனப்பட்டும் பலனில்லை. வண்டி சுத்தமாகப் படுத்துவிட்டது.

வண்டி கிளம்பாத சோகத்தில் இருந்தும் தான் சொன்னது நிரூபணமான மகிழ்ச்சியில் சிரித்தார் அந்த கஸ்டமர்.

“பாத்தீங்களா. நான் சொன்னப்ப நீங்க நம்மபல இல்ல. கிளம்பல பாருங்க. எனக்குப் புரிஞ்சிடிச்சு. வென்னிலா ஃப்ளேவர்னா உங்க கம்பெனி வண்டிக்கு அலர்ஜி. ஆவாதுங்க. உங்களாலெல்லாம் இதைக் கண்டு பிடிக்க முடியாது.. பாருங்க..பாருங்க..” என்று கொக்கரித்தார்.

எஞ்சினியருக்கு சரியான கடுப்பு. “சர்தான் போய்யா!” என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டு அமைதியாக இருந்தார்.

“நாளைக்கு ஸால்வ் பண்ணுகிறேன்” என்று உறுதி அளித்துவிட்டு வீட்டிற்கு நடையைக் கட்டினார். இரவு முழுவதும் நான்கு நாட்களாக நடந்தது அனைத்தையும் ஷாட் பை ஷாட்டாக ஃப்ரேம் ஃப்ரேமாக ஓட்டிப் பார்த்தார். ஒரு அரை மணியில் மூளைக்குள் பல்பு பிரகாசமாக எரிந்தது.

மறுநாள் காலையில் அந்த கஸ்டமரின் கம்பெனிக்கு சென்றார்.

“காரணம் கண்டு பிடித்துவிட்டேன்” என்றார் அந்த எஞ்சினியர் பெருமிதத்துடன்.

“என்ன?”

“வேப்பர் லாக் ப்ராப்ளம். நீங்கள் ஐஸ் க்ரீம் வாங்கும் கடையில் விசேஷ ஃப்ளேவர்கள் கடையின் உள் பக்கம் கடைசியில் இருக்கும் கவுண்டரில் கொடுக்கிறார்கள். டோக்கன் வாங்கி அதை அங்கே நீட்டி நீங்கள் வாங்கிக்கொண்டு வெளியே கார் பார்க்கிங் வருவதற்குள் எஞ்சின் கூலாகிவிடுகிறது. வண்டியும் எந்தச் சிரமமும் இல்லாமல் ஸ்டார்ட் ஆகிவிடுகிறது. ஆனால், கடைசி நாளன்று நீங்கள் வாங்கிய வென்னிலா ரக ஐஸ்க்ரீம் அந்தக் கடையின் வாசலிலேயே கொடுக்கிறார்கள். ஆகையால் நீங்கள் வாங்கிக் கொண்டு வரும்போது எஞ்சின் இன்னமும் சூடாகவே இருப்பதால் வேப்பர் லாக் ரிலீஸ் ஆக நேரமெடுக்கிறது. இதுதான் காரணம். வண்டி கிளம்பாததற்கு காரணம் ஐஸ் வாங்கும் நேரமே தவிர ஐஸ்க்ரீம் கிடையாது” என்றார் அந்த எஞ்சினியர்.

கஸ்டமர் அசந்து போனார். எஞ்சினியரின் கம்பெனியும் அவரை அங்கீகரித்தது.

மாரல் ஆஃப் தி ஸ்டோரி: கஸ்டமர் தனக்குத் தெரிந்த வகையில் சொன்ன கம்ப்ளைண்டிற்கு பகபகாவென்று சிரிக்காமல் லாஜிக்கோடு அணுகினால் தீர்வு உண்டு. பழுதை விவரிக்கத் தெரியாதவராக இருந்தாலும் கஸ்டமர் இஸ் தி கிங். :-)
பின் குறிப்பு: மீண்டும் ஒரு டிட்பிட் பதிவு. துணுக்குத்தோரணமாகத் தொங்குகிறது என் வலை.
-

Tuesday, December 6, 2011

தக்காளிக்காரன்

 
ஒரு பொண்டாட்டி, மூன்று குழந்தைகள் கொண்ட குடும்ப பாரத்தை சிரமத்தோடு இழுக்கும் குடும்ப இஸ்திரி ஒருவர் மைக்ரோஸாஃப்ட் நிறுவனத்திற்கு குப்பை பெருக்கி துடைத்து மொழுகும் வேலைக்கு விண்ணப்பித்தார். இண்டெர்வியூ முடிந்து அவரது பணி நிர்மான கடிதத்தை அனுப்ப “ஸார்! உங்களுடைய ஈ மெயில் ஐ டி ப்ளீஸ்” என்றாள் அந்த லிப்ஸ்டிக் வாயழகி. ”எங்கிட்ட ஈமெயில் ஐடி இல்லீங்க” என்று தலையைச் சொறிந்தார் அவர். “ஸாரிங்க.. எங்க கிட்ட வேலைக்கு வரணும்னா ஈமயில் ஐ.டி இருக்கனும்”ன்னு சொல்லி வெளியே அனுப்பிவிட்டார்கள்.

10 டாலரை பையில் வைத்திருந்த அவர் என்ன செய்வதென்று தெரியாமல் தெருவில் திரிந்த போது செக்கச் செவேலென கண்ணைப் பறித்த தக்காளிகள் ஒரு க்ரேட் வாங்கினார். அவரது ஏரியாவிற்கு சென்று அருகிலிருக்கும் கடைதெருவில் 20 டாலருக்கு விற்று 100 சதம் லாபம் சம்பாதித்தார்.

இதுபோல க்ரேட் க்ரேட்டாக நிறைய வாங்குவதற்கு லாரி தேவைப்பட்டது. ஒன்று வாங்கினார், அப்புறம் க்ரேட் கணக்குகள் பெருக இரண்டு மூன்று என்று புது லாரிகள் வாங்கினார். அவரது மூன்று பசங்களும் தங்களது ஆதரவை அள்ளித் தர தக்காளி பிஸினெஸ் பெரியதாக வளர்ந்தது. அந்த ஊருக்கே அவர் பெரிய தக்காளிக்காரனாக உயர்ந்தார்.

பெரிய பிஸினெஸ் மேக்னெட்டாக உயர்ந்த பிறகு தனது குடும்பத்திற்கும் வியாபரத்திற்கும் இன்சூரன்ஸ் எடுக்க விரும்பினார். அந்த டை கட்டிய எக்ஸிகியூடிவ் காப்பீட்டு விண்ணப்ப படிவத்தை நிரப்பிவிட்டு ”உங்க ஈ மெயில் ஐடி ப்ளீஸ்” என்றான். வாய் நிறைய புன்னகையோடு ”இல்லை” என்று அர்த்தபுஷ்டியாக சிரித்தார் அவர்.

”அச்சச்சோ! ஈமெயில், கம்ப்யூட்டர் இதெல்லாம் இல்லாமலேயே உங்க பிஸினெஸ்ல இவ்ளோ லாபம் வந்திருக்கே. அஞ்சாறு வருஷத்துக்கு முன்னாடியே உங்களுக்கு ஈமெயில் ஐடி இருந்தா இந்நேரம் என்னவா ஆயிருப்பீங்க” என்று வருத்தமாக விசாரித்தானாம் அவன்.

அதற்கு அவர் பல்லைக் காட்டிக்கொண்டே சொன்ன பதில்....

“மைக்ரோஸாஃப்ட்ல ரூம் ரூமா துடைச்சு பெருக்கிக்கிட்டுருப்பேன்யா”
பின் குறிப்பு: மற்றுமொரு டிட் பிட் பதிவு.
பட உதவி: http://www.insidehobokenrealestate.com/
-

Sunday, December 4, 2011

கண்ணால் காண்பது மெய் - தினமணி கதிரில்

நல்ல அடை மழை. சின்னச் சின்ன பிட் பைட்டாக ஆரம்பித்து சில நொடிகளில் மெகா பைட்டாகி இப்பொது ஜெட்டா பைட்டாக “சோ” என்று கொட்டுகிறது. வழக்கம் போல வானொலியின் ”இன்று பரவலாக வானம் மேக மூட்டத்தோடு காணப்படும்”மை பொய்யாக்கிப் பொறுத்துப் பெய்கிறது. நான் நின்று கொண்டிருக்கும் இந்த பஸ் ஸ்டாப் ஜன வெள்ளத்தால் நிரம்பி வழிகிறது. மண்வாசத்தைவிட அரை இன்ச் தள்ளி பக்கத்தில் நிற்கும் கன்னிப்பெண் வாசம் ஆளைத் தூக்குகிறது. இந்த வாசனைகளுக்கு உற்ற தோழன் வருணனோடு வரும் வாயுபகவான் தான். அவர்தான் அடுத்தவரிடம் அதைப் பற்றவைக்கும் ஏஜெண்ட்.


“மச்சான். குளிக்காம வர்ற டிக்கெட்டெல்லாம் தான் உடம்பு பூரா செண்டு தெளிச்சிக்கும்” என்று பி.எஸ்.ஸியில் கடைசி செமஸ்டரில் அரியர்ஸ் வைத்து ஃபெயிலாகிப் போன மணி ஒவ்வொரு நறுமண நங்கைகள் எங்களைக் கடக்கும் போதும் சொல்வான். மகளிர் சம்பத்தப்பட்ட விஷயங்களில் அவன் ஒரு wiki.manipedia.com. பஸ் ஸ்டாண்ட் திருவள்ளுவர் தியேட்டரில் காமத்துப்பால் சொட்டும் சில மலை மலையான மலையாள ஆன்டிகள் நடித்த கொக்கோகப் படங்களைப் பார்த்துவிட்டு ஸ்த்ரீ சம்பந்தப்பட்ட அவனுடைய சில நுணுக்கமான பார்வையின் விஸ்தரிப்புகளில் வாத்ஸ்யாயனரின் ஜீன் அவனுக்குள் பாய்ந்துள்ளதோ என்று எல்லோரும் வியப்பார்கள். ’குண்டு’ ராஜா ஒரு சிலிர்ப்புடன் பாதியில் அந்த இடத்தை விட்டு எழுந்துவிடுவான். ”கொழந்தப் பையன். ஃபீடிங் பாட்டிலில் பால் குடிக்கதான் லாயக்கு” என்று சொல்லிவிட்டு கண் சிமிட்டுவான் மணி.

இந்த க்ஷணம் இங்கே மணி இல்லையே என்று எனக்கு :-(. இந்நேரத்திற்கு வார்த்தைகளால் வர்ணனை மழை பொழிந்திருப்பான். என் காதுக்கு மோட்சம் கிட்டியிருக்கும். கடைசியாக அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி அவனை ஊரில் தேரடி தாண்டி குமார் லாட்ஜ் வாசலில் மினுமினுக்கிய தெருவிளக்கின் அரையிருட்டில் பார்த்தேன். கையில் கிங்ஸ் துணையுடன் ஏதோ ஒரு பூப்போட்ட கைலியுடன் ”அவ கிடக்காடா. அவ ஒரு மேனாமினிக்கிடா” என்று அளந்துகொண்டிருந்தான். இதுதான் என்னுடைய பிரதான வீக்னெஸ். பக்கத்தில் டூ பீஸில் அலங்காரமாக நிற்கும் பாவாடைச் சட்டைப் பருவச்சிட்டுவைப் பார்க்காமல் மணியைப் பற்றி நினைத்து வாழ்வின் இன்பகரமான தருணங்களை இழந்து கொண்டிருக்கிறேன் பாருங்கள். ச்சீ.ச்சீ... போடா மணி!


இவள் ஸ்ருங்காரமாக மிதமான தேகக்கட்டுடன் பார்வையாக இருந்தாள். குறத்திகள் இடுப்பில் சொருகும் சுறுக்குப்பையைவிட ஐந்து அங்குலம் பெரியதாக இருக்கும் தோல்பை ஒன்றை தோளில் மாட்டி ஒய்யாரமாக பக்கத்து இரும்புக் கம்பியில் சாய்ந்து நின்றிருந்தாள். மீசை முளைப்போமா என்று எட்டிப்பார்க்கும் ஒரு விடலை அவளை ஒரு ஏக்கப் பெருமூச்சுடன் பார்த்தான். இன்னும் கொஞ்ச நாளில் ஏதோவொரு பாக்கியசாலியினால் பொன் தாலியேறப்போகும் கழுத்தில் வேலை பார்க்கும் கம்பெனியின் ப்ளாஸ்டிக் அடையாள அட்டை தொங்கிக்கொண்டிருந்தது. தற்காலப் பெண்டிரின் தலையாய ஸ்டைலான தலைவிரி கோலத்துடன் இருந்தாள். ”காளிதாசன் உன்னைக் கண்டால் மேகதூதம் பாடுவான்.” என்று ரஜினி எனக்குள்ளே டூயட் பாடிக்கொண்டிருந்தார். கணினியின் கர்ஸர் பிளிங்க் போன்ற கண் இமைப்பில் இந்தக் கன்னி என் சித்தத்தைக் கலைத்துப் பித்தம் கொள்ள வைக்கிறாள். அட! ஜாடையில் நம்ம டெல்லி மாலினி போல இருக்கிறாளே! இன்னும் கொஞ்சம் எக்கிப் பார்த்தால் பெயரைப் படித்துவிடலாம். அவளுடைய கால் ஹீல்ஸின் சைஸ் என்னை மிரட்டி நான் எக்குவதற்குத் தடைபோட்டது.

இன்னும் மாலினி யார் என்று சொல்லவில்லையல்லவா? மாலினி 5’8’’ல் மெழுகால் சிலைவடித்த ஒரு பேசும் பதுமை. அவளும் அவள் போட்டிருந்த ஜீன்ஸூம் எங்கள் ஊருக்குப் புதுசு. லேசர் பீம் பாய்ச்சும் இரு கூரிய கண்கள். சிகப்பழகு க்ரீம் விளம்பரதாரர்கள் இன்னும் அவளை பார்க்கவில்லை என்று நினைத்துக்கொண்டோம். பளபளவென்று சுடர் விடும் மேனி. ”அவ இப்ப என்ன படிப்பா?” என்று அதிகப் பிரசங்கித்தனமாக எங்கள் குழுவில் ஆராய்ச்சியாய் கேள்வி கேட்ட ஒரு அச்சுபிச்சு தர்மஅடி வாங்கியிருப்பான். “அழகுக்கு படிப்பதெற்கு? அறிவெதற்கு?” என்று அப்போதே நான் தான் ஏற்ற இறக்கங்களுடன் வைரமுத்துக் கவிதையாகக் கேட்டேன். முதுகுக்கு பின்னால் ரெண்டு பேர் என்னை வித்தியாசமாகப் பார்த்தது முன்னால் திட்டு வாங்கியவன் முகத்தில் தெரிந்தது.

நான் பி.எஸ்.ஸி படிக்கும்போது எங்கள் ஊரில் இருக்கும் அவள் பாட்டி வீட்டிற்கு சம்மர் வெக்கேஷனுக்கு வந்த ஒய்யாரி. பட்டிணத்துப் பெண் பார்க்க எப்படியிருப்பாள் என்று ரோல் மாடல் பார்க்க போட்டி போட்டுக்கொண்டு கழுகாய் பொன்னா பாட்டி வீட்டை வட்டமடித்து சைட் அடித்தார்கள். மணி கண்கொத்திப் பாம்பாக யார்யார் எத்தனை மணிக்கு அவள் வீட்டைக் கடக்கிறார்கள், உள்ளே பார்க்கிறார்கள், அவளிடம் இளிக்கிறார்கள், பாட்டியிடம் பேசுகிறார்கள் என்று கணக்கெடுத்துக்கொண்டு வறுத்தெடுத்தான். “வெக்கமாயில்ல. புதுசா ஒரு பொட்டைப் பொண்ணு ஊருக்கு வந்துடக்கூடாதே. பின்னாலையே அலைவீங்களே” என்று திட்டிவிட்டு மத்தியானம் ”கொல்லையில பாத்ரூம் தாப்பா ரிப்பேர்னு சொன்னீங்கல்ல” என்று கார்பெண்டர் சகிதம் போய் நின்று தச்சருக்கு சித்தாளாக பணிபுரிந்து டெல்லிப் பார்டியின் நன்மதிப்பை பெற பிரயத்தனப்பட்டான்.

பொ.பாட்டி இல்லத்திற்கு 24x7 சிறப்பு செக்கியூரிட்டி ட்யூடி பார்த்தார்கள். பித்துப்பிடித்த இரண்டு பேர் விடியலில் அவள் வீட்டு வாசலைப் பெருக்கி கோலம் போடும் முறைவாசல் செய்யக்கூட சித்தமாய் இருந்தார்கள். பொன்னா பாட்டி கெட்டிக்காரி. அந்த மாதம் முழுவதும் கடைத்தெரு மண்டியிலிருந்து அரிசி மூட்டை எடுத்துவருதிலிருந்து அந்துருண்டை வாங்குவது வரை கன ஜோராக பசங்களை ஏவி வேலை வாங்கிக்கொண்டாள். பேத்தியுள்ளபோதே தூற்றிக்கொள்!

ஒரு நாள் வாசலில் நின்று கை நகம் கடித்துத் துப்பிக்கொண்டிருந்தவளை நாக்கைத் தொங்கப்போட்டுப் பார்த்துக்கொண்டே சென்ற எங்கள் தெரு பெண் ஆர்வலன் ஒருவன் எதிரில் வந்த எண்ணைச் செட்டியாரின் மூன்று சக்கர சைக்கிளில் மோதி தலையோடு கால் ஜொள்ளோடு எண்ணையும் வழிய பேந்தப் பேந்த முழித்தபடி பரிதாபமாக நின்றான்.  கழுத்திலிருந்த முறுக்குச் செயினை விரல்களில் சுருட்டிக் கோர்த்துக்கொண்டு கருங்குழல் முன்னால் விழ அவள் அப்போது விழுந்து விழுந்து சிரித்ததில் பயல்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக அம்பேல். ஆல் அவுட். அப்போது வாயில் ஈ, கொசு என்ன டைனோசரே பூந்தாலும் தெரியாது.

“மச்சான். மூஞ்சியில கரியப் பூசாம எண்ணைய பூசிப்புட்டா” என்று மூன்று நாளுக்கு வீதியில் எண்ணைக் காப்பு ஆனவனை வீட்டுக்கு வீடு நிறுத்தி கேலி பேசினார்கள். ஒரு காந்தத்தைச் சணலில் கட்டித் தெரு மணலில் இழுத்துக்கொண்டு போனால் சிறு சிறு இரும்பு மற்றும் துறுப்பிடித்த சேஃப்டிபின், ஹேர்பின் போன்ற ஐட்டங்கள் ’பச்சக்’கென்று ஒட்டிகொண்டே போவது போல அந்தத் தெரு வாலிபங்களைக் அவள் பின்னால் கட்டியிழுக்கும் காந்தமாக வளைய வந்தாள். கண்ணிரண்டும் மின்சாரம் பாய்ச்சுவதால் “மச்சான். நீ சொல்றா மாதிரி அவ சாதாரண மாக்னெட் இல்ல. அவ ஒரு எலக்ட்ரோ மாக்னெட்டா” என்று கல்லூரியில் ஃபிசிக்ஸ் சேர்ந்த புது அறிவியல் அறிஞனொருவன் என்னிடம் சொன்னான்.

உன்
தேகம் வாழைத்தண்டூ
பேச்சு அல்வாத்துண்டூ
கன்னம் கற்கண்டூ
மொத்தத்தில்
நீ
கை கால் முளைத்த பூச்செண்டூ

என்று கரியால் அவர்கள் வீட்டு வாசலில் கிறுக்கியிருந்ததைப் பார்த்து பொன்னாப் பாட்டி திட்ட ஆரம்பித்ததில் ஒரு ஞாயிற்றுக்கிழமை பொழுது தெருச் சண்டையாய் விடிந்தது. எல்லா வரியிலும் ”டூ...டூ”ன்னு நெடிலில் இருந்ததில் யார் என்று ஈசியாகப் பிடித்துவிட்டோம். ”மண்டூ” என்று பேப்பரில் அதிகாரப்பூர்வமாக எழுதி என்னைத் திட்டிய மணி தான் அந்த அசடு. அதிரடி விசாரணையில் தெரிய வந்த சங்கதி இதுதான். மேல வீதியில் எம்.ஏ தமிழ் முடித்துக் கவிதை மேல் தீராக்காதலில் இருந்தவனிடம் எழுதி வாங்கி அகோராத்திரி கண் விழித்து நெட்ரு அடித்து பிரம்ம முஹூர்த்ததில் எழுந்து கிறுக்கியிருக்கிறான். அப்புறம் மாலினியின் அப்பா வந்து அவளை மீண்டும் ஊருக்கு அழைத்துப்போகும் போது “ஈரமான ரோஜாவே! என்னைப் பார்த்து மூடாதே” என்று பாட்டை சத்தமாக வைத்து துக்கத்தைத் தீர்த்துக்கொண்டார்கள்.

மாலினியின் அடுத்த வருட விஸிட் எங்கள் ஊரில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. முதல் வருடம் கண்ணை உருட்டி உருட்டி சங்கோஜமாக மிரள மிரள பார்த்துக்கொண்டிருந்தவள் இரண்டாம் வருடம் “ஏ”, “அப்டியா”, ”சீ”, ”ஏஏஏன்”, ”தோஸ்த்”, “போடா”, ”புண்ணாக்கு”, “தடியா” என்று மணிரத்னம் படம் வசனம் போல ஷார்ட்ஹாண்ட் வசனங்கள் பேச ஆரம்பித்தாள். அவளது அந்த சுந்தரமொழியில் மயங்கியோர் பலர். அவளைத் தன் பக்கம் ஈர்க்கும் ஆர்வத்தில் எல்லோரும் கோரஸாக காலை மாலை ஹிந்தி படித்தார்கள். ஒரு விஷமன் ஜோக் அடிக்கிறேன் பேர்வழி என்று “ஏக் காம் மே” வசனத்தை “ஏக் கிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸான்” என்று அழுத்திச் சொல்லி அவளை அசத்தப் பார்த்தான். ”அட அசத்தே” என்று ஒரு அலட்சிய லுக் விட்டாள். ’ஸ்’ஸில் மேலே ஒட்டிய உதடு அவனுக்கு ரெண்டு நாளைக்குப் பிரியவே இல்லை.

அந்த வருடம் மணிக்கொரு தரம் கரெண்ட் கட் செய்து மக்களுக்கு பில்லில் மிச்சம் பிடித்தார்கள். தெருவாசிகள் தங்கள் வீட்டுக் கூடத்தில் இருந்த நேரத்தை விட வாசற்படியில் உட்கார்ந்து கழித்த நேரமே ஜாஸ்தி. வடநாட்டில் ஆண்களுடன் சகஜமாக பேசிப் பழகிய பெண்ணாகையால் அவர்கள் வீட்டுப் படிக்கட்டில் உட்கார்ந்து வம்பளக்க ஆரம்பித்தார்கள். இருந்தாலும் பாட்டிக்கு உள்ளூர ஒரு பயம்தான். தடித்தாண்டவராயன்களை வைத்துக்கொண்டு பெயர்த்தியை காபந்து பண்ண வேண்டுமே என்று கவலைப்பட்டாள். அவள் கவலைப்பட்டது போலவே ஒரு நிகழ்ச்சி அன்றைக்கு நடந்தது.

இங்கு மழை இன்னும் விட்டபாடில்லை. பஸ்ஸும் வந்தபாடில்லை. அவளும் நகர்ந்தபாடில்லை. நானும் இங்கிருந்து கிளம்பியபாடில்லை. ஷேர் ஆட்டோக்களில் பிறத்தியான் மடியில் உட்கார்ந்து மழைக்கு இதமாக சில மாந்தர்கள் சொகுசாகப் பயணித்தார்கள்.  கால் கடுக்க நின்றாலும் பக்கத்திலிருக்கும் அந்த அழகியினால் வலி தெரியாமல் இருந்தது. உயரத்தைப் பார்த்தால் அவளாக இருக்குமோ என்று விடாமல் மூளை அரித்துக்கொண்டிருந்தது.

போன பாராவுக்கு முதல் பாரா கடைசியில் சொன்ன அந்த நிகழ்ச்சி என்னவென்றால்...... வழக்கம் போல உட்கார்ந்து அரட்டை அடித்துக்கொண்டிருந்தோம். மின்சாரம் தடைபட்டது. கையில் இருந்த மோதிரத்தை சுழற்றியபடியே இருந்த மாலு (இந்தப் பெயர் ஒரு நாலைந்து பாராவுக்கு முன்னாடியே எழுதியிருக்கவேண்டும்) அதை தொலைத்துவிட்டாள். எங்கேயோ உருண்ட மோதிரத்தை பூச்சிபட்டு கடித்தால் கூட பரவாயில்லை என்று உயிர்தியாகம் செய்யும் உத்வேகத்துடன் நண்பர்கள் தேட ஆரம்பித்தார்கள். பொ.பாட்டி “உள்ள போய் மெழுகுவர்த்தி கொண்டு வரேன்”ன்னு உள்ள போனாங்க. ஏதோ சாமான் உருள்ற சத்தம் கேட்டவுடனே பாட்டி விழுந்துட்டான்னு மாலு எழுந்து உள்ளே ஓடினா.

ஒரு ரெண்டு நிமிஷத்தில கரண்ட் வர்றதுக்கும் பாட்டி “ஐயோ”ன்னு அலறுவதற்கும் சரியாக இருந்தது. ஒரு கும்பலாக உள்ளே ஓடிப்போனதில் முதல் கட்டு தாண்டி இரண்டாம் கட்டில் இருந்த ஸ்டோர் ரூம் வாசல் தரையில் அலங்கோலமான நிலையில் மணியும் மாலுவும். எவ்வளவோ பேரின் ஆசைக் கனவில் மணி மண்ணள்ளிப் போட்டுவிட்டான். ரெண்டு பேர் சட்டையைப் பிடிக்க “ஓடி வந்ததுல படிக்கு பக்கத்தில இருந்த மேட் தடுக்கி ரெண்டு பேரும் விழுந்துட்டோம்டா”ன்னு கேவிக் கேவி சொன்னாலும் யாரும் கிஞ்சித்தும் நம்பவில்லை.

கிட்டத்தட்ட அரச மரத்தடி பஞ்சாயத்து போல நடந்த விசாரணையில் கேட்டபோதும் தேய்ந்த கீரல் விழுந்த எம்.பி த்ரீ ஸி.டி போல அதையே திரும்ப திரும்ப சொன்னான். மாலு வாயைத் திறக்காமல் நின்றது ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டது என்று எல்லோரும் எண்ணினார்கள். மாலுவின் டை கட்டும் வேலை பார்க்கும் அப்பாவும், வாராவாரம் புதுதில்லி லேடீஸ் க்ளப் சாகரத்தில் சங்கமிக்கும் அம்மாவும் “கண்ட்ரீ ப்ரூட்ஸ்” என்று திட்டிவிட்டு கப்பல் போல காரில் ஏறி கிழக்கு திசை நோக்கிப் போனார்கள். பொன்னா பாட்டி அடிக்கடி பசங்களைப் பார்க்கும் போதெல்லாம் துடைப்பக்கட்டையை சிலம்பமாகச் சுழற்றி காண்பித்துக்கொண்டிருந்தாள். அதற்கப்புறம் எல்லாப் பசங்களும் பொ.பாட்டி வீடருகே வந்தால் ஓரமாக எதிர்சாரியில் பயணித்துக் கொண்டிருந்தார்கள்.

இரண்டு நாளுக்கப்புறம் அவனை ஆசுவாசப்படுத்தி தெரு மூலைக்கு ஒதுக்கிக் கொண்டு போய் விசாரித்ததில் ”மேட் தடுக்கி கீழே விழுந்தது உண்மைதான்டா. ஆனா அருணாசலம் சினிமால வர்ற மாதிரி அப்படியே ஒரு லிப் கிஸ் அடிச்சுப் பார்த்தேன். பச்சுன்னு ஒட்டிக்கிச்சு. ” என்று ஒரு போடு போட்டான். காண்டுல அவனை எல்லோரும் நாலு சாத்து சாத்தினார்கள்.

இது நடந்து ஒரு பத்து வருஷமாவது ஆகியிருக்கும். இந்தப் பொண்ணைப் பார்த்ததும் அந்த நினைப்பெல்லாம் பொங்கிக் கொட்டுது. ஒரு வழியாக மழை லேசாக விடத்தொடங்கியிருந்தது. தூரத்தில் கார்பொரேஷன் பஸ் வருவது தெரிகிறது. நாளைக்கு க்ளையண்ட் மீட்டிங் இருக்கிறது. ரூமுக்கு போனால் அங்கு வேறு விடியவிடிய கூத்தடிப்பார்கள். எவனோ ஒரு பைக் ரேஸ் பிரியன் அந்த பஸ்ஸை முந்திக்கொண்டு என்னைப் பார்க்க வருகிறான். சர்ர்ர்ர்க் என்று ப்ரேக் அடித்தான். பக்கத்தில் நின்றவள் லாவகமாகத் தாவி பில்லியனில் அமர்ந்து அவனைச் சிக்கென்று கட்டிக்கொண்டாள். முதல் கியரில் அவளை இன்னும் தன் முதுகோடு நெறுக்கி இரண்டாவது கியரில் பறந்தான்.

அவன் முகத்தை எங்கோ பார்த்த மாதிரி இருக்கே! ஆ! அடப்பாவி. அது மணி தான். அப்போ இவள்?

பின் குறிப்பு: இன்றைய தினமணி கதிரில் வந்தக் கதை இது.

-

Tuesday, November 29, 2011

அஞ்சுக்கு பத்து எடு - ஐம்பதாயிரம் எடு

ஒரு பெரிய கம்பெனியில் முக்கியமான ஒரு இயந்திரம் வேலை செய்யலை. அஞ்சாறு நாளா எல்லோரும் முக்கி முனகிப் பார்க்கிறாங்க அது அசைய மாட்டேங்குது. இதுக்கு ஸ்பெஷலிஸ்ட் ஒருத்தன் இருக்கான். அவனைக் கூப்பிடலாம் ஆனா ஃபீஸ் நிறைய கேட்பான். அதனால என்ன பண்ணலாம்னு யோசிச்சாங்க.. உற்பத்தி பாதிச்சவுடனே செலவானா பரவாயில்லைன்னு அவனைக் கூப்பிட்டாங்க....

ஒரு அஞ்சு நிமிஷம் கூட பார்த்திருக்க மாட்டான், “அஞ்சுக்கு பத்து ஸ்பானர் குடுப்பா”ன்னான். ஒரு போல்ட்டை ஒரு திருப்பு திருப்பி “உம். இப்ப மெஷினை ஆன் பண்ணுங்க”ன்னான். ஸ்டார்ட் பண்ணினா ஜோரா ஓட ஆரம்பிச்சிடுச்சு.

“சரி..சரி.. பீஸ் ஐம்பதாயிரம் எடுங்க”ன்னான். கம்பெனிக்காரங்களுக்கு பேஜாராயிடுச்சு. “என்னங்க அஞ்சு நிமிஷம் கூட பார்க்கலை. ஸ்பானரை வச்சு ஒரு திருப்பு திருப்பினதுக்கு ஐம்பதாயிரமா?” ன்னு சோகமாக் கேட்டாங்க.

“மூனு நாளா இந்தப் பராப்ளம் இருந்ததே! அப்ப நீங்களே அந்த திருப்பு திருப்பியிருக்கலாமே”ன்னு கேட்டானாம்.

##இதனால் விளங்கும் நீதி என்னான்னா
1. வேலையோட சைஸ் முக்கியமில்லை. ரிஸல்ட் முக்கியம்
2. எங்க கை வச்சா ப்ராப்ளம் ஸால்வ் ஆகும்ங்கிற விஷய ஞானத்தை வளர்த்துக்கனும்.
பின் குறிப்பு: பெருசா எழுத முடியலை.  மற்றுமொரு டிட்பிட் பதிவு.
பட உதவி: oceanstateclassifieds.com

Sunday, November 27, 2011

அடங்காதது

 
 
 
 
 
 
 
 
கொட்டித் தீர்த்த
மழை அடங்கியது

இலை சொட்டிய
நீர் அடங்கியது

அர்த்தஜாமம் முடிந்த
கோயில் அடங்கியது

எரிந்து அலுத்த
தெருவிளக்கு அடங்கியது

சப்தம் இரைத்த
வாகனம் அடங்கியது

சிக்னலில் கையேந்திய
பிச்சை அடங்கியது

காதலர்கள் மோகித்த
கடற்கரை அடங்கியது

பண்டம் விற்ற
கடை அடங்கியது

அழுது வடிந்த
டிவி அடங்கியது

பேசி அலுக்காத
ஊர் அடங்கியது

வாசலில் உட்கார்ந்த
செக்கியூரிட்டி அடங்கியது

வாலாட்டித் திரிந்த
தெருநாய் அடங்கியது

பேட்டரி கரைந்த
கடிகாரம் அடங்கியது

நாள் முழுவதும்
அலைந்த மனசு
இன்னும் அடங்கவில்லை!!
 
படம்: இணையத்தில் அகப்பட்டது.

Wednesday, November 23, 2011

சுட்டு விளையாடு - ரிலே சிறுகதை

முன் குறிப்பு: ஒரு மாமாங்கத்துக்கு அப்புறமா ஒரு பதிவுக்கு முன்குறிப்பு எழுத வேண்டிய கட்டாயம் இப்போது. மெட்ராஸ்பவன் ப்ளாக் உரிமையாளர் சிவா ஒரு ரிலே கதை எழுதவேண்டும் என்ற அவரது அவாவை ஒருநாள் என்னிடம் தெரிவித்தார். ’சரி’ என்று நான் ஒப்புக்கொண்டேன். க்ளைமாக்ஸ் எழுத பதிவுல ஷங்கரைக் கூப்பிட்டிருக்கிறார் என்று இந்த வரியின் “க்ளை...” அடிக்கும்போதுதான் தெரியவந்தது. சரி ஒரு இழுப்பு இழுத்துப் பார்க்கிறேன். தலைப்பும் முதல் பாகமும் எடுத்துக்கொடுத்த சிவாவின் பதிவு இங்கே.

** சிவாவின் தொடக்கம் **
"இன்னாடி எங்கொடத்துக்கு முன்னால ஒங்கொடத்த வச்சிருக்க. அடிங்கு. அடிக்கடி எனக்கு தொந்துரவு குட்துனே கீற. நாரிப்புடும் நாரி. ஒம் புருஷன் $%$%^^&#. நீ இட்லிய மட்டுமா $%ஃ&$# " என சென்ற வாரம் B ப்ளாக் ராஜி செய்த குழாயடி ஷ்பெஸலாபிஷேகத்தில் அவமானப்பட்டவள்தான் அதே ப்ளாக்கின் கீழ் வீட்டில் வசிக்கும் மகா. மெயின் ரோட்டோரம் தள்ளுவண்டியில் இட்லி வியாபாரம். சென்னை ஹவுசிங் போர்டில் வசிக்கும் இந்த இருவருக்கும் அவ்வப்போது லேசான உரசல்கள் வருவதுண்டு. அதுவும் ராஜியின் கணவன் சேகர் அரசியலில் வைட்டான ஆள் என்பதால் மகாவை கொஞ்சம் அதிகமாகவே வசைபாடுவாள் ராஜி. மகாவும் சளைத்தவளில்லை. ஆனால் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளை எப்போதும் பிரயோகிக்காதவள். கணவன் இல்லை. மகன் படிப்பது எட்டாம் வகுப்பு.  

நேற்று: 

ராஜியின் எதிர்வீட்டில் இருக்கும் சந்திரா பாட்டிக்கு உடல்நிலை சரி இல்லாததால் இட்லி பார்சலை தந்துவிட்டு சென்றாள் மகா. அடுத்த அரைமணி நேரத்தில் "ஐயய்யோ..பீரோல வச்சிருந்த 7,000 ரூவாயக்காணுமே. வூட்டு கதவ தாப்பா போடாம குளிஸ்ட்டு வர்துக்குள்ள யாரோ எத்துட்டாங்களே" என ஹவுசிங் போர்ட் அலற ராஜியின் ஒப்பாரி ஓங்கி ஒலித்தது. "யக்கா. மேட்ரு தெர்மா.  ராஜிக்கா வூட்ல யாரோ பண்த்த சுட்டுட்டாங்களாம்" என்று மகாவிற்கு ப்ளாஷ் நியூஸ் தந்துவிட்டு ஓடினான் பொட்டிக்கடை பாலா. அனைத்தையும் பீடியை வலித்தவாறு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தான் ஓணான். வயது 19. ராஜியின் கூச்சலை கேட்டு வெளியே வந்தாள் ரேகா. வயது 21. இருவருக்கும் படிப்பு வாசம் இல்லை. அவ்வப்போது கண்கள் மட்டும் லேசாக மோதிக்கொள்ளும்.

** ஆர்.வி.எஸ் பார்ட்**





ஓணான் நீங்கள் எதிர்பார்த்தபடி ஒல்லியான தேகக் கட்டோடு இருந்தாலும் அஞ்சப்பரில் ஒரு ஃபுல் சிக்கன் ஆர்டர் செய்து தனியாளாய் உள்ளே தள்ளிவிடுவான். ஆமாம். அதற்கு முன்னால் ஒரு ஷீவாஸ் ரீகல் ஹாஃப் வேண்டும். இன்னும் கொஞ்ச நேரத்தில் இங்கு வரப்போகும் “பவர்” பாண்டி பற்றி இப்போதே சொல்லிவிட வேண்டும். அவன் வந்தால் வேறு கதை எதுவும் சொல்லமுடியாது.

28வது வட்டச் செயலாளராக ஆளுங் கட்சியில் இருப்பதால் முழுநேரமும் கட்சிக் கரை வேட்டியோடு சுற்றும் பாண்டிக்கு இவன் தான் ஆல் இன் ஆல் அல்லக்கை. அவ்வப்போது போதையில் கண் சிவந்தால் கைம்பெண் மகாவை கழுகுப் பார்வையில் கொத்திக் கலைத்துப் போடுவான் பாண்டி.

“டே நாட்டார் கட்ல ஒர் சீர்ட்டு வாங்கு”

“யான்டா அந்த வூட்டாண்ட கல்லு, மணலு, பழுப்பெல்லாம் வந்து இறங்குதே யெஸ்ட்ரா துட்டு ஆவும்ங்கிற மேட்ர அந்த பேமானியாண்ட சொன்னியா?”

“..த்தா... கொசப்பயலே! சரக்கு அல்லாத்தையும் அப்டியே சரிச்சிப்புட்டியே நாங்க இன்னாத்த நாக்க வலிக்கறா?”

”டோம்ரு! சத்தியத்துக்கு ஓடிப் போயி ரஜினி பட்துக்கு நாலு டிக்கிட்டி வாங்கிட்டி வா”

“ஜல்தியா போயி ஒரு ஆட்டோ இட்டாடா.... புள்ள இஸ்கூலு போனும்”

படுக்கையை விட்டு எழுந்ததிலிருந்து இரவு வாயில் எச்சில் ஒழுக டாஸ்மாக் வாசலில் விழுந்து மட்டையாய் கட்டையை நீட்டும் வரை ஓணான் கம்பெனியில்லாமல் நகராது அவன் தினப்படி வாழ்க்கை.

ஓணான் பீடியை தூக்கிக் கடாசிவிட்டு லூங்கியை தூக்கிக் கட்டிக்கொண்டான். காம்பௌண்ட் ஓரம் தண்ணி தூக்கப் போன ரேகாவைக் கபளீகரம் செய்யும் பார்வையோடு நெருங்கினான். அவன் கண்களில் ஃபுல் கேஸ் இருக்கும் கோலி சோடாவை உடைத்தது போல காதல் குபுகுபுவென்று கொப்பளித்தது. ”யம்மா நா இஸ்கூலுக்கு போயாரேன்” மகாவின் மகன் ரஜினி போல தலையைக் கோதியபடி இவர்களைக் கடக்க ஓணான் அவனை மறித்து “இன்னாடா, இன்னிக்கி ஈரோ கணக்கா படா ஷோக்காக் கீறே! ஈரோயின் குஜிலி எதாவது மடிஞ்சிடப்போவுது” என்று ரேகாவைப் பார்த்து இளித்துக்கொண்டே கேட்டான். “ஐயே!..சொம்மாயிரு.” என்று வெட்கப்பட்டவனிடம் “த்தோடா.. ரொம்பத் தான் சிலுத்துக்கிறியே” வம்பிழுத்தான் ஓணான். 

“யார்ரா அங்கின இஸ்கூலு போறவங்கிட்ட வம்பு பண்னிகினு” என்ற மகாவின் குரல் உயர்த்தலுக்கு அவனுக்கு வழிவிட்டு ரேகாவை பார்த்து ஒரு நமுட்டுச் சிரிப்பு சிரித்தான் ஓணான். “டே அக்கிஸ்டு இன்னாடா கையில வாச்சி கீச்செல்லாம் தூள் பரத்துது. நாஷ்டா துண்ட்டியா?” என்று பின்னால் வந்து தோளைத் தட்டினான் ’பவர்’ பாண்டி. பாண்டி டைனோசர் போல இருப்பான். இரவு நேர மிலிட்டரி ஓட்டல்களில் தாறுமாறாகத் தின்றுக் கொழுத்திருந்தான். பவர் ராஜியின் அரசியல் புருஷன்.

”அண்ணாத்தே! உன்னிய எங்கெல்லாம் தேட்றது. நைட்டுலேர்ந்து அண்ணி கிடந்து அல்லாட்றாங்க. எவனாது உன்னியப் போட்டான்னு நென்சேன். ஹக்காங்” ஓணான் பரபரப்பாக கேட்டான். ரேகா கையில் இருந்த ”மஞ்சா கலர் பக்கிட்டு”டன் டேங்கடிக்கு ஒதுங்கினாள்.

அடிங்.. கய்தே இன்னத்துக்குடா இம்மாம் பெருசா குரல் உட்றே. நைட்டு வண்ணாரப்பேட்டையில ஒரு பஞ்சாயித்துன்னு இட்டுகினு போய்ட்டானுங்கடா. அங்க ஒரே பேஜாராப் பூடிச்சு”

டீக்கடைப் பக்கம் ஒதுங்கி சிகரெட் பற்ற வைத்த பாண்டியிடம் உரிமையாக ஒன்று வாங்கி கொளுத்தி இழுத்தான் ஓணான். பெர்முடாஸ் போட்ட மெட்ரோ வாட்டர்காரன் ரேகாவின் புடவை விலகிய இடுப்பை ரசித்துக்கொண்டே அவள் குடத்தில் தண்ணீரைப் பீய்ச்சினான். ”பீரோல வச்சிருந்த ஏளாயிரம் காணும்னு அண்ணி சவுண்டு குடுக்குது” என்றதற்கு சலனமில்லாமல் அவனைப் பார்த்தான் பவர்.  பின்பு நிதானமாக சிகரெட்டை ரசித்துக் குடித்தான். புகை வளையம் விட்டான். ஐந்தாறு முறை அவனைச் சுற்றி ”தூ..தூ”வென்று காரித் துப்பிக்கொண்டான்.

”படா மேட்ரு சொல்லியும் அசால்ட்டாக் கீறபா நீ..” என்று பேச்சை ஆரம்பித்தான் ஓணான்.

“எங்கூட்டுல்யே கை வக்கிறதுக்கு காலனில எவ்னுக்குடா அவ்ளோ தெகிரியம். லோக்குலு டேஸ்னுல நம்பாளுதான் இன்ஸ்பெட்டரு. அவராண்ட சொல்லி டவுட்டுல அக்கிஸ்டு நாலு பேரை முட்டிக்கு முட்டி தட்டினா சரியாயிடும்” கொஞ்சம் கொஞ்சமாக காரமாகப் பேச ஆரம்பித்தான் பவர். கோபம் தலைக்கேறினால் ”க்..க்..” என்று கனைக்க ஆரம்பித்துவிடுவான். தண்ணீர் நிரம்பிய குடத்தை இடுப்பில் ஈரத்துடன் ஏந்தி செல்லும் ரேகா ஒரு ஓரப்பார்வையில் ஓணானுக்குக் கொக்கி போட்டாள். இவன் மடிந்து விட்டான்.

”டே டோமரு! இங்க பாருடா. வளிஞ்சது போதும். அந்த ஃபிகருக்குதான் எங்கூட்டுப் பணத்த சுட்டியா” என்று எதிர்பாராத விதமாக திடீரென்று ஓணானின் சட்டையைப் பிடித்தான் பவர். 

“தோ பாருபா. மேலேர்ந்து கைய எடு. எம்மேல எந்த மிஷ்ட்டேக்கும் இல்ல”

“அப்டியே மெறிச்சேன்னா. நீ பெரீய ரீஜென்டாடா”

“புடாக்கு மாறி பேசாதபா. ஓவ் வூட்ல நா கை வைப்பனா”

“அடிங்.. எதுனா பேசுன மெர்சலாப் பூடும்.  நா பாக்கலுன்னு நென்ச்சியா. ம்மால..  அந்த இட்லிக்காரி பையங்கூட உன்கு இன்னாதுடா பேச்சு!”

“அலோ. இட்லிக்காரி பையங் கூட பேசுனா உன்கு என்னாத்துக்கு ஏறிக்குது..” வலது கையை நடுவிரல்கள் அனைத்தையும் மடித்து கட்டையையும் சுண்டியையும் விரித்து சங்கூதும் போஸில் வைத்துக்கொண்டு கேட்டான் ஓணான்.

”யெஸ்ட்ரா ஒரு வார்த்த பேசுன. மூஞ்சியப் பேத்துடுவேன். வாய் வெத்தலபாக்கு போட்டுக்கும். தெர்தா. ”

“சொம்மா உதாரு உடாத. போன வாரம் பீச்சாண்ட உன்னியும் இட்லிகாரியையும் ’சுண்டி சோரு’ சேகரு ஒன்னா பார்த்தானே. எங்களுக்குத் தெரியாதா பின்ன!”

இருவருக்கும் கொஞ்ச கொஞ்சமாய் வார்த்தை தடித்தது. “த்தா...ஓவரா பேசுற” என்று விரலை மடக்கி ஓணான் முகத்தில் பலமாக ’சொத்’தென்று ஒரு குத்துவிட்டான் பவர். கடைவாயில் வழிந்த இரத்தத்தை துடைத்துக் கொண்டு ”உம் மூஞ்சில எம் பீச்சாங்கைய வக்கோ. இப்போ நீ பீஸுடா!!” என்று பதிலுக்கு ஓணான் அவன் முகத்தில் இடது கையை வைத்து கீழே தள்ளினான். விழுந்து புரண்டு எழுந்தான் பவர். அப்போது அடித்த காற்றில் அவர்களைச் சுற்றி புழுதி பறக்க ஒரு ஃபைட் சீனுக்கு அந்த காலனி தயாரானது. சண்டை முற்றி இருவரும் ஆடை அவிழ கட்டிப் புரள்வார்கள் என்று ஜனம் கூட்டமாய் வேடிக்கைப் பார்த்தது. ரேகா முன்னால் அவமானப்பட விரும்பாத ஓணான் கைலியை இறுக்கிக் கொண்டு கோதாவில் இறங்கினான்.

பவர் வெள்ளை வேஷ்டியை மடித்துக் கட்டும்போது இடுப்பில் சொருவியிருந்த லைசென்ஸ் இல்லாத ரிவால்வார் கீழே விழ அதைப் பார்த்து பயந்து ஒதுங்கினான் ஓணான். அப்போது.....

****இங்கிருந்து பதிவுல ஷங்கர் கேபிள் சங்கர் க்ளைமாக்ஸைத் தொடருவார்****


பட உதவி: www.thehindu.com

-

அன்னதானப் பிரபு - இளையான்குடி மாற நாயனார்

நல்ல கும்மிருட்டு. வெளியே நசநசவென்று மழை. ஊரடங்கிவிட்டது. நிசப்தமான நிர்ஜனமான வீதியில் பெய்துகொண்டிருந்த மழையில் நனைந்து கொண்டே ஒரு முதியவர் அவர் வீட்டு வாசலில் வந்து நிற்கிறார். ”யாரிந்த வேளையில்?” என்ற சந்தேகத்துடன் வந்து எட்டிப் பார்க்கிறார் அந்த வீட்டின் உரிமையாளர். வாசலில் சொட்டச் சொட்ட நின்ற அந்த வயதானவர், “ஏதேனும் உணவு கிடைக்குமா?” என்று கேட்கிறார். சட்டிப் பானையெல்லாம் கழுவிக் கவிழ்த்து மூன்று நாளாயிற்று. கோயிலில் தெருவில் கிடைத்ததை உண்டு வயிற்றைக் கழுவிக்கொண்டிருந்தனர் அந்த முந்நாள் செல்வந்த தம்பதியினர். முதியவரின் அந்தக் கேள்வியினால் விதிர்விதிர்த்துப் போகிறார்கள். என்ன செய்வதென்றியாது கையைப் பிசைகின்றனர். வந்தவர் மனம் கோணாது “உள்ளே வந்து அமருங்கள். உணவு படைக்கிறோம்” என்று உபசாரம் செய்து முதல் கட்டில் உட்கார வைத்தார்கள்.

இருவரும் என்ன செய்யலாம் என்று பதறி சமையலறையில் கூடிப் பேசுகிறார்கள். செல்வச் செழிப்புடன் இருந்த காலத்தில் உற்றாருக்கும் ஊராருக்கும் நித்தம் நித்தம் அன்னமளித்த அந்த அம்மையின் உள்ளம் பதறுகிறது. நடைதளர்ந்த ஒரு பெரியவருக்கு அன்னமிட வழியில்லையே என்று மருகுகிறாள். ஆனால் அந்த வீட்டின் பெண்மணி கூர்மதியாள். கணவனை மீறிப் பேசத் தயக்கப்பட்டு சிறிது நேரத்தில் மெதுவாக ஒரு உபாயம் கூறுகிறாள். “நேற்று நமது வயலில் நட்ட செந்நெல் இருக்கிறது. இப்போது எப்படியாவது ஒரு மரக்கால் அந்த நட்ட நெல்லை களைந்து எடுத்துவந்தால் இவருக்கு வயிராற சோறு படைக்கலாம்” என்றாள். அவருக்கு மிக்க மகிழ்ச்சி. மனையாளின் நுண்ணறிவைப் பாராட்டி, இடையறாது கொட்டும் மழைக்காக தலையில் ஒரு கூடையைக் கவிழ்த்துக் கொண்டு வயலுக்கு ஓடுகிறார்.


மை பூசிய இருட்டில் வயலுக்கும் வீட்டுக்கும் போய் பழகிய கால்கள் சரியாக அவரது வயலை கண்டடைகின்றன. அந்த சேற்றிலிருந்து துழாவித் துழாவி கணிசமான நெல் விதைகளை எடுத்துவிடுகிறார். பக்கத்தில் ஓடும் வாய்க்காலில் அவ்விதைகளை கழுவி எடுத்துக்கொண்டு நேரமாகிவிட்டதே என்று ஓடுகிறார். நெல் கொண்டு வரச் சென்ற கணவன் வரவில்லையே என்று வாசலில் வந்து நிற்கிறார் அந்த அம்மணி. ஈர நெல்லைக் கையில் கொடுத்தவுடன் ஓடிப்போய் அடுப்பிலிட்டு வறுக்கிறார். பின்னர் அதையெடுத்து குத்தி அரிசியாக்கி உளையிலிடுகிறார். “அவருக்கு கறி சமைக்க என்ன செய்வது?” என்று கணவனைப் பார்த்து வினவுகிறார். வெறும் சோற்றை எப்படியளிப்பது என்று அப்போது தான் அவரும் யோசித்தார்.

கொல்லையில் போட்டிருந்த கீரைச் செடிகளை வேரோடு பிடிங்கி எடுத்துக்கொண்டு வருகிறார் அன்பர் பூசையில் ஈடுபட்டிருந்த அந்தப் பண்பாளர். அந்த ஒரே கீரையை கறியாக்கி, குழம்பாக்கி எல்லாமுமாக சமைக்கிறார் அவர் மனைவி. சாப்பாடு தயாரான அந்த நடுநிசியில் வாசலில் அமர்ந்திருக்கும் அந்த முதியவரை இல்லாளுடன் சேர்ந்து கூப்பிடுவதற்காக வந்தவருக்கு அதிர்ச்சி. திண்ணையில் அவரைக் காணோம். இவ்வளவு கஷ்டப்பட்டு அமுது சமைத்து அவருக்கு விருந்து வைக்கும் நேரத்தில் அவர் எங்கே போயிருப்பார் என்று குழம்பினார். அவரைத் தேடும் போது....

மனிதநேயமே சமயப் பண்பு என்று விருந்து வைத்த சமய இலக்கியங்களில் வருபவர் இவர் யாரென்று தெரிகிறதா?

விடை தெரிந்தால் பின்னூட்டத்தில் அந்த அன்னதானப் பிரபுவின் பெயரைத் தெரிவிக்கவும்.

பின் குறிப்பு:  இந்தக் கதைக்கு லேபிள் கொடுத்தால் கண்டுபிடிப்பது எளிது. க்ளைமாக்ஸும் எழுதாமல் விட்டிருக்கிறேன். கூகிள் படம். கிரெடிட் கொடுப்பதற்கு யூஆரெல் விடுபட்டுவிட்டது.

பின் பின் குறிப்பு: நேற்று எழுதி இன்றைக்கு லேபிள் மற்றும் தலைப்பு மாற்றுகிறேன்.  க்ளைமாக்ஸ் என்னவென்றால் விண்ணிலிருந்து ஒரு அசரீரி ஒலித்தது. அவருடைய சிவபக்தியை மெச்சி உமையம்மையுடன் ரிஷபாரூடராக காட்சியளித்தான் இறைவன்.

-

Friday, November 18, 2011

பிறன்மனை நோக்காப் பேராண்மை

இராவணன் கூட பிறன்மனை நோக்காப் பேராண்மையுடன் இருந்ததாக வரும் இராமாயணச் சான்று இது! ஆச்சரியமாக இருக்கிறதா?



சீதாப் பிராட்டியார் அசோகவனத்தில் சிறைவைக்கப்பட்டிருக்கும்போது இராவணன் பல வேடங்களில் வந்து வசீகரிக்கப் பார்க்கிறான். ஒன்றுக்கும் சீதாப் பிராட்டியார் மசிவதாக இல்லை. மிகவும் கலக்கமுற்று ஒரு நாள் தனது உப்பரிகையில் உலாத்திக்கொண்டிருந்தான். மதியாலோசனை செய்ய தனது மந்திரியை அழைக்கிறான்.

சீதை தனக்கு இணங்கவில்லை என்பதை வருத்தத்தோடு சொன்ன இராவணனுக்கு மந்திரி ஒரு சமயோசித யோசனை கூறினான்.

“அரசே! சீதை எவருக்கும் மயங்காதவர். நீங்கள் ஸ்ரீராமன் வேடமிடுங்கள். நிச்சயம் உங்களுக்கு அவர் மயங்கலாம்” என்றான்.

அதற்கு இராவணன் “அமைச்சரே! அந்த வேடம் கூட பூண்டு பார்த்துவிட்டேன். ஆனால் அந்த வேடத்திற்குக் கூட ஒரு தனி மகிமை இருக்கிறது போலிருக்கிறது” என்றான்.

இராவணனை வியப்பாகப் பார்த்தான் அமைச்சர். என்ன என்பது போல புருவங்களைச் சுறுக்கினான்.

சீதை எனக்கு பிறன்மனை ஆதலால் அந்த வேடத்தில் இருக்கும் போது என்னால் காதலுடன் பார்க்க முடியவில்லை” என்று சொல்லி வருந்தினான் இராவணன்.

#இராமனின் பிறன்மனை நோக்காப் பேராண்மையின் மகத்துவம் அவனது வேடமிட்டவருக்குக் கூட ஒட்டிக்கொள்ளும் என்பதற்கு வரும் இராமாயணச் சான்று இது. நினைத்தாலே சிலிர்க்கிறது.
பின் குறிப்பு: இனிமேல் இதுபோல டிட்பிட்ஸ் பதிவுகள் கூட போடலாம் என்று விருப்பம்.
-

Sunday, November 13, 2011

யாருக்கு அந்த முறைப் பெண்?


ஒரு ஊர்ல ஒரு கணவன் மனைவி இருந்தாங்களாம். இந்தக் கதையை இப்படித்தான் ஆரம்பிக்கவேண்டியிருக்கும். ரொம்பப் புராதனமான கதை சொல்லலாக இருக்கிறது. பரவாயில்லை. மேலே சொல்லுவோம். அந்த தம்பதிக்கு ஒரே ஒரு மகள். பார்ப்பவர்கள் மயங்கி மூச்சடைக்கும் அழகுள்ள அதிரூப சுந்தரி அவள். எங்கெல்லாம் இதுபோல அழகி இருக்கிறாளோ அங்கெல்லாம் அவளை மணமுடிக்க போட்டா போட்டியிருக்கும் என்ற உலக நியதிப்படி அவளுக்கு மூன்று முறைமாமன்கள் க்யூ கட்டி நின்றார்கள். மூவருமே அவர்களுடைய அக்காவிற்கு ஆத்ம தம்பிகள். இவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க அந்த அக்கா ஒரு போட்டி வைத்தாள். ஆளுக்கு நூறு ரூபாயைக் கொடுத்து “இதை மூலதனமாக வைத்துக்கொண்டு யார் அதிகம் சம்பாதிக்கிறீர்களோ அவர்களுக்கே என் மகள்” என்றாள் சவாலாக.

மூவரும் அந்த நூறு ரூபாயை பாக்கெட்டில் திணித்துக்கொண்டு ஊர் ஊராக சுற்றினர். இறுதியாக மைசூரில் வந்திறங்கினர். மூத்தவன் ஒரு மாயக் கண்ணாடி வாங்கினான். யாரை நினைத்துக்கொண்டு பார்க்கிறோமோ அந்த ஆளைக் காட்டும் கண்ணாடி அது. இரண்டாமவன் ஒரு மரத்தொட்டில் வாங்கினான். அதுவும் ஒரு அதிசயப் பொருள். எங்கே செல்லவேண்டும் என்று நினைக்கிறோமோ அங்கே நம்மை ஏற்றிக்கொண்டு பறந்து செல்லும். இருவருக்கும் மிகவும் மகிழ்ச்சி. இவற்றினால் அக்காளைத் திருப்திப்படுத்தி அவளது மகளை மணந்துவிடலாம் என்று மனக்கணக்கு போட்டார்கள்.

சின்னவன் கொஞ்சம் விஷயாதி. பொறுமையாக அந்தக் கடைத்தெரு முழுவதும் சுற்றிவிட்டு கடைசியாக ஒரு பதுமை விற்கும் கடைக்குச் சென்றான். அதுவும் விசேஷமான பொம்மைதான். இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் பொம்மை அது. மிகவும் சந்தோஷமாக சின்னவன் அதை வாங்கினான். 

மூவரும் அந்தக் கடைத்தெரு முழுவதும் சுற்றிவிட்டு ஒரு மரத்தடியில் சிறிது நேரம் கண் அயர்ந்தார்கள். திடீரென்று மூத்தவன் தான் வாங்கிய பொருளை சோதித்துப் பார்க்க எண்ணினான். கண்ணாடியைத் தன் முன்னால் விரித்து வைத்துக்கொண்டு தன் அக்கா மகளை நினைத்தான். அப்போது அவன் கண்ட காட்சியால் மூர்ச்சையடைந்தான்.  அக்கா மகள் பிணமாகக் கிடந்தாள். அக்காள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுது கொண்டிருந்தாள்.

உடனே பக்கத்திலிருந்த இரண்டாமவன் தனது தொட்டிலில் அண்ணனையும் தம்பியையும் ஏற்றிக் கொண்டு ஊரை நினைத்தான். கணநேரத்தில் தொட்டில் பறந்து வந்து அவர்களை ஊரில் தரையிறக்கியது. தொட்டிலிலிருந்து குதித்து ஓடிய சின்னவன் தனது அபூர்வமான பொம்மையால் இறந்து கிடந்தவளை பிழைக்கவைத்தான். 

கொடுத்த காசை உருப்படியாக செலவழித்த சின்னவனுக்குத்தான் தனது பெண்ணை அக்காள் கட்டிவைத்தாள் என்று சொல்லித்தான் தெரியவேண்டுமோ?

பின் குறிப்பு: தலைப்பினால் கவரப்பட்டவர்களுக்கு ஒரு செய்தி. அவரவர் விதிப்படி முறைப்பெண் கிட்டும் என்பதறிக. பேரா.இரா.மோகன் தொகுத்த ”விருந்தும் மருந்தும்” என்ற நூலிலிருந்த வட கன்னட நாட்டுப்புறக் கதை. மூலத்திலிருந்த கதைமொழி இங்கே என் மொழியில். பறந்து வருவதற்கு தொட்டிலும், பார்ப்பதற்கு அந்த மாயக் கண்ணாடியும் இல்லையென்றால் சின்னவனுக்கு சான்ஸ் கிடைத்திருக்குமா என்றெல்லாம் பட்டிமன்றம் போட்டு ஆராயாமல் கதையைப் படித்து இன்புற்றமைக்கு நன்றி.

படக் குறிப்பு: பழைய கதையாதலால் cinefundas.com-ல் கண்டெடுத்த சரோஜாதேவி இங்கு அதிரூப சுந்தரியாக வர சம்மதித்தார்.

-

Thursday, November 10, 2011

உம்மா கொடுத்த மழை

கொஞ்ச நாளா திண்ணை ரொம்ப காலியா இருக்கு. அடிக்கடி ப்ளாக் பக்கம் வர நேரமில்லை. இருந்தாலும் மூக்கு முட்டச் சாப்பிட்ட பின்னும் தவறாமல் வாய்க்கு எதையாவது போட்டுக் கொரிப்பது போல முகப்புஸ்தகம் என்னை அடியோடு ஆட்கொண்டுவிட்டது. நண்பர்கள் குழாமும் நன்றாக சத்தம் வர தாளம் தப்பாமல் கும்மியடிப்பதால் கச்சேரி அங்கே களை கட்டுகிறது. சில நாட்களாக அங்கே நண்பர்களுக்காக பகிர்ந்ததை இங்கே உங்களுக்காகவும்.


**************** உம்மா கொடுத்த மழை *************


வங்கக்கரையோரம் மையம் கொண்ட சமீபத்திய புயல் சின்னத்தினால் தெருக்களை படகு விடும் கணவாய்களாக மாற்றிய மழை பற்றிய ஒரு ஸ்டேட்டஸ் அப்டேட்.
சென்னையை இறுக்கி அணைத்து
உம்மா கொடுத்தது மழை!
பொறாமையில் பாதாள சாக்கடைக்கு
மூச்சடைத்துப் போய்விட்டது!!

#கவிதையா படிச்சா கவிதை. கவிவாசகமா வாசிச்சா வாசகம்.
##எல்லாம் படிக்கிறவங்க கையில இருக்கு
மழையின் தாக்கம் மனதிற்குள் தாக்கத்தை ஏற்படுத்த என்னிடமும் பேஸ்புக் இருக்கிறது என்று எழுதினேன் இன்னொரு கவிதை. 
ஏதோ
கோபப்பட்ட பொண்டாட்டி
திட்டுவதைப் போல
பாட்டம் பாட்டமாய்
பெய்கிறது மழை

#இன்னுமொரு மழைக் கவிதை
#போன மழைக் கவிதைக்கு எழுதிய “#” வாசகங்கள் இதற்கும் செல்லுபடியாகும் என்பதை அறிக
’#’  வாசகங்களில் என்னுடைய தனிப்பட்ட கருத்து!
*****************  அடித்து வி்ளையாடும் ஆசிரியர் ********************
"ஸார் நம்ப முடியவில்லை” என்றேன். அவர் தன் பெண் பிறந்து வளர்ந்ததையும், வளர்ந்த சூழ்நிலையையும் 1500 வார்த்தைகளில் சொன்னார். அவள் எப்படி மாறிப் போனாள் என்பதை விவரித்தார். அதைப் பகுதி பகுதியாக இந்த அத்தியாயத்தில் இறைத்திருக்கிறேன். ஒரேயடியாகக் கொடுத்தால் ரம்பம் படம் போட்டு ஆசிரியருக்கு ‘தேனி - பால கோபாலன்’ என்று லெட்டர் எழுதுவீர்கள்.
#இப்படி வார்த்தைகளால் நான்கு ஆறுகளாக அடித்து விளையாடும் எழுத்தாளரை தேடிக்கொண்டிருக்கிறேன். உங்களுக்கு யார்னு புரிஞ்சிருக்குமே! எங்க சொல்லுங்க பார்ப்போம்!!!! :-)
  ***************** புத்தக அலமாரி ********************
அரை மணியில் அடுக்கி விடலாம் என்று ஆரம்பித்தால் இரண்டு மணி நேரம் பெண்டு நிமிர்த்தியது என்னுடைய புத்தக அலமார். அது பற்றிய ஒரு அப்டேட்.
நாலரை மணிக்கு அடுக்க ஆரம்பித்தது இப்போதுதான் முடிந்தது.

ஷெல்ஃபில் குந்தியிருந்த ஆதவன், கி.ரா, சா.க, தி.ஜா,எம்.வி.வி, கரிச்சான் குஞ்சு,லா.ச.ரா, இரா.முருகன்,சுஜாதா, பாரதி, அ.கா.பெருமாள், புதுமைப்பித்தன், பி.ஏ. கிருஷ்ணன், சு.ரா, அசோகமித்ரன், ஜி.நாகராஜன், மாலன், வாலி, எஸ். ராமகிருஷ்ணன், பாலகுமாரன், வி.ஸ.காண்டேகர்,அ.முத்துலிங்கம், கவிஞர் முத்துலிங்கம், இரா.கணபதி, ஜெ.மோ,சாரு, சோ, பா.ரா எல்லோருக்கும் மிக்க மகிழ்ச்சி!

Malcom Gladwell, Richad Dawkins, Martin Gardner, Rashmi Bansal, JULIAN ASSANGE, GURCHARAN DAS, CHARLES MOSLEY (THE ART OF ORATORY) போன்ற ஆங்கில ஆத்தர்களும் VERY VERY HAPPY!!

#எல்லோரையும் மீண்டும் ஒருமுறை தொட்டுப் பார்த்ததில் எனக்கும் மட்டட்ற மகிழ்ச்சியே!
***************** கண்டீஷன்ஸ் ****************************
”அப்பா! ஒன்னு சொல்லட்டா?”
”என்ன?”
”அடிக்கக் கூடாது”
“......”
“திட்டக் கூடாது”
”......”
“அம்மாக் கிட்ட சொல்லக் கூடாது”
“.....”
“அம்மாக் கிட்ட சொன்னாலும், அம்மா திட்டக்கூடாது”
“.....” (நம்ம கையில இல்லையே!)
“அம்மாவும் அடிக்கக் கூடாது”
“.....” ( அவுட் ஆஃப் அவர் ஸ்கோப்)
“ப்ராமிஸ் பண்ணு”
“.....”
“எம்மேல பண்ணு”
“.....”
“மதர் ப்ராமிஸ் பண்ணு”
”....”

(என் கையை எடுத்து தன் கைமேல் வைத்துக்கொண்டாள்)

”சார்ட் ஓரத்தில லேசா கிழிஞ்சிடிச்சு”

#இந்த சம்பாஷணையில் ஒரு ”என்ன”க்கு அப்புறம் வேற எதுவும் கேட்காத அப்பிராணி இந்த ஆர்.வி.எஸ்
#லொடலொடா என் ரெண்டாங் க்ளாஸ் படிக்கும் ரெண்டாவது. பதில் சொல்லமுடியாத எவ்ளோ கண்டீஷன்ஸ்!!
 என்னுடைய இரண்டாவது பெண்ணின் ஒரு பள்ளிக் காலை நேர கறார் பேச்சு.
*********** கவிச்சக்ரவர்த்தியின் லேட்டஸ்ட் புக் **************
அகஸ்மாத்தாக லக்ஷாதிபதியான ஒருவர் பதிப்பகத்தாருக்கு பின்வருமாறு ஒரு லிகிதம் எழுதினார்:-

அன்புள்ள ஐயா,
தாங்கள் அனுப்பிய கம்ப ராமாயணம், வால்மீகி ராமாயணம், வில்லிப்புத்தூரார் பாரதம் ஆகியவை கிடைக்கப் பெற்றேன். இவர்கள் சமீபத்தில் எழுதிய நூல்களும் வி.பி.பியில் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

# Ravi Prakashஅவர்கள் தொகுத்த விகடன் காலப் பெட்டகத்திலிருந்து..
##நல்லவேளை, திருக்குறள் படித்துவிட்டு அந்த தாடி வைத்த ஆளின் அட்ரெஸ் என்ன என்று கேட்காமல் விட்டார்!
### இது துணுக்குதான் :-)
*************** ’ஓய் மாமா’வும் நாராயணனும் ************
”ஓய் மாமா!” அப்டீன்னு ரோட்ல எதிர் சாரியில போற மாமாவைக் கைத்தட்டிக் கூப்பிட்டா சைக்கிள்ல நம்ம பக்கத்தில போற மாமா திரும்பி “என்னைக் கூப்பிட்டியா?” அப்டீன்னு கேட்டாராம். அதுமாதிரி நாராயணன்னு பையனுக்கு பேர் வச்சுட்டு அவனைக் கூப்பிட்டாலும் ஒவ்வொரு தடவையும் வைகுண்டவாசன் தன்னைக் கூப்பிட்டதா நினைச்சுப்பன்.
#ரெண்டு நாளா கார் போக்குவரத்தில சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதரோட ஸ்ரீமத் பாகவத சப்தாகம் கேட்டுக்கிட்டு இருக்கேன்.
##பக்தி மார்க்கத்தில் பகவன் நாமாவை எப்படிச் சொன்னாலும் அவனை அடையலாம் என்பதற்கு தீக்ஷிதர் சொன்ன உதாரணம்.
###சிரிப்பை வரவழைத்தாலும் எவ்ளோ பெரிய உண்மை!
**************** கூண்டுக் குரங்குகள் *****************
 மானேஜ்மெண்ட் கதைகளில் கூண்டில் அடைக்கப்பட்ட குரங்குகளின் கதை ஒன்று உண்டு.

மூன்று குரங்குகளைக் கூண்டில் அடைத்து மேலே மூடியைத் திறந்து வைத்திருப்பார்கள். ஒவ்வொரு முறையும் குரங்குகள் மேலே தப்பிக்க ஏறும்போதெல்லாம் குழாய் மூலம் கொதிக்க கொதிக்க வெந்நீர்ப் பாய்ச்சுவார்கள். குரங்குகள் சூடுபட்டு பொத்தென்று கீழே விழுந்துவிடும். சிறிது நாட்களுக்குப் பிறகு வெந்நீர்ப் பாய்ச்சுவதை நிறுத்தினாலும் குரங்குகள் மேலே ஏறும் பழக்கத்தை விட்டுவிடும்.

ஒரு நாள் ஒரு புதிய குரங்கை கூண்டுக்குள் விடுவார்கள். குரங்கு தப்பித்துப் போக எண்ணி கூண்டுக்கு மேலே ஏறும். ஏற்கனவே கூண்டுக்குள் சூடுபட்ட குரங்குகள் புதிய குரங்கின் வாலைப் பிடித்து இழுத்து “ஏ! மூடனே! ஏறாதே.. கொதிநீர்ப் பாய்ச்சுவார்கள்” என்று எச்சரிக்குமாம்.

சில புதியகுரங்குகள் மறுபேச்சு பேசாமல் சமர்த்தாக உட்கார்ந்துவிடும். சில விஷமக் குரங்குகள் முயற்சி செய்யும்.

#இதில் எவ்வளவு விஷயங்கள் சொல்கிறார்கள். புரிகிறதா?
பின் குறிப்பு: இந்த திண்ணைக் கச்சேரி ஒரு புகழ்பெற்ற தினசரியில் தொடர வாய்ப்பு வருகிறது. அது வாய்த்தால் இனி வாரம் ஒருமுறை இது இங்கே பிரசூரிக்கப்படும்.
படக் குறிப்பு: மேற்படி படம் அடியேனால் எங்கள் அலுவலக வாசலில் பிடிக்கப்பட்டது. அடுத்த சில விநாடிகளில் பொளந்து கட்டியது அடை மழை.
-

Monday, November 7, 2011

கமல்ஹாசன்: பிறந்தநாள் வாழ்த்துகள்

”சீச்சீ... உனக்கு கமலப் புடிக்குமா? அவன் கிஸ்ஸெல்லாம் அடிப்பான். நீ கெட்டப் பையன். எங்கிட்ட பேசாதே” என்று ஏழாவது எட்டாவது படிக்கும் போது கமல்ஹாசனைப் பிடிக்கும் என்று சொன்ன காரணத்தால் இப்படி சக வயது நண்பர்களால் ஓரங் கட்டப்பட்டேன். பேண்ட் போட்ட அண்ணாக்கள் ”பய விவரமானவனா இருக்கான்” என்று கண்ணடித்து சிரித்து கன்னம் தட்டினார்கள். தட்டிய கன்னத்தை தடவிக்கொண்டு புரியாமல் விழித்திருக்கிறேன்.

விக்ரமும் காக்கிச்சட்டையும் விவரம் புரிந்த பிறகு பார்த்தவுடன் எதற்கு அப்படி வம்பு அளந்தார்கள் என்று ஒரு பிட் அளவு புரிந்தது. எட்டு பிட் சேர்ந்தது ஒரு பைட் என்பதன் ஒரு பிட். சொச்சமிருக்கும் ஏழு பிட் புரிய இன்னும் ஏழு வருடங்கள் பிடித்தது. கண்ணும் கருத்துமாய் கைக்கு அடக்கமான குஷ்பூவைக் காதலிக்கும் சிங்காரவேலனாக நடித்த பொழுதுதான் எட்டாவது பிட் எனக்கு புரிந்து ஒரு பைட் கம்ப்ளீட் செய்தேன்.

சிவாஜிகணேசனை சிலாகிக்கும் அளவிற்கு கமல்ஹாசனை பொதுஜனங்கள் போற்றிப் புகழ் பாடுவதில்லை. எனக்குக் கூட மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்னவில் பத்மினியைப் தூணுக்குப் பின்னால் இருந்து லுக் விடும் சிவாஜியை ரொம்ப பிடிக்கும். அதேயளவு காக்கிச்சட்டையில் மொட்டை மாடியில் அம்பிகாவிடம் கண்மணியே பேசு என்று குழையும் கமலையும் பிடிக்கும். அவரைப் பற்றிய ஒரே சார்ஜ்ஷீட்: கிஸ் அடிப்பார். கட்டிப் பிடிப்பார். இப்படியாக தமிழ் மரபுக்கு எதிராக திரைகளில் தோன்றுகிறார் என்று என்றைக்கு கொடிபிடித்தார்களோ, இப்போது அழத் தெரியாத புதுமுகங்கள் கூட மூக்குரச முத்தம் கொடுக்கிறார்கள்.

இயற்கையாகவே நகைச்சுவை ததும்ப நடிப்பார். சென்னை பாஷை அவருக்கு கை வந்த கலை. குணா நல்லாயிருக்குன்னு சொன்னா உடனே “நிஜ வாழ்க்கையை வாழ்ந்திருக்கார்னு சொல்லு” என்று கைகொட்டி சிரிப்பார்கள். நாயகனில் “ஆ....ஆ.....” என்று அழுதது அழியாப் புகழ் பெற்று பேட்டைக்கு பேட்டை மேடைக்கு மேடை மிமிக்கிரி செய்தார்கள்.

எனக்குப் பிடித்த பத்து கமல் படங்கள். ஸார்ட்டிங் ஆர்டர் எதுவும் இப்பட்டியலுக்கு கிடையாது. ஒவ்வொரு சமயம் ஒவ்வொன்று சிறந்தது .

  1. தேவர் மகன்
  2. மகாநதி
  3. மைக்கேல் மதன காம ராஜன்
  4. நாயகன்
  5. குணா
  6. அவ்வை ஷண்முகி
  7. காக்கிச் சட்டை
  8. சிகப்பு ரோஜாக்கள்
  9. இந்தியன்
  10. உன்னால் முடியும் தம்பி


பத்துக்குள் அடக்க முடியாதவர் கமல். ரசிகர்களை நற்பணி மன்றங்கள் அமைக்கச் சொல்லி ரத்ததானம் கொடுக்க வைத்தார். ஏழைகளுக்கு நோட்டுப் புஸ்தகம் பரிசளிக்கச் சொன்னார். அநேக நட்சத்திரங்களைப் போல சுயநலத்திலும் பொதுநலமாய் நற்காரியங்கள் பல செய்வதற்கு ஊன்றுகோலாக இருக்கிறார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

பத்துப்பாட்டும் போட்டுடுவோம்.

டிக்.டிக்.டிக்கில் மாதவியை க்ளிக்கிப் பாடும்...

-

மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது....

தெய்வீக ராகம்... ராஜாவின் ஆரம்ப ப்ளூட் பிட்... தெவிட்டாத தெள்ளமுது...

ராதா ராதா நீ எங்கே.... மீண்டும் கோகிலாவில்...

நீல வான ஓடையில்..... தலைவர் எஸ்.பி.பியின் ஆரம்ப ஆலாபனை அமர்க்களம்... 


அம்பிகாவின் பட்டுக் கண்ணம் கமல் தொட்டுக்கொள்ள ஒட்டிக்கொள்ளுமாம்... காக்கிச்சட்டையில்...


ஊர்வசியுடன்.... சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கும்... அந்த ஒரு நிமிடம்  பாடல்....




அமலாவுடன் பூங்காற்று உன் பேர் சொல்ல என்று வெற்றி விழாவில்.....

கௌதமியுடன் காதலை வாழ வைக்கும் கமல்.. அபூர்வ சகோதரர்கள் படத்தில்...




கிண்ணத்தில் தேன் வடித்து....


-

Friday, November 4, 2011

மக்கு நான் கொக்கல்ல


சலனமற்ற காடு தனிமையில் ஆழ்ந்திருந்தது. பட்சிகளின் பண்ணிசையும் காற்றின் ”ஹோ” என்ற ஓசையையும் தவிர்த்து நிசப்தமாக இருந்தது. ஜடாமுடியுடன் ஒரு தவஸ்ரேஷ்டர் ஏரிக்கரையில் நின்று நித்யானுஷ்டானங்களை செய்து கொண்டிருந்தார். “க்ரீச்..க்ரீச்” என்ற பறவையின் சப்தத்தைத் தொடர்ந்து ’சொத்’தென்று அவர் சூரியனை நோக்கி ஏந்திய கையில் ஏதோ விழுந்தது. அது பறவையின் எச்சம். கோபாவேசமாக அண்ணாந்து அக்னிப் பார்வையை விண்ணில் செலுத்தினார். அவரது பார்வையில் அங்கே பறந்து கொண்டிருந்த எச்சமிட்ட கொக்கு பஸ்பமாகி செத்துக் கீழே விழுந்தது.

பொசுக்கியவர் பெயர் கௌசிகன். வேதங்களைக் கரைத்துக் குடித்தவர். வயதான தாய் தந்தையரின் சொல்லைக் கேளாமல், அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்காமல் "தவமே சிறந்தது” என்று கங்கணம் கட்டிக்கொண்டு காடுகளில் கௌசிகன் பன்னெடுங்காலமாக கடும் தவம் புரிந்தார். கௌசிகனுக்கு கொக்கு பொசுங்கியதில் ஆச்சர்யம். ஆஹா. நமக்கு தவப்பலன் பூரணமாகக் கிடைத்துவிட்டது என்று அகமகிழ்ந்தார். புதிய சக்திபெற்ற சந்தோஷம் மற்றும் சுடுபார்வை ஒரு அப்பாவி ஜீவனைக் கொன்றுவிட்டதே என்ற வருத்தம் என்று கலவையான எண்ணத்தில் காட்டை விட்டு பக்கத்துக் கிராமத்திற்கு பிக்ஷைக்கு கிளம்பினார்.

நாளுக்கொரு வீடு பிக்ஷை எடுத்து உண்பது என்று முடிவு செய்தவராய் “பவதி பிக்‌ஷாம் தேஹி” என்று இருகையையும் ஏந்தி நின்றார். மூன்று முறை கேட்டு ஒரு வீட்டிலிருந்து பிக்‌ஷை அரிசி வரவில்லையென்றால் அன்றைக்கு பட்டினி தான். உள்ளுக்குள் கோபம் ஆறாக ஊற்றெடுக்கத் தொடங்கியது. மீண்டும் ஒருமுறை “பவதி பிக்ஷாம் தேஹி” என்று உரத்தக் குரலில் பிக்ஷை கேட்டார். இவரைப் பார்த்துக்கொண்டே அந்த வீட்டின் இல்லத்தரசி கொல்லைப்புறத்தில் உட்கார்ந்து பாத்திரம் தேய்த்துக்கொண்டிருந்தாள். இப்பவும் பதில் வரவில்லை. கௌசிகனுக்கு முகம் ஜிவ்வென்று சிவந்தது. கோபத்தின் உச்சிக்கு சென்று இன்னும் சப்தமாக “பவதி பிக்ஷாம் தேஹி” என்று குரலை உயர்த்தினார்.

அச்சந்தர்ப்பத்தில் அப்பெண்மணியின் கணவனார் வேலையிலிருந்து வீடு திரும்பினார். கொல்லைப்புறத்தில் இருந்தவள் போட்டது போட்டபடி ஓடிடோடி வந்தாள். வாசலில் கையேந்தி நின்றவரைப் பார்த்து “கொஞ்சம் பொருங்கள்” என்று கையால் சமிக்ஞை செய்துவிட்டு கணவனுக்கு சிஸ்ருஷ்டை செய்யலானாள். இவருக்கு கோபம் பற்றிக்கொண்டு வந்தது. இருந்தாலும் பொறுத்துக்கொண்டு அவளுக்காக காந்திருந்தார்.

கோபம் எல்லைமீறிப் போய் சபிக்கலாம் என்று நினைக்கும் வேளையில் அந்த வீட்டின் குலஸ்திரீ கையில் அரிசியுடன் பிட்சையிட வந்தாள். அவளை சுட்டெரித்துவிடும் பார்வையை அவள் மேல் வீசினார் கௌசிகன். அப்பெண்மணி கற்புக்கரசி. மாதரசி. சிரித்த வண்ணம் சாந்தமாக “உன் கோபப்பார்வையில் சுட்டுப் பொசுக்கிவிடுவதற்கு என்னை அந்தக் கொக்கென்று நினைத்தாயோ?” என்று கேலியாகக் கேட்டாள்.

ஆளரவமற்ற பகுதியில் தான் கொக்கை எரித்தது இவளுக்கு எப்படித் தெரிந்தது என்று கௌசிகனுக்கு மிகுந்த ஆச்சரியம். 

“அம்மா! நீங்கள் உத்தமமான பெண். நான் காட்டில் கொக்கை எரித்தது உங்களுக்கு எப்படித் தெரிந்தது?” என்று பணிந்து கேட்டார் கௌசிகன்.

 ”முனிவரே! நான் என் இல்லத்து தேவைகளனைத்தையும் குறையில்லாமல் நிறைவேற்றுகிறேன். எனது வயதான மாமியாரையும், மாமனாரையும் சொந்த தாய் தகப்பன் போல போற்றிக் காத்து வருகிறேன். மேலும், எனது கணவருக்கு செய்ய வேண்டிய பணிவிடைகள் அனைத்தையும் குறையில்லாமல் செய்கிறேன். என்னுடைய வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரர்களுக்கு அவர்கள் மனம் கோணாமல் தாராளமாக பொருள் தருகிறேன். என் கணவருக்கு சேவை செய்தபின் நேரமிருப்பின் மற்றவர்களுக்கு உபகாரமாக இருக்கிறேன். இதுதான் என்னுடைய தர்மம். உங்களுக்கு மேலும் விவரம் வேண்டுமென்றால் மிதிலையில் தர்மவியாதரன் என்றவரிடம் போய் தர்மத்தின் விளக்கத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறினாள்.

அம்மாதருள் மாணிக்கத்தை வணங்கி விடைபெற்று மிதிலை மாநகரத்திற்கு சென்றார் கௌசிகன். இவ்வளவு பெரிய நகரத்தில் தர்மவியாதரனை எங்கு தேடுவது என்ற யோசனையில் அங்கு கடைவீதியில் விசாரித்தார். ஒரு மாமிசம் விற்கும் கடையைக் காட்டி அங்கிருப்பவர் தான் தர்மவியாதரன் என்றார்கள்.

கசாப்புக்கடை வைத்திருப்பவரிடன் என்ன தர்மத்தை நாம் எதிர்பார்க்க முடியும் என்ற எண்ணத்தோடு அந்தக் கடையை நெருங்கினார் கௌசிகன்.

மிகவும் தயக்கத்தோடு “தர்ம வியாதரன்....” என்று சங்கோஜமாக கேட்ட கௌசிகனுக்கு “வாருங்கள்.. வாருங்கள்... நீங்கள் கொக்கை எரித்ததை ஞானக்கண்ணால் கண்ட பதிவிரதையான பெண்மணி சொல்லி என்னிடம் தர்ம விளக்கம் பெற வந்திருக்கிறீர்கள். வரவேண்டும். வரவேண்டும். எனது வீட்டிற்கு சென்று பேசலாம்” என்று அன்போடு அழைத்துச் சென்றார்.

ஏற்கனவே கொக்கை எரித்ததை எங்கிருந்தோ கண்டுகொண்ட அந்த பதிவிரதை பற்றிய ஆச்சரியத்துடன் வந்தவர் இங்கே தர்மவியாதரரின் பேச்சைக் கேட்டு வாயடைத்துப் போனார்.

வீட்டில் தனக்கு அநேக உபசாரங்களைச் செய்த தர்மவியாதரரிடம் “எங்கோ நடைபெற்ற சம்பவங்களை இங்கிருந்தே அறிந்த நீர் பல தர்மங்களை தெரிந்தவர் என்பதில் எனக்கு ஐயமில்லை. இருந்தாலும் இந்த மாமிசம் விற்கும் தொழிலை ஏன் செய்கிறீர்கள்?” என்று கேட்டார்.

“இது என்னுடைய குலத்தொழில். என்னுடைய தந்தை, பாட்டன், முப்பாட்டன் காலத்திலிருந்து இத்தொழிலை செய்துவருகிறோம். இது கொஞ்சம் மோசமான தொழில் தான். ஆனால் முன் பிறவில் நான் செய்த வினையை இப்போது அனுபவிக்கிறேன். இப்புவியில் வசிக்கும் அனைத்து ஜீவராசிகளும் ஒன்றிர்கொன்று உணவாக அமைகிறது. இயற்கையை ஒட்டியும் நேர்மையாகவும் நான் செய்யும் இத்தொழில் மோசமானது அல்ல.”

இதன் பின்னர், பல தர்ம விளக்கங்களை கௌசிகனுக்கு எடுத்துக் கூறலானார் தர்மவியாதரன்.

“பொய் பேசுவதை மனிதர்கள் விட்டுவிட வேண்டும். நன்மைக்கு அளவுகடந்த இன்பப் படுவதும், தீமைக்கு துன்பக்கடலில் வீழ்வதும் முற்றிலுமாக தவிக்கவேண்டிய குணங்கள். தர்மம் மிகவும் நுட்பமானது. இக்கட்டான வேளைகளில் தர்மம் காக்க பொய் சொல்லலாம். ஆபத்தில் சொன்ன பொய்யை மற்றவர்களுக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் பின்னர் பிரிதொசொல்வது பாபத்தை விளைவிக்கும்.

இவ்வுலகத்தில் கெட்டவன் சுகிப்பதும், நல்லவன் நலங்கெட்டுப் போவதும் தத்தம் முன்வினைப்பயனே! அவரவர் செய்த நன்மை தீமைக்கு ஏற்ப அடுத்த பிறவியில் வாழ்கிறார்கள்.

அதற்கு கௌசிகர், “இன்னார் பிறந்தார், இறந்தார் என்றால் அது அந்த ஜீவனைப் பற்றித்தானே, அப்படியிருக்கையில் ஜீவன் அழிவற்றது என்று எப்படிக் கூறலாம்?” என்று கேட்டார்.

“ஒருவர் இறக்கும்போது அழிவது சரீரம்தானே தவிர ஜீவன் அல்ல. ஜீவன் ஒரு உடலை விடும் பொழுது இறப்பு என்றும் இன்னொரு உடலை அடையும் பொழுது பிறப்பு என்றும் கூறுகிறார்கள். சரீரம்தான் அழிகிறதே தவிர ஜீவன் அழிவற்றது. ஜீவன் அமரத்தன்மை வாய்ந்தது.” என்றார் தர்மவியாதரர்.

மேலும் அவர் கூறினார்: “மனிதன் மூவகைக் குணங்களோடு படைக்கப்பட்டிருக்கிறான். தமோ, ரஜஸ், சத்வ என்று அவை வகைப்படும். தமோ குணம் படைத்தவன் சோம்பேறியாகவும், முட்டாளாகவும் இருப்பான். ரஜஸ் படைத்தவன் பொருள் ஈட்டுவதிலும், சக்தி உள்ளவனாகவும் இருப்பான். ஆனால் அவனிடம் தான் என்ற அகந்தையும் இருமாப்பும் இருக்கும். சத்வ குணம் படைத்தவன் சாந்தமாகவும், பற்றற்றும் இருப்பான். பொருள் ஈட்டுவதில் அவன் மனம் செல்லாது”.

இப்படி பல தர்மங்களை கௌசிகருக்கு எடுத்துரைத்து தாய் தந்தையருக்கு பணிவிடை செய்து புண்ணியம் பெற்றுக்கொள்ளுமாறு தர்மவியாதரர் உபதேசித்தார்.

பின்குறிப்பு: மகாபாரதத்தில் மார்க்கண்டேய மகரிஷி தர்மபுத்திரருக்கு வனபர்வத்தில் சொல்லும் இக்கதை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. என்னுடைய வழக்கமான மொழியை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு அடக்கமாக எழுதினேன். போரடித்திருக்கலாம். இருந்தாலும் காலை வாக்கிங்கில் கசாப்புக்கடை பார்த்ததும் ஞாபகம் வந்ததால் எழுதினேன்.

பட உதவி: mbp.photoshelter.com

-

Tuesday, November 1, 2011

மன்னார்குடி டேஸ் - ஸ்நேக் பார்

ஒரு ரூபாய் பட்டர் பிஸ்கெட், ஐம்பது காசு கடலை உருண்டை, சரம் சரமாக பல டினாமினேஷன்களில் கட்டித் தொங்கவிடப்பட்ட ஏ.ஆர்.ஆர் மற்றும் நிஜாம் பாக்குப் பொட்டலங்கள், ஹால்ஸ் டப்பா, பின் பாகத்தில் பஞ்சு வைத்த மற்றும் அல்லாத பல கம்பெனி சிகரெட்டுகள், சணல் கயிறில் நெருப்பு, உள்ளே ரெண்டு ப்ளாஸ்டிக் டேபிள் மற்றும் நாலைந்து ஸ்டூல்கள் என்று முன்புறம் பாய்லர் வைத்த டீக் கடைகளுக்கு மாடர்ன் நாமகரணம் ஸ்நேக் பார்! மன்னையில் முக்காலே மூணு வீசம் இளைஞர்கள் திருட்டு தம் அடிக்கத் தேடும் இடம் அது. “காலிப் பய. அவன் சிகிரெட்டு பிடிப்பான்” என்று உற்றாரும் ஊராரும் தூற்றக் கூடாது என்று மறைவிடம் தேடுவோர் நாடுமிடம் ஸ்நேக் பார்.

பந்தலடியில் உடுப்பி கிருஷ்ணாபவன் எதிரில் ஒரு சேட்டன் ஸ்நேக் பார் வைத்திருந்தார். பல பேருக்கு அதுதான் ஆஸ்தான ’தம்’மிடம். சேட்டன் கட்டையாய் பூப்போட்ட கைலி கட்டியிருப்பார். சேரநாட்டு அநேக சேட்டன்மார்கள் போல முன்பக்கம் சொட்டை வாங்கி, சட்டையில்லாமல் இருப்பார். அவரே டீ மாஸ்டர், அவரே சப்ளையர். எனது நண்பர்களில் பலர் அவருடைய டீக் கஸ்டமர்கள். “எந்தா!” என்று விளிக்கும் சட்டையில்லாத கைலிச் சேட்டனின் கட்டஞ்சாயாவில் பல இளைஞர்கள் கவிழ்ந்திருந்தார்கள். ஏனைய வென்ட்டிலேஷன் இல்லாத கீக்கிடமான ஸ்நேக் பார்களைவிட கொஞ்சம் விஸ்தாரமானது அந்த மலையாள ஸ்நேக் பார்.


அந்நாளில் ஜனசந்தடி மிகுந்த அங்காடித் தெருக்களில் மலிந்திருந்தன ஸ்நேக் பார்கள். “மாப்ள” என்று தோளோடு தோள் சேர்த்து ஓருயிர் ஈருடலாக உட்புகுவர். ஒரு அரைமணி நேரம் புகை சூழ்ந்த தேவலோக வாசம். கடைசியில் ஒரு ஹால்ஸ் அல்லது பாக்குப் போட்டுக் கொண்டு வெளிவரும் வேளையில் அவர்கள் முகங்களில் ஜொலிக்கும் திருப்தி கோடி ரூபாய் கொடுத்தாலும் அவர்களுக்கு இவ்வையகத்தில் வேறெங்கிலும் கிடைக்காது.

ஏட்டனின் பாருக்கு தொழில் போட்டியாக அதே ஏரியாவில் இனிய உதயமானது இன்னொரு ஸ்நேக் பார். எஸ்.பி.பியும் ராஜாவும் கைக் கோர்த்துக்கொண்டு அவர்களுக்காக உழைத்தார்கள். வெளியே தைரியமாக சிகரெட்டும் கையுமாக திரியும் தீரர்களைக் கூட கட்டி இழுத்தது தேன் சொட்டும் பாடல்கள். சில சமயம் காது கிழியும் பாடல்களுக்கிடையில் ஒரு சிகரெட்டை வாங்கி விரலிடுக்கில் சொருக்கிக்கொண்டு ஏதோ தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருப்போரும் உண்டு. ஏதோ தயிர் சாதத்துக்கு எலும்பிச்சங்காய் ஊறுகாய் போல டீக்கு தொட்டுகொள்ள சிகரெட்டா என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் அதிர்ச்சியுற்று “கண்ணு வழியா புகை விடட்டா” என்றான் கிங்ஸ் சிகரெட் போல நெடுநெடுவென வளர்ந்த நண்பன் ஒருவன்.

புதியதாய் அரும்புமீசை முளைத்து குறும்புப் பார்வையுடன் ஆணாகி ஆளாகி வரும் விடலைகளுக்கு சிகரெட் போன்ற லாஹிரி வஸ்துக்கள் கற்றுக்கொள்ளும் கலாசாலைகளாக பணியாற்றிக்கொண்டிருந்தன பல ஸ்நேக்குகள். “அக்கும்..ஹுக்கும்” என்று இருதயம் வெளியே வந்து விழும்வரை இருமி உள்ளுக்கு இழுப்பார்கள். திருட்டு தம் கோஷ்ட்டிகளின் புகலிடமாகவும் கூடாரமாகவும் செயல்பட்டுவந்த ஸ்நேக் பார்களில், தான் நண்பர்களிடமும் பெற்றோரிடமும் பிச்சையெடுத்து காலில் விழுந்து காசு பொருக்கிக்கொண்டு வந்தாலும் உருப்படியாக வாய்பொத்தி சமர்த்தாக இருக்கும் நண்பனிடம் “மாப்ள! தம் வேணுமா” என்று விருந்தோம்பி தனக்கொரு இழுப்பு அவனுக்கொரு இழுப்பு என்று ’தம்’ தர்மம் மற்றும் தம்தர்மம் காத்து நட்புக்கு இலக்கணமாக நின்ற நண்பர்களை நினைக்கும் பொழுது கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகிறது.

இதற்கு மேல் இந்த தம் பர்வத்தை விலாவாரியாக எழுதி, நீங்கள் என்போன்று இப்போது காபி மட்டும் குடிக்கும் டீ டோட்டலரை தவறாக எடுத்துக்கொள்ளக் கூடும் என்ற பயத்துடன் முடிக்கிறேன். வணக்கம்.

பின் குறிப்பு: சிகரெட் குடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது, அதைப் பற்றி படித்தல் அதைவிட தீங்கானது என்றெண்ணி இதைப் படிக்காமல் ஸ்க்ரால் பாரை உருட்டி கடைசி வரை நீங்கள் வந்துவிட்டால், மேலே போய் ஒருக்கா படித்துவிடுங்களேன்.


பட உதவி: http://flashnewstoday.com/
-

Wednesday, October 26, 2011

யாரிடமும் சொல்லாத கதை (சவால் சிறுகதை-2011)

என் பெயர் கல்யாணராமன். ஆனால் இன்னமும் கல்யாணமாகாத ராமன். பராசக்தியில் பாதியாய் கைச்சட்டை மடித்த சிவாஜி போல் கூண்டேறிச் சொல்வதென்றால் ”மங்களகரமான பெயர்”. பிறந்த ஊர் அரியலூர் பக்கத்தில் ஒரு குக்கிராமம். குக் என்று... என்ன மேலே சொல்லட்டுமா.. இல்லை இங்கேயே நிறுத்தட்டுமா.. நம் கதையே பெருங்கதை இவன் கதையை யார் படிப்பார் என்று தலையில் அடித்துக்கொள்பவரா நீங்கள்? ப்ளீஸ் இப்போதே எஸ்கேப் ஆகிவிடுங்கள். இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் சொல்வதைக் கேட்டால் உங்களுக்கு தலை சுற்றும். ”மாபாவி... சண்டாளா” என்று வாய்விட்டு கம்ப்யூட்டர் திரையைப் பார்த்து காரித்துப்பி கொச்சையாக திட்டினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. 

படிக்க தெம்பிருப்பவர்கள் கொஞ்சம் காதைக் கொடுங்கள். ரகஸியமாக ஒன்று சொல்லவேண்டும். இப்போது நானிருக்கும் உயர்பதவியில் என்னை ஒரு உதாரண புருஷனாக கொண்டாடுகிறார்கள். அதெல்லாம் சுத்த ஹம்பக். எல்லோரையும் போல நானும் பால்ய வயது பருவதாகத்துக்கு பல “காலைக் காட்சி” சினிமாக்கள் பார்த்தேன். காற்றில் மாராப்பு விலகும் அனைத்து மாதரையும் பார்த்து ஜொள்ளொழுக இளித்திருக்கிறேன். இதற்கும் ஒரு படி மேலே ஒரு சம்பவம் நடந்தது.

கல்லூரியில் வழக்கம்போல ந்யூமரிக்கல் மெத்தாட்ஸ் அரிப்பிலிருந்து விடுபடுவதற்காக அந்த அத்துவானத்தில் காம்பௌண்ட் தாண்டி பொட்டிக்கடை விரித்திருந்த ராசுக்கடையில் சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தேன். போச்சுடா. இது வேறயா? என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. பாரதியார் கஞ்சா புகைப்பாராம். எனக்கு தெரியும். நீ பாரதியா என்று கேட்காதீர்கள். சரி.. அனாவசியமாகப் பேச்செதெற்கு. மேலே சொல்கிறேன். 

ஒரு நிமிஷம். இது ஒரு ரௌடியின் வாழ்க்கைக் குறிப்பு என்று நீங்கள் இப்போது நினைத்தால் ஒன்று சொல்கிறேன் கேளுங்கள். பேசாமல் இத்தோடு இதைப் படிப்பதை நிறுத்திவிடுங்கள். போன பாராவில் வரும் விடலைக் காட்சிகளை வைத்து ஒரு காமரசம் ததும்பும் வாழ்க்கையாகவும் இதை எடைபோட்டு விடாதீர்கள். அதுவும் தவறு. என்ன குழப்புகிறேனா? இன்னும் கொஞ்ச நேரம் தான். உங்களுக்கு புரிந்து விடும். ம்... எங்கே விட்டேன். ஆங்... சிகரெட் பிடித்துக்கொண்டு நிற்கும்போது... உடம்பெங்கும் அழகு ஆறாகப் பெருகி ஓடும் ஒருத்தி அருவியென நடந்து வந்து கொண்டிருந்தாள். நெற்றியில் ஒரு சந்தன தீற்றல். அதன் கீழே ரவையளவு குங்குமம். காதுகளில் கண்ணகியின் சிலம்பு போல இரு பெரு வளையங்கள். கண்களின் ஓரங்களுக்கு மையினால் கரைகட்டியிருந்ததால் அதன் அளவு தெரிந்தது. அடுத்தவரை மயக்கும் அகலக் கண்கள். மீதிக்கு நீங்கள் தடுமாறாமல் அடுத்த பாராவுக்கு வாருங்கள்.

அவளை பதுமை போல பாங்காக நிற்க வைத்து துணியால் மேனியைச் சுற்றி அந்த சுடிதார் தைத்திருப்பார்கள் போலிருக்கிறது. நகமும் சதையுமாக இருந்தது சுடிதாரும் தேகமும். இப்போது அவளைப் பற்றி திருஅங்கமாலை படிக்கப்போவதில்லை. உடம்பு இறுக்கும் பின்னால் ஜிப் வைத்த சுடிதார் அணிந்த வாளிப்பான பெண் எப்படியிருப்பாள் என்று உங்களுக்கே தெரியும். ஆளை மயக்கும் வாசனையுடன் மோகினாய் பக்கத்தில் வந்தாள். அவளைப் பார்த்த ஆச்சர்யத்தில் தானாக வாய் திறந்து சிகரெட் புகை வழிந்தது. அந்தப் புகையின் ஊடே அவளைப் பார்த்தால் தேவலோக ”ரம்பை+ஊர்வசி+திலோத்தமை=அவளொருத்தி” போலிருந்தாள். அவள் பவள வாய் திறந்து ”எக்ஸ்க்யூஸ் மீ” என்று நாக்கை அழுத்தி உதடு சுழற்றிப் பேசும்போது என் கண்கள் என்கிற வ்யூபைண்டர் வழியாக அவளுடைய சிறுசிறு சுருக்கங்கள் நிறைந்த ஆரஞ்சு சுளை உதடுகள் மட்டும் ஜூமாகித் தெரிந்தது.

பக்கி என்று நினைத்துக்கொள்வாளோ என்றஞ்சி சுதாரித்துக்கொண்டு “என்னையா?” என்று கேட்டுவிட்டு சட்டையின் முதல் பட்டன் போட்டிருக்கிறேனா என்று கையால் நீவிவிட்டுக்கொண்டேன். “ஹாங்..” என்றவள் ஒய்யாரமாக வலது பக்கம் கைக்காட்டி “ஃப்ளூக்கர்ஸ் டிஸ்டிலெரீஸ் அத்தானே” என்றாள். அத்தானே இல்லை. அதுதானேவை ஸ்டைலாக சொன்னாள். பேசியது தமிழா ஆங்கிலமா என்று சரியாகத் தெரியவில்லை. தமிங்கிலீஷ் என்கிறார்களே அதுபோலவும், தொகுப்பளினிகளின் கையாட்டிப் பேசும் ப்ரிய பாஷை போலவும் இருந்தது. அவள் கைகாட்டிய பிறகு தான் அங்கே ஒரு கட்டிடம் இருப்பதையே நான் பார்த்தேன். கடைப் பக்கம் திரும்பி ராசுவிடம் “அது டிஸ்டிலெரியா?” என்று கேட்டதற்கு அவன் என்னைப் பார்த்தால் தானே பதில் சொல்வான். வாய் மட்டும் மந்திரம் போல “ஆமா...மா..மா...மா...” என்று முணுமுணுத்துக்கொண்டிருக்க அந்தப் பேரழகியை அசிங்கமான இடங்களில் கண்களால் அளந்துகொண்டிருந்தான்.

இதுவரைப் படித்ததில் “இது தான் நான்” என்று நீங்கள் நினைத்தால் ”ஐ அம் ஸாரி”. மேலே போவோம். “அப்படித்தான் நினைக்கிறேன்” என்று சங்கோஜமாக பதில் சொன்னேன். அழகு ராணிகளை தூரத்தில் ரசித்தாலும் பக்கத்தில் வந்தால் கொஞ்சம் உதறத்தான் செய்கிறது. அவளுக்கு பொதுப்பரீட்சையில் திரிகோணமிதி சொல்லிக்கொடுத்தது போல நன்றிகலந்த சிரிப்போடு “நீங்களும் என் கூட கொஞ்சம் வரமுடியுமா?” என்று சங்கீதமாகப் பேசினாள். அடித்தது யோகம் என்று நீங்கள் நினைக்கக் கூடும். அங்குதான் வம்பே வந்தது. 

நான் சிகரெட் பிடித்துக்கொண்டிருந்த இடத்திலிருந்து மொத்தம் நானூறு அடியில் அவள் காட்டிய அலுவலகம் இருந்தது. சேர்ந்து நடக்கும் போது இரண்டு அடிக்கு ஒருதரம் அந்தத் துப்பட்டா என்னைத் தொடுகிறது. ஒரு துப்பட்டாவின் வருடல் கூட கிளுகிளுப்பூட்டும் என்று அன்று தான் நான் உணர்ந்தேன். ”யேய் இழுத்து பின்னால் முடிந்து கொள்” என்று சொல்லலாமா வேண்டாமா என்று மனதிற்குள் வழக்காடிக் கொண்டிருக்கும்போதே அந்த கம்பெனி வந்துவிட்டது. ஊருக்குத் தெரியாமல் ஒவ்வாத காரியம் செய்பவர்கள் இடம் போல ஆளரவமற்று ஏதோ வேலை செய்துகொண்டிருந்தார்கள். வாசலில் நின்றிருந்த கூர்க்கா பேய்ப் படங்களில் வரும் தாடிவைத்த அச்சுறுத்தும் போஸில் முறைத்த படி நின்றிருந்தான். 

“இன்னிக்கி என்னை இண்டெர்வியூவுக்கு வரச்சொல்லியிருந்தாங்க” அவள்தான் பேசினாள். வீணைத் தந்தியை மீட்டியது போலிருந்தது. “உங்க பேரு?” மிரட்டலாய்க் கேட்டான் அந்தக் கபோதி. பின்ன. அவனைத் திட்டாமல் கொஞ்ச சொல்கிறீர்களா?. “சாருமதி” அவள் சொல்லி முடிக்கையில் என் காது வழியாக கரும்பு ரசம் ஏறி நெஞ்சுக்குள் இறங்கி இனித்தது. மன்மதன் மலரம்பு பூட்டிவிட்டான். மனதிற்குள் இரண்டு முறை “சாரு..சாரு..” என்று இரைந்து சொல்லிக்கொண்டேன். இம்முறை நாக்கு தித்தித்தது. “இவரு யாரு?” மீண்டும் மிரட்டினான். செமஸ்டர் ரிசல்ட்டுக்குக் கூட அச்சப்படாதவன் வெடவெடத்தேன். ”அண்ணா” என்ற கெட்டவார்த்தையைப் பயன்படுத்தாமல் “ஃப்ரெண்ட்” என்று சொல்லி எனக்கொரு வாய்ப்பளித்தாள். பி.ஈ கோட் அடித்தாலும் பரவாயில்லை என்று பரம திருப்தியடைந்தேன்.

உள்ளே நுழைந்தவுடன் ஒரு காலியான வரவேற்பரை. நடந்தால் காலடியின் எதிரொலி கேட்டது. கண்கள் மிரள உள்ளே பார்த்தாள். யாரோ நிலம் அதிர நடந்து வருவது தெரிந்தது. குண்டாக வளர்ந்த அமுல் பேபி போன்ற தோற்றம். “ஹாய்! ஐ அம் குணாளன்” என்று கைகுலுக்க நீட்டினான். சற்றே நெளிந்து பின்னர் தானும் நீட்டினாள் சாரு. ஒரு குலுக்கலில் விடுவித்துவிட்டு “நீங்க உள்ள வாங்க” என்று கையைப் பிடித்திழுத்து உள்ளே கூப்பிட்டான். “போறாளே... ஐயோ” என்று என் பாழும் நெஞ்சு கிடந்து அடித்துக்கொண்டது. ரெண்டடி சென்றவன் திரும்பப் பார்த்து “சார்! நீங்க என் ரூம்ல வெயிட் பண்ணுங்க. மாகசீன்ஸ் எதாவது இருக்கும்” என்று முப்பத்திரண்டையும் காட்டி அவளை இடித்துதள்ளிவிடுவது போல உள்ளே தள்ளிக்கொண்டு போனான்.

ப்ரஸ்மேனின் சாஃப்ட்வேர் என்ஜினியரிங் தலகாணி புக் மேஜையின் ஓரத்தில் அழுக்காக இருந்தது. இது மென்பொருள் தயாரிக்கும் கம்பெனி போல இல்லையே என்று அந்த ஜொள்ளனின் அறையை நோட்டமிட்டால் பேரிங் மற்றும் ப்ரேக் லைனிங் தயாரிக்கும் ப்ராஸஸ் வரைபடங்கள் ஃப்ரேம் உடைந்து தொங்கிக்கொண்டிருந்தன. வெளியே டிஸ்டிலரீஸ் என்ற போர்டு. இது ஏதோ அகாதுகா கம்பெனியாக இருக்குமோ என்றும் உள்ளே போன அரைமணிப் பழக்க கரும்புச் “சாரு” என்னவாளாளோ என்றும் கையளவு மனது துடியாய்த் துடித்தது. 

இங்கேயே இருப்பதா அல்லது உள்ளே சென்று என்ன நடக்கிறது என்று ஒரு நோட்டமிடலாமா என்று எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில் அவனது மேசையில் இருந்த மொபைல் “ஆப்பிள் பெண்ணே நீ யாரோ?” என்று பாடித் துள்ளியது. என் ஆப்பிள் பெண் எங்கே? என்னதிது? என்று கையில் எடுத்துப் பார்த்தால்.... யாரோ விஷ்ணு இன்ஃபார்மர் என்று வந்தது. டேபிளில் சில துண்டு சீட்டுகள் கிடந்தன.


அறிமுகமற்றவர்களின் கைப்பேசியை தொடுவது நாகரீகமல்ல. சுயம் என்னைச் சுட்டவுடன் பட்டென்று கீழே வைத்துவிட்டேன்.  ஏதோ இன்பார்மரிடமிருந்து ஃபோன், குறியீடு, தவறானது, சரியானது, எதுவும் சரியாக இருப்பது போல இல்லை. அரை மணியாயிற்று ஒரு மணியாயிற்று. அவனுடன் சென்றவள் திரும்பவில்லை. டென்ஷனானால் எனக்கு சிறுநீர் கழிக்கவேண்டும். சுவடு தெரியாமல் உள்ளே செல்லலாம் என்று எழுந்து அரையிருட்டாய் இருக்கும் இடத்திற்கு அடிமேல் அடி வைத்து திருடன் போல நடந்தேன். ஒரு கல்லூரி மாணவன் கல்ப்ரிட் போல நடப்பதற்கு எனக்கே அசிங்கமாக இருந்தது.

அதிரடி செயல்களால் எனக்கு ஆபத்து என்றுணர்ந்தேன். விசாலமான காரிடாரில் இருமருங்கும் திறந்துகிடந்த அநேக அறைகளில் மூலை முடுக்கெல்லாம் எட்டுக்கால் பூச்சி வலைப்பின்னி அறுக்க ஆளில்லாமல் சந்தோஷமாகக் குடியிருந்தது. கால் வைக்கும் இடமெல்லாம் கால்தடம் பதியுமளவிற்கு தூசி. பேய்பங்களா போல மர்மமாக இருந்தது. என்னதான் ஆம்பிளை சிங்கமாக இருந்தாலும் நெஞ்சு ”படக்...படக்...” என்று அடித்துக்கொண்டது. திடீரென்று முதுகுக்குப் பின்னால் ”ச்சிலீர்..” என்று கண்ணாடி உடையும் சத்தம். பன்னெடுங்காலமாக ஓமன் போன்ற த்ரில்லர் படங்களில் வழக்கமாக வருவது போல கடுவன் பூனை கோலிக்குண்டு கண்களை மியாவி இடமிருந்து வலம் துள்ளி ஓடியது. மனதைத் தைரியப்படுத்திக்கொண்டு முன்னேறினேன்.

எங்கிருந்தோ ஒரு ஆணும் பெண்ணும் குசுகுசுவென்று பேசுவது கேட்டது. காதைத் தீட்டிக்கொண்டு கேட்டேன். ஒன்று சாருவின் குரல் போல இருந்தது. இன்னொன்று அட. அந்தத் தடியன் குணாளன்தான். என்ன பேசுகிறார்கள். ஒட்டுக் கேட்டேன். “அவன் சுத்தக் கேனையன். ஜஸ்ட் வான்னு சொன்னவுடனேயே வந்துட்டான். உன்னோட செக்யூரிட்டிதான் ரொம்ப விரட்டிட்டான்பா”. அட பாதகி. பதிலுக்கு அவன் “உம். சரி. இன்னும் எவ்வளவு ஐட்டங்கள் நாளைக்கு கிடைக்கும். ஜல்தி சீக்கிரம் சொல்லு. நீ வந்து ரொம்ப நேரம் ஆச்சு. அவன் எழுந்து வந்துரப்போறான். ஆபிஸில் இருந்த ஒரேஆளும் இன்னிக்கி மத்தியானம் லீவு” என்று அவசரப்படுத்தினான்.

நேர்முகத்திற்கு அவள் வரவில்லை என்று என் களிமண் மூளைக்குக் கூட புரிந்துவிட்டது. “இவன் தேறுவானா?” என்றான் அந்தத் தடியன். “ம். பார்க்கலாம்” என்றாள் அந்த தடிச்சி. அழகி இப்போது எனக்கு தடிச்சியானாள். இன்னும் கொஞ்சம் குரல் வந்த திசையில் எட்டிப்பார்க்கலாம் என்ற போது சப்தமே இல்லை. கொஞ்சம் எக்கி வலது பக்கமிருந்த இன்னொரு காரிடாரை பார்த்தேன். கண்பார்வை போய் முட்டிய இடத்தில் ஒரு சிகப்பு விளக்கு உயிரை விடுவது போல எரிந்துகொண்டிருந்தது. திடீரென்று பின்னாலிலிருந்து யாரோ தோளைத் தட்டினார்கள்.

ஆ!. அடிவயிற்றில் அட்ரிலின் சுரக்க வியர்த்திருந்த என்னுடைய முகத்தைப் பார்த்து அந்த இருவரும் கொல்லென்று சிரித்தார்கள். யாரந்த இருவரா? சாருவும் குணாளனும்தான். இன்னும் கொஞ்ச நேரம் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்ததில் ஒரு கணிசமான தொகை இந்தத் தொழிலில் கிடைக்கும் போலிருந்தது. நானும் முதலில் வெகுண்டுதான் போனேன். மூன்றாவதாக ஒருவனைத் தேடிக்கொண்டு ஓடிப்போன அம்மா, உதவாக்கரை அப்பன், சீரழிந்த தங்கை என்று தறிகெட்டுப் போயிருந்த என்னுடைய வாழ்க்கைப் போராட்டத்துக்கு இது ஒரு ஜீவனோபயாமாக அமைந்தது.

போன பாராவுடன் என்னுடைய கருப்பு-வெள்ளை ரீல்கள் முடிந்துவிட்டது. இப்போது கலர்ஃபுல்லான வாழ்வு. என்னைப்போல கல்லூரிப் பருவத்தில் தடம் மாறியவர்கள் இடம் மாறி உருப்பட்டதாக சரித்திரம் கிடையாது. இருந்தாலும் கடினமான வாழ்க்கைச் சக்கரத்தை உருட்ட எனக்கு தனியாளாய் தெம்பில்லை. திராணியற்று நான் திரிந்த போது வந்த இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டேன். அது மட்டுமா, இதன் மூலம் கிடைத்த சத்புத்திரர்களின் தொடர்பில் ஒரு நல்ல கம்பெனியில் கிளார்க் போல ஒரு அடிமட்ட வேலையில் சேர்ந்து இப்போது ஒரு உயர் பதவி வகிக்கிறேன். இருந்தாலும் விட்டகுறை தொட்டகுறைக்கு என்னை ஏணியாய் ஏற்றிவிட்ட எனதுயிர் நண்பர்களுக்காக இந்தத் தொழிலும் ஒழிந்த நேரங்களில் உதவியாகச் செய்கிறேன்.

ம்.. சரி.. என்னுடைய “அந்த”த் தொழில் என்னவென்று கேட்கிறீர்களா? இங்கிருந்து ஆட்களை, அதுவும் என் போன்ற அழகிய ஆண்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பணம் சம்பாதிப்பது. என்ன கேட்கிறீர்கள். அவர்களுக்கு என்ன வேலையா? கார்பெண்டர், கொத்தனார் வேலைக்கு அழகிய ஆண்கள் எதற்கு. எதிர் பாலினரைச் சந்தோஷப்படுத்துவது. சரீர சுகமளிப்பது. இதிலும் சிக்கல் இல்லாமல் இல்லை. காண்ட்ராக்ட் படி இன்னும் ஐந்து மாதம் பாக்கியிருக்கையில் அருப்புக்கோட்டை வாலிபன் ஒருவன் ஒபாமா தேசத்தில் ஓரினமணம் புரிந்துகொண்டான். சரி. விடுங்கள். என் கஷ்டம் என்னோடு. அப்புறம். இந்தக் கதையை இதுவரை நான் யாரிடமும் சொல்லவில்லை. அதனால் நீங்களும் இரகசியம் காப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு இப்போதுதான் ஒரு கோஷ்டியை ஏற்றிவிட்டு மீனம்பாக்கத்திலிருந்து வெளியே வருகிறேன்.

கடைசியாக ஒன்று. நீங்கள் கேட்கவில்லையென்றாலும் சொல்லவேண்டியது எனது முறையல்லவா. விஷ்ணு தான் இன்னமும் எங்களுக்கு இன்ஃபார்மர். முன்பு குணாளன் சாருக்கு மட்டும் இருந்தவன் அவரது அகால மரணத்திற்கு பின்பு என்னிடம் ரிப்போர்ட் செய்கிறான். போலீஸாருக்கு அவன் புல்லுருவி. எங்களுடைய சவுதி அரேபியா ஏற்றுமதிக்கான S A H2 6F என்கிற குறியீட்டை S W H2 6F என்று எஸ்.பி. கோகுலிடம் கொடுத்து குணாளனுக்கு விசுவாசமானான். அந்த டீலில்தான் இப்போது விஷ்ணு குடியிருக்கும் இரண்டு கோடி பொறுமானமுள்ள ராஜா அண்ணாமலைபுரம் 3BHK ஃபிளாட் கிடைத்தது.

ச்சே. ஏதோதோ பேசிக்கொண்டிருந்ததில் நேரமாகிவிட்டது. விஷ்ணு கன்னிமாராவில் காத்திருப்பான். இதோ என்னுடைய மொபைல் கீக்கீக்கென்கிறது. திறந்தால் விஷ்ணு இன்ஃபார்மர். ஹா..ஹா.. இவனுக்கு நூறாயுசு.

பின்குறிப்பு: சவால் சிறுகதைப் போட்டிக்காக நானெழுதும் இரண்டாவது சிறுகதை. போன கதையை நேர்மறையில் எழுதினேன். இந்தக் கதை எதிர்மறை. பிடிக்கிறதா?

-

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails