Showing posts with label கைலாச நாதர் கோயில். Show all posts
Showing posts with label கைலாச நாதர் கோயில். Show all posts

Friday, March 18, 2016

சிவராத்திரி


சில வருடங்களுக்கு முன் வரை மஹா சிவராத்திரியில் அருணாசல கிரிவலம் சென்றுகொண்டிருந்தேன். அது ஒரு அற்புதமான இறை அனுபவம். அமைதியான தனிமையின் அட்டகாசமான பேரானந்தம். சிவக்ருபா.
கிரிவலப் பாதையில் அருள்பாலிக்கும் எல்லா ஈஸ்வர ஸ்வரூபத்தையும் அபிஷேக அலங்காரத்துடன் தரிசிக்கும் பாக்கியம். சில மூர்த்தங்கள் டாலடிக்கும் வெள்ளி நாகபரணம். சிலருக்கு ஜொலிக்கும் தங்க நாகாபரணம். தோளெங்கும் மாலைகளுடன் ”ஏக வில்வம் சிவார்ப்பணம்”. வில்வார்ச்சனை. தேவலோகமாய்ப் பரவும் ஊதுபத்தியோடு கலந்த விபூதி வாசம். சுடலைப்பொடி பூசியவனுக்கு கற்பூரார்த்தி. கப்புன்னு அப்டியே எல்லாத்தையும் விட்டுட்டு ”ஹர ஹர ஹர மஹாதேவா.. தென்னாடுடைய சிவனே போற்றி.. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி....”ன்னு உதறிட்டுப் போய்டலாமான்னு கட்டி இழுக்கும் உணர்வு. காலோடு கால் பின்னும் கூட்டமில்லாமல் கதை பேசாமல் பாதையின் விளக்கொளிக்கு விளக்கொளி இடைவெளியில் இறைவனைத் தரிசிக்கலாம். மௌனமாய் மலையாய் கவனிக்கும் அருணாசலேஸ்வரரை தியானித்து அடிக்கொருதரம் ஒரு “சிவா”. ஸ்மரணாத் அருணாசலே.
சென்ற வருடமும் இவ்வருடமும் காஞ்சி கைலாசநாதர் தரிசனம் கிடைக்கும் பேறு பெற்றேன். இம்முறை இன்னும் ஸ்பெஷல். சங்கரநாராயணன் என்னும் சம்ஸ்க்ருத பேராசிரியருடன் அப்பல்லவப் பொக்கிஷத்தைக் கண்டு கண்ணுக்கு இன்பமும், உள்ளே பட்டை லிங்க மூர்த்தியாய் அருள்பாலித்த கைலாசநாதரால் ஆன்ம சந்தோஷமும் அடைந்தேன்.
“இதுதான் தமிழ்நாட்லயே முதல் கோபுரம் என்று ஏழு படி ஏணியில் ஏறி நின்றால் உச்சி தொடுமளவு வாயில் கோபுரத்தைக் காட்டினார் முனைவர் சங்கரநாராயணன். ”கஜசம்ஹாரர்... சோமாஸ்கந்த மூர்த்தி, பிக்ஷாடனர்.. இங்க க்ரூப்பா நிக்றவாளோட தலை எண்ணுங்கோ.. பதினொன்னு இருக்கா? ஏகாதச ருத்ரர்கள்.. அதோ அந்தப் பக்கம் துவாதச ஆதித்யர்கள்.. ” என்று திருவலப்பாதை கோஷ்டங்களில் இருந்த சிவஸ்வரூபங்களையும் சிற்பங்களையும் எனக்கு விளக்கி பிரதக்ஷிணம் வந்தார். அந்தக் கோயில் அவரது ரத்தத்தில் கலந்திருப்பது அவரது கண் போன திக்கில் இருட்டாக இருந்த இடங்களில் இருக்கும் சிற்பங்களைக் கூட எட்ட நின்று விவரித்த தோரணையில் தெரிந்தது.
”பார்வதி கல்யாண..” சிற்பத்தருகே நின்று “சிவனோட குமிழ் சிரிப்பைப் பாருங்க.. கல்யாணம் ஆயிடுத்துன்னு சந்தோஷம் முகத்துல தெரியறது...” என்று சொன்னவுடன் கொஞ்சம் அத்துமீறி ஈஸ்வர உதடுகளைத் தொட்டுப் பார்த்தேன். பிறைசூடிய பெருமானின் உதடுகளும் பிறைச்சந்திர வடிவத்தில் செதுக்கியிருந்தது. தள்ளி நின்று பார்த்தபோது சிவனார் வெட்கி மோகனமாகச் சிரிப்பது போலிருந்தது. “விஷ் யூ ஹாப்பி மேரீட் லைஃப்” சொல்லி நகரவேண்டியதுதான்.
சிவராத்திரியன்று சிவானந்தத்தில் என்னைத் திளைக்க வைத்த ஸ்ரீ.சங்கரநாராயணனுக்கு நன்றிகள் பல. ”கொஞ்சம் சொல்லிக்கொடுங்க பாஸ்” என்று என்னுடைய அஞ்ஞானத்தை அகற்ற வேண்டிக்கொண்டு புறப்பட்டேன். வழிநெடுக சிவ தரிசனம். பேட்டையில் சந்து திரும்பும் முன் கூட்டம் அம்மியது. மெதுவாக ஜன்னல் இறக்கிப் பார்த்தால் தெருவோரத்தில் கொட்டைப்பாக்களவு இருக்கும் ஒரு சிவலிங்கத்திற்கு சொப்புச் சொம்பில் பாலாபிஷேகம் நடந்துகொண்டிருந்தது. சுற்றி பத்து பேர். நெற்றியில் குறுக்காக பட்டையாய்ப் பூசிய விபூதி. ஜன்னலை இறக்கினால் நாசியைத் தொட்ட சாம்பிராணி மணம். இருதய குகையின் மத்தியில் ஏதோ ஒரு இனம் புரியாத பரம திருப்தி. இந்த நெஞ்சு நிறைதலைத்தான் ஆன்மா தேடுதல் என்கிறார்களோ? இச்சிறுவனுக்கு எப்போது புரியும்? தேடுவோம்...
ஓம் நமசிவாய!

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails