Showing posts with label துணைவன். Show all posts
Showing posts with label துணைவன். Show all posts

Monday, October 26, 2015

ஏவிஎம் ராஜனும் சௌ’CRY' ஜானகியும்

முருகன் குட்டி வயசு ஸ்ரீதேவி ரூபத்தில் வந்து (அவ்வப்போது பளீரென்று சிரித்துக்கொண்டு) அருள் புரியும் துணைவனின் க்ளைமாக்ஸ் காட்சி சன் லைஃபில் ஓடிக்கொண்டிருந்தது. நேற்றிரவு டின்னர் சப்பாத்தி முருகா...முருகா..என்று திவ்யமாக இறங்கிக்கொண்டிருந்த வேளையில் பார்த்த துண்டுக் காட்சி. திரையில், அழும் திலகங்களான ஏவியெம் ராஜனும் (பிதுங்கிய அடி உதட்டுடன்) சௌ’cry' ஜானகியும் (தலையை நிமிர்த்தி டாப் ஆங்கிள் கேமிராவைப் பார்க்கும் போஸில்) சேர்ந்து ஜோடியாய் அழுத....ச்சே... நடித்த படம்.
நெடுநெடுவென கிருபானந்த வாரியார் மகானாக வந்து உபதேசம் செய்தார். கேபி சுந்தராம்பாள் முருகன் கிருதிகளைப் பாடினார். காட்டாற்று நீர் உருட்டிய கரும்பாறைகளின் கடமுடாவாகக் கேபிஎஸ்ஸின் கமகம் காதுகளைக் கழுவி விட்டது. தேவலோகத்திலிருக்கும் முருகனின் செவிக்கு எட்டுமாறு ஏவியெம் ராஜனும் சௌகாரும் விடிய விடிய கோவில் கண்டாமணியை அடித்தார்கள். ஊர் கூடி வேடிக்கைப் பார்த்தது. கைகளில் ரத்தம் வர மயங்கிச் சாய்ந்தார்கள்.
பொழுது புலர்ந்தது. சுந்தராம்பாள் கந்தர் கலிவெண்பா பாடியதும் கலியுக வரதன் செந்திலாண்டவன் ஓடோடி வந்து ஆலயமணியடித்தப் பெற்றோரின் பிரக்ஞையற்றப் பிள்ளையை பிழைக்கவைத்தார்.
அழுதவர்கள் சிரித்தார்கள். ஏவியெம் ராஜனைத் தவிர.
ஏவியெம் ராஜனை சிரிக்க வைத்து யாரேனும் படம் எடுத்திருக்கிறார்களா? அந்தகால மொஹஞ்சதாரோ ஹரப்பா ஆசாமிகள் யாருக்காவது தெரிந்தால் சொல்லவும். எப்போதும் கையிலிருந்த காட்பரீஸ் பிடுங்கப்பட்டப் பாப்பாவாக தோன்றும் ராஜனை சிரித்தபடி பார்க்க ஆசையாயிருக்கிறது.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails