Showing posts with label காரடையான் நோம்பு. Show all posts
Showing posts with label காரடையான் நோம்பு. Show all posts

Friday, April 4, 2014

அடைக்கும் உண்டோ தாழ்!

சாஸ்திரத்துக்கு ஒரு வெல்ல அடை சாப்பிட்டேன். ஊத்துக்குளி வெண்ணை தடவி. ஏழெட்டு உப்பு அடை மளமளவென்று உள்ளே இறங்கியது. பட்டர்ஸ்காட்ச் ஐஸ்க்ரீமில் நட்ஸ் போட்டா மாதிரி கடிக்குக் கடி காராமணி வாயில் நிரடியது. பல்லு பல்லாய்ப் பதித்த தேங்காயோடு காராமணியும் அரைபட்டு உப்படையின் சுவையை அமிர்தத்துக்கு ஒரு படி மேலே தூக்கியது. தொட்டுக்க முருங்கைக்காய் சாம்பார். வாய்க்கு அதிர்ஷ்டம். சிம்பிள் டிஃபன் ஆனால் பவர்ஃபுல்.

வருஷம் முழுக்க நாம தாஸனதாஸனாய்க் கொடுத்த மரியாதைக்கு இன்னிக்கு ஒரு நாள் மட்டும் பதில் மரியாதை கிடைக்கும். ஒரு நெருங்கிய உறவுக்காரரிடம் ”என்ன.... மரியாதை கிடைச்சுதா?”ன்னு ஃபோனில் ராகமாக விஜாரிக்கும் போது சொன்னார் “அப்படியெல்லாமில்லைடா.. இப்பவெல்லாம் அகஸ்மாத்தா கல்லிலியோ கட்டையிலியோ தடுக்கிண்டாக் கூட என் கால்ல மட்டும் விழுந்துடக்கூடாதுன்னு உஷாரா இருக்காடா. பக்கத்துல சுவத்தையோ மரத்தையோ கெட்டியாப் பிடிச்சுக்கிறா...” என்றார். “கால்ல விழுந்தா நீங்க காலாண்டு பெட் ரெஸ்ட்தான் ஓய்..” என்று முணகிவிட்டு “பாவம்... ஒரு அடிப்படை மரியாதை கூட கிடைக்கிலியே” என்று அங்கலாய்த்தேன். உம். கண்டிப்பா கடைசில் “த்சொ..த்சொ..” உண்டு.

”சண்டை போட ஆளில்லைன்னா வாழ்க்கை சுரத்தா இருக்காதுன்னு சத்தியவானைப் போய் எமன்ட்டேயிருந்து மீட்டுண்டு வந்தாடா சாவித்திரி...” என்றெல்லாம் ஊரில் ஒய்ஃபிடம் உதை வாங்கும் அண்ணாக்கள் சிலர் அபவாதம் பேசிக் கிண்டலடிப்பார்கள். ஆத்தில் எவ்வளவு மொத்து விழுந்தாலும் காலரைத் தூக்கிவிடும் கேஸ்கள். நான் அந்த ஜாதி இல்லை. இன்று வெல்லடை உப்படை எப்படியிருந்தாலும் நொட்டை சொல்லாமல் சாப்பிடவும். “நாக்கை இழுத்து வச்சு அறுக்க...” என்று திட்டு கிடைக்கும். ஜாக்கிரதை. பகவத் பிரசாதம் உடம்புக்கு நல்லது.

“தீர்க்க சுமங்கலி பவ:” என்ற ஆண்களுக்கான ஆசீர்வாதங்கள் நிரம்பும் ”ஹாப்பி காரடையான் நோன்பு!”

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails