Showing posts with label தினமணி. Show all posts
Showing posts with label தினமணி. Show all posts

Saturday, January 14, 2012

கன்னிப் பொங்கல்

வயசுப் பசங்களுக்குப் போகியும் பொங்கலும் சுத்த போர். குப்பை எரிப்பதையும் மூக்கில் ஒரு பருக்கை எட்டிப் பார்க்கும் வரை சாப்பிடுவதையும் தவிர்த்து இளசுகளுக்கு அவ்வளவு சுவாரஸ்யமான விஷயங்கள் எதுவும் இந்த இரண்டிலும் இருக்காது. நட்புகளுக்கும் சொந்தபந்தங்களுக்கும் வாழ்த்து அட்டை அனுப்பும் பழக்கம் ஒன்று அக்காலத்தில் வழக்கில் இருந்தது. என்னைப் போன்ற சின்னத்தம்பிகளுக்கு கரும்பு, பொங்கல் பானை போட்ட வாழ்த்து அட்டையும், லெக்ஷ்மி சரஸ்வதி என்று கடவுளர்களின் அருட்படம் போட்ட அட்டைகளையும் தினமும் கையோடு கை கோர்க்கும் பக்கத்துத் தெரு மற்றும் பக்கத்து வீட்டு நண்பர்கள் அனுப்பி மகிழ்வார்கள்.

போஸ்ட்மேன் டெலிவர் செய்யும் போது நம் பக்கத்திலிருந்து அதை நாம் வாங்கிப் பார்த்துப் படித்து இன்புறுவதை கண்ணுற்று ரசிப்பார்கள். பெரிய அண்ணாக்களுக்கு சில சமயம் பாஸ்போர்ட் சைஸ் ராதா, அம்பிகா போட்ட டீசண்ட் அட்டையும் வரும். ரஜினி கமல் பெயர்களை தன் முன்னால் சேர்த்துக்கொண்டு கட் அவுட் வைத்து பைத்தியமாகத் திரியும் அன்பர்களுக்கு அந்த ஹீரோக்களின் படம். சிலருக்கு இமேஜ் டேமேஜ் செய்யும் சிலுக்கு அனுராதா கவர்ச்சி அட்டைகளை அனுப்பி ஏகத்துக்கும் ரேக்கி விட்ட போக்கிரி படவாக்களும் உண்டு. ”யார்டா அது.. இப்படியெல்லாம் அனுப்பறது.. நீ உருப்படியான சங்காத்தம் எதுவும் வச்சிருந்தானே....” என்று பாட்டு விடுவார்கள். அதெல்லாம் விடுநர் பெயர் இல்லா அனானி அட்டைகள். இப்போதெல்லாம் பைசா செலவில்லாமல் ஈகிரீட்டிங்ஸ் ஈமெயிலில் டெலிவர் செய்யப்படுகிறது.


போகியில் கண்டதையும் போட்டு எரித்து கண்ணெரிய ஊர் சுற்ற வேண்டும். பட்ட காலிலே படும்  போல ஏற்கனவே ஓஸோன் லேயரில் ஓட்டை விழுந்து பஞ்சராகிப்போன வானத்திற்கு போகியன்று இன்னும் கொஞ்சம் சேதாரம் ஆகும். தீயிட்டுக் கொளுத்துவது என்பது ஹோமோசேபியன்களாக நாம் இருந்ததிலிருந்து தொன்றுதொட்டு வரும் ஒரு பழக்கம். கஷ்டப்பட்டு கல்லை உரசி கை வலிக்கும் சிரமத்துடன் நெருப்பு உண்டாக்கிய நமக்கு இப்போது குச்சி உரசினால் பத்திக்கும் என்கிற இலகுவான சூழ்நிலையில் கையில் கிடைக்கும் எதையும் போகியில் கொளுத்துவதுதானே தமிழரின் மரபு. ப்ளாஸ்டிக் கொளுத்தாமல் பச்சை போகி கொண்டாடுவது அகிலத்திற்கு உகந்தது. “படுபாவிங்க.. நம்ம பூமியைக் கெடுத்துக் குட்டிசுவராக்கிட்டுப் போய்ட்டானுங்க” என்று எள்ளுப் பேரன் பேத்திகளிடம் பித்ருலோகம் போயும் திட்டு வாங்காமல் இருக்க மாசற்ற பூமியைத் தருவோம். தலைப்பில் கன்னிப் பொங்கல் தாவணி கட்டி ஆடுவதால் அந்தப் பக்கம் திரும்புவோம்.

இந்த இடியட் பாக்ஸ் ராஜ்ஜிய பரிபாலனம் செய்யாத காலங்களில் பண்டிகைகளின் கை ஓங்கியிருந்தது. மாட்டுப் பொங்கலும் கன்னிப் பொங்கலும் கட்டிளம் காளையர்களுக்கு கரும்பு போல தித்திப்பான நாட்கள். மாட்டுப்பொங்கல் அன்று தான் கறக்கும் மாடுகளைக் குளிப்பாட்டி குறவன் குறத்தி ஆட்டத்தோடு முண்டாசுக் கட்டிய கோனார்கள் திரும்பவும் வீடு கொண்டு விடும் வைபவம் நடைபெறும். இதைப் பற்றி சற்று விரிவாக போன வருஷம் இங்கே பிரஸ்தாபித்திருந்தேன். சில அமெரிக்கத் திரைப்படங்கள் ஹிட்டான படங்களுக்கு இரண்டாம் பாகம் போடுவதைப் போல போன வருஷமே காணும் பொங்கல் பற்றி ”பொறவு சொல்றேன்”னு கடைசியில் ஒரு கொக்கிக் கார்டு போட்டிருந்தேன்.

மாட்டுப் பொங்கல் முடிந்த மறுநாள் விடியற்காலை காகத்தை வம்புக்கிழுக்கும் கணுப்பொங்கல் ரசமானது. காக்காவிற்கு அன்றைக்கு டைஜின் சாப்பிடும் அளவிற்கு அஜீரணக் கோளாறு ஆகும். ஓவர் ட்யூட்டி. மஞ்சள்கொத்து இலையில் கொஞ்ச கொஞ்சமாக எல்லா சாதத்திலும் கிள்ளி வைத்து காகத்தை அழைக்காமல் அழைப்பார்கள். மாமிக்களின் கை வண்ணம் அன்று தெரிந்துவிடும். ஒரு காகமும் சீண்டாத மஞ்சள் இலை வீட்டுக்காரியின் ஆத்துக்காரர் ’ஹஸ்பெண்ட் தி கிரேட்’. எப்படிப் போட்டாலும் என்னைப் போல நொட்டை சொல்லாமல் சாப்பிடும் கட்டிச் சமர்த்து என்றர்த்தம். எந்த இலையை காக்கா கொத்திக்கொண்டு போகிறதோ அவர்கள் வீட்டு அடுப்பங்கரை அற்புதமாகும். ஆம்படையான் காலடியில் கிடப்பார். இலையைக் கூட மிச்சம் வைக்காமல் சாப்பிட்டுவிடுவார்கள்.

கணுப்பொடி வைத்துவிட்டுதான் காபி சாப்பிடவேண்டும் என்பது அன்றைய தினத்தின் சம்பிரதாயம். அதனால் திருமதிகள் அதிகாலையிலிருந்தே ட்யூட்டியில் இறங்கிவிடுவதால் நன்பகலுக்கு முன்பகலில் சாப்பிட்ட பின்னர் சற்று தூங்கி சிரமபரிகாரம் செய்துகொள்வார்கள். மத்தியானம் இரண்டு மணிக்கு மேல் கண்ணுக்கு விருந்தாக கன்னிப் பெண்கள் கோலாட்டமடிக்க குச்சியுடன் வருவார்கள். இரண்டிரண்டாக ஜோடி போட்டுக்கொண்டு பின் கொசுவ புடவையை தூக்கிச் சொருகிக் கொண்டு வரும் கன்னியரின் கனி நடையே அழகு.

திண்ணை வைத்த வீடுகளின் அருமை அன்று தெரியும். வெளித்திண்ணை தட்டியடிக்கப்படாமல் இருந்தால் ரோடிலிருந்து பார்த்தேலே இந்த ஃபோல்க் டான்ஸ் ஷோ தெளிவாகத் தெரியும். எங்கிருந்தோ கோலாட்டச் சத்தம் சன்னமாக கேட்டாலே அவ்வீட்டுத் திண்ணையோரத்தில் கும்பலாக ஆட்டம் காணக் கூடிவிடுவார்கள். கையில் கொண்டு வந்த கூடையை நடுவில் வைத்துவிட்டு குனிந்து நிமிர்ந்து கோலாட்டம் ஆடுவார்கள். பழைய படங்களில் க்ரூப் டான்ஸ் ஆடுபவர்கள் இருகையையும் சேர்த்து ஒரு தட்டு பக்கத்திலாடும் பெண்ணின் கையில் ஒரு தட்டு என்று தாளமாகத் தட்டுவார்கள். அவர்கள் ஓயாமல் கைக்கு வேலை கொடுப்பது போல “கும்மியடிப் பெண்ணே கும்மியடி” என்று பாடிக்கொண்டே ஆடுவார்கள். சாரீரம் நன்கு வாய்த்த பெண்களை ”இன்னொரு தடவ பாடேண்டி” என்று பாட்டி ஒன்ஸ் மோர் கேட்கும் போது அந்த மடி ஆசாரப் பாட்டியை அப்படியே கட்டியணைத்து செல்லமாக முத்தமிடத் தோன்றும்.

தாண்டியா ஆடியவர்களது கூடைகளில் ஒரு படி அரிசியும், அச்சு வெல்லமும் போடுவார்கள். பின்பு பழம், பாக்கு வெற்றிலை தட்டில் வைத்துக் கொடுப்பார்கள். “வரேன் டீச்சர்” என்று சொல்லிவிட்டு கிளம்பும் தருவாயில் “தம்பி அந்த கரும்பை ஒடிச்சி அவாளுக்குக் குடுடா” என்று எனக்கு விசேஷ கட்டளைப் பிறப்பிக்கப்படும். பரிசில் வாங்குவோரின் ஆட்டத்திற்கு ஏற்றவாறு அவர்களுக்கு தக்கக் கரும்புச் சன்மானம் என்னால் வழங்கப்படும். குறிப்பு: அழகுக்கேற்றவாறு என்று நான் இங்கே சொல்லவில்லை.

கலைஞர்களுக்கு தரவேண்டிய மரியாதை நிமித்தமாக வாசலுக்கு வந்தால் ஆண் சிங்கங்களை சைக்கிளில் துணைக்கு அழைத்து வந்திருப்பார்கள். அரிசி, வெல்ல கலெக்ஷன் கூடையை விட்டு வழிய ஆரம்பித்தால் சைக்கிள் கேரியரில் கட்டியிருக்கும் சாக்கு மூட்டையில் கொட்டி முடிந்துகொள்வார்கள். இப்போது சென்னையில் சங்கமமாக விழாவெடுக்கும் அளவிற்கு அப்போது தேவைப்படவில்லை. கிராமிய மணம் கமழும் விளையாட்டுகளும் இதர மரபுகளும் செம்மையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தன.

உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் எஸ்.எம்.எஸ்ஸில் பொங்கல் வாழ்த்து அனுப்பிவிட்டு, “முற்றிலும் சந்தோஷத்தை தருவது உறவுகளே என்றும் நண்பர்களே என்று கட்சி பிரித்துப் பேசும் பட்டி மண்டபங்களையும் நடிக நடிகைகளின் “என்க்கு டமில் பிட்கும். பொங்கள் ரொம்ப பிட்க்கும்” என்று முகம் மகிழ்ந்து தரும் பேட்டியையும், உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக போடும் திரைப்படங்களையும் பார்த்துவிட்டுவது இக்கால பண்டிகை கொண்டாடும் முறை. அதிலிருந்து வழுவாமல் இக்கால விதிகளை கடைபிடிப்போமாக.

யாராவது ஆஸ்கி டெக்ஸ்டில் படம் போட்ட பொங்கல் பானையும், கரும்பும் எஸ்.எம்.எஸ்ஸாக அனுப்பினால் எல்லோருக்கும் ஃபார்வேர்ட் பண்ண சௌகரியமாக இருக்கும். அனுப்புவீங்களா?

பின் குறிப்பு:  இது தினமணி இணைய பொங்கல் மலரில் வெளிவந்துள்ளது. நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள். தீ.வி.பிக்கு இரண்டு லட்சம் ஹிட்கள் கிடைத்திருக்கிறது என்பது கூடுதல் செய்தி.

பட உதவி: http://www.hottrendsindia.com/
-

Sunday, December 4, 2011

கண்ணால் காண்பது மெய் - தினமணி கதிரில்

நல்ல அடை மழை. சின்னச் சின்ன பிட் பைட்டாக ஆரம்பித்து சில நொடிகளில் மெகா பைட்டாகி இப்பொது ஜெட்டா பைட்டாக “சோ” என்று கொட்டுகிறது. வழக்கம் போல வானொலியின் ”இன்று பரவலாக வானம் மேக மூட்டத்தோடு காணப்படும்”மை பொய்யாக்கிப் பொறுத்துப் பெய்கிறது. நான் நின்று கொண்டிருக்கும் இந்த பஸ் ஸ்டாப் ஜன வெள்ளத்தால் நிரம்பி வழிகிறது. மண்வாசத்தைவிட அரை இன்ச் தள்ளி பக்கத்தில் நிற்கும் கன்னிப்பெண் வாசம் ஆளைத் தூக்குகிறது. இந்த வாசனைகளுக்கு உற்ற தோழன் வருணனோடு வரும் வாயுபகவான் தான். அவர்தான் அடுத்தவரிடம் அதைப் பற்றவைக்கும் ஏஜெண்ட்.


“மச்சான். குளிக்காம வர்ற டிக்கெட்டெல்லாம் தான் உடம்பு பூரா செண்டு தெளிச்சிக்கும்” என்று பி.எஸ்.ஸியில் கடைசி செமஸ்டரில் அரியர்ஸ் வைத்து ஃபெயிலாகிப் போன மணி ஒவ்வொரு நறுமண நங்கைகள் எங்களைக் கடக்கும் போதும் சொல்வான். மகளிர் சம்பத்தப்பட்ட விஷயங்களில் அவன் ஒரு wiki.manipedia.com. பஸ் ஸ்டாண்ட் திருவள்ளுவர் தியேட்டரில் காமத்துப்பால் சொட்டும் சில மலை மலையான மலையாள ஆன்டிகள் நடித்த கொக்கோகப் படங்களைப் பார்த்துவிட்டு ஸ்த்ரீ சம்பந்தப்பட்ட அவனுடைய சில நுணுக்கமான பார்வையின் விஸ்தரிப்புகளில் வாத்ஸ்யாயனரின் ஜீன் அவனுக்குள் பாய்ந்துள்ளதோ என்று எல்லோரும் வியப்பார்கள். ’குண்டு’ ராஜா ஒரு சிலிர்ப்புடன் பாதியில் அந்த இடத்தை விட்டு எழுந்துவிடுவான். ”கொழந்தப் பையன். ஃபீடிங் பாட்டிலில் பால் குடிக்கதான் லாயக்கு” என்று சொல்லிவிட்டு கண் சிமிட்டுவான் மணி.

இந்த க்ஷணம் இங்கே மணி இல்லையே என்று எனக்கு :-(. இந்நேரத்திற்கு வார்த்தைகளால் வர்ணனை மழை பொழிந்திருப்பான். என் காதுக்கு மோட்சம் கிட்டியிருக்கும். கடைசியாக அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி அவனை ஊரில் தேரடி தாண்டி குமார் லாட்ஜ் வாசலில் மினுமினுக்கிய தெருவிளக்கின் அரையிருட்டில் பார்த்தேன். கையில் கிங்ஸ் துணையுடன் ஏதோ ஒரு பூப்போட்ட கைலியுடன் ”அவ கிடக்காடா. அவ ஒரு மேனாமினிக்கிடா” என்று அளந்துகொண்டிருந்தான். இதுதான் என்னுடைய பிரதான வீக்னெஸ். பக்கத்தில் டூ பீஸில் அலங்காரமாக நிற்கும் பாவாடைச் சட்டைப் பருவச்சிட்டுவைப் பார்க்காமல் மணியைப் பற்றி நினைத்து வாழ்வின் இன்பகரமான தருணங்களை இழந்து கொண்டிருக்கிறேன் பாருங்கள். ச்சீ.ச்சீ... போடா மணி!


இவள் ஸ்ருங்காரமாக மிதமான தேகக்கட்டுடன் பார்வையாக இருந்தாள். குறத்திகள் இடுப்பில் சொருகும் சுறுக்குப்பையைவிட ஐந்து அங்குலம் பெரியதாக இருக்கும் தோல்பை ஒன்றை தோளில் மாட்டி ஒய்யாரமாக பக்கத்து இரும்புக் கம்பியில் சாய்ந்து நின்றிருந்தாள். மீசை முளைப்போமா என்று எட்டிப்பார்க்கும் ஒரு விடலை அவளை ஒரு ஏக்கப் பெருமூச்சுடன் பார்த்தான். இன்னும் கொஞ்ச நாளில் ஏதோவொரு பாக்கியசாலியினால் பொன் தாலியேறப்போகும் கழுத்தில் வேலை பார்க்கும் கம்பெனியின் ப்ளாஸ்டிக் அடையாள அட்டை தொங்கிக்கொண்டிருந்தது. தற்காலப் பெண்டிரின் தலையாய ஸ்டைலான தலைவிரி கோலத்துடன் இருந்தாள். ”காளிதாசன் உன்னைக் கண்டால் மேகதூதம் பாடுவான்.” என்று ரஜினி எனக்குள்ளே டூயட் பாடிக்கொண்டிருந்தார். கணினியின் கர்ஸர் பிளிங்க் போன்ற கண் இமைப்பில் இந்தக் கன்னி என் சித்தத்தைக் கலைத்துப் பித்தம் கொள்ள வைக்கிறாள். அட! ஜாடையில் நம்ம டெல்லி மாலினி போல இருக்கிறாளே! இன்னும் கொஞ்சம் எக்கிப் பார்த்தால் பெயரைப் படித்துவிடலாம். அவளுடைய கால் ஹீல்ஸின் சைஸ் என்னை மிரட்டி நான் எக்குவதற்குத் தடைபோட்டது.

இன்னும் மாலினி யார் என்று சொல்லவில்லையல்லவா? மாலினி 5’8’’ல் மெழுகால் சிலைவடித்த ஒரு பேசும் பதுமை. அவளும் அவள் போட்டிருந்த ஜீன்ஸூம் எங்கள் ஊருக்குப் புதுசு. லேசர் பீம் பாய்ச்சும் இரு கூரிய கண்கள். சிகப்பழகு க்ரீம் விளம்பரதாரர்கள் இன்னும் அவளை பார்க்கவில்லை என்று நினைத்துக்கொண்டோம். பளபளவென்று சுடர் விடும் மேனி. ”அவ இப்ப என்ன படிப்பா?” என்று அதிகப் பிரசங்கித்தனமாக எங்கள் குழுவில் ஆராய்ச்சியாய் கேள்வி கேட்ட ஒரு அச்சுபிச்சு தர்மஅடி வாங்கியிருப்பான். “அழகுக்கு படிப்பதெற்கு? அறிவெதற்கு?” என்று அப்போதே நான் தான் ஏற்ற இறக்கங்களுடன் வைரமுத்துக் கவிதையாகக் கேட்டேன். முதுகுக்கு பின்னால் ரெண்டு பேர் என்னை வித்தியாசமாகப் பார்த்தது முன்னால் திட்டு வாங்கியவன் முகத்தில் தெரிந்தது.

நான் பி.எஸ்.ஸி படிக்கும்போது எங்கள் ஊரில் இருக்கும் அவள் பாட்டி வீட்டிற்கு சம்மர் வெக்கேஷனுக்கு வந்த ஒய்யாரி. பட்டிணத்துப் பெண் பார்க்க எப்படியிருப்பாள் என்று ரோல் மாடல் பார்க்க போட்டி போட்டுக்கொண்டு கழுகாய் பொன்னா பாட்டி வீட்டை வட்டமடித்து சைட் அடித்தார்கள். மணி கண்கொத்திப் பாம்பாக யார்யார் எத்தனை மணிக்கு அவள் வீட்டைக் கடக்கிறார்கள், உள்ளே பார்க்கிறார்கள், அவளிடம் இளிக்கிறார்கள், பாட்டியிடம் பேசுகிறார்கள் என்று கணக்கெடுத்துக்கொண்டு வறுத்தெடுத்தான். “வெக்கமாயில்ல. புதுசா ஒரு பொட்டைப் பொண்ணு ஊருக்கு வந்துடக்கூடாதே. பின்னாலையே அலைவீங்களே” என்று திட்டிவிட்டு மத்தியானம் ”கொல்லையில பாத்ரூம் தாப்பா ரிப்பேர்னு சொன்னீங்கல்ல” என்று கார்பெண்டர் சகிதம் போய் நின்று தச்சருக்கு சித்தாளாக பணிபுரிந்து டெல்லிப் பார்டியின் நன்மதிப்பை பெற பிரயத்தனப்பட்டான்.

பொ.பாட்டி இல்லத்திற்கு 24x7 சிறப்பு செக்கியூரிட்டி ட்யூடி பார்த்தார்கள். பித்துப்பிடித்த இரண்டு பேர் விடியலில் அவள் வீட்டு வாசலைப் பெருக்கி கோலம் போடும் முறைவாசல் செய்யக்கூட சித்தமாய் இருந்தார்கள். பொன்னா பாட்டி கெட்டிக்காரி. அந்த மாதம் முழுவதும் கடைத்தெரு மண்டியிலிருந்து அரிசி மூட்டை எடுத்துவருதிலிருந்து அந்துருண்டை வாங்குவது வரை கன ஜோராக பசங்களை ஏவி வேலை வாங்கிக்கொண்டாள். பேத்தியுள்ளபோதே தூற்றிக்கொள்!

ஒரு நாள் வாசலில் நின்று கை நகம் கடித்துத் துப்பிக்கொண்டிருந்தவளை நாக்கைத் தொங்கப்போட்டுப் பார்த்துக்கொண்டே சென்ற எங்கள் தெரு பெண் ஆர்வலன் ஒருவன் எதிரில் வந்த எண்ணைச் செட்டியாரின் மூன்று சக்கர சைக்கிளில் மோதி தலையோடு கால் ஜொள்ளோடு எண்ணையும் வழிய பேந்தப் பேந்த முழித்தபடி பரிதாபமாக நின்றான்.  கழுத்திலிருந்த முறுக்குச் செயினை விரல்களில் சுருட்டிக் கோர்த்துக்கொண்டு கருங்குழல் முன்னால் விழ அவள் அப்போது விழுந்து விழுந்து சிரித்ததில் பயல்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக அம்பேல். ஆல் அவுட். அப்போது வாயில் ஈ, கொசு என்ன டைனோசரே பூந்தாலும் தெரியாது.

“மச்சான். மூஞ்சியில கரியப் பூசாம எண்ணைய பூசிப்புட்டா” என்று மூன்று நாளுக்கு வீதியில் எண்ணைக் காப்பு ஆனவனை வீட்டுக்கு வீடு நிறுத்தி கேலி பேசினார்கள். ஒரு காந்தத்தைச் சணலில் கட்டித் தெரு மணலில் இழுத்துக்கொண்டு போனால் சிறு சிறு இரும்பு மற்றும் துறுப்பிடித்த சேஃப்டிபின், ஹேர்பின் போன்ற ஐட்டங்கள் ’பச்சக்’கென்று ஒட்டிகொண்டே போவது போல அந்தத் தெரு வாலிபங்களைக் அவள் பின்னால் கட்டியிழுக்கும் காந்தமாக வளைய வந்தாள். கண்ணிரண்டும் மின்சாரம் பாய்ச்சுவதால் “மச்சான். நீ சொல்றா மாதிரி அவ சாதாரண மாக்னெட் இல்ல. அவ ஒரு எலக்ட்ரோ மாக்னெட்டா” என்று கல்லூரியில் ஃபிசிக்ஸ் சேர்ந்த புது அறிவியல் அறிஞனொருவன் என்னிடம் சொன்னான்.

உன்
தேகம் வாழைத்தண்டூ
பேச்சு அல்வாத்துண்டூ
கன்னம் கற்கண்டூ
மொத்தத்தில்
நீ
கை கால் முளைத்த பூச்செண்டூ

என்று கரியால் அவர்கள் வீட்டு வாசலில் கிறுக்கியிருந்ததைப் பார்த்து பொன்னாப் பாட்டி திட்ட ஆரம்பித்ததில் ஒரு ஞாயிற்றுக்கிழமை பொழுது தெருச் சண்டையாய் விடிந்தது. எல்லா வரியிலும் ”டூ...டூ”ன்னு நெடிலில் இருந்ததில் யார் என்று ஈசியாகப் பிடித்துவிட்டோம். ”மண்டூ” என்று பேப்பரில் அதிகாரப்பூர்வமாக எழுதி என்னைத் திட்டிய மணி தான் அந்த அசடு. அதிரடி விசாரணையில் தெரிய வந்த சங்கதி இதுதான். மேல வீதியில் எம்.ஏ தமிழ் முடித்துக் கவிதை மேல் தீராக்காதலில் இருந்தவனிடம் எழுதி வாங்கி அகோராத்திரி கண் விழித்து நெட்ரு அடித்து பிரம்ம முஹூர்த்ததில் எழுந்து கிறுக்கியிருக்கிறான். அப்புறம் மாலினியின் அப்பா வந்து அவளை மீண்டும் ஊருக்கு அழைத்துப்போகும் போது “ஈரமான ரோஜாவே! என்னைப் பார்த்து மூடாதே” என்று பாட்டை சத்தமாக வைத்து துக்கத்தைத் தீர்த்துக்கொண்டார்கள்.

மாலினியின் அடுத்த வருட விஸிட் எங்கள் ஊரில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. முதல் வருடம் கண்ணை உருட்டி உருட்டி சங்கோஜமாக மிரள மிரள பார்த்துக்கொண்டிருந்தவள் இரண்டாம் வருடம் “ஏ”, “அப்டியா”, ”சீ”, ”ஏஏஏன்”, ”தோஸ்த்”, “போடா”, ”புண்ணாக்கு”, “தடியா” என்று மணிரத்னம் படம் வசனம் போல ஷார்ட்ஹாண்ட் வசனங்கள் பேச ஆரம்பித்தாள். அவளது அந்த சுந்தரமொழியில் மயங்கியோர் பலர். அவளைத் தன் பக்கம் ஈர்க்கும் ஆர்வத்தில் எல்லோரும் கோரஸாக காலை மாலை ஹிந்தி படித்தார்கள். ஒரு விஷமன் ஜோக் அடிக்கிறேன் பேர்வழி என்று “ஏக் காம் மே” வசனத்தை “ஏக் கிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸான்” என்று அழுத்திச் சொல்லி அவளை அசத்தப் பார்த்தான். ”அட அசத்தே” என்று ஒரு அலட்சிய லுக் விட்டாள். ’ஸ்’ஸில் மேலே ஒட்டிய உதடு அவனுக்கு ரெண்டு நாளைக்குப் பிரியவே இல்லை.

அந்த வருடம் மணிக்கொரு தரம் கரெண்ட் கட் செய்து மக்களுக்கு பில்லில் மிச்சம் பிடித்தார்கள். தெருவாசிகள் தங்கள் வீட்டுக் கூடத்தில் இருந்த நேரத்தை விட வாசற்படியில் உட்கார்ந்து கழித்த நேரமே ஜாஸ்தி. வடநாட்டில் ஆண்களுடன் சகஜமாக பேசிப் பழகிய பெண்ணாகையால் அவர்கள் வீட்டுப் படிக்கட்டில் உட்கார்ந்து வம்பளக்க ஆரம்பித்தார்கள். இருந்தாலும் பாட்டிக்கு உள்ளூர ஒரு பயம்தான். தடித்தாண்டவராயன்களை வைத்துக்கொண்டு பெயர்த்தியை காபந்து பண்ண வேண்டுமே என்று கவலைப்பட்டாள். அவள் கவலைப்பட்டது போலவே ஒரு நிகழ்ச்சி அன்றைக்கு நடந்தது.

இங்கு மழை இன்னும் விட்டபாடில்லை. பஸ்ஸும் வந்தபாடில்லை. அவளும் நகர்ந்தபாடில்லை. நானும் இங்கிருந்து கிளம்பியபாடில்லை. ஷேர் ஆட்டோக்களில் பிறத்தியான் மடியில் உட்கார்ந்து மழைக்கு இதமாக சில மாந்தர்கள் சொகுசாகப் பயணித்தார்கள்.  கால் கடுக்க நின்றாலும் பக்கத்திலிருக்கும் அந்த அழகியினால் வலி தெரியாமல் இருந்தது. உயரத்தைப் பார்த்தால் அவளாக இருக்குமோ என்று விடாமல் மூளை அரித்துக்கொண்டிருந்தது.

போன பாராவுக்கு முதல் பாரா கடைசியில் சொன்ன அந்த நிகழ்ச்சி என்னவென்றால்...... வழக்கம் போல உட்கார்ந்து அரட்டை அடித்துக்கொண்டிருந்தோம். மின்சாரம் தடைபட்டது. கையில் இருந்த மோதிரத்தை சுழற்றியபடியே இருந்த மாலு (இந்தப் பெயர் ஒரு நாலைந்து பாராவுக்கு முன்னாடியே எழுதியிருக்கவேண்டும்) அதை தொலைத்துவிட்டாள். எங்கேயோ உருண்ட மோதிரத்தை பூச்சிபட்டு கடித்தால் கூட பரவாயில்லை என்று உயிர்தியாகம் செய்யும் உத்வேகத்துடன் நண்பர்கள் தேட ஆரம்பித்தார்கள். பொ.பாட்டி “உள்ள போய் மெழுகுவர்த்தி கொண்டு வரேன்”ன்னு உள்ள போனாங்க. ஏதோ சாமான் உருள்ற சத்தம் கேட்டவுடனே பாட்டி விழுந்துட்டான்னு மாலு எழுந்து உள்ளே ஓடினா.

ஒரு ரெண்டு நிமிஷத்தில கரண்ட் வர்றதுக்கும் பாட்டி “ஐயோ”ன்னு அலறுவதற்கும் சரியாக இருந்தது. ஒரு கும்பலாக உள்ளே ஓடிப்போனதில் முதல் கட்டு தாண்டி இரண்டாம் கட்டில் இருந்த ஸ்டோர் ரூம் வாசல் தரையில் அலங்கோலமான நிலையில் மணியும் மாலுவும். எவ்வளவோ பேரின் ஆசைக் கனவில் மணி மண்ணள்ளிப் போட்டுவிட்டான். ரெண்டு பேர் சட்டையைப் பிடிக்க “ஓடி வந்ததுல படிக்கு பக்கத்தில இருந்த மேட் தடுக்கி ரெண்டு பேரும் விழுந்துட்டோம்டா”ன்னு கேவிக் கேவி சொன்னாலும் யாரும் கிஞ்சித்தும் நம்பவில்லை.

கிட்டத்தட்ட அரச மரத்தடி பஞ்சாயத்து போல நடந்த விசாரணையில் கேட்டபோதும் தேய்ந்த கீரல் விழுந்த எம்.பி த்ரீ ஸி.டி போல அதையே திரும்ப திரும்ப சொன்னான். மாலு வாயைத் திறக்காமல் நின்றது ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டது என்று எல்லோரும் எண்ணினார்கள். மாலுவின் டை கட்டும் வேலை பார்க்கும் அப்பாவும், வாராவாரம் புதுதில்லி லேடீஸ் க்ளப் சாகரத்தில் சங்கமிக்கும் அம்மாவும் “கண்ட்ரீ ப்ரூட்ஸ்” என்று திட்டிவிட்டு கப்பல் போல காரில் ஏறி கிழக்கு திசை நோக்கிப் போனார்கள். பொன்னா பாட்டி அடிக்கடி பசங்களைப் பார்க்கும் போதெல்லாம் துடைப்பக்கட்டையை சிலம்பமாகச் சுழற்றி காண்பித்துக்கொண்டிருந்தாள். அதற்கப்புறம் எல்லாப் பசங்களும் பொ.பாட்டி வீடருகே வந்தால் ஓரமாக எதிர்சாரியில் பயணித்துக் கொண்டிருந்தார்கள்.

இரண்டு நாளுக்கப்புறம் அவனை ஆசுவாசப்படுத்தி தெரு மூலைக்கு ஒதுக்கிக் கொண்டு போய் விசாரித்ததில் ”மேட் தடுக்கி கீழே விழுந்தது உண்மைதான்டா. ஆனா அருணாசலம் சினிமால வர்ற மாதிரி அப்படியே ஒரு லிப் கிஸ் அடிச்சுப் பார்த்தேன். பச்சுன்னு ஒட்டிக்கிச்சு. ” என்று ஒரு போடு போட்டான். காண்டுல அவனை எல்லோரும் நாலு சாத்து சாத்தினார்கள்.

இது நடந்து ஒரு பத்து வருஷமாவது ஆகியிருக்கும். இந்தப் பொண்ணைப் பார்த்ததும் அந்த நினைப்பெல்லாம் பொங்கிக் கொட்டுது. ஒரு வழியாக மழை லேசாக விடத்தொடங்கியிருந்தது. தூரத்தில் கார்பொரேஷன் பஸ் வருவது தெரிகிறது. நாளைக்கு க்ளையண்ட் மீட்டிங் இருக்கிறது. ரூமுக்கு போனால் அங்கு வேறு விடியவிடிய கூத்தடிப்பார்கள். எவனோ ஒரு பைக் ரேஸ் பிரியன் அந்த பஸ்ஸை முந்திக்கொண்டு என்னைப் பார்க்க வருகிறான். சர்ர்ர்ர்க் என்று ப்ரேக் அடித்தான். பக்கத்தில் நின்றவள் லாவகமாகத் தாவி பில்லியனில் அமர்ந்து அவனைச் சிக்கென்று கட்டிக்கொண்டாள். முதல் கியரில் அவளை இன்னும் தன் முதுகோடு நெறுக்கி இரண்டாவது கியரில் பறந்தான்.

அவன் முகத்தை எங்கோ பார்த்த மாதிரி இருக்கே! ஆ! அடப்பாவி. அது மணி தான். அப்போ இவள்?

பின் குறிப்பு: இன்றைய தினமணி கதிரில் வந்தக் கதை இது.

-

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails