Showing posts with label கம்பராமாயணம். Show all posts
Showing posts with label கம்பராமாயணம். Show all posts

Monday, December 17, 2012

கந்தன் கலைதெரி கழகம்


க.க.க என்று கம்பனால் பெயர்சூட்டப்பட்ட இந்தக் கட்சி எது என்பது பற்றிய செய்தி உள்ளே.

இக்கால மானுடர்களுக்கு பிரதான பொழுதுபோக்குகள் எவையெவை என்று பட்டியல் தயாரிக்கச் சொன்னால் பளிச்சென்று ஞாபகத்துக்கு வருவது ஒழுக்கக்கேடான சீரியல்களைப் பார்த்து கேவிக்கேவி அழுவது, சூப்பர் சிங்கரில் அம்மாக்கள் கசிந்துருகுவதைப் பார்த்துக் கண்ணீர் சிந்துவது, இருபத்துநான்கு மணிநேரமும் ”ஸ்டே ட்யூன்டு” என்று கதறும் ஆர்ஜேக்கள் குரலுக்கு மத்தியில் சினிமாப் பாடல்களைக் கேட்பது,  பன்ச் டயலாக் பேச்சுகளைக் காது குளிரக் கேட்டு விசிலடித்துச் சினிமாப் பார்ப்பது, பச்சைத் தண்ணீர்கூட குடிக்காமல் எவ்விடத்திலும் பௌதீகமாகவோ வர்ச்சுவலாகவோ உட்கார்ந்து ஊர் வம்பு பேசுவது என்று ஒரு யானை லிஸ்ட் தயார் செய்யலாம். கோசலநாட்டின் இயற்கை எழிலைப் படம் பிடித்துக் காண்பித்த கம்பன் பின்னர் அந்நாட்டு மக்களின் பொழுதுபோக்குகளை ஐந்து பாடல்களில் கவிப் பட்டியலிடுகிறான். இது முன்னால் இது பின்னால் என்ற வரிசையில் இல்லாவிட்டாலும் நாமும் பட்டியலிடுவோம்.

1. பாரத் மேட்ரிமோனி மற்றும் கல்யாண மாலை போன்ற திருமணச் சேவைபுரியும் திருக்கம்பெனிகள் இல்லாத காலகட்டத்தில் கூட குணவிசேஷங்கள் பொருந்திய அந்தஸ்திலும் ஆஸ்தியிலும் சரிநிகர் சமானமான ஆணும் பெண்ணும் இணைந்துக் கல்யாணச் சடங்குகளில் ஈடுபடுவார்களாம். இன்னார்க்கு இன்னார் விதி சரியாகச் செயல்பட்ட காலம் போலும்.

2. ஆகாயத்தில் வட்டமிடும் பருந்தின் நிழல் எப்படி அது செல்லுமிடமெல்லாம் அதைவிட்டுப் பிரியாமல் தொடருமோ அதைப்போன்று இயலும் இசையும் சாகித்யமும் சங்கீதமும் இணைந்திருக்கும் பாட்டுக் கச்சேரிகளைக் கேட்டு இன்புறுவார்கள்.

3. தங்களுடைய வாழ்வியலுக்கு அருமருந்தைவிட இனியதாக இருக்கும் அர்த்தம் பொதிந்த சொற்பொழிவுகளைக் காதால் அருந்துவார்கள். அமிர்தத்தை அருமருந்து என்கிறார் கம்பர். மாந்துவது என்றால் சாதரணமாகக் கேட்டல் பருகுதல் என்ற அர்த்தத்தில் தொனிக்கும் அர்த்தமல்ல. ஆராய்ந்து அனுபவித்து உணர்ந்து கேட்பதே மாந்துதல்.

4. வீட்டிற்கு வரும் விருந்தினர்களை உபசரித்து விருந்தளித்து மகிழ்வார்களாம். சாதாரணமாக இல்லை ஒரு அன்ன விழா போன்று விமர்சையாக விருந்துக்கு விழா எடுப்பார்களாம். அந்தக் காலத்தில் ஒருவருடைய செல்வச்செழிப்பு அவர்கள் வீட்டு வாசலில் வந்து விழும் எச்சிலிலைகளின் எண்ணிக்கையை வைத்து அளக்கப்படும் என்று பொதுவாகச் சொல்வார்கள். ஒருவனால் எவ்வளவு பேருக்கு விருந்திட இயலுமோ அந்தளவிற்கு அவன் செல்வம் படைத்தவன் ஆவான்.

அந்தப் பாடலை இங்கே தருகிறேன்.
    பொருந்திய மகளிரோடு வதுவையில்
        பொருந்துவாரும்
    பருந்தொடு நிழல் சென்று அன்ன இயல் இசைப்
        பயன் துய்ப்பாரும்
    மருந்தினும் இனிய கேள்வி செவி உற
        மாந்துவாரும்
    விருந்தினர் முகம் கண்டு அன்ன விழா அணி
        விரும்புவாரும்
கறுப்புறு மனமும், கண்ணில் சிவப்புறு சூட்டும் காட்டி” என்று தொடங்கும் பாடலில் சேவற்போர் பற்றிக் குறிப்பிடுகிறார் கம்பர். வெற்றிமாறனின் அவார்டு படத்தில் தனுஷ் கம்பன் கண்ட கோசலநாட்டு மக்களில் ஒருவனாக வாழ்ந்துள்ளார் என்று விளம்பரப்படுத்தியிருக்கலாம். கறுப்பும் சிவப்பும் கோபத்தைக் குறிக்கும் சொற்களாகவே கம்பர் எடுத்தாண்டிருக்கிறார். “கறுப்பும் சிவப்பும் வெகுளிப்பொருளே” என்று தொல்காப்பியத்தில் வருகிறது. பூங்கா எழுதியவருக்கும் இது தெரிந்துதான் கொடி தேர்ந்தெடுத்திருக்கிறார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போல எருமைப் போர் என்றொரு இன்னொரு கேட்டகரி வீர விளையாட்டுகளையும் பொழுதுபோக்காக நிகழ்த்தியுள்ளனர்.

இப்படலத்தில் நம்மைக் கவரும் இன்னொரு முக்கியமான பாடல் விருந்தோம்பல் பற்றியது. அன்னவிழா எடுப்பார்கள் என்று கொஞ்ச நேரத்திற்கு முன்னர் ஒரு வரியில் சொன்ன கம்பர் இப்போது அந்த விழாவை ஒரு பாடலாகப் பாடி மகிழ்கிறார். அந்தப் பாடல்.
    முந்து முக் கனியின் நானா முதிரையின்
        முழுத்த நெய்யின்
    செந் தயிர்க் கண்டம் கண்டம் இடையிடை
        செறிந்த சோற்றின்
    தம்தம் இல் இருந்து தாமும் விருந்தொடும்
        தமரினோடும்
    அந்தணர் அமுதர் உண்டி அயிறலும்
        அமலைத்து எங்கும்.
மா, பலா, வாழை போன்ற முக்கனிகளையும், அவரை துவரை பயறு போன்ற பலவகைப்பட்ட பருப்புகளையும் (முதிரை) நல்ல நெய்யில் ஊறவைத்துப் பரிமாறி  கட்டிக் கட்டியான செந்தயிருக்கு மத்தியில் வெல்லம்(கண்டம்) முதலியனவற்றோடு சோறும் சேர்த்துப் பரிமாறி அந்தணர், தேவர், அப்போதுதான் கண்ட விருந்தினர்கள் என்று அனைவருக்கும் விருந்தளித்து மகிழ்வர். அவ்விருந்தின் ஓசை(அமலை) அத்தெருவெங்கும் கேட்குமாம். விருந்துக்கு என்ன ஓசை வந்துவிட முடியும். தக்காளி ரசத்தை சர்புர்ரென்று உறிஞ்சும் ஓசையா? விருந்தினர்களை முகமன் கூறி உபசரித்தலும் அவர்களின் நலம் விசாரிப்பதிலும் விருந்தில் மகிழ்ந்த அவர்களது ஆசியும் அந்த ஓசையில் அடங்குமே. திருப்பாவையில் நெய்யைப் பற்றிய குறிப்பை ”பாற்சோறுமூட நெய்பெய்து, முழங்கைவழிவாரக், கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்” என்று ஆண்டாள் பாடுகிறாள்.

இதில் செந்தயிர் என்பது என்னுடைய பெட் சப்ஜெக்ட். ஒரு காலத்தில் தயிரில்லாமல் எதுவும் சாப்பிடத்தெரியாத தயிர் அடிக்ட் ஜென்மம் இது. கட்டிக் கட்டியாக தயிர் உறையவைக்க ஒரு கிச்சன் ரகசியம் சொல்கிறேன். செந்தயிர் என்பது நன்றாகக் காய்ச்சிய பாலில் உறை ஊற்றுவது. உறை எல்லோரும் ஊற்றுவதுதான், ஆனால் அது எப்படி பாறையாக உறையும். காய்ச்சிய பாலை சமையற்கட்டில் ஓரிடத்தில் எடுத்துவைத்துவிட்டு, கொஞ்சூண்டு தயிரை எடுத்து உறை ஊற்றுவதுn எல்லோருக்கும் தெரிந்த கதைதான். ஆனால் கட்டித்தயிர் நிறைய பேருக்கு வாய்க்காத ஒன்று. கட்டித்தயிர் வேண்டுமென்றால் உறை ஊற்றிய பாத்திரத்தை அசைக்கக்கூடாது. அதைத் தொடாமல் விட்டோமேயானால் கரண்டியில் எடுத்து அடுத்தவர் கண்ணத்தில் அடிக்குமளவிற்கு கெட்டியான தயிருக்கு நான் உத்திரவாதம்.

இப்படி வீடுகளில் மட்டும் விருந்தளிப்பதில்லாமல் அன்னசாலைகளும் மிகுந்திருந்ததாகச் சொல்கிறார் கம்பர். அரிசிக்குவை (குவியல்), கறிக் குப்பை(குவியல்), போன்றவை அந்நாட்டில் வருவோர்கெல்லாம் ஊட்டிடத்தில் கிடைக்குமாம். அன்ன சத்திரத்தை ”கோட்டம் இல் ஊட்டிடம் தோறெலாம்” என்ற அற்புதமான சொல்லாட்சியின் மூலம் ஒரு தாயின் பரிவோடு ஊட்டுவதைப் போன்ற கலாச்சாரம் மிக்க அன்னசாலைகள் என்கிறார் கம்பர். இப்போது காசு கொடுத்துப் பசியாறும் உயர் தர சைவ உணவகங்களிலேயே சர்வர் சாதத்தை ஜேஸிபி போல இலையில் தள்ளுவதும், தொட்டுக்க ஒரு காய் வேண்டுமென்றால் நான்கு முறை ”வாழக்கா போடுங்க” என்று அழைத்து கைகாய்ந்து உண்பதும் வழக்காகிவிட்டது. அன்ன சத்திரங்களை கேரளாவில் “ஊட்டுப்புரை” என்றுதான் வழங்குகிறார்கள் என்பது கூடுதல் மலையாளத் தகவல்.

ஆடவரும் மகளிரும் பல கலைகளைப் பயிலும் இடங்களையும் பந்தாடுமிடங்களைப் பற்றிய வர்ணனைகளும் பந்தாவாக இருக்கிறது.
பந்தினை இளையவர் பயில் இடம் மயில் ஊர்
கந்தனை அனையவர் கலை தரெி கழகம்
சந்தனம் வனம் அல சண்பகம் வனம் ஆம்;
நந்தன வனம் அல நறை விரி புறவம்
இளையவர்களான பெண்டிர் பந்தாடும் இடங்கள் சந்தனக்காடாக இருந்தாலும் அவர்களது மேனியிலிருந்து வீசும் சண்பகம மணத்தால் சண்பக வனமானதாம். முருகனையொத்த காளையர்கள் வில் முதலினவற்றை கற்கும் பயிற்சியில் ஈடுபடும் பல மலர்கள் பூத்துக்குலுங்கும் நந்தவனங்கள் ஆயினும் அவர் தம் மேனியிலிருந்து எழும் முல்லை மணத்தால் முல்லைக்காடானதாம். ஆடவர்க்கு முல்லையும் பெண்களுக்கு சண்பகமும் வாசனையாகக் கூறுவது கவிமரபு. இதில் நாம் உற்று நோக்கவேண்டிய இடம் கழகம். கலைகள் பழகும் இடம் கழகம் எனப்படும். கந்தனையொத்வர்களுக்கு பயிற்சியளிக்க கலைதெரி கழகம் என்று பயிற்சிக்கூடம் ஏற்படுத்தி வீரக்கலைகளைப் பயிற்றுவித்தார்கள். இன்றும் இந்நாட்டில் கழகங்களுக்கு மலிவில்லை என்பதையும் எவ்வளவு வீரதீரச்செயல்களில் அவர்கள் ஈடுபடுகிறார்கள் என்பதையும் நாமறிவோம் பராபரமே!

வண்டு மயங்கும் வடிவழகைப் பெற்ற மருதநிலத்துப் பெண்டிரைப் பற்றியும் ஆய்ச்சியர்கள் தயிர் கடைதலைப் பற்றியும் மொத்தமாக பெண்களின் மாண்புகளைப் பற்றியும் பலவாறாக கவிவடிக்கிறார் கம்பர். ஆய்ச்சியர்கள் கெட்டித் தயிரை வெண்ணையெடுப்பதற்காகக் கடையும் போது அவர்களது நுண்ணிடை தேய வெண் சங்கு வளையல்கள் ”ஆய வெள் வளை வாய்விட்டு அரற்றவும்” கதறுகின்றனவாம்.
    பருவ மங்கையர் பங்கய வாள் முகத்து
    உருவ உண்கணை ஒண் பெடை ஆம் எனக்
    கருதி அன்பொடு காமுற்று வைகலும்
    மருத வேலியின் வைகின வண்டு அரோ.
தாமரை போன்ற முகம் படைத்த பெண்களின் மை எழுதிய கண்கள் தங்களுடைய ஒளிபொருந்திய பெண் வண்டுகள்(ஒண்பெடை) என்று நினைத்து ஆண் வண்டுகள் நாள்தொறும் முப்பொழுதும் மருதத்திலேயே டெண்ட் அடித்து தங்கினவாம். கோசலநாட்டுப் பெண்கள் அறிவிலும், ஆற்றலிலும், விருந்தோம்பலிலும் சிறந்து திகழ்ந்தார்கள் என்று ஒரு பாடலில் புகழ்கிறான். பெண்கல்வியைப் பற்றி இப்போது வாய்கிழிய வலியுறுத்தும் நமக்கு அக்காலத்திலேயே பெண்கள் கல்விகேள்விகளில் மேம்பட்டிருந்தார்கள் என்று கீழ்க்கண்ட பாடலிலிருந்து புலனாகிறது.
    பெரும் தடம் கண் பிறை நுதலார்க்கு எலாம்
    பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்
    வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்
    விருந்தும் அன்றி விழைவன யாவையே.
பிறைச்சந்திரனைப் போன்ற நெற்றியையும் பெரிய கண்களையும் உடைய மகளிர்க்கு செல்வமும் கல்வியும் நிறைந்திருந்தது. ஆனாலும் கல்விச் செருக்கின்றி பசியால் வருந்தி வந்தவர்களுக்கு அனுதினமும் விருந்தோம்புதலும் அவர்களது ஈகைக் குணத்தையும் மட்டுமே பெரிதாக அடையாளம் காட்டி வாழ்ந்தார்கள் என்று அவர்களின் மாண்புகளை பட்டியலிடுகிறார் கம்பர். மேலும் அந்நாட்டுப் பெண்களின் அழகைச் சொல்லும் ஒரு பாடலில் நம்மையெல்லாம் அசத்திவிடுகிறான் கவிச்சக்கரவர்த்தி. கண்ணதாசன் போன்று சினிமாப்பாட்டெழுதிய மற்றும் எழுதும் நிறைய பேருக்கு கவிச்செல்வம் வாரித்தந்த வள்ளல் அவன் என்று அடையாளம் காட்டும் ஒரு பாடல்.
    விதியினை நகுவன அயில் விழி; பிடியின்
    கதியினை நகுவன அவர்நடை; கமலப்
    பொதியினை நகுவன புணர் முலை; கலை வாழ்
    மதியினை நகுவன வனிதையர் வதனம்.
நகுவன என்றால் பழிப்பன என்று அர்த்தம். பெண்களுக்கு உவமையாகக் கூற வேண்டிய அனைத்தையும் வரிசைப்படுத்தி கோசலத்துப் பெண்டிரின் அங்க அவயங்கள் அந்த உவமைக்குச் சொல்லப்படுபவைகளைப் பழிக்கிறது என்று புகழேற்றிப் பாடுகிறான். என்னென்ன சொல்கிறான் என்று பார்ப்போம். படைக்கும் பிரம்மனை(விதி) பழிக்கிறதாம் அயில் விழி அதாவது வேல் போன்ற விழி, பெண் யானையின் நடையினைப் பழிக்கிறதாம் அவர்களின் நடை, தாமரை மலரின் மொட்டைப் பழிக்கிறதாம் அவர்தம் முலைகள். புணர் முலை என்றால் அடர்த்தியாக நெருங்கிய ஸ்தனங்கள் என்கிறார். இதில் பழிப்பது எங்கு வருகிறது என்றால் தாமரை மலர் ஏழேழு நாட்களுக்கு ஒருமுறை குவிந்தும் விரிந்தும் அதன் நிலையழிந்து காணப்படுமாம் ஆனால் அதற்கு சவால்விடுவது போல இருந்ததாம் கோசலநாட்டுப் பெண்டிரின் எப்போதும் குவிந்திருக்கும் ஸ்தனங்கள். சந்திரன் 15 நாட்களுக்கு ஒருமுறை உருமாறுவான் ஆனால் கோசலத்து வனிதையரின் முகம் அதைப் பழிப்பது போன்று எப்போதும் பூரண நிலவாக ஜொலிக்கிறதாம்.

இவ்வளவு சொக்கவைக்கும் அழகினால் அடித்துப்போடும் பெண்டிர்கள் கோசல நாட்டில் வாழ்ந்தும் இக்காவியத்தின் முதல் பாடலிலேயே நெறியின் புறம்செலாக் கோசலம் என்று கம்பன் புகழ்கிறான் என்றால் அந்நாட்டில் தசரத இராமனுடன் வசித்த சகஇராமர்கள் எவ்வளவு பேர் என்று வியக்கவைக்கிறது கம்பராமாயணம்.

நல்லோர் மிகுந்த கோசல நாடு எத்தகைய பெருமையுடைத்தது என்பதை ஒரு பாடலில் விவரிக்கிறான் கம்பன். எதுகையும் மோனையும் துள்ளிவிளையாடும் அந்தப் பாடலிங்கே.
    வண்மை இல்லை, ஓர்
        வறுமை இன்மையால்;
    திண்மை இல்லை, நேர்
        செறுநர் இன்மையால்;
    உண்மை இல்லை, பொய்
        உரை இலாமையால்;
    வெண்மை இல்லை, பல்
        கேள்வி மேவலால்.
அந்நாட்டில் வள்ளல்தன்மையைக் காணமுடியாதாம், ஏனென்றால் வறுமை என்று பிச்சையெடுப்பதற்கு ஆளில்லாதலால். அந்நாட்டினரின் வலிமையை அறிந்துகொள்ளவே முடியாதாம் ஏனென்றால் கோசலத்தை எதிர்த்துப் போர்புரிய யாரும் முன்வராததால், உண்மை உரைப்பவர்கள் இவர்கள்தான் என்று குறிப்பிட்டுச் சொல்லமுடியாதவாறு எல்லோரும் பொய்யுரைப்பதேயில்லாதவர்கள். அதனால் உண்மை இல்லை. எல்லோரும் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவதால் குறிப்பிட்ட சிலரை மட்டும் எடுத்துக்காட்டாக வெண்மையெனும் வெள்ளையறிவு பெற்ற வித்வான்கள் என்று சொல்லமுடியாதாம். வெண்மை இல்லாமை. எல்லோருமே ஒழுக்கசீலர்களாகவும் புத்திஜீவிகளாகவுமிருக்கும் ஒரு நாடு அடச்சே என்று போரடித்துவிடாது என்று நீங்கள் மனக்கண்ணில் நினைப்பது இங்கெ தெரிகிறது. கவிதைக்கு பொய்யழகு எனலாம் அல்லது த்ரேதா யுகத்தில் மக்கள் அப்படியும் ஒழுக்கமாக குடித்தனம் நடத்தியிருக்கலாம் என்று கன்னத்தில் போட்டுக்கொண்டு ஒத்துக்கொள்ளலாம்.

இத்தகைய சால்புகள் நிறைந்த நாட்டில் எப்படி வளம் கொழிக்காமல் இருக்கும். எப்படியெல்லாம் வளங்கள் சுரந்தன என்று கம்பன் எழுகிறான் பாருங்கள்.
    கலம் சுரக்கும் நிதியம்; கணக்கிலா
    நிலம் சுரக்கும் நிறை வளம்; நல் மணி
    பிலம் சுரக்கும்; பெறுதற்கு அரிய தம்
    குலம் சுரக்கும் ஒழுக்கம்; குடிக்கு எலாம்.
சுரத்தலென்றால் கொள்ளக் கொள்ள குறையாதது. கோசலத்தின் வளங்கள் எடுக்க எடுக்க வற்றாமல் சுரக்கின்றன என்பதற்கு எடுத்துக்காட்டாக கூறுபவைகளைக் கவனிப்போம். கப்பல் கப்பலாக செல்வம் பெருகிறதாம். எப்படியென்றால் கணக்கில்லாத நிலவளத்தினால் கிடைத்ததை ஏற்றுமதி செய்து அதனால் நாட்டிற்கு வந்து சேரும் செல்வம் கப்பல் கொள்ளாமல் வருகிறதாம். கோசலத்தில் ஏது கடல்? ஏது கப்பல்? தமிழ்நாட்டை கோசலமாக பாவித்து கம்பன் எழுதிய கவியிது. பெரிய பெரிய மாணிக்கங்களை சுரக்கிறதாம் சுரங்கங்கள்.(பிலம்).தோண்டத் தோண்ட மாணிக்கங்கள். இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல எக்குலத்தில் பிறந்தவர்களெல்லோருக்கும் ஒழுக்கம் என்பது சுரந்து அந்த நாடை வளமைப்படுத்துகிறது என்று வர்ணிக்கிறார். கலம், நிலம், பிலம், குலம் என்று அணி வகுக்கும் லம்கள் இப்பாடலுக்கு பலம்.

மக்களின் மாண்புகளும் செல்வச்செழிப்பும் மிகுந்து சுபிட்சமாக இருக்கும் நாட்டில் வீதிதோறும் வாய்ப்பாட்டும், குழலின் ஓசையும் தனிதனியாக எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும். பாட்டும் இசை விருந்திற்கும் என்ன காரணம்? ஏதேனும் வைபவங்களோ அல்லது திருமணம் போன்ற மங்கலநிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருப்பதால் இக்கச்சேரிகள் களைகட்டும். இதைப் பார்க்க மக்கள் கூட்டம் வெள்ளமெனத் திரண்டு வருமாம். அதைக்காண எப்படியிருக்குமென்றால் வீதிகளில் இரண்டு ஆறுகள் இருபுறமும் திரண்டு வந்து எதிரெதிராய் கலந்தது போல என்று முத்தாய்ப்பாக முடிக்கிறார்.

இப்படி சந்துஷ்டியான அத்தேசத்தில் இயற்கையின் இசைக்கச்சேரியை ஒரு காட்சியாகப் படம் பிடிக்கிறார் கம்பர்.
    தினைச் சிலம்புவ தீம் சொல் இளம் கிளி;
    நனைச் சிலம்புவ நாகு இள வண்டு; பூம்
    புனைச் சிலம்புவ புள் இனம்; வள்ளியோர்
    மனைச் சிலம்புவ மங்கல வள்ளையே
சிலம்புவ என்றால் ஒலிப்பது. தினைப்புனங்களில் இனிய மொழியுள்ள இளம் கிளிகள் பாடிக்கொண்டிருக்கும், மலர் அரும்புகளின் மேல் மிகவும் இளமையான வண்டுகள் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கும், நீர்நிலைகளின் மேல் பறவையினங்கள் க்ரீச்சொலிகள் கேட்கும், வள்ளல்தன்மை உடையோர்களின் வீடுகளில் மங்கல பாடல்கள் இசைத்துக்கொண்டிருப்பார்கள்.

கோசலநாட்டின் பரப்பளவு எவ்வளவு இருக்கும் என்று படிப்பவர்க்கு ஒரு சேதி சொல்கிறார் கம்பர். பல கால்வாய்களைக் கால்களைப் போல உடைய சரயு நதி மூலைமுடுக்கெல்லாம் பாய்ந்து கோசலத்தின் எல்லையைக் காண முயன்றும் இயலாத போது இருகால் கொண்ட நமக்கு எப்படி அதன் எல்லையைக் காண இயலும் என்று கேட்கிறார்.

நாட்டுப்படலத்தின் இறுதிப்பாடலாக கோசலத்தைப் பற்றிய ஒரு உயரியக் குறிப்பைக் கொடுத்துவிட்டுப் போகிறான் கம்பன்.
    வீடு சேர நீர் வேலை கால் மடுத்து
    ஊடு பேரினும் உலைவு இலா நலம்
    கூடு கோசலம் என்னும் கோது இலா
    நாடு கூறினாம். நகரம் கூறுவாம்.
ஊழிக்காலத்தில் கடலை விட்டு வந்த நீரும் காற்றும் அடிக்கும்போதும் தான் அழியாத குற்றமற்ற சிறப்புடைய கோசலத்தை இதுவரை பார்த்தோம். இனிமேல் அயோத்தி மாநகரத்தைப் பற்றிக் கூறுகிறேன்.

எ.பி.சொ: அன்ன விழா, பங்கய வாள் முகம், முட்டில் அட்டில்(தட்டுப்பாடில்லாத சமையகட்டில்), திஞ்சொல் இளங்கிளி, பொன்விரி புன்னைகள், பெருந்தடங்கண் பிறைநுதலார், ஊட்டிடம், குங்குமத் தோள்கள், இமையவர் உலகம்

#நாட்டுப்படலத்தில் அமிர்தமாக நிறைய எதுகை மோனைப் பாடல்கள் உள்ளது. எதையெடுப்பது எதை விடுப்பது என்ற இலக்கிய மயக்கத்தில் எனக்குத் தெரி(ளி)ந்த வரையில் ஆங்காங்கே தெரிவு செய்து சிலவற்றை இங்கே பகிர்ந்திருக்கிறேன். அடுத்து அயோத்தி மாநகரத்தில் நகரப்படலத்தில் சந்திப்போம்.

Monday, December 3, 2012

தாமரை உறங்கும் செய்யாள்

கோசலம் என்பதை கா+அசலம் என்றும் பிரிக்கலாம் என்கிறார்கள். கா என்றால் மிகுதி என்றும் அசலம் என்றால் மயிலென்றும் பதம் பிரித்து அர்த்தம் சொல்கிறார்கள். மயில்கள் மிகுந்த தேசம் என்பதால் கோசலம் என்று வழங்கலாயிற்று. அப்பேர்ப்பட்ட கோசலத்தை கம்பநாடன் நாட்டுப்படலமாக 61 பாடல்களில் கொஞ்சம் விஸ்தாரமாக எழுதினான். தேசியக் கொடி போல தேசிய விலங்கு தேசியப் பறவை என்கிற தேசிய வழக்கு அக்காலத்திலிருந்திருந்தால் கம்பரே மயிலை தேசியப் பறவையாக அறிவித்திருப்பார். 

தேசப்பற்றாளனாகச் சித்தரிக்கப்படும் இக்கால சினிமா நாயகர்கள் அரும்பாடுபட்டுக் குருதிச் சிந்தி நாட்டைக் காப்பாற்றும் படத்தில் நடிக்கும் போது நாட்டின் கொடியைத் தவிர வேறெதையும் நாட்டுடமையாக அறியாதவர்கள். காவிப் பட்டை கீழே வரும்படி கொடி தலைகீழாகப் பறப்பதற்கும், கொடியை யாராவது தீயிலிட்டு எரித்தாலும் ஆவேசப்பட்டு எதிராளியை அடித்துத் துவைக்கும்படி படம் பண்ணினார்களேத் தவிர பாசிட்டிவ்வாக நாட்டின் வளத்தையும் மாண்புகளையும் சிறப்புகளையும் விளக்கிக் காட்டினார்களா என்று தெரியவில்லை. இரு தசாப்தங்களுக்கு முன்னர் ஷ்யாம் பெனகல் எடுத்த பாரத் ஏக் கோஜ் வீடியோக்கள் யூட்யூப்பில் இலவசமாகக் காணக் கிடைக்கிறது. தாய்நாட்டைப் பற்றிக் கண்டும் கேட்டும் உணர்ந்தும் கொள்ளலாம்.

காவியநாயகனை அறிமுகப்படுத்தவதற்கு முன்னர் அவன் அவதரித்த தேசத்தையும் அதில் வாழும் மக்களையும் அந்நாட்டினரின் இயல்புகளையும் ஒழுக்கத்தையும் எடுத்துக்காட்டிவிட்டுதான் காப்பியத்திற்குள்ளேயே நுழைகிறான். ஔவையார் “நாடாகு ஒன்றோ காடாகு ஒன்றோ”வில் ”எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை, வாழிய நிலனே” என்று நல்லோர் உறையும் இடம் எதாகிலும் அந்தத் தேசம் நல்ல தேசம் என்று பொதுப்படையாக ஒரு புறநானூற்றுப் பாடலில் விவரித்திருக்கிறார். ஆனால் கம்பன் மாஞ்சு மாஞ்சு அந்நாட்டின் இயற்கை வளத்தையும் எழிலையும் அந்நாட்டினரின் பொழுதுபோக்குகளையும் கூறுகிறான்.

இப்படலத்தின் ஆரம்பப் பாடலில் மீண்டும் ஒருமுறை ஆதிகவியாக வான்மீகியின்(வான்மீகம் என்றால் புற்று. புற்றிலிருந்து வெளிப்பட்டவன் வான்மீகி) கவித்துவத்தை வணங்கி மகிழ்கிறான் கம்பன். வான்மீகி நன்நான்கு வரிகளாக எழுதிய அந்தத் தேன் கவியை தேவர்கள் செவிவழியாக உண்ணக் கொடுத்தான் என்றும் அவன் அந்த நாட்டைப் புகழ்ந்ததைப் பார்த்து மூங்கையானே(ஊமை) பேசினான் என்றால் நான் என் மொழியில் பேசமாட்டேனா? என்கிறார் அடக்கத்துடன்.

கண்ணை மூடிக்கொண்டு உங்களுக்குப் பிடித்த மற்றும் பார்த்து ரசித்த ஒரு ஆறு பக்கத்தில் ஓடும் செழிப்பான வயல் வரப்பான பிரதேசத்தை நினைவுக்குக் கொண்டு வாருங்கள். மருதநிலவாசியான கம்பன் கோசலநாட்டில் நீங்கள் இப்போது நினைவுக்குக் கொண்டு வந்தப் ப்ரிய நிலம் எப்படிக் காட்சியளித்தது என்று எப்படி வர்ணிக்கிறான் என்று படித்துப் பாருங்கள்.

வரம்பு எலாம் முத்தம்; தத்தும்
    மடை எலாம் பணிலம்; மாநீர்க்
குரம்பு எலாம் செம்பொன்; மேதிக்
    குழி எலாம் கழுநீர்க் கொள்ளை;
பரம்பு எலாம் பவளம்; சாலிப்
    பரப்பு எலாம் அன்னம்; பாங்கர்க்
கரம்பு எலாம் செந்தேன்; சந்தக்
    கா எலாம் களி வண்டு ஈட்டம்.

வரப்புகளில் முத்துக்கள் கிடக்கின்றனவாம், நீர் பாயும் மடைகளில் சங்குகள்(பணிலம்), அதிகமாக நீர் பாயும் கரைகளில் செம்பொன் ஒதுங்கியிருக்கிறதாம், எருமைகள்(மேதி) உழலும் குழிகளில் செங்கழுநீர் பூக்களும், பரம்படித்த (சமன்படுத்தப்பட்ட) நிலங்களிலெல்லாம் பவளங்கள் மின்னுகிறது, நெற்கதிர்கள் நிற்கும் இடங்களில்(சாலிப்பரப்பு) அன்னப்பட்சியும் சேர்ந்து நிற்கிறது, மேற்கண்ட நிலப்பரப்புகளில் அடங்காத இடங்களில் தேனிருக்கிறது, சோலைகளில் மதுவில் மயங்கி மகிழும் வண்டுக் கூட்டம்(ஈட்டம்) என்று கோசலநாட்டின் வளத்தை ஒரே பாடலில் கவிவடித்தான் கம்பன்.

இப்படியந்த மருத நிலத்தை காட்சிப்படுத்திக் காண்பித்தக் கம்பன் அடுத்ததாக பின்னணி இசையாக என்னென்ன ஒலித்தது என்று செவிக்கு விருந்தளிக்கிறான். கம்பனின் சொல்லாட்சி இப்பாடலில் சப்தத்திற்காக ஒலிக்காக வரும் வார்த்தைகளாக அரவம், அமலை, ஓதை, ஓசை, தமரம், துழனி என்று பிரித்து மேய்வதில் புரிகிறது. ஆறு பாய் அரவம், ஆலை பாய் அமலை, ஆலைச் சாறு பாய் ஓதை, சங்கின் வாய் பொங்கும் ஓசை, ஏறு பாய் தமரம், எருமை பாய் துழனி என்று ஆற்றின் ஓசையையும், ஆலைகளிலிருந்து ஓடும் சாறுகளின் ஓசையையும் எருமைகள் உரசிக்கொள்வதையும் பாய் பாயென்கிறான்.

இக்காலத்தில் ஒரு காப்பியமெழுதுவதென்றால் இந்தக் காமாசு (கா+மாசு) தேசத்தில் என்னென்ன நம் காதுக்கு விருந்தாகும் என்பதை ஷாட் பை ஷாட் பார்ப்போம். பாம்மென்ற பாஸஞ்சர் அலறலுடன் சென்ட்ரல் ஸ்டேஷனைக் காண்பிக்கிறோம். அப்படியே கட் பண்றோம். வெளில காண்பிக்கறோம். டர்ர்ர்ர்ர்ர்ன்னு புளிமுட்டையாய் சைடு கம்பி வரை மக்களை அடைத்துக்கொண்டு நகரும் ஆட்டோ சத்தம். அதையப்படியே கட் பண்றோம். சிக்னலில் பச்சை விழுவதற்கு முன்னாடி பொறுமையின்றி பாம் பாம்முன்னு மாநகரப் பேருந்தின் பேரொலி. கட் பண்றோம். நடுரோடில் ஹாரனிலிருந்து வைத்தகை எடுக்காமல் ஓட்டும் இருவீலர் சவுண்டப்பர் ஒருவர். கட் பண்றோம். இன்னும் கொஞ்ச தூரம் வந்தால் “அம்பிகையைக் கொண்டாடுவோம்” என்று துலுக்காணத்தம்மன் கோயில் கூம்பு ஸ்பீக்கர் பாடல். கடைசியில் எதுவும் பேசாதபடிக்கு நம்ப தொண்டையைக் கட் பண்றோம். மேலே சப்தமிட்ட காட்சிகளில் ஒன்றிரண்டு தவிர மீதமெல்லாம் கிராமப்புறங்களிலும் இருக்கிறது. டர்ர்ர்ர்ரென்ற காதைக் கிழிக்கும் ஆட்டோச் சத்தம் தேசியச் சத்தமாக வாய்ப்பிருக்கிறது. அரட்டை போதும்.

ஒரு பிரம்மாண்டமான பிஜியெம்மிற்கு பிறகு மருதநிலத்தை வேந்தனாக சித்தரித்து ஒரு காட்சியைக் கொண்டு வருகிறான். ஒரு சோலையிலே மயில்கள் களிநடம் புரிகின்றன. அதற்குத் தாமரை மலர்கள் ஃபோகஸ் லைட் போன்று வெளிச்சமடிக்கிறதாம். விண்ணில் கருமேகங்கள் கடமுடாவென்று முழங்குவது நடனத்திற்கு மத்தளம் வாசிப்பது போல இருக்கிறதாம். குவளைக் கொடிகளிலிருந்து மலர்கள் கண்விழித்துப் பார்க்கின்றன. அவைகள் தான் இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள். இக்கலை நிகழ்ச்சிக்கு நீர்நிலைகள் திரைச்சீலை வேலை பார்க்கிறது. வண்டுகள் தேனொழுகும் மகர யாழையொத்து இனிமையாகப் பாட மருதமாகிய வேந்தன் வீற்றிருந்தான். இயற்கையை அன்னைக்கு உருவகப்படுத்தவதால் அ.ச.ஞா அவர்கள் மருதநிலத்தரசி என்பார். அந்தக் கவிச்சுவை மிகுந்த பாடல் கீழே.

தண்டலை மயில்கள் ஆட,
   தாமரை விளக்கம் தாங்க,
கொண்டல்கள் முழவின் ஏங்க,
   குவளை கண் விழித்து நோக்க,
தெண் திரை எழினி காட்ட, தேம்
   பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட, -
   மருதம் வீற்றிருக்கும் மாதோ.

பொன் முத்து பவளமெல்லாம் கூட வேண்டாம், நதிநீர்க் கால்வாய்களில் மறைக்காமல் மறுக்காமல் சொட்டுத் தண்ணீர் கூட கொடுக்கமாட்டேன் என்று கர்ஜிக்கும் கர்நாடகா காவேரித் தண்ணீர் வழங்கினால் எதேஷ்டம். உழுது பிழைத்துக்கொள்ளலாம்.

இப்படிக் கச்சேரி களைகட்டியக் கோசலத்தை வர்ணித்த கம்பன் ஒரு பட்டியல் கொடுத்து அவை தங்கும் இடங்களாக சொல்லும் ஒரு பாடல் ரொம்பவும் ஃபேமஸ்...

நீர் இடை உறங்கும் சங்கம்;
    நிழல் இடை உறங்கும் மேதி;
தார் இடை உறங்கும் வண்டு;
    தாமரை உறங்கும் செய்யாள்;
தூர் இடை உறங்கும் ஆமை;
    துறை இடை உறங்கும் இப்பி;
போர் இடை உறங்கும் அன்னம்;
    பொழில் இடை உறங்கும் தோகை

தண்ணீரில் சங்குகள் உறங்கிக்கொண்டிருக்கும், மர நிழலில் எருமைகள் (மேதி) உறங்கும், தாரிடை வண்டுகள் உறங்குமாம். தார் என்றால் பூ மாலை. மாலை இருபக்கத்திலும் முடிச்சுப்போடப்பட்டு இருப்பது. தார் என்பது இக்கால மகளிர் தோளில் சார்த்திக்கொள்ளும் துப்பட்டா அணிவது போன்ற மாலை. ஒரு புறம் முடிச்சுறாத மாலை. அம்மாலையிலிருக்கும் பூக்களில் வண்டு உறங்குகிறது என்று சொல்வதன் மூலம் கோசல நாட்டுப் பூக்களில் தேன் மிகுதியாக இருக்கிறது என்கிறான் கம்பன். அடுத்த வரி மிகவும் அற்புதமான வரி. தாமரை உறங்கும் செய்யாள்(திருமகள்). விழித்துக்கொண்டு மக்களுக்குச் செல்வத்தை அருள்புரிய வேண்டிய திருமகள் தாமரை மலரில் உறங்குகிறாளாம். ஏன் தெரியுமா? வேண்டும் என வேண்டும் வறியவரே இல்லையாம் கோசலத்தில். சேற்றில் ஆமை உறங்குவதும், நீர்த்துறைகளில் சிப்பி உறங்குவதையும் சொல்லிவிட்டு போர் இடை உறங்கும் அன்னம் என்று வரி எழுதி  நெற்போர்களில் அன்னம் உறங்குவதாகவும் நெல் மணிகளை உணவாகக் கொள்ளும் தோகையுடைய மயில்கள் வயிறு முட்டமுட்டச் சோலைகளில் உறங்குவதாக வர்ணிக்கிறான்.

இப்பேர்ப்பட்ட நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடுவதாக ஒரு பாடல். கரும்பாலைகளிலிருந்து தேனாக ஓடும் கருப்பஞ்சாறும், பாளையை அரிந்து விட்டுப் போன இடத்திலிருந்து ஒழுகும் தேன் போன்ற கள்ளும், சோலைகளில் பழுத்த கனிகளின் தேனொத்த சாரும், மாலைகளிலிருந்து வழியும் தேனும் அபரிமிதமாக பெருகி ஓடி கப்பல்கள் நிற்கும் கடலிலே கலக்கிறதாம். அன்றைய கோசலம் இதுதான் என்று சொல்லப்படும் வட இந்தியாவில் கடற்கரையே கிடையாது. கோசலமாக தமிழ்நாட்டைத்தான் கம்பன் வர்ணித்துப்பாடுகிறான் என்பதற்கு இந்தப் பாடலும் ஒரு சாட்சி. அக்கடலில் வாழும் மீன்கள் அத்தேனைப் பருகி களிக்கிறது என்று ”ஆலை வாய்க் கரும்பின் தேனும்;” என்று ஆரம்பிக்கும் ஒரு பாடல்.

இளைஞர்களுக்கான சங்கதி ஒன்றை இப்போது சொல்லப்போகிறான். ஒரு நாட்டில் பெண்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கேட்டால் மக்கள் தொகைக் கணக்கெடுத்து வரும் நம்பர்களைச் சொல்லலாம். ரொம்பவும் சுருக்கமாக கோசலத்துப் பெண்டிரின் சென்சஸ் கணக்கு ஒன்றைக் கம்பன் சொன்னான். ஆற்றின் புதுப்புனலில் பெண்கள் குளித்தபிறகு அவர்களது கூந்தலிலிருந்த மலர்களாலும் கஸ்தூரிக் கலவையினாலும் கமழ்கின்ற நறுமணமான ஓடிச் சென்றுக் கலக்கும் கடலின் அலைகளும் அவ்வாசனையைப் பெற்றது என்று சொல்வதன் மூலம் பெண்ணினத்தின் பெருக்கத்தை வர்ணித்தான். கடலுக்கே அந்த நறுமணம் அளித்த அவ்வாற்று நீராடும் பெண்களின் கடைக் கண்கள் வாள் போன்றும், இக்கால தொகுப்பாளினிகள் போலல்லாத கொஞ்சும் மழலை மொழியாகவும், லிப்ஸ்டிக் போடாமலேயே செவ்வரி ஓடிய அதரங்களையும் கொண்ட மகளிர் என்று கூடுதலாக அவர்களது அழகையினையும் சேர்த்துச் செய்தி சொல்கிறான். அந்த அழகிய பாடல் கீழே

புதுப் புனல் குடையும் மாதர்
    பூவொடு நாவி பூத்த
கதுப்பு உறு வெறியே நாறும்
    கருங்கடல் தரங்கம் என்றால்,
மதுப் பொதி மழலைச் செவ்வாய்
    வாள் கடைக் கண்ணின் மைந்தர்
விதுப்பு உற நோக்கும் அன்னார்
    மிகுதியை விளம்பல் ஆமே!

ஒரு எபிஸோட்டிற்குள் இந்த நாட்டுப் படலத்தை அடக்க முடியவில்லை. கடைசியாக இன்னொரு அற்புதமான பாடலைப் பார்த்துவிட்டு நாட்டுப்படலத்துக்கு தொடரும் கார்டு போட்டுடலாம்.

சேல் உண்ட ஒண் கணாரில் திரிகின்ற
    செங்கால் அன்னம்
மால் உண்ட நளினப் பள்ளி வளர்த்திய
    மழலைப் பிள்ளை
கால் உண்ட சேற்று மேதி கன்று உள்ளிக்,
    கனைப்பச் சோர்ந்த
பால் உண்டு துயிலப் பச்சைத் தேரை
    தாலாட்டும் பண்ணை.

வயற்பரப்புகளில்(பண்ணை) மீன் போன்ற கண்களையுடைய பெண்களைப் போன்று திரிகின்ற சிவந்த கால்களையுடைய அன்னப்பறவைகளின் குஞ்சுகள் தாமரை மலரில் படுத்திருக்கின்றனவாம். அப்பறவைகளின் பசிக்குக் கன்றுகளை நினைத்துக் கனைக்கும், கால்களில் சேறு படிந்துள்ள, எருமைகள் மடியிலிருந்து தானாகச் சுரக்கும் பாலைக் குடித்துத் தூங்குவதற்கு ஏதுவாகப் பச்சைத் தேரைகள் தாலாட்டுப் பாடுகின்றன என்று முடிக்கிறான்.

எ.பி.சொ: தேம்பிழி மகரயாழ், புதுப்புனல் குடையும் மாதர், குண்டலக் கோல மைந்தர், அன்பு எனும் நறவம் மாந்தி, களி வண்டு ஈட்டம், கண்களும் காமன் அம்பும்.

இனிமேல் வாரம் ஒரு பாகமாக இத்தொடர் வெளிவரும்.

Wednesday, November 14, 2012

பார் கிழிய நீண்டு.....

இக்கால இயக்குனர் சிகரங்கள் திரைப்படத்தின் பூர்வாங்க சீனிற்கு இரு கை நீட்டி, கட்டை விரல்கள் நீண்டு பக்கவாட்டில் முட்ட, நிமிர்ந்த ஆட்காட்டி விரல்களுக்குள் அடங்கும் காட்சியைக் கட்டம் கட்டி ’ஓப்பனிங் லொகேஷன்’ பார்ப்பதைப் போல அக்காலத்திலேயே இராமகாவியம் எழுத வந்த கம்பன் கோசல நாட்டின் எழிலை முதலில் நம் கண்ணுக்குக் காட்டி விட்டுப் பின்னர்தான் காவியத்துள்ளேயே நுழைகிறான். நதிக்கரையில் நாகரீகங்கள் வளர்ந்ததைப் போல கோசல நாட்டின் நாகரீகத்தை, எழிலை, மாட்சியை, சரயு நதிதீரத்திலிருந்து ஆரம்பிக்கிறான். ”நா காவிரித் தண்ணி குடிச்சு வளர்ந்தவன்டா” என்றும் ”தாமிரபரணி தண்ணி வாகு அது” என்றும் சுய தம்பட்டம் அடித்துக்கொள்வதில் அவர்களது பூர்வாசிரம அல்லது வளர்ந்துகொண்டிருக்கும் பிரதேசத்தின் மீதும் அந்நிலத்தில் பாயும் நதியின் மீதும் அவர்கள் கொண்டுள்ள பந்த பாசம் புரிகிறது.

வாழும் நிலத்தின் தன்மையில் நிறைய பேரின் குணவிசேஷங்கள் அடங்கியிருக்கும் என்பார்கள். அலுவலகத்தில் என்னுடைய வளவளாத்தனத்தை விமர்சித்த துணை ஜனாதிபதி(Vice President) அந்தஸ்தில் இருந்த உயரதிகாரி ரிடையர் ஆவதற்கு முன்னர் ஒரு கமெண்ட் அடித்தார். “ஆர்விஎஸ். உனக்கு ஏன் இந்தப் பேச்சுத் தெரியுமா? புராதன காலத்துலேர்ந்து தஞ்சாவூர் ஜில்லா ஃபெர்ட்டெயில் லாண்டா இருந்தது. ஜனங்க கைல காசு நிறையா புரண்டதால தெனமும் மூக்கைப் பிடிக்கச் சாப்பிட்டுட்டு வெத்தலையைப் போட்டுண்டு திண்ணையில உட்கார்ந்து வம்பு பேச வேண்டியதுதானே. அந்த வம்பு ஜீன் உங்கிட்ட இருக்காதா? அதான் இப்படி பேசற. தின்னவேலி கூட ஃபர்ட்டெயில் லாண்ட் தான்” என்றார். இருக்கலாம்.

ஆற்றுப் படலத்தில் மொத்தம் 20 பாடல்கள். முதலில் கம்பன் கோசல நாட்டின் மக்கட்பண்பை ஆற்றின் வழியாக சொல்லும் ஒரு பாடல்.
ஆசு அலம் புரி ஐம்பொறி வாளியும்
காசு அலம்பு முலையவர் கண் எனும்
பூசல் அம்பும் நெறியின் புறம் செலாக்
கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம்.

ஐம்பொறிகளுள் கண் சென்று பற்றும் கருவி. இருந்த இடத்திலிருந்து மேயும். கவி பாடும். கண் ஜாடையில் ஒரு ஆளையே கவிழ்த்துவிடலாம். மற்ற பொறிகள் நின்று பற்றும் கருவி. ஒரு மனிதனை குற்றமிழைக்கச்(ஆசு) செய்து துன்பத்தில்(அலம்) ஆழ்த்தும் ஐம்பொறிகளையும் அம்புக்கு(வாளி)  உவமைப் படுத்துகிறான் கம்பன். மார்பகங்களில் ஆரங்கள்/காசு மாலைகள் அசைந்தாடும்(அலம்பு) பெண்களின் போர்த்(பூசல்-இப்பொழுதும் சண்டை என்பதற்கு வழக்கில் இருக்கும் சொல்) தொழில் புரியும் கண்கள் என்ற அம்பு பிற ஆடவரை ஏறெடுத்தும் பார்க்காத வண்ணம் ஒழுக்க நெறியில் வாழும் கோசல நாட்டினை அலங்கரிக்கும்(புனை) சரயு நதியின் அழகினைப் பற்றிக் கூறுவோம்.

தீயவைகளைப் பற்றிக் கொணர்ந்து மூளைக்கு அனுப்பும் கண்களின் செய்திகள்தான் மற்ற அவயங்களைத் தப்பு செய்யத் தூண்டுகிறது. பஸ்ஸ்டாண்டில் நிற்கும் பொழுது இமையிறக்கி ஓரக்கண்ணால் ஒரு லுக் விடும் பெண்ணை தேமேன்னு பக்கத்தில் நிற்கும் அப்பாவி ஓவர் லுக் செய்வதற்கு ஆலாய்ப் பறப்பதில் ஆரம்பிப்பது கடைசியில் ஒரு நாள் அப்பெண்ணின் மாமன்காரன் சிவந்த கண்களும் வீச்சருவளோடும் பேருந்து நிறுத்தத்தில் ஆவேசமாய் வெட்ட நிற்பதில் முடிகிறது அந்தப் பார்வையின் சிறு வீச்சு.
நீறு அணிந்த கடவுள் நிறத்த வான்
ஆறு அணிந்து சென்று ஆர்கலி மேய்ந்து அகில்
சேறு அணிந்த முலைத் திரு மங்கை தன்
வீறு அணிந்தவன் மேனியின் மீண்டதே

நீறு, ஆறு, சேறு, வீறு என்று பட்டையைக் கிளப்பும் அடுத்த பாடலில் பொன்னார் மேனியன் என்று அழைக்கப்படும் சிவனார் போன்று வெண்ணிறமாக திருநீறு பூசியது போல இருந்த கோசல நாட்டு வானம், ஆர்கலி (கடல்) மேய்ந்து, மார்பில் அகில்சேறு (சந்தனக் குழம்பு) பூசிய திருமகளைத் தன் மார்பிலேக் கொண்ட, நீருண்ட மேகம் போலத் திருமேனி கொண்ட திருமால் போலத் திரும்பி மழையாகப் பொழிகிறது என்கிறான் கம்பநாட்டாழ்வார். ஒவ்வொரு அடியிலும் இரண்டாவது வார்த்தையில் அணிந்து என்றெழுதியிருப்பது கவிச்சுவையளிக்கிறது. திருப்பாணாழ்வார் கூட “கொண்டல் வண்ணனை கோவலனாய் வெண்ணெய் உண்டவாயன் என் உள்ளம் கவர்ந்தானை” என்று பாடுகிறார்.

இப்படியாகப் பொழிந்த மழையானது சரயுவில் எப்படி வெள்ளமாக வந்தது என்று அடுத்த ஆறு பாடல்களில் வர்ணிக்கிறார். நதியை வைத்துக் குறிஞ்சி, பாலை, முல்லை மருதத் திணைகளைப் பற்றியும் கடைசியில் திணை மயக்கமாக சரயு நதி ஒரு திணையை மற்றொரு திணையாக எப்படி உரு மாற்றுகிறது என்று கவி வடித்திருக்கும் கம்பனைப் பார்த்து நம்மை மலைக்க வைக்கும் சில பாடல்களைத் தருகிறேன். எத்திணையில் வாழ்ந்தாளும் அத்திணை ”மக்கள்” இன்னவாறு செய்தார்கள் என்று எழுதாமல், கொடிச்சியர், எயினர், ஆயர், மள்ளர் என்று முறையே குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம் என்று அந்தந்த நிலத்து மக்களை ரகம் பிரித்து எழுதியிருக்கிறார். மலையில் பிறந்த சரயுவின் நறுமணம் பற்றி கம்பர் எழுதியிருக்கும் ஒரு பாடல் நம்கவனத்தை சரேலென்று ஈர்க்கிறது. (எல்லாப் பாடலும் இழுத்தாலும் இதைப் பிரத்யேகமாகப் பார்ப்போம்)
கொடிச்சியர் இடித்த சுண்ணம்,
    குங்குமம், கோட்டம், ஏலம்,
நடுக்கு உறு சந்தம், சிந்தூரத்தொடு
    நரந்தம், நாகம்,
கடுக்கை, ஆர், வேங்கை, கோங்கு, பச்சிலை,
    கண்டில்வெண்ணெய்,
அடுக்கலின் அடுத்த தீம் தேன்,
    அகிலொடு நாறும் அன்றே.

குறிஞ்சி நில மகளிர் பூசிக்கொள்வதற்கு இடித்த வாசனைப் பொடியாகவும் (சுண்ணம். இக்கால பயன்பாடாக வைரமுத்து அந்நியனில் எழுதிய ”ஐயங்காரு வீட்டு அழகே”வைக் கேட்கவும்), குங்குமம், கோஷ்டம் (கோட்டம்) எனும் வாசனாதி திரவியம், ஏலக்காய்(ஏலம்), பூசியவர்களுக்குக் நடுங்கச் செய்யும் குளிர்ச்சி தரும் சந்தனம்(சந்தம்), மலைகளில் மலரும் சிந்தூரம் என்கிற வெட்சிப் பூ, கஸ்தூரி (நரந்தம்), புன்னை (நாகம்), கொன்றைப் பூ(கடுக்கை), அத்திப்பூ, வேங்கைப் பூ, கோங்கு, பச்சிலைகள், கண்டில் வெண்ணெய் எனப்படும் ஒரு பூண்டு வகையறா (பெருஞ்சீரகம் போலவாம்) அப்புறம் மலைச்சாரலிலிருந்து அடித்துக் கொண்டுவரப்பட்ட சுவைமிகுந்த தேனும் அகில் கட்டைகளோடும் வெள்ள நீர் கரை புரண்டு வருவதால் சரயு நறுமணம் வீசுகிறதாம்.

கூவத்தின் நறுமணத்தை முகர்ந்து கவி எழுத இப்போது ஒரு சென்னைக் கம்பன் இங்கில்லை என்று இதைப் படிக்கும் உங்களது ஆதங்கம் புரிகிறது.

இதுபோல சரயு நதியின் வெள்ளப் பெருக்கை ஆற்றுப்படலம் முழுவதும் பேசியிருக்கிறார் கம்பர். அந்நதியின் வெள்ளப் பிரவாகத்தைப் பற்றிச் சொல்லும் ஒரு அற்புதமான பாட்டோடு இந்த ஆற்றுப்படலத்தை முடித்துக்கொண்டு அடுத்து 61 பாடல்கள் அடங்கிய நாட்டுப் படலத்துக்குச் செல்லலாம்.
முல்லையைக் குறிஞ்சி ஆக்கி,
    மருதத்தை முல்லை ஆக்கிப்
புல்லிய நெய்தல் தன்னைப்
    பொரு அரு மருதம் ஆக்கி,
எல்லை இல் பொருள்கள்
    எல்லாம் இடை தடுமாறும் நீரால்
செல் உறு கதியில் செல்லும்
    வினை எனச் சென்றது அன்றே.

ஒரு திணையை மற்றொரு திணையாக மாற்றும் வல்லமை படைத்தது சரயு என்கிற அர்த்தத்தில் இதை எழுதினாலும் கடைசி ஈரடியில் ஒரு ஒப்பற்ற தத்துவத்தை இப்பாடலின் மூலம் நம்முன் வைக்கிறான் கம்பன். குறிஞ்சியில் புறப்பட்ட சரயுவின் வெள்ள நீரானது குறிஞ்சி நிலத்துப் பொருட்களைக் கொண்டு வந்து முல்லையில் சேர்த்தது பின்னர் முல்லையில் அடித்துவரப்பட்ட பொருட்களினால் மருதத்தை முல்லையாக்கியது இறுதியாக கடலும் கடல் சார்ந்த இடமான நெய்தலை மருதமாக்கியதாம். மருதநிலத்தில் வாழ்ந்தவனான கம்பன் பொருஅரு(ஒப்பற்ற) என்று தன்நிலமான மருதத்தை வர்ணிக்கிறான். புல்லிய(இழிந்த) x பொருஅரு(ஒப்பற்ற). நெய்தல் புல்லியது. மருதம் பொருஅருவானது. இப்படி ஒரு திணை மற்றொரு திணையாக உருமாறுவது திணை மயக்கம் என்ற வகையறாவில் அடங்குகிறது.

ஒவ்வொரு நிலமும் பிற நிலத்தின் தன்மையால் நிலைமாறுவது போல ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு பிறவியிலும் அவன் செய்த தீவினை நல்வினைகளுக்கேற்ப புண்ணியங்களும் பாபங்களும் பிறவிதோறும் தவறாது அடைந்து அவனைத் தடுமாறச் செய்கிறது என்கிற  தத்துவத்தை இந்த எடுத்துக்காட்டின் மூலமாக கம்பன் விளக்குகிறான்

சரயு ”பார் கிழிய நீண்ட”து என்று அதன் பிரம்மாண்டத்தை ஒரு பாடலிலும், மதம் ஒன்றே என்பதற்கு சான்றாகவும் சரயுவின் வெள்ளப்பெருக்கை பரம்பொருளாகப் பாவித்து “பல்பெரும் சமயம் சொல்லும் (பரம்)பொருளும் போல் பரந்தது அன்றே” என்று இமயத்தில் பிறந்து(கல்லிடைப் பிறந்து) கடலில் சேர்ந்த தண்ணீரானது(கடலிடைக் கலந்த நீத்தம்) தான் வரும் வழிகளில் குளமாக, குட்டையாக, வாய்க்காலாக, ஏரியாக பரவிக் கிடக்கிறது.

இப்படி பல வகைகளாகப் பரவிக்கிடப்பதெல்லாம் பல மதங்களாகவும், பல சாதிகளாவும், இனங்களாகவும், பல ரூபத்திலும், பல பெயர்களில் வழங்கப்படுகிறதென்றும் கடைசியில் அனைத்தும் பரம்பொருளைத்தான் குறிக்கின்றன என்பதற்கும் உவமையாகச் சொல்கிறான். சமயசார்பற்ற கம்பன் என்ற பொருளில் ஒரு மணி சொற்பொழிவாளர்கள் பேசுவதற்கு ஏற்ற இடம் இது. ஆற்றுப்படலத்தின் கடைசிப் பாடலில் சரயு நதியானது அந்நாட்டு மக்களுக்கு உயிருக்கு இணையாக உள்ளது என்று நிறைவாக எழுதி மகிழ்கிறான்.

இப்பத்தியில் எழுதியது போக எனக்குப் பிடித்தச் சில சொற்பிரயோகங்களை எ.பி.சொ என்று கொசுறு போலப் பதிவின் கடைசியில் தரலாம் என்று விருப்பம்.

எ.பி.சொ: அகில் சேறு - சந்தனக் குழம்பு, புள்ளி மால் வரை - பெருமையுடைய இமயம் வரை, உரவுநீர் நிலத்து ஓங்கும் உயிர்க்கெலாம் - கடல்சூழ்ந்த நிலத்து உயிர்கலுக்கெல்லாம், மறிவிழி ஆயர்மாதர் - மான்விழி ஆயர்குலப் பெண்கள், சேத்த நீர்த் திவலை - சிவந்த நீர்த் துளி.

#இத்தோடு ஆற்றுப்படலம் முற்றிற்று. ”கம்பராமாயணம் ஃபார் டம்மீஸ்” என்கிற ரீதியில் எழுதிவருகிறேன். என்னுடைய புரிதலுக்கேற்ப இந்த எழுத்து அமைந்திருக்கிறது. கம்பனைப் படிக்கவேண்டும் என்ற உந்துதல் உள்ளவர்கள், பேரறிஞர்களின் உரைகளைப் படிப்பதற்கு முன்னர் ஒரு சாதாரண ஆரம்பப் புரட்டலுக்கு இதைப் படிக்கலாம்.

தொடர்புடைய சுட்டிகள்.
இசையறியும் பறவை.
பாற்கடலை நக்கிக் குடிக்கும் பூனை

 

Monday, October 22, 2012

இசையறியும் பறவை

அதீத திறம் படைத்தக் கவிஞர்களுக்கு கவிச் செருக்கு வழிய வழிய இருக்குமென்பார்கள். தானெழுதிய ஒரு சில வரிகள் பரவலாகப் பாராட்டப்பட்டால் தலை கால் புரியாமல் ஆடி மற்றவர்களை சொல் வம்புக்கிழுத்து லொள்ளு செய்பவர்கள் அநேகம் இருக்கிறார்கள். ”நான் எழுதிய தமிழ்ப்பாட்டில் குற்றமா?” என்று திருவிளையாடல் ரேஞ்சிற்கு எகிறுவார்கள்.

கவிச்சக்கரவர்த்தி கம்பனின் அவையடக்கத்தில் மொத்தம் ஆறு பாடல்கள். போன பதிவிலேயே பாற்கடலை ந
க்கிக் குடிக்க ஆசைப்படும் பூனை போல எழுத வந்தேன் என்று சொன்னவன் அடுத்த பாடலில் ”நொய்தின் நொய்ய சொல்ல நூற்கலுற்றேன்” என்று எளிமையான சொற்களைக் கொண்டு இந்நூலை இயற்றத் தொடங்கினேன் என்று பவ்யமாக எழுதுகிறான். வான்மீகியின் எழுத்தில் மிகவும் ஈர்க்கப்பட்ட கம்பன் இவ்வுலகச் சான்றோர்கள் என்னை இகழ்ந்தாலும் அதன் மூலம் எனக்குப் ஏதேனும் பழி வந்தாலும் இக்கதையை நான் எழுதுவேன் என்பதை “வையம் என்னை இகழவும், மாசு எனக்கு எய்தவும்” என்று எழுதி தன்னை மிகவும் எளியவனாகக் காட்டிக்கொள்கிறான்.

அசுணம் என்கிற ஒரு பறவையைப் பற்றித் தெரிந்திருந்தால் நீங்கள் சங்க இலக்கியம் படித்த தமிழ் ஆள் என்று அர்த்தம். அது விலங்கா அல்லது பறவையா என்பதில் சிறு சந்தேகம் இருக்கிறது. மாசுணம் என்பது விலங்கு என்று ஒரு சிலர் போராடுகிறார்கள். அசுணத்தின் குண விசேஷம் என்னவென்றால் அது இசையறியும் பறவை. நல்ல இசையைக் கேட்டால் அது அதில் மகிழ்ந்து திளைத்து தன்னை மயங்கி இருக்கும். அப்பறவையைப் பிடிக்க வேண்டுமானால் நல்லிசை வழங்கினால் அது மயங்கியிருக்கும் நேரத்தில் பிடித்துவிடுவார்களாம்.

நல்லிசைக்கு மிகவும் பிரயர்த்தனப்படவேண்டும். எவர்க்கும் அபஸ்வரம் அசால்ட்டாக வரும். பறையொலி போன்ற அதிர்வொலி எழுப்பினால் மூர்ச்சையடைந்து விடுமாம். அவ்வேளையில் லபக்கென்று பிடித்துவிடுவார்களாம். ”ஒத்தை சொல்லால.. என் உசிரை”யும் “எவ அவ” என்று கேட்கும் பேட்டை ராப்பும் ஒலிக்கும் இக் கொட்டு காலத்தில் அசுணம் வாழ்ந்தால் அது உயிர் பிழைக்குமா? வகைவகையான விருத்தத் தொகை கவிதைகளைக் கேட்ட, யாழிசைப் போன்ற தேனிசை கேட்கும் அசுணத்தைப் போன்ற சான்றோர்களின் செவியில் என்னுடைய கவிதைகள் விழுந்தால் அது பறையொலி போன்று இருக்காதோ? அவர்களும் துன்புறுவார்களோ? என்ற கேள்வியின் மூலம் தான் எழுதவிருப்பது விருத்தத் தொகைக் கவிதை என்பதையும் இப்பாட்டினூடே சொல்கிறான் கம்பன். நல்லிசையை இரசிக்கத் தெரியாத மானுடர்கள் கொம்பும் வாலும் இல்லாத விலங்குகள் என்று பர்த்ரு ஹரி நக்கலடிப்பார்.

துறை அடுத்த விருத்தத் தொகைக் கவிக்கு
உறை அடுத்த செவிகளுக்கு ஓதில் யாழ்
நறை அடுத்த அசுண நல் மாச் செவிப்
பறை அடுத்தது போலும் என் பா அரோ

(துறை - வகை, நறை - தேன், உறை - இடம்)

அடுத்த பாடலில் ஏதேனும் பிழையிருந்தால் மன்னிக்கவும் என்று “பித்தர் சொன்னவும், பேதையர் சொன்னவும், பத்தர் சொன்னவும், பன்னப் பெறுபவோ?” என்கின்ற வரிகளில் “பைத்தியக்காரர்கள் சொல்வதையும், அறிவிலிகள் சொல்வதையும், பக்தர்கள் சொல்வதையும் யாரும் ஆராய மாட்டார்கள். அது போல இதையும் எடுத்துக்கொள்ளுங்கள் என்று முத்தமிழறிஞர்களுக்கு குற்றம் பொருத்தருள வேண்டுகிறான். பைத்தியம் மற்றும் அறிவில்லாதவர்கள் லிஸ்டில் பக்தர்களை ஏன் வைத்தான்? பக்தியில் திளைப்பவர்கள் ”எல்லாம் என் தெய்வமே”யென்று ஒரு பித்தனைப் போன்ற உணர்வு நிலையில் இருப்பதாலோ? The lunatic, the lover, and the poet are of imagination all compact என்று ஷேக்ஸ்பியர் பைத்தியத்தையும் காதலர்களையும் கவிகளையும் ஒரே தராசில் வைத்தான்.

அவையடக்கத்தின் கடைசி பாடலாகத் தரையில் கோடு கிழித்து ஆடும் அரங்கம் வரைந்து விளையாடும் சிறுவர்களைப் பார்த்து சிற்பிகள் அவர்கள் வரைந்ததில் குற்றம் கண்டுபிடித்து ஏளனம் செய்யமால் பாராட்டவும் செய்வார்கள் அல்லவா அது போல சான்றோர்கள் நான் இயற்றியக் இக் காதையை இலக்கணப்படி அமையவில்லை என்று கோபித்துக்கொள்ள மாட்டார்கள் என்கிறான் கம்பன்.

அறையும் ஆடு அரங்கும் மடப் பிள்ளைகள்
தறையில் கீறிடில் தச்சரும் காய்வரோ?

காப்பியத்தை ஆரம்பிக்கும் முன் தான் இயற்றிய நூலைப் பற்றிக் கூறுகையில்

நடையில் நின்று உயர் நாயகன் தோற்றத்தின்
இடை நிகழ்ந்த இராம அவதாரப் பேர்த்
தொடை நிரம்பிய தோம் அறு மாக்கதை
சடையன் வெண்ணெய் நல்லூர் வயின் தந்ததே.

ஒழுக்கநெறியில் நின்று உயர்ந்த நாயகனின் தோற்றத்தைப் பற்றிய இராமாவதாரம் என்று பெயர் கொண்டு எதுகை மோனையுடன்(தொடை) செய்யுள்களைக் கொண்ட குற்றமற்ற இம்மாக் கதை வெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளலின் உதவியால் எழுதியது என்று சடையப்பருக்கு ஸ்பான்ஸர் கிரெடிட் கொடுக்கிறான்.

ஆயிரம் பாடல்களுக்கு ஒருமுறை இது போல வள்ளலுக்கு ஒரு பாட்டு அர்ப்பணிக்கிறானாம் கம்பன். இதில் இடை நிகழ்ந்த என்பதற்கு பொருள் கொள்வதற்காக நடையில் நின்று உயர் நாயகனை திருமால் பெயருக்கு ஏற்றி பரசுராம அவதாரத்திற்கும் பலராம அவதாரத்திற்கும் இடையில் நிகழ்ந்த இராமாவதாரத்தைக் குறிக்கும் பொருட்டும் சிலர் உரை சொல்வர். தோம் என்றால் குற்றம். தோம் அறு. குற்றமற்ற. இப்பாடலை கூர்ந்து பார்க்கும் போது தான் எழுதியக் காப்பியத்திற்கு கம்பன் ”இராமாவதாரம்”என்று பெயரிட்டதாக அறியப்படுகிறது.

”அவதார புருஷ”னில் வாலி அவையடக்கமாக எழுதிய ஒரு வரி ஞாபகத்திற்கு வருகிறது.

“நான்கு அங்குலம் நகர்ந்ததையே, நகர் வலமாய் நினைக்கும் நத்தை;”

#நான் நத்தை கூட இல்லை. சொத்தை!!

##அடுத்த கம்பராமாயண அப்டேட்டிலிருந்து பாலகாண்டம்.

### கம்பராமாயணம் (2)

Wednesday, October 17, 2012

பாற்கடலை நக்கிக் குடிக்கும் பூனை

கொஞ்ச நாட்களாக கம்பராமாயணக் காதலில் மயங்கி இருக்கிறேன். படிப்பது கேட்பது இரண்டும் பெரும்பாலும் கம்பன் பக்கமே சாய்ந்திருக்கிறது.

காந்திஜி ஒரு சமயம் தமிழகத்திற்கு வந்திருந்த போது சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரிடம் “உங்களது தமிழில் ஏதோ ராமாயணம் இருக்கிறதாமே. நான் ஒரு வாரம் இங்கே தான் இருக்கிறேன். எனக்குக் கற்றுக்கொடுக்க முடியுமா?” என்று ஆர்வமாகக் கேட்டாராம்.

அதற்கு ராஜாஜி இதற்கு சரியான ஆள் ரசிகமணி டி.கே.சிதான் என்று முடிவு செய்து அவரிடம் காந்திக்கு கம்ப ராமாயணம் கற்றுக்கொடுக்க கேட்டுக்கொண்டாராம். எதிரில் அமர்ந்திருந்த ரசிகமணியிடம் காந்தி ஆர்வத்துடன் “எங்கே ஆரம்பிக்கலாம்? எப்போது ஆரம்பிக்கலாம்?” என்று துடித்தாராம். அதற்கு ரசிகமணி மிகப்பொறுமையாக “அடுத்த ஜென்மத்தில் பார்க்கலாம்” என்றாராம். காந்தி “ஏன்?” என்று கேட்டதற்கு “இந்த மகா காவியத்தை எழுத்துக்களாகப் படித்துப் புரிந்துகொள்வதைவிட தமிழனாய் பிறந்தால்தான் உணர்வுப்பூர்வமாக அனுபவிக்க முடியும். அதனால் அடுத்த ஜென்மத்தில் நீங்களும் தமிழனாய்ப் பிறந்து நானும் தமிழனாய் பிறந்து சந்தர்ப்பம் வாய்த்தால் சொல்லித்தருகிறேன்” என்றாராம்.

தேசப்பிதா காந்தியிடம் இல்லாத தகுதி எனக்கிருக்கிறது என்கிற கர்வத்துடன் கம்பராமாயணம் படிக்கிறேன்.

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்,
நிலைபெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே

இவ்வுலகத்திலிருக்கும் அனைத்து ஜீவராசிகளையும் தன் விருப்பத்திற்கேற்ப ஆக்கலும் அவைகளை காப்பதும் அல்லவைகளை அழிப்பதுவும் முடிவுறாத அளவில்லாத விளையாட்டாக உடையவர் அவரே தலைவர் அவர் சரண் நாங்கள்.

நான் படித்த உரைகள், சொற்பொழிவுகள், புலவர்கள் நயம் பாராட்டிய கம்பனின் கவி ஆழங்கள் இவைகளைக் கொண்டு எனக்குத் தெரிந்த வகையில் இதை எழுதலாம் என்று விருப்பம். என்னைப் போலவே இதில் கிண்டர் கார்டன் அளவில் மட்டும் வளர்ந்திருப்பவர்கள் இதை ஆசையுடனும் ஆர்வத்துடனும் படிக்கலாம். இதைக் கண்ணுரும் அறிஞர் பெருமக்கள் சான்றோர்கள் குறைகள் இருப்பின் தோழமையுடன் சுட்டிக் காட்டித் திருத்தலாம். 
இக்காவியத்தை எழுத ஆரம்பித்த கம்பன் ஒரு பெரிய பாற்கடலை சிறு பூனை நக்கிக் குடித்துவிட ஆசைப்பட்டதைப் போல இந்த இராமன் கதையை எழுதுகிறேன் என்று முன்னுரைப் பாவோடு ஆரம்பிக்கிறான்.
ஓசை பெற்று உயர் பால் கடல் உற்று ஒரு
பூசை முற்றவும் நக்குபு புக்கு என
ஆசை பற்றி அறையல் உற்றேன்; மற்று இக்
காசு இல் கொற்றத்து அத்து இராமன் கதை அரோ


இதில் பூசை என்ற சொல்லுக்குப் பொருள் பூனை. ஓசையுடன் அலை உயர அடிக்கும் பாற் கடல் முழுவதையும் ஒரு பூனை நக்கிக் குடித்துவிட ஆசைப்பட்டதைப் போல என்ற அர்த்தத்தில் வருகிறது... காசு இல் கொற்றத்து என்பது... குற்றமில்லாத வெற்றியை உடைய என்கிற பொருளில் வருகிறது...
 
நான் பூனை கூட இல்லை.

#அவ்வப்போது இனி கம்பராமாயண அப்டேட்ஸுடன்...

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails