Wednesday, November 14, 2012

பார் கிழிய நீண்டு.....

இக்கால இயக்குனர் சிகரங்கள் திரைப்படத்தின் பூர்வாங்க சீனிற்கு இரு கை நீட்டி, கட்டை விரல்கள் நீண்டு பக்கவாட்டில் முட்ட, நிமிர்ந்த ஆட்காட்டி விரல்களுக்குள் அடங்கும் காட்சியைக் கட்டம் கட்டி ’ஓப்பனிங் லொகேஷன்’ பார்ப்பதைப் போல அக்காலத்திலேயே இராமகாவியம் எழுத வந்த கம்பன் கோசல நாட்டின் எழிலை முதலில் நம் கண்ணுக்குக் காட்டி விட்டுப் பின்னர்தான் காவியத்துள்ளேயே நுழைகிறான். நதிக்கரையில் நாகரீகங்கள் வளர்ந்ததைப் போல கோசல நாட்டின் நாகரீகத்தை, எழிலை, மாட்சியை, சரயு நதிதீரத்திலிருந்து ஆரம்பிக்கிறான். ”நா காவிரித் தண்ணி குடிச்சு வளர்ந்தவன்டா” என்றும் ”தாமிரபரணி தண்ணி வாகு அது” என்றும் சுய தம்பட்டம் அடித்துக்கொள்வதில் அவர்களது பூர்வாசிரம அல்லது வளர்ந்துகொண்டிருக்கும் பிரதேசத்தின் மீதும் அந்நிலத்தில் பாயும் நதியின் மீதும் அவர்கள் கொண்டுள்ள பந்த பாசம் புரிகிறது.

வாழும் நிலத்தின் தன்மையில் நிறைய பேரின் குணவிசேஷங்கள் அடங்கியிருக்கும் என்பார்கள். அலுவலகத்தில் என்னுடைய வளவளாத்தனத்தை விமர்சித்த துணை ஜனாதிபதி(Vice President) அந்தஸ்தில் இருந்த உயரதிகாரி ரிடையர் ஆவதற்கு முன்னர் ஒரு கமெண்ட் அடித்தார். “ஆர்விஎஸ். உனக்கு ஏன் இந்தப் பேச்சுத் தெரியுமா? புராதன காலத்துலேர்ந்து தஞ்சாவூர் ஜில்லா ஃபெர்ட்டெயில் லாண்டா இருந்தது. ஜனங்க கைல காசு நிறையா புரண்டதால தெனமும் மூக்கைப் பிடிக்கச் சாப்பிட்டுட்டு வெத்தலையைப் போட்டுண்டு திண்ணையில உட்கார்ந்து வம்பு பேச வேண்டியதுதானே. அந்த வம்பு ஜீன் உங்கிட்ட இருக்காதா? அதான் இப்படி பேசற. தின்னவேலி கூட ஃபர்ட்டெயில் லாண்ட் தான்” என்றார். இருக்கலாம்.

ஆற்றுப் படலத்தில் மொத்தம் 20 பாடல்கள். முதலில் கம்பன் கோசல நாட்டின் மக்கட்பண்பை ஆற்றின் வழியாக சொல்லும் ஒரு பாடல்.
ஆசு அலம் புரி ஐம்பொறி வாளியும்
காசு அலம்பு முலையவர் கண் எனும்
பூசல் அம்பும் நெறியின் புறம் செலாக்
கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம்.

ஐம்பொறிகளுள் கண் சென்று பற்றும் கருவி. இருந்த இடத்திலிருந்து மேயும். கவி பாடும். கண் ஜாடையில் ஒரு ஆளையே கவிழ்த்துவிடலாம். மற்ற பொறிகள் நின்று பற்றும் கருவி. ஒரு மனிதனை குற்றமிழைக்கச்(ஆசு) செய்து துன்பத்தில்(அலம்) ஆழ்த்தும் ஐம்பொறிகளையும் அம்புக்கு(வாளி)  உவமைப் படுத்துகிறான் கம்பன். மார்பகங்களில் ஆரங்கள்/காசு மாலைகள் அசைந்தாடும்(அலம்பு) பெண்களின் போர்த்(பூசல்-இப்பொழுதும் சண்டை என்பதற்கு வழக்கில் இருக்கும் சொல்) தொழில் புரியும் கண்கள் என்ற அம்பு பிற ஆடவரை ஏறெடுத்தும் பார்க்காத வண்ணம் ஒழுக்க நெறியில் வாழும் கோசல நாட்டினை அலங்கரிக்கும்(புனை) சரயு நதியின் அழகினைப் பற்றிக் கூறுவோம்.

தீயவைகளைப் பற்றிக் கொணர்ந்து மூளைக்கு அனுப்பும் கண்களின் செய்திகள்தான் மற்ற அவயங்களைத் தப்பு செய்யத் தூண்டுகிறது. பஸ்ஸ்டாண்டில் நிற்கும் பொழுது இமையிறக்கி ஓரக்கண்ணால் ஒரு லுக் விடும் பெண்ணை தேமேன்னு பக்கத்தில் நிற்கும் அப்பாவி ஓவர் லுக் செய்வதற்கு ஆலாய்ப் பறப்பதில் ஆரம்பிப்பது கடைசியில் ஒரு நாள் அப்பெண்ணின் மாமன்காரன் சிவந்த கண்களும் வீச்சருவளோடும் பேருந்து நிறுத்தத்தில் ஆவேசமாய் வெட்ட நிற்பதில் முடிகிறது அந்தப் பார்வையின் சிறு வீச்சு.
நீறு அணிந்த கடவுள் நிறத்த வான்
ஆறு அணிந்து சென்று ஆர்கலி மேய்ந்து அகில்
சேறு அணிந்த முலைத் திரு மங்கை தன்
வீறு அணிந்தவன் மேனியின் மீண்டதே

நீறு, ஆறு, சேறு, வீறு என்று பட்டையைக் கிளப்பும் அடுத்த பாடலில் பொன்னார் மேனியன் என்று அழைக்கப்படும் சிவனார் போன்று வெண்ணிறமாக திருநீறு பூசியது போல இருந்த கோசல நாட்டு வானம், ஆர்கலி (கடல்) மேய்ந்து, மார்பில் அகில்சேறு (சந்தனக் குழம்பு) பூசிய திருமகளைத் தன் மார்பிலேக் கொண்ட, நீருண்ட மேகம் போலத் திருமேனி கொண்ட திருமால் போலத் திரும்பி மழையாகப் பொழிகிறது என்கிறான் கம்பநாட்டாழ்வார். ஒவ்வொரு அடியிலும் இரண்டாவது வார்த்தையில் அணிந்து என்றெழுதியிருப்பது கவிச்சுவையளிக்கிறது. திருப்பாணாழ்வார் கூட “கொண்டல் வண்ணனை கோவலனாய் வெண்ணெய் உண்டவாயன் என் உள்ளம் கவர்ந்தானை” என்று பாடுகிறார்.

இப்படியாகப் பொழிந்த மழையானது சரயுவில் எப்படி வெள்ளமாக வந்தது என்று அடுத்த ஆறு பாடல்களில் வர்ணிக்கிறார். நதியை வைத்துக் குறிஞ்சி, பாலை, முல்லை மருதத் திணைகளைப் பற்றியும் கடைசியில் திணை மயக்கமாக சரயு நதி ஒரு திணையை மற்றொரு திணையாக எப்படி உரு மாற்றுகிறது என்று கவி வடித்திருக்கும் கம்பனைப் பார்த்து நம்மை மலைக்க வைக்கும் சில பாடல்களைத் தருகிறேன். எத்திணையில் வாழ்ந்தாளும் அத்திணை ”மக்கள்” இன்னவாறு செய்தார்கள் என்று எழுதாமல், கொடிச்சியர், எயினர், ஆயர், மள்ளர் என்று முறையே குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம் என்று அந்தந்த நிலத்து மக்களை ரகம் பிரித்து எழுதியிருக்கிறார். மலையில் பிறந்த சரயுவின் நறுமணம் பற்றி கம்பர் எழுதியிருக்கும் ஒரு பாடல் நம்கவனத்தை சரேலென்று ஈர்க்கிறது. (எல்லாப் பாடலும் இழுத்தாலும் இதைப் பிரத்யேகமாகப் பார்ப்போம்)
கொடிச்சியர் இடித்த சுண்ணம்,
    குங்குமம், கோட்டம், ஏலம்,
நடுக்கு உறு சந்தம், சிந்தூரத்தொடு
    நரந்தம், நாகம்,
கடுக்கை, ஆர், வேங்கை, கோங்கு, பச்சிலை,
    கண்டில்வெண்ணெய்,
அடுக்கலின் அடுத்த தீம் தேன்,
    அகிலொடு நாறும் அன்றே.

குறிஞ்சி நில மகளிர் பூசிக்கொள்வதற்கு இடித்த வாசனைப் பொடியாகவும் (சுண்ணம். இக்கால பயன்பாடாக வைரமுத்து அந்நியனில் எழுதிய ”ஐயங்காரு வீட்டு அழகே”வைக் கேட்கவும்), குங்குமம், கோஷ்டம் (கோட்டம்) எனும் வாசனாதி திரவியம், ஏலக்காய்(ஏலம்), பூசியவர்களுக்குக் நடுங்கச் செய்யும் குளிர்ச்சி தரும் சந்தனம்(சந்தம்), மலைகளில் மலரும் சிந்தூரம் என்கிற வெட்சிப் பூ, கஸ்தூரி (நரந்தம்), புன்னை (நாகம்), கொன்றைப் பூ(கடுக்கை), அத்திப்பூ, வேங்கைப் பூ, கோங்கு, பச்சிலைகள், கண்டில் வெண்ணெய் எனப்படும் ஒரு பூண்டு வகையறா (பெருஞ்சீரகம் போலவாம்) அப்புறம் மலைச்சாரலிலிருந்து அடித்துக் கொண்டுவரப்பட்ட சுவைமிகுந்த தேனும் அகில் கட்டைகளோடும் வெள்ள நீர் கரை புரண்டு வருவதால் சரயு நறுமணம் வீசுகிறதாம்.

கூவத்தின் நறுமணத்தை முகர்ந்து கவி எழுத இப்போது ஒரு சென்னைக் கம்பன் இங்கில்லை என்று இதைப் படிக்கும் உங்களது ஆதங்கம் புரிகிறது.

இதுபோல சரயு நதியின் வெள்ளப் பெருக்கை ஆற்றுப்படலம் முழுவதும் பேசியிருக்கிறார் கம்பர். அந்நதியின் வெள்ளப் பிரவாகத்தைப் பற்றிச் சொல்லும் ஒரு அற்புதமான பாட்டோடு இந்த ஆற்றுப்படலத்தை முடித்துக்கொண்டு அடுத்து 61 பாடல்கள் அடங்கிய நாட்டுப் படலத்துக்குச் செல்லலாம்.
முல்லையைக் குறிஞ்சி ஆக்கி,
    மருதத்தை முல்லை ஆக்கிப்
புல்லிய நெய்தல் தன்னைப்
    பொரு அரு மருதம் ஆக்கி,
எல்லை இல் பொருள்கள்
    எல்லாம் இடை தடுமாறும் நீரால்
செல் உறு கதியில் செல்லும்
    வினை எனச் சென்றது அன்றே.

ஒரு திணையை மற்றொரு திணையாக மாற்றும் வல்லமை படைத்தது சரயு என்கிற அர்த்தத்தில் இதை எழுதினாலும் கடைசி ஈரடியில் ஒரு ஒப்பற்ற தத்துவத்தை இப்பாடலின் மூலம் நம்முன் வைக்கிறான் கம்பன். குறிஞ்சியில் புறப்பட்ட சரயுவின் வெள்ள நீரானது குறிஞ்சி நிலத்துப் பொருட்களைக் கொண்டு வந்து முல்லையில் சேர்த்தது பின்னர் முல்லையில் அடித்துவரப்பட்ட பொருட்களினால் மருதத்தை முல்லையாக்கியது இறுதியாக கடலும் கடல் சார்ந்த இடமான நெய்தலை மருதமாக்கியதாம். மருதநிலத்தில் வாழ்ந்தவனான கம்பன் பொருஅரு(ஒப்பற்ற) என்று தன்நிலமான மருதத்தை வர்ணிக்கிறான். புல்லிய(இழிந்த) x பொருஅரு(ஒப்பற்ற). நெய்தல் புல்லியது. மருதம் பொருஅருவானது. இப்படி ஒரு திணை மற்றொரு திணையாக உருமாறுவது திணை மயக்கம் என்ற வகையறாவில் அடங்குகிறது.

ஒவ்வொரு நிலமும் பிற நிலத்தின் தன்மையால் நிலைமாறுவது போல ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு பிறவியிலும் அவன் செய்த தீவினை நல்வினைகளுக்கேற்ப புண்ணியங்களும் பாபங்களும் பிறவிதோறும் தவறாது அடைந்து அவனைத் தடுமாறச் செய்கிறது என்கிற  தத்துவத்தை இந்த எடுத்துக்காட்டின் மூலமாக கம்பன் விளக்குகிறான்

சரயு ”பார் கிழிய நீண்ட”து என்று அதன் பிரம்மாண்டத்தை ஒரு பாடலிலும், மதம் ஒன்றே என்பதற்கு சான்றாகவும் சரயுவின் வெள்ளப்பெருக்கை பரம்பொருளாகப் பாவித்து “பல்பெரும் சமயம் சொல்லும் (பரம்)பொருளும் போல் பரந்தது அன்றே” என்று இமயத்தில் பிறந்து(கல்லிடைப் பிறந்து) கடலில் சேர்ந்த தண்ணீரானது(கடலிடைக் கலந்த நீத்தம்) தான் வரும் வழிகளில் குளமாக, குட்டையாக, வாய்க்காலாக, ஏரியாக பரவிக் கிடக்கிறது.

இப்படி பல வகைகளாகப் பரவிக்கிடப்பதெல்லாம் பல மதங்களாகவும், பல சாதிகளாவும், இனங்களாகவும், பல ரூபத்திலும், பல பெயர்களில் வழங்கப்படுகிறதென்றும் கடைசியில் அனைத்தும் பரம்பொருளைத்தான் குறிக்கின்றன என்பதற்கும் உவமையாகச் சொல்கிறான். சமயசார்பற்ற கம்பன் என்ற பொருளில் ஒரு மணி சொற்பொழிவாளர்கள் பேசுவதற்கு ஏற்ற இடம் இது. ஆற்றுப்படலத்தின் கடைசிப் பாடலில் சரயு நதியானது அந்நாட்டு மக்களுக்கு உயிருக்கு இணையாக உள்ளது என்று நிறைவாக எழுதி மகிழ்கிறான்.

இப்பத்தியில் எழுதியது போக எனக்குப் பிடித்தச் சில சொற்பிரயோகங்களை எ.பி.சொ என்று கொசுறு போலப் பதிவின் கடைசியில் தரலாம் என்று விருப்பம்.

எ.பி.சொ: அகில் சேறு - சந்தனக் குழம்பு, புள்ளி மால் வரை - பெருமையுடைய இமயம் வரை, உரவுநீர் நிலத்து ஓங்கும் உயிர்க்கெலாம் - கடல்சூழ்ந்த நிலத்து உயிர்கலுக்கெல்லாம், மறிவிழி ஆயர்மாதர் - மான்விழி ஆயர்குலப் பெண்கள், சேத்த நீர்த் திவலை - சிவந்த நீர்த் துளி.

#இத்தோடு ஆற்றுப்படலம் முற்றிற்று. ”கம்பராமாயணம் ஃபார் டம்மீஸ்” என்கிற ரீதியில் எழுதிவருகிறேன். என்னுடைய புரிதலுக்கேற்ப இந்த எழுத்து அமைந்திருக்கிறது. கம்பனைப் படிக்கவேண்டும் என்ற உந்துதல் உள்ளவர்கள், பேரறிஞர்களின் உரைகளைப் படிப்பதற்கு முன்னர் ஒரு சாதாரண ஆரம்பப் புரட்டலுக்கு இதைப் படிக்கலாம்.

தொடர்புடைய சுட்டிகள்.
இசையறியும் பறவை.
பாற்கடலை நக்கிக் குடிக்கும் பூனை

 

15 comments:

sury siva said...

ஆர்.வி.எஸ் சாருக்கு என்ன ஆச்சுன்னு தெரியல்லையே !!
அடேங்கப்பா !! அடேங்கப்பா !!!

நீறு, ஆறு, சேரு, வீறு அப்படின்னு
நில்லாது ஓரிடத்தில் சிலம்பாட்டம் செய்யறாரு !!


கல்லாத எங்களுக்கும் கம்பன் கவி சொல்லுறாரு.
கூவத்தைப் பாடுங்க என கூக்குரலும் இடறாரு !!

அம்புட்டும் அதிரசமுங்கோ !
அதி ரசமுங்கோ !!

தீபாவளித் திரு நாள் லே ஏதேனும் விசேஷமா ?
திடீரென ஒரு வெளிச்சம் உள்ளே வந்திருக்கு !!!!

யாருனாச்சும் பாட்டி அம்மா வந்து த்ருஷ்டி சுத்திப்போடுங்க ...

சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in

தக்குடு said...

இந்த மன்னார்குடிகாராளுக்கு கம்பராமாயணம் எழுதர்தா இருந்தாலும் திருனவேலிலேந்து தான் கடவுள் வாழ்த்தை ஆரம்பம் பண்ணுவா! நல்ல தொடக்கம்! தொடர்ந்து வர முயற்சி செய்கிறேன் மைனரே! :)

Thozhirkalam Channel said...

உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

மிக வேகமான திரட்டி
http://otti.makkalsanthai.com

பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

RVS said...

@sury Siva
தாத்தாவுக்கு இந்தப் பேரனின் நமஸ்காரங்கள்.

திடீர்னு இப்படி ஆகிவிட்டது. அடுத்தடுத்த பதிவுகளில் இன்னமும் முயன்று எழுதலாம் என்று விருப்பம். பகவானின் அனுக்கிரகம் வேண்டும்.

நன்றி. :-)

RVS said...

@தக்குடு

நன்றி க.கா.ம. எல்லோரும் வருகிற மாதிரி எழுதப் பார்க்கிறேன். :-)

அப்பாதுரை said...

'பார் கிழிய நீண்டது' - நினைக்கும் பொழுதெல்லாம் சிலிர்க்க வைக்கும் இன்னொரு கம்பன் சொல்லாட்சி. இது வரை அறியாதது - நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

சரயு ”பார் கிழிய நீண்ட”து என்று அதன் பிரம்மாண்டத்தை ஒரு பாடலிலும், மதம் ஒன்றே என்பதற்கு சான்றாகவும் சரயுவின் வெள்ளப்பெருக்கை பரம்பொருளாகப் பாவித்து “பல்பெரும் சமயம் சொல்லும் (பரம்)பொருளும் போல் பரந்தது அன்றே” என்று இமயத்தில் பிறந்து(கல்லிடைப் பிறந்து) கடலில் சேர்ந்த தண்ணீரானது(கடலிடைக் கலந்த நீத்தம்) தான் வரும் வழிகளில் குளமாக, குட்டையாக, வாய்க்காலாக, ஏரியாக பரவிக் கிடக்கிறது. ../

அருமையான சொல்லாட்சியுடன் அற்புதமான படைப்பு !

RVS said...

@அப்பாதுரை
நன்றி சார்!

RVS said...
This comment has been removed by the author.
RVS said...

@இராஜராஜேஸ்வரி
நன்றிங்க மேடம். கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும் என்பார்கள். ஏதோ நானும் எழுதுகிறேன்.

மோகன்ஜி said...

ஆர அமர படிச்சேன் ஆர்.வீ.எஸ்! கம்பனை ரசிக்க ஒரு ஆயுசு போதாது.
மிக எளிமையாக சொல்கிறீர்கள்.. தொடருங்கள்.. உன்னத முயற்சி

RVS said...

@மோகன்ஜி
அண்ணா! வாழ்த்துக்கு நன்றி. ரொம்பவும் விரும்பிப் படிக்கிறேன். எனக்குத் தோன்றுவதை அப்படியே எழுதுகிறேன். ஊக்கத்திற்கு இன்னொரு நன்றி. :-)

மாதேவி said...

இலகுவாக சுவைக்கத் தந்திருக்கின்றீர்கள்.

RVS said...

@மாதேவி
நன்றி. :-)

வெங்கட் நாகராஜ் said...

அசததறீங்க மைனரே...

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails