Monday, May 31, 2010

இங்கு கணவன்மார்கள் கிடைக்கும்

நான் ரசித்த ஜோக்:

சமீபத்தில் ஒரு ஊரில் ரிலையன்ஸ் ஃபிரெஷ் போல "கணவர்கள் ஃபிரெஷ்" என்ற சூப்பர் மார்கெட் ஸ்டோர் ஒன்றை திறந்தார்கள். அந்த ஐந்து மாடி கட்டிடத்தில் ஒவ்வொரு மாடியிலும் நிறைய கணவனாகும் அருகதை உள்ள ஆண்களை அலங்கரித்து வைத்து பெண்களை விட்டு சுயம்வரம் காணச் செய்தார்கள். மாடிகளின் தளம் மேல் செல்ல செல்ல நல்ல குணவான்கள் மற்றும் நிறைய நற்பண்புகள் வாய்க்கப் பெற்றவர்கள் நிரம்பியிருந்தார்கள். ஒரே ஒரு நிபந்தனை என்னவென்றால், மேலே மாடி ஏறி சென்றவர்கள் மீண்டும் கீழ் மாடியில் இருப்பவரை தேர்வு செய்ய முடியாது, இறங்கி வெளியே செல்ல வேண்டியதுதான்.


இரண்டு திருமணமாகாத பெண்குட்டிகள் நல்ல புருஷனை தேடிக் கண்டுகொள்வதற்காக அந்த அடுக்குமாடி விற்பனை கூடத்திற்கு சென்றார்கள். அவர்களின் ஐந்து மாடி அனுபவங்கள் கீழே...


முதல் மாடி:
கதவில் பலகையில் எழுதியிருந்த வாசகம்: "இந்த மாடியில் உள்ளவர்கள் வேலைக்கு செல்லும் மற்றும் குழந்தைகளை நேசிக்கும் ஆண்கள்" 
பெண்குட்டிகள்: "தேவலாம் குழந்தையை நேசித்து வேலைக்கு செல்லும் ஆண்கள் இருக்கிறார்கள், மேலே என்ன இருக்கிறது பார்க்கலாம்" என்று படியேறினார்கள் அப்பெண்கள்.


இரண்டாம் மாடி:
பலகை வாசகம்: "அழகான, குழந்தையை நேசிக்கும், நிறைய சம்பாதிக்கும் ஆண்கள்"
பெண்குட்டிகள்: "ம்...ம்... இன்னும் மேலே என்ன இருக்கிறது பார்க்கலாம்"

மூன்றாம் மாடி:
பலகை வாசகம்: "அழகான, குழந்தையை நேசிக்கும், நிறைய சம்பாதிக்கும், வீட்டு வேலை செய்யும் ஆண்கள்"
பெண்குட்டிகள்: "வாவ்... ரொம்ப ஆசையை தூண்டுதே... மேலே அடுத்த மாடியில் என்ன இருக்கு பார்க்கலாம்"

நான்காம் மாடி:
பலகை வாசகம்: "அழகான, குழந்தையை நேசிக்கும், நிறைய சம்பாதிக்கும், வீட்டு வேலை செய்யும், மன்மதக் கலை நன்றாக தெரிந்த ஆண்கள்"
பெண்குட்டிகள்: "ஐயோ... என்ன செய்யறதுன்னு தெரியலையே... இதற்க்கு மேலே ஐந்தாம் மாடியில் என்ன இருக்கும்ன்னு நினைச்சாலே... ஓஒ...ஆ ஆ....." 
என்று கூச்சலிட்டு சந்தோஷத்தின் உச்சக்கட்டங்களில்  படிகளில் ஏறி மேலே ஐந்தாம் மாடிக்கு ஓடினார்கள்.

ஐந்தாம் மாடி:
பலகை வாசகம்: "உங்களை திருப்திப் படுத்த முடியவே முடியாது என்பதை நிரூபணம் செய்வதற்க்காக இந்த மாடி காலியாக உள்ளது. உங்களது இடது கைப் பக்கம் வெளியே செல்லும் வழி உள்ளது. தயவு செய்து இடத்தை காலி செய்யவும்"

எப்புடி?

Thursday, May 27, 2010

அ.க-யிலிருந்து வனிதாவிற்கு....

"ஷ்ஷ்ஷ்.... டும்.. .ஷ்ஷ்ஷ்.... டும். டும் ..." என்று வானவேடிக்கை துவங்கியதற்கான அறிகுறிகள் தென்பட்டன.  பொதுவாக பத்து மணிக்கு ஊரையே இருளாக்கி வேறு ஃபேஸ் மாற்றி வெளிச்சத்துக்கு கொண்டுவரும் போதுதான் வெடிச் சத்தம் கேட்க ஆரம்பிக்கும். ஆனால் இன்று ஒன்பதரை "கணேசா ரோடுவேஸ்" பஸ் ஸ்டாண்ட் போகும்போதே  வேட்டுப் போடத் துவங்கிவிட்டார்கள். காய்ந்துகொண்டிருந்த முழு  நிலவை மூடி வானம் கருத்திருந்தது காரணமாயிருக்கலாம். வெங்காயத்துடன் தயிர் சாதம் சாப்பிட்டு வீட்டு வாசல் படியில் தேமேன்னு உட்கார்ந்து உள்ளே ஐந்து ஆறு பேர் பயணிக்கும் மங்கிய மஞ்சள் வெளிச்சம் உள்ள அரசு பஸ்களையும், தார்ப்பாலின் போர்த்தி நிறை மாதமாக சென்ற லாரிகளையும், காலையிலிருந்து மாலை வரை மேய்ந்ததை அசைப் போட்டு மெதுவாக ஒற்றையாகச் செல்லும் தங்கராசுக் கோனார் வீட்டு "லெட்சிமி"யையும் பார்த்த்துக்கொண்டிருந்தான் கார்த்திக். ஒரு உற்சாகபானம் அருந்திய பெருசு உடல் அலுப்பு நீங்க முழு "தாக"சாந்தி செய்துவிட்டு "டாய்... --------ஓளி உன்ன தூக்கி போட்டு மிதிக்காம விடமாட்டேன்டா. அம்மணமாக்கி அந்த இடத்தில மிதிக்கலை... வச்சுக்கரண்டா உன்ன... -------மவனே" என்று எதிரியின் அம்மாவை சகட்டுமேனிக்கு வம்பிகிழுத்து திட்டி, காற்றில் ஆள்காட்டி விரலை "கொன்னுடுவேன்" காட்டி ஆட்டி, வேஷ்டி கொண்டு ரோடு பெருக்கி தெருவின் நிசப்தத்தை கிழித்தபடி சென்றது. காலையில் பேசும்போதே "டேய்.. ராத்திரி திருவிழாவுக்கு நாம போறோம்.. ரெடியாறு.." என்று கண்ணடித்து சொன்னான் சிவா.
 
"யே. ரெடியாடி..." என்று உரக்க பக்கத்து வீட்டு ஈஸ்வரியை கூப்பிட்ட அங்கயர்க்கரசி பச்சைப் பாவாடையும், சிகப்பு தாவணியுமாய் கோயிலுக்கு போக ரெடியான போதுதான் தெரிந்தது போன பாராவின் சிவாவின் திட்டம். கொஞ்ச நாட்களாக அ.க வீட்டிற்கு முன்னால் சிவாவின் சைக்கிள் தானாக மணியடித்து வளைந்து சென்றதன் மர்மம் கார்த்திக்கு இப்போது விளங்கியது. ஒரு ஐந்தாண்டு திட்டம் போல நேரம் காலம் வகுத்து கடமை தவறாமல் காலை மாலை இருவேளையும் கருத்தாக கார்த்தியை பார்க்க வருவான் சிவா. அ.க வீட்டிலிருந்து வலது கைபக்கம் ஈஸ்வரி, டீ கடை பாபு, ஆர்டிஸ்ட் இளங்கோ, ராஜி டீச்சர் வீட்டிற்கு அடுத்தது கார்த்திக்கின் வீடு. சிவா கார்த்திக்கை பார்க்க வரும்போதெல்லாம் வாசலில் நின்று தெருவின் இடது கோடியை கர்ம சிரத்தையாக கவனிக்கும் அ.க வை அப்போதெல்லாம் புரிந்து கொள்ள முடியவில்லை கார்த்திக்கால்.

"யானை... மணி.." பழமொழிபோல "ட்ரிங்..ட்ரிங்..." ஒலிக்க வந்தான் சிவா. தெருக்கோடி செல்லும் வரையில் கழுத்து வலிக்க திரும்பி திரும்பி பார்த்தபடி சென்றாள் அ.க. "டேய் ஏறுடா.. லேட் ஆயிடிச்சி..." என்று கால் ஊன்றி அரை வட்டம் அடித்து சைக்கிளை திருப்பி நிறுத்தினான். முன் பாரில் ஏறி உட்கார்ந்ததும் ஒரு வண்டிக்கும் மற்றொரு வண்டிக்கும் கடைபிடிக்க வேண்டிய பத்து மீட்டர் தூரத்தை அ.க விற்கும் மிதிவண்டிக்கும் இடையில் விட்டு நூல் பிடித்தாற்போல் தொடர்ந்தான். கோயில் திருவிழா நடக்கும் இடத்தை அடைவதற்குள் திரும்பி பார்ப்பதில் செஞ்சுரி போட்டது அ.க.

தேரடி சமீபத்தில் குறவன் குறத்தி டான்ஸ் நடந்து கொண்டிருந்தது. வளையமாக குழுமியிருந்த கும்பலில் விட்டத்தின் இரு ஓரங்களிலும் இருவரும் நின்று பார்வைகளை பரிமாறிக்கொண்டனர். கார்த்திக் சிவா குறவன் அ.க குறத்தி டான்ஸ் சிறப்பு பார்வையாளனாக பார்த்துக் கொண்டிருந்தான். திருவிழா கடைகளை ஒரு அலசல் அலசி பார்க்கும் போது கூடவே ஜிம்மி நாய் போல தொடர்ந்தான். கொஞ்ச நேரத்திர்க்கப்புறம் அலுத்த கார்த்திக் கடலை கடை முத்துவேல் தேவருடன் பேசிக்கொண்டே கொறிக்க ஆரம்பித்தான். திருவிழாவில் நிறைய சிவாக்களையும், அங்கயர்க்கரசிகளையும் உலவினார்கள். இன்னும் இவர்கள் பார்ப்பதற்கு ராட்சத சக்கரம், குடை ராட்டினம், மாயலோகம், மரணக் கிணறு என்று நிறைய இருந்தது.

பதினொன்னரை மணியளவில் தன் பேருலாக்களை முடித்துக் கொண்டு வந்தான் சிவா. சற்று தூரத்தில் ஒரு புடைசூழ மேற்படி முழு ரோடை அளந்து கொண்டு சென்றுக்கொண்டிருந்தது. என்ன நடந்தது என்று தெரியவில்லை, சிவா சோகத்தில் இருந்தான். இதற்க்கப்புறம் வாயை கிளறி எதையும் புண்ணாக்கி கொள்ள விருப்பம் இல்லாமல் மௌனமே உருவாக வந்தான் கார்த்திக். 

மறுநாள் சாயந்திரம் ஒரு வெள்ளை டெம்போ ட்ராவலர் கொள்ளாமல் ஒரு கும்பல் அ.க வீட்டிற்கு வந்திறங்கியது. நிலைமையின் தீவிரம் அறிந்து நிலை கொள்ளாமல் தவித்த கார்த்திக் சிவாவை பார்க்க சைக்கிளை விரட்டினான். வீட்டில் அமைதியாக உட்கார்ந்து காபி குடித்துக்கொண்டிருந்த சிவாவை வாசலுக்கு தனியாக அழைத்து "பொண்ணு பார்க்கறாங்க போலிருக்கு...." என்றான் கார்த்திக். "அதான் நேத்து ராத்திரியே தெரியுமே... ஆமாம், வடக்கு தெரு வனிதா எப்படிடா.." என்றான் சிவா எந்தவித சலமுமின்றி.
Image Courtesy: http://genevaetc.files.wordpress.com

Monday, May 24, 2010

காதலர்களின் குடை

எப்போது பார்த்தாலும் கோயில் குளங்களுக்கே அழைத்துச் சென்று குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் பாஷாண்டியாக்கி விட்டேன் என்ற ஒரு மாபெரும் மன்னிக்கமுடியாத(?) குற்றச்சாட்டிலிருந்து விடுதலை பெற இம்முறை கோடை விடுமுறைக்கு ஒரு குளு குளு இடத்திற்கு அழைத்துப் போவது என்று தீர்மானித்து ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவுதான் கொடைக்கானல். ஒரு தசாப்தத்திற்கு முன்னால் எனக்கு கால்கட்டுப் போட்டப் பின் 'தேன்'நிலவிற்காக சென்ற இடம். சென்ற முறை இருவர் இம்முறை குடும்ப 'இஸ்திரி' ஆகையால் நால்வர். கொடைக்கானல் கிளம்புகிறேன் என்று சொன்னதும், "அங்கே தண்ணியே இல்லையாம்.. கூடவே ஒரு 15 அல்லது 20 லிட்டர் தண்ணீர் கொண்டு போங்க" என்ற அட்வைஸ். ஆற்றிலிருந்து மணல் கொண்டு போக பெர்மிட் போல சென்னையிலிருந்து தண்ணீர் கொண்டுபோக இன்னும் கொஞ்ச நாளில் பெர்மிட் தேவைப்படலாம். "விண்ணின் கொடையே மழை, வீணாக்கலாமா இதை" என்று மஞ்சள் லாரியில் பச்சையில் எழுதி ரோடு முழுக்க கோலம் போட தண்ணீர் தெளித்து போகும் மெட்ரோ வாட்டர் சாமியையும், கங்கா காவிரி போன்ற புண்ணிய நதிகளை வேண்டிக்கொண்டும், வருணனிடம் சொல்லிக்கொண்டும் கொடைக்கு புறப்பட்டதில் சென்னைக்கு லைலாவை அனுப்பி வைத்தான். 

மலை ஏறும் போதே "எலி வால்" அருவி என்ற ஒன்றை காண்பித்தார்கள். சாளேஸ்வரம் போன்ற குறைபாடு இல்லாத கண்ணால் எவ்வளவு தூரம் பார்க்க முடியுமோ அந்த இடத்தில் சீசன் இல்லாத குற்றாலத்தில் விழுவது போல தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. அதைப்பார்த்து ரசிக்கும்(?) போது வயிற்றில் மணியடித்ததால் கட்டிக்கொண்டு போன இட்லியை சாப்பிட்டோம்.
monkey,kodai
அருகே மரத்தில் தம்பதி சமேதராக உட்கார்ந்திருந்த நம்முடைய முன்னோருக்கும் கொஞ்சம் ஈந்தோம். வீட்டு இட்டிலியின் சுவை மிகுதியால்(?) அந்த டப்பாவை கூர்ந்து நோக்கி கையை விட்டு விட்டு துலாவி தின்றது. தின்ற மகிழ்ச்சியில் இரண்டும் கொஞ்சி குலாவி மரம் விட்டு மரம் தாவி சென்று மறைந்தது. போனது போனபோ வகை குரங்கு போலும்.

அடுத்த ஸ்பாட் சில்வர் cascade. அதற்க்கு முன்னால் கம்பு காட்டி கப்பம் கட்ட சொன்னார்கள். கார், ஜீப், லாரி, பஸ் என்று ரக வாரியாக வித விதமான கட்டணங்கள். கட்டி வண்டியை ஓரமாக விட்டு cascade சென்றால் அதன் முன் ஒரே கூட்டம். படம் பிடிப்பதற்கு. தண்ணீர் மேலிருந்து விழுவதைப் பார்க்க ஆசைப்படும் நாம் இன்னும் கொஞ்ச வருடங்களில் தண்ணீரைப் பார்ப்பதற்கே ஆச்சர்யப்படும் சூழ்நிலை உருவாகலாம்.

silver
தோளில் மாட்டிய பையுடன் நிறைய புகைப்படக்காரர்கள் ஐம்பது கொடுத்தால் நம்மை பிடித்து பேப்பரில் அடைத்து தருகிறார்கள்.  அனேக சுற்றுலாவாசிகள் கையில் டிஜிட்டல் கேமரா விளையாடியதால் பு.காரர்கள் தொழில் கொஞ்சம் டல்லடிக்கிறது.

மேலேறி சென்று 'தி கொடை இன்டர்நேஷனல்' ஹோடேலில் செக்கின் செய்தோம்.  காலை ஒன்பது மணி செக்அவுட் டைம் என்றார்கள். சீசன், ஆஃப் சீசன் என்று ரூம்களுக்கு இரட்டை விலை முறை நிர்ணயம் செய்திருந்தார்கள். ஒரு நாள் தங்கவேண்டிய மூட்டை முடிச்சுகளை தங்கும் அறையில் வைத்துவிட்டு கொடை சுற்றக் கிளம்பினோம். முதலில் சென்றது 1889 ம் ஆண்டு ஆரம்பித்து  நூறாண்டுகளுக்கு மேல் பழம் பெருமை வாய்ந்த "சோலார் அப்செர்வேடரி". வெளியே வருகைப்பதிவு கையேட்டில் கையெழுத்திட்டு உள் சென்றோம். வானியல் சம்பந்தமான அனைத்துவித புகைப்படங்களும் கண்காட்சி போல வைத்திருந்தார்கள். ஆதி காலத்து 'ரூம் சைஸ்' டெலெஸ்கோப் ஒரு 12x14 ரூமில் காட்சிக்கு வைத்திருந்தார்கள். இரண்டு பேர் சிரமப்பட்டு அடியில் குனிந்து லென்ஸ் வழியாக எதிரில் வெள்ளை சுவற்றைப் பார்த்து "ஒன்னும் தெரியலை..." என்றார்கள். ரொம்ப கும்பல் இல்லை. 'உயிரியல்' ஆர்வத்தில் வரும் ஜோடிகளுக்கு வான் அறிவியலில் அவ்வளவு ஆர்வம் ஏற்பட வாய்ப்பு இல்லை தான்.

பைன் காடு வாசலில் குதிரைச் சவாரிக்கு இரண்டு கோவேறு போல இருந்ததை காட்டி கூப்பிட்டார்கள். சிறுவயதில் வேளாங்கன்னியில் ஏற்ப்பட்ட குதிரை 'சவாரி' அனுபவத்தால் 'உடுக்கை இழந்தவன் கைபோல' உடனே வேண்டாம் என்றேன். அதன் பின்னர் கலைஞானி உபயோகித்த 'குணா குகை'. குகை பார்ப்பதற்கு ஒருவருக்கு மூன்று ருபாய். பதினைந்து ரூபாய் வாங்கிக்கொண்டு ஆறுபேரை உள்ளே போகச் சொன்னது அங்கே கல்லாவில் உட்கார்ந்திருந்த ஒரு குண்டு அம்மணி. நான் "ஆறு" என்றேன். "தெரியும் போங்க போங்க... " என்றது. சென்றமுறை விசிட் செய்தபோது தடுப்புக் கம்பிகள் எல்லாம் இல்லை. ஒரு பத்து பதினைந்து பசங்கள் அங்கே உட்கார்ந்துகொண்டு "அவள் அப்படி ஒன்றும் அழகில்லை...." பாட்டு கோரஸ்ஸாக பாடினார்கள். யாரைப் பார்த்து என்றுதான் தெரியவில்லை. ஒரு குரங்கு குடும்பம் குட்டிகளுடன் அமர்ந்திருந்தது குகையை விட பார்வையாளர்களை அதிகம் ஈர்த்தது.
monkey,monkey,kodai,kodai
தீடீரென்று காமனுக்கு ஆசை வந்து காதலர்க்கு வசதியாக தேவலோகம் போல மூடுபனியால் நிறைத்து அந்த இடத்தை காதல் லோகமாக மாற்றினான். உடனடி குளிர் சீதோஷ்ணநிலை மாற்றத்தால் கையோடு கை கோர்த்த இளஞ்ஜோடிகள் தோளோடு தோள் சேர்ந்தார்கள்.

mist

தூண் பாறை வாசலில் விற்ற தொப்பி வாங்கி மகள்களுக்கு மாட்டி அடுத்த மிக முக்கிய வேலையான மதிய உணவுக்கு தயாரானோம். உணவு உண்டு முடித்து படகு சவாரி செய்வதற்கு லேக் சென்றோம். பகல் வேளையாதலால் "ஆகா இன்ப நிலாவினிலே...." பாடாத குறையாக சவாரி செய்தோம். ஒரு கூரை உள்ள இருபுறம் திறந்த படகில் இரு ஹனிமூன் கப்பில்ஸ் கால் நீட்டி அமர்ந்து, காதலன் தோளில் காதலி தலை சாய்ந்து பயணம் செய்தார்கள். அவன் முகத்தில் எந்தவிதமான உணர்ச்சியும் இல்லாமல் இருந்தது சற்று வித்தியாசமாக இருந்தது. ஒருக்கால் சம்சார சாகரத்தில் மாட்டிகொண்டது ஏரியில் வந்துதான் தெரிந்ததோ என்னமோ.  படகுக்கு பின்னர் பிரையன் பார்க். இரண்டு மூன்று ருபாய் இருந்தது பத்து பதினைந்தாக மாறியிருந்தது. எல்லா இடத்திலும் கேமரா/மொபைல் தனி சார்ஜ். பாட்டுக்கு ஆடும் நீர் வீழ்ச்சி என்று கண்ட மேனிக்கு அது இஷ்டத்திற்கு ஆடும் ஒரு செயற்கை தண்ணீர் உற்றுக்கு பாட்டு போட்டு விட்டிருந்தார்கள். ஒன்றும் ரசிக்கும்படியாக இல்லை.

மறுநாள் காலையில் எழுந்து குளித்து குறிஞ்சி ஆண்டவரைப் பார்த்துவிட்டு, செட்டியார் பார்க் சென்றோம். புலியுடன் உட்கார்ந்திருந்த பையன் அதோடு போட்டோ எடுக்க பத்து ருபாய் கேட்டான். புலி மேல் போட்ட இன்வெஸ்ட்மென்ட்-ஐ  எப்பவோ எடுத்திருப்பான் போல இருந்தது அந்த எப்போதும் பசிக்காத நிறம் வெளிறிப்போன பொம்மை புலி. மலர் மயில் ஒன்று பக்கத்தில் பார்க் ஆசாமிகளால் செயதுவைக்கப்படிருந்தது. அதோடு படம் பிடித்துக் கொண்டோம். பின்னர் 'கொகர்ஸ் வாக்' சென்று வாக்கினோம். ஐம்பது ரூபாய்க்கு ஐந்து நிமிடத்தில் நம்மை வரைந்து தரும் ஆர்டிஸ்ட் ஆள் இல்லாமல் ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். போட்டோ பிடித்து பீங்கான் கோப்பையில் பிரிண்ட் செய்து இருநூறு ரூபாய்க்கு ஹோட்டலில் வந்து தருகிறோம் என்றார்கள். நிறைய பிசினஸ்கள். அப்புறம் நேரே 'செத்த காலேஜ்' பார்த்து விட்டு கீழே இறங்கினோம்.

கொடையில் நம்மை இடித்த சில விஷயங்கள்.
  1. ஸ்ப்ரைட், கோக் போன்ற பானங்கள் M.R.P யை விட அதிக விலைக்கு விற்கப்பட்டன. தண்ணீர் பாட்டில்களும் இதற்க்கு விதிவிலக்கல்ல.
  2. கூட்டம் அதிகமாக இருப்பதால் உணவு விடுதிக்களில் ஒரு சரியான உபசரணை இல்லை.
  3. திடீரென்று விழித்துக்கொண்ட போக்குவரத்து போலீசார் நிறைய ஒன்வே செய்து அரை கிலோ மீட்டர் போக வேண்டிய தூரத்தை ஐந்து மைல் ஆக்கிவிட்டார்கள்
மலை இறங்க இறங்க தமிழகத்தின் ஒரே சீரான வெப்பமான 35 டிகிரி கொளுத்த ஆரம்பித்தது. ஜன்னல்களை ஏற்றி ஏஸி போட்டுக்கொண்டு மதுரை வந்து ஏஸி ரயிலேறி ஊர் வந்து சேர்ந்தோம்.

Sunday, May 23, 2010

மல்லி வாசமும், பச்சை மரகத மீனாட்சியும்

ஏழு மணிக்கு பாண்டியனில் இருந்து மதுரையில் இறங்கியவுடன் 'தி ஹிந்து' கொடுத்தார்கள். அபூர்வ சகோதரர்கள் அப்பு சைஸுக்கு அரை நிஜார்  சிறுவன் நடு வழியில் நின்றுகொண்டு விநியோகித்தான். இலவசமாதலால் ஆங்கிலம் கற்றோர், கல்லாதோர் என்று பாரபட்சமில்லாமல் எல்லோரும் மிட்டாய் வாங்குவது போல ஒரு காபி வாங்கிக் கக்கத்தில் வைத்துக் கொண்டார்கள். ஆட்டோ விஷயத்தில் மதுரைக்கும் சென்னைக்கும் பெரிய வித்தியாசமில்லை. ஸ்டேஷன் வாசலில் எல்லோரையும் வருந்தி அழைத்து சொற்ப தூரத்திற்கு கூட நிறைய கூலி கேட்டார்கள். டிரைவர் பக்கத்தில் ஆசனம் கொடுத்து நம்மை 'கிளி' ஆக்கினார்கள். "ஓரமா போங்கண்ணே..." என்று விடாமல் ரைட், லெஃப்ட் என்று 'கட்' அடித்து ஓட்டி பயணியை இருக்கையில் இருக்க விடாமல் செய்தார்கள். சாலையில் நடமாட்டம் இருக்கிறதோ இல்லையோ கவலைப்படாமல் அந்தக் கால 'சைக்கிளில் குச்சி ஐஸ் விற்கும்' ஹார்ன் அடித்துக் கொண்டே வண்டி ஓட்டினார்கள். சிக்னலில் ஓரமாகவே சென்று நிறுத்தக் கோட்டை கடந்து பாயத் தயாராகும் பார்முலா ஒன் பந்தயக் கார்போல் "டர்..டர்..." என்று உறுமிக்கொண்டே நின்றார்கள். சிகப்பிலேயே சிக்னலை கடந்தார்கள். கடை கன்னிகளை தவிர்த்து மீதம் எல்லாம் சென்னை போலவே இருந்தது. கோரிப்பாளையம் கடக்கும் போது அந்தப் பெயரில் வெளியான பட பதாகைகள் வழி நெடுகிலும் மதுரை மண்ணிற்கு வரவேற்றது.  பாண்டிய மன்னனின் பெருமை சேர்த்த மதுரைக்கு பெருமை சேர்க்க இப்போது நாங்களும்.

சற்று நேரம் பயணக் களைப்பு நீங்க உறவினர் வீட்டில் தூங்கி சிரமபரிகாரம் செய்துவிட்டு அன்னை மீனாட்சியை காண உறவினரின் அஞ்சனை மைந்தன் ( மாருதி 800 ) மீதேறி புறப்பட்டோம். சோனியாஜியின் 'அன்னை' பதத்தை மீனாட்சிக்கு உபயோகித்ததற்கு காங்கிரஸ்காரர்கள் மன்னிப்பார்களாக!. மாலை நேர ட்ராபிக் கொஞ்சம் கூடுதலாகவே இருந்தது. மல்லிகை ஸ்வீட்ஸ், ஸ்நாக்ஸ் என்று மதுரைப் புகழ் மல்லியின் பெயர்த்தாங்கி நின்ற சாப்பாட்டு கடைகளிலும் கூட்டம் அள்ளியது. ஸ்வாமி சந்நிதி கோபுர வாசல் வழியாக செல்ல நினைத்து அங்கு ஓரமாக வண்டி நிறுத்துவதற்கு கட்டணம் வாங்கி நிறுத்துகையில் காரிலிருந்து வெளி செல்லா வண்ணம் ஈரமும் துர்நாற்றமும்.ஐம்பது அடி தூரத்தில் இருந்த மதுரை மல்லியை தோற்கடித்து வீசிய மணம் அது. அருகே "நவீன கட்டண கழிப்பறை' இருந்தும் நம்மாட்கள் கோயில் ஓரத்திலேயே அற்ப சங்கைக்கு ஒதுங்கியிருந்தார்கள்.


ஒருவழியாக தரை ஈரத்தை மிதிக்காமல், 'கர்சீப்' முகமூடியணிந்து கோபுர வாசலை அடைந்தோம். கோபுர வாசலில் நிலைப்படி போன்ற ஒரு சட்டத்தின் வழியாக கோவில் உள்ளே பிரவேசிக்க சொன்னார்கள். வெடிகுண்டு பரிசோதனை. ஆண்களின் பேன்ட் பாக்கெட்டுகளில் சும்மாவானும் ஒருவர் ஒரு கையால் அமுக்கி துழாவி, மேற் சட்டையை தடவினார். மொபைல், கார் சாவி மற்றும் இன்னபிற பொருட்கள் இருந்தும் அது என்ன என்பதை அவர் பொருட்படுத்தவே இல்லை பெண்களுக்கு தனியாக திரைச் சீலை போட்டு மறைவாக பரிசோதித்தார்கள். திரைமறைவு பரிசோதனை எப்படி என்று தெரியவில்லை.

கையில் டிஜிட்டல் கமெராவுடன் அரைக் கால் சட்டையிலும், வெள்ளை மேல் சட்டையும் அணிந்து மிகப்பெரிய முக்குரிணி விநாயகரை 'பார்த்துக்' கொண்டிருந்த 'வெள்ளை'யர்களை தாண்டி மீனாட்சியின் சந்நிதிக்கு சென்றோம். "தர்ம" தரிசனம் இலங்கை எரித்த அனுமனின் வால் போல நீண்டு ஆதி அந்தம் காண இயலாதலால், "அதர்ம" தரிசனமான "சிறப்பு" கட்டண தரிசனத்திற்கு டிக்கெட் எடுத்தேன். எல்லோருக்கும் "ஒரே வழி - விரைவான தரிசனம்" என்ற கோட்பாட்டை எல்லா ஜன சந்தடி மிகுந்த கோயில்களில் கொண்டு வர இந்து சமய அறநிலையத்துறை கொண்டு வர ஏற்பாடு செய்யவேண்டும். இறைவன் சந்நிதியில் சாதா வேஷ்டியும் பட்டு வேஷ்டியும் சமம், காட்டன் புடவையும் பட்டு புடவையும் சமம். "குழந்தைகளுக்கு டிக்கெட் உண்டா?" என்று கேட்டதற்கு, "எல்லாருக்கும் தாண்ணே எடுக்கணும்" என்று பதில் வந்ததால் ஆறு எடுத்தேன். எடுத்துக் கொண்டு மு.பிள்ளையார் பக்கம் நின்ற ஆதிசேஷன் பத்து பன்னிரண்டு மடிப்பாக படுத்திருந்த கோலத்தில் இருந்த ஒரு வரிசையின் வாலில் போய் சேர்ந்து ஆ.சேஷனைப் பெரிதாக்கினோம். 

ஒரு மத்திம வயது ஜோடி பின்னால் முனகிக்கொண்டே வந்தது. "இன்னும் இப்படி போய்.... அப்படி போய்..... அப்புறம் அப்படி போய்.... இப்படி போய் ...." என்று வாயாலேயே வரிசையை வலம் வந்தது. கோயிலினுள் இருந்த வெக்கையில் எல்லோரும் கிட்டத்தட்ட புனித ஸ்நானம் செய்து விட்டோம். சந்நிதி நெருங்குகையில் ராட்சஷ காத்தாடி வைத்து வியர்வையையும் நாற்றத்தையும் போக்கினார்கள். அரை மணி பட்ட கஷ்டம் அரை கணத்தில் பரவசமாக மாறியது. மதுரை மல்லியின் அற்புத நறுமணம் கமழ புஷ்பாலங்கார சேவையில் பச்சை மரகதமாய் ஜொலித்தாள் மீனாட்சி. கண்ணார கண்டு ரசித்து வெளி வருகையில் அங்கு நின்றிருந்த ஒரு வயோதிகர், ஒரு ஐந்தாறு மயில்களின் மொத்த தோகைகளைக் கொண்டு தயாரித்த பெரிய மயிலறகு விசிறியால் எல்லோருக்கும் விசிறினார். என்னால் இயன்ற தொகை தோகை வீசிய அவருக்கு என் சிறிய பெண்ணால் அளிக்கப்பட்டது.

ஸ்வாமி சந்நிதியில் பொதுவாக கூட்டம் இருக்காது என்று பலபேர் சொல்லியும்,  அங்கும் சிறப்பு டிக்கெட் வாங்கினேன். ஆண்கள் காசு விஷயத்தில் 'கறார்' கிடையாது என்பதற்கு எடுத்துக்காட்டு போல ஸ்வாமி சந்நிதியில் ஆறு பேருக்கு இரண்டு டிக்கெட் டிஸ்கவுன்ட் போட்டு நான்கு போதும் குழந்தைக்கு கிடையாது என்று ஒரே கோவிலில் இரண்டு சந்நிதிகளுக்கு இரு வேறு விதிகள் போட்டிருந்தார்கள். சுந்தரேஸ்வரர் பட்டாடையுடன் 'பள பள' என்று 'குளு குளு' ஏசியில் வீற்றிருந்தார். திவ்ய தரிசனம்.

தரிசனம் முடிந்து ஸ்வாமி கோபுர வாசல் வழியேவே வெளியே வந்தோம். இன்னமும் வாசலில் வரும் பக்தர்களை நிறுத்தி குண்டு பரிசோதனைக்காக தடவிக்கொண்டிருந்தார்கள். நிறுத்தத்திலிருந்து காரை எடுக்கையில் மூலையில் ஓரமாக இன்னும் இரண்டு மூன்று பேர் நின்று ஈரம் பண்ணிக்கொண்டிருந்தார்கள். பொது வெளியில் சிறுநீர் கழிக்காமல் இருப்பது 'நாகரீகம்'. கழிப்பது 'அநாகரீகம்'. சுவற்றில் படம் வரைந்து கழிப்பது 'ஆநாகரீகம்' என்று கற்றதும் பெற்றதும்மில் நம்ம வாத்தியார் சுஜாதா எழுதியது ஞாபகத்திற்கு வந்தது.

(அடுத்து கொடை பற்றிய பதிவு...)

Saturday, May 22, 2010

இடைவேளைக்குப் பின்...

kodai mist



'கவர்ச்சிப் புயல்' லைலாவின் அரவணைப்பில் சென்னை சிக்கி திக்கித் திணறியபோது நான் மீனாட்சியின் காலடியில் தஞ்சம் அடைந்திருந்தேன். இந்த புயல் பெயர்சூட்டுதல் வைபவம் யாரால் எங்கு நடத்தப்படுகிறது என்று தெரியவில்லை. பெண்ணினத்தால் புண்பட்டவர்கள் ஒரு சங்கம் அமைத்து பெயரிடுகிறார்கள் என்று நினைக்கிறேன். சற்று மாற்றி அடுத்த புயலுக்கு நல்ல ஆண்மையான பெயரான 'ரவி' என்று வைக்கலாம். ஏனென்றால் அவருக்குத்தான் 'இளம் புயல்' என்று டைட்டிலில் போடுகிறார்கள்.

ஒரு வாரமாக ஒரு சிறிய சுற்றுலா. மீனாட்சியின் அரசாட்சியில் உள்ள மதுரை, மதுரைக்கு கல்யாணத்திற்கு வரும் கள்ளழகரின் அழகர்மலை, காலமேகப் பெருமாள் குடி கொண்டுள்ள திருமோகூர், கோடையில், இளம் ஜோடிகள் மற்றும் காதலர்களின் வாசஸ்தலமான  (கோ)கொடைக்கானல் என்று ஒரு ஜாலி ட்ரிப் மனைவி மக்களுடன் போய் வந்தேன். மேற்கண்ட படம் அடியேனின் 5MP மொபைல் கமெரா மூலம் 'mist' படிந்த கொடைக்கானலில் க்ளிக்கியது. அடிக்கடி இனி ப்ளாக் ரூபத்தில் தொந்தரவுகள் தொடரும். கண்டிப்பாக இப்போது போய் வந்த டூர் பற்றிய பயணக் கட்டுரையும் உண்டு.

Tuesday, May 11, 2010

ரப்பர் மேன்

தற்காலத்து நவீன சுந்தரிகள் காதுகளில் அணியும் அளவிற்கு ஒரு சிறிய வளையத்துக்குள் தலையை உள்ளே நுழைந்து வெளியே வந்துகொண்டிருந்தது அந்த சிறுமி. பக்கத்தில் மேளம் அடித்து,  தவழ்ந்து தரை மண்ணை எடுத்து வாயில் வைத்துக் கொள்ளும் ஒரு பாலகனை பார்த்துக்கொண்டிருந்தாள் அந்த சிரிக்காமலே கன்னங்களில் குழி விழுந்த அந்த நடுத்தர வயதுப் பெண்மணி. மக்களுக்காக சிரித்து, பவுடர் பூசி, பச்சை ஃபிரேம் போட்ட கருப்பு கண்ணாடி அணிந்து அந்த கூண்டு வண்டி கூம்பு ஸ்பீக்கர் பாடிய "கரிகாலன் காலைப் போல..."வுக்கு ஆடிக் கொண்டிருந்தான் அந்த சிகப்பு அரைக்கை சட்டை, கருப்பு பேன்ட் போட்ட குடும்ப தலைவன். இதுபோல் பாட்டுக்கு ஆடி, வளையத்துக்குள் நுழைந்து, கம்பி மேல் நடந்து வேடிக்கை காட்டுவோருக்கு ஐந்து, பத்து என்று தட்டுகளில் சில்லரை விழும். இப்போதெல்லாம் இவர்கள் யார் கண்ணிலாவது தென்படுகிறார்களா என்று தெரியவில்லை.


மக்கள் ஒரு குழுவாக, கூடாரமிட்டு சிங்கம், புலி, யானையுடன் சேர்ந்து கொண்டு இதைவிட கொஞ்சம் பெரிய கூட்டம் சேர்த்துக் கொண்டு உயரத்திலிருந்து குதித்து, சுற்றும் கட்டையை வாயில் கவ்வி சுற்றிக் கொண்டே மேலேறி சென்று,  சிங்கத்தின் வாயில் தலையை விட்டு எடுத்து, பெரிய யானையை ஒரு சிறிய முக்காலியில் உட்காரவைத்துக் காட்டினால் அதற்க்கு சர்க்கஸ் என்று பெயரிட்டு, கட்டணம் கட்டி, சீட்டு வாங்கி, பெஞ்சுகளில் அமர்ந்து கைதட்டி ரசிக்கிறோம். இந்த இரண்டு கலைகளுமே இப்போது கிட்டத்தட்ட வழக்கொழிந்து விட்ட நிலையில் இருக்கிறது. மேலே இருக்கும் படத்தில் அச்சு அசல் கஜமுகனே உட்கார்ந்திருப்பது போல் உள்ளது. ஆனால் அந்த காதருகில் தொங்கும் கவர்ச்சிக்கன்னி தான் லாஜிக்கை கொஞ்சம் இடிக்கிறாள்.

இது போல் ஒரு குரூப் ஆக இல்லாமல், தனி ஒருவராக கொஞ்சம் குதித்தும், அக்கம் பக்கம் இருக்கும் சுவர்களில், கதவுகளில், கட்டிடங்களில், கூரைகளில் ஏறியும் காண்பிக்கும் வித்தைக்கு பார்கூர்  (Parkour) என்று பெயர். இது கிட்டத்தட்ட குற்றாலம், வண்டலூர் மற்றும் "ஆட்ரா ராமா... ஆட்ரா ராமா..." என்று தெருத் தெருவாக குச்சி ஆட்டி காட்டப்படும் நமது மூதாதையர்கள் போல நிறைய செயல்கள் செய்யவேண்டும். வெளிநாடுகளில் அநேகம் பேர் இதை ஒரு கலையாக பயிற்சி பெறுகிறார்கள்.  மேலும் இதை பல நாடுகளில் இராணுவத்தில் ஒரு பயிற்சிமுறையாக கூட பின்பற்றுகிறார்கள். ஓடிக்கொண்டே இருக்கும் போது நடு நடுவே ஏற்படும் தடைகளை நம்ம கேப்டன் விஜயகாந்த் செய்வது போல பக்கச் சுவர்களில் காலை வைத்து ஏறி, குதித்து மீண்டும் ஓட வேண்டும். காலை பின்னால் தூக்கி பத்து பேரை அடிக்கெல்லாம் கூடாது. நாக்கை தொங்கப் போட்டு ஒரு அரை கிலோ கறி நம்மிடம் எடுக்க ஒரு நாய் துரத்தினால் நாமும் பார்கூர் 'உடுக்கை இழந்தவன் கைபோல' செய்வோம். தொடர்ந்து ஓடிக்கொண்டே தாண்டியும், ஏறியும் முன்னோக்கியும் சென்றுகொண்டே இருக்கவேண்டும். 

'சிவாஜி' ரஜினி கூட ஒரு காட்சியில் இதுபோல் ஓடிக்கொண்டே தன்னை துரத்துபவர்களை அடிப்பார். விஜய், அஜித், சரத், விஜயகாந்த், ரஜினிகாந்த் என்று பாகுபாடு இல்லாமல் நம்முடைய பல கோலிவுட் ஆதர்ஷங்கள் இந்த சாகச விளையாட்டுகளை/வித்தைகளை டூப் போட்டு நமக்கு வெள்ளித்திரையில் காட்டுகிறார்கள். இன்னும் சில 'நிஞ்சா' படங்களில் இந்த மாதிரி மரத்துக்கு மரம், கோபுரத்துக்கு கோபுரம் ஏறி "நரி ஊளையிட்டு' சண்டைபோடும் காட்சிகள் நிறைய பார்த்திருக்கிறோம். நம்ம 'மெகா பட்ஜெட்' ஷங்கர் கூட அந்நியனில் வரும் அந்த கராத்தே சண்டைக் காட்சியை இதுபோல் படம் பிடித்திருப்பார்.

இந்த பார்கூரை மிக அநாயாசமாக செய்யும் டேமியன் வால்டேர்ஸ்ன் ஒரு வீடியோ காட்சி கீழே உங்கள் பார்வைக்கு. இவர் சூப்பர் மேன், பேட் மேன், ஸ்பைடர் மேன் போல ரப்பர் மேன். உங்கள் பார்வைக்குன்னு சொன்னா அது உங்கள் பார்வைக்கு மட்டும் தான்  ஏன்னா, இந்த வீடியோவில் ஒரு இடத்தில் ஒரு எம்பு எம்பிக்  குதித்து கார் கதவை திறக்காமல் ஜன்னல் வழியாக காரினுள் உட்காருவார் பாருங்கள் அத்தனை அதி அற்புதமான சீன். நம்ம கோடம்பாக்கம் ஆசாமிகள் யார் கண்ணிலாவது பட்டுவிட்டது என்றால் நீங்கள் தொலைந்தீர்கள். அடுத்த எறா, நகல், ராமண்ணா, ஜிலேபி போன்ற படங்களில் அதைப் பார்த்து புண்பட்டு போவீர்கள். அதோடு மட்டுமல்லாமல் "சூரிய" தொலைக்காட்சி அதை விற்க எடுத்தால் மீண்டும் மீண்டும் அந்த காட்சியை நிமிடதிற்க்கொருதரம் திரும்ப திரும்ப போட்டு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவார்கள். ஜாக்கிரதை.


Saturday, May 8, 2010

கோடைகால சிறப்பு முகாம்கள்

சுட்டெரிக்கும் சூரியன் மிக ஷார்ப்பான கத்திரி, அக்னி நட்சத்திரம் என்று எது காட்டினாலும், நாம் அடங்குவதாக இல்லை. மூலைக்கு மூலை A4 சைஸ் பேப்பரில் ஆரம்பித்து அரசியல் கட்சிகளின் "வாழ்த்த வயதில்லை.. வணங்குகிறோம்" போன்ற ஆளுயர டிஜிட்டல் பேனர் அளவு வரை கீழ் கண்ட பயிற்சிகள் அல்லது முகாம்களின் விளம்பரங்கள். ப்ளாட்களில், பள்ளிகளில், திருமண மண்டபங்களில், சமுதாயக் கூடங்களில், மைதானங்களில், குளங்களில், குட்டைகளில், பலஅடுக்கு மாடி குடியிருப்புகளில், ஃபிட்னஸ் மையங்களில்,தெருக்கோடி பிள்ளையார் மற்றும் ஐயப்பன் கோயில்களில் என்று ஓரிடம் விடாமல் நடக்கும் இந்த சிறப்பு பயிற்சிகளின் பட்டியல் கீழே தரப்பட்டிருக்கிறது. பயிற்சிகளில் சேர்வதற்கான தகுதி அருகே தரப்பட்டுள்ளன.

1. வரையும் கலை - 27 மாதங்கள் நிரம்பி இருக்க வேண்டும் (அ) பென்சிலால் கிறுக்கும் திறமை (அ) பென்சிலையாவது பிடிக்கும் திறமை இருந்தால் அது முதல்...
2. கிரிக்கெட் - தேசிய அளவில் விளையாடிய வீரர் தரும் பயிற்சி (எப்போது, எங்கு, எந்த மாநிலத்திற்கு விளையாடினார் என்ற நதிமூலம் ரிஷிமூலம் எல்லாம் கேட்க கூடாது)
3. UC MAS மற்றும் ABACUS முறை கணிதப் பயிற்சிகள் - குண்டு மணி உருட்ட தெரியும் வயது முதல் 
4. நீச்சல் பயிற்சி -- மூன்று மாத குழந்தைபோல்  குப்புறப்படுத்து தரையில் நீஞ்சத் தெரிந்தால் (அ) கை கால் அசைக்க தெரிந்தால் போதும் 
5. கதகளி, குச்சிபுடி, ஒடிசி, பரதநாட்டியம், வெஸ்டர்ன், ஈஸ்டேர்ன், பாங்க்ரா, டிஸ்கோ போன்ற அனைத்து வித நடனங்கள் - இதுவும் பட்டியல் (4) போல, அது படுத்துக்கொண்டு இது நின்றுகொண்டு    
6. வாய்ப்பாட்டு, மிருதங்கம், வாரணம் ஆயிரமுக்கு அப்புறம் கிடார், வயலின் இன்னபிற Percussion வாத்தியங்கள் - சகலருக்கும், வாய் பேசமுடியாமல் இருந்தால் அவர்களுக்கு 'ஹம்மிங்' கற்றுத்தரப்படும்
7. கராத்தே, குங்க்ஃபு போன்ற தற்காப்பு பயிற்சி வகுப்புகள் - கையையும், காலையும் முன்னும் பின்னும் அசைத்து காற்றை குத்த தெரிந்தால் போதும், ஒரு கருப்பு பெல்ட் இலவசம்.
8. 'பேச்சு' ஆங்கில வகுப்புகள் -- வீடு பேருக்கும் வேலைக்காரி பாடும் ஆங்கில பாடல் கற்க தூண்டும் "பேசும்" ஆங்கில வகுப்புகள். - 18 புத்தகங்கள் வீட்டிற்கு அனுப்பப்படும் அல்லது 18 நாட்கள் மாலை அரை மணி நேரம். ஆங்கிலேயருக்கு இணையாக பேசலாம்.
9. இதுபோக, ஒன்பதாவது மற்றும் பதினொன்றாவது தேறியவர்களுக்கு அடுத்த வருட பொதுத் தேர்வுகளுக்காக சிறப்பு வகுப்புகள் பள்ளிக்கூடங்களிலேயே - காலை 8.30 முதல் மாலை 5.30 வரை. பள்ளி நூறு சதவீதம் வாங்க வேண்டுமே. ஒன்பதாவது மற்றும் பதினொன்று படிப்பவர்கள் தொடர்ந்து இரண்டு வருடம் படிக்கவேண்டும் இரண்டு நாட்கள் தவிர. அது சரஸ்வதி பூஜை நாள்.
10. யோகா - மிக மிக சூடான வியாபாரமாக போய்க்கொண்டு இருக்கும் ஒரு அதி சிறப்பு பயிற்சி. தரையில் சம்மணம் போட்டு நேராக உட்காரத் தெரியாமல் மரச்சேர் போட்டு உட்கார்ந்து இருப்பவருக்கு கூட 'குண்டலினி' சக்தி எழுப்பி தரப்படும்.

கொரில்லா பயிற்சியை தவிர, சகலமும் இந்த ஓரிரண்டு மாதங்களில் கற்றுத் தரப்படுகிறது. அப்பா அம்மா இருவரும் வேலைக்கு செல்வோர் என்றால், வீட்டில் இருக்கும் முட்டி தேய்ந்து போன பாட்டி தாத்தா பெண்டு கயண்டு விடுகிறது. பிள்ளைகளை பத்திரமாக கொண்டு போய் விட்டு வாசலிலே செக்யூரிட்டியுடன் பேசிக்கொண்டே ஒருமணி நேரமோ இரண்டு மணி நேரமோ நின்று விட்டு அழைத்து வரவேண்டும். பணிபுரியும் பெற்றோரைவிட, வீட்டில் இருக்கும் தாத்தா பாட்டிக்கு வேலை அதிகம். மேற்கண்ட பயிற்சிகள் நடக்கும் இடம், நடத்தப்படும் விதம், நடத்துபவர், பயிற்சியின் பாப்புலாரிட்டி, தற்போதைய டிரென்ட் (பக்கத்து வீட்டில் பாட்டு என்றால் நாமும் பாட்டு, கராத்தே என்றால் கராத்தே), பயிற்சி வகுப்பின் மாணவச் செல்வங்களின் எண்ணிக்கையை பொறுத்து 250 ரூ முதல் 2500 ரூ வரை "வசூல்" செய்யப்படும். பயிற்சியில் பங்கு பெற்றதற்கு ஒரு தடிப்பான அட்டை காகிதத்தில் ஒரு சான்றிதழ் வழங்கப்படும். மீண்டும் அடுத்த கோடையில் இந்த 'அதிகப்படியான' பயிற்சிகளை சந்திக்கும் வரை குழந்தைகளுக்கு ஒரு பெரிய "அப்பாடா....." என்றிருக்கும். தாத்தா பாட்டி உள்பட.

இது என்ன கோடை விடுமுறையா அல்லது கோடை பயிற்சிமுறையா? ஒரே ரணகளப் படுத்துறாங்கப்பா..  சொன்னது ரைட்டா, தப்பா?  பின்னூட்டத்துல சொல்லுங்க சார்.  நன்றி.

என்னத்த பண்ணி.. என்னத்த செஞ்சி..

இந்தப் பதிவின் தலைப்பு போன்று பல "என்னத்த" கண்ணையாக்களை அலுவலில், வீட்டு வாசலில், பல்பொருள் அங்காடியில், பஸ் ஸ்டாப்பில், பூங்காவில் மற்றும் பல இடங்களில் தங்கள் வாழ்வில் பலர் சந்தித்திருக்கலாம். எந்த ஒரு புது விஷயத்தையும்/முயற்ச்சியையும் (வேலை சம்பந்தமா, குறிப்பா அலுவலக வேலை சம்பந்தமா)  ஆரம்பிக்கும் போதே  அபசகுனமாக முடியாது என்றுதான் சொல்லுவார்கள். "முக்காலிக்கு நாலாவது கால் இருந்தா தேவலாம்", "நாங்கெல்லாம் அப்ப வேலை பார்க்கும்போது..." என்று ஏதாவது ஊன(நொண்டி?) சாக்கு சொல்லிகொண்டே இருப்பார்கள். சில பேர் "இல்ல... நான் என்ன சொல்றேன்னா..." அப்படின்னு "இல்ல.."ன்னு ஒரு பிள்ளையார் சுழி போட்டு தான் முதல்ல பேசவே ஆரம்பிப்பார்கள். சில அறவழி  (அறவழியா (அ) அராஜகமா) போராட்டங்களில் பணியாளர்கள் எல்லாம் உள்ளிருப்பு வேலைநிருத்தம்னு அலுவலகத்துள்ளேயே இருந்து கொண்டு வேலை செய்யாமல் இருப்பார்கள். அரசாங்கம், தனியார் என்று பாகுபாடு இல்லாமல் பாதி அலுவலகங்களில் நிதமுமே வேலை இருக்கும்போதே இதுமாதிரி ஒரு சீட் தேய்க்கிற கும்பல் இருக்கும்.

pull


மேலே இருக்கும் படத்தில் இருப்பது போல கட்டி இழுத்தாலும் வரவே வர மாட்டார்கள். இப்படி பொதுவா முடியாதுன்னு என்னவெல்லாம் சொல்வாங்கன்னு ரூம் போடாம அனுபவத்தில் கிடைத்த சில காரணங்களை கீழே பட்டியலிட்டிருக்கிறேன். காரணங்கள் சிகப்பில், நம்முடைய கமெண்டுகள் பச்சை வண்ணத்தில். இப்ப நா என்ன சொல்றேன்னா.. அட நிப்பாட்டுப்பா.. 

1. நான் எல்லாம் பண்ண ரெடியா இருக்கேன். ஆனா...
 எல்லாம் பண்ண ரெடியா இருந்தா அப்புறம் அந்த 'அ'னா, 'ஆ'வன்னால்லாம் எதுக்கு
2. இதுக்கு முன்னாடி நம்ம இதுமாதிரி செஞ்சதில்லையே...
 செத்தாதான் சுடுகாடு தெரியும்ன்னு சொல்லுவாங்க... எல்லாத்தையும்  முத மொதல்ல  செய்யும்போது அந்த வேலைக்கு அதுதான் முதல் தடவை.. புரியுற மாதிரி சொல்லிருக்கேன்னு நினைக்கிறேன்.
3. இது பார்க்க நல்லாயிருக்கு ஆனா வேலைக்காகுமா
 வேலைக்காகுமா இல்லையான்னு வேலை செய்து பார்த்தாதானே தெரியும்.
4. யாராவது நல்லா சொல்லிகொடுத்தா செய்யலாம் 
சொல்லி கொடுத்தப்பறம் நல்லா சொல்லி கொடுக்கலைன்னு சொல்லிடலாம்..
5. இதை இதுக்கு முன்னாடி யாரோ செஞ்சு குப்புற கவுந்துட்டாங்கலாமே.. 
நாம நிமிரமாட்டோமா என்ன? 
6. அய்யய்யோ.. இதுக்கு நிறைய மூளையை செலவு செய்யணுமே... 
சார். அப்ப அப்ப கொஞ்சம் செலவு செஞ்சாதான்  வரவு இருக்கும்
7. இதெல்லாம் ஹிட் ஆகும்ன்னு எனக்கு தோணலை...
இவரு பெரிய எக்ஸ்பெர்ட்டு.. எது ஹிட் ஆகும் ஆகாதுன்னு  முன்னாடியே தெரியும்.
8. இதை செய்யறத்துக்கான டூல்ஸ் நம்ம கிட்ட இல்லை....
டூல்ஸ் கொடுத்தா சூழ்நிலை சரியில்லை, சுற்றுப்புறம் சரியில்லை..ஏதாவது சொல்லிகிட்டே இருக்கலாம்...
9. ரொம்ப குழப்பமாயிருக்கே...செய்யலாமா.... 
இப்படி பார்த்தா நம்ம நாட்டில எதையுமே செய்ய முடியாது. கடன் வாங்கறத்துக்கு ஐம்பது இடத்துல கையெழுத்து போடறீங்களே... படிச்சா குழப்பமா இருக்கும்..கடன் வாங்காம இருக்கோமா? அட அத விடுங்க... நித்தி ஆசரமத்தில சேரும் போது செக்ஸ் உண்டுன்னு கையெழுத்து வாங்கியிருக்காரம்.. அத்தனை பேரும் படிச்சு பார்த்து தெளிவாதான் 'சேர்ந்'திருக்காங்களா?
10.எங்கிட்ட யாரும் இப்படின்னு சொல்லலையே..
இப்படி இல்லாமா எப்படி சொன்னாலும் செய்யப்போறதில்லை.. அப்புறம் என்ன...
11. இது என்னோட வேலை இல்லையே..
காலை மாலை இருவேளையும் டீ குடிக்கறது, மதியம் கேன்டீன்ல சாப்பிடறது, அதுக்கப்புறம் கொஞ்சமா தூங்கறது, வீட்டுக்கு கிளம்பி போறது இதெல்லாம்தான்  ஆபிஸ்ல முக்கியமான வேலை. 

வேலையே செய்யாமால் இருப்பது ஒரு கும்பல், இருக்கும் வேலையை தள்ளிப் போட்டுக்கொண்டே இருப்பது இன்னொரு கோஷ்டி. இதற்க்கு ஆங்கிலத்தில் procrastination என்பார்கள். இணைய உலாவில் ஒரு சுவாரஸ்யமான வழிமுறை அட்டவணை கிடைத்தது.  இதை வரைந்தவர் நிச்சயமாக ஒன்று இதனால் அவஸ்த்தைப்பட்டிருக்க வேண்டும் அல்லது அனுபவித்திருக்க வேண்டும், அவ்வளவு தத்ரூபமாக கொடுத்திருக்கிறார். அனைவரது கண்ணுக்கும், கருத்துரைக்கும்...
procrastinate

Friday, May 7, 2010

ரஹ்மானின் ராவணன்

நான் ஒன்றும் சுப்புடு இல்லை. பேரில் கொஞ்சம் சுப்ரமணியன் என்று வருகிறது அவ்வளவுதான். ஆனால் எங்காவது சங்கீதம் கேட்டால் கொஞ்சம் காது தீட்டி கூர்ந்து கேட்பவன். மிகப் புது வரவான, மணியின் "ராவணன்" பாடல்கள் கேட்டேன். சிவனுக்கு பிடித்த ராகம் என்று சம்பூர்ண ராமாயணம் ராவணன் சொன்னது "காம்போதி". எல்லோருக்கும் பிடித்த ராகத்தையும் பாடல்களையும் வழங்கியிருப்பது மணி+ரஹ்மான்+வைரமுத்து கூட்டணி. ஒவ்வொரு பாடலும் ஒரு ரகம். ஆஸ்காருக்கு பிறகு ரஹ்மான் உச்சத்தில் இருப்பதாக படுகிறது எனக்கு. வி.தா.வருவாயாவின் "ஹோ சோனா..." ராப்பிலிருந்து இன்னும் மீளாத மனதிற்கு அடுத்த போதை ராவணன் ரூபத்தில். படத் தலைப்பு ராவணன், ஆம், இசை உலகின் இசை ராட்சஷன் ரஹ்மான். எனக்கு பிடித்த சில வைர(முத்து) வரிகள், பாடல்கள் "சோனி மியூசிக்கில்" ஒரிஜினல் வாங்கி கேளுங்கள். 
raavanan
1. உசுரே போகுதே : கார்த்திக்
இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்த
என் புத்திக்குள்ளே தீப்பொறிய நீ வெதச்ச
அடி தேக்கு மரக்காடு பெருசுதான்
சின்ன தீக்குச்சி உசரம் சிறுசு தான்
ஒரு தீக்குச்சி விழுந்து
புடிக்குதடி...
கருந்தேக்கு மரக்காடு
வெடிக்குதடி.
 

2. கெடாக்கறி  : பென்னி தயாள், ரெஹைனா  
இவ கண்ணால பார்த்த சானகி அம்சம்
கட்டில்மேல பார்த்தா சூர்பனக வம்சம்

3. கள்வரே : ஸ்ரேயா கோஷல்
கள்வரே கள்வரே
கண்புகும் கள்வரே

வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள்
தமிழுக்கு தெரிகின்றதே...
வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள்
தங்களுக்கு தெரிகின்றதா...

4. காட்டு சிறுக்கி: ஷங்கர் மகாதேவன், அனுராத ஸ்ரீராம் 
காட்டு சிறுக்கி
காட்டு சிறுக்கி
யார் காட்டு சிறுக்கி இவ...

ஏர் கிழிச்ச தடத்து வழி
நீர் கிழிச்சு
போவது போல்
நீ கிழிச்ச கொட்டு வழி
நீளுதடி எம் பொழப்பு

வீரா, கோடு போட்டா என்று இன்னும் இரண்டு பாடல்கள் உண்டு. சிறுவர்களை நிச்சயம் கவரும்  "வீரா" என்ற பாடல், கோடு போட்டா ஒரு சண்டைப் பாடல் போல உள்ளது.

ரசித்துவிட்டு பின்னூட்டமிடுங்கள்...

Thursday, May 6, 2010

ப்ளாக் உலக மக்களுக்கு ஒரு நற்செய்தி


இது என்னுடைய ஐம்பதாவது பதிவு. அரை செஞ்சுரி அடித்திருப்பது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு விளையாட்டாக இந்த தீ.வி.பி ஆரம்பிக்கப்பட்டது. என்னுடைய அறுவை தாங்க முடியாமல் நண்பர் ரவியின் தூண்டுதலால் எழுத ஆரம்பித்த இந்த ப்ளாக் இன்று ஐம்பதை தொட்டிருக்கிறது. பால்ய காலங்களில் கிரிக்கெட் விளையாடும் போது ஐம்பது எடுத்தால் அன்று இரவு முழுவதும் உட்கார்ந்து எல்லோரையும் சொறி சொறி என்று சொறிவது போல இப்போது நான் ஒன்றும் செய்யப்போவதில்லை. இவ்வளவு நேரம் செய்தது அதுதான் என்று நீங்கள் சொல்வது புரிகிறது எனக்கு. சரி விஷயத்திற்கு வருகிறேன். இந்த ஐம்பதாவது பதிவை பாராட்டி திரி லோக சக்ரவர்த்தி இம்சை அரசன் 23-ம் புலிகேசி அறிவித்திருக்கும் சில பரிசில்களை வெல்வதற்கு கீழே அவருடைய அரசாணையை பதிப்பித்திருக்கிறேன். வாசியுங்கள்.

இம்சைபுரி
6/5/2010

ப்ளாக் உலக மக்களுக்கு ஒரு நற்செய்தி. இதுவரை நேருக்குநேர் எல்லோரையும் பேசியே இம்சித்து வந்த ஆர்.வி.எஸ் என்னும் இந்த அன்பர் ஒரு நண்பரின் தூண்டுதலால் வலை உலகத்தில் நுழைந்து அவரது  வீடு கடந்து, அலுவலகம் கடந்து, ஏரியா கடந்து, ஊர் கடந்து, மாநிலம் கடந்து, தேசம் கடந்து ஒரு தீவிரவாத செயலாக எல்லோரையும் எழுதியே துன்புறத்த ஆரம்பித்திருக்கிறார். ஆர்வக் கோளாறினால் ஐம்பது முறை இந்த செயலை செய்து மகிழ்ந்திருக்கிறார். நமது தேசத்தின் தலை சிறந்த பத்திரிக்கையாளரான ஒண்டிப் புலிக்கு அவர் அளித்த சிறப்பு பிரத்யேக பேட்டியில், நிற்கும் போதும், நடக்கும் போதும், மற்றவர் வாய் பார்க்கும் போதும், காலை நடையின் போதும், கடன்களை கழிக்கும் போதும், மூச்சு விடும் போதும், ப்ளாக் ப்ளாக் என்ற ஒரே சிந்தனையோடு ஒரு வித 'வெறிச்' செயலாக இதில் ஈடுபட்டதாகவும், பலபேர் இதை படித்து துன்புறுகையில் ஒரு விதமான உளமார்ந்த மகிழ்ச்சி தனக்கு ஏற்ப்பட்டதாகவும் தெரிவித்தார். அவரின் இந்நற்ச்செயலை பாராட்டி இந்த கீழ் கண்ட நிகழ்ச்சிகளையும் /திட்டங்களையும்/ பரிசில்களையும் அறிவித்து ஆணையிடுகிறேன்.

1: ஆர்.வி.எஸ்ஸை பாராட்டும் விதமாக எல்லா ஊரிலும் பால் காவடி மற்றும் பன்னீர் காவடி போன்றவற்றை எடுத்து அவரின் இந்த மனித குல மேம்பாட்டு சேவை தொடர பூரண ஆயுளுக்கு முருகப் பெருமானிடம் வேண்டிக் கொள்ள வேண்டும்.

2: எல்லா கள்ளுக் கடைகளிலும் ஐம்பது சத விலைக் கழிவுடன் சாராயத்துடன், 'அக்கா மாலா' மற்றும் 'கப்சி' போன்ற பானங்கள் இலவசமாக வழங்கப்படும்.

3: ஐம்பதில் ஆசை வரும் அனைவர்க்கும் அவரவர்கள் விருப்பத்திற்க்கேற்ப அந்த ஆசைகளை ஊர்ப் பஞ்சாயத்து தலைவர்கள் தீர்த்து வைப்பார்கள். அதிக எண்ணிக்கையில் இதை செயல்படுத்தி முடிக்கும் பஞ்சாயத்து தலைவர்களுக்கு "மாமா" பஞ்சாயத்து தலைவர்கள் என்று அழைக்கப்படுவார்கள். (மா மா என்றால் பெரிய பெரிய என்று அறியுமாறு அரசவைப் புலவர் பானபத்ர ஓணாண்டி தெரிவித்துள்ளார்)

4: ஆணிலும் பெண்ணிலும் ஐம்பது சதவீதமாக இருக்கும் அனைவருக்கும் மாதம் தலா ஐம்பது பொற்காசுகள் பரிசாக பெறுவார்கள். கஜானா காலியானால் அதற்க்கு நிர்வாகம் பொறுப்பல்ல.

5: ஊருக்கு வெளியே எச்சரிக்கை கொடியுடன் தீ.வி.பியில் இருக்கும் சிறுகதைகளை நாடகமாக நடித்துக் காட்டி கலைச் சேவை புரிய அனைவரையும் அன்போடு அழைக்கிறேன். நடிகர், நடிகைகளின் கலை விழாக்களுக்கு அவருக்கு நேரமில்லாததால் இந்த ஏற்பாடு என்று மங்குனி மந்திரி தெரிவித்தார்.

6: சிறைக்காவலில் இருக்கும் ஆயுள் கைதிகள், தீ.வி.பி ப்ளாக்-ஐ படித்து அதில் உள்ள சில நுணுக்கமான பதிவுகளை ( உதா: நம்பர் ப்ளாக்) படித்து புரிந்து கொண்டால் அவர்களுக்கு விடுதலை வழங்குமாறு உத்தரவிடுகிறேன்.

7: இருபத்து ஐந்து வயதே நிரம்பியிருக்கும் ஆர்.வி.எஸ் என்ற இளைஞன்,  ஐம்பதை அடையும் போது அவருக்கு ஐம்பதாயிரம் கோடி ரூபாய்கள் உதவித் தொகையாக அவரது இந்த கலைச் சேவையை பாராட்டி வழங்கப்படும் என்று அறிவிக்கிறேன். 

நன்றி.

ஒப்பம் ( 23-ம் புலிகேசி)

இதைப் படிக்கும் வாசகர்களும் இதே போல சிலபல பரிசுகளை அறிவித்து ஆர்.வி.எஸ்ஸை பாராட்டலாம், பின்னூட்டமாக...

கும்பமேளா = 'கும்பல்'மேளா

naga sadhu


என் இடப் பக்கம் லத்தியை சுழற்றியபடி ஒரு ஆக்ரோஷமான போலீஸ்காரர். 'மர்மஸ்தானம்' இங்குமங்கும் ஆடியபடி, ஒரு முழு நிர்வாண சாது, என் வலப்பக்கத்தில். இந்த அண்டசராசரத்தில்  எங்குமே காணக்கிடைக்காத விஷயம் இது. ஆனால் நான் இக்கணத்தில் நின்று கொண்டிருப்பது கும்பமேளாவின் ஷஹி ஸ்னான்  தினத்தில், ஹரித்வாரில். இங்கே ஆடையற்ற நிர்வாணம் ஒன்றும் 'அ'சாதாரணம் அல்ல.

ஹிந்துக்களின் முக்கியமான புனித நாளை எதிர்நோக்கி 1330 கிலோமீட்டர் தொலைவிலிருந்து வந்த நானும் எனது நண்பரும் பார்த்ததெல்லாம் மதம் விற்கும் வியாபாரிகளையும், புனித யாத்ரிகர்களையும், சாதுக்களையும், சன்யாசிகளையும், கூட்டத்தையும், ரகளை செய்யும் போலீசையும், பிச்சைக்காரர்களையும் தான். நண்பர் (நண்பி) தன் ஆன்மீக தாகத்தை தீர்துக் கொள்வதற்காக அமெரிக்காவிலிருந்து வந்த தங்க நிற பளபளப்பான கேசம் கொண்ட பெண்மணி (Blonde). ஒரு பெரிய நகரத்திலிருந்து ஒரு புதிய விசித்திர தேசம் வந்ததுபோல நான். லட்சோபலட்சம் மக்கள் தங்கள் பாபங்களை ஒரு தலை முழுக்கின் மூலம் தீர்த்துக் கொள்ளலாம் என்று நம்பி குழுமியிருந்த அந்த பிரதேசத்தில் ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட்ல் நாங்கள் இருவரும் ஒரு வேற்றுகிரகவாசி போல நின்றிருந்தோம். 

நாட்டின் அனைத்து மூலை முடுக்குகளிருந்தும் மக்கள் திரளாக வந்திருந்தார்கள். ஆண்கள் குர்த்தாவிலும், வேஷ்டியிலும்; பெண்கள் கண்ணைத் தவிர முகத்தையும் தலையையும் மறைக்கும் புடவையிலும் குவிந்திருந்தார்கள். இந்தப் புனித நிகழ்விற்க்காக பலர் நீண்ட நெடுநாட்களாகவும், சிலர் தங்கள் ஆயுள் முழுவதும் காத்திருந்து இப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். "எங்கள் பாவங்களை கழுவ இதுவே கடைசி வாய்ப்பு. அடுத்த முறை இது நிகழும் பொது நாங்கள் உயிரோடிருப்போமோ இல்லையோ" என்றார் ஒரு வயதான ராஜஸ்தானி பெரியவர்.

டில்லியிலிருந்து வரும் பேருந்துகள் ஹரித்வாருக்கு ஆறு கிலோமீட்டர் வெளியேவே எல்லோரையும் இறக்கி விட்டு திரும்பிச் சென்றது. அதி முக்கியஸ்தர்கள் மட்டுமே அவர்கள் வாகனங்களில் ஊரின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். எங்களுடைய தங்கும் விடுதிக்கு நாங்கள் ஆறு கி.மீ. நடந்தே சென்றோம். 

சென்றடைந்த அந்த மாலைப்  பொழுதில் நாங்கள் செல்லும் வழிகளை அடைத்து நின்ற கூடாரங்களையும்,  மத குருமார்களின் பதாகைகளையும், போஸ்டர்களையும் மட்டுமே காண நேர்ந்தது. என்னால் பாபா ராம்தேவையும், ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கரையும் மட்டுமே அடையாளம் காண முடிந்தது. இந்தியாவின் மிகப்பெரிய மனித சங்கமத்தை அனைவரும் தங்கள் தேவைக்கு பயன்படுத்திக்கொள்ள ஆசைப்பட்டது புரிந்தது. ஒரு ஜப்பானிய சந்நியாசி மக்களின் அனைத்து பாவங்களையும் களைந்து மறையச் செய்வேன் என்றும், இன்னும் ஏதோ ஒரு xxxபாபா (ஊர்பேர் தெரியாத பாபா) ஊட்டச்சத்து இல்லாது சூம்பிப்போன ஒரு ஆப்ரிக்க குழந்தைக்கு எதையோ ஊட்டிக்கொண்டிருந்ததை ஒரு பகுதியுலும், மற்றொரு பகுதியில் ஆதிவாசிகளிடம் உரை நிகழ்த்துவது போலவும் பதாகைகள் வழி நெடுகிலும் வைக்கப்பட்டு இருந்தன. ஆப்பரிக்க குழந்தைக்கு இவர் ஏன் ஊட்டுகிறார்?. இந்தியாவில் ஏழைகளே இல்லையா என்ன? எல்லா பாபாக்களும் டி.வியில் பிடியில் மாட்டும் போது இவர் சொல்வதை யார் கவனிக்கிறார்கள்? இது போன்ற அடிப்படை கேள்விகள் என் அடிமனதில் எழுந்துகொண்டே இருந்தது.

chilum

கூடாரங்களும் கொட்டகைகளும் ஒரேயடியாக சோர்வடைந்து  சலிப்புடன் தென்பட்டது. மக்கள் தங்கள் கூடாரங்களில் கட்டையை நீட்டி படுத்திருந்தார்கள். சில சாதுக்கள் குழுமியிருந்த மக்களிடம் தங்கள் சொல்வளத்தை காட்டிகொண்டிருந்தார்கள், மற்றும் சில பேர் தங்கள் 'சிலும்' பைப்புகளை துடைத்துக்கொண்டோ அல்லது வாயில் வைத்து ஆழ இழுத்து புகை பிடித்துக்கொண்டோ இருந்தனர். அடுத்த நாளுக்காக இரண்டு மணிநேர ஊர்சுற்றலுக்கு பிறகு எங்கள் விடுதிக்கு திரும்பினோம். திரும்பும் வழியில் நகரத்தின் பின்புற நுழைவாயில் வழியாக நகர மையத்தில் இருக்கும் பேருந்து நிலையத்திற்கு பஸ் வருவதைக் கண்டோம். வரும் பேருந்துகளில் எங்கு பார்த்தாலும் 'தொங்கும் மனிதர்கள்', கூரைகளில், ஜன்னல்களில், முன்னால், பின்னால், படிக்கட்டுகளில். இவர்கள் எப்படி இவ்வளவு மணிநேரம் பயணித்தார்கள்?

அதிகாலை புனிதக் குளியலுக்கு சீக்கிரமாக எழுவது என்று தீர்மானித்திருந்தோம். ஆனால் பயணக் களைப்பில் ( ஆறு மணி நேர பஸ் பயணம், டிராபிக் ஜாம் மற்றும் மாற்றுப் பாதைகளால் பதினான்கு மணிநேரம் பிடித்தது) தூங்கியதில், கூட்டத்தை நெருங்கும்போது மணி ஒன்பதை தாண்டியிருந்தது. அவசரம் அவசரமாக படித்துறைகளை நெருங்க நாங்கள் முற்ப்பட்டபோது புகழ்பெற்ற நாக சாதுக்களின் தரிசனம் கிடைத்தது. நாக சாதுக்கள் படித்துறைகளை கடக்கும் வரை மனித சாதுக்களாகிய நாம் காத்திருக்க வேண்டியதாயிற்று. உடம்பு முழுக்க சாம்பல் பூசி, சிவ மந்திரங்களை உரக்க சொல்லி கூட்டமாக அவர்கள் சென்றது ஒரு அச்சுறுத்தும் காட்சியாகவே இருந்தது. போலீஸ்காரர்  கூட சற்று ஒதுங்கியே தான் நின்றிருந்தார். முக்கால்வாசி பேருக்கு பெரிய தொந்தி இருந்தது. காடுகளிலும், மலைகளிலும் வாழும் இவர்களுக்கு எப்படி இவ்வளவு பெரிய 'பானை' தொந்தி?

naga sadhu

ஒரு கிராமவாசி தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கூட்டத்தை கிழித்து வெளியே சென்று "பீடி" என்று கத்தினார். அவரை சுற்றிய அந்த நாகாஸ் கூட்டம் புதியதாக பிரித்த அந்த பீடி பாக்கெட்டை சில நொடிகளில் காலி செய்தது. இன்னொரு பாக்கெட்டை அவர் பிரிக்க முயலும்போது அங்கே நின்றிருந்த போலீஸ்காரர் பிடித்து கூட்டத்திற்கு பின் தள்ளி பின்னால் போகச் சொன்னார். ஒரு சில நாகார்கள் மிகவும் ஏமாற்றமடைந்தார்கள்.

குளியல் படித்துறைகளை அடைவதற்கு சாமியார் கூட்டங்களை பின்பற்றுவதற்கு முயற்ச்சித்தோம். எங்கு பார்த்தாலும் போடப்பட்டிருந்த தடுப்பு வேலிகள் எங்களை வரிசையில் வரும்படி செய்தன.  நாக சாதுக்களை அடுத்து, 'போர்' சாமியார்கள் கூட்டம் ஒன்று வந்தது. கத்தி, வாள், ஈட்டி, அருவாள், சூலம் போன்றவற்றுடன். பதின்ம வயது கூட அரும்பாத ஒரு பையன் தனது மூன்றடி நீள வாளை சண்டையிடுவது போல காற்றில் இங்கும் அங்கும் சுழற்றியும், நீட்டியும், ஆட்டியபடியும் வந்து கொண்டிருந்தான். சில சமயங்களில் தரை தொடும் அவன் வாளிலிருந்து தீப்பொறி பறந்தது.
chimta


நாங்கள் அந்த சாமியார் கூட்டத்தை தொடர்ந்து செல்ல முற்படும் போது காவலர்களால் தடுக்கப்பட்டோம். "நீங்கள் அவர்கள் பின்னால் செல்லக்கூடாது" என்று தடுத்த காவலரை "ஏன்?" என்று கேட்டதற்கு,  "இந்த சாமியார்கள் வெளி ஆட்கள் அவர்களை பின் தொடர்வதை விரும்ப மாட்டார்கள். அப்படி எவரேனும் தொடர்ந்தால் கையில் இருக்கும் சிம்தாவினால்(மேலே இருக்கும் படத்தில் இருப்பது)  குத்தி விடுவார்கள்" என்றார். எனக்கு அந்த மூன்றடி கத்தி சின்னப் பையன் நினைவு வர தலை அசைத்து அவர் சொல்லுக்கு கட்டுப்பட்டேன். தாங்கள் முதன் முதலில் குளிப்பதற்கு ஒரு பெரிய போரையே நிகழ்த்திய சந்நியாசி கூட்டங்கள் பின்பு சில விசேஷமான இடங்களில் குளிப்பதற்காக ஆற்றில் முன்னேறி சென்றது.

kumbh mela
இப்போது ஒன்றும் செய்வதறியாது மாட்டிக்கொண்டோம். நிச்சயமாக பின்னால் செல்ல முடியாது. ஒரு மனிதக் கடல் எங்களை கொஞ்சம் கொஞ்சமாக முன்னால் தள்ளிக்கொண்டிருந்தது. காவலர்கள் எங்களை பின்னால் தள்ளிக் கொண்டிருந்தனர். லட்சம் பேருக்கு பத்து பேர் வீதமாக நின்றிருந்த அந்த போலீஸ்காரர்கள் தள்ளியும் பின் செல்லாத கூட்டத்தை பயமுறத்த சுழற்றிய லத்தி எங்கள் மேலும் பட்டது.

ஒரு முழுக்கு போடலாம் என்று சென்ற நாங்கள் எங்கள் முடிவை இப்போது மாற்றிக்கொண்டம். அத்தனை பேர் விழுந்து எழுந்த அந்த இடத்தில் தற்சமயம் குளிப்பது உசிதம் அல்ல என்று எண்ணினோம். ஏதேனும் ஆன்மிக அனுபம் கிடைத்ததா என்று வழிநெடுக யோசித்தவண்ணம் திரும்பிவிட்டோம். ஆன்மிகவாதிகளும் சாமியார்களும் ஏதோ கண்டெடுத்திருப்பார்கள், மும்பையில் வாழ்வதால் எங்களது ஆன்மாக்கள் செத்துவிட்டது போலும்.

எனது நண்பி காண்பித்த திக்கில் ஒரு இளம் பெண் தலையில் இருந்து தண்ணீர் சொட்ட சொட்ட, முற்றிலும் நனைந்த உடையில், அப்போதுதான் முங்கி எழுந்திருந்து தியானம் செய்துகொண்டிருந்தார். எனக்கென்னமோ இந்த இளம் பெண் ஒருவர் தான் அங்கே பிரார்த்தனை செய்பவர் போல் இருந்தது. மற்றவரெல்லாம் ஆற்றில் விழுந்து எழுந்தபின் புனித யாத்திரையையே மறந்துவிட்டிருந்தார்கள். துணிகளை தோய்ப்பதும், வம்பு பேசுவதும், ஓடி விளையாடும் பிள்ளைகளை துரத்தி பிடிப்பதும் அந்த இடமே ஒன்றும் புனிதமாக தோன்றவில்லை எனக்கு.

நீங்கள் நினைப்பது போல் நாங்கள் ஒன்றும் அவர்களை விட மேன்மையானவர்கள் இல்லைதான், அவர்களாவது புனித நீராடினார்கள்.

ஷஹி ஸ்னான் முடிந்த பதினான்கு மணிநேரம் கழித்து அடுத்த நாள் காலை எழுந்தவுடன், அதிவேகமாக செல்லும் அந்த நதி அவ்வளவு பேரின் அழுக்குகளையும், மாசுகளையும் இழுத்துச் சென்றிருக்கும் என்று தீர்மானம் செய்து, என் நண்பியிடம் "ஒரு முழுக்கு போட நீ தயாரா?" என்று கேட்டேன். அதை ஆமோதித்து என்னை ஆச்சர்யமடைய செய்தாள்.

இன்று நாங்கள் படித்துறைக்கு மிகச் சுலபமாக வந்தடைந்தோம். அந்த மிகக் குளிந்த நீரில் நான் குதித்து மூழ்கினேன். நீரின் அடிஆழம் செல்ல செல்ல என்னுடைய சிறுவயது பிரார்த்தனைகள் என் தலையை வெள்ளமாக நிரப்பியது. இது போன்று ஒரு புத்துணர்ச்சியை என் வாழ்நாளில் நான் கண்டதில்லை. என்னை அடியோடு பற்றி அவளுடன் இழுத்தாள் கங்கை மாதா. ஆற்றில் குறுக்கே இருந்த அந்த இரும்பு வளையங்களை இறுகப் பற்றிக்கொண்டேன்.

தங்கியிருந்த விடுதிக்கு திரும்புகையில் எனது பெற்றோருக்கு நான் கங்கா ஸ்நானம் செய்தது பற்றி குறுஞ்செய்தி அனுப்பினேன். "நீ உன்னுடைய பாவங்களையெல்லாம் கழுவி விட்டாய். இன்றுமுதல் உன் வாழ்க்கையில் ஒரு புதுக் கணக்கை துவக்கு" என்று என் தந்தை பதில் செய்தி அனுப்பினார்.

என்னைப் பற்றி நன்றாக தெரிந்தவர் என் தந்தை.

பின்குறிப்பு: மேற்கண்ட இந்த கும்பமேளா யாத்திரைக் குறிப்பு சமீபத்தில் வெளிவந்த "ஃபோர்ப்ஸ் இந்தியா" பத்திரிக்கையில், அபிஷேக் ரகுநாத் என்பவர் எழுதியது. கட்டுரைத் தலைப்பு "Just Watching". மிக அருமையான பயணக் கட்டுரை. நாமே நேரில் கங்கைக்கரை அருகே இருப்பது போல் இருந்தது.என்னுடைய ஆங்கில அறிவிர்க்கேற்பவும், புரிதலுக்கேற்பவும்  இந்த தமிழாக்கத்தை செய்திருக்கிறேன்.

Wednesday, May 5, 2010

தலைகீழ் தலைப்பு

நம்மூர்ல அழைப்பிதழ் பல டிசைன்ல அடிப்பாங்க.  டாக்டர்கள் கல்யாணம்னா முன்னாடி பென்சில் ஸ்கிரிப்ட்ல  பிள்ளையார் போட்டு கழுத்துல ஸ்தெதஸ் மாட்டி விடறது,  சுபமுஹுர்த்த பத்திரிக்கையை திறந்தவுடன் சுப்ரபாதம் பாடறது, காதணி விழாவிற்கு ஒற்றை வளையத்தை பத்திரிக்கை ஓரத்தில் கோர்த்து அனுப்புவது, அப்புறம் நம்ம பார்த்திபன் பட பூஜைக்கு கூப்பிடற மாதிரி வித்தியாசமா தாலி கொடுத்து கூப்பிடறது (படம்: பொண்டாட்டி தேவை) அப்படி இப்படின்னு ஒரு புதுமை பண்ண எல்லோரும் முயற்ச்சிப்பாங்க. கீழே இருக்குற படத்தில Typography பயன்படுத்தி நேர படிச்சாலும் சிரசாசனத்தில நின்னு படிச்சாலும் தலைப்பு தலைகீழா மாறாம வர்ற மாதிரி வடிவமைச்சிருக்காங்க. இது மேலிருந்து கீழ், கீழிருந்து மேல் ஒரே அர்த்தம் தரும் முயற்சி. 

thalaikeezh
 (மேலே படத்தை அழுத்தி பெரியதாக பார்க்கவும்) 

என்னுடைய பால்ய கால நண்பன் ஒருவன் சினிமாவில் கிராஸ் ஆங்கிளில் ஏதாவது காண்பித்தால் தலையை அதே டிகிரி அளவிற்கு சாய்த்துப் பக்கத்தில் இருப்பவரை பார்க்கவிடாமல் பார்ப்பான். அந்த அசௌகரியம் இந்த மேற்கண்ட படத்தில் இருக்காது.ஆங்கிலத்தில் Palindrome என்று ஒன்று உண்டு. இடமிருந்து வலம், வலமிருந்து இடம் படித்தாலும் ஒரே பொருள் தரும் வார்த்தைகளை பாலின்ரோம் என்பார்கள். உதாரணம் MADAM. தமிழில் அதுபோல் வரும் வார்த்தை "மாமா". மேலும் இதுபோல் தமிழில் உங்களுக்கு தெரிந்தவற்றை பின்னூட்டமாக தெரிவிக்கலாம்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails