Showing posts with label அப்பு சார். Show all posts
Showing posts with label அப்பு சார். Show all posts

Sunday, October 22, 2017

அப்பு சார்


கோதுமை ஹல்வா. பூசணிக்காய் அரைச்சுவிட்ட கூட்டு. தக்காளி சாத்தமுது. வாழக்காய் கறியமுது. திருக்கணமுது. மாஷாபூபம். வெண்ணைத்தாழி அன்று மத்தியானம் மன்னை வானமாமலை மடத்தில் சாப்பாடு. " நிச்சயம் வந்துடு....மிஸ் பண்ணாதே.. " என்று விஜய்யும் Vijay Rajagopalan கோபாலும் Rajagopalan Rengarajan அன்பு கலந்த உரிமையோடு அழைத்திருந்தார்கள். திவ்யபோஜனம். கோபாலனின் பிரசாதமாச்சே!!
"வெங்குட்டு... கோபாலகிருஷ்ணன் சார் பக்கத்துல மடத்துல உட்கார்ந்திருக்கார்.. பார்க்கணும்னியே..."
"கையலம்பிட்டு வந்துடறேன்... நீ அங்க இரு..." என்று கோபாலை அனுப்பிவிட்டு பின்னால் விரைந்தேன்.
கோபாலன் பிரசாதம்... கோபாலகிருஷ்ணன் சார்... ஸ்நேகிதன் கோபால்... பாராவுக்கு ஒரு கோபாலன்.... சரி...மேலே படியுங்கள்....
அறுபதாம் கல்யாணம் முடிந்த ஹால் போலிருந்தது மடம். ஓரத்தில் சுவற்றில் சாய்ந்திருந்த வாத்யாரைச் சுற்றி வேதம் படித்த மாணவர்கள் அரை வட்டமாய் அமர்ந்திருந்தார்கள். ஹாலின் நடுவில் நெற்றியை கோபிச் சந்தனம் அலங்கரிக்க விஸ்ராந்தியாக ஜெம்பகேச தீக்ஷிதருடன் கோல்டன் ஃப்ரேமில் காதில் கடுக்கன் பளபளக்க அமர்ந்திருந்தார். எதிரில் போய் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டேன்.
"யாருன்னு தெரியறதா?"
கண்களை இடுக்கிப் பார்த்தார்.
"தெரியலைப்பா...". அருகில் அமர்ந்திருந்த ஜெம்பகேசன் சாருக்கு தெரிந்துவிட்டது.
"ஹரித்ராநதி.... கீழ்கரை...." என்று துப்பு சொல்லத்தொடங்கியதும் அவருக்குள் கூகிள் மேப் navigation போல லொகேஷன் வந்துவிட்டது. இடுக்கிய கண்கள் விரிந்தது. அடி உதட்டை உள்ளுக்கிழுத்து “ம்...” என்று விஷமமாகச் சிரித்தேன்.
"ம்... அங்க யாரு?"
"நீங்கதான் எனக்கு அக்ஷராப்பியாசம் பண்ணி வச்சேள்.. ரேழில பித்தளை தாம்பாளத்துல நெல் பரப்பி... என் ஆள்காட்டி விரலைப் பிடிச்சு அ எழுதி....."
மடத்தின் ஓரத்தில் சலசலப்பு. வேதபாட சாலை வித்யார்த்திகள் குழுமி அமர்ந்திருந்த திக்கில் கண்ணைச் செலுத்தினேன்.
"பரீக்ஷை நடக்கறது..." என்றார் ஜெம்பகேசன் சார் என்னைப் பார்த்து. முறுவலித்தேன்.
அப்போது கிடைந்த அவகாசத்தில் நான் யாரென்று அப்பு சார் ஓரளவிற்கு ஊகித்திருந்தார். பாட்டி அப்பு சார் என்றுதான் கோபாலகிருஷ்ணன் சாரை அழைப்பாள். எங்கள் பள்ளியில் தமிழ் வாத்தியார். அப்பவே வெஸ்பா வைத்திருந்தார். நீலு அக்காவை கூப்பிடப் போகும் போது கையில் ராமாயணம் மகாபாரதம் என்று சம்ஸ்கிருதத்தில் புரட்டிக்கொண்டிருப்பார். இரு மொழியிலும் அபார புலமையுடைவர்.
"தெரிஞ்சுடுத்தா?"
"வயசாயிடுத்து... ஞாபகம் குறைஞ்சுடுத்து... அடையாளம் தெரியலையே... "
"பவானி டீச்சர்... நீலா டீச்சர்...." என்று என் கடைசி அஸ்திரத்தை எய்தேன்.
"ஆங்... நம்ம சின்னத்தம்பி... டேய்.... எப்படியிருக்கே?" என்று மின்னலாய்க் கேட்டு முதுகில் ஆதூரமாய்த் தட்டினார்.
அரைமணி பேசினார். சாரதா பாட்டியிலிருந்து என் அம்மா, அப்பா, அக்கா என்று சகலரையும் விஜாரித்தார். நிறைய சம்பவங்களை நினைவு கூர்ந்தார்.
"தம்பி... இப்போ கிரஹண பீடை... அது விட்டத்துக்கு ஸ்நானம் பண்ணனும்.. அப்பு சார் மங்கம்மா படித்துறை மதில் கட்டையிலேர்ந்து ஹரித்ராநதிக்குள்ளே டைவ் அடிச்சுட்டாரா பாருடா..ன்னு பாட்டி என்னைக் கேட்பா..." என்று என்னுடைய நினைவு கொக்கி போட்டதைச் சொன்னேன்.
"ஆமாமா.. உங்க பாட்டி ரொம்ப மடி ஆசாரம்.. குளத்துல குதிக்கும் ஜலம் மேலே தெளிச்சுடும்னு படிக்கட்டு ஓரத்துக்கு தள்ளி போவா... ஒனக்கு ஒண்ணு தெரியுமோ.. அப்போ...." என்று மீண்டும் கிழக்குத் தெரு கதைகள் பல சொன்னார். அவரது விவரிப்பைக் கண்டு என்னுடைய சின்னது "யப்பா.. தாவாங்கட்டையில கையை வச்சு... நடிச்செல்லாம் காமிக்கறார்..." என்றாள். சிரித்துக்கொண்டார்.
"சார்.. நமஸ்காரம் பண்றேன்..ஆசீர்வாதம் பண்ணுங்கோ... உங்களுக்கும் சேர்த்து பண்றேன்.." என்று ஜெம்பகேசன் சாரிடமும் சொல்லிக்கொண்டு குடும்ப சகிதம் விழுந்து வணங்கினேன்.
இன்று நானெழுதும் இந்த லவலேசம் தமிழ் அவர்கள் இட்ட பிச்சைதானே.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails