Showing posts with label மழை. Show all posts
Showing posts with label மழை. Show all posts

Monday, February 1, 2016

வடகிறுக்குப் பருவமழை

இப்போதான் இதை எழுத கை ஒழிஞ்சுது. 

மூன்று தினங்களுக்கு முன்னர் ஆஃபீஸில் உக்கிரமான வேலை. எட்டு மணி வாக்கில் வெளியே எட்டிப் பார்த்தால் கும்மிருட்டு. சாரல் திருவிழா மாதிரி மழை பிசுபிசுவென்று பூமியைக் கிச்சுக்கிச்சு மூட்டித் தரையிறங்கிக்கொண்டிருந்தது. உள்ளங்கைகளைப் பரபரவென்று தேய்த்துக் கன்னத்தில் வைத்து சூடுபடுத்திகொள்ளத் தூண்டும் ஜிலீர் சீதோஷணம். உள்ளுக்குள் மனசு பூத்திருந்தது. ”நாலு நாலரை மணி வாக்குல சரி போடு போட்டுச்சு...”. பேசிக்கொண்டே எங்கள் பேட்டையாட்கள் இரண்டு மூன்று பேரோடு எட்டரை மணிக்கு சேப்பாயியைக் கிளம்பினேன். 

டீஸல் முள் தரையைத் தொட்டிருந்ததால் சேப்பாயியின் வயிற்றுக்கு விருந்தளித்து அ. எஸ்டேட்டிலிருந்து பயணமானோம். எப்பாடு பட்டேணும் பூந்தமல்லி நெடுஞ்சாலையைப் பிடித்து கோயம்பேடு, அரும்பாக்கம், வடபழனி, அசோக் பில்லர், கத்திப்பாரா, நங்கை மார்க்கமாக நான் கூடடைய வேண்டும். நேர் வழி.

எரிபொருள் நிலையத்திலிருந்து வெளியே வந்த போதே ரோட்டோரங்களில் ஆங்காங்கே சலசலப்பு. சிற்றாறுகள் அடக்கமாக ஓடிக்கொண்டிருந்தன. 

“சாயங்காலம் நல்ல மழை... வானம் பொத்துக்கிட்டு ஊத்திச்சு...” என்று சத்யா சொல்லிக்கொண்டிருக்கும் போது சிற்றாறு இன்னும் நாலைந்து தோஸ்த் ஆறுகளோடு சங்கமித்து வற்றாத ஜீவநதி போல நடுரோட்டில் அலையடித்துக்கொண்டிருக்க முண்டா பனியனோடு கைலி கட்டிய ஒரு பரோபகாரி “லெப்ட்ல போங்க சார்...” என்று ஒரு குட்டிச் சந்தைக் காட்டினார். அவர் பின்னால் பாதாள சாக்கடைத் திறக்கப்பட்டு நம் தேசத்தவர்கள் ப்ரேக் டவுன் அடையாளமாகக் கையாளப்படும் மரக்கிளை இலைகளோடு செருகியிருந்தது. அக்கிளையின் நாற்புறமும் ஊற்று போல குபுகுபுவென்று தண்ணீர். கொஞ்சம் கறுப்புத் தண்ணீர். கறுப்பா தண்ணீ இருக்குமா? ம்.. சரி.. அது SKT. [கமெண்ட்டில் ”அதென்ன எஸ்கேடி?” என்று நீங்கள் ஆர்வமாகத் தலையை நீட்டுவதற்கு முன்னர் எஸ்ஸுக்கும் டீக்கும் அர்த்தம் சொல்லிவிடுகிறேன். S= ஸர்வ, T=தீர்த்தம், K= ? ]

காரின் இரண்டு பக்கமிருந்த ரியர் வ்யூ மிரரிலிருந்து இரண்டு விரற்கடை இடைவெளியில் இல்லங்களின் சுவர் முட்டும் சந்து. கீழே அரை சக்கரங்கள் மூழ்குமளவிற்கு ஜலம் இருக்கிறது என்று எதிரே கணுக்கால் வரை புடவையை உயர்த்திக்கொண்டு வந்த பெண்மணி வாயிலாக தெரிந்துகொள்ள முடிந்தது. இந்த சமுத்திரத்தில் மாட்டிக்கொள்ளக் கூடாது என்று அலறி ஆக்ஸிலை அழுத்தினால் பக்கவாட்டில் திறந்திருந்த ஜன்னலிலிருந்து ”மேல தண்ணி அடிச்சுட்டுப் போறாம் பாரு பேமானி..” என்று ஹஸ்கி வாய்ஸில் அர்ச்சனை செய்தால் கூட நமக்குக் கேட்டுவிடும். 

“முருகா காப்பாத்து..” என்று ஆண்டவன் மீது பாரத்தைப் போட்டு திரும்பிவிட்டேன். முன்னால் போன குட்டி யானை (டாட்டா ஏஸ்) தப்பாக முட்டிக்கொண்டு பிருஷ்ட பாகத்தை ஆட்டும் நிஜ குட்டியானை போல ஆட்டியாட்டி திரும்பிக்கொண்டிருந்தது. அதுவரை தண்ணீரில் காத்திருக்கும்போது தற்காலிக வெனிஸாக மாறியிருந்த அந்தத் தெருவில் வசிக்கும் ஒரு பொடியன் நேரே வீட்டுக்குள்ளிருந்து ஓடிவந்து, முகம் பிரகாசிக்க, நீல ட்ராயர் தூக்கிச் சர்வ சுதந்திரமாகப் பிஸ்ஸினான். அவன் பங்குக்கு 0.00000000000001 மடங்கு ரோட்டுத் தண்ணீரை உயர்த்தினான்.

இரண்டு லெப்ட், இரண்டு ரைட், ஒரு ஷ்ட்ரெயிட் என்று கார் ஸ்டியரிங் கார்ட் வீலாகச் சுழல தலைசுத்தும் அளவிற்கு சந்துகளுக்குள் சிந்துபாடிக்கொண்டிருக்கும் போது திரும்பவும் பூ.நெடுஞ்சாலையை அடையவேண்டும் என்ற ஞாபகம் திடுமென வந்தது. “சார்... பூந்தமல்லி ஹை ரோடு..” என்று இழுத்தவுடன் ”நேரே லெஃப்டு... அப்புறம் ஒரு ரைட்டு.. கொஞ்சம் வளைஞ்சாப்ல போய்ட்டு....ஷ்ட்ரெயிட்டு.. அப்புறம் ஒரு லெஃப்ட்டு...” என்று இன்னமும் முன்னால் கையை சுளுக்கும் வரை ஆட்டியாட்டி நீட்டி திசைகள் எட்டையும் ஆகாயத்தில் வழி போட்டுக் காட்டிக்கொண்டிருந்தவரிடம் பவ்யமாக நன்றி சொல்லிவிட்டு தோராயமாக சோத்தாங்கைப் பக்கமாகவே வளைத்துக்கொண்டு போய் பூ.நெடுஞ்சாலை அடைந்துவிட்டோம். 

இதற்குள் இரண்டு முறை கைகால் அலம்பிக்கொண்டாள் சேப்பாயி. கூகிள் மேப்ஸால் வழி கண்டுபிடித்து தப்பிக்கலாம் என்றால், பிரளய வெள்ளக் காலத்தில் தண்ணீர் தேங்கும் இடங்கள் காட்டுமளவிற்கு அதற்கு திறமை இன்னும் புகட்டப்படவில்லை. நம்மூரு சுந்தர் பிச்சை இந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு கூகிள் மேப்களில் தண்ணீரடித்துக் காண்பிக்க ஆவன செய்யுமாறு திடீர் வெள்ளத்தில் மிதப்போர் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.

சாமர்த்தியமாக கோயம்பேடு பாலம் ஏறியாகிவிட்டது. இடதுபுறம் திரும்புவதற்கு வாகன பேதமின்றி நமது பிராந்தியத்தின் பிரதான பழக்கமான “ஒருவர் மீது... ஒருவர் ஏறி....” ஒய்யாரமாக நின்றுகொண்டிருந்தார்கள். சீட்டுக்கட்டை ஒன்றன் மீது ஒன்றாக தரையில் சார்த்தி வைத்தது போல கண்ணுக்கெட்டிய தூரம் வரை வாகன வரிசை. அந்த வழியில் சென்றால் திரும்ப முடியாது என்று இன்னும் கொஞ்ச தூரம் நேரே சென்று கோயம்பேடு பக்கம் திரும்பும் இன்னொரு சந்தில் வண்டியை விட்டோம். “நேரே போ... சின்னோண்டு லெஃப்ட் வரும் பாரு...” என்ற வழிகாட்டி சத்யாவிடம் “நாம... இப்ப மட்டும் என்.ஹெச் 45 ல வரோமா?”ன்னேன். சிரித்தேன். இதுவரை பயணத்தில் கொஞ்சம் சிரிப்பு இருந்தது. 

கண்ணைக் கட்டிக் கடத்துவது போல இடது வலதாக அழைத்துக்கொண்டு போய் “அதோ பாரு... வந்திடுச்சு..” என்று மெயின் ரோட்டை தூரத்தில் நிலா காண்பித்து குழந்தைக்குச் சோறு ஊட்டுவது போலக் காட்டினார் சத்யா. அங்கு ஒரு சவால். அந்த மெயின் ரோடு அடைவதற்கு சேப்பாயியின் கழுத்தளவு நீரில் நீஞ்சிக் கடக்கவேண்டும். போனெட்டில் அடித்து கார்க் கண்ணாடியைக் கழுவுமளவிற்கு தண்ணீர். நெஞ்சுரம் மிக்க ஓட்டுனர்கள் மட்டுமே களம் காண முடியும் என்கிற போராளி நிலைமை. அதைக் கடப்பதற்கான சவால்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

1. தொடை வரை வேஷ்டியைத் தூக்கிக்கொண்டு செக்ஸியாக வரும் மாமாவின் மேல் தண்ணீர் தெளிக்கக்கூடாது

2. அயராது உழைத்துக்கொண்டிருந்த போலீஸ் மேல் நீர் பாய்ச்சக்கூடாது. ஏழேழு ஜென்மத்துக்கும் பாவம். 

3. தோண்டி வைத்திருக்கும் பள்ளத்தில் விழுந்து ஸ்டியரிங்கில் அடிபட்டு பல்லு மொகரை பேந்தாலும் கெட்டியாகப் பிடித்த ஸ்டியரிங்கை விடக்கூடாது, 

4. மூளையும் கண்களும் சேர்ந்து உழைத்து காம்பஸின் திறன் கொடுத்து வாய் பிளந்த சைஃபன் இருக்கும் திசை அறிய வேண்டும். ஓடும் தண்ணீரில் சுழி பார்க்கத் தெரிந்தால் தப்பித்துவிடலாம்.

ஏக் தம். க்ளட்சை அழுத்தி ஒரு முறை ”ர்ர்ர்ர்ர்ர்ர்ரூம்ம்ம்ம்ம்”மென்று உறுமினேன். ஃபர்ஸ்ட் கியர். ஆக்ஸிலேட்டரில் ஏறி உட்கார். உடையும் வரை மெறி. ஆறு செகண்டுகளில் வண்டியில் இருந்த அனைவருக்கும் புனர் ஜென்மம் கிடைத்தது போல மகிழ்ச்சி. இறைவனுக்கு நன்றி சொன்னேன்.
திரும்பியதும் தெரிந்துவிட்டது. வாகன சமுத்திரம். ”விடியும்போது வீட்டுக்கு பால் வாங்கிக்கொண்டு போகலாம்...” என்று ஃபோனில் சத்யாவின் கிண்டல் வேறு. “பாய்ங்.. பாய்ங்..” என்ற ஆம்புலன்ஸ் சத்தம்தான் என்னை மிகவும் இம்சை செய்தது. வண்டிக்குள் தவிப்பவருக்குக் காலனின் காலக்கெடு எதுவரையோ? 

ஷுகர் குறைய ஆரம்பித்ததில் க்ளட்ச் மிதத்த கால் கிடுகிடுவென்று ஆட ஆரம்பித்தது. அடுத்த இலக்கு ஏதோ ஒரு ஆகாரம் வேண்டும். தேடு. சுற்றிலும் தேடு. இரை தேடு. மணி இரவு 9:45. அரும்பாக்கம் ஸ்டேஷன் மூலையில் தெரிந்தது. இடதுபுறம் குளிருக்கு இதமாக டாஸ்மாக்கில் ஹாட் விற்பனை நடந்துகொண்டிருந்தது. பக்கத்தில் பொட்டிக்கடை. மிச்சர் பாக்கெட்டும் கடலை மிட்டாயும் காரக் கடலையும் கட்டாயம் விற்பனையாகும் இடம். ”நாலைஞ்சு பாக்கெட் கடலை மிட்டாய் வாங்கிக்கோங்க... வண்டி நகர்ந்தாலும் நீங்க நடந்து வந்து பிடிச்சுடலாம்...” என்று ஒருவரை தைரியமூட்டிக் கடலை மிட்டாய் வாங்க இறக்கிவிட்டேன்.

பத்தடி நகர்வதற்குள் அன்னநடை நடந்து வந்து ஏறிக்கொண்டார். ஷுகர் பிரச்சனை தீர்ந்தது. வயிற்றுக்கும் ஈந்தாகிவிட்டது. நோ ப்ராப்ளம். ரெண்டு கடலை மிட்டாயில் இருண்ட கண்களுக்கு ஒளி வந்தது. அரும்பாக்கம் ஸ்டேஷன் தாண்டி பெரியார் பாதையில் வெள்ளம். இரண்டு பாடிகளை ஒட்ட வைத்த ஒரு நீண்ட பஸ்ஸின் பின்னால் வால் பிடித்துக்கொண்டு இன்ச்சிக்கொண்டிருந்தேன். ஆட்டோவாலா ஒருவர் இண்டு இடுக்கில் புகுந்து எங்கள் தொடர்பை அறுத்தார். சட்டென்று ஆட்டோ ரைட்டில் ஜகா வாங்க என் முன்னே “ஹோ...”வென்று சமுத்திரம் போல தண்ணீர். பஸ்ஸும் போய்விட்டது.

முன்னால் செல்பவர்கள் அதைப் பார்த்துவிட்டு “நேரே போகமுடியுமா? இல்லை.. மேலே போய்விடுவோமா?” என்று தடுமாறி திக்குத் தெரியாமல் திணறி நின்றார்கள். இந்த அமளிதுமளியில் டவேராவை இடதுபுறம் ஓரங்கட்டி ஒய்யாரமாக ட்ரைவர் சீட்டில் சாய்ந்து கொண்டு ஜன்னல் அனைத்தையும் ஏற்றிவிட்டு ஒருவர் சினிமா பார்த்துக்கொண்டிருந்தார். கீதையில் சொன்ன ஸ்திதப்ரக்ஞன். பராக்கு பார்க்காமல் சாலையைப் பார்த்தேன். நீர் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. மீண்டும் ஒருமுறை சேப்பாயிக்கு துணிச்சலான வேலை. மனதில் ஆஞ்சநேயரை துணைக்காக நிறுத்திக்கொண்டேன். இடதுபுறத்திலிருந்து வலதுபுறம் மீடியேட்டர் வரை ஒரு ஆர்க் அடித்து திரும்பினேன். ”பளக்... பளக்...” என்று தண்ணீர் வண்டியின் ஜன்னல்களிலும் கண்ணாடியிலும் மோதும் சப்தம் பயங்காட்டியது. 

வெற்றிவீரனாக இரண்டாவது கடலையும் தாண்டியபிறகு சாலை வெறிச்சென்று இருந்தது. வடபழனி சிக்னலில் வலம் இடமாக பெருக்கெடுத்து ஓடியது வெள்ளம். அவைகளை இலகுவில் கடந்து அசோக் நகர் சிக்னலில் சுமாராக இழுப்பு இருந்தது. காசி தியேட்டர் தாண்டியவுடன் வரும் அடையாறு பாலத்தில் கொட்டும் மழையில் நின்று கொண்டு வெள்ளம் ரசித்த ஆள் இதுவரை தண்ணியில்லாக் காட்டில் இருந்திருக்கவேண்டும். ஆண்டவனின் கிருபையினால் கத்திப்பாராவை அடைந்தோம். பாலமும் ஏறி இறங்கியாச்சு. உதிரியாய் ஒன்றிரண்டு வாகனங்கள். சந்தோஷம். இன்னும் பத்து நிமிஷத்தில் வீடு சேர்ந்து டாங்க் க்ளியர் செய்துவிடலாம். ஆத்திரத்தை அடக்கினாலும்..... என்கிற ஃபேமஸ் வசனம் உங்களுக்கு இப்போது ஞாபகம் வருவதை தவிர்க்கமுடியாது. மணி இரவு பதினொன்று.

வாழ்க்கையில் இன்பதுன்பங்கள் மாறிமாறி வரும் என்பதற்கு அடையாளமாக அடுத்த நூறு மீட்டரில் மீண்டும் மழை வெள்ளத்தைத் தோற்கடிக்கும் வாகன வெள்ளம். சின்னக் குழந்தை ஒன்றை ட்யூஷன் பேக்கோடு நனைய நனைய பின்னால் உட்கார்த்தி வைத்துக்கொண்டு வீட்டுக்கு செல்லும் அப்பாவைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. மீண்டும் “ஹொய்ங்..ஹொய்ங்...” என்று ஆம்புலன்ஸ் சப்தம். ஊஹும். ஒரடி விலகி இடம் கொடுக்க முடியாது. திடீரென்று மின்னலென மழை நின்றுவிட்டது. கோபாலன் கோவர்த்தனகிரியைப் பிடித்துவிட்டானா? என்று ஆச்சரியப்பட்ட போது மெட்ரோவிற்காகப் போடப்பட்ட பாலமே கோவர்த்தன கிரி என்று புரிந்தது.

மீண்டும் வானத்தைப் பொத்துக்கொண்டு மழை கொட்டத் துவங்கியபோது சாலையின் எதிர்புறத்திலிருந்து கணுக்கால் அளவு இந்தப் பக்கம் கால்வாய் போல நீர்ப் பாயத்துவங்கியது. சுற்றிலும் இரண்டு, மூன்று, நான்கு சக்கர வாகனாதிகள் வண்டி உருட்டுவதில் மும்முரமாக இருந்தார்கள். யாராவது சங்கிலித் திருடர்கள் ஓடிவந்து கழுத்திலிருந்து அறுத்துக்கொண்டு போனால் கூட அவர்களைக் கண்டு கொள்ளாமல் இன்னும் இரண்டு அடி நகர்ந்துவிடுவோமா என்பதைப் பற்றிய தீவிரச் சிந்தனையோடு காத்திருந்தார்கள். மழையின் ”தொரதொர....”த்தவிர வேறு சப்தமில்லை. பிரளய கால இராத்திரி போல இருந்தது. எரிபொருள் தீர்ந்துபோன நான்கு சக்கரங்களை சாலையோரத்திலேயே விட்டிருந்தார்கள்.

இராப்பூரா கோயம்பேட்டிலிருந்து கிண்டி வரை முட்டியளவு தண்ணீரில் நின்றிருந்த போலீஸ்காரர்களுக்கு ஒரு ராயல் சல்யூட். தண்ணீரிலும் மழையிலும் ஒரு சிங்கிள் டீக்குக் கூட வழியில்லாமல் மணிக்கணக்காக ரெகுலேட் செய்தது நெக்குருக செய்தது. நங்கைநல்லூர் சப்வேயில் நுழைந்துவிட்டால் பண்ணின பாவத்திற்கான கருடபுராண தண்டனை அனுபவித்தாகிற்று என்று நினைத்திருந்தது வீணாய்ப் போனது. “மீனம்பாக்கம் கேட் வழியாப் போயிடுங்க...” என்று ரெயின் கோட் போட்டும் முழுவதும் நனைந்திருந்த நற்காவலவர் ஒருவர் கைகாட்டினார். அப்போது மணி நடுநிசி 12:00. 

அங்கிருந்து ரொம்ப தூரத்தில் (< 1 KM) இருந்த மீனம்பாக்கம் கேட் திரும்பி வெள்ளக்காடாய் மிதந்து கொண்டிருந்த நங்கையைத் தாண்டி வீடு வந்து சேர்ந்தேன். வந்து சேர்ந்தும் சத்யா ”கெக்கக்கே”கென்றது காதுகளில் ஒலித்துக்கொண்டிருந்தது. அவர் சொன்னது இந்த பதிவின் கடைசி வாக்கியம்.

“மாமா... புயலையெல்லாம் விட பருவமழை நல்லா பிடிச்சுக்கிச்சு... மும்மாரிக்கு பதிலா முப்பது மாரி பொழிஞ்சுடுச்சு...”

“என்ன பருவமழை?” (”என்ன கையைப் பிடிச்சு இழுத்தியா?” வடிவேலு தோரணையில்...)

“இல்லை மாமா.. நார்த் ஈஸ்ட் மான்சூன்.... வடகிழக்குப் பருவமழை ( மேஜர் மாதிரி இங்கிலீஷிலும் தமிழிலும் புரட்டிப் புரட்டிப் பேசினேன்)

“போய்யா.... இது... வடகிழக்கு இல்லை.... வடகிறுக்குப் பருவமழை.....”

கொட்டும் மழை இரவுகளில்......

பொழுது புலர்ந்தது. கரையோர மரங்களுக்கு மத்தியில் அவர் நதியை நோக்கி கமண்டலமும் கையுமாக நடந்து வந்துகொண்டிருந்தார். அருகில் வந்தவுடன் அவர் மனு என்று தெரிந்தது. ஆற்றில் இறங்கி கனுக்கால் அளவு நீரில் நின்று கொண்டு கைகளைத் தண்ணீரில் அலசினார். அலம்பிய கைகளில் மீன் குஞ்சு ஒன்று சிக்கியது. கைகளில் சிக்கிய அந்த மீன் மனுவிடம் பேசியது.

”ஐயனே! என்னைக் காப்பாற்றுங்கள்.. தக்க சமயத்தில் நான் உங்களுக்கு உதவுவேன்”

“உனக்கு யாரால் ஆபத்து?”

“பெரிய வலுவுள்ள மீன்கள் என்னைச் சாப்பிட்டுவிடும்.”

“ஆகையால்..”

“என்னை முதலில் ஒரு ஜாடிக்குள் போட்டுவிடுங்கள்... கொஞ்சம் வளர்ந்தவுடன் பாதுகாப்பான ஒரு குளத்தில் விடுங்கள்.. பின்னர் என்னை சமுத்திரத்தில் சேர்த்துவிடுங்கள்... தயைகூர்ந்து எனக்கு இந்த ஒத்தாசை செய்யுங்கள்... உங்களுக்கு என்னால் இயன்றவைகளைக் கட்டாயம் தக்க தருணத்தில் செய்வேன்.....” மீன் குஞ்சு வாய் படபடக்கக் கெஞ்சியது.

மனு அவ்வாறே செய்தார்.

ஒருநாள் அந்த மீன் மனுவிடம்
“பெரிய வெள்ளம் ஒன்று அதி சீக்கிரம் வரும். ஆகையால் தப்பிப்பதற்கு ஒரு படகைத் தயார் செய்துகொள்ளுங்கள்.”

காலம் ஓடியது. குறிப்பிட்ட வேளையில் வெள்ளம் பெருகியது. மனு தயார் செய்திருந்த படகில் தாவி ஏறினார். அவருக்கு முன்னால் அந்த மீன் வந்து நின்றது. படகு நுனியில் கட்டியிருந்த கயிறை அந்த மீனின் கொம்பில் மாட்டினார். வடக்கே விந்திய மலைச்சாரலை நோக்கி அந்த மீன் படகை வேகமாக இழுத்துச் சென்றது.

மலையுச்சியை அடைந்த மனு படகை ஒரு மரத்தடியில் கட்டிவிட்டு காத்திருந்தார். வெள்ளம் வடிந்தது. மனு நடந்து வந்ததால் அந்த இறக்கத்திற்கு மனுவின் அவதரணம் (அ) மனோரவதரணம் என்று பெயர் வந்தது.
மூவுலகமும் அழிந்து மனு மட்டுமே ஜீவித்திருந்தார்.

*

ஆதி காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பற்றி சதபத ப்ராமணா என்கிற வேதத்தின் பகுதியில் இருந்ததை John Keay தன்னுடைய INDIA - A History புஸ்தகத்தில் எழுதியிருந்தார்.

சமீபத்திய மழை இரவுகளில், மின்சாரம் இல்லாத ஒரு நாள் பால்கனியில் நின்று கொண்டு நிர்ஜனமான வீதியில் பிரளய வெள்ளமாய்ப் பெருகி ஓடி வந்த தண்ணீரைப் பார்த்த பொழுது எனக்கு ஞாபகம் வந்த கதை இது.

வாசல் மின்கம்பத்தில் என்னுடைய படகைக் கட்டிவிட்டு வெள்ளம் வடிய மனுவாக நான் உப்பரிகை மலையுச்சியில் காத்திருப்பதாக தோன்றியது.

”தொர்ர்ர்ர்ர்” ரென்று கொட்டும் மழை சப்தத்தில், உலகில் அனைத்து ஜீவராசிகளும் நீரில் அடித்துச் செல்லப்பட்டு ஒரேயொரு ஆளாக நான் மட்டும் எஞ்சியிருப்பதாக அஞ்சிய முதல் திக்..திக்.. இரவு....

Tuesday, July 29, 2014

மழை...நெரிசல்..இறைவா..

பக்கத்து வீட்டுக் கோகுல் (வயசு 3) நடுவாசல்ல வந்து நின்னு சொட்டு உச்சா போனால் கூட சென்னை நகரமெங்கும் ட்ராஃபிக் ஜாம் ஆகிவிடுகிறது. ஒரே ”பாம்..பாம்.” “த்தோடா.. போப்பா முன்னால...”. ”லெஃப்ட்ல வாங்கு...” “இன்னும் ரெண்டு அவுரு ஆவுமாம்ப்பா..” ”ஒண்ணு போ.. இல்லே ஒத்து...” போன்ற பாஷைகள் நிறைந்த சென்னையாகிவிடும்.

கல்யாண வீட்டில் பன்னீர் தெளிப்பது போல வானம் லேசாகத் தூறல் போட்டால் இருசக்கராதிகள் ஆக்ஸிலைத் திருக அச்சப்படுகிறார்கள். நியாயம்தான். அசந்தால் மேன்ஹோலை திறந்து வைத்து ஸ்வாகா செய்துவிடுவார்கள்.

கௌரவாதிகள் பீமனுக்கு சாப்பாட்டில் விஷத்தை வைத்துக் குண்டு கட்டாகக் கல்லைக் கட்டி அவனைக் கடலில் எறிந்த போது அவன் நேரே ஜிங்குன்னு போய் பாதாளலோகத்தில் இறங்கினானாம். அங்கு ஆட்சி செய்த நாகராஜா வைர வைடூர்யங்களைப் பரிசளித்து நாலு நாள் விருந்தாளியாக வைத்து ஈடு ஈடாகக் கொழக்கட்டையெல்லாம் பண்ணிப் போட்டுக் குஷிப்படுத்தி பூலோகம் அனுப்பினானாம். நாமெல்லாம் பீமனல்ல. வெறும் மேன். மேன்ஹோலில் விழுந்தால் நேராக மேலோகம்தான். யம கிங்கரர்கள் எண்ணெய்ச் சட்டியில் நம்மை ஜட்டியோடு இறக்கி ராஜோபசாரம் செய்வார்கள். டேக் கேர் மேன்.

போரூர் பகுதியில் மீட்புப் பணிகள் நடப்பதற்கு தொந்தரவாக இருக்கக்கூடாதென்று கோயம்பேடு திசையில் வண்டியை விட்டேன். கோயம்பேட்டிற்கு ஐந்தாறு கி.மீக்கு முன்பே எதிரே சுனாமி வருவதுபோல மக்கள் சின்னாபின்னமாகத் தெறித்து வண்டியோட்டினார்கள். ஊருக்கு உழைக்கும் நல்லவர் இருவர் “ரெண்டு பக்கமும் வண்டியெல்லாம் முட்டிக்கிட்டுக் நிக்கிது. அப்படியே திரும்பிப் போய்டுங்க..” என்று உதவிக் குரல் கொடுத்தனர். நின்ற மேனிக்கு அப்படியே திரும்பிய சில ஆர்வக்கோளாறு அபிஷ்டுக்கள் பின்னால் நின்ற வண்டியின் பம்பரை பதம் பார்த்து பேரம் பேச நின்றார்கள். பேரம் படியும் போது அவர்களுக்குப் பாதை தெரியக்கூடும்.

குல தெய்வமான ஏழுமலையானை வேண்டிக்கொண்டு இன்ச் இன்ச்சாக சக்கரத்தைத் திருப்பி கைகள் ஸ்டியரிங்கோடு பின்னிக்கொள்ள வளைத்து வந்த வழியே திரும்பினேன். எப்போது மழை வந்தாலும் தத்தளிக்கும் கோயம்பேட்டை மீட்கும் கட்சிக்குதான் அடுத்த தேர்தலில் எனது வெற்றி வாக்கை அளிப்பேன். கோயம்பேட்டைக் காபந்து செய்பவர்களே கோட்டையை ஆளட்டும்.

“எங்கடா வந்திண்டிருக்கே?”

“போரூர்மா...”

“அச்சச்சோ.. ஏன்டா?”

“கோயம்பேடுல ட்ராஃபிக் ஜாம்”

“அதெப்படி உனக்குத் தெரியும்?”

“போய்ட்டு திரும்பி வந்தேன்...”

“அங்க போய்ட்டு ஏன் போரூருக்கு திரும்பி வந்தே?”

“தாண்டி போக முடியாமதான்...”

“திரும்ப முடிஞ்சுதா?”

“ம்... “

“திரும்ப முடிஞ்சுது.. தாண்ட முடியலையாடா?”

“ஆமா.”

“ஏன்?”

“வண்டி ஒரு டன் வெயிட்டுமா. நானென ஆஞ்சநேயரா.. சஞ்சீவ பர்வதத்தை தூக்கறா மாதிரி வண்டியையும் சேர்த்து தூக்கிண்டு வர்றதுக்கு...”

“நக்கலாடா?”

“இல்லம்மா..”

“கிண்டலா?”

“நான் திரும்பவும் கோயம்பேட்டுக்கே போய்டறேன்மா.. வச்சுடட்டுமா?”

என்னைப் பெற்ற தெய்வத்துடன் சம்பாஷித்தது.

ஃபோனை எடுத்தால் ஐம்பது கேள்விக்கு மிகாமல் அசராமல் கேட்கும் நற்குணம் வாய்த்த நல்லாள். காலிரண்டையும் கழற்றி வீசிவிடும்படி வலித்தது. சிக்னல் போடாமல் ஹெட் சிக்னல் செய்து பாபம் செய்தவர்கள், ஸ்விஃப்ட்டை நடைவண்டியாய் பாவித்து நடுரோட்டில் ஓட்டும் உத்தம வயோதிகர்களைப் பரிகசித்தவர்களை, டாங்க்கர் டாங்க்கராகத் தண்ணீரைக் காசுக்கு விற்றவர்களை, மீட்டரையும் சிக்னலையும் துச்சமாக மதிக்கும் ஆட்டோவாலாக்களை, இழுத்து வந்து மழைக்காலத்தில் சென்னையில் காரோட்ட விடவேண்டும் என்ற ஆங்காரத்துடன் வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தேன்.

“கோயம்பேட்டுக்கே போய்டறேன்னு சொன்னே!” கையில் சாம்சங்கில் கேண்டி க்ரஷ் சாகாவுடன் அம்மா.

ச்சே! நா போறேம்பா... நா போறேன்...

இறைவா! ட்ராஃபிக்கிலிருந்து என்னை காப்பாற்று. ஆட்டோக்களையும் மாநகர பஸ்களையும் நானே பார்த்துக்கொள்கிறேன்.

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்!!

வாய்க்கு இதமான இளஞ்சூடு வெங்காய பகோடாவும் ஆவி பறக்கும் ஸ்ட்ராங் ஃபில்டர் காஃபியும் மழையின் சாஸ்வதமான தோழமைகள். சென்னையின் கான்க்ரீட் காட்டில் கொட்டும் மழையை விட மன்னையில் பொழியும் மழை மனசுக்கு ரம்மியமானது.

நான்கு திசைகளிலும் ”ஹோ”வென்று பரந்து விரிந்த ஹரித்ராநதியில் விசிலடிக்கும் காற்றுடன் கைகோர்த்துக்கொண்டு மழை போடும் எண்ணிலடங்கா புள்ளிக் கோலம்........ தெற்கிலிருந்து வடக்கிற்கு காற்றடித்தால் நேர்ப்புள்ளி. வடகிழக்காகவும், தென்மேற்காகவும் வீசும் காற்று குளற்று நீரில் ஓடியோடி இடுக்குப்புள்ளி வைக்கும்.

தான் தூறலின் போது வைத்த புள்ளியை அடித்து பெய்யும் போது இணைக்கும் காட்சியை யுகாந்திரமாய் பார்த்துக்கொண்டேயிருக்கலாம். ஒரு பெருமழைக்கு ஆயிரமாயிரம் நீர்க் கோலங்கள். சிக்குக் கோலம், அன்ன பட்சி, தேர், கத்திரிக்கா, கை கோர்க்கும் பேபிகள், பொங்கல் பானை, சிவலிங்கம், க்ருஸ்துமஸ் மரம் என்று நான்கு கரையிலிருக்கும் ஜன்னல் தோறும் பொங்கி வழியும் எண்ணம் போல பல வடிவக் கோலங்கள்.

கொடி கோவைக்காயை நறுக்கி அழித்த கல் ஸ்லேட் போல மழை நின்ற பின் காட்சியளிக்கும் எழில் குளம் இன்னொரு மழையைக் கோலம் போட தவறாமல் அழைக்கும். மழை திரும்பவும் புள்ளி வைக்கும். இணைத்துக் கோலம் போடும். குதூகலிக்க வைக்கும்.

தேவக் கொடையான அம்மழைக் கோல குளத்தழகை என் போன்ற நரர்கள் அல்பமாக ஒரிரு பாராக்களில் அடக்கமுடியாது.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails