Showing posts with label நாம சங்கீர்த்தனம். Show all posts
Showing posts with label நாம சங்கீர்த்தனம். Show all posts

Tuesday, July 29, 2014

மன்னார்குடி மாந்தர்கள்!

மன்னார்குடியர்கள் சர்வலோகத்திலும் வியாபித்திருப்பார்கள் என்பது இன்று கண்கூடாகத் தெரிந்தது. எப்படியென்று சொல்கிறேன். சின்னவளும் பெரியவளும் திருப்புகழ் பாடுவதற்கு நங்கைநல்லூர் சென்றார்கள். சாரதியாக சென்றிருந்தேன். எட்டுக்கு பத்து ரூமில் இருபது பேர் முருகனருள் முன்னிற்க ”சந்ததம் பந்தத்...... தொடராலே....சஞ்சலந் துஞ்சித் ...... திரியாதே” பாடினார்கள். ”இயலிசையி லுசித வஞ்சிக் ...... கயர்வாகி.... இரவுபகல் மனது சிந்தித் ...... துழலாதே”யும் “பத்தியால் யானுனைப் ...... பலகாலும்....பற்றியே மாதிருப் ...... புகழ்பாடி”யிலும் செவி இனித்தது.

திருப்புகழ் பாடியவர்களுக்கு பந்தி பரிமாறினார்கள். மைசூர் போண்டோ, காராமணி சுண்டல், அசோகா அல்வா. ஒரு வாய் காஃபி. “மாலை போட்ருக்கேன்... ஒரு போது...” என்று கழன்றுகொண்டேன். “ஒரு வா காஃபியானும் சாப்டுங்கோ..”ன்னு துரத்தி வற்புறுத்தல். தப்பித்து வெளியே ஓடி வந்தேன். நிலைவாசப்படியில் நிறுத்தி “ராமூர்த்தி பையனா?” என்று ஒரு குரல். “எம் பேரு சூர்யா.. மேலரெண்டாம் தெருவுல இருந்தோம்.. அப்புறம் மூணாம் தெருவுலேயும் வக்கீல் ஸிபியாத்துக்குப் பக்கத்துலயும் இருந்தோம்...உங்கப்பாவுக்கு நன்னாத் தெரியும்...” நெற்றியில் கேபியெஸ் விபூதியும் கையில் “முருகா சரணம்” மஞ்சப்பையுமாக ஒரு பாட்டி நின்றிருந்தார்கள். கையெடுத்துக் கும்பிட்டேன். பேச நா எழவில்லை. “அலமேலுவைக் கேட்டதா சொல்லு...” என்று அம்மாவையும் விஜாரித்துவிட்டு எம்சியார் செப்பலை மாட்டிக்கொண்டு மறைந்துபோனார்கள்.

“நீங்க மன்னார்குடியா? நேஷ்னல் ஸ்கூலா?” என்று கேள்வியெழுப்பிக்கொண்டே இன்னொரு ராணி சுங்குடி மாமி க்ராஸ் செய்தார்கள். சிரித்தேன். சொன்னேன். மன்னார்குடி வீதிவீதியாக மனக்கண் முன் வந்துகொண்டிருக்கிறது.

விட்டல விட்டல

”கோபால ஹரி. ஹரி.. கோவிந்த ஹரி... ஹரி....”.

“என்னடி குட்டி கார்த்தாலையே பஜனை?”

“விஜய் டிவில அந்த பாட்டி பாடினாளே... அதான்...சூப்பர்ப்பா.. எவ்ளோ ஃபாஸ்ட்டா பாடறாப்பா.. கோபால ஹரி..ஹரி.. கோவிந்த ஹரி..ஹரி..”

ஸ்கூல் பஸ்ஸிற்கு காத்திருந்தபோது இடைவிடாமல் பஜித்த சின்னவளின் குரலில் தெய்வம் கண் முன் நின்றது. “ஹரி..ஹரி...” என்று அவள் சங்கீதமாய் விடைபெற்றுச் சென்ற பின்னர் வீட்டில் இன்னமும் மும்முரமாய் பஜனை நடந்து கொண்டிருந்தது.

“யாரும்மா இந்த பாட்டி? இவ்ளோ எனர்ஜியோட பாடறா?”

“கல்யாணி மார்க்கபந்துடா..”

இப்போது ராமகிருஷ்ண ஹரியும் விட்டல விட்டல பாண்டுரங்காவுக்கும் வந்திருந்தார். டோலக்கும் மிருதங்கமும் போட்டி போட்டுக்கொண்டு முழங்கின. ”எழுந்து விட்டலா.. விட்டலான்னு ஆடுடா”ன்னு இழுக்கும் லயம். கீபோர்ட் வாசிக்கும் கைகளை அவ்வப்போது திரைமுழுக்க காண்பித்து தொந்தரவு செய்தார்கள். நாலைந்து பொண்டுகள் மேடையோரத்தில் பரத அபிநயம் பிடித்தார்கள். பாட்டியின் முகத்தைப் பார்த்தால் கிருஷ்ண பக்தி அப்படியே பொத்துக்கொண்டு கொட்டியது.

ரசிகாளைப் பார்த்து கையிரண்டையும் மேலே தூக்கி கைதட்டி பார்த்தார்கள். எவரும் மசிவதாயில்லை.

“துஸ்சாசனன் த்ரௌபதியை துகிலுறிக்கிறான். ருக்மணி க்ருஷ்ணர்கிட்டே கேட்கிறா... இப்படி பண்றானே நீங்க ஹெல்ப் பண்ணக் கூடாதான்னுட்டு... இன்னமும் அவ தன் கை மேலேதான் நம்பிக்கை வச்சுண்டுருக்கா.. தன்னம்பிக்கை இருக்கு... என் மேலே முழு நம்பிக்கை வரலையேன்னுட்டு.. ருக்மணி வண்டு ரூபம் எடுத்துண்டு த்ரௌபதி காதுல போய்.... அடி அசடு... கையிரண்டையும் மேலே தூக்கி அவனைக் கூப்பிடு... காப்பாத்துவான்..அப்டீன்னா... கையை தலைக்கு மேலே தூக்கி வேண்டினாள்... உடனே இருந்த இடத்துலேர்ந்து அள்ளி அள்ளிக் கொடுத்தான்....” என்று நாம பக்தியின் பலனோடு சொன்னதும் கூட்டம் தலைக்கு மேலே கைகொட்டி ”விட்டல.. விட்டல....” என்று ஆர்ப்பரித்து ரசித்தது.

ஃபேஸ்புக்கிற்கென மந்திரித்து விடப்பட்ட புத்தியில் கல்யாணி மார்க்கபந்து என்று லென்ஸ் அருகே தட்டினேன். கண நேரத்தில் அவரது பக்கமும் கிடைத்தது. ஒரு நட்பு அழைப்பு அனுப்பிக் காத்திருக்கிறேன்.

கலியுகத்தில் நாமசங்கீர்த்தனமே இறைவனை அடையும் வழியாம்.

“கோவிந்த விட்டல... கோபால விட்டல...”

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails