Showing posts with label தொழில்நுட்பம். Show all posts
Showing posts with label தொழில்நுட்பம். Show all posts

Wednesday, February 22, 2012

கிண்டில்

கிண்டில் என்பது 3000 புத்தகங்கள் அடங்கிய அடுக்கி வைக்கப்பட்ட ஒரு அலமாரி நம்முடைய பாண்ட் பாக்கெட்டில் எப்போதும் இருப்பது போல. புத்தகப் புழுக்களுக்கு ஒரு வரப்பிரசாதம். அமேசான் இணையதளத்தில் லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தங்கள் இலவசமாக தரவிறக்கிக்கொள்ள கிடைக்கிறது. இதில் ஷேக்ஸ்பியர், டால்ஸ்டாய், தாஸ்தாயேவ்ஸ்கி (இவரது பெயரை உச்சரிக்கும்போது விஸ்கி ஞாபகம் வருவதை தவிர்க்கமுடியவில்லை), சார்லஸ் டிக்கன்ஸ், ஜேன் ஆஸ்டின், மஹாத்மா காந்தி என்று பல அமர காவியங்கள் படைத்த நாயகர்கள் எழுதிய புத்தகங்களும் அடக்கம். கிண்டிலுக்கென்று சல்லிசாக நேற்று அச்சேறிய புத்தகங்களும் நேற்றைக்கே கிடைக்கின்றன. 

டவுன்லோட் செய்துவைத்துக்கொண்டு காலையில் பாத்ரூம் கம்மோடில் உட்கார்ந்து கொண்டு படிக்கலாம். இல்லையேல் நெரிசலான பஸ்ஸில் இடிபாடுகளுக்கு இடையே ஜன்னலோர யுவதியை லுக் விட்டுக்கொண்டேயும் படிக்கலாம். கையில் பிடித்திருப்பது சுலபம். சுமையில்லை. மணிக்கட்டு வலிக்காது. இதில் அமுக்குவதற்கு ரெண்டே பட்டன் தான். அடியில் பவருக்கு ஒன்று நடுவில் மெயின் மெனுவுக்கு இன்னொன்று. பைலட் கேபின் போல ஆயிரம் பட்டன்கள் கொடுத்து ஆங்காங்கே அழுத்தச் சொல்லாததால் குழப்பமேயில்லை. திரையில் தோன்றும் மற்றதெற்கெல்லாம் அதன் மேலேயே டச்சிங் டச்சிங்தான். 

கிண்டிலின் முழு முதல் அட்வாண்டேஜ் அதன் ஈ-இங்க் டெக்னாலஜியில் உருவாக்கப்பட்டத் திரை மற்றும் இளவம் பஞ்சு போல இருக்கும் அதன் எடை. ஈ-இங்க் பற்றிய விசேட அறிவியல் அறிவு இங்கு தேவையில்லை எனினும் தெரிந்தால் அது நமக்கு மேலும் சுவாரஸ்யமளிக்கும்.

மொபைல், லாப்டாப் மற்றும் கணினித் திரைகள் எல்.சி.டி என்ற தொழில்நுட்பத்தில் தயாரானவை. இவைகளுக்கு சுயமாகவே வெளிச்சமிடும் தன்மை உண்டு. மின்சாரத்தின் உபயத்தில் ஒளிர்ந்து முன்னால் படங்களையும், எழுத்துக்களையும் நம் பார்வைக்கு விடும். இதனால் பன்னிரெண்டு மணி வெய்யிலில் வேர்க்க விறுவிறுக்க நடுரோட்டில் சென்றுகொண்டிருக்கும் போது யாராவது மொபைலில் அழைத்தால் மர நிழலுக்கு ஒதுங்கி சிகரெட் பற்ற வைப்பது போல ஸ்கிரீனை கையால் பொத்தி கண்களை இடுக்கி சிரமப்பட்டு யாரென்று பார்க்க வேண்டியிருக்கிறது. இல்லையேல் யாராவது கடன்காரனது காலை எடுக்கவேண்டியதாகிவிடும். எப்போதும் திரை ஒளிர்வதற்காக உறிஞ்சும் மின்சாரத்தால்தான் பாட்டரி கற்பூரம் போல கரைகிறது. சீக்கிரம் தீர்ந்துவிடுகிறது.

பல லட்சம் நுண்ணிய குழல்களுக்குள் கருப்பு மற்றும் வெள்ளை மசியினால் ஆன பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கக்கூடிய குட்டியோண்டு மைக்ரோ சைஸ் மாத்திரைகளை போட்டு மிதக்கவிட்டிருக்கிறார்கள். ஒரு வாசகத்தின் முடிவில் ஃபுல் ஸ்டாப் உருவாக்குவதற்கு மிதக்கும் கருப்பு மாத்திரைகளை திரையின் முன்னுக்கு கொண்டுவந்தால் அந்த இடத்தில் ஃபுல் ஸ்டாப் ரெடி. இப்படியாக திரையில் “A" போடுவதற்கு அதன் கோடுகளின் பாதையில் கருப்பு மை மாத்திரைகள் திரையின் மேல் எழும்பி வரும். ஏனைய இடங்களில் வெள்ளை மசி மாத்திரைகள் மிதந்து கொண்டிருக்கும். இதன் காரணத்தால் ஒரு முறை திரையில் ஒளிர்வது அப்படியே அதில் ஸ்டிக்கர் போல ஒட்டவைத்ததாகிவிடும். 

எல்.சி.டி போலல்லாமல் காண்பித்துக்கொண்டே இருப்பதற்கு மின்சாரம் தேவையில்லை. மீண்டும் அடுத்த பக்கம் திருப்பினால் அந்த பக்கத்து வாசகங்களை திரையில் பொருத்திவிட்டு சமர்த்தாக உட்கார்ந்துகொள்ளும். இதனால் விடியவிடியப் படித்தாலும் தூக்கம் கெட்டதால் கண் எரியுமேயன்றி கிண்டிலினால் கண்கள் சிரமப்படுவதில்லை. அந்தப் பிரச்சனைக்கு அது ஜவாப்தாரி ஆகாது. ஒரு முறை முழு சார்ஜ் சாப்பாடு போடுவது ஒரு மாதம் வரை நாம் படிக்க ஏதுவாக கிண்டிலை போஷாக்காக ஓட வைத்திருக்கிறது. இது தான் ஈ-இங்க் டிஸ்ப்ளேயின் வெற்றி ரகசியம்.

பின்னால் ஒளிரும் தன்மையில்லாததால் பெட்ரூமில் விளக்கணைத்த பின்னர் புள்ளைக்குட்டிகள் தூங்கியவுடன் தலைமாட்டுக்கருகில் வைத்துக்கொண்டு நடுநிசி வரைக்கும் படிக்கமுடியாது. ஒரு மெட்ராஸ் கொசு சைஸ் எல்.ஈ.டி லைட்டாவது அதன் கொண்டையில் சொருகிக்கொள்ள வேண்டும். கிட்டத்தட்டக் காகித புஸ்தகம் போலத்தான். வெளிச்சம் ஏற ஏற படிப்பது சுகம். அரைகுறை வெளிச்சத்தில் படித்தால் சீக்கிரம் சங்கரநேத்ராலயாவில் அப்பாயிண்ட்மெண்ட் ஃபிக்ஸ் செய்ய வேண்டிவரும். ஏற்கனவே சாளேஸ்வரம் வந்தவர்கள் கண்ணின் ஃபோகல் லெங்த்துக்கு தக்கவாறு எழுத்துக்களை குண்டாகவோ சன்னமாகவோ வைத்துக்கொள்ளலாம். அர்த்தம் தெரியாத வார்த்தைகளை தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் அப்படியே திரையில் அழுத்திப் பிடித்தால் அமெரிக்கன் டிக்‌ஷனரி திரையில் தோன்றி “இந்தா பிடி” என்று விளக்கத்தை அள்ளித் தெளிக்கிறது.

இன்னும் தமிழ்ப் புத்தகங்களுக்கு கிண்டில் இடம் தரவில்லை. தமிழை ஆட்கொள்வதற்கு தொழில்நுட்பம் வளரவேண்டும். காதாரக் கேட்க வேண்டும் என்று விரும்பினால் புத்தகத்தை படித்துக் காண்பிக்கும் “Text-to-Speech" வசதியும் இருக்கிறது. பெண் குரலில் கேட்டால்தான் உங்கள் மனதுக்குப் பதியும் என்றால் அதையும் மாற்றிக்கொள்ளலாம். வாயில் வாழைப்பழம் வைத்துக்கொண்டு பேசும் அமெரிக்க ஆக்செண்டில் இருப்பதால் புரியுமா என்று பார்க்கவேண்டும். புரியவில்லை என்றால் ஒரு டச்சில் நிதானமாக படிக்கவைக்கலாம். இல்லையில்லை நான் பீட்டர், ஷெல்லி பைரன் ஷேக்கு போன்றோர் என் உறவினர் என்று நீங்கள் சொன்னால் மூச்சு விடாமல் படிக்கச்சொல்லியும் கேட்கலாம். 

ஒரு புஸ்தகம் படித்துக்கொண்டிருக்கும் போது தூக்கம் கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தால் அப்படியே மூடிவைப்பது போல பொசுக்கென்று அணைத்துவிடலாம். அடுத்தமுறை மெனுவில் அந்த புஸ்தகத்துக்கு போனால் நேற்றைக்கு ராத்திரி விட்ட இடத்தில் மறுபடியும் திறக்கிறது. இங்கொன்றும் அங்கொன்றுமாய் பத்து புஸ்தகத்தை தஸாவதானித்தனமாக ஒரே நேரத்தில் படிப்பது எளிது. இரண்டு கைகளால் ஒரே நேரத்தில் இரண்டு ஆவணங்களில் கையெழுத்திடும் கலை போல இரண்டு கண்களால் இரண்டு புஸ்தகம் படிக்க முடிந்தால் அதிசீக்கிரமே ஞானியாகிவிடலாம் என்பது திண்ணம்.

வைஃபை என்கிற கம்பியில்லா இணைய இணைப்பு மூலமாக புத்தகங்களை சில நொடிகளில் இறக்கிவிடலாம். சயிண்டிஃபிக் அமெரிக்கன் இணையதளம் சிபாரிசு செய்த மூளையைக் கூராக்கும் பத்து நாவல்கள் அமேசானில் இலவசமாக கிடைக்கிறது. அதன் சுட்டி இங்கே: http://www.scientificamerican.com/article.cfm?id=fiction-stories-that-sharpen-your-mind நான் இறக்கிய முதல் புத்தகம் எது தெரியுமா? ஷேக்ஸ்பியரின் மெக்பத். Fair is foul, and foul is fair: Hover through the fog and filthy air என்று படித்துக்கொண்டிருக்கிறேன். எதிர்காலத்தில் இந்த ஈ-இங்க் டெக்னாலஜி கோலோச்சும் என்பதில் திசுவளவும் ஐயமில்லை!

#கிண்டிலில் பல மாடல்கள் உள்ளன. 1500 புத்தகம் சேர்த்து வைத்துக்கொள்ளும் அளவிலிருந்து கிடைக்கிறது. 3G தொலைத்தொடர்பு வசதியுடனும் உள்ளது. கிண்டில் ஃப்யர் என்ற புத்தும்புது மாடல் கலர்த்திரையோடு மார்க்கெட்டில் உலவுகிறது.

##இப்பதிவின் முகப்புப் படம் அமேசான் கம்பெனியார் அவர்களது வலையில் இழுத்துப் போட்டிருந்தது!! 

### தொழில்நுட்பப் பதிவெழுதி ரொம்ப நாளாச்சு!

Thursday, July 22, 2010

போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்

duplicateஎங்கு பார்த்தாலும் ஒரே போலி மயம். அசல் எங்கே போனது. அதுவும் டப்பாக்குள்ளே தான் போனது என்று அஜீத் படம் பார்த்து சொல்பவர்கள் நிற்க. சமீப காலங்களில் என்னென்ன போலி வருகிறது என்று பட்டியலிடலாம் என்ற உண்மையான ஆசையில் இந்த பதிவு.  ஒவ்வொரு உபதலைப்பிற்க்கும் போலி முன்னால் சேர்ப்பது வெங்கடேஸ்வரா போளி ஸ்டாலில் போளி அடுக்குவது போலிருக்கும் என்பதால், இங்கே ஒரே போலியோடு ஆரம்பிப்போம். இனி வரும் உபதலைப்பிற்க்கெல்லாம் முன்னால் போலி சேர்த்து படிக்கவும்.

மார்க் ஷீட்: கல்லூரிகளில் சேர்வதற்கு எங்காவது 420 ஆள் பிடித்து காசு கொடுத்து தேத்திக் கொண்டு வரும் பொய்யான மதிப்பெண் பட்டியல். தேர்ச்சி சதவிகிதத்தில் முதலிடத்தில் இருக்கும் பெண்கள்தான் போலி மதிப்பெண் பட்டியல் சமர்ப்பிப்பதிலும் முதலிடம் வகிப்பதாக இன்றைய செய்தித்தாளில் படித்தேன். பெருமையாக இருந்தது. அனைத்து துறைகளிலும் அவர்களுக்கே வெற்றி.

பட்டம்: காற்றில் பறப்பது அல்ல, கல்லூரி படிப்பு வெற்றிகரமாக நிறைவு செய்கையில் கையில் வாங்குவது. பல பேர் போலி பட்டத்தில் ஆகாயத்தில் பறப்பதாக நிறைய தகவல்கள் நமக்கு கிடைக்கிறது. பாஸ் செய்து பட்டம் பெற்றவனை விட பரீட்ச்சையில் கோட் அடித்து போலிப்பட்டம் பெற்றவர்கள் மிக உயர்ந்த நிலையில் சில நிறுவனங்களை தூண் போல் தாங்கிக் காப்பதாக இரண்டு மூன்று சிநேகிதர்கள் தெரிவித்தார்கள். இது பரவாயில்லை, பாகிஸ்தானில் நாடாளுமன்ற எம்.பி க்கள் சில பேர் போலி பட்டச் சான்றிதழ் கொடுத்திருப்பதாக தெரிய வந்து ஒரே அமளி துமளியானது.  அதற்க்கு அந்நாட்டின் மதியூக அமைச்சர் ஒருவர் போலியாக இருந்தாலும் அதுவும் பட்டச் சான்றிதழ்தானே என்று பேட்டியளித்தாராம். எம்.பி என்ற சுருக்கத்திற்கு முட்டாப் பயல் என்று விரிவு வந்துவிடுமோ என்று ஒரே கலக்கமாக இருக்கிறது. அப்புறம் நாட்டின் இறையாண்மைக்கும் மாட்சிமைக்கும் பங்கம் வந்துவிடும்.

ஜாதிச் சான்றிதழ்: எந்த ஜாதிக்கு சலுகைகள் நிறைய கிடைக்கிறதோ அந்த பேர் போட்டு ஒன்று அடித்துக்கொண்டு அந்த சலுகைகளை அனுபவிக்க ஆசைப்படுவது. இப்படி எல்லோரும் சலுகைகளுக்காக போட்டுக்கொண்டால் நிஜமாகவே அதனால் பயனடைய வேண்டியவர்களுடைய சலுகை மறுக்கப்படுகிறது. ஆனால் இதில் ஒன்று சர்வ நிச்சயம், எல்லோரும் ஓர் குலம் என்று நிரூபணமாகிறது. இன்றைய நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில்  சுடுகாட்டு கொட்டகை ஊழல் வெளிக்கொணர்ந்த புகழ் உமாஷங்கர் ஐ.ஏ.எஸ் வேலைக்கு சேரும் போது போலி ஜாதி சான்றிதழ் கொடுத்ததற்காக சஸ்பெண்டு செய்யப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. ஐயையே ஐ.ஏ.எஸ்.

சாமியார்: மாரிக்கால மதராசப்பட்டினத்தின் சாலைப் பள்ளங்களை எண்ண முடியுமா என்று கேட்டால் என்ன பதிலோ அதுதான் இன்றைய போலிச்சாமியார்களின் எண்ணிக்கை. எங்கு பார்த்தாலும் ஒரு ஆஷ்ரம் அமைத்துவிடுகிறார்கள். ஒரு 'ஜி', 'ஸ்ரீ ஸ்ரீ', '...ந்தா' என்று எதையாவது முன்னாலே அல்லது பின்னாலே போட்டுக்கொண்டு விடுகிறார்கள். இவர்களுக்கு செல்வச் சீமான்கள், கதர் சட்டைகள், கார்போரேட்டுக்கள் என்று ப்ரமோட்டர்கள் வேறு. பல நிறத்தில் இருக்கும் கைக்காசை வெள்ளையாக மாற்றி வெள்ளையும் சொள்ளையுமாக நடமாடுவதற்கு கொஞ்சம் ஆங்கிலம், கொஞ்சம் யோகா, கொஞ்சம் கீதை, போன்ற கொஞ்சம் கொஞ்சம் மொத்தமாக தெரிந்தவர்களை மேடையேற்றிவிட்டு அவர்களையும் பணக்காரர்களாக்கி தாங்கள் பெரும் தனவான்கள் ஆகி விடுகிறார்கள். அப்புறம் எல்லாம் கொஞ்சம் தெரிந்த, காசு பெருத்த போலிச் சாமியார்கள் யாராவது நடிகையை பார்த்து கொஞ்சப் போய்விடுகிறார்கள். சாமியாரின் இன்ப வெறி என்று இதுவரையில் ஒரு மலையாளப் படம் வெளிவராதது ஆச்சர்யமாக இருக்கிறது.

அப்புறம் சில உதிரி போலிகளாக அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் போலி முடி(Wig), முன்னழகை கட்டழகாக காண்பிப்பதற்காக போலி ஸ்தன மூடிகள், போலிச் சிகப்பாக அதரங்களை காண்பிப்பதற்காக உதட்டுச் சாயங்கள், தும்பைப்பூ போன்ற தலைக் கேசத்தை கார் முகிலென காண்பிக்கும் தலைச் சாயங்கள். (யாரும் ஆண்டி என்றோ அங்கிள் என்றோ கூப்பிடாமல் அண்ணா, அக்கா என்று கூப்பிடுவதற்க்காகவாம்.) ஐநூறு ருபாய் ஆங்கில புத்தகத்தை பக்கத்துக்கு முப்பத்தி இரண்டு காசு கொடுத்து நகலகங்களில் தயாரிக்கும் போலிப் புத்தகம், போலி நண்பர்கள், போலிக் காதலிகள் (கள்ளக் காதலி வேறு, போலிக் காதலி வேறு என்று வித்தியாசம் அறிக), போலிக் கணவன், போலி பொண்டாட்டிகள், போலி சினிமா சி.டிக்கள், போலி முகங்கள், போலி மருந்துகள், போலி ரூபாய் நோட்டுகள், போலி அன்பு, போலி பாசம், போலி அக்கறை, போலி தலைவன், போலி தொண்டன், போலி பாஸ்போர்ட், போலி ரேஷன் கார்ட், போலி போலிகள் என்று இந்த அசல் போலி பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.


யார் மாதிரி வேண்டுமானாலும் மேற்கண்ட முகமூடியை கொண்டு உருமாறலாம். ஒபாமா மாதிரி, ரஜினி மாதிரி, கமல் மாதிரி, தமண்ணா மாதிரி என்று. இதில் உள்ள பெரிய அபாயம் என்னவென்றால் ஏதாவது ஒரு வங்கி மேலாளர் மாதிரி இதை வடிவமைத்து ஒரு நாளின் அன்றைய கல்லா கட்டிய கலெக்ஷன் முழுவதையும் யாராவது ஒரேடியாக அடித்துக்கொண்டு போய்விட்டால்? இன்னும் நிறைய இதுபோல உபயோகமான பயன்பாடுகளை அவரவர்க்கு ஏற்ப கண்டுபிடித்து அனுபவிப்பார்கள். எதிர் காலத்தில் போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்.

இவ்வளவு போலிச் சொற்கள் கொண்டு இந்தப் பதிவை அடித்தது ஆர்.வி.எஸ்ஸா அல்லது போலி ஆர்.வி.எஸ்ஸா என்று ஒரு போலி இல்லாத போலிஸ் ஆபிசரிடம் சொல்லி கண்டுபிடிக்கணும்.

பட உதவி: http://lawyermarketing.attorneysync.com/

Wednesday, July 21, 2010

ஆப்புப் பலகை

டோக்கன் போட்டால் காபி டீ கொடுத்தார்கள், அப்புறம் கொஞ்சம் அட்வான்ஸ்டாக போய் ரயில் மற்றும் விமான நிலையங்களில் காசு போட்டால் புத்தகத்தை தொப் என்று வெளியே போட்டார்கள். பார்த்திபன் அவருடைய ஒரு திரைப்படத்தில் ஒரு ரூபாய் காயினை வெட்டி நூல் கட்டி காசு போட்டு பேசும் தொலைபேசி தொழில்நுட்பம் பற்றி பேசவே வேண்டாம் எல்லோருக்கும் தெரியும். காபி, டீ,  தொலை பேசுதல், புத்தகம் வெளியே வீசுதல் போன்ற வாழ்க்கையின் இன்றியமையாத அத்தியாவசிய தேவைகளுக்கு டோக்கேன் முறை அறிமுகப்படுத்தினார்கள். அதெல்லாம் பரவாயில்லை, அதற்க்கப்புறம் மக்கள் தொகை கட்டுப்பாட்டில் கண்டபடி முழு மூச்சாக இறங்கிய இந்திய அரசு காசு போட்டால் காண்டம் கொடுக்க ஆரம்பித்தது. பாதி பேர் கடைகளில் வாங்க கூச்சப்(?)படுகிறார்கள் ஆகையால் இந்த முறையை செயல்படுத்தி நாட்டின் அசுர வேக மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தபோகிறோம் என்று மார் தட்டி சோதனை முயற்சியாக சில இடங்களில் விநியோகிக்கும் இயந்திரம் வைத்தார்கள். முன்பாவது கடைகளில் யாரும் இல்லா சமயத்தில் கேட்டு வாங்கிச்சென்றவர்கள் வெளியே இயந்திரம் வைத்ததும் பக்கத்தில் போகவே பெருங்கூச்சம் அடைந்து வாங்குவதை மட்டும் நிறுத்திவிட்டார்கள் போலிருக்கிறது. ம.தொகை கட்டுப்பாட்டில் ஒன்றும் மாற்றத்தை காணோம்.
parkbench
இந்த காசு போட்டு டோக்கேன் போட்டு இயந்திரம் வெளியே துப்பியதை கையில் பொறுக்கிக்கொண்டு போகும் முறையை முற்றிலும் புதிதாக வேறு ஒரு திசைக்கு பயணிக்க வடிவமைத்திருக்கும் ஒன்று தான் நாம் "பார்க்"கபோவது. இப்போது பீச், பார்க் போன்ற இடங்களுக்கு சென்று காலார  நடந்து, கண்ணார கண்டு ( இயற்கையை!) இன்புற்று மகிழ்கிறோம். இப்படி எப்போது பார்த்தாலும் ஜன சமுத்திரங்களாக எல்லா பொது இடங்களிலும் மக்கள் பொங்கி வழிவதால் பார்க், பீச் போன்ற இடங்களில்..... அதிர்ச்சி அடைய வேண்டாம்... ... மெல்லிய இதயம் படைத்தவர்கள் இத்தோடு திரும்பி போய் விடுங்கள்.... பெஞ்சில் உட்காருவதற்கு காசு போட்டு உட்கார்ந்து இளைப்பாறி  நேரம் முடிந்தவுடன் அது சத்தம் இட்டவுடன் எழுந்து ஓடிவிட வேண்டும். இல்லையேல் ஆப்புதான். சாதாரண ஆப்பு இல்லை இரும்பு ஆப்பு. என்ன கொடுமை சரவணன் இது? என்று சந்திரமுகி பிரபு மாதிரி கேட்போருக்கு, ஆசைக்கு ஆஸ்த்திக்கு என்று சொல்லி ஒன்று இடுப்பிலும் ஒன்று கையிலும் பிடித்துக்கொண்டு திரியாமல் எப்படியாவது ஜனப்பெருக்கத்தை குறைத்தால் இதுபோன்ற சமூக பொறுப்புள்ள பல புதிய கண்டுபிடிப்புகளிலிருந்து நமது வருங்கால சந்ததியினரை காப்பாற்றலாம்.


PAY & SIT: the private bench (HD) from Fabian Brunsing on Vimeo.

பொது இடங்களில் யாராவது ரொம்ப வம்பு பண்ணினால் அல்லது வாலாட்டினால் போலீசில் எல்லாம் சொல்ல வேண்டாம், காசு போட்டு இந்த பெஞ்சில் உட்காரவைத்து அசையமுடியாமல் கட்டிப்போட்டுவிட்டால், உட்காரும் நேரம் முடிந்தவுடன் ஆட்டமேடிக் ஆப்பு தன் கைவரிசையை காண்பித்து ஏற்ற வேண்டிய இடத்தில் ஏற்றி முடிவாக இறக்கி விடும். தண்டனை முடிந்தவுடன் ஆப்புப் பலகையிலிருந்து நாம் அந்த நபரை இறக்கி விட வேண்டியிருக்கும்.

நம்மூரு ஆட்கள் கையில் ஒரு மரப்பலகை எடுத்துக் கொண்டு போய் ஆப்பு மேலேயே ஆசனம் அமைத்து உட்கார்ந்துவிடுவார்கள். அல்லது யாராவது காசு போட்டு உட்காரும் போது, ரயிலில் முன்பதிவு செய்த பொட்டிகளில் ஏறி சகல உரிமையோடு நகர்ந்து உட்காரச் சொல்லி உட்காருவது போல, முதலில்  தன் பிருஷ்ட்டத்தின் ஒரு பக்கத்தை மட்டும் பெஞ்சில் வைத்து ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டியது போல காசு போட்டு உட்கார்ந்தவரை விரட்டிவிடுவார்கள். 

வர வர எந்த இடத்தில் எந்த ஆப்பு யாருக்கு இருக்கும் என்றே தெரியாமல் போய்விடும் போலிருக்கிறது. ஆப்புக்குள்ளே உலகமடா...

பட உதவி: terraformearth.wordpress.com

Tuesday, July 20, 2010

சைக்கிளை மடக்கிக் கட்டு

அரை மணி ஒரு மணி நேரத்திற்கு வாடகைக்கு சைக்கிள் எடுத்து கற்றுக்கொண்டோம். பூபதி வாடகை சைக்கிள் கம்பனியிலிருந்து (லிமிடெட் மட்டும் தான் போட்டுக் கொள்ளவில்லை, அவ்வளவு பெரிய சைக்கிள் கம்பெனி. சைக்கிள் முன்பதிவு செய்ய வேண்டும். இல்லையேல் பிரேக் இல்லாத பெல் இல்லாத சைக்கிள்தான் கிடைக்கும்)  சிகப்பு கலர் கட்டை வண்டி வாடகைக்கு எடுத்து ஓட்டும்போது, அதற்க்கு பூட்டும் கிடையாது, ஸ்டாண்டும் கிடையாது. சைக்கிள் எடுத்து வீட்டு வாசலில்  சுவற்றில் சார்த்தி வைத்து விட்டு தண்ணீர் குடிக்க வீட்டிற்குள் போனாலும் வெளியே பார்த்துக்கொண்டே குடிக்க வேண்டும். காரணம், இரண்டு அச்சுறுத்தல்கள், ஒன்று சைக்கிள் திருட்டு போய் விட்டால் வீட்டில் தர்ம அடி வாங்கி மீண்டும் சைக்கிள் ஒட்டவே முடியாது, இரண்டாவது காரணம் தெருப் பையன்கள் யாராவது எடுத்து சுற்ற ஆரம்பித்து விடுவார்கள். மணிக்கு ஒரு ரூபாய்க்கு சைக்கிள் எடுத்து கற்றுக்கொண்டோம். 

பக்கத்து வீட்டில் இருக்கும் கணேசன் வாத்தியார் எப்போதும் சைக்கிள் உடன் வரும் அழுத்துப் பூட்டு இருந்தாலும், வளையப் பூட்டு ஒன்று வாங்கி அதையும் பூட்டி அழகு பார்ப்பார். ஒரு நாள் பாங்கிற்கு போய் பணம் எடுத்த்க்கொண்டு வெளியே வந்து பார்க்கையில் சைக்கிள் அபேஸ். யாரோ எப்போதும் இவர்  இரண்டு மூன்று பூட்டு போட்டு பூட்டி வைத்திருப்பதைப் பார்த்து வெறுப்பாகி, பேங்க்கிற்கு வந்தபோது தூக்கி சென்றுவிட்டார்கள். அதற்குப் பிறகு ஒரு பூட்டு போடுவதை வழக்கமாக்கிக் கொண்டார். டைப் இன்ஸ்டிடுயூட் கண்ணன் மாஸ்டர் ஒரு தடவை பூட்டி விட்டு ஒன்பது முறை இழுத்துப் பார்த்துவிட்டு தான் வீட்டிற்குள்ளோ அல்லது கடைக்குள்ளோ செல்வார். அவ்வளவு ஜாக்கிரதை. அவசரமாக நம்பர் டூ வருகிறதென்று ஒரு நாள் மதியம் வீடு வாசலில் வைத்திருந்த வண்டியை எவனோ கிளப்பிக் கொண்டு போய்விட்டான். லபோ திபோ என்று அடித்துகொண்டார். எடுத்தவனை சகட்டு மேனிக்கு சபித்தார். போன சைக்கிள் போனது தான். மாவட்ட நீதிமன்றத்தில் வேலை பார்க்கும் மோகன் வண்டியை நாக்கால் நக்கி துடைப்பது போல் துடைத்து பள பள என்று கண்ணைப் பறிக்க வந்து நிறுத்துவார். ஒரு ஆயுத பூஜை முடிந்த பின் செந்தூர ஆஞ்சேநேயர் கோயில் வாசலில் வைத்துவிட்டு வடை மாலை பிரசாதம் வாங்குவதற்காக உள்ளே சென்றார். பக்தியை விட வடை மிக அவசரமாக உள்ளே இழுத்ததால் வெளியே நின்றிருந்த சைக்கிளை களவு கொடுத்துவிட்டு வெறும் வடைப் பிரசாதத்தோடு வீடு திரும்பினார். 

இவ்வளவு பேர் தொலைத்து விட்டதை இப்போது இழுத்து மடக்கி கம்பியோடு கட்டிவிட்டார்கள். பக்கவாட்டில் இருக்கும் ஒரு லிவரை இழுத்து மடக்கி தந்திக் கம்பத்தோடோ அல்லது  ஈ.பி அல்லது ஏதோ ஒரு கம்பத்தோடு சேர்த்து மாடு காட்டுவது போல கட்டிபோட்டுவிடலாம். இருபத்தோறு வயதே நிரம்பிய இங்கிலாந்து கெவின் ஸ்காட் என்பவரது இந்த டிசைன் லண்டன் புதிய வடிவமைப்பாளர்கள் கண்காட்சியில் ஐநூறு பவுண்ட் ஸ்டெர்லிங் பரிசைத் தட்டி சென்றது. வாழ்த்துக்கள்.

கீழே சைக்கிளை வளைத்துக் கட்டுகிறார் ஸ்காட்.. தம்பி அசப்பில் பார்ப்பதற்கு ஹாலிவுட் பட ஹீரோ மாதிரி இல்லை..
bendbike


சைக்கிளை வளைத்துக் கட்டுவது இருக்கட்டும், மாவீரன் திரைப்படத்தில் நம்ம சூப்பர் ஸ்டார் ஹெலிகாப்டரையே கயிறு சுற்றி வளைத்துப் பிடித்து ஒரு கம்பில் கட்டுவார் பாருங்கள். அந்தக் காட்சியில் தியேட்டரில் அனைவரையும் கட்டிப் போட்டு விடுவார். அந்தக் காட்சியிலிருந்து மீள்வதற்கு எனக்குப்  பல நாட்கள் பிடித்தது. அதோடு ஊரில் நிறைய கலர் கலராக கொடிகள் பல கம்பத்தில் கட்டி பறக்கவிட்டிருக்கிறார்கள். நமூருக்கு இந்த சைக்கிள் வந்தால் எல்லா கம்பத்திலும் மடக்கி கட்டிவிடுவார்கள். அதிலும் கட்சி பேதம் நிச்சயம் இருக்கும்.

தகவல் மற்றும் பட உதவி: http://www.engadget.com/2010/07/11/bendable-bicycle-wraps-itself-around-a-pole-in-a-good-way/

Thursday, July 8, 2010

ஐங்கல்லூரிகள்

மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் போன்றோரிடம் எந்தப் பொறியியல் கல்லூரி  தொழில்நுட்பம் பயிலச் சாலச் சிறந்தது என்று கேட்டு ஒரு முடிவுக்கு வருவதற்கு பதிலாக, பல கல்லூரிகளில் பொறியியல் முடித்து வேலைக்கு சேர்ந்த இடத்தில் எந்தக் கல்லூரியில் இருந்து தேர்ந்தெடுத்த மாணவ மாணிக்கங்கள் நன்றாக தொழில் செய்கிறது என்று கேட்டு ஒரு இந்திய பொறியியல் கல்லூரிகள் ஆய்வு ஒன்றை நடத்தி Electronics For You  என்ற தொழில்நுட்ப பத்திரிக்கைக் கம்பெனிகாரர்கள் ஒரு தரவரிசைப் பட்டியல் வெளியிட்டு இருக்கிறார்கள். அண்ணா பல்கலை மற்றும் தனியார்  கல்லூரிகளின் நேர்காணல்கள்  ஆரம்பித்த நிலையில், லகரங்களில் காசு கொடுத்து கல்லூரிகளை வாங்கும் மற்றும் அய்யா, அம்மா என்று சிபாரிசு கேட்டு சேரும் மாணாக்கர்கள் இருந்தாலும், இதை வெளியிடுவது ஒரு சூடான விஷயம் தான். இப்போது சில பேருக்கு இது உதவாவிட்டாலும் கல்லூரிகளின் தரம் என்றைக்கும்  தேவைப்படும் அத்தியாவசியம் என்பதால் இதை  வெளியிடுவது தேசத்துரோக குற்றம் ஒன்றும் இல்லை. ஜவ்வுமிட்டாய் மாதிரி இழுக்காமல் தொடங்கிய சங்கதிக்கு வருவோம். 

இந்திய அளவில் முதல் ஐந்து கல்லூரிகள் என்று வெளியிட கொஞ்சம் விசனப்பட்டுக் கொண்டு இந்தியாவை வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்று நாற்க்கூறுகள் போட்டு ஒவ்வொரு மண்டலத்திலும் முதல் ஐந்து பொறியியல் தொழில்நுட்ப கல்லூரிகள் வரிசைப்படுத்தியிருக்கிறார்கள். ஐம்புலன்கள், ஐந்திணைகள், ஐம்பூதங்கள் போல முதல் ஐந்து இடத்தை பிடித்த ஐங்கல்லூரிகள் வரிசை மண்டலவாரியாக கீழே...

Photobucket
Photobucket
Photobucket

இந்தக் கல்லூரிகளை இந்த இடங்களுக்கு தேர்ந்தெடுக்க உதவிய கார்பொரேட் கம்பனிகள் விவரம் கீழே..

EE companies

இதெல்லாம் நம்மோட கல்விப் பணி, இந்தப் பணி சிறக்க யாராவது கல்விக்காவலர் ஆர்.வி.எஸ் அப்படின்னு விருது குடுப்பாங்களான்னு ரோடைப் பார்த்துக்கிட்டு இரண்டு கையையும் கன்னத்திற்கு முட்டு கொடுத்து காத்துக்கிட்டு இருக்கேன். பார்ப்போம்.

தகவல் உதவி: http://www.efytimes.com/e1/fullnews.asp?edid=48006&ntype=mor

Tuesday, April 20, 2010

செல்லமே 'செல்'லம்!

நல்ல அழகு. நல்ல கலர். பார்த்தால் நிச்சயம் திரும்பி பார்க்கத் தூண்டும் தோற்றம். நேற்றுதான் லக்மேயில் பேஃசியல், பெடிகியூர், மேனிகியூர், ஐ ப்ரோ எல்லாம் முடிந்திருக்க வேண்டும். அப்படியொன்றும் பெரிய சர்வ அலங்கார பூஷினியாக இல்லை. வெள்ளை கலர் நிகே டீ-ஷர்ட், கருப்பு நிற ஜீன்ஸ் அவ்வளவுதான். சற்றைக்கொருதரம் என்னைப் பார்த்து அழகாக சிரித்தது அந்த நிலவு. நாமோ ஒரு குடும்பஸ்தன். எப்போது பார்த்தாலும் நம்மை பார்த்து சிரித்தால் என்ன செய்வது என்று ஒரே கலக்கம். மிகவும் வெட்கத்துடனும்(?), கூச்சத்துடனும் "அம்மாடி, எனக்கு கல்யாணம் ஆகி புள்ள குட்டி எல்லாம் இருக்கு. ஒரு பத்து பதினஞ்சு வருஷத்துக்கு முன்னாலன்னா ஒ.கே" அப்படீன்னு சொல்லலாம்னு பார்த்தா, சங்கீத சானல்களில் வரும் 'தமிள்' பேசும் மங்கையர் போல் காதை மறைக்கும் கார்குழலை ஒதுக்கும்போது அந்த "நீலப் பல்" (Blue Tooth) அந்தப் பெண்ணின் பெரிய வளையம் மாட்டிய  காதை  நிறைத்திருந்தது. அந்தக் காது வளையத்திற்குள் ரோடில் வித்தை காண்பிக்கும் பெண் நுழைந்து வரலாம். அவ்வளவு பெருசு அந்த வளையம்.
போன வாரத்தில் ஒரு நாள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காலை ஐந்து நாற்பத்தைந்துக்கு  நடந்த சம்பவம் இது.

மேற்கண்ட சம்பவம் போல், இரு சக்கர வாகனத்தில் தனக்கு தானே பேசிக்கொண்டு போவது, பேருந்திலோ, மின்சார ரயிலிலோ ஏதோ ஒரு மூலையை பார்த்து பேசிக்கொண்டோ, சிரித்துக்கொண்டோ இருப்பது, பக்கத்தில் இருக்கும் சுற்றத்தையும், நட்பையும் மறந்து கட்டை விரலால் அமுத்து அமுத்து என்று அழுத்தி (அதற்க்கு வாயிருந்தால் அழும்) மெசேஜ் அனுப்புவதையும்,இன்ன பிற மொபைல் சேஷ்டைகளை அன்றாடம் நாம் கண்டு களித்து வருகிறோம். இந்த கைபேசி பற்றிய சில  சுவாரஸ்யமான  செய்திகள் கீழே வரைபடமாக..... 
 

Cell Phone Features
Via: Cell Phones

Friday, March 19, 2010

உலகை புரட்டிபோடும் ஐடியாக்கள்- II

அறிவியல் தொடர் எழுதும் அபாயகரமான நோக்கம் எதுவும் இல்லை என்றாலும், தொட்டு விட்டதை தொடர்கிறேன்..... சென்ற பதிவில் சையின்டிபிக் அமெரிக்கன் சஞ்சிகை வெளியிட்டுள்ள உலகை புரட்டி போடும் ஐடியாக்களில் சிலவற்றை பார்த்தோம். மேலும் சில....

4. வெகு ஜன-வேக பஸ் போக்குவரத்து

உலக சரித்திரத்தில் முதன்முறையாக மனிதகுல நாகரீகத்தில் கிராமப்புறங்களில் வசிப்பதை வெறுத்து நகர்ப்புறங்களில் கூட்டம் அதிகரித்துவருகிறது. இத்தகைய மாற்றங்களினால் ஒரு ஐந்து கி.மீ தொலைவில் உள்ள அலுவலகத்துக்கு கூட காலையில் பல் தேய்த்து, குளித்து, டிபன் சாப்பிட்ட கையோடு கிளம்ப வேண்டியிருக்கிறது. என் நண்பரின் மனைவி காலை டிபன், தலை வாருதல், முகத்திற்கு குலாப் பன்னீர் தண்ணீர் தெளித்து துடைத்தல், கழுத்துக்கு காதுக்கு அணிகலன்களை பூட்டிக் கொள்ளுதல், உதட்டு சாயம் பூசுதல் என்று சகலவிதமான ஒப்பனைகளையும் காரிலேயே முடித்துக்கொண்டு அலுவலகத்திற்கு கீழிறங்குவார். இந்த வசதியில்லாதோர் பிரம்ம முஹூர்த்தத்திற்கு ஒரு மணி நேரம் முன்னர் எழுந்து வீட்டில் அனைத்தும் செய்து புறப்படவேண்டியிருக்கிறது. இவ்வளவும் செய்தாலும் ஏதாவது மாண்புமிகுக்கள் சாலையை பயன்படுத்த நேரிட்டால் நாம் நின்று வழிவிட்டு தாமதமாக சென்று 'சிடு சிடு' அதிகாரியிடம் 'வெடுக் வெடுக்' என்று வசவு வாங்க வேண்டியதாகிறது. இப்படி பல பிரச்சனைகளை சமாளிக்க 2001ம் வருடத்திலிருந்து கொலம்பியாவில் போகோட என்ற நகரத்தில் சில மாறுதல்களை செய்தார்கள். பஸ் பயணிகளுக்கு முன்னரே டிக்கெட் அளித்து ஒரு மூடிய அறை போல் உள்ள பஸ் நிறுத்தத்தில் காத்திருக்க வைத்து, பஸ் வந்தவுடன் அதை திறந்து அதிலிருந்து நேராக பஸ்ஸில் ஏற்றிவிடப்பட்டார்கள். இதில் மற்றுமொரு சௌகரியம் என்னவென்றால் பேருந்தில் 'ஸ்லைடிங்' கதவுகள் வைத்து, ஒரே நேரத்தில் பலர் ஏறி இறங்கும் வண்ணம் செய்தார்கள். அத்தோடுகூட யானை ஏற்றம் குதிரை ஏற்றம் போல பேருந்தில் ஏறி இறங்குவதில் தாமதம் ஏற்படுவதால் பயணிகள் ஏறும் இடம் நேராக பஸ்ஸில் இருக்கைக்கு சமமான உயரத்தில் அமைத்தார்கள். சாலையில் தடையின்றி இந்த பேருந்துகள் செல்வதற்கு ஏதுவாக தனி வழி அமைத்து வேகமாக செல்ல வழிசெய்தார்கள். இதுவே இனி எந்த மெட்ரோபொலிட்டன் நகரத்திற்கும் ஏற்றது என்று பரிந்துரைசெய்யப்படுகிறது. கொலம்பியாவின் ட்ரான்ஸ்மிலினியோ பற்றிய ஒரு சுவாரசியமான காட்சி தொகுப்பு கீழே..



5. நெய்தல் நில பயிர்கள்

இந்த அண்டத்தில் நன்னீர் ஒரு புறம் குறைந்து வரும்போது அதிக ஜனப்பெருக்கத்தால் இன்னொரு புறம் உணவு உற்பத்தி அதிகமாக தேவைப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் அடிலைடு பல்கலைக்கழகத்தில் மரபணு பொறியியல் துறையில் பயிர்களின் இலைகள் உப்புத்தன்மையை சேகரிக்காமல் இருக்கச் செய்யவும், அந்த இலைகளை உதிர்க்காமல் இருக்கவும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். ஊரிலிருந்து வாங்கி வரும் முளைக்கீரை சென்னை கீரையை விட நன்றாக இருப்பதும் இதனால்தான். இந்த ஆராய்ச்சி வெற்றியடைந்தால் ஐந்திணைகளில் வயலும் வயல் சார்ந்த இடமாகிய மருதத்தில் மட்டும் பயிர் செய்த காலம் போய் நெய்தல் நிலத்திலும் நெற்சாகுபடி செய்யலாம்.

6. சட்டைப் பை துபாஷ்

சாக் சாப்ட்வேர்ஸ் என்ற நிறுவனம் சமீபத்தில் ஒரு தானியங்கி மொழிபெயர்ப்பான் மென்பொருள் ஒன்றை அறிமுகப்படுத்தியது. இந்த மென்பொருளை அலைபேசியில் ஏற்றிக் கொள்ளலாம். தற்போது ஆங்கிலத்திலிருந்து அரபிக்கு மொழி பெயர்க்க இதை செயல்படுத்தியிருக்கிறார்கள். ஏறக்குறைய ஒரே சமயத்தில் இருவர் பேசிக்கொள்ளும் அளவிற்கு இந்த தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. இந்த புதிய வரவினால் சுற்றுலா துறை அதிக பயன்பெறும் என்று தெரிகிறது. தற்போது வரையறுக்கப்பட்ட சொற்களை மிகத்துல்லியமாக மொழிபெயர்க்கும் இந்த மேன்போருள் அடுத்த முறை நீங்கள் தென்னாப்பிரிக்கா சென்றால் ஸுலுவில் பேசும் ஆப்ரிக்க சுந்தரி என்ன பேசுகிறாள் என்று தெளிவாக உணரமுடியும்.

7. பெருநோயறிதல்


சொஸ்த்தபடுத்த முடியாத நோய்கள் உடம்பில் வளர்வதற்கு நெடுநாட்கள் எடுத்துக்கொள்ளும் என்பது உயிரியல் விதி. பல்வேறு விதமான கடினமான மூலக்கூறுகளின் தசாப்தங்கள் கடந்த இடைத்தாக்கத்தின் விளைவே இத்தகைய நோய்கள். ஒரு சாதாரண ஜுரத்திற்க்கே முதல் இரண்டு நாட்கள் கை கால் மட்டும் வலி கண்டு பிறகுதான் அந்த வைரஸ் தாக்குகிறது. சிக்கின்குனியா போன்ற நோய்களில் ஜுரம் விட்டும் பல மாதங்கள் மூட்டு வலி தொடர்கிறது. பயோமார்க்கர் என்பது வெகு காலமாக கடைபிடித்துவரும் ஒரு செயல்முறை. தேக ஆரோக்கியமுள்ள ஆயிரம்பேரின் ரத்த மாதிரிகளை அடித்தளமாக எடுத்து சேமித்து வைத்துக்கொண்டு, நீரழிவு, மார்பக புற்றுநோய் போன்று நோய்வாய்ப்பட்டு இருப்பவர்களின் மாதிரிகளையும் ஒன்று திரட்டி, இரண்டையும் ஒப்புநோக்குகையில் கிடைக்கும் முடிவுகளை கொண்டு ஒரு இறுதி முடிவிற்கு வருவதற்கு ஆராச்சியாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. இத்திசையில் ஆராய்ச்சிகள் பெருமளவில் நடைபெறுகிறது, "உயிரியலில் இயற்கையின் பாதையை ஒரு கூற்றாக கணிக்கமுடியாமல் போனாலும் சர்வ நிச்சயமாக ஒருநாள் நோயின் அறிகுறியை கண்டு பிடிப்போம்" என்று எக்ஸாக்ட் சயின்ஸ்ஸஸ்ன் மூத்த மருத்துவ அதிகாரி பாரி பெர்ஜெர் கூறுகிறார்.

இந்த பயோமார்க்கரை பயன்படுத்தி பெருநோய் முன்எச்சரிக்கையை மனித இனம் கண்டுபிடித்துவிட்டால், பூமாதேவி எவ்விதம் இப்புவி பாரம் பொறுப்பாள்?

8. உடனடி இரத்த கட்டு

விபத்துகளின் பொது நிறைய மரணங்கள் ரத்தம் அதிகம், உடனே வெளியேறுவதால் நடைபெறுகிறது. ட்ராமா சொலுயூஷன்ஸ் என்ற மேரிலேன்ட் பல்கலைக்கழக உதவி பெற்ற நிறுவனம் 'ஸின்தெடிக் ஹைட்ரோஜெல்' என்ற ஒன்றை தயாரித்திருக்கிறார்கள். இது உடம்பிற்கு 'பைபிரின்'( fibrin )னை உடனே தயாரிக்க கட்டளையிட்டு இரத்த போக்கை நிறுத்துகிறது. இதுவும் முக்கியமான ஒரு மாற்றத்தை கொண்டுவரும் ஐடியாவாக பட்டியலில் இடம்பெறுகிறது.

9. பாக்டீரியா டூத்பேஸ்ட்



Top: Rat teeth colonized with normal S. mutans. Bottom: Rat teeth colonized with modified non-acid-producing strain. (photo by Jeff Hillman)

வாயில் உள்ள ஸ்ட்ர்ப்டோகோக்கஸ் ம்யூடன்ஸ்( Streptococcus mutans ) என்ற பாக்டீரியா தான் உணவில் உள்ள சர்க்கரையை பற்களில் உள்ள எனாமல் அழிக்கும் லாக்டிக் ஆசிட்டாக மாற்றுகிறது. ப்ளோரிடாவை தலைமையிடமாக கொண்ட ஓராஜெனிக்ஸ் ( Oragenics ) என்ற நிறுவனம் ஒரு புதிய பாக்டீரியாவை மரபணு மாற்று என்ஜினீயரிங் மூலமாக தயாரித்திருக்கிறார்கள். இது சர்க்கரையை மிக குறைந்த அளவு ஆல்கஹாலாக மாற்றுகிறது. இந்த சிகிச்சை தற்போது மருத்துவ பரிசோதனைகளில் உள்ளது. இதனால் முற்றிலுமாக ஸ்.ம்யூடன்ஸ் அழிக்கப்படுகிறது.

என்பது வயது ஆன பின்னும் முறுக்கும் சீடையும் நொறுக்கும் தாத்தாக்களையும், அரைக்கட்டு கரும்பை பல்லால் கடித்து தின்னும் பாட்டியையும் எதிர்காலத்தில் இந்த சமூகம் காண நேர்ந்தால் ஆச்சரியப்பட ஏதுமில்லை.


மிச்சமிருப்பவை என் சிற்றறிவுக்கு எட்டினாலும் இதை ஒரு பெரிய அறிவியல் தொடராக தொடர்ந்தால் என் வாசகர் (இருக்கா என்ன?) வட்டம் அதை தாங்காது என்பதால் இத்தோடு இது முற்றும்.

Wednesday, March 17, 2010

உலகை புரட்டிபோடும் ஐடியாக்கள்- I

சமீபத்திய சையின்டிபிக் அமெரிக்கன் சஞ்சிகை இருபது உலகை புரட்டிபோடும், மாற்றி அமைக்கும் தன்மையுள்ள ஐடியாக்களை பட்டியலிட்டுள்ளது. அதில் சில....

1. சூரியசக்தித்    தகடு

சூரியசக்தித் தகடு மூலம் மின்சாரம் தயாரித்து பயன் படுத்துவது. இது முன்னரே சகலருக்கும் அறிமுகமான தொழில்நுட்பமானாலும் இதை பயன் படுத்துவதில் சில பொருளாதார சிக்கல்கள் இருக்கின்றன. இந்த தகடுகளை விலை கொடுத்து வாங்குவதற்கு சொத்தை எழுதிக் கேட்கும் அளவிற்கு இருப்பதால் இது தலை எடுப்பதற்கு மிகவும் சிரமப்படுகிறது. அதனால் யு.எஸ்ஸில் 4000 வாடிக்கையாளர்கள் கொண்ட சோலார் சிட்டி என்ற நிறுவனம் இந்த சூரிய தகடுகளை இலவசமாக கொடுத்து மின்சாரத்திற்கு பணம் வசூலிக்கிறது. இந்த முறை தகடு விற்பவர், பயன்பெறும் வாடிக்கையாளர் இருவருக்கும் மிகவும் லாபகரமாக இருப்பதாக சோலார் சிட்டி தெரிவிக்கிறது. சன் ரன் என்ற அமெரிக்க நிறுவனமும் இதே போன்ற நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தெரிகிறது. இது நன்றாக செல்லுபடியானால் இன்னும் கொஞ்ச காலத்தில் எல்லோர் வீட்டு மாடியிலும் செயற்கைக்கோள் தட்டு உள்ளது போன்று சூரியத் தகடுகளும் வரலாம். மின்சாரம் இல்லை என்று பாடாவதியான டி.என்.இ.பி அலுவலகத்திற்கு யாருமே எடுக்காத தொலைபேசியை அழைக்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகாமல் இருக்கலாம். கரண்ட் ஆபிஸிலிருந்து வந்து போஸ்ட் ஏறி பியூஸ் போட்டு தலைசொரிபவருக்கு சில்லரை கொடுக்கும் நிலை இல்லாமல் போவதற்கு சூரிய பகவானை பொங்கலன்று மட்டும் அல்லாமல் என்றென்றும் வணங்கும் நிலை வரலாம்.

2. எனர்ஜி மீட்டர்ஸ்

மக்கள் தங்களுடைய சாதனங்களிளிருந்து எவ்வளவு சக்தியை உபயோகிக்கிறார்கள் என்று நிமிடத்திற்கு நிமிடம் அந்தந்த சாதனங்களிலேயே மீட்டர்(நம் உள்ளூர் ஆட்டோ மீட்டர் மாதிரி இல்லாமல்) போட்டு காண்பித்துக் கொண்டே இருந்தால் ஐந்து முதல் பதினைந்து சதவிகிதம் வரை சக்தி வீணாவது குறைகிறது என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கூகிள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் உள்ளூர்  தொழில்நுட்ப ஆசாமிகளுடன் சேர்ந்து இந்த சக்தி உபயோக கணக்குகளை இணையத்தில் ஏற்றி மக்கள் ஒரு விழிப்புணர்வோடு இருக்க உதவி புரிய வருகின்றன.

3.மின்சார காற்று

நாம் வாழும் இப்புவியிலிருந்து பத்து கி.,மீக்கு மேல் ஐம்பது கி.மீக்குள் இருப்பது ஸ்ட்ரடோஸ்பியர். இந்த இடத்தில் ஓயாமல் நல்ல வேகத்தில் காற்று வீசிக்கொண்டே இருக்கிறது. இந்த வெயிலுக்கு அங்கே போய் உட்கார்ந்தால் நன்றாக இருக்கும் என்று நாம் சிந்திக்கும் இவ்வேளையில் லோகஷேமதிற்காக சிந்தித்த சில புண்ணியவான்கள் அங்கு அடிக்கும் காற்றிலிருந்து மின்சாரம் தயாரிப்பது பற்றி ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்கள். இப்படி தயாரிக்கப்படும் மின்சாரமானது ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் தேவையைவிட நூறு மடங்கு அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. கலிபோர்னியாவின் ஸ்கை வின்ட்பவர் என்ற நிறுவனம் ராட்சத கோபுரங்களை நிறுவப்போகும் வேளையில், இத்தாலியின் கைட்ஜென் என்ற நிறுவனம் மிக உயரப் பறக்கும் பட்டம் (மேலே படத்தில் இருப்பது அதுவே) மூலமாக ஸ்ட்ரடோஸ்பியர் காற்றிலிருந்து கரண்ட் உருவ முயற்சி செய்கிறார்கள்.
(ஐடியாக்கள் தொடரும்)

Monday, March 1, 2010

எங்கெங்கு காணினும் தகவலடா!

அவன் யார்ரா பெரிய கை. த.ஒ.சீ.க. கட்சியில வட்டமா இருக்கான். மாசம் லட்ச ரூபாய்க்கு கல்லா கட்ராண்டா.....
(த.ஒ.சீ.க = தமிழ்நாடு ஒழுக்க சீலர்கள் கட்சி)

பி.டபிள்யூ.டில இன்ஜீனியரா இருக்கிற பெருமாள் இருபத்தி மூவாயிரம் சம்பளமும் நாப்பத்தி ரெண்டாயிரம் கிம்பளமும் சேர்த்து அருவத்தி அஞ்சாயிரம் மாசம் சம்பாதிக்கிறான். ஹும் எல்லோருக்கும் இந்த தெறமை வருமா....

ஒரு நாளைக்கு லட்சம் பேருக்கு மேலே தி. நகர் ரெங்கநாதன்  தெருவுலேர்ந்து சாமான்லாம் வாங்கிண்டு  வராளாம்...

ரேஷன் கடையில ஒரு கிலோ ஜீனிக்கு தொள்ளாயிரம் தான் நிக்கிது...

நித்தியமும் முடிச்சூர் வர்ற பத்து பஸ்ல அஞ்சு பஸ் ஓடாம முடமாயி நின்னுடுது...

நம்ம ஊர்ல ரெண்டும் பக்கத்து ஊர்ல ஒன்னும் வச்சிருக்கான்டா இவன்....

பரிட்சை எளுதின எம்பத்தி நாலு பேருல இருவது பேருதான் பாஸு. பாக்கி எல்லாமே பூட்ட கேஸு....

உன் வண்டியாவது பத்து குடுக்குது. என்னோடது எட்டு மட்டுமே  குடுத்து என் உசுரை எடுக்குது. 

எதிர்த்த வீட்டு கல்யாணி அந்த குப்பு கூட ஓடி போய்ட்டாளாம். 

இது என்ன ஒரே அக்கபோரா இருக்கு. எப்ப பார்த்தாலும் வம்பு தான் என்று யாராவது சொன்னால் அது தவறு.  மேலே கண்ட வாசகங்கள் எல்லாவற்றிலும் இருப்பது தகவல்கள் தான்.முன்பு இதுபோல் முகத்திற்கு முகம் பார்த்து வம்பு தும்பு பேசியவர்கள் இப்போது கூடும் இடம் இணையம். பேசியதோடு  மட்டும் இல்லாமல் தான் நேற்று சென்ற பார்ட்டியில்  நடந்த கூத்துக்களை படம் பிடித்து நெட்டில் 'பிகாசோ' படத் தொகுப்பில் ஏற்றி விடுகிறார்கள். இரண்டு நிமிடத்திற்கு ஒரு முறை "இங்க ஒரே ஹாட்டா  இருக்கு.. அங்க எப்டி?" என்று  ஏ.சி ரூமிற்குள்ளிருந்து டுவீட்டுகிறார்கள். ஓர்குட் 'துணுக்கு சேகரப் புத்தகத்தில்' (மன்னிக்கவும் Scrap புக் இன் தமிழாக்கம் ) கிறுக்குகிறார்கள். யூ ட்டுயுபில் கண்டதையும் நல்லதையும் காண்கிறார்கள். யாஹூ, எம்.எஸ்.என்., ஜீடாக், ஸ்கைப் போன்று பல வழிகளில் பேசுகிறார்கள், சிரிக்கிறார்கள், அழுகிறார்கள், பார்க்கிறார்கள், காதலிக்கிறார்கள்.....

இப்படி இவர்கள் செய்யும் எல்லாவற்றையும் கூட்டி கழித்து பார்த்து ஒரு கணக்கு எடுத்திருக்கிறார்கள். 2009 ஆரம்பத்தில் மொத்த இணைய போக்குவரத்து 5 எக்ஸா பைட்டுகள் (exa bytes).  இது போல் உற்பத்தியாகும் விவரங்களை சேமித்து வைப்பதற்கு இன்னமும் போதுமான அளவு தேக்கங்களை உற்பத்தி செய்ய முடியவில்லை. 

எம். பி, ஜீ.பி தெரியும், இது என்ன எக்ஸா என்போருக்கு ஒரு மேலதிக தகவல், ஜீ.பியிலிருந்து இரண்டு படி தாண்டி மூன்றாவது படியில் உள்ளது   எக்ஸா.  டெரா (Tera) , பெடா (Peta) அதற்க்கப்புறம்  எக்ஸா.  இதற்க்கப்புறம் ஜெட்டாவும் (Zetta) யோட்டாவும்(Yotta) உண்டு .  கீழே ஒரு சிறிய வாய்ப்பாடு 
  1. b =  bit  (1 or 0 )
  2. B = byte ( 8 bit)
  3. KB =  Kilo Byte (1024B)
  4. MB = Mega Byte (1024KB)
  5. GB = Giga Byte (1024MB)
  6. TB = Tera Byte (1024GB)
  7. PB = Peta Byte (1024TB)
  8. EB = Exa Byte (1024PB)
  9. ZB = Zetta Byte (1024EB)
  10. YB = Yotta Byte (1024ZB)
இதில் மூன்றவதிலிருந்து ஒவ்வொன்றின் 1000 மடங்கு அதன் கீழ் வருவது.  அதன் படி ஒரு எக்ஸாவானது  1 EB = 1,000,000,000,000,000,000 B.

டெரா வரைக்கும் பார்த்த நாம் பெடா எங்கு உபயோகப்படும் என்றால் நம்ம கூகிள் அண்ணாச்சி ஒரு மணி நேரத்திற்கு ஒரு பெடா பைட்டு தகவல்களை அலசி ஆராய்ந்து நமக்கு தேடி தருகிறது.  சென்ற வருடம் முழுவதும் பரிமாற்றம் செய்யப்பட்ட, பாதுகாக்கப்பட்ட, பராமரிக்கப்பட்ட விவரங்கள் 1.2 ZB. அப்படியென்றால் YB பற்றி நினைப்பதற்குள்  "ஏம்பா யாரது? கொஞ்சம் லெமன் போட்டு தண்ணி கொண்டு வா..." என்று கேட்பது புரிகிறது.



இப்போது நாம் மேலே பார்த்த அனைத்தையும் ஒரு நல்ல 'தகவல்' உள்ளம் படைத்தவர் ஒரு 'விவர வரைபட'  (Info graphic video) வீடியோவாக தொகுத்ததை மேலே கண்டீர்கள். "இரண்டாயிரத்தி பதிமூணுல நாம பரிமாற்றம் செய்யப்போற தகவல்கள் ......."  என்று நான் ஆரம்பிக்கும் போது
 "ஏம்பா இதை கேட்க நாதி இல்லையா? ஒரே நம்பர் ஒன் கொடுமையா போச்சே! ......"
"என்ன கொடுமை சரவணன் இது..."  என்று சந்திரமுகி பிரபு போலவும்  வசனங்கள்  என் காதில் விழுகிறது.

2013-ல 667 Exa Bytes அளவிற்கு இணைய போக்குவரத்து இருக்கும் என ஊகிக்க முடிவதாக சிஸ்கோ (Cisco) விலிருந்து   வரும் அதிகார பூர்வ செய்திகள் தெரிவிக்கிறது. 

"இவ்வளோ சொல்லியும் விஜயகாந்த் படத்துக்கு லியாகத் அலிகான் வசனம் மாதிரி, ஒரு ஊராட்சி ஒன்றியத்துல நாப்பத்தி ரெண்டு சத்துணவுக் கூடம் இருக்கு, ஒன்னுக்கு இருபத்தி ரெண்டு பசங்கன்னா மொத்தமா தொள்ளாயிரத்து இருவத்து நாலு பசங்க சாப்பிடுது......ன்னு சொல்லிகிட்டே போறான்டா. துரத்தி வெட்டுங்கடா ........."

டிஷ்யூம்....  டிஷ்யூம்.... சதக்...  சதக்.....
(துரத்தி வெட்டுவது காதில் கேட்கிறது )

Photo Courtesy: http://www.economist.com/

Wednesday, February 24, 2010

இஷ்டமித்திர பந்துக்கள்

 
முந்தாநாள் அந்தி நேரம் பழமுதிர்சோலையில் முருங்கைக்காய் வாங்க வந்த முரளியுடன்  குடும்பம், குழந்தை குட்டிகள் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது ஒரு விஷயத்திற்கு ரொம்பவே அங்கலாய்த்துக்கொண்டான். ஒன்றும் பெரியதாக இல்லை, அவனுடைய சித்தப்பாவின் ஒன்று விட்ட அக்காவின் மருமகளுக்கு வேலை கிடைக்கவில்லை என்று சாப்ட்வேர் துறை தரையில் தலைகுப்புற படுத்திருந்தபோது சொன்னான். "அவளுக்கு வேலை கிடைத்துவிட்டதா?" என்று கேட்டதற்கு "எந்த சித்தப்பாவின் மருமகள்?" என்று இருபுருவம் சுருக்கி கேட்டான். அதற்க்கு நான் "உங்க சித்தப்பாவின் ஒன்று விட்ட அக்காவின் மருமகளைக் கூட மறந்து விட்டியா?" என்றதற்கு தான் அவ்வளவு அங்கலாய்ப்பு. அவனுக்கு ஒன்றும் அம்னீஷியாவோ அல்லது அல்சிமேர்(Alzheimer) நோயோ கிடையாது.  பின்ன என்னவென்றால் அவனுடைய சீட்டு கிழியும் வேலைப் பளுவினால் சொந்த பந்தங்களை கூட மறக்கக்கூடிய நிலை வந்ததை எண்ணி நொந்ததுதான்.

இன்னதுதான் வலை மென்பொருளாக தயாரிப்பது என்றில்லாமல் போய்விட்டது. சகலமும் "சமூக கட்டமைப்பு வலை"க்குள் (Social Networking WebSite) வந்துவிட்டது. நண்பர்கள் நாலு பேர் பிரிந்து போனால் கடிதம் எழுதி இந்த இடத்தில் இந்த தேதியில் சந்திக்கலாம் என்று ஒரு மாதமாய் திட்டமிட்டு கூடி பேசி மகிழ்ந்தது போய் "ஓர்குட்"(orkut) வந்தது. சரிப்பா இனிமேல் அம்மாபேட்டை அரசுவும் அமெரிக்கா கிருஷ்ணனும் எப்போது வேண்டுமானாலும் தொடர்பில் இருக்கலாம் என்றால் அதுவும் முடிந்த பாடில்லை இந்த ஒர்குட்டிற்கு போட்டியாக பந்தயத்திற்கு "முகப்புத்தகம்" (facebook) வந்தது. பதின்ம வயதுக்கு வந்தவர்களில் பதின்மூன்று வயதிலிருந்து ஒரு கணக்குத் துவங்கி தன்னுடைய சக ஆண் மற்றும் பெண் வயது வித்தியாசம் இல்லாமல் தன்னோடு இணையத்தில் இணைத்துக் கொள்ளலாம்/கொல்லலாம். இனிமேல் நேருக்கு நேர் சந்தித்தால் தான் நண்பியின் நண்பியை நண்பியாக்கிக்கலாம் என்றில்லாமல், ரேகாவின் உயிர்த்தோழி காஞ்சனாவிற்கு கால் மணி நேரத்தில் கலாவும் தோழியாகலாம். அரட்டை மட்டும் அல்லாமல், மொட்டை மாடியில் துணி மற்றும் வடாம் காய போடும் போதும், இரண்டு நண்பிகளுடன் நடுவில் தலை நுழைத்து பெவிகுவிக் போட்டு கன்னங்கள் ஒட்டி இருந்தபோதும், போகும்போதும், வரும்போதும், மார்கெட்டிலும் இப்படி பல (அப)சந்தர்ப்பங்களில் எடுத்த புகைப்படங்களை நெட்டில் விட்டு எல்லோரையும் பயமுறத்தலாம்.
இதன் அடுத்த பரிமாண வளர்ச்சியாக வந்தது தான் "டுவீட்டு" (Tweets). அவசரகதியில் இயங்கும் உலகத்தில் பக்கம் பக்கமாக மெயில் அனுப்பியோ, ஒரு இடத்தில் உட்கார்ந்து ஓர்குட், முகப்புத்தகம் பார்த்தோ அளவலாவுவதை விடுத்து, அற்பசங்கையின் போது கூட இரு வாக்கியங்களில் 'நறுக்'கென்று 'அகர முதல எழுத்தெல்லாம்' எழுதியவன் போல் நம்மை பற்றி நாம் குறுஞ்செய்திகளை அனுப்ப, நம்மை தொடருபவர்கள் எவ்வித முயற்சியும் இன்றி நம்மை பற்றி தெரிந்துகொள்ளலாம். அதிகபட்சமாக 140 எழுத்துக்கள் வரை பதியலாம். இந்த வலைமனையை www.twitter.com என்று உலாவியில் அமுக்கி தெரிந்துகொள்ளுங்கள்.

இதுபோல் பல மென்பொருட்கள் வலையில் உலவுகின்றன. சரி, தொடங்கிய பிரச்சனைக்கு வருவோம். முரளியின் சொந்தபந்தங்களை தொடர்பிலும், நினைவிலும் வைப்பதற்கு தோதாக அதற்கும் ஒரு வலைமனை தொடங்கிவிட்டார்கள். அதன் பெயர் ஜீனி.காம் (www.geni.com). ஜீனீயாலாஜி என்ற கலைச்சொல்லின் வாமன வடிவம் தான் ஜீனி. அப்பா, அம்மா, அம்மம்மா, அம்மம்மாவின் அப்பா அம்மா, அப்பப்பா, அப்பப்பாவின் கொள்ளுத் தாத்தா, மாமியாரின் ஒர்ப்படியின் பெண் மற்றும் பையன் போன்று குடும்ப பந்துக்கள் அனைவரையும் ஒரே மரத்தின் கீழ் கொண்டுவரலாம். 'குடும்ப மரத்தை'  (Family Tree) பேணிப் பாதுகாப்பது மிகவும் சுலபம் கூட. இப்போது எல்லோருக்கும் ஈமெயில் உள்ளது. ஒவ்வொருவருடைய ஈமெயில் முகவரியை அவர்கள் பெயருக்கு நேர் பதிந்து வைத்துவிட்டோமேயானால் வாழ்த்து அட்டையோ, அழைப்பிதழோ அரிதாகிக்கொண்டே வரும் இக்காலத்தில், ஜீனி.காமில் சென்று "யப்பா எம்பெண்ணுக்குக்கு வர்ற பத்தாம் தேதி காலையில ஏழரை ஒம்போது ராகுகாலம் கழிஞ்சு ஆயுட்ஷேமம் வச்சிருக்கேன். அவசியம் எல்லோரும் தம்பதி குழந்தை குட்டி சகிதமா தி.நகர் அயோத்யா மண்டபத்துக்கு வந்துடுங்க" என்று ஒரு ஈமெயில் ஜீனி மூலமாக தட்டி விட்டால் ஒரே சமயத்தில் அனைவரையும் தண்டம் சமர்ப்பித்து அழைத்து விடலாம்.

எல்லாவற்றிக்கும் கணினியை நம்பி பிழைத்துக் கொண்டிருக்கிறோம். என் நண்பர் ரவியின் ஆரூடம் அடுத்த உலகப்போர் கணினி மூலமாகத்தான் நிகழும் என்று. நாஸாவின் டாட்டாபேஸ் இணையம் மூலமாக ஹாக் செய்யப்பட்டு அவர்களுடைய பல அறிய பெரிய முயற்ச்சிகளை  முறியடிக்கலாம். ரயில்வே மற்றும் பல பொதுத்துறை போக்குவரத்து சர்வர்களிடமிருந்து முன்பதிவு விவரங்களை அழித்து குழப்பம் விளைவிக்கலாம். இதுபோன்று பல நாச வேலைகள் நடக்கலாம். அதெல்லாம் அப்புறம், எண்ணற்ற பல வசதிகளால் கணினியிடம் ரொம்பவே அது சொல்வதற்கெல்லாம் வாலாட்டிகொன்டே இருந்துவிட்டு நாளைக்கு யாரேனும் "உங்க அம்மா பேரு கோமளா தானே ..." என்று கடைவீதியில் பார்த்து கேட்டால், "ஒரு  ரெண்டு நிமிஷம்  ஜீனி பார்த்து  சொல்றேன்...   " என்று சொல்லாமல் இருந்தால் சரிதான்.

Tuesday, February 16, 2010

குப்புசாமி C/O சந்திரன்

எங்கு பார்த்தாலும் ஒரே புகை மயம். நாம் இருப்பது பூலோகமா அல்லது தேவலோகமா என்று தெரியவில்லை. கண்ணுக்கு குளிர் கண்ணாடி போன்று மூக்கிற்கும் ஓரு வடிகட்டி வரும் காலங்களில் தேவைப்படும். மூக்கில் அடைத்திருப்பது பஞ்சா அல்லது வடிகட்டியா என்று தெரிந்த பின்புதான் கீழே கிடப்பது சவமா அல்லது சதீஷா என்று அறிய வேண்டிய காலம் ஒன்று வரலாம். பன்றிக் காய்ச்சலுக்கு மட்டும் உபயோகப்பட்டது நிரந்தரமாக தேவைப்படும். அந்த அளவிற்கு காற்று மண்டலம் மாசடைந்து விட்டது. "Water is the Elixir of Life" என்பார்கள். வானோர்களின் கொடையாகவும் சர்வ ரோகங்களையும் கூட  சொஸ்தப்படுத்தும்  அமிர்தத்திற்கு ஒத்து இருந்த தண்ணீர் இப்போது இந்த தரணியில் எங்குமே வாயில் வைக்க முடியாதபடி உள்ளது. சற்று ஆழமாக தோண்டி சாலை போடுவதற்கு முயன்றால் அங்கு கழிவுநீர் காட்டாறாக பெருக்கெடுத்து ஓடுவதை நாம் சென்னையில் எங்கும் காணலாம். இதனால் 'சுத்தகரிக்கப்பட்ட'  நன்னீர், சிங்கம்பட்டி  மற்றும் சிங்கப்பூர்  நிறுவனங்களால் ரயில்நிலையம், பேருந்து நிறுத்தங்கள், பொட்டி கடை, வணிக வளாகம், நிற்கும் பேருந்து, ஓடும் பேருந்து என்று மனிதன் நடமாடும் இடம் எங்கு  பார்த்தாலும் பாலிதீன் பாக்கெட்டிலும் போத்தல்களிலும் நயமான விலையில் விற்கப்படுகிறது.  ஆட்டோக்களும், மாநகர பேருந்துகளும், இன்ன பிற ஹோர்ணில் வைத்த கை எடுக்காமல் ஓசை எழுப்புபவர்களாலும், மிக விரைவில், ஒலி மாசுபடுவதால் எரிச்சல், படபடப்பு, இருதய கோளாறுகள் போன்ற நோய்களால் அவதியுறும் நிலையும்  உளவியல்ரீதியாகவும்  மக்கள் பெருமளவில் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இப்படி இந்த பூலோகம் உபயோகப்படாமல் போனால் நாம் இனி சந்தடி மிகுந்த சைதாபேட்டையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை, நேரே சந்திரனில் குடியேறலாம்.

சமீபத்தில் சந்திரனுக்கு ஏவப்பட்ட சந்திராயன் - I என்ற விண்கலம் பல அறிய தகவல்களை சேமித்து நமக்கு அனுப்புகிறது. குழாயடியும் சண்டையும் உள்ளதா என்று தெரியாது ஆனால் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளது தெரிகிறது.



உயிர் வாழ குறைந்தபட்சம் வயிற்றிக்கு தயிர் சாதம், மானத்தை மறைக்க துணி, வெயில் மழைக்கு ஒதுங்க ஒரு இடம் இம்மூன்றும் அவசியமாகிறது. இதில் தண்ணீர் இருப்பதாக தென்பட்டதால் வயிற்றிற்கு வகை செய்தாயிற்று. இப்போது அங்கே இரண்டு கிலோ மீட்டர் நீளமும், 380 மீட்டர் அகலமும் கொண்ட குகை உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அதலால் தலைக்கு மேலே ஒரு கூரையும் கிடைத்தாயிற்று. இனிமேல் நிலா காட்டி குழந்தைகளுக்கு சோருட்டிய காலம் போய், நிலவில் சோருட்டகூடிய காலம் தலைப்பட்டிருக்கிறது. இத்தகைய தகவல்களை நிழற்படமாக அனுப்புவது டி.எம்.சி எனப்படும் டெர்ரைன் மேப்பிங் கேமரா (Terrain Mapping Camera). இது இருபது கி.மீ எல்லை வரை படங்கள் எடுக்கவல்லது.

அப்துல் கலாமுக்கு சந்திரனில் ஐந்து ஏக்கர் நிலம் உள்ளது என பரவலாக ஒரு வதந்தி ஊரில் உள்ளது. பூமியில் எல்லா இடங்களையும் சுற்றித்திரிந்தவர்கள் இனி சந்திரனுக்கு ஒரு உல்லாச சுற்றுலா செல்லலாம். தங்களது திருமண வைபவத்தை சந்திரன் மஹாலில் நடத்தலாம். ஒத்து வராத மாமியாரை சந்திரனிலும், மருமகளை பூமியிலும் குடியமர்த்தலாம். அரசியல்வாதிகள் பினாமிகளை வைத்து ஒரு வணிக வளாகம் கட்டலாம். நாயர் சாயா கடை போடலாம். இளம் ஜோடிகள் நிலவில் 'தேனிலவு' கொண்டாடலாம்.   மிக குறைந்த கட்டணமாக  மூன்று ரூபாயை 'மை ட்ரிப் டாட் காம்'  அறிவித்து 'மூன்பஸ் 320A' வில் ஒரு கும்பலை அனுப்பலாம்.  அந்த சந்திரன் ஒத்து வரவில்லை என்றால், சந்திரனுக்கு சந்திரனில் குடியேறலாம். சந்திரனில் பூர்வ குடியாக ஆசையா? உங்களுக்கும் ஒரு ஏக்கர் வேண்டுமா? தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
சோமன்,
நிலா ரியல் எஸ்டேட்ஸ்,
1, ஆர்ம்ஸ்டிராங் தெரு,
அப்போல்லோ விண்வெளி பள்ளம் அருகில்,
சந்திரன்.
000 001.
நிலா பேசி: ED.1A.88.79 (பதினாரிலக்க எண்)
செயற்கைக்கோள் பேசி: 5-001-000-00001 (ஐந்து என்பது, இந்த புவிக்கு சந்திரன் ஐந்தாவது பெரிய இயற்கையான செயற்கைக்கோள். (Natural Satellite).
Photo Courtesy: http://www.chandrayaan-i.com

Wednesday, February 10, 2010

கேமரா 'மேன்'

 வைட்டமின் டி (vitamin D) என்ற நிறுவனம் இந்த மாதம் ஒரு புதிய வலைக்காமரா மென்பொருள் ஒன்றை தயாரித்துள்ளது. இனிமேல் உள்ளே சென்றது ஆடா, மாடா, புலியா, பூனையா அல்லது டி.கல்லுப்பட்டி கணேசனா என்று இவர்கள் தயாரித்துள்ள கேமரா மூலம் எளிதில் கண்டு பிடித்துவிடலாம். பல மாடி கட்டிட கடைகளில் மூலைக்கு மூலை சுவற்றில் பல்லி போல ஓட்ட வைத்து தொந்தி பெருத்த முதலாளி கல்லாவில் உட்கார்ந்து பார்த்த வண்ணம் இருப்பார், ஏதோ இந்தியா பாகிஸ்தான் மாட்ச் போல.இந்த புதுவரவின் பயன்பாடு இது போன்ற காரணங்களுக்கு அவசியம் இல்லை என்றாலும், சில முக்கியமான, விசேஷ கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைகளை திருப்திபடுத்தும்.

இந்த வலைகேமரா முதலில் இணையத்தில் ஒருவருக்கொருவர் முகம் பார்த்து சுக, துக்கங்களை பகிர்ந்து கொள்வதற்காகவே தயாரிக்கப்பட்டது. ஒரு காலத்தில் காமெரா என்பதே கல்யாணம், சீமந்தம், ஆயுட்ஷேமேம், காது குத்து, குச்சி கட்டும் ருது சாந்தி போன்றவற்றிக்கு அசோக் போட்டோ ஸ்டுடியோ குமார் வந்து, கும்பலாக எல்லோரையும் நிறுத்தி, பல் எடுப்பாக இருப்பவர்கள் குறைவாக மோனலிசா புன்னகை புரிவதை புரிந்து கொள்ளாமல், "நல்லா சிரிங்க" என்று படுத்தி, "ரெடி .. ஸ்மைல் ப்ளீஸ்" சொல்லி, கோயில் சிலை போல கொஞ்ச நேரம் நிறுத்தி, "ஓகே" என்று எடுத்து கொடுப்பதற்காக இருந்தது. ஒரு பொறியில் படிப்பு காலவரம்பிற்கு உட்பட்ட நேரத்தில் இந்த கேமரா தொழில்நுட்பம், கைபேசி, மடிக்கணினி, டிஜிட்டல் கேமரா, ஹாண்டி கேமரா என்று சகலரும் சந்தோஷ் சிவன், பி.சி.ஸ்ரீராம் கணக்காக 'கிளிக்' பண்ணுவதற்கு எதுவாக முதிர்ச்சி அடைந்தது.

நாளடைவில் இந்த தொழில்நுட்பம்,  நாம் வீட்டை விட்டு வெளியூர் செல்லும்போது வீட்டின் மீது ஒரு கண் வைப்பதற்கும், ஓட்டலில் சமையல்காரர் சங்கர ஐயர் முந்திரி, பாதாம் எடுத்து வாயில் போடுகிறாரா என்பதற்கும், நம்ம வீட்டு ப்ருனோ சுற்றி சுற்றி காவல் காக்கிறதா என்பதை நாம் கண்காணிப்பதற்கும், என்பது வயது என்.டி.திவாரியின் 'சரஸ லீலா'வை படம் பிடிக்கவும், பங்காரு லக்ஷ்மன் 'அன்பளிப்பு' வாங்குவதை தெஹெல்கா சுருட்டவும், கல்லூரி மாணவிகளை வைத்து சக மாணவர்கள் கொக்கோகம் சினிமா உருவாக்கவும், தேவனாதன்கள் கோயிலில் குவளையர்களை குலாவுவதை தனக்கு தானே எடுத்துக்கொள்ளவும் உபயோகப்படுவதாகிவிட்டது. நண்பரின் ஐந்து வயது மகள் அவருடைய நோக்கியா மூலம் தனக்கு தானே படமெடுத்து மகிழ்கிறது. பாம்பைத் தவிர எல்லோரும் இப்போது டிஜிட்டலில் படம் எடுக்கிறோம். கூகிள் சாட்டிலைட் மூலமாக நாசாவிலுருந்து நரசிங்கம்பேட்டை வரை உலகத்தையே படம் எடுத்து வைத்திருக்கிறது.

தற்சமயம் எல்லா கார்ப்பரேட் நிறுவனங்களிலும் வாசலில் இருந்து கொல்லை வரை, கழிப்பறைகள் நீங்கலாக இந்த காமேராக்கள் மூலமாக தங்கள் ஊழியர்கள் மேல் ஒரு கண் வைத்திருக்கிறார்கள். அறையில் உட்கார்ந்தபடியே மேலாளர் சீனிவாசன் தமிழ்ச்செல்வி யாரை பார்த்து சிரிக்கிறாள், ரேகா எவ்வளவு நேரம் அலைபேசியில் கதைக்கிறாள், கோபாலன் சீட் எவ்வளவு நேரம் அவன் இல்லாமல் வெறுமையாக இருக்கிறது போன்ற இன்றியமையாத சமாச்சாரங்களை மிக எளிதாக அவர் வேறு வேலையே செய்யாமல் அறியமுடிகிறது. என்றாவது ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தால் அன்று இந்த வலைகாமேராக்கள் மூலம் கணினியில் பதிவு செய்ததை புலனாய்வு அதிகாரிகளுடன் அமர்ந்து ப்ரிவ்யூ தியேட்டரில் படம் பார்ப்பது போல எல்லா அசைவுகளையும் பார்த்து கள்வனை கண்டு பிடிப்பார்கள். அதற்க்கு வசதியாக இப்போது இவர்கள் தயாரித்துள்ள வலைகாமேரா மனிதர்களை மட்டும் தனியாக அடையாளம் கண்டு கொள்ளும் நுட்பத்தை பொதிந்திருக்கிரார்கள். இதனால் கணினியில் கள்வனை தேடும் பணி இலகுவாகிறது. 2007 ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் 'செயற்கை நுண்ணறிவு' திறன் கொண்ட மென்பொருள் ஒன்றை தயாரித்து வெளியிட்டுயிருக்கிறது.பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு துறைகள் தவிர, இந்த மென்பொருள் மூலம் பயனடையும் மற்றுமொரு பெரிய துறை கேளிக்கை. தற்போதைய யூட்யூப் போன்ற காட்சி தேடல் இணையங்களில் உதவி வார்த்தைகள் மூலமாக குறுப்பிட்ட நிகழ்படம் கிடைக்கிறது. இந்த புதிய மென்பொருள் மூலம் கமலஹாசனின் எந்த நிகழ்படத்தையும் வார்த்தைகள் இன்றி தேடி கண்டு மகிழலாம். மாரி, கபாலி, கண்ணாயிரம் போன்றோரின் மாதிரிகளை கணினியில் உள்ளிட்டு அவர்களின் அத்துமீறிய வருகையை நிறுத்தலாம் அல்லது அலாரம் அடிக்கவைத்து காவலர்களை அழைக்கலாம். இது போன்று பல பயன்பாடுகளின் துவக்கம் இந்த அறிய முயற்சி.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails