Showing posts with label தி வீக். Show all posts
Showing posts with label தி வீக். Show all posts

Tuesday, February 5, 2013

சென்னின் காந்தி

விஸ்வரூப அமர்க்களுங்கிடையே காந்தியார் சிறப்பு மலராக கடந்தவாரம் வெளியான ”தி வீக்” சஞ்சிகையில் விருந்தினர் பத்தியாக கடைசிப் பக்கத்தில் அமர்த்யா சென் எழுதிய Cherry-picking from Gandhi என்ற கட்டுரை என்னை ஈர்த்தது. காந்தி உயிருடன் இருந்தால் பங்களாதேஷ் மதசார்பற்ற நாடாக உதயமானதையும் அதற்கு முன்னர் பங்களாதேஷில் தோன்றிய மொழிப்புரட்சியையும் பார்த்து மதமும் அரசியலும் எப்படி ஆளுமை செலுத்துகிறது என்று யோசித்துக்கொண்டிருப்பார் என்கிறார். காந்தியிடமிருந்து ஆதாரமே தேடாமல் Cherry-pickingகாக நம்மைக் கவர்ந்திழுப்பவை சமாதானமும் அஹிம்சையும் என்கிறது சென்னின் பார்வை.

ராமச்சந்திர குஹா சென்னின் இந்த செர்ரி பிக்கிங் பழக்கத்தைப் பற்றிக் கடுமையாக விமர்சித்திருந்தாலும் பாசிட்டிவான விஷயங்களுக்கு இது நல்லது என்று தன் கட்சிக்காக வாதாடுகிறார் சென். மேற்கத்தியர்கள் தங்களது கலாச்சாரத்தைப் பற்றி காவியங்கள் பல புனையும் போதும் கோத்ஸ் விஸிகோத்கள் பற்றி பிரஸ்தாபிக்காமல் சுவாரஸ்யமான கிரேக்கர்கள் மற்றும் ஏதெனியர் பற்றித்தான் மாய்ந்து மாய்ந்து எழுதுகிறார்களாம். பெண்கள் அரசியலுக்கு ஒவ்வாதவர்கள் மற்றும் அடிமைகளுக்கு ஓட்டுரிமையில்லை என்று சொன்ன அரிஸ்ட்டாட்டிலை விட அவரது மக்களாட்சி அரசியல் பற்றிய சொற்பொழிவுகளுக்காகத்தான் அவரைக் கொண்டாடுகிறோம் என்கிறார்.

இந்தியா காந்தியிடமிருந்து அவசியம் கிரஹித்துக்கொள்ளவேண்டிய இரண்டில் ஒன்று சுற்றுப்புறசூழலியல் என்றும் இரண்டாவது மதசார்பின்மை என்றும் சொல்கிறார். சமயம் சார்ந்த மதசார்பின்மையைக் (religion-connected secularism) காட்டிலும் சமூகம் சார்ந்த மதசார்பின்மையே(community-connected secularism) ஒரு மதசார்பற்ற நாட்டின் வெற்றிக்கு வித்து என்று கூறும் காந்தியின் சிந்தனை நெஞ்சில் ஏற்றிப் போற்றத்தக்கது என்று சிலாகிக்கிறார் சென். அமர்-அக்பர்-அந்தோணியாக வாழ்ந்து தோளில் கை போட்டுக்கொள்வதை விட மூவருமே அமராகவும், மூவருமே அக்பராகவும், மூவருமே அந்தோணியாகவும் ஒரே சமூகமாகக் கைக்கோர்க்க வேண்டுமென்பது காந்தியிஸத்தின் ஒரு கோட்பாடாம்.

குன்ஸாக இப்புத்தகத்தை திருப்பும் பக்கத்திலெல்லாம் காந்தியைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமையைப் பாராட்டிப் பேச ஆரம்பிக்கும் ராகுல் மற்றும் சோனியா காந்தியர்கள் பல் தெரியச் சிரிக்கும் படத்தோடுள்ள sonsational என்கிற கட்டுரையும் இதில் அடங்கும். கோட்ஸே குடும்பத்துப் பெண் ஹிமானி சாவர்க்கர்(பல்லு போன பாட்டி) காந்தியின் கொலை நாதுராமின் பார்வையில் நியாயமே என்று ஆதரவுக் கொடி பிடிக்கிறார். நியாயம் எல்லோர் பக்கத்திலும் உள்ளது.

காந்தியும் தலித்துகளும் என்ற தலைப்பில் வர்ணாசிரம தர்மம் நல்லதென்று ஆரம்பத்தில் கருத்துரைத்த காந்தி சில மாதங்களில் அந்த தீர்மானத்தை மாற்றிக்கொண்டதையும் சேர்த்து ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார்கள். காந்தி கணக்கு என்று கிண்டலடிப்பதற்கு சாட்டையடியாக காந்தியின் கிராமப்புற பொருளாதார மேம்பாடு பற்றி ஒரு மணியான கட்டுரை. இக்காலத்தில் பிஸினஸ், அரசியல் மற்றும் பார்க்குமிடமெல்லாம் தலைமையேற்பவர்களிடம் நம்பகத்தன்மையை எதிர்பார்த்து ஏமாந்துபோன சமூகத்திற்கு இன்றும் காந்திஜி ஒரு எடுத்துக்காட்டு என்பதாக காந்தியும் தலைமைப் பண்பும் என்ற கட்டுரையையும் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

ஜெய் ஹிந்த் !

activatingthoughts.blogspot.com  என்கிற அற்புதமான தளத்திலிருந்து கிடைத்த படமிது.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails