Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Thursday, June 1, 2017

எலி செட்டி

”தொழில் முனைவோர்க்கு உங்கள் அறிவுரை என்ன?”
”நானென்ன பொருளாதார நிபுணரா? எனக்கென்ன தெரியும்?”
“தெர்ல? ச்சே.. சும்மா சொல்லுப்பா.. ”
“நெசம்மாவே என்னிய கேட்கிறியா?”
“ஆமா..பா..”
“இதுக்கு ஒரு கதை இருக்கு... சொல்றேன்.. புர்தா பாரு..”
“ம்.. சொல்லு..”
**கதை ஆரம்பம்**
வியாபாரியின் மகன். சிறுவயதிலேயே தந்தையை இழந்தான். வறுமை. தாய் கஷ்டப்பட்டு படிக்கவைத்தாள். நன்கு கற்றுத் தேர்ந்தான். குலத்தொழிலை விடக்கூடாது என்று தாய் அவனை ஏதேனும் தொழில் தொடங்கத் தூண்டினாள். அந்த ஊர் வணிகன் ஒருவன் தொழில் தொடங்க மூலதனம் தருவதாக அறிந்தான். அவனிடம் உதவி கேட்க சென்றபோது “தொழில் செய்ய மூளையில்லாதவன் ஏனடா மூலதனம் பெற்றுக்கொண்டாய்...” என்று கடனைத் திருப்பிச் செலுத்த இயலாதவை ஏசிக்கொண்டிருந்தான். மேலும் “தொழில் செய்யத் தெரியாதவன் மூலதனம் வாங்கக்கூடாது. தொழில் தெரிந்தவன் அந்த தூரத்தில் செத்துக்கிடக்கும் எலியைக் கூட மூலதனமாகக் கொண்டு வியாபரம் செய்துவிடுவான்” என்று சாலையில் கிடக்கும் எலியைக் காட்டினான்.

இந்த வியாபாரியின் மகனிடம் “என்ன வேண்டும்?” என்று கேட்டான். “உங்களிடம் மூலதனம் கேட்க வந்தேன். ஆனால் அவரிடம் அந்த செத்த எலியைக்கூட மூலதனமாக வைத்துக்கொண்டு வாழ்க்கையில் முன்னேறி விடலாம் என்று நீங்கள் கூறியது எனக்குப் பிடித்துவிட்டது. அந்த எலியை நான் எடுத்துக்கொள்ளலாமா?” என்று கேட்டான். “தாராளமாக..” என்று சிரித்துக்கொண்டேன் சொன்னான் உள்ளூர் தனவந்த வியாபாரி.
அந்த எலியை யார் தலையில் கட்டுவது என்று கடைவீதியில் அலைந்து கொண்டிருக்கும் போது கையில் பூனையுடன் ஒருவன் வந்தான். “ரொம்ப நாளாக எலி கிடைக்காமல் என் பூனை சோர்ந்துவிட்டது..” என்றான். ஒருபடி கடலைக்கு விலை பேசி அந்த எலியை விற்றுவிட்டான். அந்தக் கடலையை வீட்டிற்குக் கொண்டு போய் வறுத்து... ஒரு சின்ன அண்டாவில் குடிநீர் எடுத்துக்கொண்டு நான்கு ரோடுகள் சந்திக்கும் இடத்தில் அமர்ந்துகொண்டான்விறகுவெட்டிக் களைப்போடு வருபவர்களுக்கு வறுத்தகடலையு.ம் நீரும் கொடுத்தான். அவர்கள் உள்ளம் குளிர்ந்து ஆளுக்கு இரண்டு கட்டைகள் கொடுத்தார்கள்.
அந்தக் கட்டைகளை விற்று கடலை நிறைய வாங்கினான். மீண்டும் மீண்டும் அனுதினமும் கொண்டு போய் விற்றான். பிரதியாகக் கிடைத்த கட்டைகளில் பாதியை விற்றுக் கடலை வாங்கினான் மீதியை சேமித்துவைத்தான். ஒரு சமயம் அந்த ஊரில் கட்டைக்குப் பஞ்சம் ஏற்பட்டது. சேமித்து வைத்திருந்த கட்டைகளை விற்று அதிக பணம் சம்பாதித்தான். கிடைத்த பணத்தை மூலதனமாகக் கொண்டு பலசரக்குக் கடை வைத்தான். வியாபாரம் பெருகி செல்வம் கொழிக்க ஆரம்பித்தவுடன் தங்கத்தில் எலி செய்து முதலில் உதவிக்குச் சென்ற வியாபாரியிடம் பரிசளித்தான்.
ஆஹா.. என்று வாழ்வில் உயர்ந்தவனின் கதையைக் கேட்டு மெச்சிய அந்த தனவந்த வியாபாரி தனது மகளை இவனுக்குத் திருமணம் செய்துவைத்தான். செத்த எலியை வைத்து வியாபாரம் செய்து வாழ்க்கையில் முன்னேறியதால் அவரை“எலிசெட்டி” என்று ஊரார் அழைக்க ஆரம்பித்தார்கள்.
**கதை முடிவு**

“எலிசெட்டிக் கதை சோக்கா இருக்குதுபா..”
“வியாபாரின்னா அந்த மாதிரி புத்திசாலியா இருக்கோணும்..”
“அது சரி.. இந்த கதையை யாரு சொன்னா?”
“ ஏன் இப்ப நாந்தான் சொன்னேன்..”
“உனக்கு இவ்ளோ சரக்க் கிடையாது.. ஒரிஜினல் கதையை யார்டேர்ந்து சுட்ட?”
“நீ பிரில்லியண்ட். இது மஹாகவி ஸோமதேவ பட்டர் சொன்ன கதை.”
“யார் அவரு?”
“காஞ்சி காமகோடி பீடம் 46 வது பீடாதிபதி”
“யப்பாடீ!! நமஸ்காரம்... நன்றி.... வணக்கம்”

Thursday, November 8, 2012

முட்டாள் ராஜாவும் மங்குனி மந்திரியும்


கைவசம் ஒரு ராஜா கதை இருக்கு. அதை இப்படிதான் சம்பிரதாயமா ஆரம்பிக்கணும். ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தானாம். அவன் ஒரு முட்டாள் ராஜா. அவன் தான் அப்படின்னா அவனுக்கு வாய்ச்ச மந்திரியும் அவனை விட கடைந்தெடுத்த முட்டாள். இரண்டுபேரும் சேர்ந்து கிரீடத்துக்குள்ள பொரிகடலை போட்டு பொழுதன்னிக்கும் தின்னுகிட்டிருப்பாங்களாம். முட்டாள்தனமான தர்பாரால் நாட்டையே குட்டிச்சுவராக்கிட்டாங்களாம். மக்களுக்கும் வேற வழி தெரியாம இந்த முட்டாள் ராஜாவையும் மந்திரியையும் சகிச்சுக்கிட்டு காலத்தை தள்ளிக்கிட்டிருந்தாங்களாம்.

ஒரு நாள் ஒரு பொம்பளை கண்ணீரும் கம்பலையுமா “ராஜா! நீங்கதான் இதுக்கு ஒரு நியாயம் சொல்லணும்”னு வந்து தர்பார்ல கையைப் பிசிஞ்சிகிட்டு நின்னாளாம்.

சுத்திலும் திருதிருன்னு முழிச்சுப் பார்த்துட்டு “என்ன வேணும்?”ன்னு கேட்டான்.

“எங்க வீட்ல ஒரு திருடன் கன்னக்கோல் போட்டான். அப்படி போடும்போது மொத்த சுவரும் இடிஞ்சு விழுந்திடுச்சு. வீட்ல இருந்த கொஞ்ச நஞ்ச பொருளையும் அவன் கொள்ளையடிச்சுக்கிட்டு ஓடிப்போயிட்டான். நீங்கதான் என்னை காப்பாத்தணும். இதுக்கு ஒரு வழி சொல்லணும்”ன்னு அழுதுகிட்டே கேட்டாள்.

இதுவரைக்கும் யாருமே இப்படி திடுதிப்புன்னு அவன் கிட்ட நீதி நியாயம்னு கேட்டு ஒருநாளும் வந்ததில்லை. என்ன சொல்றதுன்னு புரியாம

“சுவர் இடிஞ்சு விழுந்திடுச்சுல்ல. உன் வீட்டைக் கட்டின கொத்தனாரை அழைச்சுக்கிட்டு வரச்சொல்றேன். அவனுக்கு தண்டனை கொடுத்தா எல்லாம் சரியாப்போய்டும்”ன்னு சொல்லிட்டு “யாரங்கே!”ன்னு வாயிற்காப்போனை கூப்பிட்டு “இந்தம்மாவின் வீட்டைக் கட்டின கொத்தனாரை கொத்தாகப் பிடித்து இழுத்துவாருங்கள்”ன்னு சொல்லி கட்டளை போட்டான்.

ஒரு பத்து நிமிஷத்தில அரையில வேஷ்டியோட தலைக்கு இருந்த முண்டாசை எடுத்து கக்கத்தில் சொருகிக்கொண்டு “கும்பிடறேன் ராஜா”ன்னு வந்து நின்றான் அந்தக் கொத்தனார்.

“இந்தம்மாவோட வீட்டை நீ சரியாக் கட்டலை. வீடு இடிஞ்சு விழுந்துடுச்சு. வீட்ல கொள்ளை போயிடுச்சு. எல்லாத்துக்கும் நீதான் காரணம். நாளைக்கு காலையில உனக்கு தூக்குத் தண்டனை”அப்படின்னு சொல்லி தீர்ப்பு வழங்கிட்டான்.

பிராந்து கொடுத்த பொம்பளைக்கே என்னவோ போல ஆயிடுச்சு. திருட்டுப் போனப் பொருளை கண்டு பிடிச்சுக் கொடுக்காம எப்பவோ வீடு கட்டின ஆளை தூக்குல போடறானே இந்த கேன ராஜா அப்படின்னு அவளுக்கு தூக்கிவாரிப்போட்டது.

கொத்தனார் இதிலேர்ந்து தப்பிக்க ஒரு யோசனை பண்ணினான்.

“ராஜா! இந்த தப்பு நான் பண்ணியிருந்தாலும். நான் மட்டுமே காரணமில்லை. நான் கலவையைப் பூசும் போது களிமண் பிசைஞ்சு கொடுத்தான் பாருங்க. அவன் மேலையும் தப்பு இருக்கு. அவன் தான் தண்ணிய கூட ஊத்திட்டான். அதனாலதான் சுவரு ஸ்ட்ராங்கா இல்லை”ன்னு நைசாக நழுவினான்.

“அந்த சித்தாளைக் கூப்பிடுங்க. நாளைக்கு அவனுக்கு தூக்கு தண்டனை ”ன்னு உத்தரவு போட்டான்.

சித்தாள் தர்பார் வரத்துக்கு முன்னாலையே ஊர்பூராவும் இந்த விநோத வழக்கைப் பற்றி பேசிக்கிட்டிருந்தாங்க. வந்தவன் தயாராய் ஒரு பதிலோட வந்தான்.

“ராஜா! இது என் தப்பில்லை. நாலு குடம் தண்ணி ஊத்துன்னு சொன்னாரு. நான் ஊத்தினேன். மத்தபடி பானையை பெருசா செஞ்சாம் பாருங்க அந்தக் குயவன். அவன் தப்புதான் இது. அவனைக் கேளுங்க”ன்னு கையைக் காட்டி விட்டுட்டான்.

“அந்த குயவனைக் கொண்டு வாங்க. நாளைக்கு அவனுக்கு தூக்கு”ன்னு பிரகடனம் பண்ணினான்.

ஊருக்கே தெரிஞ்ச விஷயம், அந்தக் குயவனுக்கும் தெரிஞ்சிருந்தது. அவன் உள்ள வரும் போதே சாஷ்டாங்கமா நமஸ்காரம் பண்ணிக்கிட்டே வந்தான்.

“ராஜா! நீங்க நல்லா இருப்பீங்க. பானையை பெருசாப் பண்ணினது என் தப்பில்லை ராஜா. நான் இந்தப் பானையைப் பண்ணிக்கிடிருக்கும்போது குறுக்கும் நெடுக்குமா அந்த தாசிப்பெண் போய்ட்டு வந்துகிட்டிருந்தா. அதுல கண்ணை மேய விட்டுட்டு பானையை பெருசாக்கிட்டேன். அவ தான் இதுக்கெல்லாம் காரணம். என்னை விட்டுடுங்க.”ன்னு கெஞ்சினான்.

”அந்த தாசியை அழைச்சுக்கிட்டு வாங்க. நாளைக்கு அவளுக்கு தூக்கு”ன்னு உத்தரவிட்டான் அந்த முட்டாள் ராஜா.

நிறைய கஸ்டமர்களை கொண்ட அவளுக்கு உடனே விஷயம் தெரிஞ்சுபோச்சு. தர்பாருக்குள்ள நுழைஞ்சவுடனேயே நளினமா அபிநயம் பிடித்து வணக்கம் சொன்னாள். எப்படி இப்படி ஒரு ஃபிகரை நாம பார்க்காம விட்டோம்னு ராஜாவுக்கு வாய் திறந்து ஜொள்ளு ஊத்த ஆரம்பிச்சுது.

“ராஜா! நான் குறுக்கும்நெடுக்குமா போய்கிட்டிருந்தது உண்மைதான். ஆனா அதுக்காக் நீங்க என்னை தூக்கில போடக்கூடாது. அந்த துணி தோய்க்கும் சலவைக்காரனைதான் தூக்கில போடணும்.”னா.

முட்டாள் ராஜா “ஏன்?”னு கேட்டான்.

“அவன்கிட்ட நல்லதா துணி ரெண்டு துவைக்க போட்டிருந்தேன். எனக்கு அன்னிக்கு நாட்டியக் கச்சேரி இருந்தது. அவன் இன்னிக்கி தரேன். நாளைக்கு தரேன்னு என்னை அலைக்கழிச்சான். அதுக்காத்தான் நான் குறுக்கும் நெடுக்குமா போயிக்கிட்டிருந்தேன். அதனால நீங்க அவனைதான் தூக்கில போடணும்”ன்னு விண்ணப்பிச்சுக் கேட்டுக்கிட்டா.

“அந்த சலவைக்காரனை அழைச்சுக்கிட்டு வாங்கப்பா. நாளைக்கு அவனுக்கு தூக்கு”ன்னு ரொம்ப நொந்து போய் டயர்டாகிச் சொன்னான் ராஜா.

சலவைக்காரனுக்கு ந்யூஸ் போய் ஒரு மணி நேரமாச்சு. அவன் தயாரா ஒரு பதிலோட உள்ள வந்தான்.

“ராஜா! அந்தம்மா சொல்றது சரிதான். ஆனா என் மேல ஒண்ணும் தப்பில்ல. நான் துணி துவைக்கிற கல்லுல ஒரு சாமியார் தியானம் பண்ணிக்கிட்டு உட்கார்ந்திருந்தாரு. அவரை எப்படி எழுப்பறதுன்னு தெரியலை. அதனால அந்த சாமியாரைத்தான் நீங்க விசாரிக்கணும்”ன்னு சொல்லிவிட்டு கழண்டுகிட்டான்.

“இந்த தடவை எவனாயிருந்தாலும் எங்கிட்டேயிருந்து தப்பமாட்டான். அந்த சாமியாருக்கு நாளைக்கு தூக்கு.”ன்னு சொல்லிட்டு “அந்த சாமியார் வர்றவரைக்கும் எல்லோரும் போய் ஒரு டீ சாப்பிட்டுவிட்டு வாங்க”ன்னு டீ ப்ரேக் விட்டுட்டு அரியாசனத்துலேர்ந்து எழுந்து போய்ட்டான்.

ஒரு பத்து நிமிஷம் கழிச்சு சாமியார் உள்ள வந்தார். அவர் அன்னிக்கு மௌன விரதம்.

“நாளைக்கு காலையில சரியா பத்து பத்துக்கு உங்களுக்கு தூக்கு”ன்னு சொல்லிட்டு “சபை கலையலாம்”ன்னு கிளம்பினபோது அவையோர்கள் பகுதியின் கடைசியிலேர்ந்து “ஒரு நிமிஷம்”ன்னு ஒரு குரல் வந்தது.

ராஜாவும் மந்திரியும் குரல் வந்த திக்கில ஆச்சரியமாப் பார்த்தாங்க. நம்ம தீர்ப்புக்கு மறுத்து இந்த நாட்ல எவன் சொல்லுவான்னு “யாரது?”ன்னு ராஜாவும் பதிலுக்கு குரல் விட்டான்.

ஒரு மத்திம வயசு இளைஞன். நேரா எழுந்து சபையோட மத்திக்கு வந்தான். ராஜாவுக்கு வணக்கம் சொன்னான்.

“அரசே! சாமியாருக்கு நாளைக்கு எத்தனை மணிக்கு தூக்கு?”ன்னு கேட்டான்.

“பத்து பத்துக்கு”

“அப்படியா! ரொம்ப மகிழ்ச்சி. அந்த நேரத்தில என்னை தூக்கில போடுங்க”ன்னு கேட்டான். சபையே அதிர்ந்தது. அப்படியே நிசப்தமா ராஜாவையும் அந்த வாலிபனையும் மாறி மாறி பார்த்தாங்க.

ராஜா “ஏன்?”னு கேட்டான்.

”இல்ல. நாளைக்கு பத்து பத்துக்கு யார் தூக்கிலடப்பட்டு செத்துப்போறாங்களோ அவங்க தேவலோகத்துக்கே ராஜாவாகலாமாம். ஜோசியக்காரன் சொன்னான்.”அப்படீன்னான்.

உடனே ராஜா, “யாரையும் தூக்கில போடவேண்டாம். என்னை போடுங்க”ன்னு சொல்லிட்டு தேவலோகத்துக்கே ராஜாவாகும் கனவுக்கு இன்ஸ்டெண்டா போய்ட்டான்.

அந்த இளைஞன் “ம்க்கும்.. மன்னா!”ன்னு கொஞ்சம் கனைத்துக் கூப்பிட்டு அந்த ராஜாவின் கனவைக் கலைத்து இன்னொரு விண்ணபமிட்டான்.

“என்னா?”ன்னு கேட்டான்.

“அரசே! அட்லீஸ்ட் நாளைக்கு பத்து பதினஞ்சுக்கு என்னை தூக்கில போடுங்க”ன்னான்.

ராஜாவுக்கு ஒரே வியப்பு. என்னடா எப்படியும் நாளைக்கு தூக்கில தொங்கணும்னு ஒருத்தன் நிக்கறானேன்னு “ஏன்?”ன்னு திரும்பவும் கேட்டான்.

“இல்ல! பத்து பதினைஞ்சுக்கு தூக்கில தொங்கி உசிரை விட்டா தேவலோகத்துக்கே மந்திரியாகலாம்னு இன்னொரு ஜோசியான் சொன்னான். ராஜாவாகத்தான் ஆகமுடியாது, மந்திரியாகவாவது ஆகலாமேன்னு ஒரு ஆசை”என்று தலையைச் சொரிந்தான்.

”நாளைக்கு பத்து பதினைஞ்சுக்கு இந்த மந்திரியை தூக்கில போடுங்க. நானும் அவரும் சேர்த்து தேவலோகத்தை ஆளப்போறோம். இதுதான் இறுதி தீர்ப்பு”ன்னு சொல்லிட்டு சபையைக் கலைச்சிட்டு உள்ள போயிட்டான்.

மறுநாள் தலைநகரமே சேர்ந்து அந்த ராஜாவையும் மந்திரியையும் அடுத்தடுத்து தூக்கில போட்டுட்டு அந்த இளைஞனைப் பாராட்டி அரியாசனத்துல அமர வைச்சாங்களாம்.

Monday, October 8, 2012

போட்டியில் வென்ற ஞொய்யாஞ்சி


கல்யாணமான அபாக்கியசாலிகளுக்கு சர்வதேச அளவில் ஒரு கட்டுரைப் போட்டி நடந்தது. தலைப்பு “மனைவி”. பல்லாயிரக்கணக்கானோர் முண்டியடித்துக்கொண்டு கலந்துகொண்டனர். தங்களது உள்ளக்குமுறல்களைக் கொட்டிப் பக்கம்பக்கமாக எழுதித்தீர்த்தனர். சாயந்திரம் இறுதித் தீர்ப்பு என்று அறிவித்தார்கள். உணர்வுப்பூர்வமாக எழுதியவர்கள் தனக்குத்தான் முதல் பரிசு என்று பார்ப்போரிடமெல்லாம் தம்பட்டம் அடித்துக்கொண்டிருந்தார்கள்.

ஆறு மணியானது. முடிவை அறிவிக்க மைக் பிடித்தார் ஒருவர். ”இந்த மகத்தான போட்டியில் வெற்றி பெற்றவர் திருவாளர்.ஞொய்யாஞ்சிசீசீஈஈஈ” என்று ஓலமிட்டார். திருவாளர் ஞொய்யாஞ்சியைச் சுற்றி ஈக்களாக செய்தியாளர்கள் மொய்த்தார்கள்.

”உங்களுக்கு கல்யாணமாகி எவ்ளோ வருசமாச்சு?”

“இந்தப் போட்டிக்கு உங்க அனுபவம் எப்படி கைகொடுத்தது?”

“மனைவியைப் புரிஞ்சு வச்சுக்கிற அளவிற்கு நீங்க அவ்ளோ ஸ்மார்ட்டா?”

“நீங்க அடிபட்டதெல்லாம் எழுதி இந்தப் பரிசு வாங்கினீங்களா?”

என்றெல்லாம் பலவாறு கேள்வி எழுப்பினர். எல்லாவற்றிற்கும் அமைதியாக புன்முறுவல் பூத்துக்கொண்டிருந்தார் மிஸ்டர் ஞொய்.

“நீங்க எவ்வளவு பக்கம் எழுதினீங்க?”

என்கிற கேள்வி எங்கிருந்தோ அவர் காதுகளில் வந்து விழுந்த மறுகணம் அவர் எழுதிய கட்டுரையை எல்லோருக்கும் உரக்கப் படித்துக் காண்பித்தார்.

“She has a problem for every solution".
 
#ஞொய்யாஞ்சி என்று நாமகரணம் சூட்டி இவ்வுலகிற்கு இவரை தாரை வார்த்த வானவில் மனிதன் மோகன் அண்ணாவுக்கு இப்பதிவு சமர்ப்பணம்.

Saturday, October 6, 2012

செயக்கெடும்... செய்யாமையானும் கெடும்..

"செய்யவேண்டிய வேலையைச் செய். செய்யக்கூடாத வேலையைச் செய்யாதே. எதைச் செய்யணுமோ அதை செய்யலைன்னா கெட்டுப்போயிடுவே. எதை செய்யக்கூடாதோ அதை செஞ்சென்னா கெட்டுப்போயிடுவே."


மருத ஸ்டேஷன். ஒரே கூட்டங்க. ”டீஈஈ.. காப்ப்ப்பி.. வடே..வடே..” சத்தத்தோட சேர்ந்து ”மாப்ள... மெட்ராசு... சாக்கிரத..”. ”பத்திரமா போய்ட்டுவாம்மா”, “போய் மறக்காம ஃபோன் பண்ணுங்க”, “சேகரு அவ நிச்சியம் வருவாடா”, “புள்ளைங்கள உள்ள போவச்சொல்லு” என்று பொட்டி பொட்டியாக ஜனங்களின் வாய் ஓயாத விசாரிப்புகள். பாண்டியன் இன்னும் கொஞ்ச நேரத்தில கிளம்பப்போறான். பிஸ்லெரி பாட்டில் வாங்கிட்டு ஒருத்தர் ஓடறாரு. இதோ கார்டு பச்சை காமிச்சுட்டாரு. கொஞ்சகொஞ்சமா வண்டி நகர ஆரம்பிச்சுடுச்சு.

கடைசியா கோர்த்துவிட்டது அன்ரிஸர்வ்ட் கம்பார்ட்மெண்ட். ரொம்பி வழியுது. ஆம்பளை பொம்பளை வித்தியாசமில்லாம நெருக்கியடிச்சுக்கிட்டு சமதளமா தெரியற எல்லா இடத்திலையும் தன்னோட ’பேக்’கை நகர்த்தி உட்கார்ந்திருக்காங்க. பக்கத்துல யாராவது வஞ்சனையில்லாம வளர்ந்திருந்தா அவங்க தொடையைக் கூட சீட்டா நினைச்சுக்கிட்டு உட்கார்ந்த ஆளுங்களும் உண்டு. இவ்வளவு அமளிதுமளியிலையும் ரெண்டு பேர் திருப்தியா இருந்தாங்க. ஏன்னா அவங்க ரெண்டு பேருக்கும் ஜன்னலோரச் சீட்டுக் கிடைச்சிருந்தது. பொட்டிக்குள்ள பார்த்தா யாராவது வயசானவங்க முடியாதவங்க நின்னுக்கிட்டிருந்தாங்கன்னா அவங்களுக்கு உட்கார சீட் கொடுக்கும்படியாயிடும்னு கழுத்தை உள்பக்கமா திருப்பாம வெளியில பார்த்துகிட்டே வந்தாங்க.

ஒரு பக்கமா பார்த்து கழுத்து வலி கண்டு போய் ரெண்டு பேரும் நேருக்கு நேர் பார்த்துக்கிட்டாங்க. முதல்ல பல்லு தெரியாம சிரிச்சுக்கிட்டாங்க. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா ஊரு பேருன்னு விசாரிச்சுக்கிட்டாங்க. ”அப்படியா! நம்ம பய ஒருத்தன் அங்கத்தேன் இருக்கான்”ன்னு ஒருத்தரும் “அட! இது தெரியாம போயிட்டுதுங்களே. முந்தாநேத்தி நா அங்கிட்டுதான் வந்துருந்தேன். நம்மூர்ல ஒரு பயலுக்கு அங்கதான் பொண்ணு எடுத்தோம்..”ன்னு எதிர்ல இருந்த ஆளும் ரொம்ப அன்னியோன்னியமாயிட்டாங்க. கொஞ்ச நேரத்திலயே ரயில் சிநேகிதம் பூத்துக் காயாகி பழமாகிட்டுது.

“இப்ப எங்க போறீங்க?”

“விளுப்புரம்”

“ம்.. நா மெட்ராஸ் போறேன்...”

“ஓ அப்டியா.. சந்தோசம்.... எனக்கு ரயில்ல வர்றதாயிருந்தா ஒரு சின்ன சிக்கல்”

“என்ன?’

“இல்ல.. ரயில் ஸ்டேசன விட்டு நவுந்த கொஞ்ச நேரத்தில எனக்குத் தூக்கம் வந்துடும்.”

“எனக்கு வேற விதமான சிக்கல்”

“என்ன?”

“கொஞ்சம் கூட தூக்கமே வராது. கொட்டக் கொட்ட முழிச்சுக்கிட்டிருப்பேன்”

“ஓ. எனக்குதான் பயமாயிருக்கு. இறங்காம தூங்கிடுவேனோன்னு..”

“நீங்க ஒன்னும் கவலைப் படாதீங்க.. நா எளுப்பி விடறேன்.. நல்லா தூங்குங்க..”

“இல்ல.. போற வேலை ரொம்ப முக்கியம். நிச்சயம் விளுப்புரத்தில இறங்கிரணும்”

“அட.. நான் சொல்றேன்ல.. நிம்மதியா தூங்குங்க.. நா எளுப்பி விடறேன்..”

“நிச்சியம் எளுப்பி விடுவீங்கல்ல. ரொம்ப முக்கியமான வேலை... அதான்...”

“என்னங்க நீங்க. நம்ப மாட்டேன்றீங்க.. நிச்சயம் எளுப்பி விடறேன்.. நீங்க எளும்பலைன்னு வச்சுக்குங்க.. அப்படியே உங்களை தரதரன்னு புடிச்சு இளுத்து ப்ளாட்பாரத்தில இறக்கிட்டுப் போயிடறேன். போதுமா?”

“ரொம்ப நல்லதுங்க..நன்றிங்க.. மறக்காம விளுப்புரத்தில இறக்கிவிட்ருங்க.. தயவுசெஞ்சு... சரிங்களா”

“கவலைப்படாம நல்லாத் தூங்குங்க.. நிச்சியமா இறக்கிவிடறேன்..”

****************

எக்மோர் ஸ்டேஷன். மருத மல்லி வாசனை மாறி கூவம் வாசனை. அலுங்கி குலுங்கி அன்ரிஸர்வர்ட்ல வந்த எல்லாரும் அலுப்போட இறங்கறாங்க. விழுப்புரத்தில இறங்கவேண்டியவனும் இறங்கறான் மெட்ராஸ்ல இறங்கவேண்டியவனும் இறங்கினான். பழி சண்டை. விழுப்புரத்தில இறங்கவேண்டியவன் இறக்கிவிடறேன்னு சொன்னவனைப் புடிபுடின்னு புடிச்சான்.

“நா உங்கிட்ட கேட்டேனா? விளுப்புரத்தில இறக்கிவுடுன்னு. கேட்டேனாய்யா? நீயாத்தானே சொன்னே.. ஏன்யா.. நீயாத்தானே சொன்னே.. ஏன்யா இப்படி பண்ணின.. நானா இறங்கிறதா இருந்தா விளுப்புரத்தில இறங்கலைன்னாகூட முன்னாடியே விருத்தாசலத்துல இறங்கி விளுப்புரம் போயிருப்பேன்..இல்லைனா அட்லீஸ்ட் செங்கல்பட்டுல வந்து இறங்கியிப்பேன்.. இந்நேரம் விளுப்புரத்தில இருப்பேன்.. இப்படிக் கெடுத்துப்புட்டியேயா...நீ நல்லாயிருப்பியா..” ரயில் சிநேகம் நாறிப்போயிருச்சு.

விழுப்புரத்தில இறக்கிவிடறேன்னு சொன்னாம் பாருங்க ஒரு பய அவன் வாயே தொறக்கலை. கம்முன்னு இருந்தான்.

அந்த விழுப்புரம் பார்ட்டி கன்னாபின்னான்னு திட்டிட்டு போயிட்டான். அப்புறமும் இறக்கிவிடறேன்னு சொன்னவன் ஆழ்ந்த சோகத்தில இருந்தான். அவன் பக்கத்தில இருந்தவன் கேட்டான் “ஏன்யா இன்னும் சோகமா இருக்கே. அவந்தான் திட்டிட்டு போயிட்டானே. போய் ஆக வேண்டிய வேலை எதாவது இருந்தா பாருயா”ன்னான். அதுக்கு அவன் சொன்னான். “இல்ல.. இவன்னு நினைச்சு விளுப்புரத்தில ஒருத்தனை தரதரன்னு இளுத்து ப்ளாட்பாரத்தில போட்ருக்கேன். அவன் என்னவெல்லாம் திட்டுவான்னு நினைச்சு வருத்தப்படறேன்”னானாம்.

இப்ப திரும்ப ஒருதடவ மொத பாராவைப் படிச்சுப் பாருங்க.. விளங்கும்...

#இந்தக் கதையை இலக்கியச் சுடர் த. இராமலிங்கம் ”செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும்” என்கிற குறளுக்கு எடுத்துக்காட்டாக சொன்னார். இப்படி விஸ்தாரமாக ”இளுத்து”ச் சொன்னது என் கை வண்ணம்.

பட உதவி: chanderifilm.com

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails