Showing posts with label திருக்கோயில் உலா. Show all posts
Showing posts with label திருக்கோயில் உலா. Show all posts

Sunday, October 22, 2017

விஜயவாடா கனக துர்க்கா

குன்றுப் பாதை செப்பனிடும் பணி நடப்பதால் மின்தூக்கியில் ஏழு மாடி தூக்கிச் சென்று தேவியிடம் விட்டார்கள்.
சட்டென்று தேவலோகத்தில் நுழைந்தது போலிருந்தது. சந்தனக் காப்பில் சிரித்த முகத்துடன் அருளினாள் கனக துர்க்கா. ஸ்வயம்பு என்கிறார்கள். பொன் மஞ்சளும் அரக்குக்கலர் பார்டரும் போட்ட பட்டுப் பாவாடையில் ஜெகஜோதியாய் பார்த்தேன். அற்புதமான தரிசனம். மனசுக்குள் இனம் புரியாத நிம்மதி. அம்மாவாரு அன்பின் ஸ்வரூபமாக காட்சியளிக்கிறாள். நமது கன்னம் கிள்ளி "செல்லக் கண்ணா" என்று கொஞ்சி மடியில் இருத்திக்கொள்ளும் நம் தாய் போன்றதொரு தோற்றம்.
காஞ்சி காமாட்சி கர்ப்பக்ரஹத்தினுள் வீசும் தாழம்பூ குங்கும வாசனை கனக துர்க்கை சன்னிதியிலும் மணத்தது. ஐந்து நிமிடங்களுக்கு மேலே அவளின் அழகைக் கண்டு ரசித்து அனுபவித்ததில் பிறவிப் பயன் அடைந்தேன். பிரசாதமாகத் தந்த குங்குமத்தை நெற்றியில் தரிக்கையில் மெய் சிலிர்த்தது. சுக்ரவாரத்தில் கிடைத்த அம்மன் தரிசனத்தில் உள்ளம் பூரித்தது. ஜெகமாளும் சக்திக்கு அனந்த கோடி நமஸ்காரம்.
யா தேவி சர்வ பூதேஷு லக்ஷமி ரூபனே சமஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:


Thursday, June 1, 2017

நீலமங்கலம்

ஜமீந்தார் கதைகளில் வருவது போல கிராமத்தின் பெயர் நீலமங்கலம். சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் படாளம் கூட்டு ரோடில் இடது திரும்பினால் மண்வாசனையோடு பல கிராமங்கள் கடக்கவேண்டும். இடுப்புக்கீழே ட்ரௌஸர் இறங்கிய சட்டை போடாத பையன், “ஹேய்..ஹேய்..” என்று பிரம்புக்கையோடு ஆடு மேய்க்கும் ஆயா, தூரத்தில் ட்ராக்டர் ஓட்டி வரும் முண்டாசு கட்டிய இளைஞன், பசுமையெங்கும் தெரிய நடுவில் சிம்மாசனத்தில் அமர்ந்த ராஜா போல அரசமரம் என்று வழிநெடுக இயற்கையின் அட்டகாசம்.
ஈசூர் வந்தவுடன் இடதுபுறத்தில் “PAULAR RIVER" என்கிற போடு வழிகாட்டும். அங்கே செல்லாமல் வலது திரும்பினால் உங்கள் கார் மட்டுமே பயணிக்கும் ஒரு தனிவழிச்சாலை. விவசாயம் நடக்கிறது. இரண்டு புறமும் நட்டிருக்கிறார்கள். பச்சைபசேல் என்று ரம்மியமாக இருக்கிறது. சட்டை துறந்து இடுப்பு வேஷ்டியுடன் வரப்பில் இறங்கி கால் நனைக்க மாட்டோமா என்று துடிக்கும் மனசு.
அதே சாலையில் மூன்று கி.மீ சென்றால் ஒரு குன்று தெரியும். அதுதான் குன்னத்தூர்மலை. கிராமத்தின் பெயர் நீலமங்கலம். கிளைவிரித்து நிற்கும் மரத்தடியில் உளித்தழும்புகளோடு பழமையான நந்தி பார்க்கும் வானம் பார்த்த லிங்கத்தின் தெருவோடு சென்றால் வருவது மஹாகாளேஸ்வரர் கோயில். புண்ணிய நதிகளிலிருந்தும் இன்ன பிற க்ஷேத்திர தீர்த்தங்களிலிருந்துமாக 234 இடங்களிலிருந்து ஜலம் ஏற்றி வந்து குளம் கட்டியிருக்கிறார்கள்.






அங்கிருந்து மலையில் மஹா நாராயணர் திருக்கோயில் தெரிகிறது. அங்கே காவிக் கொடி படபடத்துப் பறப்பது கண்ணில் படும்போது நம்முள்ளே ஒரு துள்ளல் ஏற்படுகிறது. கிராமத்தினுள் சென்று வளைந்து நெளிந்து செல்லும் பாதையில் மலையின் அடிவாரத்தை அடைகிறோம். படிக்கட்டின் ஓரத்தில் பனைமரம் சூழ ஒரு பச்சைக் குட்டை. “ஸ்ரீ ஸ்ரீநிவாசா... ஸ்ரீ ஸ்ரீநிவாசா...” என்று அசரீரிபோல மேலிருந்துப் பாடல் ஒலிக்க மலையேறுகிறோம்.
கொஞ்ச தூரம் படிக்கட்டுகளும்... கொஞ்ச தூரம் ராம்ப் போலவும்...சௌகரியமாக ஏறமுடிகிறது. கோவிந்தா.... நாராயணா என்று மாலை வெய்யிலில் ஏறும் பொழுது மனசுள் பக்தி நிறைந்து வாழ்க்கையில் ஏற்றம் கிடைக்கும் என்ற நம்பிக்கை மலர்கிறது. மேலே சன்னிதி அடைவதற்குள் மூன்று திருப்பங்கள் வருகிறது. வயதானவர்கள் அமரத் தோதாக சிறு சிமெண்ட் கட்டையை ஒவ்வொரு திருப்பத்திலும் வடிவமைத்திருக்கிறார்கள். வலுவுள்ள திடகாத்திரமான இளைஞர்கள் பத்து நிமிடத்தில் உச்சிக்குச் சென்று மஹா நாராயணர் தரிசனம் செய்துவிடுவார்கள்.
”ஆதி நாராயணர்தான் ரொம்ப வருசமா இந்த மலைக்கோயில்ல இருந்த தெய்வம். சில வருசங்களுக்கு முன்னாடி யாரோ சில விசமிங்க சிலையை ஒடச்சி தூர வீசிட்டாங்க... அவரைத்தான் நீங்க அங்கே பார்த்தீங்க...” என்று ”நீரோட்டம்” மணி சொன்னார். தும்பைப் பூ போல வெள்ளையாடையில் இருந்தார்.
மஹா நாராயணர் சன்னிதி தாண்டி பாறைகளுக்கு நடுவில் சற்றே சிதிலமடைந்த நிலையில் அருள்பாலித்துக் கொண்டிருந்தார் ஆதி நாராயணர். கற்களுக்கு மத்தியில் நின்ற திருக்கோலத்தில் தரிசனம் கொடுத்தார். கதிரவனின் கிரணங்கள் அவரது சிரசுக்கு மேலே ஒளிமழை பொழியத் தட்டுத் தடுமாறி அந்த பாறைகளுக்குள் இறங்கி நின்று சேவித்தோம். அற்புதமான மூர்த்தம். முகலாயர்கள் காலத்தின் போது அழிக்கப்பட்டவைகள் போதாதென்று சமீப காலத்தில் கூட இதுபோன்ற அக்கிரமங்கள் நடப்பது ஜீரணிக்கமுடியாமல் இருக்கிறது. இருந்தும் அனைவரையும் ரக்ஷிக்கும் தெய்வம் அவனொருவன் தான்.
சுற்றிலும் இயற்கை எழிலை ரசித்துக்கொண்டிருக்கும் போது அமைதியாயிருந்த நீரோட்ட மணியிடம்....
“நீங்க இந்த கிராமத்து ஆளுங்களா? எவ்ளோ வருஷமா இருக்கீங்க? ”
“ஆமாங்க... இது நம்ம சொந்த ஊருங்க... சுத்துப்பட்டு கிராமங்களுக்கு போர் போடுறத்துக்காக நீரோட்டம் பார்த்து சொல்லுவேன் .. போன வாரம் கூட ஒரு இடம் பார்த்து சொன்னேன்... இந்தக் கோவிலுக்குக் கூட கிணறு.. போருக்கெல்லாம் நாந்தான் இடம் குறிச்சுச் சொன்னேன்.. குருஜி நீரோட்ட மணின்னுதான் கூப்பிடுவாரு..” என்று கண்கள் விரியச் சிரித்தார். நெற்றியில் சந்தனம் துலங்கியது.
ஆதி நாராயணரைத் தரிசித்த பின்னர் ஒரு சின்ன இறக்கத்தில் பட்டாபிஷேக இராமர் சன்னிதி. தொடுவானத்தில் அக்கினிப் பிழம்பாக சூரியன் இறங்கிக்கொண்டிருக்கிறான். இங்கே இராமருக்கு அபிஷேகம் நடந்தது. மூர்த்தி சிறுசு. ஆனால் கீர்த்தி பெருசு. லக்ஷணமாக வடிக்கப்பட்ட பட்டாபிஷேகக் காட்சி கண்ணை விட்டு அகலாது. கூட்டமாய் மலையைச் சுற்றிச் சென்ற பறவைகளுக்கும் இறை தரிசனம் கிடைத்தது. கற்பூரார்த்தி காட்ட முடியாமல் காற்று பலமாக வீசியது. தாம்பாளத்தால் மறைத்துக்கொண்டு காட்டினார். நிறைவான தரிசனம்.
“அதோ கிளக்கால தெரியுது பாருங்க.. அதுதான் திருக்களுக்குன்றம் மலை. கார்த்திகையன்னிக்கி ஜொலிக்கும். அப்புறம் வரிசையா வெளக்கு தெரியற இடம் கல்பாக்கம் பக்கத்துல...” என்றார்.
“பரமேஸ்வரமங்கலம்.. நத்தம்.. அணைக்கட்டு.. அந்த ஏரியா வருங்களா?”
“ஆமா சார்.. எப்படி கரெக்டா சொல்றீங்க?”
“நாங்க போயிருக்கோம் மணி சார். பரமேஸ்வரமங்கலத்துல பாலாத்துக்கு நடுவுல சிவன் கோயிலு...”
”ஆமா சார்... நிறைய கோயிலு போயிருக்கீங்க போல்ருக்கு...”
இப்போது மஹா நாராயணர் சன்னிதி. முன்னிரவு நேரம் ஆரம்பமாகியிருந்தது. மலையைச் சுற்றி கும்மிருட்டு. சன்னிதியில் மட்டும் ட்யூப் வெளிச்சம். எங்களுக்காகவே இம்மலையில் எம்பெருமான் எழுந்தருளீயது போல நாங்கள் மட்டுமே இருந்தோம். பிரத்தியேகமான மலை. விஷ்ணு சகஸ்ரநாமம் ஒலிக்க அபிஷேகம். பால், தயிர், ஸ்நானப் பொடி, இளநீர், பழரசம் என்று விதம்விதமாக குளிர்வித்தோம். அர்ச்சனை ஆரத்தி நடைபெற்றது. அலங்காரப்பிரியனுக்கு மேனியெங்கும் திருக்காப்பு சார்த்தி கற்பூரஜோதியில் தகதகத்தார்.
வழிபாடு முடிந்து இறங்கும் போது கிழக்கில் பூர்ண சந்திரன் மஹா நாராயணர் தரிசனத்திற்கு வந்திருந்தான். இருட்டில் இறங்குவதற்கு அவனே டார்ச்சாய் ஒளி பாய்ச்சினான். நீரோட்ட மணி “கோவிந்தா..கோபாலா.. கிருஷ்ணா..” என்று நாமாவளி சொல்ல நாங்களும் பின் பாடினோம். மின்சாரமில்லாத காலங்களில் தீவட்டி ஏந்தி காடுமலைப் பாதைகளில் சுற்றிவருவது போல செல்ஃபோன் தீவட்டி அடிக்க கீழே வந்திறங்கினோம்.
கார் பக்கத்தில் குட்டை தூங்கிக்கொண்டிருந்தது. பூர்ண சந்திரனின் ஒளி மழையில் ஊரே நிழலாய்த் தெரிந்தது. சேப்பாயியை உசுப்பி மீண்டும் மஹாகாலேஸ்வரர் கோயிலுக்குச் சென்று அர்த்தஜாம தீபாராதனை தரிசித்துக்கொண்டு இல்லம் திரும்பினோம்.
ஜியெஸ்டி ரோடு ஏறுவதற்குள் வந்த ரயில்வே கிராஸிங்கில் நின்றுகொண்டிருந்தபோது ரோடோர மரங்களுக்கிடையில் தெரியும் நிலவொளியின் துணையில்.... தூரத்தில் நீலமங்கலம் மலை தெரிந்தது. மஹா நாராயணரை தனியே விட்டு அனைவரும் இறங்கியிருப்பார்கள். அவரும் சன்னிதி விட்டு சுதந்திரமாக வெளியே வந்து நம்மையும் இவ்வுலகத்தையும் காத்து ரக்ஷிக்க கீழே பார்த்துக்கொண்டிருக்கலாம். எதிரே தெரியும் திருக்கழுக்குன்ற சுடலைப்பொடி பூசியவனுடன் குசலம் விசாரித்து சம்பாஷித்துக்கொண்டிருக்கலாம்.
இரவு நேரங்களில்... ஆளில்லா கிராமத்து சாலை பயணம் மனதைக் கிறங்கடிக்கும். ஸ்வாமி தரிசனம் ஆன பின்பு கார் வெளிச்சத்துக்கு இருபுறமும் வந்து போகும் கட்டிடங்களும் சிறுதெய்வக் கோயில்களும் என்னன்வோ கதை சொல்லும். ஜியெஸ்டி ஏறி சிங்கபெருமாள் கோயில் நெருங்கியதிலிருந்து வாகன நெருக்கடி கழுத்தை நெறித்தது. மறைமலைநகர் தாண்டியவுடன் வந்த அடையார் ஆனந்தபவனில் இரவு சிற்றுண்டி அருந்தினோம். பெரியவா மகிமை பேசும் பி. ஸ்வாமிநாதனைச் சந்தித்துக் கைகுலுக்கி செல்ஃபி எடுத்துக்கொண்டோம்.
பதினொன்னரைக்கு படுக்கையில் சரிந்த போது மஹா நாராயணர் கதாயுதபாணியாகக் கண்ணுக்குள் வந்தார். ஊரோடு நான் தூங்கினாலும் மனசு மட்டும் மலையில் இருந்தது. இன்னொருமுறை போக வேணும்!

ஞாயிறு


”1978ம் வருஷம் இருக்கும். சென்ட்ரல்லேர்ந்து நாயர் அப்டீன்னு ஒரு பஸ் போகும். க்ரோம்பேட்டை அடியார்கள் சங்கத்து தோத்தாத்ரிதான் ஃபர்ஸ்ட் டைம் என்னை அங்கே அழைச்சுண்டு போனார். குக்கிராமம். கோயிலைச் சுத்திலும் ஒரே கொடியும் செடியுமாப் புதரா மண்டிக் கிடந்தது. சின்னோண்டு கோயில். அந்தக் காலத்துலேர்ந்தே இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டுல இருக்கிற கோவில்.”
பொங்கலன்று சனிக்கிழமை. அன்று ஞாயிறுக்கு சென்றோம். பஞ்சபாஸ்கர க்ஷேத்திரத்தில் ஒன்று. திரும்பி வரும் வழியில் அக்கௌண்ட்ஸ் வெங்கட்ராமன் சார் சொன்ன கதையின் ஆரம்பம்தான் முதல் பாரா. மேலே அவர் சொல்வதைக் கேட்போம்.
“நாங்க அஞ்சாறு பேரா உழவாரப்பணிக்குப் போனோம். ஹெச்சாரென்ஸில சொல்லிட்டுதான் போனோம். அவங்க யாரும் வரலை. கிடுகிடுன்னு புல்லெல்லாம் செத்தி எடுத்தோம். சுறுசுறுப்பா வெளில கொண்டு போய் போட்டோம். உழவாரப் பணி முடியும் போது ஜீப்ல வந்து இறங்கினாங்க. எல்லாத்தையும் உள்ள எடுத்துப் போடுங்கன்னு விரட்டினாங்க.."
“ஏன் சார்?”
“அதுக்குள்ள எதாவது செல இருக்குமாம். கூட உழவாரப்பணியில இருந்தவாள்ல ஒருத்தர் ஹை கோர்ட் வக்கீல், சீனியர் லாயர்... இன்னொருத்தர் டாக்டர். ரெண்டு பேரும் எடுத்துச் சொன்னா. அப்புறம் அந்த ஈஓ சரின்னுட்டு போய்ட்டார். அந்த அறநிலையத் துறையில அர்ச்சனை சீட்டு அபிஷேகச் சீட்டெல்லாம் அப்பவே அடிச்சிருந்தாங்க.. அதுல ”புஷ்பரதேஸ்வரர் ஆலயம், நாயர்” அப்டீன்னு அச்சடிச்சிருந்தது. எனக்கு ஒரே சந்தேகம். நாயர்னு டீக்கடை இருக்கும் ஊர் பெயர் இருக்குமான்னு. சுந்தரரை திருவொற்றியூர் மகிழமரத்துக்குக் கீழ கல்யாணம் பண்ணிண்ட சங்கிலி நாச்சியார் அவதாரத் தலம். சூரியபகவானுக்கு சாப விமோசனம் கிடைச்ச தலம். ஊருக்கு வந்த மொத காரியமா என்ன பண்ணினேன்னு தெரியுமா?”
“என்ன பண்ணினீங்க?”
“லைப்பரரிக்குப் போய் பெரியபுராண புக்ஸெல்லாம் எடுத்து மேஜைல போட்டுண்டேன். அதுல ’வேளாண்மை மிக்க திரு ஞாயிறு கிழவர் பாலாதரவு தரும் மகளர் ஆகிப் பார் மேல் அவதரித்தார்’ன்னு சங்கிலி நாச்சியார் புராணத்துல ஞாயிறு பற்றிய குறிப்பு வருது. அந்தக் குறிப்பெல்லாம் எடுத்து ஹெச்சாரன்ஸிக்கு அனுப்பி அந்தச் சீட்டுல ஞாயிறுன்னு இருக்கணும். நாயர் தப்புன்னு லெட்டர் எழுதினேன்.”
“சார்.. நீங்க எதோ இந்தக் கோயில் இருக்கிற இடம் தெரியும். கூட வர்றீங்கன்னு நெனைச்சேன். அங்க இவ்ளோ காரியம் பண்ணியிருக்கீங்களா? அப்புறம் என்னாச்சு?”
சேப்பாயிக்கு வெளியே சூரியன் இறங்கிய தொடுவானம் எங்கும் தகதகக்கும் தங்கமயமாக இருந்தது. ஒரு சிறு புன்னகைக்குப் பின்னர் வெங்கட்ராமன் தொடர்ந்தார்.
”ரெண்டு மாசத்துக்கப்புறம் செண்ட்ரலுக்கு ஒரு வேலையா போயிருந்தேன். பல்லவன் பஸ்ஸுல ஒரு போர்டு. “ஞாயிறு. வழி: செங்குன்றம்” அப்டீன்னு. அப்புறம் அர்ச்சனைச் சீட்டுலேர்ந்து எல்லாத்துலயும் ஞாயிறுன்னு மாத்திட்டாங்க.”
”சூப்பர். பெரிய சிவத்தொண்டு சார்.”
“அதெல்லாம் கிடக்கு. இன்னொரு விசேஷம் தெரியுமோ?”
“என்ன?”
“ஆதிசங்கரர்தான் அந்த கோயில் அம்மன் சொர்ணாம்பிகையை பிரதிஷ்டை பண்ணினது”
அம்மன் சன்னிதியில் நின்றபோது அந்த அதிர்வை உணர முடிந்தது இப்போது புரிந்தது. சின்னக் கோயில்தான். அம்மன் சன்னிதி ஓரத்தில் பிரதோஷ நாயகர் வெள்ளி விடையில் இருந்தார். அந்த நந்தியின் வேலைப்பாடுகள் பார்ப்பதற்கு கொள்ளை அழகு. அம்மன் சன்னிதி சுவற்றில் பன்னிருதிருமறை கோயில் என்று ஷெல்ஃப் அடித்து அதில் பன்னிருதிருமறை புத்தகங்களை அடுக்கியிருந்தது வணங்கத்தக்க செயல். ஒரு தடவை சன்னிதிக்குள் இருந்த அந்தக் கோயிலையும் கை கூப்பித் தொழுதேன்.
“கண்வ மகரிஷி முக்தியடைஞ்ச இடம். சாயாதேவியை ஒரு சாபத்துனால பிரிஞ்ச சூரியன் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தான். அப்போ சூரியனுக்கே டார்ச் அடிக்கிறா மாதிரி ஜோதிஸ்வரூபம் ஒண்ணு அவன் முன்னாடி போச்சு. இவனும் பின்னாடியே போனான். அது கடைசில இங்க ஞாயிறு புஷ்பரதேஸ்வரர் மேலே வந்து விழுந்தது. சூரியன் வணங்கி சாயாதேவிகூட சேர்ந்துட்டான். கணவன் - மனைவி பிரச்சனை இருக்கிறவா வந்து வழிபட்டா ஒண்ணு சேர்ந்துடுவா. அதனாலதான் சூரியன் சன்னிதி புஷ்பரதேஸ்வரர் சன்னிதிக்கு நேர் எதிரே இருக்கும்.”
”கோயில் ரொம்பப் புராதனமானதுன்னு நினைக்கிறேன்...”
“ஆமாமா... சோழ மன்னன் ஒருத்தன் நெல்லூர் வரைக்கும் போய் ஜெயிச்சுட்டு இந்தப் பக்கமா வரான். அப்போ இந்தக் காட்டுல ஒரு செந்தாமரை மலர்ந்து இருக்கு. அவனுக்கு அதைப் பார்த்ததும் ஆசையாப் போயி அதப் பறிக்க போறான். அது நகர்ந்து நீஞ்சிப் போகறது. துரத்தறான். புடிக்கமுடியலை. கடைசியில கையில இருக்கிற வாளை எடுத்து வீசறான் அந்த தாமரை அதனடியில பாதுகாப்பா மறைச்சிருந்த சிவலிங்கத்திலேர்ந்து ரத்தம் பீறிட்டு வழியறது. இப்பவும் இந்த லிங்கத்துல பார்த்தா உச்சில வெட்டுத்தழும்பு இருக்கும்.”
“அச்சச்சோ.. அப்புறம் அவனே கோயில் கட்டினானா?”
“ஆமாம். ரத்தம் வழிஞ்சு குளம் பூரா இரத்தக்குளமாயிடுத்து. லிங்கத்து மேலே வெட்டுப்பட்டதுல படார்னு சத்தமும் கண்ணைப் பறிக்கிற மின்னல் வெளிச்சமும் வந்தது. மன்னனுக்கு கண் பார்வைப் போய்டுத்து...”
“இதென்ன ஆண்டி க்ளைமாக்ஸ்?”
“ஹா..ஹா. அதெல்லாமில்லை. அப்புறம் சிவபெருமான் தோன்றி அவனுக்குக் கண் பார்வை கொடுத்து இந்த இடத்தில கோயில் கட்ட கட்டளையிட்டாராம்...”
"இன்னிக்கி ஒரே கூட்டம். லேட்டாயிடுத்து. சங்கிலி நாச்சியார் மனையைப் பார்த்துட்டு வந்துருக்கலாம்...”
“ம்.. போலாமே... இருபது இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஒரு ஹிஸ்டரி ப்ரொஃபஸர் மூலமா கோயில்லேர்ந்து இத்தனையாவது மனைன்னு தேடிக் கண்டுபிடிச்சோம்.. அப்போ அங்கே யாரோ குடிவந்துட்டாங்க... அவங்களுக்கு எடுத்துச் சொல்லி.. இது சங்கிலி நாச்சியார் இல்லம்ன்னு போர்டு நட்டோம்”
“இது பஞ்ச பாஸ்கர க்ஷேத்ரத்துல ஒண்ணுன்னு போட்ருந்தது. திருச்சிறுகுடி, திருமங்கலக்குடி, திருப்பரிதி நியமம் (பருத்தியப்பர் கோயில்), தலைஞாயிறு போன்ற திருத்தலங்களெல்லாம் நான் முன்னாடியே தரிசனம் பண்ணிட்டேன். அஞ்சாவது இதுதான். இதையும் இன்னிக்கு உங்க புண்யத்துல தரிசனம் பண்ணியாச்சு... பொதுவாவே ஸ்வயம்பு லிங்கக் கோயிலெல்லாம் சட்னு பார்த்துடமுடியாது...”
கோயிலுக்குப் போகும் போது திருமுடிவாக்கம் பக்கமாகச் செங்குன்றம் சென்றோம். சென்னைக்கு இருபது கி.மீ அருகில் இருக்கும் கிராமப்பட்டினங்களில் பெஞ்சு போட்ட டீக்கடையில் பன்னும் சேவும் வாங்கித் தின்று வசிப்பவர்கள் மன்னையையும் தொட்டடுத்த கிராமங்களையும் கண் முன்னே கொண்டு வந்தார்கள். புதிதாகப் போடப்பட்ட நெமிலிச்சேரி பைபாஸில் ஆளரவம் இல்லை. பாதியில் யானைப் பள்ளம் வெட்டியிருக்கிறார்கள். உங்கள் காரோடு நீங்களும் மாட்டலாம். இரவு நேரப் பயணத்திற்கு உகந்ததல்ல என்று மாதவரம் பக்கமாக ரெட்டேரி ஆவடி நுழைந்து கோயம்பேடு வழியாக வந்தோம்.
சனிக்கிழமை ஞாயிறுக்கு சென்று வீட்டிற்குள் நுழையும் போது விண்ணில் திங்கள் ஒளிர்ந்துகொண்டிருந்தது. சிவமயம்!

Friday, August 19, 2016

ஈஸ்வரா.... வைதீஸ்வரா...

சீர்காழியிலிருந்து சவுன்ட் சர்வீஸ் மூலம் "சௌக்கியமா?” கேட்கும் தூரத்தில் இருப்பது புள்ளிருக்குவேளூர் என்ற புராதன பெயர் கொண்ட வைதீஸ்வரன் கோயில். புள்+இருக்கு+வேள்+ஊர்=ஜடாயு+ரிக் வேதம்+முருகன்+சூரியன் வழிபட்ட ஸ்தலம். அங்கு செல்லும் வழியில், கோயில்தோறும் கைகொட்டி பாடல்கள் பாடிய ஞானபாலகன் ஞானசம்பந்தனுக்கு, கைவலி தீர்க்க, தங்கத் தாளம் கொடுத்த சப்தபுரீஸ்வரரும் அதில் ஓசை வரும்படி செய்த ஓசை கொடுத்த நாயகியும் எழுந்தருளியிருக்கும் திருக்கோலக்கா தலம் இருக்கிறது. அற்புதமான கோயில். "கூற்றம் உதைத்த குழகன் கோலக்கா ஏற்றான் பாதம் ஏத்தி வாழ்மினே" என்று பதிகம் பாடி பக்தியால் உருகுகிறார் சம்பந்தர்.

சிறு பிராயத்தில் குழந்தைகளுக்கு திக்குவாயாகி பேச்சு சரியாக வரவில்லையென்றால் இன்னமும் இக்கோயில் ஸ்வயம்பு மூர்த்தியைத் தரிசித்து பேச வைக்கிறார்கள். நமக்கு ஏற்கனவே பேச்சு ஜாஸ்தி என்பதாலும் முன்னரே தரிசித்தவரை மனதாலே துதித்துக்கொண்டு நேரே வை.கோயிலுக்கு விட்டேன் சவாரியை.
கமண்டலத்துடன் குட்டையான அகஸ்தியர் படம் ஆங்காங்கே தொங்கு போர்டில் தெரிய நாடி ஜோதிடத் திண்ணைகள் தென்பட ஆரம்பித்தால் வைதீஸ்வரன்கோயிலுக்குள் நுழைந்துவிட்டோம் என்று அர்த்தம். இங்கே கடைவிரித்திருக்கும் அனைவருக்கும் சுவடி கிடைத்த ரகஸ்யம் என்ன? ஒரு சுவடியை நகலெடுத்து பிம்பச் சுவடி எடுக்கமுடியுமா? ஒரு கட்டுச் சுவடியில் குறிப்புகள் தெரிந்து புட்டுப்புட்டு வைப்பது சுலபமா? எல்லோருக்கும் அந்த ஜோஸ்யம் செல்லுபடியாகிறதா? நாடி ஜோஸ்யம் பத்தி நமக்குத் தெரிந்ததை தனியாக ஒரு போஸ்ட் எழுதுவோம். இப்போது கோயிலுக்குள் சென்று வணங்குவோம்.
எங்களுக்கு மூன்றாம் மொட்டை அங்கேதான். திருப்பதி வெங்கடாஜலபதி-புன்னை நல்லூர் மாரியம்மன்-வைதீஸ்வரன் என்ற வரிசையில் குழந்தைகளுக்கு மும்மொட்டை ஸ்தலங்களுள் ஒன்று வைதீஸ்வரன்கோயில்.
எப்போதும் அம்மன் சன்னிதி வழியாகத்தான் கோயிலுக்குள் செல்வது வழக்கம். குளக்கரைக்கு முன்னர் விஸ்வா லாட்ஜ் செல்வராஜ் வீற்றிருந்தார். "சார்! நல்லா இருக்கீங்களா?" என்று சம்பிரதாயமாக இல்லாமல் மனசாரக் கேட்டார். "ம்.. பிசினெஸ் எப்படிப் போகுது..."க்குப் பின்னர் ஐந்து சன்னிதிகளுக்கும் அர்ச்சனை தட்டு வாங்கிக்கொண்டு அமைதியாயிருந்த பச்சைக்குளத்தைப் பார்த்துக்கொண்டே... வைதீஸ்வர தரிசனத்துக்கு நடந்தோம். அது சித்தாமிர்த தீர்த்தம். ஒரு முங்கு முங்கி எழுந்தால் எப்பிணியும் தீர்க்கும் சர்வ வல்லமை வாய்ந்த குளம்.


வலஞ்சுழி விநாயகர், அங்காரகன், தையல்நாயகி, முத்துக்குமாரஸ்வாமி, வைதீஸ்வர ஸ்வாமி என்று ஐவருக்கும் அருச்சனை செய்து வழிபடுவது மரபு. குளக்கரை ஸுப்ரமண்யரைச் சுற்றி கறுப்புக் கோடுகள் போட்ட கறுப்பு ஆடுகள் யார்? பிரதோஷகால சிவன் கோயில் போலவே அன்று தெரியவில்லை. கண்ணுக்கெட்டிய தூரம்வரை பக்தர்கள் இல்லை. ஒரு முதியவர் அம்மன் சன்னிதி எதிரில் உள்ள படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டு ”உப்பு... மிளகு உள்ளே கொட்டுங்க... குளத்துல எதையும் கரைக்காதீங்க...” என்று படியைப் பார்த்தே பேசிக்கொண்டிருந்தார்.
வலஞ்சுழி விநாயகருக்கு அர்ச்சனை செய்து பக்கத்திலேயே அங்காரகன் உற்சவருக்கும் செய்துகொண்டோம். அதற்கு முன்னர் பிரகார விநாயகருக்கு ஒரு சிதறுகாய் உடைத்தேன். பின்னர் தையல்நாயகிக்கும் முத்துக்குமார ஸ்வாமிக்கும். கடைசியாக வைதீஸ்வரன். பிரதோஷ புறப்பாடுக்கு வெள்ளி நந்திவாகனம் ஸ்வாமி சன்னிதிக்கு நேரில் தயாராக இருந்தது. அதன் காதைக் கடித்துக்கொண்டிருந்த பெரியவருக்கு அறுபது வயசுக்கு மேலிருக்கும். நந்தி காதில் ப்ரார்த்தனையைச் சொல்ல வேண்டும் என்று யார் சொன்னது? நந்திகேஸ்வரர் சண்டிகேஸ்வரர் போன்ற ஈஸ்வர பட்டம் பெற்றவர்கள் எப்போதும் சிவசிந்தனையில் இருப்பவர்கள் என்று பாட்டி சொல்வாள். அவர்களை கைதட்டியோ சொடுக்கியோ இம்சை செய்யக் கூடாது என்பாள். காதோடு காதாக ரகஸ்யம் பேசலாமோ?
ஸ்வயம்பு மூர்த்தி. திவ்யமான தரிசனம். பின்னால் ஒரு மாமி உட்கார்ந்து கொண்டு "ஸ்ரீ வைத்யநாதாய நமசிவாய” என்று வைத்யநாதஷ்டகம் பாடிக்கொண்டிருந்தார்கள். தீபாராதனைக்கு "வைத்யநாதாய நமசிவாய:" ஔவைப் பாட்டி போல நம்மை நேரே ஜீவனோடு கைலாயத்துக்குக் கொண்டு சென்றது.
சித்தமெல்லாம் சிவமயமாக, நெற்றி முழுக்க விபூதியுடன் வேஷ்டி சட்டையணிந்த அகோரியாக வெளியே வந்தேன். ஸ்வாமி சன்னிதிக்குப் பின்னால் நவக்ரஹங்கள். எல்லா சிவத்தலங்களிலும் முன்னால் இருக்கும் நவக்கிரஹம் இங்கே பின்னால். ஆதிகாலத்தில் சிவன்கோயில்களில் நவக்ரஹ வழிபாடு இல்லை என்று படித்திருக்கிறேன். இங்கே வைத்யநாதருக்குக் கட்டுப்பட்டு பின்னால் நிற்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளலாம். வெளிப்பிரகார பிரதக்ஷிணத்தில் பட்டமொளகாவை ஓரத்தில் தூக்கி எறிந்துவிட்டு புளிசாதம் சாப்பிடும் "பிரகாரச் சாப்பாடு" பக்தர்களைக் கூட காணோம்.
வடவண்டை பிரகாரம் ’ஓ’வென்று இருந்தது. பிரதிவருஷம் ஒருநாள் வைதீஸ்வர தரிசனத்துக்கு வரும்போது பாட்டியின் கையைப் பிடித்துக்கொண்டு சமர்த்தாய் நடந்த ட்ராயர் ஆர்.வி.எஸ், என் முன்னே நிழலாய்ச் செல்ல பின்னால் என் மகள் வினயா மொபைலைப் பார்த்துக்கொண்டு வந்துகொண்டிருந்தாள். தெற்கு தெருவில் வைத்யநாதக் குருக்கள் ஆத்தில் வந்திறங்கி... "வைதீஸ்வரா.. தையல்நாயகி... முத்துக்குமாரா..." என்று பாட்டி சக ஸ்நானர்களுக்கும் சேர்த்து வேண்டிக்கொள்ள... அந்தக் குளத்தில் குளிப்போம்... "பயப்டாதேடா தம்பி... இந்த கொளத்துல சர்ப்பமெல்லாம் கிடையாது..." என்று தலையை தண்ணீருக்குள் போடச் சொல்வாள்.
தையல்நாயகிக்கு மாவிளக்குமா போட்டு... ஐந்து சன்னிதி அர்ச்சனை முடித்து... வைத்யநாத குருக்களிடம் விபூதிப் பிரசாதம் (மருந்து உருண்டை*யோடு) வாங்கிக்கொண்டு கும்மோணம் பஸ் ஏறுவோம். கும்மோணத்திலிருந்து மன்னைக்கு இன்னொரு பஸ். "குருக்களாத்துலேர்ந்து ஒரு மணிக்காணும் கெளம்பிடுவோம்டி பவானி. சாயரக்ஷைக்கு ஆத்துக்குப் போயிடலாம்..." என்று மடிசாரை இழுத்துவிட்டுக்கொண்டு வேகுவேகென்று நடந்த சாரதாம்பாளை நினைத்துக்கொண்டேன். வீட்டு வாசல்படி இறங்கிய பின்னர் வெளியிலிருந்து பச்சைத்தண்ணி கூட பாட்டி பல்லில் படாது. சின்ன மூடி போட்ட சொம்பில் டிகாக்ஷனும்... “பாலுக்கு தோஷமில்லை...” என்று கிடைக்கிற இடத்தில் சூடாய்ப் பாலும் வாங்கி இன்ஸ்டெண்ட் காஃபி குடிப்பாள்.
"இன்னிக்கி கார்த்தாலே குளிக்கமாட்டேன்னு அடம்பிடிச்சியே.. அந்த கொளத்துல சதானந்தர் ஒரு முனிவர் தபஸ் பண்ணிண்டிருந்தாராம். அவர்க்கு முன்னாடியும் நிறைய சித்தபுருஷாள்ளாம் அமிர்தத்துனால வைத்ய நாதருக்கு அபிஷேகம் பண்ணி... அந்த கொளத்துல தபஸ் பண்ணி.. அவருக்கு நமஸ்காரம் பண்ணியிருக்கா.. அதான் அந்த சித்தாமிர்த கொளம். அப்படி சதானந்தர் ஒருநா தபஸ் பண்ணிண்டிருக்கும்போது உஸ்,.உஸ்ஸுன்னு பக்கத்துல ஒரே சத்தம்... கண்ணத் தொறந்து பார்த்தாக்கா ஒரு பெரிய சர்ப்பம்... தவளையைப் பிடிக்க சீறிண்டிருந்தது... தபஸ் கலைஞ்சதுல அவருக்கு கோவம் வந்துடுத்து.. ஒடனே இந்தக் கொளத்துல சர்ப்பமோ... தவளையோ வந்தா செத்துப்போகட்டும்னு சபிச்சுட்டார்.. அதுலேர்ந்து அந்தக் கொளத்துல தவளை... சர்ப்பமெல்லாம் கிடையாது..." என்று மாயூரம் பஸ்ஸிலேயோ கும்மோணம் பஸ்ஸிலேயோ ஜன்னலோரமாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கும் எனக்கு ஒரு கதை அவளிடமிருந்துக் கிடைக்கும்.
கிழக்கு கோபுரவாசல் பக்கம் ஆதி வைத்யநாதர் சன்னிதி உண்டு. அங்கு வேப்பமரக் கொழுந்து பறித்து வாயில் போட்டுக்கொள்வது என் பாட்டிக் காலத்துப் பழக்கம். “தீராத வியாதியெல்லாம் சொஸ்தமாயிடும்...” என்று ஐந்தாறு இலைகளை கசப்பால் என் முகம் சுளிக்கத் தின்பாள் பாட்டி அந்த மரம் க்ருத யுகத்தில் கதம்ப வனம், த்ரேதா யுகத்தில் வில்வ வனம், துவாபர யுகதில் வகுள வனம், யுகம்யுகமாய் வெவ்வேறு மரமாக இருந்தது என்றும் கலியுகத்தில் வேம்பு வனம் என்றும் ஒரு போர்டு வைத்திருப்பார்கள்.
நவக்ரஹங்களில் இது செவ்வாய் ஸ்தலம். அங்காரகன் மூலவர் தனியாய் இருந்தார். சாயரட்சையில் யாரோ மொட்டையடித்துக்கொண்டு கையில் அகல் விளக்கோடு அங்காரகனைச் சுற்றிவந்துகொண்டிருந்தார். தரிசனம் முடித்து கொடிமரத்தடியில் நமஸ்கரித்தோம். எப்போதும் ஆடிக்கொண்டிருக்கும் யானையைக் காணவில்லை.
சேப்பாயியைக் கிளப்பும்போது "மன்னைக்குத்தானே" என்று அது கேட்டதுபோல இருந்தது. "ஆமாம்..." என்று மனசோடு சொல்லிக்கொண்டு முன் விளக்கு இரண்டும் ஒளி பாய்ச்சி வழிகாட்ட மாயூரம் சாலையில் விரைந்தேன்.
*மருந்து உருண்டை: அபிஷேகம் செய்த தீர்த்தம், சந்தனம், விபூதியோடு வேப்ப இலை மற்றும் புற்று மண்ணால் தயாரிக்கப்படும் திருச்சாந்து உருண்டை. சர்வரோக நிவாரணி.

உள்ளம் கவர் கள்வன்


புறவழிச்சாலைகளில்லாக் காலங்களில் சிதம்பரம், சீர்காழி போன்ற சிவத்தலங்களின் கோபுர தரிசனமாவது செய்யும் பாக்கியம் இருந்தது. இப்போது கடலூர் தாண்டினால் ஒரே மிதி.... சீர்காழி கடந்து புள்ளிருக்குவேளூர் மாயவரம் பாதையில் கொண்டு வந்து இறக்கிவிடுகிறது. சென்னையில் கிளம்பியதிலிருந்து "பெம்மான்" தரிசனம் செய்யவேண்டுமென்பது என் அவா. உள்ளம் கவர் கள்வனல்லவா!!

ஆக்ஸிலேட்டரிலிருந்து காலை எடுக்க மனமில்லாத, பரந்துவிரிந்து ஓடும் அகண்ட சாலையிலிருந்து சட்டென்று உதறி பிய்த்துக்கொண்டு சீகாழிக்குள் இறங்கிவிட்டேன். சட்டநாதஸ்வாமி கோயில் தருமையாதீனக் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. ஒரே மதிலுக்குள் ஸ்வாமிக்கும் அம்மனுக்கும் இரு தனிப்பெரும் கோயில்கள். கொடிமரம் தாண்டி நுழையும் போது வரும் கோபுரவாசலில் 'தோடுடைய செவியன்... விடையேறி..... பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே..."வை வெள்ளைப் பளிங்கு கல்லில் செதுக்கி சுவரில் பார்வையாய் ஒட்டியிருந்தார்கள்.
சிவபெருமானை தோடுடைய செவியன் என்று பாடியது..... தனக்கு முலைப்பால் கொடுத்து இடப்பாகத்தில் அமர்ந்த அம்மனைப் புகழ்ந்துதான் சிவபெருமானையே பாடினாராம்... சக்தியின் சக்தி. எப்போதோ கேட்டது.
பிரதோஷமாக இருந்ததால் ஊரார் சிலர் அருகம்புல், பால், வில்வம் என்று கையில் யத்கிஞ்சிதங்களோடு நடமாடினார்கள். கிழக்கு பார்த்த சன்னிதி. கோபுரவாசலிலிருந்தே பிரமபுரீஸ்வரர் காட்சி தருகிறார். பிரம்மா பூஜித்த ஈசன். அரையிருட்டில் சிவத்யானத்தில் இருந்த நந்தியெம்பெருமானை கடந்து செயற்கை விளக்கொளியில்லாமல் சுடராடும் எண்ணெய் விளக்கில் மனசுக்கு இன்னும் நெருக்கமானார் பிரமபுரீஸ்வரர். திருவாசிக்குப் பின்னால் ஏற்றிய ஒற்றை அகலை கிரணங்களாக்கிக் காண்பிக்கும் அந்த சுடர்க் கண்ணாடியில் தீபம் நடமிட ஏகாந்த தரிசனம்.
"சார்... அர்ச்சனை சட்டநாதருக்கா? இல்ல பிரம்ம...."
"விசேஷம் யார்க்கு?"
"இங்க சட்டநாதருதான்... அவர்தான் வரப்பிரசாதி..."
"சட்டநாதருக்கே பண்ணுவோம்..."
உதவிக்கு வந்தவரும் ஒரு சட்டநாதர்தான். சீர்காழி ஆள். வலம் வந்த பின்பு பிரம்மபுரீஸ்வரர் சன்னிதிக்கு பின்புறம் மேலே மாடி ஏறினோம். ஒரு டிக்கெட் விலை ரூ. 5. என்று தகரபோர்டில் எழுதி மாடியேறும் பாதையை மூடியிருந்த கதவில் மாட்டியிருந்தார்கள். சிமென்ட் படிக்கட்டில் நிதானமாக ஏறும்போது ராஜாக்கள் காலத்தில் மரப்படி அமைத்திருப்பார்களோ.... பிற்காலத்தில் அது சிதைந்திருக்குமோ... என்ற எண்ணம் எழுந்தது.
இருபது முப்பது படிகள் ஏறினால் தோணியப்பர் சன்னிதி வருகிறது. கருவறைக்குள் பிரமாண்டமான உமாமஹேஸ்வர சிலா ரூபங்கள். பெரியநாயகர். பெரியநாயகி. தரிசனம் செய்பவர்கள் கண்டதும் உறைந்துவிடும் ஜாலம் மிகுந்த சிற்பங்கள்.
"இவர் தோணியப்பர்... உமா மஹேஸ்வர்.. சுதைச் சிற்பம்தான். அபிஷேகம் கிடையாது. இவர்தான் இங்கே குருமூர்த்தம்." என்றார் குருக்கள்.
தீபாராதனை. ஒத்திக்கொண்டோம்.
“குருமூர்த்தம்...”
“ஆமா.. ஜனங்களுக்கு உபதேசம் பண்ணுவார்... இந்த தலத்துக்கு ஒரு பெருமை இருக்கு.. தெரியுமோ?”
“என்ன மாமா?”
“பல கோயில்ல... ஒண்ணு குருமூர்த்தம் இருக்கும்... இல்ல.. சங்கம மூர்த்தம் இருக்கும்... லிங்க மூர்த்தம் எல்லா கோயில்லயும் இருக்கும்..... இங்கதான் மூன்று மூர்த்தங்களும் சேர்ந்தே இருக்கு....”
“........”
“கீழே லிங்க மூர்த்தம் பார்த்திருப்பேள்... பிரமபுரீஸ்வரர்... இப்போ இங்கே படியேறி வந்து குருமூர்த்தமா தோணியப்பரை தரிசனம் பண்ணிட்டேள்..இன்னும் மேலே போனா பார்க்கப்போறோமே... சட்டைநாதர்.. அவர்தான் சங்கம மூர்த்தம்.. சங்கம மூர்த்தம்னா... ஜனங்களோட இஷ்டகாம்யார்த்தங்களை பூர்த்தி பண்ணுபவர்.... வேணும்னு கேட்டா வரமருளும் வரப்பிரசாதி......”
அந்த குறு சொற்பொழிவில் சீகாழியின் சிறப்பு விளங்கியது. ஞானசம்பந்தர் திருமுலைப்பால் அருந்தியது ஒன்றே இத்தலத்து பெருமை என்று இதுவரை நினைத்திருந்தேன்.
"அர்ச்சனை சட்ட நாதருக்குதானே.... மேலே போங்க வரேன்..." என்று என் சிந்தனையைக் கலைத்தார்...
குறுகலான படிக்கட்டு இன்னும் ஒரு தளம் மேலே சென்றது. மேலே கடைசிபடியிலிருந்து ஒரு இரும்பு ஜன்னல் வழியாக அண்ணாந்து பார்த்தால்....நின்ற திருமேனியுடன் சட்டைநாதர் தெரிந்தார். எண்ணெய்க் காப்பு சார்த்தியதில் பளபளப்பாக ஜொலித்தார்.
"கூட்டமேயில்ல...." என்று அம்மாவிடம் சொல்லிக்கொண்டே படியேறினேன்.
“சட்டைநாதர் பைரவ சொரூபம். ஹிரண்ய வதம் பண்ணின நரசிங்கத்தை கிழிச்சு... அதோட முதுகெலும்பை கதையா வச்சுண்டிருக்கார்.... அதோட தோலை சட்டையா மாட்டிண்டிருக்கார்... அஷ்டமியெல்லாம் ரொம்ப விசேஷம்.. சுக்ரவாரங்கள்ல நடுராத்திரி பூஜை நடக்கும். கூட்டம் முட்டித்தள்ளும்.. மஹா நேவேத்யம் கிடையாது.. வடை பாயஸம்தான் நிவேதனம்.”
தளத்திலிருந்து சுற்றிப் பார்த்தால் கோயிலின் எழிலான சுற்று கோபுரங்கள் தெரிகின்றன. பழமை தொற்றியிருந்தது. பின்னால் குருக்கள் ஏறி வந்து "இதோ.. இந்த வழியா உள்ள போகணும்..." என்று காண்பித்து சென்று மறைந்த இடத்தில் என்னைப் போன்ற தேசலான தேகம் கொண்டவர்கள் மண்டியிட்டு குனிந்து உள்ளே நுழையுமளவிற்கு ஒரு துவாரம்.
"இங்க ஜாஸ்தி பேர் நிக்க முடியாதே?"
"அஞ்சஞ்சு பேரா உள்ள விடுவோம்..."
உள்ளே சென்று நிமிர்ந்தால் நம் தலைக்கு மேலே சட்டை நாதர் நிற்கிறார். பார்த்தவுடன் ஏனோ சிலிர்க்கிறது. பின்னால் உள்ளே நுழைந்த வினயாவை "தலையில பூ வச்சுண்டு உள்ளே வரப்படாதும்மா... கழட்டிடும்மா..." என்றார். பின்னர் என்னைப் பார்த்து... "இதெல்லாம் இங்கே ஐதீகம்... இதுமாதிரி இன்னும் நிறையா இருக்கு... உங்க கோத்ரம், நக்ஷத்திரம் சொல்லுங்கோ...." என்றார் அர்ச்சனைககு.
அர்ச்சனை முடிந்தது. அப்படியே நெய்வேத்யம் செய்தார்.
"தேங்காய் உடைக்கலையா?"
"ம்...இல்லை.. சொல்றேன்..அது ஒரு ஐதீகம்..." தீபாராதனை தொடர்ந்தார்.
"என்ன ஐதீகம்?"
"இங்கே அர்ச்சனைக்கு தேங்காயை உடைக்க மாட்டோம். அப்படியேதான் அர்ச்சனை. அந்த தேங்காயை ஆத்துக்கொண்டு போய் உடைச்சு அந்த இள நீரை கீழே விடாமல் குடிச்சுடணும். தேங்காயைத் துருவி வெல்லம் போட்டுச் சாப்பிடணும்..."
"ம்... சமைக்கக்கூடாதோ..."
"ஊஹும். அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்..."
நிறுத்தினார்.
அம்மா, சித்தி, வினயா, பக்கத்தில் நின்ற சட்டைநாதர் என்று அனைவரும் ஏதோ ஒரு தேவரகசியத்திற்கு உஷாரானார்கள்.
"அந்த வெல்லம் போட்ட தேங்காயை உங்க குடும்பத்துல இருக்கிறவா மட்டும்தான் சாப்பிடணும்...."
**
பிரதக்ஷிணம் செய்துகொண்டு வரும்போது நந்திக்கு பிரதோஷ அபிஷேகம் நடந்துகொண்டிருந்தது. பின்பு திருநிலை நாயகி தரிசனத்திற்காகச் சென்றோம். பச்சைக் கலரில் வேஷ்டியணிந்து கொண்டு சிவ தரிசனம் செய்ப்வர்கள் யார் என்று புரியவில்லை. ஒரு கூட்டமாக ஓங்கிச் சிரித்துக்கொண்டு வந்தார்கள். அம்மன் கோயில் முன்பு பெரிய குளம். ஞான சம்பந்தனுக்கு முலைப்பால் கொடுத்த இடம்.
" நாம தோணியப்பர் பார்த்தோமில்ல... அங்கின இருக்கிற பெரியநாயகி அம்மந்தான் பால் கொடுத்தது... இந்த அம்மனில்லை..." என்றார் கூடவே வந்த மனுஷ்ய சட்டைநாதர்.
"எந்த அம்மனென்றால் என்ன? இங்கேயும் அங்கேயும் எங்கேயும் நீக்கமற நிறைந்திருப்பது ஒரே சக்திதானே? லோகமாதா அவள்தானே?” என்ற என் தத்துவார்த்தமான கேள்விகளுக்கு கடனேன்னு ஒரு புன்னகை உதிர்த்து பேசாமல் முன்னேறினார்.
அம்மன் சன்னிதி வாசலில் இருவர் கையில் அர்ச்சனைத் தட்டோடு அமர்ந்திருந்தார்கள். நிசப்தம். நிசப்தம். எங்கும் நிசப்தம்.
"சாமி வருவாரு... உக்காருங்க..." சாதாரணமாகப் பேசியதே கூம்பு ஸ்பீக்கரில் பேசியது போலிருந்தது.
பிரகாரத்தில் தேர்வடம் ஒன்று மடங்கிய வாசுகியாய் நீண்டு கிடந்தது.
"அது என்ன தெரியுமா?"
"கயறு.. தேரெல்லாம் இழுப்பாளே..." என்றாள் வினயா பட்டென்று.
"அதுக்குப்பேரு தேர்வடம்..."
வெள்ளையும் வெள்ளையுமாய் பக்கத்தில் இருந்தவர்...
"அது பளசு... இப்போல்லாம் நைலான்ல வந்துட்டுது...அதுலதான் இளுக்கறோம்..."
"கையி வலிக்காதோ?"
"அதெல்லாமில்லை சார்.. நூறு பேர் இளுக்கறதுக்கு பதிலா அம்பது பேரு போதும்.... முன்னாடி டிராக்டர் கட்றாங்க... பின்னாடி பலகை கொடுத்து நெம்புறாங்க... அந்தக் காலமெல்லாம் மலையேறிப்போச்சுதுங்க...."
பேச்சின் நடுவில் க்ரீச்சிடும் சைக்கிளில் வந்திறங்கினார் குருக்கள். திருநிலை நாயகிக்கு என் அம்மா ஆறுமுழம் புடவை உடுத்தியிருப்பது போல கட்டியிருந்தார்கள். சாயந்திர வேளையில் அருள்வதற்கு தயாராக இருந்தாள். ”சர்வ மங்கள மாங்கல்யே....சிவே...” தீபாராதனை ஒத்திக்கொண்டு லோக க்ஷேமத்திற்கு வேண்டிக்கொண்டோம்.
அம்மன் சன்னிதி திருவலம் முடிந்த பின்பு ...
"ஞானசம்பந்தர் சன்னிதி...எங்கேயிருக்கு?" தேடினேன்.
"தோ...அங்கின.. ஆனா ரொம்ப பேரு சாமி அம்மனைப் பார்த்துட்டு வீட்டுக்குப் பறந்துடுவாங்க..."
"நாம போவோம்..."
ஞானசம்பந்தருக்கு தனிக்கோயில். நுழைவாயிலில் கணநாதர் இருந்தார். ரிட்டயர்டானவர்கள் வயதில் இருந்த பெரியவர்கள் ஐந்தாறு பேர் அங்கே கலந்து பேசி லோகபரிபாலனம் செய்து கொண்டிருந்தார்கள். உள்ளே நுழையும் போது இருக்கும் அர்த்த மண்டபத்தில் காலி அலமாரிகளோடு ஒரு புத்தக நூல் நிலையம் இருந்தது. ஞானசம்பந்தர் பெருமானுக்கு முன் லிங்க ரூபத்தில் சிவபெருமான் வீற்றிருந்தார். ஞானப்பால் குடித்து இறை இலக்கியம் செய்த பிரானை மனதாரத் துதித்துக்கொண்டு திருவலம் வந்தோம். “உள்ளம் கவர் கள்வன்” என்கிற பதத்தை அருளிய பெருமகனார்.
மீண்டும் ராஜகோபுர வாசல் கொடிமரத்தருகே நமஸ்கரித்து சேப்பாயியை வைதீஸ்வரன் கோயில் பக்கம் நகர்த்தினேன். அடுத்து...
படம்: தோணியப்பர் கோபுரம்.

குமரன் குன்றம்


”அப்போ சிட்லபாக்கம் ஏரிகிட்டே பெரியவா முஹாம். அப்போல்லாம் இவ்ளோ குடித்தனமெல்லாம் இங்கே கிடையாது. அங்கேயிருந்து அந்த சின்ன குன்றைப் பார்த்துட்டு “ஸுப்ரமண்ய சாந்நியத்யம் இருக்கிற இடம் அது” என்றாராம். உள்ளூர் வாலிபப் பையன்கள் சிலர் மகா பெரியவா சொன்னத்துக்காக அந்தக் குன்றின் மீதேறி பார்த்தார்களாம். அரைமணில ஒரு வேல் கிடைச்சுதாம். உடனே அங்கேயே ஒரு கோயில் கட்டிடலாம்னு வேலையை ஆரம்பிச்சு மளமளன்னு கோயில் வளர்ந்துவந்துது.
முருகன் சிலையை வடிச்சப்புறம் மகா பெரியவாகிட்டே கொண்டு போய் காமிச்சாளாம். மெல்ல சிலையை வருடிப் பார்த்துட்டு “வயறு கொஞ்சம் பெரீசா வந்திருக்கே... குறைக்கணும்”ன்னார். சில்பிகிட்டே குடுத்து அதைக் கொஞ்சம் கொறைச்சு வாங்கிண்டாளாம். அப்புறமா ஒரு விநாயகர் வேணுமின்னு சிலை பண்ணி பெரியவாகிட்டே தூக்கிண்டு ஓடினா. அப்போ ஆந்திராவிலே கோதாவரி நதிதீரத்துல முகாமிட்டிருந்தார்.
“நன்னா வந்திருக்கு...”ன்னு கோயில் கும்பாபிஷேகத்து ஆசி பண்ணி அனுப்பிவைச்சாளாம். திடீர்னு நல்ல மழை. கோதாவரி கரைபுரண்டு வெள்ளமா ஓடறது. எப்படி ஊருக்கு போறதுன்னு தவிச்சாளாம். அப்போ அந்தப் பக்கமா ஒரு லாரி வந்திருக்கு. இன்ன காரியத்துக்காக மெட்ராஸ் போகணும். எப்படியாவது கொண்டு போய் விடுங்கோன்னு கெஞ்சியிருக்கா. சேரின்னு பிள்ளையார் சிலையையும் எடுத்துண்டு எல்லோருமா அந்த லாரியில மெட்ராஸ் வந்துட்டா.
இங்க வந்தாச்சு. லாரியில வந்தவாள்ளாம் சேர்ந்துண்டு விநாயகர் சிலையை இறக்கி வச்சுட்டு... லாரிக்காரனுக்கு காசு குடுக்கணும்னு வெளில வந்து பார்த்தா.... லாரியைக் காணும். புது லாரியா இருக்கேன்னு நம்பர்லாம் நோட் பண்ணிண்டு தான் வந்துருக்கா. அந்த நம்பரை வச்சு லாரியை மடக்கிடலாம்னு விஜாரிச்சுப் பார்த்தா அந்த மாதிரி ஒரு நம்பரே இதுவரைக்கும் ஆர்டிஓ ஆஃபீஸ்லேர்ந்து கொடுக்கலேன்னு பதில் வந்துதாம். எல்லாருக்கும் ஆச்சரியமான ஆச்சரியம். மஹா பெரியவா மகிகை.
அதுதான் இந்த குமரன் குன்றம் கோயில். பாலசுப்ரமண்ய ஸ்வாமி.” என்று இந்தக் கதையைச் சொன்னவர் குரோம்பேட்டை “கலவை குருபரம்பரா வேத வித்யா ட்ரஸ்ட் சங்கரமடம் வேதபாடசாலை”யின் அத்யாபகர் ஸ்ரீ. சிவகுமார் சர்மா. எதிர்வரும் 29ம் தேதி அங்கே சமஷ்டி உபநயன ப்ரம்ஹோபதேசம். யத்கிஞ்சிதம் கொடுப்பதற்காக அக்கௌண்ட்ஸ் வெங்கட்ராமன் சாருடன் வெய்யில் தாழ மாலையில் சென்றிருந்தேன்.
சின்னச் சின்ன ப்ரம்மச்சாரி குழந்தைகள் சிகையோடு குனிந்து நிமிர்ந்து வேதம் சொல்லிக்கொண்டிருந்தார்கள். பார்க்கவே பரவசமாக இருந்தது. வேதம் சொல்லும் குழந்தைகள் ப்ரம்ம தேஜஸுடன் இருந்தார்கள். அனைவரும் வேதம் சொல்லும் போது மூன்று முறை அவர்களை பிரதக்ஷிணம் வந்து நானும் சங்கீதாவும் நமஸ்கரித்தோம். அப்போது உள்ளத்தில் தோன்றிய ஒரு உணர்வுக்கு வார்த்தயேது!!
குமரன் குன்றம் வாசலில் பாலசுப்ரமண்ய ஸ்வாமி என்றும் சன்னிதியில் ஸ்வாமிநாத ஸ்வாமி என்றும் நாமகரணம் எழுதியிருந்தார்கள். வெள்ளி வேல், வெள்ளியிலேயே சேவற்கொடி, க்ரீடம் ஜொலிக்க ருத்ராக்ஷ மாலையுடன் அருள்பாலித்தார் ஸ்வாமிநாத ஸ்வாமி. அப்போது சன்னிதியில் “அகரமுமாகி அதிபனுமாகி...” திருப்புகழ் அசரீரியாய்க் கேட்டது. அற்புதமான குரல் வளம். கண்ணை மூடிப் பாட்டுக் கேட்டாலே இதுவரை பார்த்த ஸ்கந்த ஸ்வரூபங்கள் நினைவலையில் வந்து வரிசைக்கட்டி நின்றது.
”இயலிசையில் பாடச் சொல்லி கேட்போமா?”
“வேண்டாம்பா.. அவங்க எங்கியாவது அவசரமா போய்கிட்ருக்கப்போறாங்க...”
கேட்டுவிடு என்றது எனது உள்மனசு. பிரதக்ஷிணம் வந்தவுடன் எதிரே போய் கும்பிடு போட்டேன்.
“நல்லா பாடினீங்க. அற்புதமா இருந்தது”
“தேங்க்ஸ்”
“கொஞ்சம் இயலிசையில் உசித... பாடமுடியுமா?”
“ஓ... தாரளமா”
கண்ணை மூடி ஆரம்பித்தார்கள். மீண்டும் முருகனின் சன்னிதியை இசைவெள்ளம் சூழ்ந்தது. பக்கவாத்தியங்கள் இல்லாமல் ஆர்மோனியப் பெட்டி இல்லாமல் ஸ்ருதிபாக்ஸ் இல்லாமல் செவிக்கு இன்பம் அளித்த வாய்ப்பாட்டு. வார்த்தைகள் தெளிவாகவும் ஸ்ருதி சுத்தமாகவும்... ஆஹா... பாடப் பாட மயில்மீதேறி அங்கே முருகன் வந்தான்.
“நல்லா இருந்தது. மிக்க நன்றி” மீண்டும் கை கூப்பினேன். திருப்புகழால் வாய் மணக்கப் பேச்சு தொடர்ந்த போது சொன்னேன். “என் பசங்களும் திருப்புகழ் கத்துக்கிறாங்க...” அவர்களது சந்தோஷம் கண்களில் தெரிந்தது.
பம்மலில் இருக்கிறாராம். பெயரைக் கேட்டுக்கொண்டேன். கணவரை அறிமுகப்படுத்திவைத்தார்கள். இருவருக்கும் நன்றி சொல்லி வீடு வந்துசேர்ந்தேன். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரனிருக்கும் இடம். வேதபாடசாலை வித்யார்த்திகளும் ஒரு முறை நினைவுக்கு வந்தார்கள். நன்றாக கழிந்த ஞாயிறு.
வேதோ ரக்ஷதி ரக்ஷித: தர்மோ ரக்ஷதி ரக்ஷித:

திருப்பனங்காடு‬

”இன்னமும் அர்த்தராத்திரி வேளேல கோட்டை முனீஸ்வரர் வந்து இந்த ஸ்வாமிக்கு பூஜை பண்றார்ங்கிறது ஐதீகம்”
“ஐதீகமா.. இல்ல நடக்கறதா?”
“ஊர்ல சிலபேர் பார்த்துருக்கா... மூனீஸ்வரர் சித்த புருஷராச்சே... ரிஷிகள் சித்தர்களெல்லாம் ராத்திரிதான் சிவபூஜைக்கு வருவா.. அவர் பூஜை பண்ணின லிங்கத்தைதான் அகஸ்தியர் எடுத்து பூஜை பண்ணினார். அவர்தான் தாலபுரீஸ்வரர்.”
“மூனீஸ்வரரை ஊர்க்காரவங்கப் பார்த்திருக்காங்களா?”
“ஆமாம்.. பல தடவை கோயிலுக்குள்ள போன கால்தடமே இருக்குமே... ஒரு தடவை புடவை கட்டிண்டு ஊர்க்குள்ள போய்ட்டு... அப்புறமா இதோ.. எதிர்த்தார்ப்பல இருக்கிற பனைமரத்துலேர்ந்து பனம் பழம் பறிச்சு பூஜை பண்ணிட்டுப் போயிருக்கார்... மூனீஸ்வரரெல்லாம் சிரஞ்சீவி.. எல்லாக் காலத்திலேயேயும் இருப்பா...”
கழுத்தில் சிகப்புக் கல்லால் கோர்த்த மாலையும், சிரிக்கும் முகமாக அற்புதமாக கதை சொன்னார் வன்பார்த்தான் பனங்க்காட்டூர் என்றழைக்கப்பட்ட திருப்பனங்காடு க்ஷேத்திர தேவராஜ சர்மா குருக்கள்.
“முனீஸ்வரரைத் தர்சனம் பண்ணிட்டுதான் இங்க இருக்கிற சிவ மூர்த்தங்களை வழிபடணும்ங்கிறது இங்கே ஒரு சம்பிரதாயம்.. பனம் பழம் நேவேத்யம் பண்ணிட்டு சாப்பிட்டா குழந்தை பாக்கியம் கிடைக்கும்ங்கிறதும் காலம் காலமா இருக்கிற நிதர்சனம்... ”
**
வாலாஜாவிலிருந்து காஞ்சியின் சுற்றுப்புற தடதடக்கும் ரோடுகள் வழியாக ஐயங்கார் குளம் தாண்டுங்கள். அவ்வூர் எல்லையில் சாலை ஓர மரங்களின் ஊடே நூறு மீட்டர் தூரத்தில் ஒரு புராதன காலக் கற்றளி கோயில் தெரிகிறது. வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழைய மனசுக்குத் தூண்டில் போடுகிறது. சிவதரிசனத்துக்காக திருப்பனங்காடு ஓடுகிறோம்.
மாலை ஐந்து மணிக்கு அடங்கும் வெய்யிலே தாங்கமுடியவில்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீளும் அந்த வெண்பாக்கம் ரோட்டில் வரும் ஒரே வலதுபுற சாலையில் வண்டியைத் திருப்புங்கள். அரை கிலோமீட்டருக்குள் ஸ்ரீசுந்தரர் தீர்த்தம் என்ற பெயர்ப்பலகை காட்டுமிடத்தில் ஒத்தையடிப் பாதை ஒன்று தெரிகிறது. அதென்ன சுந்தரர் தீர்த்தம் என்று புருவம் சுருக்குவோர் இன்னும் கொஞ்ச நேரம் இந்த வ்யாசத்தைப் படிக்க வேண்டும். புராணம் இருக்கிறது.
கோயிலுக்கு ராஜகோபுரமில்லை. ஊர்க்கோடியில் இருந்த சௌகரியத்தால் வயலிலிருந்து அறுத்த கதிர்களை அடித்து நெற்மணிகளைக் குவித்திருந்தார்கள். விஸ்வரூபமாய் எழுந்து முனீஸ்வரரைப் போன்று நின்றிருந்த அரச விருட்சமும் அதன் கீழ் இருந்த கோட்டை முனீஸ்வரர் கோயிலும் ஆயிரமாயிரம் கதை சொல்லின. கோவிலுக்கு ஐம்பது பாகை இடதுகைப் பக்க சாய்மானத்தில் பெரிய குளம் இருக்கிறது. அல்லி மண்டியிருக்கிறது. தண்ணீர்ப் பார்க்காத எந்த சென்னைக்காரனும் எட்டிப் பார்க்குமிடம்.
**
“வர்ற வழியில சுந்தரர் தீர்த்தம்னு போட்டிருந்ததே.. அது... ”
“மாசி மாசம் வர்ற பிரம்மோற்சவமப்ப அந்த தீர்த்தக்கரையில பெரிய திருவிழா நடக்கும்... “
“என்ன கதை?”
“காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரரைத் தர்சனம் பண்ணிட்டு சுந்தரர் பனங்காட்டூருக்கு வரார்... அனல்வீசும் கோடைக்காலம். அப்போ அவருக்கு பயங்கர பசி வேற ஏறிப் போச்சு.. வெய்யில் பிச்சுப்புடுங்கறது.... கண்ணை இருட்டிண்டு கிர்ர்ருன்னு தலை சுத்தி மயக்கமா வருது... அப்போ வயோதிகர் ஒருத்தர் வயல் ஓர வரப்புல தேமேன்னு உட்கார்ந்திருக்கார். இவரைப் பார்த்ததும்... இந்தான்னு... ஒரு பட்டை தயிர்சாதம் நீட்றார்.. வயித்துக்கு சாப்பாடு கிடைச்சாலும்... இவ்ளோ வெய்யில் அடிக்கிறது.. சாதம் மட்டும் போதுமா.. தண்ணீ கிடையாதா?ன்னு... நீரில்லா இடந்தன்னில் நீர் அமுதளித்தல் நீதியோ...ன்னு சுந்தரர் அதிகாரமாக் கேட்ருக்கார்... அதுக்கு அந்த பெரியவர் நீர் வந்த இடந்தன்னில் நீர் இன்றிப் போகுமோ...ன்னு பொடி வச்சுப் பேசிட்டு... காலால தரையைக் கீறி விடறார்.. ஒரு ஊத்து கிளம்பி தண்ணி குபுகுபுன்னு வருது.. சுந்தரருக்கு ஆச்சரியம்.. அப்போ.. சுந்தரா ... நான் வன்பார்த்தான் பனங்காட்டூரை உடையவன்...ன்னு சொல்றார்... எங்கேயோ திரும்பிப் பார்த்துட்டு சுந்தரர் அந்தப் பக்கம் பார்க்கிறார்...கொஞ்ச தூரத்தில துரிதகதியில் போயிண்டிருக்கார் அந்தப் பெரியவர்... சுந்தரர் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க ஓடிப்போறார்..... “
கோயில் சன்னிதி வாசலில் நின்று தலபுராணம் கேட்பது ஒரு சுகானுபவம். அவர்கள் சொல்லும் சம்பவங்களில் நாமும் ஒன்றிப்போய் சுந்தரரையோ.. சம்பந்தரையோ... பக்கத்தில் நின்று பார்த்ததுபோல ஒரு திருப்தி.
"ரெண்டு அம்பாள்.. ரெண்டு ஸ்வாமி... எல்லாமே ப்ளஸ் டூவாயிருக்கே...."
"ஹா..ஹா.. அகஸ்தியர் பூஜை பண்ணின தாலபுரீஸ்வரர்... அப்புறமா அவரோட சிஷ்யர் புலஸ்தியர் ஒரு லிங்க பிரதிஷ்டை பண்ணி கிருபானாதீஸ்வரர்னு வழிபட்டார். அதனால ரெண்டு.. ரெண்டு இப்படியிருக்கலாமான்னு சில பேர் கேட்டப்ப... இதுக்கு திருஷ்டாந்தமா ராமேஸ்வரத்தைச் சொல்வா...சீதா மணலால பிடிச்சு வச்சு ராமர் பூஜை பண்ணின ராமலிங்கமும் ராமரோட பிரதான சிஷ்யர் பொஷிசன்ல இருந்த ஆஞ்சநேயர் கைலாஸத்துலேர்ந்து தூக்கிண்டு வந்து பூஜை பண்ணின விஸ்வலிங்கமும் இருக்கும்... அது மாதிரிதான்..."
"மனுஷா சிலையெல்லாம் இருக்கே... அந்த செட்டியார்தான் இந்தக் கோயிலை எடுத்துக் கட்டினாரா?"
"ஆமாம்.. அவர் பேர் ஏகப்ப செட்டியார். அவரோட கேஸ் ஒண்ணு கோர்ட்ல இருந்தது. அது ஜெயிச்சா அந்த முப்பதாயிரம் ரூபாய்லயும் இந்த பனங்காட்டூர் தலத்தோட திருப்பணிக்கு தர்றதா வேண்டினார். கேஸ் இவர் பக்கம் ஜெயிச்சு.. அந்த முப்பதாயிரத்துக்கு மேலேயே காசு போட்டு திருப்பணி நடத்தி... 1916ல கிராமத்தார்களிடமிருந்து சுதந்திர உரிமை வாங்கிண்டு 1928ல கும்பாபிஷேகம் பண்ணினார். அவா குடும்பத்தினர்தான் இன்னமும் அறங்காவலர்களா இருக்கா..."
**
கோயில் சுத்தமாக இருக்கிறது. நகரத்தார் திருப்பணிக் கோயில்களின் அழகே அதன் சுத்தமும் சுகாதாரமும்தான். திருவலம் வருகையில் ஸ்தல விருட்சமான பனை மரத்தின் எழில் கொஞ்சும் சிலா ரூபமிருக்கிறது. கோவிலுக்கு வெளியேயும் உள்ளேயும் ஆண்பனை பெண்பனை மரங்கள் ஜீவனோடு பனங்காட்டுக்குச் சாட்சியாக நிற்கிறது. இரண்டு தெக்ஷிணாமூர்த்திகளில் ஒருவர் மேதா தெக்ஷிணாமூர்த்தி. காலடியில் ரிஷபம் இருக்கிறது. வீகேயெஸ்ஸின் தகவல் இது. சுப்ரமண்யர், நடராஜர் சன்னிதிகள் கடந்து வந்து அம்பாள் சன்னிதிகளின் வாயிலில் நின்றால் தூண்களின் புடைப்புச் சிற்பங்கள் நம் கண்களைக் கவர்கின்றன. அதில் விசேஷமாகச் சொல்வதென்றால் இராமயண காதையின் "வாலி வதம்". அம்பாள் சன்னிதி வாயில் தூணில் வாலியும் சுக்ரீவனும் துவந்த யுத்தம் புரியும் சிற்பம். வெளியே வாசல் தாண்டி வில்-அம்பும் கையுமாக ஸ்ரீராமன் நிற்கிறான். மானசா ஓடிப்போய் ராமன் தூண் அருகே நின்று "ம்... வாலி சுக்ரீவன் சண்டை போடறது தெரியறது..." என்று பார்த்துவிட்டு உள்ளே நுழைந்து துவந்த யுத்தம் செதுக்கியிருக்கும் தூணருகே நின்று பார்த்தால் ராமனைக் காண முடியவில்லை. "இங்கேர்ந்து ராமர் தெர்லப்பா..." என்று விழிவிரிய ஆச்சரியப்பட்டாள்.
**
"எங்கண்ணாவுக்கு வர்ற மாசில சதாபிஷேகம். அவர்க்கு மூணு வயசாகும் போது கண்ல பூ பட்டு தெரியாமப் போய்டுத்து.... டாக்டர்லெல்லாம் ஒண்ணும் பண்ண முடியாதுன்னு கையை விரிச்சுட்டா.. எங்கப்பாம்மாவுக்கு வருத்தம். ஸ்வாமியை நினைச்சுண்டே ஆத்துக்கு வர்ற போது... ரெண்டு பண்டாரம் 'நல்லான் சிவபெருமான் நம்மை வருத்துவது கொல்லான் கூற்றுவனை வெல்வதற்கே'ன்னு பேசிண்டே போயிருக்கா...
எங்கப்பாவும் தாலபுரீஸ்வரரை அனுதினமும் வழிபட்டார். என்னோட மூத்த தமையனார்.. அதாவது பர்வதராஜன்னு கண்ணு தெரியாமப் போனவரோட அண்ணா.. அவர்.. தினமும் இந்த தலத்து மாரியம்மனுக்கு மலர்மாலைக் கட்டிப் போட்டு வழிபட்டார். என்னோட அப்பாவும் தினமும் ஒரு பாடலாகப் பாடி தாலவனேசப் பெருமானை வழிபட்டார். அப்போ சித்தர் போல வந்த ஒருவர் ஆமை ஓட்டைத் தேய்த்து எம் தமையனார் இமையில் தடவினார். ஒன்றிரண்டு நாள்ல கண்ணு திறக்க ஆரம்பிச்சு பார்வை முழுக்க வந்துடுத்து. அப்புறம் அவர் படிச்சு.. பாரீ கம்பெனி வேலை பார்த்து ரிட்டயர்ட் ஆயிருக்கார். அவருக்குதான் சதாபிஷேகம். கலியில நாங்க பிரத்யட்சமா பார்த்த தாலபுரீஸ்வரரின் அருள்.,..."
**
குருக்கள் கோயில் மகிமைகளை அடுக்கிக்கொண்டே போகிறார். நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. திரும்பவும் வாலி வதம் பற்றிய பேச்சு வருகிறது. " நீங்க நல்லா கதை சொல்றேள்.." என்றேன். "சுத்துப்பட்டு கிராமத்து திருவிழாக்கள்ல ராமாயணம் மகாபாரதம் கதையெல்லாம் சொல்றேன்.. அப்பப்போ.." என்றார்.
"இந்த வாலியை குரங்கு வாலி , மனித வாலி, தெய்வ வாலி என்று தரம்பிரிச்சு . அ.சா. ஞானசம்பந்தம் சொல்லியிருப்பார். சுக்ரீவன் பொண்டாட்டியைக் கவர்ந்தப்போ குரங்கு வாலி, ராமன் மறைந்து பாணம் போட்டப்பா... ராமன்ட்டே நீ அம்புவிட்டத்து தப்புன்னு ஆர்க்யூ பண்ணினான்.. அப்போ மனுஷ வாலி... கடைசில தன்னோட தப்பை உணர்ந்து ராமன் கிட்டே... என் தம்பி சுக்ரீவன் எதாவது தப்பு பண்ணினான்னா... அவன் மேலே பாணம் போட்டுடாதேன்னு கேட்டப்ப தெய்வ வாலிம்பார்.." என்றேன். அதை ஆமோதித்து மேலும் பேச ஆரம்பித்தார்.
என்னோடு வந்த நண்பர்கள் தரிசனம் முடித்து அடுத்த கோயிலுக்கு கிளம்பத் தயாராயினர். "திருமுக்கூடல் நடை சார்த்திடப்போறா..." என்று அவசரப்படுத்தினார் அக்கௌன்ட்ஸ் வெங்கட் ராமன் சார். இன்னும் குருக்கள் கூட பேசினால் நிறையா விஷயதானம் பெறலாம். திருவாளர் காலத்தை கடிந்து கொண்டு புறப்பட்டோம்.
வரும் வழியில் பனங்காட்டூர் பச்சை வயல் வரப்போரம் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டோம். மூன்று கார்களும் திருமுக்கூடல் திசையில் சீறின. பாதி வழியிலேயே கோயில் நடை சார்த்திய விவரமறிந்தோம்.
"வாலாஜாபாத்-சுங்குவார்ச்சத்திரம் ரோட்டுல ஒரு ரெண்டு கி.மீட்டர்ல கட்டவாக்கம்னு ஒரு இடம். அங்கே விஸ்வரூப நரசிம்மர்... அவரை தர்சனம் பண்ணிட்டுப் போய்டுவோம்...” என்று மௌனம் கலைந்தார் அக்கௌண்ட்ஸ் வெங்கட்ராமன் சார்.
விண்ணுக்கும் மண்ணுக்குமாய் பதினாறு அடி நரசிம்மர். மடியில் லக்ஷ்மி பத்ம கமலத்தோடு. நரசிம்மரின் கால் நகமும் கை நகமும் நகாசு வேலைப்பாடானது. அற்புதமான மூர்த்தம்.
“சிங்கம் போல பிடரி மயிறு... தெத்திப் பல்லு... நீள நீளமா நகமாம்... ஆஜானுபாகுவான சரீரமாம்... பக்தனான ப்ரஹ்லாதன்.. எந்த தூணைக் காமிச்சானோ.. அதே தூணைப் பிளந்துண்டு... ஆஹாஹா... என்னோட பக்தனையாடா படுத்தினே.. இதோ வந்துண்டேண்டா...ன்னு கர்ஜிஜ்ச்சிண்டே இரண்யகசிபுவைப் புடிச்சு...” என்று சேங்காலிபுரம் பிரம்மஸ்ரீ அனந்தராம தீக்ஷிதரின் பாகவத உபன்யாசம் மனதில் வந்து போனது.
புளியோதரைப் பிரசாதம் பசியில் முணுமுணுத்த வயிற்றைத் தட்டிச் சாந்தப்படுத்தியது. ஸ்நேகிதர்கள் அனைவரும் கொஞ்ச நேரம் மனம் விட்டுப் பேசிக்கொண்டிருந்தோம். வானத்தில் தோன்றும் நட்சத்திர மண்டலங்களை தனது மொபைல் அப்ளிகேஷன் மூலமாக தொடர்பு கொண்டு “இதோ பாருங்க. இதுதான் ஜூபிடர்... குரு பகவான்...” என்று கன்னத்தில் போட்டுக்கொள்ளச் செய்தார் வீகேயெஸ்.
குருவையும் ஹரனையும் ஹரியையும் தரிசித்த திருப்தியில் மனம் குதூகலித்துக்கொண்டிருந்தது. சேப்பாயி நான் வழி சொல்லாமலே வீடு கண்டடைந்து என்னை இறக்கிவிட்டது. இந்த ஸ்நேகிதர் குழாமுக்கு என்ன புண்ணியம் செய்திருக்கிறேன் என்று மகிழும் போது வன்பார்த்தான் பனங்காட்டூர் பதிகத்தில் சுந்தரர் பாடியவையாக கோயில் வாசலில் நீலத்தி
ல் வெள்ளையாய் எழுதியிருந்தது நினைவில் எட்டிப் பார்த்தது. ஆரூரன் அருட்பணி அறக்கட்டளை என்கிற காவேரி டெல்டா திருவாரூர்ப் பெயர் பாலாற்று திருப்பனங்காட்டு அறக்கட்டளைக்கு எப்படி வாய்த்தது என்பதற்கும் பதில் கிடைத்தது. சுந்தரரின் அந்தப் பதிகம்.
பாரூரும் பனங்காட்டூர்ப் 
பவளத்தின் படியானைச் 
சீரூருந் திருவாரூர்ச் 
சிவன்பேர்சென் னியில்வைத்த 
*ஆரூரன் அடித்தொண்டன் *
அடியன்சொல் அடிநாய்சொல் 
ஊரூரன் உரைசெய்வார் 
உயர்வானத் துயர்வாரே

படம்: தாடியுடன் சிரிப்பவர் திருப்பனங்காடு சிவாச்சாரியார் தேவராஜசர்மா. மொபைல்: 9843568742
மேலும் படங்களுக்கு திருவாளர் வீகேயெஸ் மற்றும் எழுத்தாளர் வித்யா சுப்ரமண்யம் அவர்களது நேரக்கோட்டில் பார்க்கவும்.

ஓரிக்கை


சில வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஆலய ஓட்டம் எடுத்திருக்கிறேன். நீலா சித்தி படுத்தபடுக்கையாவதற்கு முன்பு சனி ஞாயிறுகளில் எனது சேப்பாயி மாயவரம் கும்பகோணம் பிராந்திய காவிரிக்கரை ஓர பச்சை நெற்பயிர்களுக்கு மத்தியில் குஷாலாகப் பயணித்துக்கொண்டிருக்கும். மண் வாசத்துடன் புறப்பட்ட காற்று திறந்த கார் ஜன்னல் வழியாக நுழைந்து தலை கோதும் போது லாஹிரி போதையில் கண்கள் சொருகியிருக்கிறேன். இப்போது சொட்டுத் தண்ணீரில்லாமல் வறண்டு போன அகண்ட பாலாறு செல்லுமிடங்களில் சேப்பாயி சுற்றுகிறது. எட்டு மணி நேரத்திற்குள் கூடு அடையவேண்டிய கட்டாயம்.
உனக்கு சில்ப சாஸ்திரம் தெரியுமா? ஆகமங்களில் தேர்ச்சியா? நம் நாட்டை ஆண்ட சேர சோழ பாண்டிய வரலாற்றின் மீதுள்ள ஆர்வமா? என்றெல்லாம் குடையாதீர்கள். எனக்கு சிவனையும் சிவக்குமாரையும் தெரியும். சிவக்குமார் என்றொரு அற்புதமான மனிதர், எங்களது இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் தமிழன் எக்ஸ்பிரஸ், சினிமா எக்ஸ்பிரஸ் போன்ற இதழ்களுக்கு ஆசிரியராக இருந்த பெருமகனார் (தற்சயம் கைலாஸவாசி, C/O நமச்சிவாயம்), ஒரு புத்தகத் திருவிழாவில் பு.மா. ஜெயசெந்தில்நாதன் எழுதிய “திருமுறைத் தலங்கள்” புத்தகத்தை எனக்கு அறிமுகம் செய்து சிவமார்க்கத்தில் திருப்பிவிட்டார். அதற்கு முன்னரும் பல கோயில்கள் சென்று வந்தவந்தான். இருந்தாலும் நால்வர் பாடிய தலங்களின் சிறப்புகளை எனக்கு ஓதி எனக்கு நல்மார்க்கம் காட்டிய புண்ணியாத்மா.
இரு தினங்களுக்கு முன்னர் அண்ணாமலையார் படத்துக்கு முன்பாக நான் அமர்ந்து, சுயமாய்ச் சுட்ட, படத்தை வெளியிட்டிருந்தேன். அந்த அண்ணாமலையாரை எனக்குப் பரிசளித்தவர் எனதன்பு சிவாண்ணா. இது போன்ற ஆலய தரிசனங்களுக்கு முன்னர் அவரை நினைக்காமல் பொழுது கழிந்ததில்லை. சேப்பாயியின் முதுகில் ஒட்டியிருக்கும் வாசகமான “ஸ்மரணாத் அருணாசலே!” அவரது பிரத்யேக பரிந்துரை.
பதிவின் பாதை மாறிவிட்டது. கோயம்புத்தூர் கோமகனார் கேகே ஐயர் (காசியைப் பற்றி ஞான ஆலயத்தில் அழகான தொடர் எழுதியவர்) ”கோவிலுக்கு எங்கயாவது போலாம்யா...” என்று கேட்டார். வன்பார்த்தான் பனங்காட்டூர் என்கிற சிவஸ்தலம் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்று. நான் இதுவரை தரிசிக்காத தொண்டைநாட்டு சிவபுரி. உடனே அந்தயந்த ஸ்நேகிதக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ”திருமுக்கூடல், பழய சீவரம் அப்படியே திருப்பனங்காடு... மூணும் போய்ட்டு வரலாம்...” என்று கோயில் திட்டத்தைத் தீவிரப்படுத்தினார் அக்கௌண்ட்ஸ் வெங்கட்ராமன் சார்.
வீகேயெஸ்-வல்லபா, பாலமுகுந்தன் - ஜெயந்தி, கிருஷ்ணமூர்த்தி கிருஷ்ணைய்யர்-சித்ரா என்ற தம்பதி பட்டாளத்துடன், வல்லபாவின் தந்தை ஹரிஹரன் மாமா, எழுத்தாளர் வித்யா சுப்ரமண்யம் மேடம், நான் சங்கீதா மற்றும் வினயமானசாவுடன் கோயிலுலா கிளம்பினோம்.
“காஞ்சீபுரம் வழியா திருப்பனங்காடு ஒரு ரூட்டு இருக்கு... முடிச்சூர்... வாலாஜாபாத் வழியாவும் போகலாம்.. அஞ்சு கிலோ மீட்டர் வாலாஜா வழி குறைச்சல்....” என்றார் எங்கள் டூர்களின் ஆஸ்தான ’மேப்’பர் வீகேயெஸ்.
தாம்பரம்-பெருங்களத்தூர் தாண்டியவுடன் எலும்பிச்சம் பழங்களை சக்கரங்களுக்கு இரையாக்கும் இரணியம்மன் கோயில் தாண்டி வரும் பாலத்தைப் பிடியுங்கள். அப்படியே வலது ஒடித்து வரும் படப்பை வாலாஜா சாலை மார்க்கத்தில் ( “நேர் ரோடு தம்பி... லாரியில வெயிட் இருக்கும் போது ஆக்ஸிலேட்டர்ல செங்கல் எடுத்து வச்சுடுவோம்.. எவ்ளோ நேரம் அளுத்துவோம்...” என்று எங்களிடம் ட்ரைவராக வேலை பார்த்த ராஜா அண்ணன் நியாபகம் ஏனோ வந்து படுத்தியது) ஆக்ஸிலேட்டரை அழுத்தி ஸ்டியரிங்கை பத்து பத்து டிகிரி திருப்பி, கனரக வானமில்லா சாலையில் வழுகிக்க்கொண்டு சென்று வாலாஜாபாத் அன்னபூர்ணா ஹோட்டலில் நிறுத்துங்கள். வாய்க்கு சுகமான காஃபி குடியுங்கள். எங்கள் எல்லோருக்கும் பிடித்திருந்தது. கல்லா பெண்மணியிடம் ஒவ்வொருத்தரும் காஃபி மகாத்மியம் பாடினோம். வடை சூடாக இல்லையென்றாலும் சுவையாக இருந்தது.
“வரும்போது இங்கதான் திருமுக்கூடல் அப்பன் வெங்கடாஜலபதி கோயில்.. நாம திருப்பனங்காடு போய்ட்டு ரிட்டர்ன்ல தர்சனம் பண்ணிடலாம். ஆர்க்கியாலஜி கண்ட்ரோல்ல இருக்கு.. சீக்கிரம் வரணும்...” என்று காஃபி சூடு வாயிலிருந்து ஆறுவதற்கு முன்னரே வெங்கட்ராமன் சார் குச்சி போட்டார்.
சரியாக தப்பாக போவதில் நான் மன்னன். கூகில் மேப்பே ஸ்தூலமாக எழுந்து வந்து வழி காட்டினாலும் அதற்கும் பெப்பே காட்டுவது என் வழக்கம். என்னை சாலையிலும் வாழ்விலும் வழிதவறாமல் நடத்திச் செல்பவள் எனது வாமபாகம் சங்கீதா. என் பெண்கள் இருவரும் திருப்புகழ் பாட அதை பின்னால் வரும் வீகேயெஸ்ஸுக்கு மொபைல் ரிலே செய்து கொண்டே கேகே அண்ணா “திரும்பணும்.. திரும்பணும்..” என்று கதறியும் திரும்ப வேண்டிய சந்திப்பை விட்டு தூரம் வந்தோம்.
துரத்திப் பிடித்த பாலமுகுந்தன் சாரும் கேகே அண்ணாவும் வீகேயெஸ்ஸும் சேப்பாயியைச் சூழ்ந்து கொண்டனர். கேகே அண்ணா ஓரிக்கை...ஓரிக்கை என்று பெரியவா ஜபம் செய்தார். வயதான் பெரியவர் ஒருவர் கையேந்தி நிற்கவும் கேகே அண்ணாவுக்கு பெரியவா நியாபகம் பொங்கி நெட்டித் தள்ள.... அவரின் கண்ணில் வழிந்த அந்த ஆசையைப் பார்த்து ”பெரியவா கூப்பிடறா... ஓரிக்கைக்கு போய்ட்டு அப்புறமா திருப்பனங்காடு போகலாம்..” என்று மேப்பர் வீகேயெஸ் வழிநடத்தினார்.
சிகையுடன் பாடசாலைப் பிரம்மச்சாரி பையனொருவன் நடை சார்த்தியிருந்த பெரியவா சன்னிதி முன்னால் நின்றுகொண்டிருந்தான். அனுதினமும் வேதம் சொன்ன தேஜஸ் முகத்தில் அப்பட்டமாக ஜொலித்தது. “நாலு மணிக்கு வந்துடுவாரு...” என்ற நீல சீருடை செக்யூரிட்டி வாசலையே பார்த்துக்கொண்டிருந்தார். குருக்கள் வருவதற்குள் திருவலம் வந்தோம். கல்லிலே கலைவண்ணம் கண்டோம். தென் திசையில் தெக்ஷிணாமூர்த்தியின் அற்புதமான சிலாரூபம். சனகாதி முனிவர்களோடு வியாஸர் வசிஷ்டர் முதலான ரிஷிமண்டலத்தோடு. கீழே மஹாபெரியவா.
வடதிசையில் சிவனாரின் பிரதோஷ நடனம். தும்புரு, நந்தி மத்தளம் போட, சுப்ரமண்யர் என்று தேவாதிதேவர்கள் குழுமி நின்று நடனம் காண பரம சந்தோஷத்தில் சிவபெருமான் முகத்தில் குமிழ் சிரிப்பு. பரமாச்சார்யாளும் அந்த நடனம் பார்ப்பதாக செதுக்கியிருந்தது நெஞ்சை அள்ளியது. எங்கள் குழுவினர் அனைவரும் பார்த்துப் பார்த்துப் பூரித்துப் போன சிற்பம். ”பட்டடக்கல் பாதாமி மாதிரி...” என்று அவற்றை அனுபவித்த வல்லபாவின் சர்ட்டிஃபிகேட்.
“ஐயிறு வண்டி பஞ்சரு... சாவி குடுத்துவுட்ருக்காரு....” என்று ஒரு மூத்த பிரம்மச்சாரி நடை திறந்தார். பெரியவா நேரில் அமர்ந்து “வா உள்ளே...” என்று கூப்பிட்ட மாதிரி இருந்தது. திவ்யமான தரிசனம். வலம் வந்தோம். காமாக்ஷியின் உற்சவர் சிலையொன்று அப்படியொரு வடிவுடன் இருந்தது.
ஸ்ரீராம் என்கிற ஆஃபீஸர் வந்தவுடன் “இவாள்லாருக்கும் கோயில் பற்றிச் சொல்லுங்கோ...” என்று அக்கௌண்ட்ஸ் வெங்கக்ட்ராமன் சார் விண்ணப்பித்தார்.
“இந்த மணி மண்டபத்துல மொத்தம் நூறு தூண். ஒரே கல்லால ஆனது. ஒவ்வொன்னும் ஒவ்வொரு தினுசா இருக்கும். அதாவது வேற வேற டிசையன்ல இருக்கும். பெரியவாவோட நூறு வயசைக் குறிக்கிறா மாதிரி நூறு தூண். பல்லவா, சோழான்னு எல்லோரோட ஆர்க்கிடெக்சரையும் கலந்து கட்டி கோயில் கட்டிருக்கோம். இந்தோ.. இந்த யாளியோட வாயில இருக்கிற கருங்கல் பந்து... பல்லவா சிற்பக்கலை. அப்புறம் இந்த மணி மண்டபமே ஒரு தேர் மாதிரி பண்ணியிருக்கோம். அதான் வாசல்ல இருக்கிற இந்த இரண்டு சக்கரம். இரண்டு சக்கரத்திலையும் இருக்கிற ஆரத்தில பன்னிரெண்டு ராசியிருக்கு. அதே மாதிரி மண்டபத்தோட நடு மையத்தில.. மேலே.. பாருங்கோ.. அங்கேயும் பன்னிரெண்டு ராசியும் கட்டத்தோட செதுக்கியிருக்கா... எல்லாமே கணபதி ஸ்தபதியோட கைங்கர்யம். முன்னூறு பேர் அவர்கிட்டே வேலை பார்க்கிறா.. அதோ.. அந்த செவுத்துல பாருங்கோ.. யானை.. அந்த மாதிரி வரைஞ்சுடுவார்... வேலை பார்க்கிறவா அதுமாதிரி கல்லை செதுக்கணும்...”
பேச்சு வளர்ந்தது. பனங்காடுக்கு நேரமானது. சரி கிளம்பலாம் என்று முடிவான போது ஓடிப்போய் பெரியவா படம் வாங்கிக்கொண்டோம். வித்யா மேடம் டெட்ரா பேக்கில் பச்சைக் கொத்தமல்லி இஞ்சி தட்டிப்போட்ட மோர் வாங்கி வந்திருந்தார்கள். வெய்யிலுக்கும் இதமான மோர், தொண்டையை நனைத்து வயிற்றையும் குளிர்வித்தது. மோர் வார்த்த மேடம் வாழ்க!
ஐந்து மணி ஆகிவிட்டது. ”திருப்பனங்காடு பதினைஞ்சு நிமிஷம் பார்த்துட்டு ஓடி வரணும்... அப்பன் வெங்கடாஜலபதி ஆர்க்கியாலஜி கண்ட்ரோல்ல இருக்கார்.. ஆறரைக்குள்ள நடையடைச்சுடுவா.. “ என்று பரபரத்தார் அக்கௌண்ட்ஸ் வெங்கட்ராமன் சார். சேப்பாயி கனைத்துக்கொண்டு அசுவமாக ஓட்டமெடுத்தது. காஞ்சிபுர வெளிப்புற சாலைகள் வேகத்துக்கு உகந்ததல்ல. மூன்று கார்களும் பின்னால் புழுதி எழும்ப சீறின.
ஐயங்கார் குளம் பார்க்கணும் என்று வீகே ஸ்ரீநிவாசய்யர் கேட்டுக்கொண்டே வந்தார். சிவனேன்னு திருப்பனங்காட்டிற்கு விரைந்தோம்.
அங்கே.....

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails