Monday, December 12, 2011

டைம் கரன்ஸி!

கீழ் வரும் சீன்களைப் படித்துவிட்டு கடைசியில் “**********”க்கு அப்புறம் படிக்கலாம். அல்லது “***********”க்கு கீழ் படித்துவிட்டும் மேலிருந்து சீன்களைப் படிக்கலாம். உங்கள் விருப்பம்.

கொத்தடிமைகள் போல வரிசையாக நின்று கவுண்டருக்குள் கை நீட்டிச் சம்பளம் வாங்குகிறான் ஹீரோ.  ஆனால் சம்பளம் கரன்ஸிகளாக இல்லை!

ஓப்பனிங் சீன்
அது ஒரு மங்கலான வெளிச்சத்தில் இயங்கும் நட்சத்திர மது விடுதி. அறை முழுக்க ஆக்ஸிஜெனில் போதையிருந்தது. நீட்டிமுழக்கி நாலு பேர் ”ழ்..ழ்ழ்.ழ்ழ்.” என்று வழுக்கும் ஆங்கிலம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நெருக்கிப் போடப்பட்டிருக்கும் டேபிள் சேர்களை கண்ணெதிரே மறைய வைக்கும் சிகரெட் புகை. புதிதாய் நுழைபவர்கள் வெண்புகைக்குக் கண் பழகிய பின் தான் எவரையும் பார்க்கமுடியும். பார் சிப்பந்தி ஷெல்ஃபிலிருந்து எடுத்து மது கொடுக்கும் கவுண்டர் அருகே போடப்பட்டிருக்கும் கழுத்து நீண்ட க்ரோர்பதி சேரில் உட்கார்ந்து சில அனுபவஸ்தர்கள் நிதானமாக மதுவருந்திக் கொண்டிருக்கிறார்கள். குடிமகன்களின் டேபிள் சேர்களை சுற்றி ’ஒரு மாதிரி’யான மாதுக்கள் சிலர் குட்டைப் பாவாடையோடு கையில் போத்தல்களுடன் நளினமாக குனிந்து நிமிர்ந்து வளைய வருகிறார்கள். ஒரு சாந்தமான வாலிபன் தனியனாய் சத்தமில்லாமல் மக் பீர் அடித்துக்கொண்டிருக்கிறான். ஹீரோவும் அவனுடைய நண்பனொருவனும் உள்ளே நுழைகிறார்கள். சரக்கு ஆர்டர் செய்யும் முன்  திடீரென்று விடுதி வாசலில் ”ஆ.. ஊ...” என்று கூச்சல். ரகளை. தொடர்ந்து துப்பாக்கி வெடிக்கும் சத்தம். உற்சாகபானமருந்திக்கொண்டிருந்த அனைவரும் யோகநிலை கலைந்து தலைதெறிக்க ஓடுகிறார்கள். கையில் பிஸ்டலுடன் மூக்கு விடைக்க வில்லன் பாருக்குள் எண்ட்ரீ கொடுக்கிறார்.

வில்லன் பீர் பையன் அருகில் வந்து நம்பியார் சிரிப்பு சிரித்து அவன் கையைப் பிடித்து இழுத்து கை குலுக்கப் பார்க்கிறார். அவன் உதறிவிட்டுத் தப்பி ஓடுகிறான். வில்லனிடமிருந்து தப்பித்து டாய்லெட்டில் ஒளிந்த அவனைக் காப்பாற்றி விடுதிக்கு வெளியே இழுத்துக்கொண்டு ஓடுகிறான் ஹீரோ. போக்குவரத்து நெரிசல் இல்லாத நிர்ஜனமான சாலைகளில் வேகமாய் ஓடுகிறார்கள். சிறிது தூரத்தில் சுவரேறிக் குதித்து, இரும்பு ஷட்டர் திறந்து முதல் மாடியில் ஒரு மறைவிடத்தில் போய் ஆசுவாசமடைகிறார்கள். இரவுப் பொழுது அங்கேயே கழிய காலையில் சூரியன் கண்ணைக் குத்த சேரில் உட்கார்ந்த வண்ணம் தூங்கியிருந்த ஹீரோ எழுந்து பார்க்கையில் பக்கத்தில் இருந்தவனைக் காணவில்லை. ஜன்னல் வழியாக பார்த்தால் எதிரே இருக்கும் பாலத்தின் கட்டைகளில் ஏறி நின்றுகொண்டிருக்கிறான் அவன். ஏதோ நினைவுக்கு வந்தவனாய் ஹீரோ தனது வலது மணிக்கட்டுக்கும் முழங்கைக்கும் இடையில் பார்க்கிறான். அவனது ஆயுட்காலம் அந்த பீர் பையனால் மேலும் நூறு வருடங்களாக அதிகரித்திருக்கிறது. பார்த்துக்கொண்டிருக்கும்போதே அந்த பீர் பையனின் ஆயுள் முடிந்து மரக்கிளை முறிவது போல ”மளுக்”கென்று ஒடிந்து சரிந்து கீழே ஓடும் நதியில் விழுகிறான்.

செண்டிமெண்ட் சீன்
தனது பிள்ளையைப் பார்க்க பஸ்ஸேரி செல்ல முயல்கிறாள் தனது வாழ்நாளின் இறுதிக்கட்டதிலிருக்கும் ஒரு தாய். பிரயாணத்திற்காக தனது வாழ்நாளை கொஞ்சம் தியாகம் செய்ய வேண்டும் என்பது பொது விதி. அதுதான் டிக்கெட் எடுக்க பேருந்துக் கட்டணம். தேவைப்படுவது பதினைந்து நிமிஷங்கள். அவளிடம் எஞ்சியிருப்பதோ பத்து நிமிஷங்கள். அதையும் கொடுத்துவிட்டால் பிள்ளையைப் பார்க்க முடியாது. ஓடலாம் என்று முடிவெடுக்கிறாள். தாய்ப் பாசத்துடன் இரைக்க இரைக்க ஓடி அவனது இருப்பிடைத்தை அடைகிறாள். நான்கு தெருக்கள் சந்திக்கும் ஓரிடத்தில் இருவரும் எதிரெதிராக ஓடிவர, நொடிகள் கரைய, ஓடிவர, நொடிகள் கரைய, மகன் தனது சக்தியனைத்தையும் ஒன்று திரட்டி வேங்கையாய்ப் பாய்ந்து வர, தடுமாறாமல் ஜாக்கிரதையாக தாய் விரைய இருவரும் நீட்டிய கையோடு கை கோர்க்கும் சமயத்தில் தாயின் வாழ்நாள் மணித்துளிகள் 00:00:00:00 ஆகி கரைந்து ஜீவன் பிரிகிறது.

காதல் சீன்
செத்துப்போன மக் பீர் பையன் கொடுத்த வாழ்நாள் மணித்துளியையும் சேர்த்து ஹீரோவின் கணக்கில் நிறைய மணிநேரங்கள் சேர்ந்துவிடுகிறது. காஸினோ க்ளப்பில் சென்று சூதாட்டம் விளையாடுகிறான். எதிராளி மில்லியன் வருடங்கள் வாழ்நாள் தன் பங்கில் இருக்கும் பில்லியனர். ஆட்டத்தில் வென்ற ஹீரோ மில்லியன் வருடங்கள் வாழும் வல்லமை படைத்தவராகிறார். இரவு க்ளப்பில் தோற்ற மணிச் செல்வந்தரின் வீட்டில் ஒரு பார்ட்டி அட்டெண்ட் செய்கிறார். இயற்கையாகவே அவர் மேல் அந்த தனவானின் பெண்ணான அந்த ஹீரோயினுக்கு காதல் மலர்கிறது. அவரிடம் அடியாளாய் வேலை பார்க்கும் வில்லன் கோஷ்டி ஹீரோவின் வாழ்நாள் மணிகளை உள்ளடக்கிய “மணிச் சொத்தை” அபகரிக்க திட்டமிடுகிறான். துரத்துகிறான். பறிக்கிறான். காதலர்கள் தப்பிக்கிறார்கள். எதிர் கோஷ்டியினர் துரத்துக்கிறார்கள். காதலர்கள் தப்பிக்கிறார்கள்.

படம் முழுக்க காலம் உயிர் போன்றது என்று காட்டப்படுகிறது. ஜீவனோடு இப்புவியிலிருக்கும் கால அவகாசம் கடனாகக் கொடுக்கப்படுகிறது. வாழ்நாள் மணித்துளிகளை லோன் கொடுப்பதற்கு நிறைய வங்கிகள் இருக்கின்றன. ஸேஃப் டெப்பாசிட் லாக்கர்கள் இருக்கிறது. குற்றவாளிகளைப் பிடித்துக்கொடுப்பவர்களுக்கு இன்னும் பத்து வருடங்கள் அவர்களது வாழ்நாளுக்கு பரிசாக வழங்கப்படுகிறது. அங்கேயும் அம்மா செண்டிமெண்ட், காதல், துரோகம், நட்பு, அடிதடி என்று சகலமும் இருக்கிறது.

க்ளைமாக்ஸில் ஹீரோவும் ஹீரோயினியும் கையோடு கை கோர்த்துக்கொண்டு சில்ஹூட்டில் சந்தோஷமாகச் செல்கிறார்கள்.

***************

வியாபாரங்களில் பண்டைய காலத்தில் பண்ட மாற்று முறை இருந்தது, அதற்கப்புறம் இப்போது கரன்ஸி பயன்படுகிறது. எதிர்காலத்தில் உலக மக்களுக்கு 25 வருடங்கள் ஆயுள் என்று பிறக்கும்போது நிர்ணயம் செய்து, வேலை செய்தால் பணத்துக்கு பதில் வாழ்நாள் மணித்துளிகளை சம்பளமாக கொடுத்தால்? இந்த விபரீத கற்பனைதான் கதைக் கரு. ஊருக்கு பிரயாணம் போக வேண்டுமா? காருக்கு டீசல் போடவேண்டுமா? கார் வாங்கவேண்டுமா? டெலிபோன் பேச வேண்டுமா? காதலிக்கு வைர மோதிரம் பரிசளிக்க வேண்டுமா? ஹோட்டலில் சாப்பிட மற்றும் தங்க வேண்டுமா? எதுவாகினும் வலது கை மணிக்கட்டுக்கும் முழங்கைக்குமிடையே பச்சையில் நொடி நொடியாகக் கரைந்து ஒளிரும் நமது ஆயுளின் மணித்துளிகளை பணமாகக் கொடுத்தால் அது கிடைக்கும்.

25 வருடங்கள் தான் வாழ்க்கை என்ற தலையெழுத்தை கையில் எழுதி ராக்கெட் விடும் கவுன்டவுன் மாதிரி லைஃப் க்ளாக் பச்சையாய் ஒளிர்ந்து ஒவ்வொருப் பிரஜையின் கண்ணெதிரேயும் நொடி நொடியாகக் கரைகிறது. இன்னும் எவ்வளவு நாட்கள் உயிர்வாழ்வோம் என்று ஒவ்வொரு பிரஜைக்கும் சத்தியமாகத் தெரிந்துவிடுவதால் டுபாக்கூர் ஜோசியர்கள், அடாவடி சாமியார்கள் இல்லாத மற்றும் சாமி கும்பிடாத சமதர்ம சமுதாயமாக இருக்கலாம். எங்கு சென்றாலும், எதை வாங்கினாலும், எதற்கும் எவரும் காசு கேட்பதில்லை. பதிலாக கையோடு கை கோர்த்தோ அல்லது ஸ்வைப்பிங் கருவியிலோ வாழ்நாளின் மணித்துளிகளை தியாகம் செய்தால் நீங்கள் விரும்பியதை அடையலாம்.

இதன் ட்ரெய்லர் சுட்டி.
http://www.youtube.com/watch?v=efNzhEKm3w4

#இது ஆங்கிலப் படமான IN TIME என்பதன் கதை. படத்திலிருக்கும் சீன் வரிசை எனது எழுத்தில் துளியூண்டு மாறியிருக்கலாம். அது என்னுடைய ரசனைக்காக அப்படி எழுதப்பட்டது. நிறைய சீன் சீனாக எழுதலாம் என்றிருந்தேன். மக்கள் பிழைத்துப்போகட்டும் என்று பெரியமனது பண்ணி இத்தோடு நிறுத்திவிட்டேன்.

##தமிழில் ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் போன்றவர்களின் உழைப்பிலும் கைவண்ணத்திலும் நியர் ஃப்யூச்சரில் தமிழ்ப் படமாக்கப்படலாம். நல்ல சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம்.

Friday, December 9, 2011

வென்னிலா ஐஸ்க்ரீமும் வம்பு பண்ணும் காரும்

”வென்னிலா ஐஸ்க்ரீம் வாங்கினா உங்க வண்டியில ஸ்டார்டிங் ட்ரபிள் இருக்கு. வேற ஃப்ளேவர் ஐஸ் வாங்கினா ப்ராப்ளம் இல்லாம சட்டுன்னு ஸ்டார்ட் ஆகுது” என்று உச்சியில் ”டியர் சார்” போட்டு உடம்பு முழுக்க சகட்டுமேனிக்கு திட்டி வந்திறங்கிய ஒரு கஸ்டமர் ஈமெயிலில் அகிலமெங்கும் கிளை விட்டு ஆலமரமாகப் படர்ந்திருக்கும் அந்தக் கார் கம்பெனியின் சர்வீஸ் துறை அதிர்ந்துவிட்டது.

இந்த வினோத வழக்கைக் கண்டு அஞ்சிய சர்வீஸ் மேனேஜர் "It's Funny" என்று கையைப் பிசைந்தார். பழுது என்ன என்பதைக் கண்டறிய ஒரு சர்வீஸ் எஞ்சினியரை அந்தக் கஸ்டமரிடம் அனுப்பினார். அந்தப் ப்ராப்ளமாட்டிக் காரின் உரிமையாளர் ஒரு கம்பெனியில் உயர்பதவி வகிப்பவர். காலையில் அவரின் இல்லத்திற்குச் சென்றார் அந்த எஞ்சினியர்.

“சார்! வாங்க வாங்க. கிளம்பலாமா?” என்று உற்சாக வரவேற்பளித்தார் அந்த பிக் கஸ்டமர்.

“போலாம் சார்” என்று சோகையாக சொன்னார் அந்த கம்ப்ளையிண்டின் வீரியம் தெரிந்த அந்த எஞ்சினியர்.

“இப்ப பாருங்க. ஸ்டார்ட் பண்றேன். ஒரு ப்ராப்ளமும் இருக்காது” என்று சாவியைத் திருகினார்.

உடனே வண்டி ஸ்டார்ட் ஆனது. சௌகரியமாக ஆபீஸுக்கு சென்றடைந்தார்கள். எஞ்சினியருக்கு வண்டியில் எள்ளளவும் சந்தேகம் வரவில்லை. சாயந்திரம் மறுபடியும் வீட்டிற்கு கிளம்பினார்கள். எஞ்சினியர் அவருக்குப் பக்கத்து சீட்டில் பழுதை ஆராயும் துடிப்புடன் அமர்ந்திருந்தார்.

“எங்க குடும்பத்தில எல்லோரும் ஐஸ்க்ரீம் பிசாசு. போற வழியில ஐஸ்க்ரீம் வாங்கிக்கிட்டு போகலாம்” என்றார்.

அது ஒரு புகழ் பெற்ற விஸ்தாரமான சர்வதேச தரமிக்க ஐஸ்க்ரீம் பார்லர்.

“இப்ப பாருங்க. இன்னிக்கி நான் ஸ்டாராபெர்ரி ஃப்ளேவர் வாங்கப்போறேன். வண்டி எந்த பிரச்சனையும் பண்ணாம ஸ்டார்ட் ஆயிடும்” என்று சொல்லிக்கொண்டே கடைக்குள் போனார்.

வெளியே வந்து ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீமை எஞ்சினியருக்குக் காண்பித்துவிட்டு வண்டியை ஸ்டார்ட் செய்தார். மறுப்பேதும் சொல்லாமல் ஸ்மூத்தாக கிளம்பியது.

“பாத்தீங்களா” என்று இளித்தார். “சரி நாளைக்கு பார்க்கலாம்” என்று நினைத்துக்கொண்டார் அந்த எஞ்சினியர்.

“நாளைக்கும் கண்டிப்பாக சாயந்திரம் வாங்க” என்று அன்புக் கட்டளை இட்டார். மறுநாள் மாலை நேரே அவரின் அலுவலகத்திற்கு சென்றார் அந்த எஞ்சி. இருவரும் கி்ளம்பினார்கள். அதே ஐஸ்க்ரீம் கடையில் நிறுத்தம்.

“இன்னிக்கி நான் சாக்லேட் ஃப்ளேவர் வாங்கப் போறேன். வண்டி ஸ்டார்ட் ஆயிடும்” என்றார்.

கையில் ஐஸை ஏந்திக்கொண்டே வந்தார். எஞ்யின் முகத்துக்கு எதிராக ஃப்ளேவர் நிரூபிக்க நீட்டினார். “பார்த்துக்கோங்க. இது சாக்லேட் ஃப்ளேவர். இப்பவும் வண்டி ஸ்டார்ட் ஆயிடும்”. சாவி போட்டு திருகினார். வண்டி சந்தோஷமாகக் கிளம்பியது.

பக்கத்தில் எஞ்சியைப் பார்த்து சிரித்தார். ”நாளைக்கும் வாங்க” என்றார். மறுநாளும் சென்றார் அந்தத் தளர்வடையாத இளம் எஞ்சி.

“ஜெண்டில்மேன். இன்னிக்கி நான் பட்டர்ஸ்காட்ச் வாங்கப்போறேன். இன்னிக்கிம் நோ ப்ராப்ளம்” என்றார். அவர் சொன்ன சொல்லுக்கு கட்டுப்பட்டதைப் போல வண்டி சண்டித்தனம் செய்யாமல் பதவிசாக நடந்து கொண்டது.

மறுநாள் மாலை சென்றார். “இன்னிக்கி க்ளைமாக்ஸ். நான் வென்னிலா ஃப்ளேவர் வாங்கப்போறேன். வண்டி ஸ்டார்ட் ஆகாது பாருங்க” என்றார். எஞ்சினியருக்கு அது என்ன என்று பார்த்துவிடும் ஆர்வம் பொங்கியது. சந்தர்ப்பத்திற்காக காந்திருந்தார். அதே ஐஸ்க்ரீம் கடை வந்தது. சிரித்துக்கொண்டே வண்டியை அணைத்துவிட்டு இறங்கினார் அந்த கஸ்டமர்.

கடையிலிருந்து ஒரு கையில் வென்னிலா ஃப்ளேவர் ஐஸ்கிரீமோடு வெளியே வந்தார்.

“இப்ப ஸ்டார்ட் பண்ணட்டுமா?”

“ம்”

சாவியைத் திருகினார்.

”க்ரிகிர்கிர்......கிர்கிரி..கிரி..கிர்...” வண்டி உதறியது.

திரும்பவும் படிக்காதவன் ரஜினியின் “லெக்ஷ்மி ஸ்டார்ட்..” வசனத்தோடு திருகினார்.

”க்ரிகிர்கிர்......கிர்கிரி..கிரி” இப்போது வண்டிக்குக் கமறியது.

எவ்வளவோ பிரயத்தனப்பட்டும் பலனில்லை. வண்டி சுத்தமாகப் படுத்துவிட்டது.

வண்டி கிளம்பாத சோகத்தில் இருந்தும் தான் சொன்னது நிரூபணமான மகிழ்ச்சியில் சிரித்தார் அந்த கஸ்டமர்.

“பாத்தீங்களா. நான் சொன்னப்ப நீங்க நம்மபல இல்ல. கிளம்பல பாருங்க. எனக்குப் புரிஞ்சிடிச்சு. வென்னிலா ஃப்ளேவர்னா உங்க கம்பெனி வண்டிக்கு அலர்ஜி. ஆவாதுங்க. உங்களாலெல்லாம் இதைக் கண்டு பிடிக்க முடியாது.. பாருங்க..பாருங்க..” என்று கொக்கரித்தார்.

எஞ்சினியருக்கு சரியான கடுப்பு. “சர்தான் போய்யா!” என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டு அமைதியாக இருந்தார்.

“நாளைக்கு ஸால்வ் பண்ணுகிறேன்” என்று உறுதி அளித்துவிட்டு வீட்டிற்கு நடையைக் கட்டினார். இரவு முழுவதும் நான்கு நாட்களாக நடந்தது அனைத்தையும் ஷாட் பை ஷாட்டாக ஃப்ரேம் ஃப்ரேமாக ஓட்டிப் பார்த்தார். ஒரு அரை மணியில் மூளைக்குள் பல்பு பிரகாசமாக எரிந்தது.

மறுநாள் காலையில் அந்த கஸ்டமரின் கம்பெனிக்கு சென்றார்.

“காரணம் கண்டு பிடித்துவிட்டேன்” என்றார் அந்த எஞ்சினியர் பெருமிதத்துடன்.

“என்ன?”

“வேப்பர் லாக் ப்ராப்ளம். நீங்கள் ஐஸ் க்ரீம் வாங்கும் கடையில் விசேஷ ஃப்ளேவர்கள் கடையின் உள் பக்கம் கடைசியில் இருக்கும் கவுண்டரில் கொடுக்கிறார்கள். டோக்கன் வாங்கி அதை அங்கே நீட்டி நீங்கள் வாங்கிக்கொண்டு வெளியே கார் பார்க்கிங் வருவதற்குள் எஞ்சின் கூலாகிவிடுகிறது. வண்டியும் எந்தச் சிரமமும் இல்லாமல் ஸ்டார்ட் ஆகிவிடுகிறது. ஆனால், கடைசி நாளன்று நீங்கள் வாங்கிய வென்னிலா ரக ஐஸ்க்ரீம் அந்தக் கடையின் வாசலிலேயே கொடுக்கிறார்கள். ஆகையால் நீங்கள் வாங்கிக் கொண்டு வரும்போது எஞ்சின் இன்னமும் சூடாகவே இருப்பதால் வேப்பர் லாக் ரிலீஸ் ஆக நேரமெடுக்கிறது. இதுதான் காரணம். வண்டி கிளம்பாததற்கு காரணம் ஐஸ் வாங்கும் நேரமே தவிர ஐஸ்க்ரீம் கிடையாது” என்றார் அந்த எஞ்சினியர்.

கஸ்டமர் அசந்து போனார். எஞ்சினியரின் கம்பெனியும் அவரை அங்கீகரித்தது.

மாரல் ஆஃப் தி ஸ்டோரி: கஸ்டமர் தனக்குத் தெரிந்த வகையில் சொன்ன கம்ப்ளைண்டிற்கு பகபகாவென்று சிரிக்காமல் லாஜிக்கோடு அணுகினால் தீர்வு உண்டு. பழுதை விவரிக்கத் தெரியாதவராக இருந்தாலும் கஸ்டமர் இஸ் தி கிங். :-)
பின் குறிப்பு: மீண்டும் ஒரு டிட்பிட் பதிவு. துணுக்குத்தோரணமாகத் தொங்குகிறது என் வலை.
-

Tuesday, December 6, 2011

தக்காளிக்காரன்

 
ஒரு பொண்டாட்டி, மூன்று குழந்தைகள் கொண்ட குடும்ப பாரத்தை சிரமத்தோடு இழுக்கும் குடும்ப இஸ்திரி ஒருவர் மைக்ரோஸாஃப்ட் நிறுவனத்திற்கு குப்பை பெருக்கி துடைத்து மொழுகும் வேலைக்கு விண்ணப்பித்தார். இண்டெர்வியூ முடிந்து அவரது பணி நிர்மான கடிதத்தை அனுப்ப “ஸார்! உங்களுடைய ஈ மெயில் ஐ டி ப்ளீஸ்” என்றாள் அந்த லிப்ஸ்டிக் வாயழகி. ”எங்கிட்ட ஈமெயில் ஐடி இல்லீங்க” என்று தலையைச் சொறிந்தார் அவர். “ஸாரிங்க.. எங்க கிட்ட வேலைக்கு வரணும்னா ஈமயில் ஐ.டி இருக்கனும்”ன்னு சொல்லி வெளியே அனுப்பிவிட்டார்கள்.

10 டாலரை பையில் வைத்திருந்த அவர் என்ன செய்வதென்று தெரியாமல் தெருவில் திரிந்த போது செக்கச் செவேலென கண்ணைப் பறித்த தக்காளிகள் ஒரு க்ரேட் வாங்கினார். அவரது ஏரியாவிற்கு சென்று அருகிலிருக்கும் கடைதெருவில் 20 டாலருக்கு விற்று 100 சதம் லாபம் சம்பாதித்தார்.

இதுபோல க்ரேட் க்ரேட்டாக நிறைய வாங்குவதற்கு லாரி தேவைப்பட்டது. ஒன்று வாங்கினார், அப்புறம் க்ரேட் கணக்குகள் பெருக இரண்டு மூன்று என்று புது லாரிகள் வாங்கினார். அவரது மூன்று பசங்களும் தங்களது ஆதரவை அள்ளித் தர தக்காளி பிஸினெஸ் பெரியதாக வளர்ந்தது. அந்த ஊருக்கே அவர் பெரிய தக்காளிக்காரனாக உயர்ந்தார்.

பெரிய பிஸினெஸ் மேக்னெட்டாக உயர்ந்த பிறகு தனது குடும்பத்திற்கும் வியாபரத்திற்கும் இன்சூரன்ஸ் எடுக்க விரும்பினார். அந்த டை கட்டிய எக்ஸிகியூடிவ் காப்பீட்டு விண்ணப்ப படிவத்தை நிரப்பிவிட்டு ”உங்க ஈ மெயில் ஐடி ப்ளீஸ்” என்றான். வாய் நிறைய புன்னகையோடு ”இல்லை” என்று அர்த்தபுஷ்டியாக சிரித்தார் அவர்.

”அச்சச்சோ! ஈமெயில், கம்ப்யூட்டர் இதெல்லாம் இல்லாமலேயே உங்க பிஸினெஸ்ல இவ்ளோ லாபம் வந்திருக்கே. அஞ்சாறு வருஷத்துக்கு முன்னாடியே உங்களுக்கு ஈமெயில் ஐடி இருந்தா இந்நேரம் என்னவா ஆயிருப்பீங்க” என்று வருத்தமாக விசாரித்தானாம் அவன்.

அதற்கு அவர் பல்லைக் காட்டிக்கொண்டே சொன்ன பதில்....

“மைக்ரோஸாஃப்ட்ல ரூம் ரூமா துடைச்சு பெருக்கிக்கிட்டுருப்பேன்யா”
பின் குறிப்பு: மற்றுமொரு டிட் பிட் பதிவு.
பட உதவி: http://www.insidehobokenrealestate.com/
-

Sunday, December 4, 2011

கண்ணால் காண்பது மெய் - தினமணி கதிரில்

நல்ல அடை மழை. சின்னச் சின்ன பிட் பைட்டாக ஆரம்பித்து சில நொடிகளில் மெகா பைட்டாகி இப்பொது ஜெட்டா பைட்டாக “சோ” என்று கொட்டுகிறது. வழக்கம் போல வானொலியின் ”இன்று பரவலாக வானம் மேக மூட்டத்தோடு காணப்படும்”மை பொய்யாக்கிப் பொறுத்துப் பெய்கிறது. நான் நின்று கொண்டிருக்கும் இந்த பஸ் ஸ்டாப் ஜன வெள்ளத்தால் நிரம்பி வழிகிறது. மண்வாசத்தைவிட அரை இன்ச் தள்ளி பக்கத்தில் நிற்கும் கன்னிப்பெண் வாசம் ஆளைத் தூக்குகிறது. இந்த வாசனைகளுக்கு உற்ற தோழன் வருணனோடு வரும் வாயுபகவான் தான். அவர்தான் அடுத்தவரிடம் அதைப் பற்றவைக்கும் ஏஜெண்ட்.


“மச்சான். குளிக்காம வர்ற டிக்கெட்டெல்லாம் தான் உடம்பு பூரா செண்டு தெளிச்சிக்கும்” என்று பி.எஸ்.ஸியில் கடைசி செமஸ்டரில் அரியர்ஸ் வைத்து ஃபெயிலாகிப் போன மணி ஒவ்வொரு நறுமண நங்கைகள் எங்களைக் கடக்கும் போதும் சொல்வான். மகளிர் சம்பத்தப்பட்ட விஷயங்களில் அவன் ஒரு wiki.manipedia.com. பஸ் ஸ்டாண்ட் திருவள்ளுவர் தியேட்டரில் காமத்துப்பால் சொட்டும் சில மலை மலையான மலையாள ஆன்டிகள் நடித்த கொக்கோகப் படங்களைப் பார்த்துவிட்டு ஸ்த்ரீ சம்பந்தப்பட்ட அவனுடைய சில நுணுக்கமான பார்வையின் விஸ்தரிப்புகளில் வாத்ஸ்யாயனரின் ஜீன் அவனுக்குள் பாய்ந்துள்ளதோ என்று எல்லோரும் வியப்பார்கள். ’குண்டு’ ராஜா ஒரு சிலிர்ப்புடன் பாதியில் அந்த இடத்தை விட்டு எழுந்துவிடுவான். ”கொழந்தப் பையன். ஃபீடிங் பாட்டிலில் பால் குடிக்கதான் லாயக்கு” என்று சொல்லிவிட்டு கண் சிமிட்டுவான் மணி.

இந்த க்ஷணம் இங்கே மணி இல்லையே என்று எனக்கு :-(. இந்நேரத்திற்கு வார்த்தைகளால் வர்ணனை மழை பொழிந்திருப்பான். என் காதுக்கு மோட்சம் கிட்டியிருக்கும். கடைசியாக அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி அவனை ஊரில் தேரடி தாண்டி குமார் லாட்ஜ் வாசலில் மினுமினுக்கிய தெருவிளக்கின் அரையிருட்டில் பார்த்தேன். கையில் கிங்ஸ் துணையுடன் ஏதோ ஒரு பூப்போட்ட கைலியுடன் ”அவ கிடக்காடா. அவ ஒரு மேனாமினிக்கிடா” என்று அளந்துகொண்டிருந்தான். இதுதான் என்னுடைய பிரதான வீக்னெஸ். பக்கத்தில் டூ பீஸில் அலங்காரமாக நிற்கும் பாவாடைச் சட்டைப் பருவச்சிட்டுவைப் பார்க்காமல் மணியைப் பற்றி நினைத்து வாழ்வின் இன்பகரமான தருணங்களை இழந்து கொண்டிருக்கிறேன் பாருங்கள். ச்சீ.ச்சீ... போடா மணி!


இவள் ஸ்ருங்காரமாக மிதமான தேகக்கட்டுடன் பார்வையாக இருந்தாள். குறத்திகள் இடுப்பில் சொருகும் சுறுக்குப்பையைவிட ஐந்து அங்குலம் பெரியதாக இருக்கும் தோல்பை ஒன்றை தோளில் மாட்டி ஒய்யாரமாக பக்கத்து இரும்புக் கம்பியில் சாய்ந்து நின்றிருந்தாள். மீசை முளைப்போமா என்று எட்டிப்பார்க்கும் ஒரு விடலை அவளை ஒரு ஏக்கப் பெருமூச்சுடன் பார்த்தான். இன்னும் கொஞ்ச நாளில் ஏதோவொரு பாக்கியசாலியினால் பொன் தாலியேறப்போகும் கழுத்தில் வேலை பார்க்கும் கம்பெனியின் ப்ளாஸ்டிக் அடையாள அட்டை தொங்கிக்கொண்டிருந்தது. தற்காலப் பெண்டிரின் தலையாய ஸ்டைலான தலைவிரி கோலத்துடன் இருந்தாள். ”காளிதாசன் உன்னைக் கண்டால் மேகதூதம் பாடுவான்.” என்று ரஜினி எனக்குள்ளே டூயட் பாடிக்கொண்டிருந்தார். கணினியின் கர்ஸர் பிளிங்க் போன்ற கண் இமைப்பில் இந்தக் கன்னி என் சித்தத்தைக் கலைத்துப் பித்தம் கொள்ள வைக்கிறாள். அட! ஜாடையில் நம்ம டெல்லி மாலினி போல இருக்கிறாளே! இன்னும் கொஞ்சம் எக்கிப் பார்த்தால் பெயரைப் படித்துவிடலாம். அவளுடைய கால் ஹீல்ஸின் சைஸ் என்னை மிரட்டி நான் எக்குவதற்குத் தடைபோட்டது.

இன்னும் மாலினி யார் என்று சொல்லவில்லையல்லவா? மாலினி 5’8’’ல் மெழுகால் சிலைவடித்த ஒரு பேசும் பதுமை. அவளும் அவள் போட்டிருந்த ஜீன்ஸூம் எங்கள் ஊருக்குப் புதுசு. லேசர் பீம் பாய்ச்சும் இரு கூரிய கண்கள். சிகப்பழகு க்ரீம் விளம்பரதாரர்கள் இன்னும் அவளை பார்க்கவில்லை என்று நினைத்துக்கொண்டோம். பளபளவென்று சுடர் விடும் மேனி. ”அவ இப்ப என்ன படிப்பா?” என்று அதிகப் பிரசங்கித்தனமாக எங்கள் குழுவில் ஆராய்ச்சியாய் கேள்வி கேட்ட ஒரு அச்சுபிச்சு தர்மஅடி வாங்கியிருப்பான். “அழகுக்கு படிப்பதெற்கு? அறிவெதற்கு?” என்று அப்போதே நான் தான் ஏற்ற இறக்கங்களுடன் வைரமுத்துக் கவிதையாகக் கேட்டேன். முதுகுக்கு பின்னால் ரெண்டு பேர் என்னை வித்தியாசமாகப் பார்த்தது முன்னால் திட்டு வாங்கியவன் முகத்தில் தெரிந்தது.

நான் பி.எஸ்.ஸி படிக்கும்போது எங்கள் ஊரில் இருக்கும் அவள் பாட்டி வீட்டிற்கு சம்மர் வெக்கேஷனுக்கு வந்த ஒய்யாரி. பட்டிணத்துப் பெண் பார்க்க எப்படியிருப்பாள் என்று ரோல் மாடல் பார்க்க போட்டி போட்டுக்கொண்டு கழுகாய் பொன்னா பாட்டி வீட்டை வட்டமடித்து சைட் அடித்தார்கள். மணி கண்கொத்திப் பாம்பாக யார்யார் எத்தனை மணிக்கு அவள் வீட்டைக் கடக்கிறார்கள், உள்ளே பார்க்கிறார்கள், அவளிடம் இளிக்கிறார்கள், பாட்டியிடம் பேசுகிறார்கள் என்று கணக்கெடுத்துக்கொண்டு வறுத்தெடுத்தான். “வெக்கமாயில்ல. புதுசா ஒரு பொட்டைப் பொண்ணு ஊருக்கு வந்துடக்கூடாதே. பின்னாலையே அலைவீங்களே” என்று திட்டிவிட்டு மத்தியானம் ”கொல்லையில பாத்ரூம் தாப்பா ரிப்பேர்னு சொன்னீங்கல்ல” என்று கார்பெண்டர் சகிதம் போய் நின்று தச்சருக்கு சித்தாளாக பணிபுரிந்து டெல்லிப் பார்டியின் நன்மதிப்பை பெற பிரயத்தனப்பட்டான்.

பொ.பாட்டி இல்லத்திற்கு 24x7 சிறப்பு செக்கியூரிட்டி ட்யூடி பார்த்தார்கள். பித்துப்பிடித்த இரண்டு பேர் விடியலில் அவள் வீட்டு வாசலைப் பெருக்கி கோலம் போடும் முறைவாசல் செய்யக்கூட சித்தமாய் இருந்தார்கள். பொன்னா பாட்டி கெட்டிக்காரி. அந்த மாதம் முழுவதும் கடைத்தெரு மண்டியிலிருந்து அரிசி மூட்டை எடுத்துவருதிலிருந்து அந்துருண்டை வாங்குவது வரை கன ஜோராக பசங்களை ஏவி வேலை வாங்கிக்கொண்டாள். பேத்தியுள்ளபோதே தூற்றிக்கொள்!

ஒரு நாள் வாசலில் நின்று கை நகம் கடித்துத் துப்பிக்கொண்டிருந்தவளை நாக்கைத் தொங்கப்போட்டுப் பார்த்துக்கொண்டே சென்ற எங்கள் தெரு பெண் ஆர்வலன் ஒருவன் எதிரில் வந்த எண்ணைச் செட்டியாரின் மூன்று சக்கர சைக்கிளில் மோதி தலையோடு கால் ஜொள்ளோடு எண்ணையும் வழிய பேந்தப் பேந்த முழித்தபடி பரிதாபமாக நின்றான்.  கழுத்திலிருந்த முறுக்குச் செயினை விரல்களில் சுருட்டிக் கோர்த்துக்கொண்டு கருங்குழல் முன்னால் விழ அவள் அப்போது விழுந்து விழுந்து சிரித்ததில் பயல்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக அம்பேல். ஆல் அவுட். அப்போது வாயில் ஈ, கொசு என்ன டைனோசரே பூந்தாலும் தெரியாது.

“மச்சான். மூஞ்சியில கரியப் பூசாம எண்ணைய பூசிப்புட்டா” என்று மூன்று நாளுக்கு வீதியில் எண்ணைக் காப்பு ஆனவனை வீட்டுக்கு வீடு நிறுத்தி கேலி பேசினார்கள். ஒரு காந்தத்தைச் சணலில் கட்டித் தெரு மணலில் இழுத்துக்கொண்டு போனால் சிறு சிறு இரும்பு மற்றும் துறுப்பிடித்த சேஃப்டிபின், ஹேர்பின் போன்ற ஐட்டங்கள் ’பச்சக்’கென்று ஒட்டிகொண்டே போவது போல அந்தத் தெரு வாலிபங்களைக் அவள் பின்னால் கட்டியிழுக்கும் காந்தமாக வளைய வந்தாள். கண்ணிரண்டும் மின்சாரம் பாய்ச்சுவதால் “மச்சான். நீ சொல்றா மாதிரி அவ சாதாரண மாக்னெட் இல்ல. அவ ஒரு எலக்ட்ரோ மாக்னெட்டா” என்று கல்லூரியில் ஃபிசிக்ஸ் சேர்ந்த புது அறிவியல் அறிஞனொருவன் என்னிடம் சொன்னான்.

உன்
தேகம் வாழைத்தண்டூ
பேச்சு அல்வாத்துண்டூ
கன்னம் கற்கண்டூ
மொத்தத்தில்
நீ
கை கால் முளைத்த பூச்செண்டூ

என்று கரியால் அவர்கள் வீட்டு வாசலில் கிறுக்கியிருந்ததைப் பார்த்து பொன்னாப் பாட்டி திட்ட ஆரம்பித்ததில் ஒரு ஞாயிற்றுக்கிழமை பொழுது தெருச் சண்டையாய் விடிந்தது. எல்லா வரியிலும் ”டூ...டூ”ன்னு நெடிலில் இருந்ததில் யார் என்று ஈசியாகப் பிடித்துவிட்டோம். ”மண்டூ” என்று பேப்பரில் அதிகாரப்பூர்வமாக எழுதி என்னைத் திட்டிய மணி தான் அந்த அசடு. அதிரடி விசாரணையில் தெரிய வந்த சங்கதி இதுதான். மேல வீதியில் எம்.ஏ தமிழ் முடித்துக் கவிதை மேல் தீராக்காதலில் இருந்தவனிடம் எழுதி வாங்கி அகோராத்திரி கண் விழித்து நெட்ரு அடித்து பிரம்ம முஹூர்த்ததில் எழுந்து கிறுக்கியிருக்கிறான். அப்புறம் மாலினியின் அப்பா வந்து அவளை மீண்டும் ஊருக்கு அழைத்துப்போகும் போது “ஈரமான ரோஜாவே! என்னைப் பார்த்து மூடாதே” என்று பாட்டை சத்தமாக வைத்து துக்கத்தைத் தீர்த்துக்கொண்டார்கள்.

மாலினியின் அடுத்த வருட விஸிட் எங்கள் ஊரில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. முதல் வருடம் கண்ணை உருட்டி உருட்டி சங்கோஜமாக மிரள மிரள பார்த்துக்கொண்டிருந்தவள் இரண்டாம் வருடம் “ஏ”, “அப்டியா”, ”சீ”, ”ஏஏஏன்”, ”தோஸ்த்”, “போடா”, ”புண்ணாக்கு”, “தடியா” என்று மணிரத்னம் படம் வசனம் போல ஷார்ட்ஹாண்ட் வசனங்கள் பேச ஆரம்பித்தாள். அவளது அந்த சுந்தரமொழியில் மயங்கியோர் பலர். அவளைத் தன் பக்கம் ஈர்க்கும் ஆர்வத்தில் எல்லோரும் கோரஸாக காலை மாலை ஹிந்தி படித்தார்கள். ஒரு விஷமன் ஜோக் அடிக்கிறேன் பேர்வழி என்று “ஏக் காம் மே” வசனத்தை “ஏக் கிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸான்” என்று அழுத்திச் சொல்லி அவளை அசத்தப் பார்த்தான். ”அட அசத்தே” என்று ஒரு அலட்சிய லுக் விட்டாள். ’ஸ்’ஸில் மேலே ஒட்டிய உதடு அவனுக்கு ரெண்டு நாளைக்குப் பிரியவே இல்லை.

அந்த வருடம் மணிக்கொரு தரம் கரெண்ட் கட் செய்து மக்களுக்கு பில்லில் மிச்சம் பிடித்தார்கள். தெருவாசிகள் தங்கள் வீட்டுக் கூடத்தில் இருந்த நேரத்தை விட வாசற்படியில் உட்கார்ந்து கழித்த நேரமே ஜாஸ்தி. வடநாட்டில் ஆண்களுடன் சகஜமாக பேசிப் பழகிய பெண்ணாகையால் அவர்கள் வீட்டுப் படிக்கட்டில் உட்கார்ந்து வம்பளக்க ஆரம்பித்தார்கள். இருந்தாலும் பாட்டிக்கு உள்ளூர ஒரு பயம்தான். தடித்தாண்டவராயன்களை வைத்துக்கொண்டு பெயர்த்தியை காபந்து பண்ண வேண்டுமே என்று கவலைப்பட்டாள். அவள் கவலைப்பட்டது போலவே ஒரு நிகழ்ச்சி அன்றைக்கு நடந்தது.

இங்கு மழை இன்னும் விட்டபாடில்லை. பஸ்ஸும் வந்தபாடில்லை. அவளும் நகர்ந்தபாடில்லை. நானும் இங்கிருந்து கிளம்பியபாடில்லை. ஷேர் ஆட்டோக்களில் பிறத்தியான் மடியில் உட்கார்ந்து மழைக்கு இதமாக சில மாந்தர்கள் சொகுசாகப் பயணித்தார்கள்.  கால் கடுக்க நின்றாலும் பக்கத்திலிருக்கும் அந்த அழகியினால் வலி தெரியாமல் இருந்தது. உயரத்தைப் பார்த்தால் அவளாக இருக்குமோ என்று விடாமல் மூளை அரித்துக்கொண்டிருந்தது.

போன பாராவுக்கு முதல் பாரா கடைசியில் சொன்ன அந்த நிகழ்ச்சி என்னவென்றால்...... வழக்கம் போல உட்கார்ந்து அரட்டை அடித்துக்கொண்டிருந்தோம். மின்சாரம் தடைபட்டது. கையில் இருந்த மோதிரத்தை சுழற்றியபடியே இருந்த மாலு (இந்தப் பெயர் ஒரு நாலைந்து பாராவுக்கு முன்னாடியே எழுதியிருக்கவேண்டும்) அதை தொலைத்துவிட்டாள். எங்கேயோ உருண்ட மோதிரத்தை பூச்சிபட்டு கடித்தால் கூட பரவாயில்லை என்று உயிர்தியாகம் செய்யும் உத்வேகத்துடன் நண்பர்கள் தேட ஆரம்பித்தார்கள். பொ.பாட்டி “உள்ள போய் மெழுகுவர்த்தி கொண்டு வரேன்”ன்னு உள்ள போனாங்க. ஏதோ சாமான் உருள்ற சத்தம் கேட்டவுடனே பாட்டி விழுந்துட்டான்னு மாலு எழுந்து உள்ளே ஓடினா.

ஒரு ரெண்டு நிமிஷத்தில கரண்ட் வர்றதுக்கும் பாட்டி “ஐயோ”ன்னு அலறுவதற்கும் சரியாக இருந்தது. ஒரு கும்பலாக உள்ளே ஓடிப்போனதில் முதல் கட்டு தாண்டி இரண்டாம் கட்டில் இருந்த ஸ்டோர் ரூம் வாசல் தரையில் அலங்கோலமான நிலையில் மணியும் மாலுவும். எவ்வளவோ பேரின் ஆசைக் கனவில் மணி மண்ணள்ளிப் போட்டுவிட்டான். ரெண்டு பேர் சட்டையைப் பிடிக்க “ஓடி வந்ததுல படிக்கு பக்கத்தில இருந்த மேட் தடுக்கி ரெண்டு பேரும் விழுந்துட்டோம்டா”ன்னு கேவிக் கேவி சொன்னாலும் யாரும் கிஞ்சித்தும் நம்பவில்லை.

கிட்டத்தட்ட அரச மரத்தடி பஞ்சாயத்து போல நடந்த விசாரணையில் கேட்டபோதும் தேய்ந்த கீரல் விழுந்த எம்.பி த்ரீ ஸி.டி போல அதையே திரும்ப திரும்ப சொன்னான். மாலு வாயைத் திறக்காமல் நின்றது ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டது என்று எல்லோரும் எண்ணினார்கள். மாலுவின் டை கட்டும் வேலை பார்க்கும் அப்பாவும், வாராவாரம் புதுதில்லி லேடீஸ் க்ளப் சாகரத்தில் சங்கமிக்கும் அம்மாவும் “கண்ட்ரீ ப்ரூட்ஸ்” என்று திட்டிவிட்டு கப்பல் போல காரில் ஏறி கிழக்கு திசை நோக்கிப் போனார்கள். பொன்னா பாட்டி அடிக்கடி பசங்களைப் பார்க்கும் போதெல்லாம் துடைப்பக்கட்டையை சிலம்பமாகச் சுழற்றி காண்பித்துக்கொண்டிருந்தாள். அதற்கப்புறம் எல்லாப் பசங்களும் பொ.பாட்டி வீடருகே வந்தால் ஓரமாக எதிர்சாரியில் பயணித்துக் கொண்டிருந்தார்கள்.

இரண்டு நாளுக்கப்புறம் அவனை ஆசுவாசப்படுத்தி தெரு மூலைக்கு ஒதுக்கிக் கொண்டு போய் விசாரித்ததில் ”மேட் தடுக்கி கீழே விழுந்தது உண்மைதான்டா. ஆனா அருணாசலம் சினிமால வர்ற மாதிரி அப்படியே ஒரு லிப் கிஸ் அடிச்சுப் பார்த்தேன். பச்சுன்னு ஒட்டிக்கிச்சு. ” என்று ஒரு போடு போட்டான். காண்டுல அவனை எல்லோரும் நாலு சாத்து சாத்தினார்கள்.

இது நடந்து ஒரு பத்து வருஷமாவது ஆகியிருக்கும். இந்தப் பொண்ணைப் பார்த்ததும் அந்த நினைப்பெல்லாம் பொங்கிக் கொட்டுது. ஒரு வழியாக மழை லேசாக விடத்தொடங்கியிருந்தது. தூரத்தில் கார்பொரேஷன் பஸ் வருவது தெரிகிறது. நாளைக்கு க்ளையண்ட் மீட்டிங் இருக்கிறது. ரூமுக்கு போனால் அங்கு வேறு விடியவிடிய கூத்தடிப்பார்கள். எவனோ ஒரு பைக் ரேஸ் பிரியன் அந்த பஸ்ஸை முந்திக்கொண்டு என்னைப் பார்க்க வருகிறான். சர்ர்ர்ர்க் என்று ப்ரேக் அடித்தான். பக்கத்தில் நின்றவள் லாவகமாகத் தாவி பில்லியனில் அமர்ந்து அவனைச் சிக்கென்று கட்டிக்கொண்டாள். முதல் கியரில் அவளை இன்னும் தன் முதுகோடு நெறுக்கி இரண்டாவது கியரில் பறந்தான்.

அவன் முகத்தை எங்கோ பார்த்த மாதிரி இருக்கே! ஆ! அடப்பாவி. அது மணி தான். அப்போ இவள்?

பின் குறிப்பு: இன்றைய தினமணி கதிரில் வந்தக் கதை இது.

-

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails