Showing posts with label டெக்னிக்ஸ். Show all posts
Showing posts with label டெக்னிக்ஸ். Show all posts

Friday, November 15, 2013

ஆணா? பொண்ணா?

ஊர்க்கோடியிலிருக்கும் சிவன் கோயில் பிரகாரத்தில் தேமேன்னு உட்கார்ந்து உண்டி வளர்த்து உயிர் வளர்த்துக் காலத்தைத் தள்ளிக்கொண்டிருந்தார் அவர். யாரோ ஒரு ஆன்மிக ப்ரமோட்டர் போகிற போக்கில் “இவருக்கு அதீத சக்தியிருக்குப்பா. சொல்றதெல்லாம் அப்டியே நடக்குது...இருவத்தஞ்சு வருஷமா புள்ளையில்லாத எங்கூரு பண்ணையாருக்கு இவரோட ஆசீர்வாதத்தால புத்திர பாக்கியம் கிடைச்சுடுச்சு..” என்று சொல்லி நமஸ்காரம் செய்துவிட்டு மக்களுக்குக் காட்டிவிட்டு சென்றுவிட்டார்.

அவர் நிச்சயமாக சாமியார் கிடையாது. பிரகாரத்திலிருந்தாலும் ப்ளாட்ஃபாரத்திலிருந்தாலும் ஜவ்வாதும் குங்குமமும் மணக்க மணக்க பார்க்க பந்தாவாக இருப்பார். கொஞ்சூண்டு மழுமழு வெள்ளைக் கன்னங்களின் பளபளப்புக்கு நடுவே வெண் நிற தாடி ஒரு முழம் நீளத்திற்கு வளர்த்திருப்பார். வலது கையால் தாடியை உருவிக்கொண்டே வேதாந்தமாக அள்ளி வீசும்போது ரிக், யஜுர், சாம அதர்வணங்களை ஒரு 200ML ஹார்லிக்ஸ் டம்பளர்ல அடக்கிக் கரைச்சுக் குடிச்சுட்டாரோன்னு என்னை மாதிரி அஞ்ஞானிங்க அப்படியே வாய் பொளந்துடும்.

”பக்கத்து வீட்டு பரிமளாவுக்கு ஆம்பிளைப் புள்ளை பொறக்கும்னு சொன்னாரு.. அப்படியே பொறந்துச்சுடி.” என்று கண்ணாலேயே ஸ்கேன் செய்து சொன்னது போல அவ்வூர் மக்கள் அதிசயப்பட்டு அவரிடம் கருவுக்குள் இருக்கும் சிசு ஆணா? பெண்ணா என்று அறியும் ஆர்வத்தில் லைன் கட்டி நின்று ஆரூடம் பார்த்துக்கொண்டது. கூட்டம் வளர வளர தாக்குப்பிடிக்க முடியாமல் பக்கத்தில் ஒரு அஸிஸ்டெண்ட் வைத்துக்கொண்டார் அவர்.

சனி ஞாயிறுகளில் சன்னிதிகளில் இருக்கும் பக்தர் கூட்டத்தை விட இந்த பித்தர் கூட்டத்தால் பிரகாரம் நிரம்பி வழிந்தது சிவன் கோயில். ஒரு ஐந்தாறு மாதங்கள் சென்றது.

“நீங்க சொன்னது தப்பு” என்று ஒரு ஆள் கோபத்தோடு எரித்துவிடும்படி உள்ளே பிரவேசித்தான்.

பக்கத்திலிருந்தவர்களுக்கு தூக்கி வாரிப்போட்டது. அவர் எந்தவித பரபரப்பும் காட்டாமல் சிரித்துக்கொண்டே அஸிஸ்டெண்ட்டைப் பார்த்து “அந்த நோட்புக்கை எடுத்து வாப்பா..” என்று அருட் பார்வையுடனும் கருணாமூர்த்தியாகவும் கேட்டார்.

நோட்புக் வந்தது.

”நீ என்னிக்குப்பா வந்தே?”

“இரண்டு மாசத்துக்கு முன்னாடி ஒரு வெள்ளிக்கிழமை”

பரபரவென பக்கங்களைப் புரட்டினார்.

“உன் பேர் என்னப்பா?”

”அறிவுடையநம்பி”

“உங்கிட்ட என்ன குழந்தைன்னு சொன்னேன்”

“ஆம்பிளை”

“உனக்கு என்ன பொறந்துருக்கு...”

“பொம்பளைப் பிள்ளை”

”இந்த நோட்டைப் பாரு.. நான் என்ன எழுதியிருக்கேன்னு”

அங்கே அட்சர சுத்தமாகப் ”பெண்” என்று எழுதியிருந்தது.

கோயிலேறி கேள்வி கேட்டவனுக்கு பகீரென்றது. நாம மறந்துட்டு இவரைத் தப்பாச் சொல்லிட்டோமோ என்று குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்ளமுடியாதவனைப் போல “சாரிங்க...”ன்னு சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.

அவர் அவன் போன திசையைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தார். அஸிஸ்டெண்ட் வியந்தார்.

இந்த டெக்னிக் எப்படி என்று உங்களுக்குப் புரிந்ததா?

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails