Showing posts with label ஹரித்ராநதி. Show all posts
Showing posts with label ஹரித்ராநதி. Show all posts

Saturday, November 29, 2014

தூங்கும் குளம்

ன்னார்குடி ஹரித்ராநதி. 



கோபில கோப்பிரளய முனிவர்களை இத்திருக்குளத்தின் கரையில் உட்கார வைத்துத் தனது எல்லா லீலைகளையும் ராஜகோபாலன் ரீடெலிகாஸ்ட் பண்ணினான் என்பது ஐதீகம். ஹரித்ரா என்றால் மஞ்சள், மஞ்சள் பூசி கோபியர்கள் கிருஷ்ண பரமாத்மாவுடன் இங்கே ஜலக்க்ரீடை செய்ததால் ஹரித்ராநதி என்ற பெயர் பெற்றது. மைய மண்டபத்தில் வேணுகோபாலன் சன்னிதி. குச்சியால் டின் கட்டியப் படகைத் தள்ளிக்கொண்டு அங்கே போவார்கள். வருஷாந்திர ஆனி மாச தெப்போற்சவத்தின் போது கோபாலன் ஒரு முறை நடுவளாங் கோயிலை எட்டிப் பார்ப்பார். அன்று கோபுரமெங்கும் சீரியல் செட் மினுமினுக்கும். நான்கு கரையும் விடியவிடிய முழித்திருக்கும். தெருவோரங்களில் “திருவிளாக் கடைங்க” முளைத்திருக்கும். குளம் நிரம்பித் தளும்பும் சமயங்களில் எப்போதாவது ஈசான்ய மூலையில் பிரேதம் ஒதுங்குவதும் உண்டு. வாழ்வோ சாவோ இந்தக் குளத்தில்தான் என்று வைராக்கியமாக இருந்திருப்பார்கள் போலும்.

சாயங்கால வேளைகளில் கூடத்து ஊஞ்சலை வீசியாடி இந்தக் குளத்தை ரசித்துக்கொண்டே லோட்டா காஃபி ருசித்தது நேற்று கண்ட சொப்பனம் போலாகிவிட்டது. ”சீப்பி சாப்பிடாதேடா தம்பி.. எச்சல்.. கீழே வைக்காம கொண்டு போய் கொல்லே குழாயடில போடு....”ன்னு பாட்டி அதட்டுவாள். ஹரித்ராநதிக்கரை நாகரீகத்தில் வளர்ந்தேன். கூவம் நதிக்கரையில் குடியேறிவிட்டேன்.

ஊஹும். விஸ்தாரமானக் குளம். தவளைக் கல் எறியாதீர்கள். அது தூங்குகிறது. என் நினைவுகள் படக்கென்று விழித்துக்கொண்டன.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails