Thursday, September 19, 2013

புகை புகையாய்.....


நீலக்கடலில் தூவிய மல்லிகை....
ஆகாய இலவம் பஞ்சு...
நுரைத்து ஓடும் பொன்னி நதி...
காதலி ஜில்லிடும் வெண்ணிலா ஐஸ்க்ரீம்...
கயிலைநாதனின் வெள்ளியங்கிரி...
வரும் புயலைக் காட்டும் வான் படம்...
வசிக்கத் துடிக்கும் குட்டி ராஜ்ஜியம்....
இந்திரலோகத்து நுழைவாயில்...
ஐராவதத்தின் பிருஷ்டபாகம்...
பனைமரம் துடைக்கும் ஒட்டடை...
செல்ல பொமரேனியன் நாய்க்குட்டி...
வாணி ஜெயராமின் “மேகமே...மேகமே...”
ஆத்திக நாத்திக வெண்தாடி...
குழந்தையின் வெள்ளை மனசு....
ஷேவிங் ப்ரஷ் தலையில் க்ரீம்...
ஒரு விள்ளல் குஷ்பூ இட்லி...
வானம் விளைத்த உப்பளம்..

கடைசியில் ஜெயித்தது:
“மேகம் ரெண்டும் சேர்கையில்....
மோகம் கொண்ட ஞாபகம்...”

Wednesday, September 18, 2013

24 வயசு 5 மாசம்

சத்யாவிற்கு அசாத்திய டைமிங் சென்ஸ். வாயாலேயே கிச்சுகிச்சு மூட்டுவதில் கில்லாடி.

காரில் வரும் போது காதல் ஜோடிகள், கல்யாணம், கத்திரிக்கா என்று பல திசைகளில் பேச்சு போனது.

பேசினதுல ஒரு சின்ன க்ளிப்.

“டெண்டுல்கரை விட அஞ்சலி அஞ்சு வருஷம் பெரியவளாம்...”

“அதனால என்ன... அப்படிதான் இப்பெல்லாம் கன்னாபின்னான்னு இருக்காங்க...ட்ரிங்கிங் டுகெதர்...லிவிங் டுகதெர்... டையிங் டுகதர்னு.... ”

”திருநீர்மலைல அம்மா பொண்ணு ரெண்டு பேருமே காதலன் கூட ஓடி வந்து கல்யாணம் பண்ணிகிட்டாங்களாம். தாலிகட்டி படி இறங்கும் போது மாலையும் கழுத்துமா ஜோடியாப் பார்த்துக்கிட்டாங்கன்னு போன வருஷமோ என்னமோ தந்தியில படிச்சேன்.”

“நல்லவேளை. இதே ரீதியில பேத்தியும் ஓடி வந்து க்யூல நின்னு பண்ணிக்காம இருந்துதே. நீர்வண்ணப்பெருமாள் பெருமாள் பொட்டிய கட்டிண்டு இடத்தைக் காலி பண்ணிண்டு வேற ஊருக்குப் போய்டுவார்...”

“ஏன். கமல் கூட கொழந்தை பொறந்தத்துக்கு அப்புறம் தான் கல்யாணம் பண்ணிண்டார்..”

”அதெல்லாம் எதுக்கு? எனக்குத் தெரிஞ்ச இடத்துல நடந்த கூத்தை சொல்லட்டா?”

“ம்.”

“வீட்டுக்கு ஒரே பையன். லவ் பண்ணினப் பொண்ணை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு அழிச்சாட்டியமா ஒத்தைக் கால்ல நின்னு பண்ணிண்டான்”

“சரி..”

“தாலி கட்டின நாள்லேர்ந்து எண்ணி சரியா அஞ்சாவது மாசம் குழந்தை பொறந்தது..”

“ஐயய்யோ!!”

“வீட்ல எல்லோரும் அதிர்ந்து போய்.. ஏண்டா? ஊர்ல சிரிக்கமாட்டாங்களா? என்னாடாச்சுன்னு கேட்டாங்க..”

“அதுக்கு என்ன சொன்னான்?”

“நாந்தான் முன்னாடியே உங்ககிட்டல்லாம் சொன்னேனே.. அப்டீன்னு சதாய்க்கிறான்.”

“என்னடா சொன்னேன்னு அவனோட அம்மா அப்பா அழாக்குறையா கேட்டாங்க.”

“அவன் சொல்றான். நான் அப்பவே சொன்னேன் பொண்ணுக்கு 24 வயசு 5 மாசம்னு”.

Monday, September 16, 2013

ஊதா கலரு ரிப்பன்


நேற்று ரெண்டாம் ஆட்டம் வ.வா.சங்கம் போயிருந்தேன். புது படத்திற்கு சத்யத்தில் எலைட் டிக்கெட் கிடைக்க நீங்கள் பூர்வ ஜென்மத்தில் ஐந்தாறு ஏழைக் கலாரசிகர்களுக்குச் சினிமா டிக்கெட் எடுத்துக்கொடுத்து இண்டெர்வெல்லில் கை நிறைய தீனியும் வாங்கிக்கொடுத்துத் தொண்டு புரிந்திருக்கவேண்டும். நானொரு புண்ணியாத்மா என்பது அனைவரும் அறிந்ததே. எனக்கு அந்த அதிர்ஷ்டமிருந்தது.

‘ஏ’ரோவில் பீரோ மாதிரி குஷ்பூ தனது ஸ்நேகிதகளுடன் அமர்ந்து வி.தா.வருவாயா பார்த்தபோது நானும் உடனிருந்தேன். அதாவது அவரிடமிருந்து ஐந்தாறு ரோக்களுக்கு கீழே. கலகலப்பு மசாலா கேஃப் பார்த்தபோது மிர்ச்சி சிவா என் தலைக்கு ரெண்டு ரோ மேலே அமர்ந்திருந்ததை அகஸ்மாத்தாக கண்டுபிடித்த என்னிடம் ”கூட்டத்திற்கு காட்டிக் கொடுக்காதீர்கள்” என்று கண்ணாலையே கெஞ்சி சீட்டோடு பொட்டலமாக முடங்கிக்கொண்டார். பிழைத்துப்போகட்டும் என்று விட்டுவிட்டேன். இந்த வரலாற்று நிகழ்வுகளுக்குப் பின்னர் இன்றுதான் சத்யத்தில் சினிமா பார்க்கிறேன். ”இந்தப் படத்தோட ஹீரோயின் இன்னிக்கி நம்ம கூட படம் பார்க்க வர்றாங்கலாம்” என்று பலகணி ஏறும்போது ஜெர்க் விட்டேன். என்னுடன் வந்தவர்களும் சகபடியேறிகளும் என்னைப் பார்வையாலேயே தாயம் உருட்டினார்கள்.

ரெண்டாம் ஆட்டமானாலும் காலை மிதித்துக்கொண்டு இருட்டில் சீட் தேடும் கூட்டம் இன்னமும் தியேட்டர்களில் உலவுகிறது. அந்தக் காலத்தில் திரை மூலைகளில் கலடியாஸ்கோப் வளையல்களுக்கு நடுவே ஜிகுஜிகுன்னு டைட்டில் போடும் உத்தி போல ஏதோ ரிப்பன் ரிப்பனாக உருவித் தலைப்புப்போட்டார்கள். படம் பற்றி இன்னும் எழுதவேயில்லை. அதற்கு முன்னாலேயே இவ்வளவு ராமாயணமா என்று கூவுபவர்களுக்கு ஒரு வார்த்தை. சிரிப்பொலி, ஆதித்யா சேனல்களில் துணுக்குத் தோரணம் பார்த்து ரசிப்பது போல சீனுக்கு சீன் ஒட்டவைத்த பிட் காமெடிகள். அவ்வளவுதான். கதை என்ன? கலை என்ன? அப்படியெல்லாம் சாங்கோபாங்கமாகக் கேட்பவர்கள் சத்தியஜித் ரே படங்களை முக்கு கடையில் வாடகைக்கு எடுத்து வீட்டு சோஃபாவில் லேஸ் சகிதம் கண்டு ரசிக்கவும்.

சிவகார்த்திகேயன் பாய் நெக்ஸ்ட் டோர் போல இருக்கிறார். வெட்டியாக பொழுது போக்கி பஞ்சாயத்து மேடையில் பகலிலேயே தூங்கி பரோட்டா சூரியுடன் தெருத் தெருவாக ஊர் சுற்றி மைனர் குஞ்சாக வலம் வருகிறார். அப்படியொன்றும் வசதியானவரும் அல்ல. காதல் மற்றும் பல படங்களில் அம்மைவட்ட மூஞ்சியுடன் கரகரத் தொண்டையுடன் பயமுறுத்தும் ”காதல்” அப்பாவெல்லாம் வேஷ்டி கட்டிய காமெடியனாகக் காட்டி பயம் தெளிய வைத்தார்கள். சிவா மற்றும் சூரி இணைந்து வரும் காட்சிகளிலெல்லாம் சூரியின் வசன பன்ச் ரசிக்கவைக்கின்றன. மீசை முறுக்கோடு வரும் சத்யராஜ் கடமை கண்ணியம் கட்டுப்பாடு போல நடித்து காட்சிக்கு காட்சி இறுக்கமாயிருக்கிறார். இந்தப் படத்தின் மொழியோடு இணைந்திருப்பது போல இல்லை. துப்பாக்கியோடு சத்யராஜ் மல்லுக்கட்டும் காட்சிகள் நம்மை பிராண்டுகின்றன.

ஸ்ரீதிவ்யாவாம். ஹீரோயின். பாவாடை சட்டையிலும் சரி புடவையிலும் சரி பாந்தமாக இருக்கிறார். ஒரு ஆங்கிளில் பாய் ஃப்ரெண்டுகளை மிரட்டும் அஞ்சலியின் சாயல் தெரிகிறது. வேலைவெட்டியில்லாத பசங்களைத் துரத்திக் காதலித்துக் கரையேறும் பெண்களைக் காட்டி இன்னும் எவ்வளவு படம் எடுப்பார்களோ தெரியவில்லை. திடீர் ஷாக் கொடுக்கிறோம் பேர்வழி என்று வைக்கும் ட்விஸ்ட் காட்சிகள் மொக்கையாக இருக்கின்றன. ஒரு நாளிரவு லதாபாண்டியும் போஸ்பாண்டியும் (நாயகி,நாயகன்) கோழிக்கூடைக்குள் மறைந்து சரசம் செய்யும்போது சத்யராஜ் பால்கனி வந்து எட்டிப்பார்க்கிறார். நாமும் கையும்களவுமாகப் பிடிக்கப்போகிறார் என்று நினைக்கும் போது ”எங்கப்பாவுக்கு தூக்கத்தில நடக்கிற வியாதி” என்று முத்துப்பற்கள் தெரிய குழந்தையாய்ச் சிரிக்கிறார் ஸ்ரீதிவ்யா. சகிக்கவில்லை. ஸ்ரீதிவ்யாவின் சிரிப்பைச் சொல்லவில்லை. சீனைச் சொன்னேன்.

இண்டெர்வெல்லுக்கு அப்புறம் ஏசியை நிறுத்தி கரெண்ட் மிச்சம் பண்ணும் வழக்கம் இன்னும் சினிமாக் கொட்டாய்களில் இருப்பது புலனானது. பின்னால் அமர்ந்திருந்த சில வாலிபர்கள் வருத்தப்படும் அளவிற்கு அவ்வப்போது ஓலமிட்டார்கள். காலேஜ் ஆர்வியெஸ் கண்ணுக்கு வந்து அதையும் ரசிக்கச் சொன்னான். காதல் தோல்வியில் சிவகார்த்திகேயன் சில பன்ச் வசனங்கள் பேசும்போது பாதிக்கப்பட்ட தேவதாஸர்கள் கரவொலியெழுப்பியும் விசிலடித்தும் தன் மனவேதனையைப் போக்கிக்கொண்டார்கள். ”திரிஷா இல்லைன்னா திவ்யா” காலத்திலும் கா.தோல்வியில் தத்துவப்பாடல் கேட்கும் க்ரூப் அவர்கள் என்று தெரிகிறது.

ஒரு சீனில் காதல் தோல்வியடைந்து விரக்தியில் இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு அவரது தந்தையே “காதல் தோல்வி மருந்து” சாப்பிடு என்று காசு கொடுப்பது முகம் சுளிக்கவைக்கும் சீனாக இருக்கிறது. குடிக்கும் போதும் புகைபிடிக்கும் போது “உடல் நலத்திற்கு தீங்கானது” என்று சப்டைட்டில் போடுவோர் இது போன்று லாகிரி வஸ்துகள் மேல் மோகத்தைத் தூண்டும் காட்சிகள் வரும்போது திரையின் பாதத்தில் “இது மனநலத்திற்கு தீங்கானது” என்று போடவேண்டும். காதலனில் பிரபுதேவாவும் அவரது அப்பாவாக வரும் எஸ்பிபியும் சேர்ந்து பீர் குடிப்பார்கள். இது ஷங்கர் ஆரம்பித்துவைத்த ஆட்டம். கிராமங்களில் நடக்கும் ஆடல்,பாடல் நிகழ்ச்சியின் ஸ்ட்ரிப் டீஸ் வகையறா யோக்யதையைத் தைரியமாகக் காண்பித்தற்கு இயக்குனரைப் பாராட்டலாம்.

இமானின் இசை. கரகாட்டக்காரனின் முந்தி முந்தி விநாயகரே பாடலுக்கு கரோகி கொடுத்தது போல ”வருத்தப்படாத வாலிபர் சங்கம்” என்ற பாடல். அந்த டர்டர்ரென்று உருமும் உருமி மொதற்கொண்டு அப்படியே. ஊதா கலரு ரிப்பன் ஹிட். கேஷுவலான பாடல். ரெண்டு மாசம் கேட்கலாம். அப்புறம் காது மடங்கிக்கொள்ளும். மற்றபடி சொல்லிக்கொள்ளும்படி எதுவுமில்லை. கும்கியின் வாசனை பல பாடல்களில் இருக்கிறது.

நான் கடவுளில் வரும் டிஎம்டி இரும்புக் கம்பி தேக மொட்டைத்தலையர் இந்தப் படத்தில் காது குடைந்துகொண்டே வருகிறார். எதுவும் வலுவான காரணமில்லாமல் சிவனாண்டி சத்தியராஜும் இன்ன பெயர் என்று காதில் விழாத அந்த மொ.தலையரும் அடித்துக்கொண்டு “உன் பொண்ணு இழுத்துக்கிட்டு ஓடிடுவாடா” என்று சாபம் கொடுக்கிறார் மொ.தலையர். அதைப் பொய்யாக்க தன்னுடைய இரண்டு பெண்களையும் பள்ளிப்பருவத்திலேயே மணம் முடித்துக்கொடுக்கிறார். மூன்றாமவள் தான் படத்தின் ஹீரோயின். அவளுக்கும் சிவகார்த்திகேயனுக்கும்.......

இதற்குமேல் படத்தைப் பற்றி சொல்வதற்கு எதுவுமில்லை. நேரத்தை விரயம் செய்ய முடிந்தவர்கள் வருத்தப்படாமல் வாலிபம் பொங்கப் பார்க்கலாம்.

[முதல் பாராவில் கத்தரி விழுந்து இந்த தினமணி இணைப்பில் வெளிவந்தது. ]

Thursday, September 12, 2013

கொத்தவரங்காய் நறுக்குவது எப்படி? - ஒரு ரிப்போர்ட்

கொத்தவரங்காய் நறுக்குவது அப்படியொன்றும் லேசுப்பட்ட காரியம் இல்லை. பளபளக்கும் ப்ரஸ்டீஜ் ட்ரு-ப்ளேடு கத்தியும் மெல்மாவேர் தட்டையும் எடுத்துக்கொண்டு சப்பரக்கா என்று நடு கூடத்தில் உட்கார்ந்து கொண்டேன். விஜய் டிவியில் “நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி”யை சூப்பர் சிங்கி யாரோ சரியான கட்டையில் எடுக்காமல் பாடினார்கள். டார்ட் போல கத்தியை டிவியை நோக்கி வீசலாமா என்று எண்ணினேன். பொறுப்பான காரியத்தை கையிலெடுத்ததால் அதில் மனத்தை ஒருமுகப்படுத்திச் செலுத்தினேன்.

ஒத்த நீளமுடைய சரிசமமான ரெண்டு கொத்தவரங்காயை ( க்ரூப் ஃபோட்டோவுக்கு முன்னும் பின்னுமாக ஆட்களை நிறுத்துவார்களே... அது போல) நுணி ஆய்ந்து எடுத்துக்கொண்டேன். சீரிய இடைவெளி கொடுத்து பொடிப்பொடியாய் ப்ரஸ்டீஜ்ஜால் நறுக்க ஆரம்பித்தேன். இப்படிச் செய்வதால் நம் ப்ரஸ்டீஜ் என்னாவது என்று வீராப்பாய் வெட்டி நியாயம் பேசுவோர் மறுநாள் கால் வயிற்றுக்குக் கஞ்சிக்கு சிங்கியடிக்க வேண்டுமே என்று யோசித்தால் தாராளமாக வேஷ்டியை மடித்துக்கட்டிக்கொண்டு உட்கார்ந்துவிடுவார்கள்.

ரெண்டுரெண்டாய் நறுக்குவது இடுப்பொடியும் காரியமாக இருந்தது. கத்தியால் ஒரு கிலோ கொத்தவரங்காய் நறுக்குவது ஆத்து வாசல்ல காத்திருந்து யூயெஸ்ஸுக்கு பஸ் பிடித்து தேசாந்திரம் போவது போல என்று என் குருவி மூளைக்கு உரைத்தது. குடுகுடுவென்று சமையக்கட்டுக்கு ஓடிப்போய் இரும்பு அருவாமனையை எடுத்துவந்து மடக்கின காலுக்கு அடியில் கொடுத்து செருகிப் பிடித்துக்கொண்டேன். இரண்டுக்குப் பதிலாக நான்கு ஆறு எட்டு என்று ஈவன் நம்பரில் ஈவனாகக் கையிலெடுத்து அடிக்கிக்கொண்டு சரக்...சரக்.. என்று நறுக்க ஆரம்பித்ததில் நிமிஷ நேரத்தில் அரை வானாய் நறுக்கிப்போட்டுவிட்டேன். ஆச்சரியத்தில் இப்போதே கொத்தரங்காய் கூட்டு பண்ணின சந்தோஷம்.

இப்படி நறுக்குகையில் கைக்கு அடங்கிய கொத்தவரங்காய் கொத்தின் இடையில் முத்தின காய் ஒன்றிரண்டு இருந்தால் அவ்வளவு சௌகரியமாக நறுக்கமுடியாது. இளசுகளுக்கு இடையே பூந்து கலாசும் பெருசுகள் போல அந்த முத்திய கொத்தவரைகள். அடுக்கும் போதே கைக்குப் பதமாகவும் இளசாகவும் இருந்தவைகளை ஒதுக்கி டீம் பண்ணிக்கொண்டு நறுக்கினால் காரியம் சுலபத்தில் முடியும். முத்தின காய்களை களைந்து ஓரத்தில் எடுத்துவைத்து இராத்திரி பிசாசாய் சென்னை வீதிகளில் அலையும் பசுமாட்டிற்குக் கொடுத்தால் போற வழிக்குப் புண்ணியமாய் போகும்.

கறிகாய் நறுக்குவது சுலபமான வேலை என்று அலக்ஷியம் செய்பவர்களுக்கு நீதிபோதனை செய்வதற்காக சுயமாக சோதித்துப் பார்த்து இங்கு இவ்வியாசத்தை எழுதினேன். மாமியாரைச் சபித்துக்கொண்டு மாமியாரின் விரலாகக் கொத்தவரங்காயை நறுக்குவது ”அவர்களு”க்கு யானை பலத்தைத் தந்து கண்ணிமைக்கும் நேரத்தில் காரியம் முடியும் வாய்ப்பிருக்கிறது. நம்மாட்களுக்கு அந்த யுக்தி ஒத்துவராது. தினப்படி இந்தக் கார்யத்தில் என்னை ஈடுபடுத்திக்கொண்டல் இன்னும் பல தத்வார்த்தமான விஷயங்கள் புலப்படலாம். அர்த்தபுஷ்டியான பல ஐடியாக்களையும் வழங்கலாம்.

ம்.. முக்கியமாக ஒன்றைச் சொல்ல மறந்துவிட்டேன். கூடத்தில் உட்கார்ந்து காய் நறுக்கின இடத்தைச் சுத்தமாகப் பெருக்கி டஸ்ட் பின்னில் போடவேண்டும். நம்மாட்கள் வீட்டில் எவ்ளோ காரியம் செய்தாலும் இதுபோன்ற நகாசு வேலைகள் செய்யத் தெரியாமல் “அவர்கள்” வாயில் மாட்டிக்கொண்டு திண்டாடுகிறோம்.

கற்றுக்கொண்டவர்கள்.. நாளை வீட்டில் காய் நறுக்கிவிட்டு பதிலுரைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதற்கு அடாவடியாக கமெண்ட் இடுவோர் அவர்கள் வீட்டில் ஒட்ட நறுக்கப்படுவார்கள். நன்றி!!

Tuesday, September 10, 2013

திருக்கைலாய "லைக்" அரசியல்


கயிலாயம்.காம்மின் ரிடிசையனிங் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார் நந்திதேவர். லேப்டாப்பில் டிசயன்களைப் பார்த்துக்கொண்டிருந்தவரை துளிக்கூடச் சட்டை செய்யாமல் உள்ளே புகுந்தார் நாரத். தோளில் தம்புராவிற்கு பதிலாக எலெக்ட்ரிக் கிடார் சாய்ந்திருந்தது. நாராயண என்று ராகமாக இழுத்துச் சொல்லாமல் “நாராயண்..நாராயண்...” என்று வெட்டிவெட்டி இழுத்த ராப் ம்யூசிக்கோடு கயிலைநாதனைக் காண உள்ளே நுழைந்தார்.

“என்ன நாரதரே! ஃபார்முலா ஒன் மைக்கேல் ஷூமாக்கர் போல ஸ்பீடாக உள்ளே செல்கிறீர்கள்?”

“மிஸஸ்.உமையாளும் அவரது ஹஸ்பெண்ட் சர்வேஸ்வரனும் உள்ளே இருக்கிறார்கள் தானே!”

“இருக்கிறார்கள். கணேஷ் சதுர்த்தியில் என்ன கலகம் புரிய வந்திருக்கிறீர்கள்?”

“கயிலாய வெப் டிசையன் ஒர்க் தலைக்கு மேலே கிடக்கும் போது என் காலை ஏன் வாருகிறீர்கள் ஐயா. கிடாரிஸ்ட் என்றால் இளப்பமா...” என்று புலம்பும் சாரு போல பேசிவிட்டு....”சிவகணங்களுக்கு எதாவது வெட்டிமுறிக்கும் வேலை தாரும். அல்லது உங்களது மத்தளத்தை எடுத்து தையத்தக்கா என்று எதாவது வாசியும். இவ்வளவு வேலையை வைத்துக்கொண்டு கார்ப்பரேட் கம்பெனி விபிமாதிரி ஹாயாக உட்கார்ந்து வம்பு பேசிக்கொண்டிருக்கிறீரே...அந்த ஈஸ்வரனுக்கே வெளிச்சமய்யா,,,” என்று கடித்தார் நாரதர்.

“ம்ஹும்... சரி...சரி.. அந்த சுடலையன் குடும்பத்துக்கு ஆச்சு. உங்களுக்காச்சு... எனக்கென்ன.. வந்தது.. இந்த ஜாவாஸ்க்ரிப்ட் செரியில்லை. சியெஸ்யெஸ் எழுதவே தெரியலை.. நான் அதைப் பார்க்கிறேன்..”

திருவிளையாடல் படத்தில் கேவிமஹாதேவன் கொடுத்த “ட்ர்ர்ர்ரெய்ங்....” என்ற பின்னணி ஒலிக்க உள்ளே நுழைந்தார் நாரதர். சிவபெருமான் லாப்டாப்பில் மும்முரமாக கூகிள் சர்ச் செய்துகொண்டிருந்தார். உமையம்மை ஐஃபோனில் சீர்காழி கோவிந்தராஜனின் “காக்கும் கடவுள் கணேசனை நினை..”யை ஓடவிட்டு பிள்ளையின் பிரதாபங்களை எண்ணியெண்ணி ரசித்துக்கொண்டிருந்தார்.

”ம்..கும்...ம்..கும்..” என்று இருமுறை முக்கி முனகி பார்த்துவிட்டு நாரதர் “நாராயண...நாராயண.... உலகைக் காக்கும் பரம்பொருளாகிய நீங்களிருவருமே கேட்ஜெட்டுகளில் மூழ்கிவிட்டீர்கள். இனி யாரிந்த பூலோகத்தைக் காத்து ரட்சிக்கப்போகிறார்களோ? திருமால் கூட சங்குசக்கரம் ஏந்தவேண்டிய இருகரங்களில் ஐஃபோன் ஒரு கையிலும் லாப்டாப் மற்றொருகையிலும் ஏந்தி சதாசர்வகாலமும் சோஷியல் நெட்வொர்க்கில் காலத்தைப் போக்குகிறார்.” என்று சவுண்ட் விட்டார்.

“நாரதா! என்ன விஷயமா வந்திருக்கிறாய். ஆக்ரோஷமான ஆகாய கங்கையை என் சிரசில் வாங்குவதுமாதிரியான ரவிவர்மா பெயிண்டிங்கை கூகிளில் தேடிக்கொண்டிருந்தேன். இன்றைக்கு கணேசனுக்கு பிறந்தநாள். பழமெதுவும் கொண்டு வந்திருக்கிறாயா? நீயாகவே உன் நாடகத்தைத் துவங்கு. உன்னை கேட்க யாரிருக்கிறார்கள்...”

“நாரதா ஞானப்பழம் சூனியக்கிழம் என்று எதாவது கர்நாடகத்தனமான போட்டிகள் எதுவும் வைத்து என் பிள்ளைகளை வெறுப்பேற்றாதே. லேட்டஸ்ட் டெக்னாலஜிக்கல் போட்டி ஏதாவது வை. எனக்கும் பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும்.”

“அகிலமாளும் ஈஸ்வரியே! சிவபதியடைந்து கைலாயத்தில் குடியேறியிருக்கும் சீர்காழி கோவிந்தராஜரை லைவ்வாகவே உங்கள் முன் பாட வைக்கலாமே. இன்னும் ஏன் ரெக்கார்டிங்கில் 128 bitrate mp3யில் ஐஃபோனில் கேட்கிறீர்கள்”

“உன்னைக் கர்நாடகம் என்று கேட்டதற்கு என்னிடம் பாய்கிறாயா? நன்றாக இருக்கிறது”

“இல்லை தாயே! உண்மையைச் சொன்னேன். அது கிடக்கட்டும். எங்கே தங்களது தவப்புதல்வர்கள்.”

“அதானே பார்த்தேன். கலகமில்லாமல் வருவாயா? என்ன விஷயம்.”

“அம்மையே! அனைவரும் ஃபேஸ்புக்கில் நித்யவாசம் செய்கிறோம். கயிலாயம்.காம் வெப்சைட்டாகவும் நிறைய ஹிட்ஸ் பெறுகிறது. ”பூலோகத்தில் தங்களுக்குக் கிட்டாத நிம்மதிக்கு இன்றே எமலோக யாத்திரை மேற்கொள்ளுங்கள்” என்று ”Early bird" ஆஃபருடன் எமதர்மராஜன் பாசக்கயிற்றை தலைக்கு மேலே சுற்றும் விளம்பரம் வேறு. ஃபேஸ்புக்கிலும் கயிலாய பேஜ் லைக்ஸுக்கு கணபதி புண்ணியத்தில் குறைவில்லை. முறையே கௌமாரம்.காம் மற்றும் காணாபத்யம்.காம்க்குக் கூட கூட்டம் அம்முகிறது. ஏன் எல்.ஆர்.ஈஸ்வரியின் மாரியம்மா பாடல்களை காதைச் செவிடாக்கும் டெஸிபலில் அலறவிட்டிருக்கும் தங்களது சாக்தம்.காம் கூட பரவாயில்லை என்ற அளவிற்கு போகிறது.”

“எதற்கு இந்த கூகிள் அனாலிடிக்ஸ் போல ஸ்டாட்டிஸ்டிக்ஸெல்லாம் கூறுகிறாய். உனக்கு என்ன வேண்டும்.”

”இப்படி வெப்சைட் காலத்தில் உங்கள் ஃபேமிலி இருந்தாலும், ஃபேஸ்புக்கில் அதிகம் கோலோச்சுவது யார் என்று என்றைக்காவது சிந்தித்திருக்கீர்களா?”

“ஓ! லேட்டஸட்டாக போட்டி வை என்று நான் கேட்டதற்கு ஃபேஸ்புக்கோடு வந்துவிட்டாயா? கணபதிக்கு ஹிட்ஸ் அதிகமா அல்லது ஆறுமுகனுக்கு அதிகமா என்று போட்டி வைக்கப்போகிறாயா?”

”உங்களுடனேயே பேசி எனக்கு அலுத்துவிடுகிறது அம்மையே. புத்திரர்கள் இருவரையும் அழையுங்களேன். பலப்பரிட்சை செய்து பார்த்துவிடுவோம்.”

மறுபடியும் முன்னால் சொன்னது போல திருவிளையாடல் கேவிமஹாதேவனின் “ட்ர்ர்ர்ர்ர்ரெய்ங்..” பின்னணி ஒலி இசைக்கிறது.

மூஞ்சுருவை ஸ்கேட்டிங் போர்டாக்கி கையில் கொழுக்கட்டையுடன் கணபதி உருட்டிக்கொண்டு முன்னால் வருகிறார். சைக்கிளை ஹாண்டில்பாரைப் பிடித்து தள்ளிக்கொண்டு வருவது போல பின்னால் முருகப்பெருமான் மயிலின் கழுத்தைப் பிடித்துக்கொண்டு நடந்துவருகிறார்.

“மூத்தபிள்ளைதான் எப்பவும் முதலில் வரும் பிள்ளை...” என்று சொல்லிவிட்டு கனைக்கிறார் நாரதர்.

“பிரிவினை முயற்சியை ஆரம்பித்துவிட்டாயா?” என்று நாரதரிடம் சொல்லிவிட்டு.. “இங்கே இவ்வளவு களேபரம் நடக்கிறது. உமக்கு உம் பிரச்சனைதான் முக்கியம். அவளை நீங்கள் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடியதை இப்போது பார்க்காவிட்டால் என்ன மோசமாகப் போகிறது. உம்.. இந்த நாரதனையும் நம் பசங்களையும் தான் பாருங்களேன். இந்த கூகிள் சர்வர்களுக்குள் ஒரு நாள் அக்னி தேவனை ஏவி விட்டு சுட்டுப் பொசுக்கிவிடுகிறேன் பாருங்கள்...அப்போதுதான் இவ்வுலகமும் எவ்வுலகமும் உய்யும்..” என்று கர்ஜித்தாள் உமையம்மை.

லாப்டாப்பை ஷட்டவுன் செய்துவிட்டு சிவனேன்னு நடக்கவிருக்கும் ரகளைகளைப் பார்க்க ஆரம்பித்தார். நாரதன் நீயா நானா கோபிநாத் போல கோட்டும் சூட்டும் அணிந்து போட்டி நடத்த தயாராக இருந்தார். காலில் ஷூ வேண்டாம் என்று தனது சௌகரியத்துக்காக மரத்தாலான பாதரட்சையே அணிந்திருந்தார். இந்தப் புது மோஸ்தர் கணபதிக்கும் முருகனுக்கும் ரொம்பவும் பிடித்திருந்தது. “அண்ணா! இனிமேல் தேவலோகத்தின் புது ஃபேஷன் டிசையனர் நாரதர் தான். இதுதான் லேட்டஸ்ட் ஹிட்டாகப்போகிறது” என்று முருகன் பிள்ளையாரின் காதைக் கடித்தான்.

”முருகா... கணபதி... உங்களிருவரின் முகப்புஸ்தக பக்கத்தில் எவ்வளவு லைக்ஸ் இருக்கிறது? முருகா நீ அதிகமா அல்லது விநாயகன் அதிகமா?”

“யார் அதிகமானல் என்ன? கௌமாரர்கள் என்னை தொடர்ந்து ஆதரிப்பார்கள். அவ்வைக் கிழவி “ஒன்று..இரண்டு..மூன்று...” என்று வரிசைப்படுத்தி என் புகழ் பாடி மகிழ்வாள்.” என்றான் முருகன்.

”எந்த பேஜிலும் என்னை முதலாகத் துதிபாடிவிட்டுதான் செயலெதுவும் துவங்குவார்கள். இந்தப் புள்ளிவிவரங்களை எடுத்தால் நான் நிச்சயம் முன்னணியில் இருப்பேன். இருந்தாலும் தம்பி முருகன் சொன்னது போல காணாபத்யக்காரர்கள் எனக்கு லைக்கிட்டு மகிழ்வார்கள்.”

“அடடா.. இருவருமே கான்செப்ட்டை புரிந்துகொள்ளவில்லை. உங்கள் இருவருக்கும் யாருக்கு லைக் அதிகமாக உள்ளதோ அவரே வெற்றிபெற்றவர்.”

“ஒரு சந்தேகம்” என்றான் கணபதி.

“கேள் அப்பனே!” என்றார் நாரதர்.

“ஔவைக்கிழவியை நாந்தான் சேரமானுக்கும் சுந்தரருக்கும் முன்னால் யானையேற்றி கைலாயத்திற்கு அழைத்துவந்தேன். எனக்கும் முருகனுக்கும் ம்யூச்சுவல் ஃப்ரெண்ட் லிஸ்ட்டில் அவள் இருக்கிறாள். அவளது லைக் இட்டால் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுமா?”

“நல்ல கேள்வி. ம்யூச்சுவல் ஃப்ரெண்ட்டாக இருப்போர் இருபக்கச் சண்டைக்கும் தூபம் போடுவார்கள். அவர்களைப் பொருத்தமட்டில் காரசாரமாக நடந்தால் அன்றைக்குப் பொழுது நன்றாக போகும். ஆதலால் ம்யூச்சுவல் ஃப்ரெண்ட்ஸ் லைக்குகள் கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது”

“எனக்கும் ஒரு சந்தேகம்” என்று இடிமுழங்கும் குரலில் கேட்டான் அழகன் முருகன்.

“ம்... சூடு பிடிக்கிறது. கேளப்பா...” என்றார் நாரதர்.

”இன்றைக்குதான் ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்து புதிதாக நண்ப பக்தராயிருப்பர் சிலர். அவர்கள் இடும் லைக்குகள் கணக்கில் எடுத்துக்கொள்வீர்களா?”

“ம்... சரிதான். அவர்களுக்கு புதிதாய் சேர்ந்ததின் கவர்ச்சி இருக்கும். அதுவும் கிடையாதுதான்...”

“மீண்டும் எனக்கொரு சந்தேகம். “ என்று கை தூக்கினான் கணேசன்.

மூஞ்சுரு கடிக்காத தூரத்தில் நின்றுகொண்டு “என்னப்பா...” என்று வினவினார் நாரதர்.

“லைக்கை வைத்து ஒருவரின் ப்ரபல்யத்தை அறிய முடியாது என்பது என் கருத்து. எவ்வளவுக்கெவ்வளவு ஷேர் அதிகமாக இருக்கிறதோ..அவ்வளவுக்கவ்வளவு அவர்களது புகழ் இப்புவியெங்கும் பரவியிருக்கிறது என்று அர்த்தம்...”

“இதற்கு நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்...” என்று மறுத்தான் முருகன்.

“இன்றைக்கு கணேஷ் சதுர்த்தி. அண்ணனின் படங்களும் கதைகளும் நிறைய பகிரப்படும். சஷ்டியில் பார்த்தால் என்னுடையவை அதிகமாக ஷேர் செய்யப்பட்டு கம்ப்யூட்டர் திரைகளுக்கு தீபாராதனைக் காட்டுவார்கள். வீட்டிலேயே என் படம் பேக்கிரௌண்ட் இமேஜாக உள்ள லாப்டாப்பை கரகம் காவடி போல் எடுத்து ஆடியாடிக் கொண்டாடுவார்கள். இதெல்லாம் ஒத்துவராது.” என்று படபடத்தான் முருகன்.

”பிள்ளைகள் இரண்டும் அடித்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டது. மீண்டும் நீர் லேப்டாப் திறந்து படம் தேட ஆரம்பித்துவிட்டீர். குடும்பம் உருப்பட்டார் போலத்தான்.” என்று கழுத்தை ஒடித்து தோளை உயர்த்தி இடித்துக்கொண்டாள் பார்வதி.

“முருகன் சொல்வதும் சரியாகத்தான் இருக்கிறது. கிருஷ்ண ஜெயந்தி அன்று அந்த மாயவனுக்கு லைக்கும் ஷேரும் மலைபோல் குவிந்தது. ஆயுத பூஜையில் மிஸஸ் பிரம்மா அதிகமாகத் தென்படுவார். இப்போது என்ன செய்யலாம்?” என்று கையிலிருந்த எலெக்ட்ரிக் கிடாரை தரையில் வைத்துவிட்டு வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு சிவகணத்தின் தோளில் கையைப் போட்டுக்கொண்டு யோசிக்கலானார் மிஸ்டர். நாரதர்.

“நான் ஒரு யோசனை சொல்லட்டுமா? எதிரிகள் லைக்குகளை சேர்த்தால் யாருக்கும் அதிகமாக வருகிறதோ.. அவர்களே ஜெயித்தார் என்று முடிவெடு...” என்று நாட்டாமை கணக்காக சொல்லிவிட்டு பார்வதியை பெருமையாகப் பார்த்தார் சிவன். இருகையாலும் வயிற்றில் அடித்துக்கொண்டு பழிப்பு காண்பித்து திரும்பிக்கொண்டாள் பார்வதி.

“அட்டகாசமான யோசனை... நீங்களே ஐடியாஸ்வரன்...” என்று கிடாரில் ரெண்டு ஸ்ட்ரம்மிங் கொடுத்து பாராட்டினான் நாரதன்.

”ரொம்ப அழகாயிருக்கே.... கஜமுகாசுரன் கணபதிக்கு லைக் போடுவான். சூரபத்மன் முருகனுக்கு. இந்த ரெண்டு ஓட்டை வச்சுண்டு யார் பெரியவர்னு முடிவெடுத்துடுவேளா? சிவ..சிவா..” என்று தலையடித்துக்கொண்டாள் பார்வதி.

“ஆமாம். இதுவும் சரிதானே. ” என்று கிடார் வாசித்து பூரித்துப்போனான் நாரதன்.

“இது என்னடா கொடுமையா இருக்கே. ரெண்டு பேருக்கும் ஜால்ரா.. ச்சே...கிடார் போடறே...” என்று எக்கினார் சிவனார்.

”நான் இதுக்கொரு முடிவு சொல்றேன்.. கேட்டுக்கோங்கோ...”

சிவனார் புலித்தோலை ஒருதடவை அரையில் இறுக்கிக்கட்டிக்கொண்டார். நாரதர் முன்னால் வந்து நின்றார். முருகனும் கணபதியும் தோளில் கைபோட்டுக்கொண்டு தோழமையுடன் நின்றார்கள். பார்வதி அட்ரெஸ் பண்ணினாள்.

“ஃப்ரெண்ட் லிஸ்ட்டில் இருந்தாலும் இல்லாங்காட்டியும் நல்லதாக எது கண்ணில் பட்டாலும் லைக் போடுகிறவன் அன்பயாஸ்டு ஃபெல்லோ. அதுபோல தன் மூலமாக இதை பலருக்கும் சென்றடையட்டும் என்று ஷேர் செய்பவனும் அதே கேட்டகரியில் வருகிறான். விசேஷத்துக்கு விசேஷம் விழுந்து சேவிப்பவர்கள் எவராயினும் குறுகியகால புண்ணியத்திற்கு அடி போடுபவர்கள். அவர்களின் பூஜைகள்...லைக்குகளை லைட்டாக எடுத்துக்கொள்ளவேண்டும். நாட்டு நலனில் அக்கறை கொண்டு பகிரப்படும் ஸ்டேட்டஸ் எதுவாகிலும் முன்னுரிமை கொடுத்து லைக்க வேண்டும். வீட்டிற்காகவும் பதியப்படுபவைகளுக்கும் ஸ்பெஷல் லைக்கிங்ஸ் கொடுக்கலாம். கருத்துரைக்காமல் அறிவுசார் பதிவுகளை ரெண்டடி தள்ளி நின்று பார்த்து இடும் லைக்குகளை ஆயிரமாக எடுத்துக்கொளல் வேண்டும். மொக்கைப் பதிவுகளுக்கு தேடித்தேடி லைக்கிட்டு ஆதரவளிப்பவர்களுக்கு “காலை வணக்கம்” என்ற அவர்களது ஸ்டேட்டஸிற்கு லட்சோபலட்சம் லைக்குள் கொடுத்து உற்சாகமூட்டவேண்டும்...”

அம்மாவின் இந்த அறிவுரைகளைக் கேட்டு கணேசனும் முருகனும் நெளிந்தார்கள். சிவபெருமான் மீண்டும் லாப்டாப்பில் படம் தேடப் போய்விட்டார். (இப்பதிவுடன் அந்தப் படத்தை இணைத்துள்ளேன்.) நாரதன் கிடாரை துவம்சம் பண்ணி ஒலியெழுப்பி ஆரவாரித்தான். கடைசியில் கணேசனும் முருகனும் கோரஸாக பின்வருமாறு பேசினார்கள்.

“நாங்கள் இருவருமே சண்டை போட்டுக்கொள்ளவில்லை. இந்த லைக் அரசியலில் நாங்கள் உள்ளே நுழையமாட்டோம். அவரவர் கர்மவிதிப்படியே லைக்கும் ஷேரும் அனைவருக்கும் கிடைக்கிறது. எங்களை கும்பிடும் பக்தர்கள் அனைவரும் ஆர்.வி.எஸ்ஸின் இந்த போஸ்டிற்கு பெருவாரியான லைக்கும் மகத்தான எண்ணிக்கையில் ஷேரும் செய்து ஆதரவளித்தால் கைலாய ப்ரதர்ஸான எங்களின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும் என்று ஆசிகூறுகிறோம்” என்று சொல்லிவிட்டு அப்பாவின் இந்த ஃபோட்டோவைப் பார்க்கச் சென்றுவிட்டார்கள்.

நாரதர், சிவன், பார்வதி மூவரும் கையில் கிடைத்த கேட்ஜெட்டை எடுத்து http://www.facebook.com/mannairvs என்ற பக்கத்தைத் திறந்துபார்த்து கல்லை எடுத்துக்கொண்டு அடிக்க பூலோகத்திற்கு ஒடிவந்தார்கள்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails