Showing posts with label பொதுப் பரீட்சை. Show all posts
Showing posts with label பொதுப் பரீட்சை. Show all posts

Friday, August 19, 2016

ரிசல்ட்

”பதிலற்றவனுக்கு பகவானே துணை” என்கிற நொண்டிச் சாக்கோடு... தெய்வ நம்பிக்கையில்தான் வகுப்புதோறும் என்னைப் போல் தேறியவர்களை குறிப்பிட்டு எழுத ஆரம்பிக்கிறேன். பள்ளிக் காலங்களில் மார்க் எடுப்பதில் மட்டும் பிறத்தியாரைப் பார்த்து பொறாமைப்பட்டதே கிடையாது. பல்லுள்ளவன் புண்ணாக்கு திங்கிறான் கான்செப்ட். அக்கா இருக்கிறவன் ஐஃபோன் வெச்சுருக்கான் மொமெண்ட்.
”தம்பிக்கென்னடி... அவாள்ட்டேயிருந்து வெள்ளைத் தாளைப் புடுங்கி..... சடசடன்னு ஏதோ கிறுக்கி நீலமாக்கிட்டு.... மொதோ ஆளா ஆத்துக்கு வந்துடுவன்.... என்னத்த படிச்சான்... எப்போப் பார்த்தாலும் மட்டைதான்... பைத்தாரப்பய..” என்று என் மீது அசையாத நம்பிக்கை வைத்தவள் என் சாரதா பாட்டி. வாசலில் திண்ணைக் கச்சேரிகளில் கூடும் சமவயது கிழவிகளிடம் ”எங்காத்து தம்பிக்கு சோத்தைப் போட்டுட்டா போறும்... ரெண்டு கண்ணையும் அப்படி சொருகிண்டு வந்துடும்...சித்த நாழிலே அவா தாத்தா மாதிரி பெஞ்சுலேயே தலையைச் சாச்சு உக்காண்டே கொறட்டை வுடுவான்....” என்று என் மானத்தை மட்டுமல்லாமல் சீனிவாஸய்யர் மானத்தையும் சேர்த்து வாங்குவாள். பரீட்சை சமயங்களில் படித்து முடிக்கும்வரை இராச்சாப்பாடு கிடையாது.
அக்காலங்களில் மாலைமுரசு அச்சுக்கோர்ப்பவர் கைகளில் பல மாணவர்களின் உசுர் இருந்தது. மன்னை பஸ் ஸ்டாண்டில் செண்பகா தியேட்டர் மூத்திர சுவரோரம் மாலைமுரசு கட்டு புழுதி பறக்க வந்திறங்கும். “தொம்”. விழுந்து புரண்டு ஒரு பேப்பர் வாங்குவதற்கு கைலி அவிழ அரணாக்குடி அறுந்து விழ ஓடுவார்கள். ”தோல்வியா.. எங்களிடம் வாருங்கள்...” தோரணம் கட்டி வரும் டுடோரியல் காலேஜ் விளம்பரங்களுக்கு மத்தியில்தான் பொடி எழுத்தில் நம்பர் வரும். மூனும் எட்டும், ஏழும் ஒண்ணும் ஈஷிக்கொள்ளும். “அவன் நம்பரு வரலை.... வாங்கி வச்சுருந்த பாலிடாலைக் குடிச்சுட்டாண்டா மாப்ளே...” என்று இரவு தேரடியில் கூட்டுறவு பால் பண்ணை ஸ்டாலில் பருத்திப்பால் உறிஞ்சும் போது அங்கலாய்ப்பார்கள்.
நம்பர் பேப்பரில் வராமல், இரண்டு மூன்று நாட்களுக்கு அன்னம் தண்ணீரில்லாமல்... கன்னம் வீங்கி... கண்ணீர் வற்றுமளவிற்கு அழுதும், “தண்டச்சோறு.. மக்குப்ளாஸ்திரி..” போன்ற பெரும் பட்டங்கள் குடும்பத்தாரிடம் பெற்று, பள்ளியில் வழங்கும் மார்க்‌ஷீட்டில் எல்லாம் பாஸாகி எண்பது சதவிகிதம் எடுத்து “அழுத புள்ளை சிரிச்சதாம்... கழுதைப் பாலைக் குடிச்சுதாம்...” என்று ஊர் மெச்சும் வண்ணம் சிரித்த ”ஐயோ பாவம்” ப்ரகிருதிகளும் உண்டு.
இப்போதெல்லாம் இந்த அசௌகரியங்கள் இல்லை. இணையத்தில் நம்பரை இட்டு மதிப்பெண்களையே ஃப்ரெண்ட்ஸ் அண்ட் ரிலேடிவ்ஸ் க்ரூப்புக்கு வாட்ஸப் செய்துவிட்டு ஒரு காப்பி அச்சிட்டுக்கொள்ளுமளவிற்கு வளர்ந்துவிட்டோம். லட்சத்துக்கு ஐம்பதாயிரம் பேர் மேக்ஸ், சயின்ஸ், தமிழ், ஆங்கிலத்தில் நூத்துக்கு நூறு வாங்கி மின்னுகிறார்கள். விடைத்தாள் திருத்துபவர்கள் சாஸ்திரத்திற்கு ஒரு மார்க் ரெண்டு மார்க் குறைத்துப்போட்டு பரீட்சைகளின் மாண்பு காக்கிறார்கள்.
அட்லீஸ்ட் ஐயாயிரம் பேராவது 500/500 வாங்கும் நாட்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும்.... நானூறு வாங்கினாலே ”ஜீனியஸ்டா” காலத்தில் பத்தாவது எழுதிய பரதேசி!
நல்ல மார்க் எடுத்த நல்முத்துகள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!!

Friday, March 18, 2016

புதுசாய் எழுதும் பொது பரீட்சை

அன்று பிள்ளையார் கோவிலில் கூட்டம் அம்மும். மன்னையில் ஒத்தைத் தெரு ஆனந்த விநாயகருக்குக் குட்டிக் கொண்டு நெற்றியில் விபூதி மணக்க அட்டையோடு பரீட்சை ஹாலுக்குள் நுழைவோம். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தினம் கூட ஆதிகால TNSC பாங்க் விளம்பர ”கவலையின்றி சுற்றித் திரியும்” சிட்டுக்குருவி போல வாழ்ந்த ”நாளை மற்றொருமொரு நாளே..” யதார்த்த ஜி.நாகராஜன்கள் நாங்கள். வினயாவுக்கு இன்று பத்தாம் வகுப்புப் பொதுப்பரீட்சைகள் ஆரம்பம். பள்ளிக்கூட பரீட்சை அறை வாசல் காட்சிகள் என்னை டரியலாக்கிவிட்டது.
நாடு காக்கப் போருக்குப் போகும் மகனுக்கு நறுநெய் தடவி கையில் வேல் கொடுத்து அனுப்புவது போல நெற்றியில் முத்தமிட்டு “ஆல் தெ பெஸ்ட்” சொன்ன அம்மாவுக்கு கண்களில் கனவுக் குளம் தேங்கி நிற்கிறது. தகப்பனுடன் வந்த பெண் குழந்தைகள் தேவலாம். சட்டென்று “பை ப்பா..” சொல்லி சிட்டாய் நகர்ந்துவிட்டார்கள்.
ஒரு அம்மாள் தன் பெண் பள்ளி வாசலில் நுழையும் போதே தன்னை விட்டு புக்ககம் போகும் பெண்ணைப் போல கண்ணீர் சிந்துகிறார். சில அப்பாக்கள் கட்டை விரல் ஒடிந்து ஏகலைவனாகி விடுவார்களோ என்றஞ்சும்படி காற்றை தம்ப்ஸ் அப்பால் கிழித்துக் காண்பித்து பரீட்சைக்கு அனுப்புகிறார்கள்.
“பயப்படாம எழுது. எல்லா எக்ஸாம் போலத்தான். ஆல் தெ பெஸ்ட்” என்றேன். சிரித்துக்கொண்டே உள்ளே ஓடிவிட்டாள். சிறிதுநேரம் விதம்விதமான அப்பாம்மாக்களை வேடிக்கை பார்த்தேன். திரும்பிவிட்டேன்.
பத்தோ, பன்னிரெண்டோ, கல்லூரியோ சுழி முக்கியம். அதைவிட உன்னதமான உழைப்பும் முயற்சியும் அவசியம்.

ஆத்தா நா அவுட்ஸ்டாண்டிங் ஆயிட்டேன்!!

பத்தாவது பரீக்ஷைக்கு எப்படி படித்தேன் என்பது ஈஸ்வரனுக்கே வெளிச்சம். ”வியாக்யானேசா.. ஆண்ட புள்ளையாரே... ஈஸ்வரா.. விஸ்வநாதா.. விசாலாக்ஷி.. கோபாலா... கோபாலா... சுப்ரம்மண்யோம்.. சுப்ரம்மண்யோம்....” என்று நித்திரைக்குப் போகு முன் படுக்கையில் உட்கார்ந்துகொண்டு பாட்டி மனமுருகிக் கும்பிட்ட தெய்வங்கள் உண்டென்று நிரூபித்த விஷயம். நுனிக்கிளையில் உட்கார்ந்து அடிக்கிளை வெட்டும் அளவிற்கு அடிமுட்டாளில்லை. அசிரத்தை. விளையாட்டுப் பிள்ளை. “இதான் எனக்குத் தெரியுமே”ங்கிற ஒரு அசால்ட்டு பக்கிரியான தங்கவேலுத்தனம். பன்னிரெண்டு மற்றும் பியெஸ்ஸியில் சுதாரித்துக்கொண்டு எம்சிஏவை ரேங்க்கில் முடித்தேன்.

எவ்ளோ படிச்சாலும் வினயாவுக்கு அடிமனசில் ரவையளவு பயம் பகடையாய் உருள்கிறது. ஆனால் கால்பந்து கணக்கா கண் காட்டுகிறது.
“அப்பா.. ஹயக்ரீவர் கோயிலுக்குப் போயிட்டு வருவமா?”ன்னு பயபக்தியா கேட்டுச்சு. போனோம். கோயில் வாசலில் மாட்டு வண்டியில் பிரபுபாதா சிலையும் அவருக்குப் பின்னே கிருஷ்ணரும் வர “ஹரே ராமா.. ஹரே கிருஷ்ணா..” என்று பித்துக்குளி முருகதாஸ் குரலில் பாடிக்கொண்டே வந்தார்கள். குடுமி வைத்து ஜோல்னா பையோடு பிரபுபாதாவின் ஐந்தாறு “கிருஷ்ணா”வைக் கைகளில் அடுக்கி விற்றுக்கொண்டிருந்தார்கள். மாட்டுவண்டியின் முன்னே ஒரு கூட்டம் நவீன சகதேவர்களாக எண்ணிக்கொண்டு செல்ஃபோனில் கிருஷ்ணனைப் படம் பிடித்து கட்டிப் போட எத்தனித்துக்கொண்டிருந்தார்கள். சகதேவன் கிருஷ்ணனைக் கட்டிப்போடும் மகாபாரம் உத்யோக பர்வாவில் வரும் சீன் ஞாபகம் வந்தது. மானசீகமாக பரமாத்மாவின் மூலத்திருவடிகளைக் கட்டி வெற்றி கண்டவன் சகதேவன். கிருஷ்ணன் அவனது பக்தியில் அடங்கிப்போனான்.
ஹயக்ரீவர் கோயிலுக்குள் நுழைந்தவுடன் துளசி வாசம் நாசியில் ஏறியது. எங்கு துளசி வாசம் வந்தாலும் எனக்கு மன்னை ராஜகோபால ஸ்வாமி சன்னிதிதான் ஞாபகம் வரும். மாடு மேய்க்கும் திருக்கோலத்தில் சிரிப்பான் அந்தக் கண்ணன்.
பரீக்ஷைக்குப் படிக்க என்று எனக்கொரு பாணி வைத்திருந்தேன். ஜ்யேஷ்ட குமாரத்தி வினயாவுக்குச் சொன்னதைச் சின்னதா இங்கே லிஸ்ட் பண்றேன்.
1. பொதுப் பரிட்சை என்பது , “பொஸ்தகத்தையே சேப்பா கறுப்பான்னு பார்க்கமாட்டான்... வெள்ளைப் பேப்பரை நீலப் பேப்பர் ஆக்கிட்டு வந்துவடன் எங்காத்து தம்பி...” என்று என் சாரதாப் பாட்டி தேர்வுகளை வண்ணமயமாக சகஜப்படுத்துவது போன்றது. பயப்பட அவஸ்யமில்லை. இதுதான் நன்றாகப் பரீட்சை எழுதுவதற்கான முதல் படி. பயம் தவிர்.
2. இந்தியக் கல்வி முறைப்படியும் தேர்வுகளின் நிலவரங்களையும் கருத்தில் கொண்டு நம்முடைய அக்கா அண்ணாக்கள் எழுதிய தேர்வு கேள்வித் தாள்களை வாங்கி அசுர சாதகம் செய்யவேண்டும். பயிற்சி செய்.
3. புதுமாதிரியான கணக்குகள், அறிவியல் கேள்விகள் எங்கும் தென்படின் அதை மட்டும் தெரிந்து கொள்ளாமல் அதற்கு தொடர்புடையவைகளையும் ஆர்வமாகப் புத்தியில் ஏற்றிக்கொள்ள வேண்டும். வகையாறக்களை அறிந்துகொள்.
4. ”டீ... நான் நேத்திக்கே கெமிஸ்ட்ரி முடிச்சுட்டேன்.. இன்னிக்கி ரெண்டு தடவை ரிவிஷன் விட்டேன்...கெமிக்கல் ஃபார்முலால்லாம் இப்போ அத்துப்படி” என்று உங்களிடம் உதார் விடும் நண்(ப)பிகளின் பேச்சை நம்பி மெர்சலாகாதே. ஒருத்தருக்கு ரெண்டு தடவை ரிவிஷன் தேவைப்படும்.. நாம பசுமரத்தாணியாக இருக்கலாம். பச்சைக்கற்பூரமாகவும் இருக்கலாம். பிறத்தியார் பிரிப்பரேஷன் நம்மை பிளக்கக்கூடாது. முக்கியமான பாயிண்ட். நம் படிப்பே நமக்குதவி.
5. எந்தப் பாடத்திலும் முக்கியமான பாயிண்டுகளை தனியே மளிகைக் கடை, கையடக்க, ரோக்கா சீட்டு போன்ற ஒன்றில் புல்லட்ஸ் போட்டு எழுதிக்கொள்ள வேண்டும். சாப்பிடும் போதும், வாசலில் பராக்குப் பார்த்து உட்கார்ந்துகொண்டிருக்கும் போதும் ச்சும்மா எடுத்து எடுத்து பார்த்துக்கொள்ளவும். பரீட்சை ஹாலில் அந்த ரோக்கா சீட்டு மனக்கண்ணில் தோன்றும். கண்ணால் படி.
6. இன்னின்னிக்கு இன்னென்ன பாடம் என்று கிரமமாகப் படிப்பது பலன் தரும். மூளை ஃப்ரெஷ்ஷாக இருக்கும் நேரங்களில் கஷ்டமான பாடங்களையும் கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருக்கும் சமயத்தில் இலகுவானவைகளும் படியுங்கள். அட்டவணை அவசியம்.
7. ”ஏய் இது எப்படின்னு கொஞ்சம் சொல்லேன்...” என்று புஸ்தகம் நீட்டுவோருக்கு ”எனக்கே படிக்க நேரமில்லை...” என்று முறுக்கிக்கொள்ளாமல் மனமுவந்து சொல்லிக் கொடுங்கள். ஒருமுறை சொல்லிக்கொடுப்பது பத்து முறை படிப்பதற்கு சமம். சொல்லிக்கொடுத்தல் படித்தலுக்கு சமம்.
8. சில கேள்விக்கு புஸ்தகத்தில் இருக்கும் சில ஜார்கன்களை அப்படியே எழுதவேண்டிவரும். ஆகையால் பார்க்காமல் ஒன்றிரண்டு முறை புது ஃபார்முலா போல எழுதிப் பழகுதல் நலம். எழுதிப் படித்தால் எண்பது முறை படிப்பது போன்றது.
9. ஏ.ஆர்.ரஹ்மான் போன்று உங்களுக்கும் இரவில் படைப்பூக்கம் பொங்கி வந்தால் அணை போட வேண்டாம். இரவிலேயே படியுங்கள். பிரச்சனையில்லை. விடியற்காலையில்தான் தூங்கிவழிந்துதான் படிக்கவேண்டும் என்கிற கட்டாயமில்லை.
10. நூறுசதம் முயற்சி செய். கடினமாக உழை. என்றுமே நல்ல முயற்சிக்கு இறைவன் துணை வருவார். தினமும் ”ஹயக்ரீவம் உபாஸ்மஹே..” என்று ஹயக்ரீவர் ஸ்லோகம், ”சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே....” சரஸ்வதிக்கு ஐஸ் வைத்து தியானிக்கிறோம் என்று புஸ்தகம் பிரிக்காமல் பரீக்ஷைக்குப் போனால் கட்டை போட்டுவிடுவார்கள். தெய்வ பலம் உறுதுணை மட்டும்தான்.
எனக்குத் தெரிந்ததை எழுதினேன். பொதுப்பரீட்சை எழுதும் புண்ணியர்களுக்கு வாழ்த்துகள்!! ஆல் தி பெஸ்ட்!! 
smile emoticon

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails