Saturday, December 17, 2016

கணபதி முனி - பாகம் 48 : சக்தி மந்திரங்களும் ரிக் வேத ஆராய்ச்சியும்

...குடிசை பற்றிக்கொண்டு எரிய.... நாற்புறமும் தீ சூழ்ந்திருக்க.. கணபதி முனியின் உபன்யாசம் கேட்க வந்தவர்கள் பீதியோடு புகை நடுவில்..கலவரமாக இருந்தார்கள். ஆனால் மத்தியில் ரவையளவும் சலனமின்றி அமர்ந்திருந்தார் கணபதி முனி. “வனேம பூர்விரர்யோ மனீஷ அக்னி: சுஸோகோ விஸ்வானிஸ்யா” என்கிற ரிக் வேத அக்னி மந்திரத்தை ராகமாக சில முறைகள் பாடினார். 

அனைவரும் அதிசயிக்கும் வண்ணம் அப்போது திடீரென்று ஒரு சுழற் காற்று அடித்தது. கூரைமேல் பற்றிக்கொண்டு எரிந்த அந்த வைக்கோல் பிரிகளை அலேக்காகத் தூக்கி வெகுதூரத்திற்கு விசிறி எறிந்தது. ஒரு பெரும் விபத்து அங்கே தவிர்க்கப்பட்டது. கணபதி முனியின் மந்திர சக்தியைக் கண்டு அனைவருக்கும் வியப்பாக இருந்தது. இதுபோன்ற அற்புத பலனளிக்கும் சக்திமிகு மந்திரங்களை அவரிடம் கற்றுக்கொள்ள பலர் ப்ரியப்பட்டார்கள்.

வருஷம் 1930. நாயனாவின் தம்பி சிவராம சாஸ்திரி பிப்ரவரி ஆறாம் தேதி குலுவிக்கு வந்தார். நாயனா கடுகடுவென்று "யாத்திரையை முடித்துக் கொள்ள இங்கே வந்தாயா?" என்று கேட்டார். வீடு வாசல் துறந்து தன்னைப் போல தன் தம்பியும் இப்படி க்ஷேத்திராடனம் வந்தது பற்றி அவருக்கு கோபம் ஏற்பட்டிருக்கலாம். மறுநாள் நெஞ்சு வலி என்று மாரைப் பிடித்துக்கொண்டு சாய்ந்தவர் மேலோகம் சென்று விட்டார். தபஸ்வியான கணபதி முனி கேட்ட கேள்வியின் உள்ளர்த்தம் சுற்றி நின்றவர்களுக்கு அப்போது புரிந்தது. 

நாயனாவும் அவரது மகன் மஹாதேவனும் இன்னும் சிலரோடு காரில் சென்றுகொண்டிருந்தார்கள். ஒரு திடீர்த் திருப்பத்தில் கார் கட்டுப்பாடிழந்து பல்டி அடித்தது. மஹாதேவனைத் தவிர்த்து யாருக்கும் ஒன்றுமில்லை. மஹாதேவனுக்கு கை முறிந்தது. மருத்துவமனையில் சேர்க்கும்படி டாக்டர்கள் பரிந்துரைத்தார்கள். ஆனால் நாயனா ”அஸ்தி சந்தான மந்த்ரா”வை உச்சாடனம் செய்தார். அதன் பலன் உடனே தெரிந்தது. மருத்துவர்கள் அதிசயிக்கும்விதமாக குணமடைவதில் முன்னேற்றம் தெரிந்தது.

மஹாதேவனுக்கு இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தனியே வீடு திரும்புவதற்கு மனமில்லை. நாயனாவும் கலுவராயிக்குப் புறப்பட்டுச் சென்றார். இம்முறை நாயனா திருவண்ணாமலை சென்று தனது குரு ரமணரைச் சந்தித்தார். கணபதி முனியின் இடையறாத தபங்களைக் கேள்விப்பட்டு ஸ்ரீரமணர் அவரை ஆசீர்வதித்துப் பாராட்டினார்.

குலுவி திரும்பிய கணபதி முனி இடைவெளியில்லாமல் தவமியற்றினார். பக்தி சிரத்தையாக சீதாராமன் அவருக்குப் பணிவிடைகள் செய்தார்.  நாயனா கணபதியின் அவதாரம் என்றே வணங்கினார்.

**

1931 ஃபிப்ரவரி. தேவேந்திர சுப்ரமண்ய விஸ்வாமித்ரா என்பவர் நாயனாவையும் அவரது நண்பர்களில் கற்றுக் கரைகண்டோரையும் சிரிஸிக்கு அழைத்தார். அனைவருடனும் உரையாடி மகிழ வேண்டும் என்பது அவரது விருப்பம். ஸ்நேகிதர்களுள் வக்கீல் புண்டரீகராயரும் உண்டு. அவர் உலகம் சுற்றியவர். ரோமன் கத்தோலிக்கர்களின் குருமாரான போப்பைச் சந்தித்து உரையாடியவர். அவரது மகன் சுந்தர பண்டிட். அவரும் வக்கீல். அவரும் விஸ்வாமித்ராவும் பள்ளித் தோழர்கள். நாயனாவைப் பற்றி பல வருடங்களுக்கு முன்னரே அறிந்துகொண்டவர். நற்ண்புகளை உடையவர். அவரது தம்பி மாதவா பண்டிட்டும் இந்த கூட்டத்தில் உடனிருந்தார்.

புண்டரீகராயர் சிரிஸியின் புறநகர்ப் பகுதியில் ஒரு கட்டிடம் அமைத்திருந்தார். (ஆனந்த ஆஷ்ரமம்). தனது வயோதிகக் காலத்தில் அமைதியாகவும் பூஜை புனஸ்காரம் என்று அங்கு கழிக்க எண்ணினார். ஆனாலும் உடம்பு ஒத்துழைக்காத காரணத்தால் வீட்டிலேயே இருந்தார்.

"நீங்கள் ஆனந்த ஆஷ்ரமத்தில் தங்குவதாக இருந்தால் அதுதான் உண்மையான பேரனாந்தமாக இருக்கும்.." என்று நாயனாவிடம் வேண்டினார் ராயர். 

" நீங்கள் அங்கு தங்கினால் அது எங்கள் பாக்யம்" என்று விஸ்வாமித்ராவும் ராயரின் வேண்டுதலுக்கு வழிமொழிந்தார். 

சீதாராமா பட்தி கேட்டுக்கொள்ள அனைவரும் முயற்சியினாலும் நாயனா ஆனந்த ஆஷ்ரமத்தில் தங்கினார். பலருக்கு மந்திர உபதேசம் செய்தார். ஆஷ்ரமத்திற்கு விஜயம் செய்வோருக்கு ரமணரின் உபதேசங்களையும் நற்செய்திகளையும் எளிய முறையில் விளக்கினார். கணபதி முனியின் முன்னால் உட்கார்ந்து ஜபதபங்கள் செய்வதையும் தியானமியற்றுவதையும் பெரும்பேறாகக் கருதினர்.  ஆனந்த ஆஷ்ரம் கடவுள் வாழும் ஆஷ்ரமாக பொலிந்தது.

கண்பதிமுனியின் பெரும்பாலன நேரங்கள் தவத்தில் கழிந்தது. ஆனந்த ஆஷ்ரமவாசிகளுக்கு இது அதிசய பல அனுபங்களைத் தந்தது. "கபால பேதனா சித்தி" என்னும் சித்து வேலையால் தியானமியற்றும் போது உடம்பு மட்டும் தன்னிச்சையாக மிதப்பதைக் கண்டு வாய் பிளந்தனர். 

ராமச்சந்திர பட் ஆனந்த ஆஷ்ரமத்திற்கு அடிக்கடி வரும் பக்தர். சம்ஸ்க்ருதம் தெரியாது. இருந்தாலும் நாயனாவின் குரலை மட்டும் கேட்பதற்காக அனுதினமும் ஆஷ்ரமம் வந்தார். யாவரும் அதிசயத்தக்க வகையில் சில நாட்களில் அவர் சம்ஸ்க்ருதம் பேசி எழுத ஆரம்பித்துவிட்டார். 

இன்னும் சிறிது நாட்கள் கழித்து திருவண்ணாமலையிலிருந்து விஸ்வனாதன் வந்து கணபதிமுனியின் காலடியில் வந்து சேர்ந்தார். பகவான் ரமணரின் "உள்ளது நாற்பது" வின் சம்ஸ்க்ருத மொழிபெயர்ப்பை நாயனா திருத்துவதற்காகக் கொண்டு வந்தார். புதிதாக மொழிபெயர்க்க வேண்டும் நினைத்துக்கொண்டிருந்த போது புதுச்சேரியிலிருந்து கபாலியும் அவரது மனைவியும் ஆனந்த ஆஷ்ரமத்திற்கு வந்தனர். அடுத்தது மஹாதேவர். பின்னர் சீதாராம பட்தியின் பெண் நாகவேனியும் கணபதி முனிக்கு சேவை செய்வதில் சேர்ந்துகொண்டார். குலுவியிலிருந்து சீதாராமனும் அவரது மனைவியும் அடிக்கடி ஆஷ்ரமத்திற்கு வந்து சென்றனர். இந்த கோஷ்டி கணபதி முனிக்கு மிகவும் சந்தோஷம் அளித்தது.

பகவான் ஸ்ரீ ரமணரின் "உள்ளது நாற்பது" (இருத்தலின் நாற்பது) படைப்பை சம்ஸ்க்ருத ஸ்லோகங்களாக்கும் பணியில் இறங்கினார். அதன் சாராம்ஸத்தை விஸ்வனாதனுக்கும் கபாலிக்கும் அருளிச்செய்தார். மார்ச் பதினான்காம் தேதி மொழிபெயர்ப்பு பூர்த்தியாகி அதற்கு "சத் தர்ஸனம்" என்று பெயரிட்டார். மஹாதேவா அதன் தெலுங்கு மொழிபெயர்ப்போடு திருவண்ணாமலைக்கு திரும்பினார். 

மொழிபெயர்ப்புக்குப் பின்னர் நாயனா பல விஷயங்களில் தெளிவடைந்தார். உலகத்தில் உலவும் பல வேற்றுமைகளில் இருக்கும் ஒரே உண்மையை உணர்ந்தார். இத்தருணத்தில் பகவான் ஸ்ரீ ரமணரின் அருள் வேண்டி வாரம் ஒரு லிகிதம் அவருக்கு எழுதத் தலைப்பட்டார்.

ஜூன் மாதத்தில் கபாலி சத் தரிசனத்தின் சம்ஸ்க்ருத பொழிப்புரையை பூர்த்தி செய்தார். இதற்கிடையில் நாயனா "ப்ரசண்ட சண்டி திரிசதி" என்னும் முன்னூறு சம்ஸ்க்ருத ஸ்லோகங்களை ப்ரசன்ட சண்டியைப் போற்றி எழுதி முடித்திருந்தார்.

தேவவிரதனின் மகன் ஸோமாவின் உபனயனம் கோகர்ணத்தில் நடைபெறுவதாக அழைப்பு வந்து அங்கு சென்று ஆசீர்வாதம் செய்து விட்டு வந்தார். ஜூலை ஒன்றாம் தேதி சத் தர்ஸனத்தில் சம்ஸ்க்ருத பொழிப்புரையை விஸ்வனாதன் மற்றும் ரெங்கா ராவ் மூலமாக பகவான் ஸ்ரீ ரமணருக்கு சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் கபாலி ஸ்ரீ அரவிந்த ஆஷ்ரமத்திற்கு சென்றார். சீதாராம பட்தி சகர்சாரிபா என்ற அருவிக்கு நாயனாவை அழைத்துச்சென்றார். கணபதி முனி எப்போதும் தனது சிஷ்யர்கள் ஸ்வயமாக சிந்திக்க அனுமதித்தார். தன்னுடைய அன்பினாலும் அரவணைப்பினாலும் அவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படாமல் குருபீடத்தில் இருந்தார். இதனால் தவறு செய்யும் சிஷ்யர்கள் கூட தாமாகவே தங்களைத் திருத்திக்கொள்ளும் வாய்ப்பை அளித்தார்.


**

பகவான் ரமணருக்கு நாயனா எழுதிய கடிதங்களில் அவரது ஆன்மிக புரிதல்களின் பல நிலைகளை எடுத்துக்காட்டியது. ரமணர் அதை மிகவும் பத்திரமாகப் பாதுகாத்து பொக்கிஷமென மதித்தார். அனைத்துக் கடிதங்களும் சம்ஸ்க்ருதத்தில் எழுதப்பட்டவை.

1931ம் வருடம் சீதாராம பட்தியின் வேண்டுகோளுக்கு இணங்க குலுவிக்கு திரும்ப சம்மதித்தார். ரிக் வேதத்தை திரும்பவும் படித்து அதில் மஹாபாரதம் வரும் இடங்களை குறித்துக்கொள்ள விரும்பினார். 1933ல் மஹாபாரதத்தில் இடம்பெற்ற நாயகர்களின் வாழ்க்கைச் சரித்திரத்தை தொகுத்திருந்தார். அதற்கு "பாரத சரித்ர பரீக்ஷா" என்று பெயரிட்டார். அவரது சிஷ்யர்கள் அதை மஹாபாரத சங்ரஹா (அ) விமர்ஸா (அ) மீமாம்ஸா என்றழைத்தார்கள்.

இதில் மஹாபாரதத்தின் நாயகர்களை, கிருஷ்ணன் உட்பட, மந்திர உபாசகர்களாக, மந்திரங்களின் முனிவர்களாக ( மந்த்ர த்ருஷ்டா) உருவாக்கி, தவங்களின் மூலம் பலமடைந்து, நாட்டின் நலனுக்காக கௌரவர்களை எதிர்த்து போரிட்டதாக காட்சிப்படுத்தியிருந்தார். 

தொடரும்..

#கணபதி_முனி
#காவ்ய_கண்ட_கணபதி_முனி_48

Thursday, December 15, 2016

மன்னார்குடி டேஸ் - மனிதக் கரண்டி

சமையல்கட்டிலிருந்து கொல்லைக் கோடியில் இருக்கும் கிணற்றுக்கு போவதற்கு ஒரு ஒத்தையடிப்பாதை இருந்தது. அக்டோபர் நவம்பர் மழைக்கு சறுக்கியடிக்கும். வேனிற் கால கொளுத்தும் வெய்யிலில் கூட கால் சுடாது. கொல்லைகொரு கிணறு என்பது கிராமத்து வீடுகளின் ஆதி சம்பிரதாயம். ஒத்தையடிப் பாதையின் இரண்டு புறமும் அருகம்புல் கால் உரச மண்டியிருக்கும். "இன்னிக்கி சதுர்த்தி.. பூஜைக்குப் பறிச்சுண்டு வந்தேன்..." என்று பாட்டி மடியிலிருந்து கொத்து புல் எடுத்துப் போடுவாள். அதைத் தாண்டி பட்ரோஸ், வயலட்டும் ஆரஞ்சுமாக டிஸம்பர் பூச்செடிகள், செகப்பு செம்பருத்தி, நந்தியாவட்டை, எறும்பு ஊறும் செண்பகம் என்று இருமருங்கும் மலர்கள் மண்டிய வாசமிகு கொல்லை.

மழையில் சறுக்குகிறது என்று பின்னர் அந்த நடைபாதையை மட்டும்ரெண்டு கல் வைத்து சிமென்ட் வழித்துவிட்டோம். வெய்யிலுக்குச் சுட்டது, மழைக்கு சறுக்கவில்லை. ஆனால் கொல்லைக்குள் வந்தால் அமேசான் காட்டுக்குள் வந்தது போலிருக்கும். சித்திரை மாதத்தில் கூட சூரியனால் வேலை காட்ட முடியாத இடம். அணிலாடும் கிணற்றடி. குயிலோ அக்காக் குருவியோ அங்கிருந்து தெரியும் பாமணியாற்றுக்குக் குரல் கொடுத்து பேசிக்கொண்டிருக்கும் இடம்.
மரக்கிளையிடையில் சிந்தும் பௌர்ணமி இரவுகளில்.... வயதானவர்களுக்கு அபிராமி பட்டரும் அம்பாளும்.. ”மா.. தேவீ...” என்று கன்னத்தில் போட்டுக்கொள்ளும்படியாகவும் வயதோடு வாலிபமாய் இருப்பவர்களுக்கு கயித்துக் கட்டில் போட்டு நேத்து ராத்திரி யம்மாஆஆஆ..... என்றும் வயதுக்கேற்றவாறு பலப்பல கற்பனைகளைத் தூண்டுமிடம். மதியமோ மாலையோ சில சமயம் சாரையும் சர்ப்பமும் கட்டிப்புரண்டு விளையாடும். சாயந்திர வேளைகளில் இந்த "நல்லது" களைப் பார்த்துவிட்டால் " நீலா.. ஒரு அகல் வெளக்கு ஏத்துடீ" என்ற பாட்டியின் கட்டளைக்கு கொல்லைப்புற துளசிக்கருகே நல்லெண்ணெயில் பஞ்சு திரி போட்ட அகல் எரியும்.
கிணற்றுத் தண்ணீர் இறைத்துக் குளித்தபோது தோள் பட்டைகள் வலுவாகவும் இரண்டு மலைகளைக் கட்டி இழுத்து வரும்படி தேகாரோக்யம் இருந்தது என்றெல்லாம் பொய் சொல்லமாட்டேன். ஆனால், குளிப்பது என்பது ஒரு சுறுசுறுப்பான சமாச்சாரமாக இருந்தது. சுற்றிலும் செம்பருத்தி, நந்தியாவட்டை பூச்செடிகளும், கன்றோடு வாழையும், நெடிதுயர்ந்த தென்னையும் பக்கத்தில் ஒரு பெரிய நெல்லி மரமும் சூழ இருக்கும் கொல்லைப்புறக் கிணற்றில் குளிப்பது என்பது குற்றால அருவியில் குளிக்கும் பேரானந்தம்.
முதல் முறை தலையில் ஊற்றிக்கொள்ளும் போது ஒட்டு மொத்த தேகமும் உதறிச் சிலிர்க்கும். மயிர்க்கால்கள் நட்டுக்கும். அடுத்தடுத்த வாளிகள் சுகவாளிகள். இன்னும் இப்படியே லட்சம் வாளிகள் ஊற்றிக்கொண்டாலும் கை அசராது. கண்ணிரண்டும் சிவந்துவிடும். விரல் நுனிகளில் தோலூறி வரிவரியாகிவிடும்.
ஒரு சமயம் கேணித் தண்ணீர் கொஞ்சம் கடுத்தது என்று "தம்பி... வானரம் மாதிரி ஏறி உட்காண்டிருக்கியே.. அந்த நெல்லிக் கெளையை ஒடிச்சு கிணத்துக்குள்ளே போடேன்... ஜலமாவது ப்ரயோஜனப்படும்படி ஆகும்..." (கவனிக்க.... ஜலமாவது ப்ரயோஜனப்படும்படி ஆகும்...) என்று நெல்லிமரக் கிளையை ஒடித்துப் போடச் சொல்லி கிணற்று நீரை கல்கண்டு நீராக்கினாள் பாட்டி.
பாத்திரங்களை அலம்பி கிணற்றுக் கட்டையில் வைக்கும் போது சிலசமயங்களில் கயிறு தட்டியோ வாளி தட்டியோ கிணற்றுக்குள் விழுந்துவிடும். அதை எடுப்பதற்கு கீழிருந்து மேலாகக் கிளைக் கிளையாக இரும்பில் கொக்கிகள் அமைத்துச் சின்ன ராட்டினம் போலிருக்கும் "பாதாளக் கரண்டி" பயன்படும். "வாணா விழுந்துடுத்து... பாதாளக் கரண்டி போட்டு எடுடா... சித்த வா..." என்று கேரம்போர்டில் ரெட்டை உள்ளே தள்ளி ஃபாலோ முயற்சிக்கும் போது கூப்பிடுவாள். உடனே எழுந்து ஓடவேண்டும். இல்லையேல் அஷ்டோத்ரசதம்தான்.
கிணற்றுக் கயிற்றுலிருந்து வாளியைக் கழட்டிவிட்டு பாதாளக் கரண்டியைக் கட்டி கீழே இறக்க வேண்டும். சுருட்டிச் சுருட்டி வட்ட வட்டமாக ஆட்டிக்கொண்டே இருந்தால் உங்கள் அதிர்ஷ்டப்படி ஐந்து நிமிடத்திலேயோ ஐம்பது நிமிடத்திலேயோ பாத்திரம் பாதாளக் கரண்டிக்கு தட்டுப்படும். அந்த இடத்தில் உசரக்கத் தூக்கி ஒரு தடவை உள்ளே போட்டு.. இடதும் வலதுமாகச் சுழற்றினால் அந்த பாதாளக் கரண்டியின் ஒரு கிளைக்குள் விழுந்த பாத்திரம் சிக்கிக்கொள்ளும். மீன் பிடிக்கும் லாவகத்துடன் சடாரென்று தூக்கக்கூடாது. பாத்திரத்தின் மேனி வலிக்காமல் தூக்கவேண்டும்.
சில வீடுகளில் பாதாளக் கரண்டி இருக்காது. "பாட்டி.. எங்காத்து கிணத்துல சொம்பு விழுந்துடுத்து.. பாதாளக் கரண்டி வேணூம்" என்று தெருமக்கள் யாரவது வந்து கேட்டால் "உங்காத்துலேர்ந்து ஒரு பாத்ரத்தைக் கொண்டு வந்து ரேழி மூலேல வச்சுட்டு... பாதாளக் கரண்டி எடுத்துண்டு போ.. அப்பத்தான் அது ஆப்டும்..." என்று சொல்லிவிடுவாள்.
கொண்டு போனவர்கள் பாதாளக்கரண்டியை மறக்ககூடாதென்பதற்காக பாட்டியின் தந்திரம் அந்த பாத்திரம் அடகு வைக்கும் உத்தி. பாதாளக்கரண்டியை சுருக்கு சரியாகப் போடாமல் கிணற்றுக்குள் தவற விட்டு ஜேம்ஸை இறக்கி எடுத்துத் தந்திருக்கிறார்கள். கழுத்தில் சிலுவையாடும் ஜேம்ஸுக்கு அப்போது ஐம்பது வயதிருக்கும். ஆறடிக்கு ரெண்டு விரக்கடை கம்மியான உயரம். அவர்தான் மனித பாதாளக் கரண்டி. கைலியை அவிழ்த்துவிட்டு கௌபீணத்துடன் கிணற்றுக்குள் குதிப்பார்.
இரண்டு முங்கு இல்லையேல் அதிகபட்சமாக மூன்று முங்குகளில் கையில் பாத்திரத்துடன் கரையேறுவார். ஒரு வீட்டில் வெள்ளிக் கொலுசு ஒன்று விழுந்துவிட்டது. "கரண்டிக்கு ஆப்டாதுடா..." என்று பாட்டி சொல்லிவிட்டாள். ஜேம்ஸைக் கூப்பிட்டார்கள். ”போன மாசம் ராயர் ஆத்துல பஞ்சபாத்ரம் விழுந்துடுத்து.. ஒரே முங்குல உத்ரிணியோட எடுத்துண்டு... ஜிங்குன்னு கிணத்துலேர்ந்து மேல ஏறிட்டான்”. இது போன்று கியாதி பெற்ற மனிதக் கரண்டி அவன். மொபைல் இல்லாத காலம். "இன்னிக்கு வரேன்னிருக்கான்..." " நாளைக்கு வருவானாம்..." என்று ஒரு மாதம் ஓடியது.
ஒரு ஞாயிற்றுக்கிழமை நாலைந்து மாமிகள் பாட்டியிடம் வாசல் படி மாநாட்டில் பேசிக்கொண்டிருந்தார்கள். "ஊர்ல இருக்கிற கிணத்துத் தண்ணில முங்கி பாத்திரத்தல்லாம் எடுத்துக் கொடுத்தான். அவனுக்கு தண்ணிலயே சாவுன்னு எழுதியிருக்கே....". அடப்பாவமே... ஜேம்ஸ் குடிகாரனா? என்று நீங்கள் தேம்புவது தெரிகிறது. இவர்கள் டயலாக்கை முழுக்கக் கேட்போம்.
"ஆத்துல புதுத்தண்ணி தொறந்து விட்டாளோன்னோ... மேலப்பாலத்துக்கிட்டே கொழந்தை தவறி விழுந்துடுத்துன்னு யாரோ கதறியிருக்கா... இவன் அந்த வழியாப் போயிருக்கான்... தொபகடீர்னு குதிச்சு கொழந்தையைக் காப்பாத்தி கரையில கொண்டு வந்து அப்பாம்மாட்ட ஒப்படைச்சுட்டான். கொழந்தையை உச்சிமோந்த அம்மாக்காரி... அதோட காலைப் பார்த்துட்டு ஒரு கால்ல கொலுசக் காணுமேன்னுருக்கா... உடனே இவன் திரும்பவும் ஆத்துக்குள்ள குதிச்சுருக்கான்.. சட்ரஸ் பக்கத்துலே சுழி ரொம்ப ஜாஸ்தி.. புதுத் தண்ணி... காவு வாங்கும்னு சொல்லுவா.. ரெண்டு ஆழமான ஊத்துக் கெணறும் இருக்கோன்னோ... இவனைப் பிடிச்சு தலை குப்புற அழுத்திடுத்து... ஃபயர் சர்வீஸ்காரா வந்து.. கரையோட கரை தேடித் தேடி... நாலு மண் நேரத்துக்கப்புறம் கயித்தைக் கட்டி தூக்கியிருக்கா... பாவம்.. ஆயிரம் வாட்டி கிணத்துல குதிச்சு பாத்திரமெல்லாம் எடுத்துருப்பன்.. அதே கெணறு பிராணனை வாங்கிடுத்தே..."
பாழுங்கிணறு விழுங்கினால் அது அதன் சுபாவம்.பழகிய கிணற்றுக்கும் பழகாத கிணற்றுக்கும் வித்யாசம் உண்டோ?

காற்றுக்கென்ன வேலி?!

வார்தாவின் சண்டமாருதம் சென்னையை மொட்டையடித்திருக்கிறது. கண் நிறைக்கும் பச்சையாய் இருக்கும் பாண்டி பஜார், ஆழ்வார்ப்பேட்டை, மந்தைவெளி, நங்கைநல்லூர் பேட்டைகளையும் இந்த சூறாவளி துவம்சம் செய்துவிட்டது. சைக்கிள் கேப் சந்துபொந்துகள் கூட போர்க்களம் போல காட்சியளிக்கிறது. மன்னையில் மின்னல் இடிக்குப் பயந்து நடுநடுங்கி பாட்டியிடம் ஒதுங்கினால் "அர்ஜுனா.. அர்ஜூனா சொல்லுடா... இடிக்காது... போய்டும்.." என்று ஆறுதல் சொன்னவள் புயலோடு ஆளைத் தூக்கும் சூறைக்காற்றடித்தால் யாரைக் கூப்பிடவேண்டும் என்று கற்றுக்கொடுத்திருக்கலாம்.
காலை பத்தரை மணி வாக்கில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மிகச்சரியான நடவடிக்கை. காற்றடித்து மரம் மின்கம்பங்களில் சாய்ந்து, கால் வைத்து கணிசமான பேர் பரலோகம் போயிருப்பார்கள். பதினொன்றரைக்கு திடுமென ஒரு காரிருள் சூழ்ந்தது. நடுப்பகல் பன்னிரெண்டு தாண்டும் போது ஊழிக் காலம் போல "ஊ..ஊ..ஊ..ஊ.." என்ற பெரும் சத்தத்தோடு காற்றோடு மழை கைகோர்த்துக் கொண்டு "வா... சென்னையை மொட்டயடிக்கலாம்.." என்று தீவிரவாதத்தனம் காட்டியது.
வாசலில் சேப்பாயிக்கு ஷெட்டாகப் போட்டிருந்த ஷீட் "ட்ர்ர்ர்ட்....ட்ர்ர்ர்ர்ர்ட்...ட்ர்ர்ர்ர்ட்...ட்ர்ர்ர்ர்ர்ட்" என்று ராகமாகக் கீதமிசைக்க பால்கனி ஓர தென்னைமரம் சுவற்றில் "தொம்.. தொம்.." என்று முட்டித் தாளமிசைத்து டிசம்பர் சீஸன் கச்சேரி செய்துகொண்டிருந்தன. வாழ்க்கைப் புயலில் அனாதையாய்ச் சிக்கிய காகம் ஒன்று காற்றோடு சுழன்று கூடு தேடியது பாவமாக இருந்தது. நாணல் போல இருந்தால் பிழைத்துக்கொள்ளலாம் என்ற வாழ்க்கை பாடத்தை நேரடியாகக் காண முடிந்தது. அறுபது டிகிரி வரை காற்றின் போக்கில் சாய்ந்து தலைவிரி கோலமாக அழுத தென்னைமரமெல்லாம் இறுதியில் பிழைத்துக்கொண்டது. ஆனால் நெஞ்சு நிமிர்த்தி வீரம் காட்டிய மாமரங்கள் தலை சாய்ந்துவிட்டது.
வாசலில் காலெடுத்து வைக்க முடியாதபடிக்கு காற்று. மடிக்கணினியில் சொச்சமிருந்த மின்சக்தியில் செய்திச் சேனல் எதுவும் சிக்குகிறதா என்று இணையத்தில் உலாவினேன். சன் ந்யூஸ் லைவ் கிடைத்தது. மழை புயல் பாராமல் டிஆர்பி ஏற்றுவதற்கு நாலைந்து செய்தியாளர்கள் ரெயின்கோட்டும் மைக்குமாய்ப் பாடுபட்டுக்கொண்டிருந்தனர். "இதற்கு முன் இதை விடப் பெரிய புயல் பார்த்திருக்கிறீர்களா?" என்று காசிமேடு, எம்.ஆர்.சி நகர் பீச்சோர இளம் வலைஞர்களிடம் நேர்காணல் நடத்தினார்கள். சேனலின் காலடியில் போடப்படும் பளிச் செய்திகளில் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் உத்தரவுகள் பிரதானமாக வெளியிடப்பட்டன.
வார்தா என்றால் சிவப்பு ரோஜாவாம். பாகிஸ்தான் காதலுடன் இந்தப் புயலுக்குக் கொடுத்த பெயர் இது. எல்லா அமைச்சர் பெருமக்களும் முழு வீச்சில் சென்னையின் இயல்புவாழ்க்கையை மீட்டெடுப்பதில் பங்குகொண்டிருப்பது மகிழ்ச்சியான செய்தி. மாலைக்குள் மின்சாரம் மீண்டு விடும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்திருக்கிறார். சிஎம் ஓபிஎஸ்ஸின் பிரத்யேக ஈடுபாடு தெம்பூட்டுகிறது. மீண்டு விடுவோம் என்ற நம்பிக்கை பிறக்கிறது.
கார்த்திகை தீபம் ஏற்றி பொரி உருண்டையோடு வெண்பொங்கலும் தொட்டுக்க கத்ரிக்காய் கொத்ஸுவும் சாப்பிட்டாயிற்று.
ஆகாயத்தில் ஜிலுஜிலுவென்று முழு நிலா உதித்திருக்கிறது. பூர்ண சந்திரன் மனம் குளிர்விக்கும் எல்லையில்லா ஒரு அமைதியைத் தருகிறான்.
ஓம் சாந்தி ஓம்!

நாகரிகமான காக்கை ஜாதி!

முதலிலேயே தெண்டனிட்டுவிடுகிறேன்... பாரதியின் பெருமைகளை கவிநயமாக எழுதுமளவுக்கு எனக்கு வித்வத் பத்தாமலிருக்கலாம். எனது மொழி பாண்டித்தியம் அவ்வளவு சோபனமாயிருக்குமா என்பது சந்தேகமே. இருந்தாலும் கவிராஜனுக்கு ஒரு வ்யாசம் எழுதலாம் என்று எனக்கு அருளப்பட்டிருக்கும் லவலேசம் தமிழில் எழுத விருப்பம். தலைகாணி தலைகாணியாக “கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் - சீனி. விசுவநாதன்” புத்தக அலமாரியிலிருந்து முண்டாசோடு எட்டிப் பார்த்தது. பாரதியின் புத்தகங்களைக் கையிலெடுத்து வருடிக் கொடுத்து பாரதியின் அண்மையில் ஆத்ம திருப்தியடைந்தேன்.

தொட்டால் சுடும் வார்த்தைகள் அடங்கிய பாரதியின் தீப்பொறி பறக்கும் உணர்ச்சிகரப் புரட்சிப் படைப்புகளை காட்டிலும், ஆளை மயக்கும் அவரது காதல் ததும்பும் “வீணையடி நீயனக்கு மேவும் விரல் நானுக்கு... ”, “நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடி...” வகையறா கண்ணம்மா பாடல்களும் ஹாஸ்யம் புரளும் சில பயணக் கட்டுரைகளும் ரொம்பவும் பிடிக்கும்.
”என் ஈரோடு யாத்திரை” என்று சக்திதாஸன் என்கிற பெயரில் பாரதி எழுதிய கட்டுரையில் இரண்டு பாராக்களை கீழே தருகிறேன். சிரிச்சு மாளலை.
//
கட்டை வண்டி ஒன்று கிடைத்தது. கட்டை வண்டியில் ஒரு மனிதன் நிமிர்ந்து உட்கார இடமில்லை. ஒன்றரை அடி நீளம். மாடு ஒரு சிறு பூனைக்குட்டி போன்று இருந்தது. நான் ஒன்று; வண்டிக்குடையவன் இரண்டு; அவனுக்குக் கீழே கூலிக்கு வண்டி ஓட்டும் சிறுவன் ஒருவன்; எங்கள் மூவரையும் மூன்று பர்வதங்களாக நினைத்து அந்த மாட்டுப் பூனை இழுத்துக்கொண்டு போயிற்று.
அரைமைல் தூரத்தில் உள்ள கருங்கல்பாளையத்தில் எனக்கு வேலை. அங்கு ஒரு சிநேகிதருடைய அழைப்பிற்கிணங்கிச் சென்றிருந்தேன்.

கருங்கல்பாளையத்துக்குப் போய்ச் சேரு முன்னே மாடு வெயர்த்துப் போய்விட்டது. அதன் மேலே குற்றஞ் சொல்வதில் பயனில்லை. அது சிறு ஜந்து. அதன் மேலே நாங்கள் மூன்று தடி மனிதரும் ஒரு கழுத்தளவுக்குச் செய்யப்பட்ட விதானத்தை உடைய வண்டியும் சவாரி பண்ணுகிறோம்
//
இதில் மாட்டுப் பூனை என்கிற ப்ரயோகமும் போய்ச் சேரு முன்னே மாடு வெயர்த்துப் போய்விட்டதும் எப்போது படித்தாலும் சிரிப்பூட்டுபவை.

பாபநாசம் என்கிற பயணக் கட்டுரையை அப்படியே இங்கே கொடுத்துவிடலாம். கட்டுரையின் தொடக்கத்திலேயே “கிழக்கே என் கண்ணெதிரே ஸுர்யன் உதயமாய் ஒரு பனையளவு வான் மீதேறி ஒளிர்கிறான். நான் ஒரு பாறை மேல் உட்கார்ந்திருக்கிறேன். என் காலின் கீழே மாதாவாகிய தாம்ரபர்ணி ஓடுகிறாள்” என்று எழுதி நம்மை அழைத்து பக்கத்தில் உட்கார்த்திவிடுகிறார்.
ஸூர்யோதயத்தில் சலசலக்கும் தாம்ரபர்ணியின் ஓசையில் தாம்ரபர்ணியை சங்கீதக்காரியாக்கிவிடுகிறார். எத்தனை யுகங்களாக இந்தத் தாம்ரபர்ணி இங்கே ஓயாமல் தீராமல் ஒரே ராகமான பாட்டு பாடிக்கொண்டிருக்கிறாளோ!! என்று அதிசயத்து “நாத ப்ரஹ்மம்” ஆகிய ஒலிக்கடவுளை உபாஸனை செய்ய விரும்புபவன் பாபநாசத்தில் வந்து வாழக் கடவது என்று சிபாரிசு செய்கிறார்.
மந்திரமொன்றை உச்சரித்து யோகஸித்தி பெற விரும்புபவர்கள் இந்த தாம்ரபர்ணி ஆற்றங்கரையில் உட்கார்ந்து அந்த சலசலப்பை ஸ்ருதிப் பெட்டியாக பாவித்து “ஓம் சக்தி.. ஓம் சக்தி.. ஓம் சக்தி...ஓம் சக்தி” என்று ஜபிக்கலாமாம். யப்பா!! என்னவொரு சிந்தனை!!!
அந்த ஆற்றில் குளிக்க இறங்கும் போது மீன்களைப் பார்க்கிறார். பாபநாசத்தில் மீன் பிடிக்கக்கூடாதென்ற சம்ப்ரதாயம் இருக்கிறதாம். இதை மீறி ஒரு ஆங்கிலேயன் மீன் பிடித்து கண்களை இழந்த கட்டுக்கதை இருக்கிறது என்று எழுத்தால் சிரிக்கிறார். ஆகையால் மனிதர்களிடம் பயமில்லாமல் மீன்கள் பழகுகின்றனவாம். அந்த மீன்களின் கண்களை கீழ்க்கண்ட விதம் வர்ணிக்கிறார்.
இலேசான தங்கக் கம்பியினால் ஒரு சிறு வளையம் பண்ணி அதனிடையே நீல ரத்நம் பதித்தது போல இவற்றின் கண்கள் மிளிர்கின்றன.
மேலும் அவை நாம் போடும் சோறுண்ண மேலே வரும் போது....
நீரோட்டத்தை எதிர்த்து இந்த மீன்கள் அணி யணியாக வந்து நிற்பதைப் பார்க்கும் போது, எதிரிகளின் குண்டுகளைக் கருதாமல் அணிவகுத்து நிற்கும் காலாட்படைகளைப் போன்ற தோற்ற முண்டாகிறது.
மீன்களின் தரிசனம் ஆயிற்றா? அடுத்தது அங்கு பிரசித்தியாகத் திரியும் குரங்குகளைப் பற்றிய வர்ணனை...
பாபநாசத்து மீன்களைப் போலவே அவ்விடத்துக் குரங்குகளுக்கும் கீர்த்தியுடையன என்று ஆரம்பித்து ஒரு குட்டிக் கதை போல சொல்கிறார். அங்கு வசிக்கும் குரங்குகள் யாத்திரைக்கு வரும் மனிதர்களோடு பழகி தாமும் இயன்றவரை மனித நாகரிகத்துடன் ஒத்த நடைகள் பெற்றிருக்கின்றனவாம். மனிதர்களின் கைகளிடமிருந்து தின்பண்டங்களை மிகவும் பயபக்தியுடனும் விநயத்துடனும் வான்கித் தின்கின்றன.
இப்படி எழுதிவிட்டு ஒரு பகடி செய்கிறார். அதாவது இவ்வளவு விநயத்துடன் இருப்பதால் கள்வு கொள்ளைகள் நடத்துவது கிடையாது என்று எண்ணி விடவேண்டாமாம். அந்தச் செயல்கள் முறைப்படியே நடைபெற்று வருகின்றனவாம். அதாவது குரங்குகளின் மனித நாகரிகம்!!!! மனிதன் குரங்குகளுக்குக் கூட கற்றுக்கொடுக்கும் நாகரிகம். :-)
இரண்டனாவுக்குப் பொரி கடலை வாங்கி அவைகளுக்குப் போடுகிறார். அதில் “தாட்டையன்” என்கிற பெரிய முரடான ஆண் குரங்கு மட்டும் வாங்கித் தின்கிறது. பெண் குரங்குகளுக்கு “மந்தி” என்று பெயராம். தாட்டையன் பின்னால் ஒரு சைனியமாக நிற்கும் குரங்குள் எதுவுமே தின்ன முன் வரவில்லை. தாட்டையன் மீதுள்ள பயம்.
இதைப் பார்த்தவுடன் தூரத்தில் இருக்கும் குரங்குகளுக்கு பொரி கடலையை வீசியிருக்கிறார் பாரதி. தாட்டையன் அதிகாரத்தில் இருக்கும் ஸந்நிதியில் கட்டுப்பட்டிருக்கும் குரங்குகளுக்கு பொரி அள்ளி வீசியதால் அந்த தாட்டையன் பாரதியாரை நோக்கிப் பற்களை விரித்துக் காட்டி பயமுறுத்தியதாம். அதைக் கண்டு கோபமுற்று மீண்டும் மீண்டும் பொரி கடலைகளை பின்னால் நிற்கும் குரங்குகளுக்கே அள்ளி வீசினாராம் பாரதி.
வெறுப்புற்ற தாட்டையன் பாரதியின் முன்னால் வந்து முன்னைக் காட்டிலும் விகாரமாகப் பற்களைக் காட்டி கை ஓங்கியதாம். உடனே பாரதி அந்தத் தாட்டையன் முகத்தில் காறி யுமிழந்தாராம். அப்போது அங்கு வந்த பாப்பாரப் பெண்ணொருத்தி கீழ்வருமாறு சொன்னாளாம்.
“குரங்குகளுக்குள்ள வழக்கமே இப்படித்தான். யார் என்ன தீனி போட்டாலும் அதைப் பெண் குரங்குகளுக்குத் துளிக்கூட கொடுக்காமல் தாட்டையன்களே தின்னுகின்றன. அதிலும் சின்னத் தாட்டையன்களைப் பெரிய தாட்டையன் பக்கத்தில் அணுக விடுவதில்லை. ஒரு குர்ங்கு தின்பதைக் கண்டால் மற்றொன்றுக்குப் பொறாமை! மனுஷ்யர்களைப் போலேதான் இக் குரங்குகளும்!!”
உடனே பக்கத்திலிருந்தவர்கள் கல்லெடுத்து தாட்டையன் மேலே வீசினார்கள்.”சீச்சி.. ஏழைப் ப்ராணன்! அஹங்காரத்தை அதனிடம் மாத்திரம்தானா கண்டோம்” என்று பாரதி தடுக்கும் முன் உயிர்பிழைக்க ஓடிவிட்டதாம். பின்னர் பிற குரங்குகளுக்கு தானியம் போடும் போது நடந்த பொறாமைக் கதைகளை எழுதினால் இந்த வ்யாசம் மிதமிஞ்சிய நீட்சி பெறும் என்று முடிக்கும் போது திரும்பவும் அந்த பிராம்மணப் பெண் சொன்னதை இவ்விதம் எழுதுகிறார்.
“ஆனாலும் சோற்று விஷயத்தில் மனுஷ்யர்களும் இந்த குரங்குகளும் ஒன்றுக்கொன்று பொறாமைப்பட்டும், அடிமைப் படுத்தியும் செய்யும் அநியாயங்கள் வேறெந்த ஜாதியிலும் நான் பார்த்ததே கிடையாது. காக்கை ஜாதியைப் பார், தங்கம் போலே! எல்லாக் காக்கையும் “அக்கா வா, தங்கை வா” என்று ஒன்றையொன்று கூவி ஒக்க விருந்துண்ணுகின்றன. குரங்கும் மனிதனும் சுத்த அநாகரிக ஜந்துக்கள்! காக்கை ஜாதி மிகவும் நாகரிகமானது”
***
நேற்று எங்கள் வீட்டுக் கொல்லையில் செத்த எலிக்காக இரண்டு காக்கைகளுக்கிடையே பழி சண்டை. பாரதி கால காக்கைகள் சௌஜன்யமாக வாழ்க்கை நடத்தியிருக்கின்றன. ஆனால் காக்காய் பிடித்தால் சௌக்கியமாக வாழலாம் என்று சமகால மனித ஜந்துக்கள் கற்றுத் தெளிந்திருக்கின்றன.

பத்திரிக்கை உலகின் சிம்மக்குரல்

"மாதங்களில் நான் டிஸம்பராக இருக்கிறேன்" என்று யமதர்மராஜன் சென்னை விஜயத்தில் இருக்கிறான். வெகுஜனம் பாசம் வைத்திருப்பவர்களாகப் பார்த்து திதிக்கு ஒருவராக பாசக்கயிற்றை வீசுகிறான். நசிகேதர்கள் யாராவது போய் அவனது வாயிற் கதவைத் தட்டி மீட்டு வந்தால் பரவாயில்லை.
மஹாபாரதம் படிக்க வேண்டும் என்கிற பேரார்வம் எழுந்தபோது வாங்கிய புத்தகம் சோ அவர்கள் எழுதிய ”மகாபாரதம் பேசுகிறது”. துக்ளக்கில் தொடராக வந்து அல்லயன்ஸ் பதிப்பித்தது. லட்சம் கிரந்தங்கள் அடங்கிய புத்தகம் வியாசரின் மகாபாரதம். இரண்டு புத்தகங்களில், மொத்தம் சுமார் ஆயிரத்தைநூறு பக்கங்களில் மூலம் கெடாமல் ஐந்தாவது வேதத்தை அனுபவிக்கக் கொடுத்தவர். மனசுக்குள்ளே அவருக்குக் குரு நமஸ்காரம் செய்துவிட்டு தினமும் விபூதி இட்டுக்கொண்டு பயபக்தியோடு படித்திருக்கிறேன்.
மயிலையில் அல்லயன்ஸ் பதிப்பதிகத்திற்குள் நுழைந்தாலே சோ வாசனை அடிக்கும். அவரது ஹிந்துமஹா சமுத்திரத்தினால் உபநிஷத்துகளின் பெருமை அறிந்தோம். கூவம் நதிக்கரையினிலேவும் முகம்மது பின் துக்ளக்கும் வாழ்வாங்கு வாழும் காவியம். ”எங்கே பிராமணன்?” அந்தணர்களின் அடையாளங்களை இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்திய படைப்பு.
அவரின் அரசியல் பகடிகளுக்குப் பஞ்சமேயில்லை. வாழ்நாள் முழுவதும் தனது கருத்துக்களை "சோ"வென மழையாகப் பொழிந்தவர். அவரது அட்டைப்பட கார்ட்டூன் அதில் இடம்பெற்றிருப்பவர்களையே சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது. கேள்வி பதிலால் ஆட்சியாளர்களையும் அரசியல்வாதிகளையும் திணறத் திணற பேசமுடியாமல் அடித்தவர்.
எந்த அரசியல் விஷயத்தையும் தைரியமாகவும் தனது கருத்துகளில் விடாப்பிடியான நம்பிக்கையும் வைத்து எழுதியவர். மாற்றுக் கருத்துச் சொல்பவர்கள் அசட்டுப்பிசட்டு என்று பேசினால் நொடி நேரத்தில் அவர்களது கூற்றை தவிடுபொடியாக்கியவர்.
மேலுலகத்திற்கு சென்ற ஜெயலலிதா சோ பேச்சை மட்டும்தான் கேட்பார் என்று இவரையும் அழைத்துக்கொண்டார்கள் என்கிற சமூக வலைத்தளங்களில் உலா வரும் Black humor வகையாறாவைக் கேட்கும் போது உதடுகள் மிமீ விரிந்தாலும் மனசுக்குள் வேதனை குடைகிறது.
நாடகம் சினிமா, அரசியல், வழக்கறிஞர், எழுத்து என்று பல்துறை வித்தகராகக் கோலோச்சிய சோ ராமசாமி அவர்களின் மறைவு தமிழ்நாட்டிற்கு பேரிழப்பாகும். இன்னுமொரு சோ இப்புவியில் பிறத்தல் அரிது என்கிற உண்மையால் எங்களுக்கு மூச்சு முட்டுகிறது. விழி சிவக்கக் கண்ணீர் சிந்தி காலன் கொண்டு சென்ற தென் திசை நோக்கி விழுந்து தொழுது வணங்குகிறோம் சார்!

மறைந்த முதல்வர்!


இன்று காலையிலிருந்து மாலை வரை சோகம் அப்பிக்கிடக்கும் தமிழகம் அமைதிப் பூங்காவாகவே இருக்கிறது. பெருந்தலைவர்களின் மரணமென்றால் ரௌடிகளின் கல்வீச்சும் பகுதிநேரக் கொள்ளையர்களின் கடை சூறையாடல்களும் வாடிக்கையாகிப்போன இக்கலியில் இறந்தும் தன் தொண்டர்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அதிசயம்தான். நாற்பத்தெட்டு மணிநேரங்களுக்கு மேலாக ஓய்வின்றித் தொடர்ந்து இயங்கும் காவலர்களுக்கு இத்தருணத்தில் மனமார நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறோம்.
”கொண்ட கொள்கையில் விடாமுயற்சியும் பிடிப்பும் உள்ளவர்” என்று எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் மிக அழகாகப் புகழாரம் சூட்டினார். வைரமுத்துவின் இரங்கல் செய்தியில் “திராவிட இயக்கத்தின் கிளை மீது” வரியில் ஒரு சின்ன உள்குத்து இருந்தாலும் அவரது புகழ்மாலை மணமாக இருக்கிறது. வாட்சப்பில் வந்த உடன்பிறப்பு ஒருவரின் கவிதையொன்றில் ”உன்னை ஆளக்கூடாது என்றுதானே சொன்னோம் வாழக்கூடாது என்று சொன்னோமா?” என்ற வரிகளைப் படிக்கையில் கண்களில் நீர்க்கசிந்தது. கட்சி மீறிய அவரது கம்பீரம் தெரிகிறது.
அவரை அரசியலில் சுயம்பு என்கிறார்கள். சுயம்புவானாலும் அரசியலில் ஆழமாகப் பணியாற்றிக் கரைகண்டார். மக்களுக்காக நான் மக்களுக்காவே நான் என்று அரசியலுக்கு வாழ்வை அர்பணித்தவர். வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுத வாழ்வின் விளிம்புநிலை மனிதர்களின் “அம்மா..அம்மா...” கதறல்களில் அவர்களின் கட்டுக்கடங்காத அன்பு வெளிப்படுகிறது. மீசையும் தாடியுமாக இருந்த ஆம்பிளைகள் கேவிக் கேவி அழுதபோது “என்ன ஒரு பாசப்பிணைப்பு!!” என்று வாய்பிளக்க வைத்தது. ராஜாஜி ஹாலைச் சூழ்ந்த மனிதவெள்ளத்தில் அம்மாவின் அன்பு அலை அடித்தது. மாநிலத்தையே உலுக்கிய ஒரு துக்கத்துக்கு வர்ணனையே தேவையில்லை. தத்துப்பித்துவென்று பேசுவதற்கு, கமெண்ட்டரி இல்லாத நேரலையே போதுமென்றாகிவிட்டது.
"Death of Tamil Nadu’s Leader Leaves Power Vacuum in Southern India" என்று ந்யூ யார்க் டைம்ஸ் எழுதுகிறது. தேசத்திலிருக்கும் பெருந்தலைவர்கள் அரசியல் மற்றும் கொள்கை பேதம் பார்க்காமல் அஞ்சலி செலுத்துகிறார்கள். அடாவடித்தனம் எதுவும் செய்யாமல் கடைகள் அடைக்கப்படுகின்றன. சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. மக்கள் தாமாகவே வீடுகளில் முடங்கி சானல்களின் ஒளிபரப்பில் இறுதிஊர்வலத்தில் கலந்துகொள்கிறார்கள். பெண்களின் உறுதிக்கும் தைரியத்திற்கும் செயல்வேகத்திற்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்தவரின் இழப்பு அந்த இனத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.
சந்தனப்பேழையில் வைத்து ஏதோ ஒரு சம்பிரதாயத்தில் சந்தனக் கட்டை போட்டு பாலூற்றி பத்து ரூபாய்த் தாள்கள் எறிந்து அடக்கம் செய்துவிட்டார்கள். எம்ஜியார் மறைவுக்குப் பின்னர் அதிமுகவை தன் கட்டுப்பாட்டில் காத்து வளர்த்த இந்த அம்மாவின் சாம்ராஜ்யத்தை இனி யார் ஆளப்போகிறார்கள்? எப்படி வளர்ப்பார்கள்? அதிமுகவின் எதிர்காலம் என்ன? இனி தமிழக அரசியல் காணப்போகும் மாற்றங்கள் மீடியாக்களுக்கு விருந்தாகும். மக்கள் நலனை முன்னிறுத்துபவர்கள் வாழ்வாங்கு வாழ்வார்கள்.
தமிழக அரசியல் சரித்திரத்தில் நீங்காத இடம் பிடித்த உங்களின் வாழ்வு ஒரு சகாப்தம். சென்று வாருங்கள்!!

பேய்ச்சுரைத் தோட்டம்

எம் பேரு கலை. கலைச்செல்வியா கலைச்செல்வனான்னு நீங்க பால் தெரிய துடிக்கிறீங்கன்னு தெரியும். ஆம்பிளை வாய்ஸ்ல மேலே படிங்க. கலைவாணன். இப்ப நீங்க பார்த்துக்கிட்டிருக்கீங்களே... மங்கலான வெளிச்சத்துல... பெரிய பெரிய ஸ்டூல்ல உட்கார்ந்து... கைல மதுக்கோப்பையோட... ஆம்பளையும்.. பொம்பளையுமா.. சமதர்ம சமுதாயமா இருக்கிற இந்த இடத்துக்கு போன மாசந்தான் வேலைக்குச் சேர்ந்தேன். இது சென்னையில ஃபேமஸான நட்சத்திர ஹோட்டல். கவர்ச்சியான சினிமா, கோட் போட்ட கார்ப்போரேட், வொயிட் அண்ட் வொயிட் அரசியல்ன்னு பெரும் புள்ளிங்க சகஜமா தள்ளாடற இடம்.

புகழுதான் இங்க வேலைக்குச் சேர்த்துவிட்ட்டான். ஆமா.. இதென்ன பெரிய கம்பேனியில ஜெனரல் மேனேஜர் வேலையான்னு நீங்க சிரிக்கிறீங்க.. ஆனா இந்த வேலைக்குக் கூட தரமான சிபாரிசு தேவைப்படுது. நீங்க நினைக்கிறது சரிதான். ஊரை விட்டு ஓடினேன்... ஜெயில்ல இருந்தேன்... களி தின்னேன்.. உடனே நா ஒரு கயவாளிப்பய.. உதவாக்கரை... ரௌடி... அப்டீஇப்டீன்னு நீங்க நினைச்சுரக் கூடாது.
ஒரு குட்டிக் கதை கேட்க ரெடியா இருக்கீங்களா? இதுவொன்னும் உவேசாவோட என் சரித்திரமோ... காந்திஜியோட சத்தியசோதனையோ இல்லைன்னாலும் எனக்கு மன்சு விட்டுச் சொல்லணும்னு தோணிச்சு. இந்தக் கதையினால சமூகத்துக்கு எதாவது மெசேஜ் உண்டான்னு ஆர்வமா இருப்பீங்க.. இப்படியும் ஒருத்தனோட வாழ்க்கை இருந்ததுன்னு பதிவு பண்றேன்.. அம்புட்டுதேன்.. பார் மூடுற வேளைதான்... அந்தக் கடைசி டேபிள் மேலாக்கு சரிஞ்ச நடிகைக்கு கார் ஏற்பாடு பண்ணியாச்சு... மாஜி கணவரோ இல்லை மாஜி டைரக்டரோ வந்து கூட்டிட்டுப்போவாங்க... அது கிடக்கு... நாம கதைக்கு போவோம்..
ஆடுதுறைக்குப் பக்கத்துல தான் நான் பொறந்து வளர்ந்ததெல்லாம். எண்ணி நாலே தெரு இருக்கிற ஒரு குக்கிராமம். மரம் காய்ச்சு செடி பூத்துக் கொடி குலுங்கிய குக்கிராமம்.. சின்ன வயசுலேயே பாடம் சொல்லிக்கொடுத்தா கப்புன்னு புடிச்சிப்பேனாம். "கற்பூர புத்தி..."ன்னு பொட்டிக் கடை பாக்கியம் ஆத்தா போயிலை வாய் கமகமக்கச் சொல்லும் ..
மரம் சூழ் ஆடுதுறை கவர்மென்ட்டு ஸ்கூல்ல படிச்சேன். பள்ளிக்கூடம் விட்டா நேரா வீட்டுக்கு வந்து பாடப்பொஸ்தகத்தையெல்லாம் தொறந்து வீட்டுப்பாடம் எழுதி முடிச்சுடுவேன். இருட்டின பிறகு அரிக்கேன் விளக்குல எனக்குப் படிக்க புடிக்காது. அப்பாவுக்கு வயல் வேலை தவிர எதுவும் தெரியாது. கவர்மென்ட்டு திட்டத்துல தினக்கூலியா பைசா நெறையாத் தரேன்னு கூப்பிட்டாலும்... "விவசாயம் செய்யறது புனிதமான தொழிலு காந்தி... மண் மாதாவை நாம உதாசீனம் பண்ணிரக்கூடாது...வயிறு ரொம்பாது அப்புறம்..."ன்னு அம்மாகிட்டே உருக்கமா நடிகர் திலகம் மாதிரி தியாக வசனம் பேசுவாரு. நடவு அறுப்புன்னா தெருவிளக்கு வச்சப்புறம்தான் சோர்ந்து போயி வீட்டுக்கு வருவாரு... "நல்லா வாசிக்கிறியா தம்பீ..."ன்னு அசதியில பரிவோட கேட்டுட்டு சுருண்டு படுத்துருவாரு... விவசாயம்தான் அவரோட உலகம். நானு அம்மாவெல்லாம் வேற கிரகம். ஆனா அவரோட கடமையிலிருந்து தவற மாட்டாரு. சத்யவான்.
நா ஏன் ஜெயிலுக்குப் போனேன்னு தெரிஞ்சுக்க ஆர்வமா இருப்பீங்க்க.... ரொம்ப சுத்திக்கிட்டிருக்கேனா? என்னையப் பத்தி முழுசா தெரிஞ்சுக்கிட்டாதானே நான் பாவியா அப்பாவியான்னு தீர்மானிக்கமுடியும்? சீக்கிரம் முடிச்சுடறேன். மேலே கேளுங்க...
அம்மாவுக்கு எம்பேர்ல கடலளவு பாசம். எதுக்கெடுத்தாலும் கலை கலைன்னு உருகுவாங்க.. ஒரே பையன். பக்கத்து வீட்டுல பசங்க நான் பார்க்க ரொட்டித் துண்டு சாப்டாக்க... கடைத்தெருவுக்கு ஓடிப்போயி.... மூச்சிரைக்க வாங்கியாந்து தருவாங்க... எனக்கு மட்டும் எப்பவுமே சுடுசோறு. தயிர். ராத்திரிக்கு குடிச வாசல்லயே நட்சத்திரத்தை எண்ணிக்கிட்டுப் படுத்துருவோம். என்னிக்காச்சும் தூக்கம் வராம நிலாவப் பாத்துக்கிட்டே மல்லாக்கக் கிடப்பேன்.. பக்கத்துல படுத்திருக்கிற அம்மாவோட முந்தானையை எம் மேலே போர்த்திக்கிட்டு... மோந்து பார்த்தாக்க அதுல அன்னிக்கி வீட்ல ஆக்கின கொழம்போட வாசனையும் அம்மா பூசிக் குளிக்கிற மஞ்சள் வாசனையும் சேர்ந்து கலந்துகட்டி அடிக்கும்.... அப்படியே சொக்கிப்போயி... அது எப்படீன்னே சொல்லத் தெரியல.. .. தூங்கிடுவேன்... ஆனா அந்த வாசனை...ஸப்பா... செத்தாலும் மறக்காது...
ஏழாவது எட்டாவதுன்னு இல்லை.. ஒண்ணாவதுலேர்ந்தே எல்லா வகுப்புலேயும் நாந்தான் முதல் ரேங்க். தமிழய்யா குணசேகரு என்னியக் கூப்பிட்டு மாசில் வீணையும் மாலை மதியமும். கேட்பாரு. சத்தமா கணீர்னு எட்டூருக்கு கேட்கிற மாதிரி சொல்வேன். என் தோள்ல கை போட்டு க்ளாஸைப் பார்த்து.. "டேய் பயலுவலா.. கலை பெரிய கலெக்டரா ஆவப்போறான்... நீங்கல்லாம் மாடு மேய்க்கதான் லாயக்கு..."ன்னு திட்டுவாரு... கணக்கு டீச்சர் கண்மணிக்கு எம்பேர்ல கொள்ளைப் பிரியம்... "கலை.. நூத்துக்கு நூறா வாங்கிக் குவிக்கிறப்பா.... நீ பெரிய ஆளா வருவே" அப்டீன்னு... என்கன்னத்தை வழிச்சு.... அவங்க தலையில எல்லா விரலையும் படக்குன்னு முறியறா மாதிரி சொடுக்கித் திருஷ்டி சுத்திப் போடுவாங்க...
ஊரே எதிர்பார்த்தபடி பத்தாவதுல நாந்தான் மாவட்டத்துலேயே ஃபர்ஸ்ட் வந்தேன். கும்மோணத்துக்கு அழச்சுக்கிட்டுப் போயி அப்பா புது ட்ரெஸ் எடுத்துத்தந்தாரு. அம்மாவுக்கு கனகாம்பரம் வாங்கிக்குடுத்து... வெங்கடரமணாவுல ராத்திரிக்கு டிபன் சாப்டுட்டு சந்தோஷமா வீட்டுக்கு வந்தோம்.. ஆடுதுறையில டவுன் பஸ்லேர்ந்து இறங்கி வீட்டுக்கு வந்துக்கிட்டிருந்தோம்.. அப்பா வழக்கம்போல கடகடன்னு முன்னாடி போயிட்டாரு.... நானும் அம்மாவும் பின்னாடி மெதுவா நடந்து வந்துக்கிட்டிருக்கோம்... சுத்திலும் நிழலா வயல் பரந்துகிடக்கு.. நிலா டார்ச் அடிச்சு வழி காமிச்சிட்டிருக்கு.... "இன்னிக்கி எம் மனசு நெறஞ்சு இருக்குடா கலை..." அப்டீன்னு குரல் கம்ம அம்மா சொன்னாங்க... திரும்பிப் பார்த்தா கண்ணுல பொலபொலன்னு தண்ணீ.... "அழாதம்மா.. அழாதம்மா.."ன்னு நானும் விக்கிவிக்கி அழுதுக்கிட்டே துடைச்சுவிட்டேன். மனசுக்குள்ளே...ரொம்ப சங்கடமா இருந்திச்சி... மனசு நெறஞ்ச அம்மா ஏன் அழுவணும்? ஃபர்ஸ்ட் மார்க் எடுத்ததெல்லாம் மறந்து போயி.... அம்மாவை ஒரு மாளிகைக்குள்ளே குடி வச்சு மகாராணி மாதிரி அழகு பார்க்கணும்னு சபதம் எடுத்துக்கிட்டேன்.. ஆனா அந்த விதி விதின்னு சொல்லுவாங்களே... அது என் வாழ்க்கையில கபடி விளையாடினது ரொம்ப ஜாஸ்திங்க... சொல்றேன்...
பதினொன்னாவதுக்கு பவித்ரா வந்து சேர்ந்தா... பாவாடை.... சட்டை... குடை ராட்டினம் மாதிரி காதுக்கு ஜிமிக்கி... அன்னபட்சி டாலர் தொங்கும் செயினு... பவுன் வளையல்.. ஜில்ஜில் கொலுசு.. பார்வைக்குப் பளபளன்னு இருந்தா... பணக்கார ரத்தம்னு நடையிலும் உடையிலும் பேசற தோரணையிலும் தெரிஞ்சுது... கிராமத்து ஸ்கூல்ல பளிச்சுன்னு ஒரு பொண்ணு.... கேட்கவா வேணும்... தரை சருக்க ஜொள்ளு விட்டுக்கிட்டு... பல்லிளிக்க ரெண்டு பேரு அவ பின்னாடியே... கண்மையால கோடு போட்டா மாதிரி லேசா மீசை அரும்ப ஆரம்பிச்ச வயசு. ரோட்ல போறப்போ மலையாளப் பட போஸ்டரை நின்னு பார்த்து வாய் பொளந்த வயசு. பசங்க கும்பலா சேர்ந்து அவ பின்னாடி அலைய ஆரம்பிச்சாங்க... என்னையக் கேட்கறீங்களா? நா வழக்கம் போல படிப்ஸ்தான். குனிஞ்ச தல நிமிராத சமர்த்துப் பையன் அப்டீன்னு பேரெடுத்தேன்... வாழ்க்கையில ஜெயிக்கணும்னு ஒரு வெறி... இடைவிடாத வெறி...
பன்னென்டாவதுலேயும் நா மாவட்டத்துலேயே முதலாவதா வந்தேன்.... மாநிலத்துக்கு ஃபர்ஸ்ட் ரேங்க்கா வரமுடியலை.. சின்ன வருத்தம்தான்.. திருச்சி பிஷப்ல சேர்த்துவிட்டாங்க... ஹாஸ்டல். ஸ்காலர்ஷிப் கிடைச்சுது.. ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவை இல்லைன்னா மாசம் ஒரு தடவை வீட்டுக்கு வருவேன். போன பாராவுல பார்த்த பவித்ராங்கிற பொண்ணை சுத்தமா நான் மறந்து போயிருந்தேன். ஒரு வெள்ளிக்கிழமை சாயந்திரம் தஞ்சாவூர் பஸ்ஸ்டான்ட்ல அரையிருட்டுல நின்னுக்கிட்டிருக்கும் போது "ஹாய்.."ன்னு துள்ளலா ஒரு குரல். ஆமா. நீங்க எதிர்பார்த்ததுதான்.. பவித்ரா.. ஜிலிஜிலுக்கும் ஒரு செகப்பு சுடிதார். துப்பட்டா இருக்க வேண்டிய இடத்துல இல்லாம கழுத்துக்குக்கு பாம்பு மாதிரி சுத்தியிருந்தது. எக்கச்சக்க குஷியில இருந்தா... அவ ஒரே ராத்திரில தளதளன்னு தாராளமா வளர்ந்துட்டா மாதிரி எனக்கு பிரமை.
"கலை எப்படியிருக்கே.."ன்னு பக்கத்துல வந்து கேட்டா...பலவந்தமா என்னோட கையைப் பிடிச்சு இழுத்து ஷேக் ஹான்ட்ஸ் குடுத்தா...எனக்கு கூச்சமா இருந்திச்சி... ஸ்கூல்ல படிச்சது மாதிரி இல்லாம.. உதட்டுக்கு செவப்பா லிப்ஸ்டிக்கெல்லாம் பூசியிருந்தா.. கண்ணை படபடன்னு இமைச்சு இமைச்சு கவனத்தை கவரும்விதமா பேசினா... எனக்குப் படபடப்பாதான் இருந்துச்சு... நான் பதிலுக்கு "ம்.. "அப்டின்னு ஒருஎழுத்தோட சுருக்கமா முடிச்சுட்டேன். "நீ பிஷப்ல சேர்ந்திருக்கேன்னு குணா சொன்னான் .." பேச்சை வளர்க்கிறா.... அந்த குணா இருக்கானே... அவன் விஷமக்காரப்பய. ரோட்ல ரெண்டு பேரு அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் எதிரெதிர் திசையில நடந்து போனா.... தோள் மேலே கை போட்டுக்கிட்டு ஜோடியாப் போனாங்கன்னு கத கட்டி விடுவான். அவங்கப்பா கடா மீசையும் புலி நகச் செயினும் மாட்டிக்கிட்டு புல்லட்டுல உலாத்திக்கிட்டிருப்பாரு. அந்தக் கத எதுக்கு? நாம பவித்ரா பத்தி பார்ப்போம்..
"யேய்.. நான் எஸ்ஸார்ஸில சேர்ந்திருக்கேன். பியெஸ்ஸி மாத்ஸ்தான். கம்பைண்ட் ஸ்டடி பண்ணலாமா" அப்டீன்னு கண்ணடிச்சுக் கேட்டா... கண்ணடிச்சா மாதிரிதான் இருந்துச்சு.. ஒருக்கால் தூசி விழுந்திருக்கலாம்.. ஆனா வரம்புமீறி பேசறான்னு புரிஞ்சுது.. இப்போ நீங்க இந்தக் கதையில ஒரு லவ் ட்விஸ்ட் எதிர்பார்க்கிறீங்க... இன்னும் கொஞ்சம் தான் கதை... அப்ப தெரிஞ்சிடப்போவுது..
நா அவளைக் கண்டுக்கல... உத்தமபுத்திரனா பஸ்ஸேறி ஊருக்கு வந்துட்டேன். ரெண்டு மூணு வாரத்துக்குப் பிறகு ஒரு லீவுக்கு பை நிறையா அழுக்குத்துணியோட ஹாஸ்டல்லேர்ந்து ஊருக்கு வந்திருந்தேன்.... பெரிய வீட்டுக்கு கூப்பிட்டு அனுப்பிச்சாங்க... பண்ணையாளு பெருமாள்தான் வந்து "பவித்ராம்மா கூப்பிடறாங்க"ன்னு...வாசல்ல வந்து நின்னான். சைக்கிளை எடுத்துக்கிட்டு போனேன்.
கோயில் மதில் மாதிரி காம்பென்ட் சுவர்க்குப் பின்னால ராட்சத பங்களா. வெள்ளையடிச்சு கம்பீரமா இருந்திச்சி. கோட்டை வாசல் கதவு போல பெரிய க்ரில் கேட். திண்ணைக்கு அந்தப் பக்கம் வைக்கப்போர். ஊஹும். அது போர் இல்லை... வைக்கோல் மலை. நுழையும் போதே இடம் வலமா சேவல் படப்டன்னு பறந்து போச்சு. "ம்மா.."ன்னு கட்டிப்போட்டிருந்த ஏர்மாடு கத்திச்சு.... அவங்க அப்பா. அம்மா யாரும் வீட்ல இருக்கிற சுவடு இல்லை... எனக்கு சுவாதீனமா உள்ள போக பயம். வாசல்ல சைக்கிளை ஸ்டான்ட் போட்டுட்டு... தயங்கித் தயங்கி நின்னுக்கிட்டிருந்தேன். மாடி ஜன்னல்லேர்ந்து... "கலை.. மேல வா.." அப்டீன்னு கூப்ட்டா.. மீசையும் நெஞ்சுல தங்கப் பதக்கமுமா தலை நரைச்சுப்போன முன்னோர்கள் ஃபோட்டோல முறைக்கும் அலங்காரமான ஹாலைத் தாண்டி மாடிப்படி ஏறும் போது அவங்க வீட்டு வேலைக்காரம்மா.. எங்கம்மாவோட ஃப்ரெண்டுதான்.. மாயாக்கா.. என்னைப் பார்த்து "கலை"ந்ன்னுட்டு... ஒருமாதிரியா சிரிச்சாங்க... அதுல பல அர்த்தங்கள்... எனக்கு அது சரியாப் படலை...
ரத்ன கம்பளம் விரிச்சா மாதிரி அறைக்குள்ளே தரையெல்லாம் காஷ்மீர்ப் பாய் விரிச்சிருந்தது. அஞ்சு பேரு சேர்ந்து உருளலாம் போல பஞ்சு மெத்தைப் போட்ட பெரிய படுக்கை. வேலைப்பாடு நிறையா இருந்த படுக்கையோட தலைமாட்டுலேயும் கால்மாட்டுலேயும் முன்னங்கால் ரெண்டையும் தூக்கின யானை செதுக்கியிருந்தது.. டீக் வுட்டாயிருக்கும்.. அந்த படுக்கையில ஓரத்துல பவித்ரா குனிஞ்சு உட்கார்ந்திருக்கா.... ச்சே..ச்சே.. கெட்டத்தனமா நினைக்காதீங்க.. "கலை எனக்கொரு டௌட்.. தீர்த்து வைப்பியா...."ன்னு ஏக்கமாக் கேட்டா.... என்ன அப்டீன்னு கேட்கறத்துக்குக்கூட எனக்கு குரல் எழும்பல....தொண்டைக்குள்ள ரம்பம் விட்டா மாதிரி இருந்திச்சு... பூம்பூம் மாடு மாதிரி தலையை ஆட்டி ஜாடையாவே என்னான்னு கேட்டேன்..
ஆனா அவளா என்னை ஈஷ ஆரம்பிச்சா... படக்குன்னு படுக்கையிலேர்ந்து எந்திரிச்சு.. என் பக்கத்துல வந்து உரசர மாதிரி நின்னுக்கிட்டு...ம்.... ஹப்பா.. அது என்ன சென்ட்? ஜாஸ்மின்? மல்லிக்கும் மனசுக்கும் இருக்கிற மயக்கற உறவு இருக்கே... ஹா.. கிறக்கமா இருந்திச்சு... இந்த உலகத்துலேர்ந்து விடுபட்டு எங்கயோ பறந்துக்கிட்டிருக்கும்போது "கலை.. உனக்கு இந்த ஸம் தெரியுமா?"ன்னு கேட்டா. அவ்ளோ பக்கத்துல.. அவ்ளோ வாசனையா... ஒரு பொண்ணை.. யம்மா.. எனக்கு உள்ளுக்குள்ள மின்சாரம் பாஞ்சு நரம்பெல்லாம் நீவி விட்டா மாதிரி உதறல்.. ஏன்னா அவ ஊர்ப் பெரியவரோட செல்லப் பேத்தி. எங்க கிராமத்தைச் சுத்தி கண்ணுக்கெட்டின தூரம் வரை எல்லாமே அவங்க நிலம்ந்தான். எங்க அப்பாகூட அவங்களுக்கு ஒரு கூலி. கூலிக்காரனோட பையன் சந்து வழியாக் கொல்லைப்பக்கம் போகலாமே தவிர அவங்க வீட்டு படுக்கையறக்குப் போக ஆசைப்படலாமா? தெரிஞ்சா கூறு போட்ருவாங்க...
கூச்சமா இருந்திச்சு. தள்ளி வந்துட்டேன். அவ என் கையைப் பிடிச்சு இழுத்து.. "கலை எனக்கு சொல்லிக்கொடுத்துட்டுப் போ.."ன்னா.. அவ குரல்ல சாராயம் இருந்திச்சு.. அவ்ளோ போதையான குரல்... நான் கிறங்கித் திமிறினேன்... கையை இருக்கமா பிடிச்சிருந்ததை என்னால விடுவிக்க முடியலை... அவளை அப்படியே தரதரன்னு இழுத்துக்கிட்டு வெளிய வரலாம்னு பார்த்தப்போ... சட்டுன்னு எம்மேலேயே விழுந்துட்டா..வேணும்ட்டுட்தான்.. நா கீழே தரையில.... என் மேலே போர்வை மாதிரி அவ கிடக்கா.. ஒரு செகன்ட் எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலை... இன்பமான துன்பம்.... உடம்புல பல இடத்துல மெத்து மெத்து அழுத்துது.. முண்டிப்பார்க்கிறேன்.. நா முண்ட முண்ட இன்னும் அமுக்கி நெருக்கிறா.. எந்திரிக்க மாட்டேங்கிறா.. அந்தப் படுக்கயறையோட வாசல்ல அசிங்கமாக் கிடக்கோம்....
நா எந்திரிக்க முயற்சி பண்றேன். அவ என்னை அமுக்கறா.. இந்த காம்ப்ரமைஸிங் நிலமையில... "டேய்.. கலை.. என்னடா பண்ணிக்கிட்டிருக்கே.."ன்னு ஒரு ஆம்பிளைக் குரல்பதறிப்போய்ட்டேன்.. நீங்க வந்தது குணான்னு நினைச்சுட்டீங்க.,... குணா இல்லை.. கட்டக்குட்டக்க கங்காதரன் வந்தான். கங்காதரன் பொடிப்பையன். பவித்ராவோட சிங்கப்பூர் சித்தப்பா மவன். அதிகப்படியான தம்பி. தண்ணி தெளிச்சுவிட்ட கேஸு. இப்போ பத்தாவது மூனாவது வாட்டியா ப்ரைவேட்டா எழுதறான். RO plant வடிகட்டின முட்டாள். அஞ்சும் மூணும் பத்துன்னு மின்னலாச் சொல்லுவான். அதையும் அழுத்தம்திருத்தமாச் சொல்வான்... நாந்தான் தப்பு பண்ணினா மாதிரி என்னைக் குறுகுறுன்னு பார்த்தான். பவித்ரா சுதாரிச்சு எழுந்துட்டா...
அவனுக்கு குணா மாதிரி கெட்ட சகவாசம் அதிகம். படிப்பு ஏறலை..அப்பா ஃபாரீன்ல இருக்காரு.... பாதை தப்பிப் போறத்துக்கு நிறையா சான்ஸ் அவனுக்கு... அக்கா மேலே நாந்தான் பலவந்தமா உழுந்து கெட்டகாரியம் பண்ணிக்கிட்டிருக்கேன்னு நினைச்சுக்கிட்டு ரொம்ப அதிகமாப் பேசினான்.. வயசுக்கு மீறிய பேச்சு.. செயல் எல்லாமே... பவித்ராவுக்கும் லேசான நடுக்கம்தான்.. கொஞ்ச நேரம் யாருமே பேசலை.. மௌனமா ஹாலுக்கு வந்தோம்.. அவன் எப்ப வேணா அவங்கப்பாம்மாக்கிட்டே சொல்லிடுவான்ங்கிறது எனக்கும் பவித்ராவுக்கும் தெரியும். நா தப்பே பண்ணலை.இருந்தாலும் என் விதி விளையாட ஆரம்பிச்ச முதல் நாள் அது.
பவித்ரா வீட்ல இப்ப வந்துடுவாங்க.. எனக்கும் வீட்டுக்குப் போவணும்.. பவித்ராதான் அந்த மயான அமைதியைக் கலைச்சு பேச ஆரம்பிச்சா...
"கங்கா... கலை மேல தப்பில்லை.. நாந்தான் சறுக்கி...." அவ சறுக்கியில இழுத்த இழுப்பே சரியில்லை... பச்சக்கொழந்த கூட இத நமபாது... பிஞ்சுலயே பழுத்த.. வெம்பிப்போன கங்கா நம்புவானா?
"நா ரெண்டு கண்ணாலையும் பார்த்தது பொய்யா.. இந்த ஜல்ஸா வேலை எவ்ளோ நாளா நடக்குதுன்னு..." நக்கலா மிரட்டற தொனியில பேச ஆரம்பிச்சான்.. எனக்கு கோவம் சுர்ருன்னு தலைக்குமேலே ஏறிடிச்சு.. "டேய் இப்பா என்னாங்கிரே?..." ன்னு கையை மடிச்சிக்கிட்டு மூக்குமேலேயே குத்த கிளம்பிட்டேன் ... பவித்ரா என்னை சமாதானப்படுத்த ஆரம்பிச்சா... அவன் கேவலமா சிரிச்சான்.. "உங்க ரெண்டு பேரையும் போட்டுக்கொடுக்கறத்துக்கு எனக்கு எத்தனை நாழி ஆவுங்கிறே?"ன்னு நம்பியார்த்தனமா உள்ளங்கையிரண்டையும் பிசைந்தான்....
அவனை சமாதானப்படுத்த.. "கலை... கலை.. கங்காவுக்கு பத்தாவது பரீட்சை எழுதிக்கொடுத்து பாஸ் பண்ண வச்சுடு... அது போதும்..".ன்னு கெஞ்சாத குறையா டீல் பேசினா பவித்ரா... எனக்கு பகீர்னு ஆயிடிச்சு.. ஆள் மாறாட்டம் பண்றச் சொல்றா... அதெல்லாம் முடியாதுன்னு முரண்டு பண்ணினேன்.... உருப்படியா வளந்த ஒரு பையன... நாங்க இதைப் பத்தி பேசிக்கிட்டிருக்கும் போதே வாசல்ல வெள்ளை அம்பாசிடர் வந்து நின்னுச்சு... பட் பட்டுன்னு கார்க் கதவு சாத்தற சத்தத்துக்குப் பின்னாடி... பவித்ராவோட தாத்தா பாட்டி அம்மா அப்பா எல்லோரும் பட்டுப் புடவை பட்டு வேஷ்டியுமா இறங்கினாங்க... எனக்கு மனசுக்குள்ளே திக். திக்க்னு இருந்திச்சு.. இந்தப் பய போட்டுக்கொடுத்துட்டான்னா உசுரோட விடமாட்டாங்களேன்னு பயம் வந்திடுச்சு....
"என்னங்கடா எல்லோரும் இங்க வந்திருக்கீங்க?"ன்னு பவித்ராவோட அப்பா சந்தேகமாக் கேட்டார். "பொன்னுசாமியோட பையந்தானேடா அவன்?" ன்னு என்னைப் பார்த்து தாத்தா கேட்டாரு. கங்கா என்னையும் பவித்ராவையும் வச்ச கண்ணை எடுக்காமப் பார்த்தான். இன்னிக்கி நமக்கு சங்குதான்... எந்த நொடியும் எங்களைக் காலி பண்ணிடுவான்னு உள்ளுக்குள்ள உதறல் எடுத்த போது... நடுப்பற இருந்த நான் பவித்ராவுக்கும் அவனுக்கும் மட்டும் கேக்கிறா மாதிரி "உன்னோட டெந்த் பரீட்சையை நான் எழுதித்தரேன்"னு பாதி காத்து கலந்த குரல்ல உறுதிமொழி கொடுத்தேன்..... எந்த நேரத்துலேயும் நேர்மையா இருந்த நான் தவறி கீழ விழ ஆரம்பிச்ச தருணம்...
"ஒன்னுமில்லை பெரியப்பா... பவிக்கு ஏதோ டௌட்டாம்.. செமஸ்டர் வருதாம்... அதான் கலையைக் கூப்பிட்டுவரச்சொன்னா.. க்ளீயர் பண்ணிட்டான்.. அவ்ளோதான்."ன்னு திக்கித்திணறிப் பேசிட்டு அந்த இடத்தை விட்டுப் பறந்துட்டான்.
பத்துப் பதினஞ்சு நாள் கழிச்சு ஒரு நாள் ஆத்தங்கரை ஓரமா சைக்கிள்ல போயிக்கிட்டிருந்தேன். கங்கா எதிர்த்தாப்ல வந்தான். உன்னோட பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ ஒண்ணு குடுன்னு உரிமையாக் கேட்டான். ஹால்டிக்கெட்ல ஒட்டறத்துக்காகன்னு எனக்குப் புரிஞ்சுது. வாயைத்தொறக்காம வீட்டுக்குப் போயி என்னோட பொட்டியில இருந்த டைரிலேர்ந்து எடுத்துக் கொடுத்தேன். நாட்கள் ஓடிச்சு... பேப்பர்ல பரீட்சை தேதி போட்டுட்டாங்க... நான் தயார் பண்ண ஆரம்பிச்சேன்... ஃபெயிலாகாமலே பத்தாவது திரும்பப் படிச்சவன் நான் ஒருத்தனாத்தான் இருக்க முடியும்.. விதி.. இதுவும் விதிதானே...
பரீட்சைக்கு கும்பகோணம் சக்ரபாணி படித்துறைப்பக்கத்துல இருந்த கார்போரேஷன் ஸ்கூல்தான் சென்டர். பரீட்சை இருக்கும் நாளெல்லாம் நான் திருச்சிலேர்ந்து கும்மோணம் வந்து எழுதிக்கொடுத்துட்டு திரும்பவும் காலேஜ் போவணும். தமிழ் இங்கிலீஷ் எழுதிட்டேன். சயின்ஸ் பரீட்சையன்னிக்கி பத்து நிமிஷம் லேட். ஸ்கூல் வாசல்லயே கங்கா நின்னுக்கிட்டிருந்தான். முறைச்சுப் பார்த்தான். எனக்கு கடுப்பாயிடிச்சு... இருந்தாலும் வாக்கைக் காப்பத்தனும்னு ஒரு கொள்கையில அன்னிக்கும் நல்லபடியா எழுதிட்டேன்.
மாத்ஸ் பரீட்சையன்னிக்கி பரீட்சை ஹாலுக்குள்ள நுழையும்போதே அந்த இன்விஜிலேடர் என்னை ஒரு மாதிரியா பார்த்தாரு. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயி... நா மாட்னுக்கு என்னோட பெஞ்சுல உட்கார்ந்து கணக்கு போட ஆரம்பிச்சேன்.... பாதி கொஸ்டின் பேப்பர் முடிச்சுட்டேன்.. திடீர்னு பார்த்தா என் பக்கத்துல ரெண்டு பேர் வந்தாங்க.. ஃப்ளையிங் ஸ்குவாட். பிட் அடிக்கறவங்களைப் பிடிக்கறத்துக்கான டீம். எந்திரிச்சு நின்னேன். அவங்க சட்டை பேன்டெல்லாம் பிட் இருக்கான்னு தொட்டுப் பார்க்கலை.... எனக்கே ஆச்சரியமாப் போச்சு... "தம்பி உன் பேப்பரைக் கொடுத்துட்டு அப்படியே ஜீப்ல ஏறு"அப்டீன்னு ஒரு மொட்டையடிச்ச ஆஃபீஸர் சொன்னாரு. "ஏன்?" அப்டீன்னு கேட்டேன். பின்னாடி தாட்டியா இருந்த ஒருத்தரு "எண்பத்தெட்டுல நீ தான் இந்த மாவட்டத்திலேயே பத்தாவதுல முதல் மார்க். உன்னோட ஃபோட்டவெல்லாம் பத்திரிக்கையில வந்திருக்கு. மூணே வருசத்துல திரும்பவும் பத்தாவது எழுதிரியே... இது நியாயமா?"ந்ன்னு என்னை ஜீப்ல ஏத்துனத்துக்காண காரணத்தைச் சொன்னாரு.. நான் உறைஞ்சுபோயிட்டேன்.
என் கண் முன்னாலயே நான் கண்ட கனவெல்லாம் சிதறிப்போயி... ஆள் மாறாட்டத்துல புக் பண்ணி உள்ள தள்ளீட்டாங்க்க.. அப்பாவும் அம்மாவும் ஜெயிலுக்கு வந்து கதறினாங்க... அம்மா மூஞ்சிய என்னால ஏறெடுத்தப் பார்க்க முடியலை... அவங்க அழற சத்தம் என் இதயத்தை அறுத்துப்போட்டுச்சு.. நா தப்பே பண்ணாம இருந்தேன்.. ஆனா அதுக்கு பரிசா ஜெயில் தண்டனை.. சரி இனிமே தப்பு பண்ணீனா என்ன அப்டீன்னு யோசிக்க ஆரம்பிச்சேன்.. ரெண்டு வருஷத்துல வெளிய வந்துட்டேன்.
பழி தீர்க்க மனசுக்குள்ள கொலவெறி வந்துச்சு... ஆனா நா இயல்பிலேயே சாத்வீகமான ஆளு... அப்படியே அடக்கிக்கிட்டேன். திருச்சிக்குப் போனேன். பிஷப்ல என்னை வெளியே துரத்திட்டாங்க... காலேஜ் படிப்பு ஒரு வருஷத்தோட நின்னுபோச்சு... என்ன பண்றதுன்னு தெரியலை... வாழ்க்கையே வெறுத்துப்போச்சு.. தற்கொலை பண்ணிக்கலாமான்னு பார்த்தேன்.. காவேரில உழுந்து போய்ச் சேர்ந்துடலாம்னு நினைச்சு.. பாலத்தோட கட்டையில ஏறி நடுராத்திரி நின்னுக்கிட்டிருந்தபோது.. என் காலைப் பிடிச்சு யாரோ இழுத்தாங்க... "விடுங்க.. நீங்க ஏன் என்னை நிப்பாட்டினீங்க.."ன்னு கோபமாக் கேட்டேன்.. அதுக்கு அவரு... "எப்படி பிறக்கறத்துக்கு நீங்க சுயமா விருப்பப்டலையோ... அதுமாதிரி சாகறத்துக்கும் நீங்களா விருப்பப்படக்கூடாது"ன்னு உபதேசம் பண்ணீனாரு.. கடுப்பாயி "போடா ..யிறு" ன்னு திட்டினேன். அதே பாலக்கரையில.. தலை கோதுற காத்து அடிக்க...பக்கத்துல உட்கார்ந்துகிட்டு ஒரு மணி நேரம் தத்துவார்த்தமாப் பேசினாரு.... அதை அட்வைஸ்னு சொல்றதா.. இல்லை அவரோட அனுபவம்னு சொல்றதான்னு தெரியலை.. ஆனா அந்த நேரத்துக்கு ரொம்பவும் பிடிச்சிருந்திச்சி...
அவருதான் புகழு. ரெண்டு பேரும் பேசிக்கிட்டே நடந்து போனோம். எங்கேன்னு அவருக்கும் தெரியாது. எனக்கும் தெரியாது. என்னோட வாழ்க்கையில நடந்தெல்லாம் அவர்கிட்டே ஒப்பிச்சேன். ரொம்ப வருத்தப்பட்டாரு. ஒண்ணு ஒண்ணா போயிக்கிட்டிருக்கிற பஸ் காரெல்லாம் கூட குறைஞ்சு போய்.. மெயின் ரோடு ஹோன்னு கிடந்தது... "பசிக்குதா?"ன்னு கேட்டாரு. சொல்லமுடியாம சோம்பலா நடந்தேன்... ஒரு ரோட்டோர ராத்திரிக் கடையில முட்டை புரோட்டா வாங்கிக் கொடுத்தாரு.. கையில கையடக்கமா ஒரு இங்கிலீஷ் புக் வச்சிருந்தாரு..."இது என்ன புக்கு?" ன்னு கேட்டேன். "மஹாராஜா" ன்னு சொல்லிட்டு சிரிச்சாரு.. நம்பளை கிண்டல் பண்றாரு போல்ருக்குன்னு நினைச்சு எனக்கு வெட்கமாயிடிச்சு. அப்புறம் அவரே "இது திவான் ஜர்மானி தாஸ்னு ஒருத்தர் எழுதினது.. நம்ம நாட்ல கடைசி காலத்துல வாழ்ந்த ராஜபரம்பரை ஆட்கள் எப்படி இருந்தாங்கன்னு எழுதியிருக்காரு.. நாமதான் ராஜாவா இல்லை.. அட்லீஸ்ட் மக்கள் எப்படி இருந்தாங்கன்னு படிச்சு மனசை தேத்திக்குவோம்ன்னு" புக்கை வானம் பார்க்கத் தூக்கிப்போட்டுப் பிடிச்சு "பஹா.. பஹா.."ன்னு சிரிக்கிறாரு..
வாங்க போங்கன்னு கூப்பிட்டுக்கிட்டிருந்த என்னை மறு நாள் காவிரில குளீச்சுட்டு கரையேறும் போது "என்னை நீ புகழ்னே கூப்பிடலாம்.. உன் வயசுதான் எனக்கும்.."ன்னு தோள்ல கையைப் போட்டாரு... எங்கியோ பாங்க்ல கொள்ளையடிச்சா மாதிரி அவரு பாக்கெட்டுல கரன்ஸி நிறையா புடைச்சுக்கிட்டு இருந்திச்சு... இப்படி ரோட்டுல சுத்திக்கிட்டிருக்கிற ஆளுகிட்டே ஏது இவ்ளோ பணம்னு கேட்க மனசுக்குள்ள எண்ணம் தோனினாலும்... வேண்டாம்னு விட்டுட்டேன்.. திருச்சி மலைக்கோட்டைக்கு போனோம். பக்தர்களும் பார்வையாளர்களும் பருவத்துடன் ஒதுங்கியவர்களூமாக கூட்டம் இருந்தது. நாங்களிருவரும் உச்சிப்பிள்ளையாரைப் பார்த்துட்டு இறங்கி வரும் போது.....
அவதானா?... ம்... அவளேதான்.. பவித்ரா. சகஜமா யாரோ ஒருத்தன் இடுப்பை வளைச்சு கையைப் போட்டிருந்தான்... குலுங்கிச் சிரிச்சுக்கிட்டுப் போனா.. அவனோட கையும் கண்ணும் கெட்ட காரியத்துக்காக துடிக்கறது தெரிஞ்சுது.. அவ என்னைப் பார்த்த மாதிரியுமிருன்ந்தது பார்க்காத மாதிரியும் இருந்தது... அப்போ புகழு என்னைக்கேட்டாரு.. "உன்னோட டாவா அது கலை?"... "இல்லீங்க... அதுதான் உங்ககிட்ட நான் சொன்ன என்னோட கதையின் ஹீரோயின்... நா லவ் பண்ணாத ஹீரோயின்."ன்னு சொன்னேன்..
மனசை கிளறிவிட்டுட்டா... ப்ளேடு போட்டுக் கீறி ரணமாயிருந்த நெஞ்சு எரிய ஆரம்பிச்சிடுச்சு.. என்னவோ அவ மேல கோவம் பொத்துக்கிட்டு வந்திச்சு..... அன்னிக்கி அவ மட்டும் என்னை கீழ தள்ளி மேலே சாயாம இருந்திருந்தா... இப்படி நா ரோடு ரோடா நாய் மாதிரிக் கேவலமா அலையவேண்டியதில்லையேன்னு ஒரு சுயகழிவிரக்கம் என் மேலே படர்ந்திச்சு..,, பழி வாங்கிடலாமான்னு பிபி ஏறிச்சு..... இவதானே அந்த பரீட்சை எழுதற கேவலமான யோசனை கொடுத்தது.. "சரி வா போவலாம்"ன்னு புகழு என் கையைப் பிடிச்சு இழுத்துக்கிட்டுக் கிளம்பிட்டாரு...
அன்னிக்கி ராத்திரி சத்திரம் பஸ்ஸ்டான்ட் பக்கத்துல ஒரு லாட்ஜ்ல புகழோட தங்கினேன். பத்து மணிக்கு மேலே "ஃபேமிலி" கேர்ல்ஸ் நடமாட்டம் ஜாஸ்தியாயிருந்தது. ஹோட்டல் காரிடாரெங்கும் மல்லி வாசனை. ஊர்ல பேச்சியம்மன் கோயில் வாசல்ல திரிஞ்சிக்கிட்டிருக்கும் ஆண்டி ஞாபகம் வந்திச்சி.. அவரு "எத்தனை பேர் தொட்ட முலை.. எத்தனை பேர் நட்ட குழி.. எத்தனை பேர் பற்றி இழுத்த இதழ்...உய்யடா உய்யடா உய்...."ன்னு சத்தமா பட்டினத்தார் பாட்டைப் பாட்டும் வசனமுமாப் பேசுவாரு .... கவர்மென்ட்ல உசந்த பதவில இருந்தாராம். அவரோட பொண்டாட்டி இவரை விட்டுட்டு ஒரு க்ளார்க்கோட ஓடிடிச்சாம்.... ஊர்ல பல பேரு அவருக்கு மிச்சம் மீதி இருக்கிற சாப்பாட்டை போடுவாங்க... அடிக்கடி "பேய்ச்சுரைத் தோட்டம்.. பேய்ச்சுரைத் தோட்டம்"ன்னு மந்திரம் மாதிரி சொல்லுவாரு.. "சித்தம் கலங்கிப்போச்சு.."ன்னு ஊர்ல பேசிப்பாங்க.. பிஷப்ல சேர்ந்தவுடனே லைப்ரரில பட்டினத்தார் பாடல்கள் எடுத்துப் படிச்சப்போதான் பேய்ச்சுரைத் தோட்டம் புரிஞ்சுது.. இப்போ உய்யடா உய்யடா உய்க்கு அர்த்தம் புரியுது...
எனக்குத் தூக்கம் வரலை. வாழ்க்கையை தொலைச்சவனுக்கு தூக்கம் வருமா? அந்த ஹோட்டல் மொட்டை மாடியில போய் தனியா உட்கார்ந்திருந்தேன். ஊர் மெல்ல அடங்கியிருந்தது. புகழ் பின்னாடி வந்தாரு...கிங்ஸ் எடுத்து உதட்டுல சொருகி பத்த வைக்கும் போது அந்த வெளிச்சத்துல என்னைப் பார்த்தாரு.. கண்லேர்ந்து தண்ணியா வந்துக்கிட்டிருந்ததைப் பார்த்துட்டு... "ஆம்பளை அழக்கூடாது கலை... எல்லார் வாழ்க்கையிலும் வசந்தமும் வரும்.. வறட்சியும் வரும்.. யாருக்கு பாதை மாறிய பயணம் வரும்ன்னு முங்கூட்டியே தெரியும்? மரவட்டை தரையில ஊர்ந்து போயிட்டிருக்கும். ஒரு குச்சியை வச்சு திருப்பி விடு.. திருப்பிவிட்ட திசையில விடுவிடுன்னு போயிட்டிருக்கும்.. எந்த நிலைமை வந்தாலும் எதிர்த்து நின்னு போராடரவந்தான் உண்மையான மனுஷன்.. " இப்படி பேச ஆரம்பிச்சு கீழ்வானம் வெளுக்கற வரை.. விடிய விடிய.. நிறையா அட்வைஸ் பண்ணினாரு.... அப்பதான் பவித்ராவை க்ளோஸ் பண்ணிடலாம்னு திட்டம் போட்டோம்.
திருச்சிலேர்ந்து காலையில கிளம்பி தஞ்சாவூர் வந்துட்டோம். சாயந்திரத்துக்கு மேலே ஆடுதுறைக்குப் போகலாம்ங்க்கிறது திட்டம். பெரியகோயில் பிரகாரத்துல கொஞ்ச நாழி படுத்து பொழுதைக் கழிச்சோம். வெள்ளைக்காரங்க சில பேர் காமிராவும் கையுமா கோயிலை படுத்தும் உட்கார்ந்தும் மண்டி போட்டும் ஃபோட்டோ எடுத்துக்கிட்டிருந்தாங்க... சிற்பக்கலை ரசிக்க வந்த ஆட்களுக்கு அங்கொரு கலை சீரழிஞ்சு போய் கிடக்கிறது தெரியணும்னு எதிர்ப்பார்க்கிரது நியாயமில்லை... புகழ் விடிய விடிய முழுச்சிக்கிட்டு எனக்கு உபதேசம் பண்ணினதால ட்யர்ட் ஆகி தூங்கிட்டான். எனக்கு க்ண்ணு மூடமாட்டேங்குது.. இப்படி எல்லாத்தையும் இழந்துட்டோமேங்க்கிற துக்கம்...
புரண்டு புரண்டு படுத்துக்கிட்டிருக்கும் போது வாசல்ல அகழி தாண்டி ரெண்டு பேரு கை கோர்த்துக்கிட்டு போறது தெரிஞ்சுது.. பின்னாடிலேர்ந்து பார்த்தாக்கா.. ஆமாம்.. பவித்ரா மாதிரி தெரிஞ்சுது.. எனக்கு அவதானான்னு பார்க்கணும்னு ஒரு உந்துதல்... புகழை டிஸ்டர்ப் பண்ணாம எந்திரிச்சு தொடர்ந்தேன். முதல்ல கை கோர்த்திருந்த பய.. பழைய பஸ்ஸ்டான்ட் கிட்ட ப்ளாட்பாரம்ல நடக்கும் போது அவனோட கையை தாராளமா அவளோட பின்பக்கமெல்லாம் எல்லா இடத்துலையும் புரள விட்டான்... கொச்ச புடிச்ச பய... கிச்சுகிச்சு மூட்டறா மாதிரி எல்லா காரியமும் செஞ்சான்... நாயினும் கடையன்னு சுந்தரமூர்த்தி சுவாமிகள் தன்னை சொல்லிப்பாராம்.... மண்டைக்குள்ள ரெஃபரன்ஸ் எங்கல்லாமோ போவுது... அப்பேர்ப்பட்ட உத்தமமான மகானே நாயினும் கடையன்னு தன்னைச் சொல்லிக்கும்போது.. நாமெல்லாம் எம்மாத்திரம்.. அப்புறம் இந்தப் படுபாவிய என்னான்னு சொல்றது..
இன்னமும் அவளோட முகத்தைப் பார்க்கலை.. ரெண்டு பேரும் ஒரு ஜூஸ் கடையில சர்பத் வாங்கிக் குடிச்சாங்க.. நானு ரொம்ப பக்கத்துல போயி சிகரெட் வாங்கினேன். ச்சே.. ச்சே.. எனக்கில்லை.. புகழுக்கு.. எனக்கு தண்ணி சிகரெட்டு பழக்கமெல்லாம் கிடையாது. "களுக்"குன்னு சிரிச்சிகிட்டே வாயை ஸ்டராவில் வச்சு உறிஞ்சும் போது பக்கவாட்டுல அவளைப் பார்த்தேன். இன்னும் கொஞ்சம் மெருகு ஏறியிருந்தா.... உடம்பு ரசமேறிப் போயிருந்தது... தலைக்கு ஜாதியை சரமா தொங்கவிட்டிருந்தா... இப்போ ஃபைனல் இயர் படிச்சிக்கிட்டிருக்கணும்... பக்கத்துல நின்னுக்கிட்டிருந்த பயல பார்த்தா காட்டான் மாதிரி இருந்தான்... கையில கழுத்துல வடம் வடமாத் தங்கம் மின்னிச்சு. வால் க்ளாக்க கைக்கடிகாரமா சுருட்டிக் கட்டியிருந்தான். உடம்பெங்கும் புசுபுசுன்னு புதர் மாதிரி ரோமம். காதோரத்துல நீட்ட நீட்டமா ரோமம் ராட்சதர்களுக்குதான் மொளைக்கும்ன்னு புகழு எதோ சாமுத்ரிகா லட்சணம் புக்குல படிச்சிருந்ததா பஸ்ல வரும்போது சொல்லிக்கிட்டிருந்தான்.
பின்னாடியே புகழும் என்னைத் தேடிக்கிட்டே அங்கே வந்து சேர்ந்துட்டான். கொஞ்ச நேரம் வெயிட் பண்ணினோம். அவங்க ரெண்டு பேரும் சாந்தி தியேட்டருக்குப் போனாங்க. மாட்டனீ நாடோடித் தென்றல் ஓடிக்கிட்டிருந்தது. கொஞ்ச தூரம் தள்ளி ஒரு பார்ல உட்கார்ந்திருந்தோம். புகழு பீர் குடிச்சான். "கலை.. பச்சாதாபம் பார்க்காதே... அவளாலதானே நீ சீரஞ்சே... கொன்னுடு..". வேர்க்கடலை கொண்டு வந்து வச்ச ட்ராயர் பையன் காதுல கொன்னுடுங்கிறது கொண்டு வான்னு விழுந்துடுச்சு... "இன்னும் என்ன சார் கொண்டுவரணும்?"நு சிரிச்சான். பதிலுக்கு நாங்களும் சிரிச்சோம்.... ரொம்பவே உபதேசம் பண்ற புகழுக்கு ஏன் இத்தனை கொலை வெறி? எனக்கு ஆச்சரியமா இருந்திச்சு.. கேட்டாக்க யாராவது பொண்ணை லவ் பண்ணி அது கடைசியில "அண்ணா"ன்னு பாசமாச் சொல்லி வேற ஒருத்தனைக் கட்டிக்கிட்டு குடித்தனம் பண்ணப் போயிடுச்சுன்னு அரதப் பழசான ஒரு லவ் துரோகிக் கதை சொல்லுவான்.. வேண்டாம்னுட்டு விட்டுட்டேன்... அப்புறம் என் கதை சொல்லிமுடிக்க லேட் ஆயிடும்...
சூரியன் இறங்கிடிச்சு. தூரக்க இருக்கிறவங்க நிழலாத் தெரியற அரையிருட்டுப் பரவத் தொடங்கின நேரம். கும்பகோணத்துக்கு பஸ் ஏறுவான்னு பார்த்துக்கிட்டிருக்கும் போது ஸ்லோவாத் திரும்பின பாட்டு வச்ச திருச்சி பஸ்ஸைக் கைகாட்டி ரெண்டு பேரும் தொத்தி ஏறிட்டாங்க.. அந்த பஸ்ஸை விட்டுட்டு பின்னால வந்த இன்னொரு அரசாங்க பஸ்ல நாங்க ஏறினோம். தனியார் பஸ் வேகமாப் போவும். பவியை மிஸ் பண்ணிடுவோமோன்னு பயம். இப்போ மிஸ் பண்ணீடுவோமோன்னு எப்படி ஃபீல் பண்றேன் பாருங்க.. கெட்டத்துக்குன்னா மனசு சுலபமா ட்யூன் ஆயிடுது. தமிழ்ப் பல்கலைக் கழகம் வாசல்ல ட்ராஃபிக் ஜாம். ரெண்டு பஸ்ஸும் பின்னுக்குப் பின் நின்னுக்கிட்டிருந்துச்சு. ரெண்டு பேரும் குதிச்சு இறங்கி ஓடிப் போயி பவித்ரா பஸ்ல ஏறிக்கிட்டோம். ஒரு நல்லவன் கெட்டவன் ஆவறத்துக்கான பிரயத்தனமாப் பட்டது என்னோட அந்த நடவடிக்கை.
பஸ்ஸு நெடுஞ்சாலையில உறுமிக்கிட்டே போய்க்கிட்டிருக்கு. என்னோட மனசு ஆடுதுறைக்கு பயணமாயிடிச்சு. ட்ராயர் போட்டுக்கிட்டு கிட்டிப்புல் விளையாடினது.. அம்மாவோட முந்தானையைப் பிடிச்சுக்கிட்டு தூங்கினது... அப்பா துன்னூறு இட்டுவிட்டு "நல்லா படி தம்பீ" சொன்னது... ஆத்துல டைவ் அடிச்சு ஆட்டம் போட்டது...பொங்கலுக்கு என் உயரத்துக்கு கரும்பு வெட்டி பல்லால கடிச்சித் தின்னது... இப்படி நல்ல காரியமா வந்துக்கிட்டிருந்தது... கடேசில பவி எம்மேல கிடக்கிற சீன்ல வந்து குத்துக்கிட்டி நின்னுச்சு.. நெஞ்சு வலிச்சுது. பக்கத்துல புகழு தூங்கிக்கிட்டிருந்தான்.
துவாகுடில பஸ் நின்னபோது.... முன்னாடி முண்டியடிச்சுக்கிட்டு ஒரு கும்பல் ஏறிச்சு. வெளிய வேடிக்கைப் பார்த்துட்டு திரும்பறேன்.. ட்ரைவர் சீட்டுக்குப் பின்னாடி பவித்ராவைக் காணலை. "புகழு... அவ இறங்கிட்டா..."ன்னு உலுக்கினேன். ஸ்டாப்லேர்ந்து கிளம்பின பஸ்ஸைவிட்டு ரெண்டு பேரும் அவசராவசரமா இறங்கினோம். ரோட்டுக்கு அந்தப் பக்கம் போயிட்டு இருந்தாங்க... ஆமா.. கையோடு கையை கோர்த்துக்கிட்டு... கண்ணுல படும்படியா இடைவெளி விட்டுத் தொடர்ந்துக்கிட்டிருந்தோம்...
ஒரு சின்ன ஹோட்டல். "அறகள் வாடகைக்கு வீடப்படூம்"ன்னு தப்பான தமிழ்ல அழகா எழுதியிருந்தது. அந்த கட்டிடமே தப்புக்கு துணையா நிக்கும்ங்கிற லக்ஷணத்துல மங்கலான வெளிச்சத்தோட இருந்தது. அவன் அதுக்குள்ள போனான். பவித்ரா சுத்திலும் வேடிக்கை பார்த்துக்கிட்டு சங்கடமா வாசல்லயே நின்னா. புகழு "கலை.. முன்னாடி போ.. உன்னைப் பார்த்ததும் ஆச்சரியப்படுவா... அந்த இடத்துலேர்ந்து அவளை நகர்த்திடு.. அப்புறம் பார்த்துக்கலாம்.."னு என்னை தூண்டிவிட்டான். திடுதிப்புன்னு நான் வந்து முன்னாடி நிப்பேன்னு பவித்ரா எதிர்ப்பார்க்கலை.. "க..க..க.."ந்ன்னு 'க'லேயே கபடி விளையாடினா.. "என்ன பவித்ரா இங்க?"ன்னு ஆச்சரியமாக் கேட்டேன். "என்னோட ஃப்ரென்ட் இங்கே இருக்கா..."ன்னு உளற ஆரம்பிச்சா... "இந்த ஹோட்டல்லயா?"ன்னு கேட்டேன். "ச்சே..ச்சே... இங்கே முருகப்பா நகர்ல.. அவள்ட்ட ஒரு நோட்ஸ் வாங்கணும்னு வந்தேன்". சுதாரிச்சா.... மூச்சு சீரா இல்லை.. பொய்னு அவளோட கண்கள் சொல்லிச்சு..
"நடந்துகிட்டே பேசலாமே"ன்னு அவளை மெதுவா அந்த ஹோட்டல் தாண்டி இடதுபக்கம் அழைச்சுக்கிட்டுப் போனேன். எங்களை புகழ் பின் தொடர்ந்துவந்தான். ஏற்கனவே ராத்திரி ஒன்பது மணி. ஊருக்கு உள்ளே போகும் அனாதையான ஒத்தை ரோடு. ரெண்டு பக்கமும் ராட்சச புளியமரம். யாராவது ஒன்னுரெண்டு பேர் டூவிலர்லயும் சைக்கிள்லயும் க்ராஸ் பண்ணி போயிக்கிட்டிருந்தாங்க... பவித்ரா அவனைத் தவிக்க விட்டு வந்துட்டோமேன்னு வருத்தப்பட்டது கண்ல தெரிஞ்சுது.. நா அதைக் கண்டுக்கலை...
அப்படியே வளைஞ்சு வளர்ந்த ரோட்டுல வலது பக்கம் பெரிய குளம் வந்தது. வட்டமும் சதுரமும் செவ்வகமுமில்லாத வடிவமில்லா ஒரு குளம். கொஞ்சம் பெரிய குட்டைன்னு வச்சுக்கோங்களேன்... பச்சைக் கலர்ல தண்ணி அசையாம இருந்தது. கரையில பாசி ஒதுங்கியிருந்தது. "உன்னோட கொஞ்சம் பேசணும்..." குளத்தாங்கரைக்குக் கூப்பிட்டேன். மறுப்பு சொல்லாம தலையைக் குனிஞ்சுக்கிட்டே வந்தா. நாங்க ரெண்டு பேரும் குளத்தை நெருங்கின இடத்துல விழுதுகளோட ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. மனுஷ நடமாட்டத்துல ஏதோ பறவைங்க சடசடத்து பறந்து போச்சு.
வெளிய தெரியாம இருக்க உள்ள இறங்கி குளத்துப் படிக்கட்டுல பக்கத்து பக்கத்துல உட்கார்ந்துகிட்டோம்.. "இதுமாதிரி ஆவும்னு நினைக்கலல்ல..."ன்னு பவித்ரா ஆரம்பிச்சா. எனக்கு பிபி எகிறிடுச்சு. "ஆமாடீ.. எல்லாம் உன்னாலதான்.." கொஞ்சம் சத்தமா பேச ஆரம்பிச்சேன். தலையைக் குனிஞ்சுகிட்டே உட்கார்ந்திருந்தா... "நா அப்படிப் பண்ணியிருக்கக்கூடாதுதான்... ஆனா உன்னை முதன்முதலா பார்த்தப்பவே ரொம்பவும் பிடிச்சிருந்திச்சு..." என்னன்னவோ பேசினா. எனக்குப் பிடிக்கலை. எப்படி அவளைக் கொன்னுட்டு தப்பிச்சுப் போகலாம்னு திட்டம் போட்டுக்கிட்டிருந்தேன்.
ஒரு பதினைஞ்சு நிமிஷம் போயிருக்கும். என்னை நிமிர்ந்து பார்த்தா. கண்ல தண்ணி குளம் கட்டி நின்னுச்சு... அம்மாவுக்கு அப்புறம் இன்னொரு பொண்ணு...இவ்ளோ பக்கத்துல உட்கார்ந்து தாரைதாரையாய் அழுது இப்பதான் பார்க்கிறேன்.. மனசுக்கு சங்கடமா இருந்திச்சி.. அப்ப அவ ஒரு புது கதை சொன்னா...
"கலை... ஊர்ல என்னோட அம்மாவா இருக்கிறது ஒரு துரோகி...பிசாசு... அவ அம்மாவே இல்ல... அதைவிட அவ ஒரு பொம்பளையே இல்ல...." எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருந்திச்சி... "என்ன சொல்ற?"ன்னு முறைச்சேன். "ஆமா கலை... சின்ன வயசுல நானு பம்பாய்ல இருந்தேன். பொட்டும் பூவுமா எங்கம்மா சினிமால வர்ற அம்மன் மாதிரி இருப்பாங்க.. அப்பா அங்க ஃபைனான்ஸ் பிசினஸ் பண்ணிக்கிட்டிருந்தாரு.. இங்க தாத்தாகிட்டே கோச்சுக்கிட்டு சின்ன வயசுலேயே மும்பாய் ஓடிவந்தவரு... லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டாரு.. ஒரு பெரிய தொகை அங்க ஒருத்தங்கிட்டே மாட்டிக்கிச்சு.. அவனை உருட்டி மெரட்டி காசு வாங்க அப்பா ட்ரை பண்ணிக்கிட்டிருந்தாரு.. அதுலேர்ந்து தப்பிச்சுக்க இவளை ஆசை காமிச்சு மயக்கி எங்கப்பாவுக்கு கட்டி வச்சுட்டாங்க.." புகழு என்ன ஆனான்னு தெரியலை. இப்பவே மணி பத்து மணிக்கு மேலே இருக்கும். இவளை அழைச்சுக்கிட்டு வந்த காட்டானுக்கு என்ன ஆச்சு? இவ கதையை எப்ப முடிப்பா? ஏன் நாம இதைக் கேட்டுக்கிட்டு உட்கார்ந்திருக்கோம்? பல கேள்விகள் ஒண்ணு பின்னாடி ஒண்ணா எழுந்து மூளையை நிரப்பிடிச்சு...
"ஒரு நா ராத்திரி எட்டு மணி இருக்கும். அம்மா எனக்கு ஹோம் வொர்க் சொல்லிகொடுத்துக்கிட்டிருக்கும் போது எங்கப்பா மாலையும் கழுத்துமா இவளோட வந்தாரு. நானு அப்போ எட்டாவது படிச்சுக்கிட்டிருந்தேன். வந்தவ எங்கம்மாவை நிம்மதியா இருக்கவிடலை. தெனமும் சண்டை. என்னால ஒழுங்கா படிப்புல கவனம் செலுத்த முடியலை.. அப்பா கொஞ்சம் கொஞ்சமா குடிக்கு அடிமையானாரு... எனக்கு வீடே நரகமாயிட்டுது... இந்த சமயத்துல டெல்லியில யார்கிட்டயோ ஃபைனான்ஸுக்கு பணம் வாங்க எங்கப்பா போனாரு. ஒரு மத்தியான நேரம். வெளியே மழை பொளந்துகட்டுது." சுவாரஸ்யமா சொல்லிக்கிட்டே போறா.. எப்போ முடிப்பான்னு தெரியலை. இப்ப இவளைக் கொல்ல வந்ததையே நா மறந்துடுவேன் போலருக்கு...
"என்னிக்குமில்லாத திரு நாளா எங்கம்மாகிட்டே குழைஞ்சு பேசினா இவ. காய்கறி மார்கெட் வரைக்கும் போய்ட்டு வரலாம்னு அழைச்சுக்கிட்டு போனா.. எனக்கு பரீட்சைக்காக ஸ்டடி லீவு. மத்தியானம் போனவங்க ராத்திரி ஏழு மணி வரைக்கும் வரலை. ரொம்ப டென்ஷனாயிடிச்சு.. பத்து மணிக்கு இவ மட்டும் திரும்பி வந்தா.. "அம்மா வரலை?.." ன்னு பதபதைப்போட என்னைக் கேள்வி கேட்டா. எனக்கு பகீர்னு ஆயிட்டுது. அவ நாடகம் போடறான்னு புரிஞ்சுது... உன் கூடதானே வந்தாங்கன்னு சண்டை போட்டேன்.. பதிலுக்கு என்னைத் திட்டிட்டு படுத்து தூங்கிட்டா.. அவ மேல எனக்கு சந்தேகம். எங்கப்பா வர்றத்துக்கு ரெண்டு நாளு ஆச்சு.. அம்மாவைக் காணாம அழுது அழுது என் கண்ணுரெண்டும் வீங்கிப் போச்சு... சோறுதண்ணி இறங்கமா அவருக்காகக் காத்திருந்தேன்... வந்தவர்கிட்டே ஏதோ பொய் சொல்லி பசப்பி சபலம் காட்டி எங்கம்மா யார் கூடவோ சேர்ந்து ஓடிப்போயிட்டான்னு கதையை முடிச்சுட்டா.. என்னோட வலி உனக்கு புரியுதா? அப்புறம் அப்பாவுக்கு ஃபைனான்ஸ் நொடிச்சுப் போயி ஊருக்கே விவசாயம் பண்ணலான்னு வந்தபோது.. தாத்தா கூட ராசியாகி.. பதினொன்னாவதுல நா அங்கேயே வந்து சேர்ந்து.. மத்ததெல்லாம் உனக்கும் தெரியுமே"
உணர்ச்சி வேகத்துல அவ பேசி முடிச்சா.. புகழு பவியைக் கொல்லலாம்னு சொன்னதெல்லாம் மறந்து போயி எனக்கு வேற மாதிரி சபலம் தட்டிச்சி... அவளை நான் கட்டிப்புடிச்சு... நெத்தியில முத்தம் கொடுத்து... சினிமாவுல வர்றா மாதிரி பாக்கெட்டுலேர்ந்து தாலிக்கயிறை எடுத்துக் கட்டி... ஒரு சிட்டிகை குங்குமமெடுத்து உச்சித் திலகமிடறா மாதிரி கண்ணைத் தொறந்துக்கிட்டே கனா கண்டுக்கிட்டிருந்தேன். அப்போ எங்கிருந்தோ மின்னல் மாதிரி அந்த காட்டான் வந்தான். இடுப்புல இருந்த பிச்சுவா கத்தியை எடுத்து என் கண்ணு முன்னாலயே.. அதை எப்படி சொல்வேன்.. என் கண்ணு முன்னாலயே... பவித்ராவை சரமாரியா வாயிலேயும் வயித்திலேயும்... "யு பிட்ச்.. யு ஸ்கௌன்ட்ரல்.... என்னை ஏமாத்திட்டியேடீ"ன்னு திட்டிக்கிட்டே.. சதக் சதக்ன்னு சரமாரியாக் குத்தறான்... எனக்கு மூச்சு வாங்குது..ஆடிப்போயிட்டேன்... சுதாரிச்சு "டேய்.. நிறுத்துடா"ந்னு அவனைப் பிடிக்க நா கெளம்பும்போது அவன் கத்தியை குளத்துக்குள்ளே வீசி எறிஞ்சிட்டு ஓட ஆரம்பிச்சான்.
பதினோறு மணிக்கு மேலேயே இருக்கும். அவன் நூறு மீட்டர் முன்னாடி ஓடிக்கிட்டிருக்கான். பின்னால நானு. ரெண்டு தெரு திரும்பினவுடனே ஒரு பாழடைஞ்ச வீட்டு வாசல்ல புகழ் கையில தம்மோட உட்கார்ந்திருந்தான். நா ஓடி வர்றதைப் பார்த்துட்டு அவனும் தொரத்த ஆரம்பிச்சான். அவன் வளைஞ்சு வளைஞ்சு கோகோ விளையாடறா மாதிரி ஓடறான். ஆளில்லா தெருவெல்லாம் தாண்டி மெயின் ரோட்டுக்கு வந்துட்டான். அவனைப் புடிக்கவே முடியலை. காத்தா போயிட்டான்.. ஸ்பிர்ன்டரா இருப்பான் போல்ருக்கு...
"கலை.. வர்ற பஸ்ல ஏறிடு.. நாம மெட்ராஸ் போயிடுவோம்.. இங்க நின்னாக்க மாட்டிப்போம்"ந்ன்னு புகழு தூண்டினான். ஏதோ ஒரு பஸ்ஸு காத்து வாங்கிக்கிட்டு வந்திச்சு. ஏறினோம். தூங்கினோம். விடிய விடிய திருச்சிலேர்ந்து கிளம்பி மறு நாள் மத்தியானம் மெட்ராஸ் வந்துட்டோம். ட்ரிப்ளீக்கேன்ல ஒரு மான்ஷன்ல புகழோட புகலிடம். அவந்தான் அந்த நட்சத்திர ஹோட்டல்ல பார் டென்டர் லீடர். மேனேஜர்ட்ட சொல்லி எனக்கொரு வேலை வாங்கிக்கொடுத்தான். பார்த்தீங்களா? தண்ணியடிக்காதவன், சிகரெட் பிடிக்காதவன்... பொம்பளைங்களை ஏறெடுத்துப் பார்க்காதவன்.. என்ன நிலைமைக்கு ஆயிட்டேன்... திரும்பவும் உய்யடா..உய்யடா..உய்..ன்னு யாரோ இடுப்புல காவித் துண்டோட சூட்சுமமா எதிர்க்க நின்னு கூப்பாடு போடற மாதிரியே இருக்குதுங்க.."
பவித்ரா கொலை கேஸு இன்னும் முடியலை. நேத்திக்கு தந்தியில விசாரணை நடக்குதுன்னு நாலு காலம் நியூஸ் போட்ருக்குது.. இன்னிக்கி உங்க கிட்ட சொன்ன இந்தக் கதையை யார்ட்டேயும் சொல்லிடாதீங்க.. என்னை திரும்பவும் உள்ள போட்டுடுவாங்க.... ஆள் மாறாட்டம் செய்தப்பவும் எம் மேலே தப்பில்லை.. இப்பவும் நானொன்னும் கொலை செய்யலை.. என்னைப் போட்டுக்கொடுக்காம இருக்கிறத்துக்கு மனமார்ந்த நன்றி!
முற்றும்.

மீம் கடை

புதுசா மீன் கடை ஆரம்பிச்சிருக்கேன்... :-) டேய் அது மீம் டா..... சரி.. மீம் கடை ஆரம்பிச்சிருக்கேன்....




கார்கில் நாயகன்: லலித் ராய்

1999ம் வருஷம். மே மாதம். கார்கில். கடல் மட்டத்திலிருந்து பத்தாயிரத்திலிருந்து பதினெட்டாயிரம் அடி மேலே இருக்கும் குளிர்ப் பிரதேசம். பனி மூட்டத்துடன் கூடிய மங்கலான அதிகாலை நேரம். தலைக்கு முண்டாசும் கையில் பெருங்கழிகளோடும் மாடுகளோட்டிச் செல்கிறார்கள் சில கிராமத்து இடையர்கள். வழக்கத்திற்கு மாறாக யாரோ ஆட்கள் இங்குமங்கும் ஏதோ ஒரு காரியத்தில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார்கள்.
உற்றுப்பார்த்ததில் இந்திய-பாகிஸ்தான் கட்டுப்பாட்டு எல்லை தாண்டி நமது எல்லையிலிருப்பவர்கள் இராணுவ வீரர்கள் என்று அறிகிறார்கள். பொதுவாக அக்டோபர் நவம்பர் மாதங்களில் கீழே இறங்கும் இந்திய மற்றும் பாகிஸ்தானிய படைகள் மீண்டும் ஜூன் ஜூலை மாதங்களில்தான் மேலேறி பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். அந்த வருடம் க்ளோபல் வார்மிங்கில் முன்னதாகவே பனிக்குன்றுகள் கரைந்து ஏப்ரல் மேயிலேயே தெளிவான வழி ஏற்பட்டுவிட்டது. இருந்தாலும் அவர்களின் மேல் “யாரது?” என்ற சந்தேகம் பற்றிக்கொள்கிறது.
இடையர்களில் ஒருவர் வேகவேகமாக கீழே இறங்கி இராணுவ முகாமிற்கு ஓடிவருகிறார்.
“நமது வீரர்கள் அதற்குள் எல்லைக்குப் போய்விட்டார்களா?” என்ற மூச்சிரைக்க விசாரிக்கிறார்.
“ஊஹும். இல்லையே...” என்று புருவம் சுருக்குகிறார் அங்கு காவலில் இருந்த கமாண்டர்.
”நிறைய இராணுவ வீரர்களை இன்று நம் எல்லையில் நாங்கள் பார்த்தோம்...” என்றார் அந்த இடையர் நிதானமாகம் உறுதியாகவும்.
இது பாகிஸ்தானின் ஊடுருவல் என்று புரிந்துவிட்டது. உடனே இந்திய இராணுவத்தினர் உஷார் படுத்தப்படுகிறார்கள். சட்டென்று ஒரு படாலியன் அங்கே அனுப்பபடுகிறது. இரண்டு நாட்களுக்கும் மேலே அவர்களிடமிருந்து ஒரு தகவலும் இல்லை. கீழேயிருப்பவர்கள் அச்சப்பட்டபடி அங்கே பாகிஸ்தான் இராணுவத்தினர் ஆக்கிரமித்து அவர்களைச் சிறைப்படுத்தி சித்ரவதைக்குள்ளாக்கிக் கொன்றுவிடுகிறாரகள். இப்போது தேசமே விழித்துக்கொள்கிறது. பின்னர் ஒவ்வொரு படாலியன்களாக மேலே அனுப்பப்பட்டு இரு மாதப் போரில் கார்கிலை வெற்றிகரமாக மீட்டெடுக்கிறோம்.
கார்கிலின் முக்கியத்துவம் என்ன? ஸ்ரீநகரிலிருந்து தேசிய நெடுஞ்சாலை ஒன்று கார்கிலைக் கிழித்துக்கொண்டு லேவுக்குச் செல்கிறது. இந்த தேசிய நெடுஞ்சாலைதான் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பணிபுரியும் இராணுவத்திற்கான தளவாடங்கள், மருந்து மற்றும் இதர உதவிகளை அனுப்புவதற்கு ஹேதுவான சாலை. இந்தச் சாலையை தகர்ப்பதன் மூலம் இந்தியர்களை அந்த பிரதேசத்திலிருந்து நீக்கிவிட்டால் அதை பாகிஸ்தானுடன் சுலபத்தில் இணைத்துவிடலாம். இதுதான் எதிரிகளின் திட்டம்.
இந்தப் பெருமை மிகுந்த கார்கில் போரில் பங்குபெற்று அன்றைய ஜனாதிபதி கே.ஆர். நாராயணிடம் வீர் சக்ரா பரிசு பெற்ற சீஃப் கமாண்டர் லலித் ராயை நேற்று டாடா கம்யூனிகேஷன்ஸின் வாடிக்கையாளர் ஆண்டு விழாவான “We Connect"ல் சிறப்புரை ஆற்ற அழைத்திருந்தார்கள். தங்குதடையில்லாத ஆங்கில உரை. 7/11 கூர்க்கா ரெஜிமெண்ட் வீரர். பதினெட்டாயிரம் அடி உயரத்தில் எல்லைக்காவல் பணியின் சிரமங்களை அசால்ட் புன்னகையுடன் பகிர்ந்துகொண்டார்.
காலைக்கடன் முடிப்பதற்கு வெந்நீரை எடுத்துக்கொண்டு போய் மறைவாக உட்கார்ந்து அதிக நேரம் எடுத்துக்கொண்டால் அந்த நீர் உறைந்து ஐஸ் கட்டிகளாகிவிடுமாம். அங்கே குந்தியிருந்தபடியே ”நாளைக்கு உனக்கு கொண்டு வந்து தரேன்.. இன்னிக்கி எனக்கு தாயேன்..” என்று உறுதிமொழி கொடுத்து அடுத்தாள் கொடுத்ததைக் கொண்டு கழுவிக்கொள்ள வேண்டும். இதை அவர் சொன்னபோது கடுமையான சூழ்நிலையிலும் நாட்டைக் காப்பாற்ற அவர்கள் செய்யும் தியாகங்களை நினைத்து கண்களில் தானாகக் கண்ணீர் கசிகிறது.
படாலிக் பிரதேசம் என்கிற இஞ்சித் துண்டு போன்ற வரைபடம் காட்டினார். அதன் நடுவில் எல்லைக் கட்டுப்பாட்டு வேலி ஓடுகிறது. அதுதான் பாகிஸ்தானுக்கும் நமக்குமான எல்லை. 1999 குளிர்கால சீசனில் இரு படைகளையும் கீழே இறங்கும் போது பர்வேஸ் முஷாரஃப் தலைமையிலான பாகிஸ்தான் அரசாங்கம் இன்னொரு படையைத் தயார் செய்து மேலேயேற்றினார்களாம். இந்த ஊடுருவலை முறியடித்தது இந்தியாவின் பெரும் சாதனை என்றார். இதற்கு முன்னர் 1947 மற்றும் 1971 என்று சில முறைகள் கார்கில் பொருட்டு யுத்தம் நடந்திருக்கிறது.
ஒவ்வொருமுறையும் அந்நாட்டு வீரர்கள் நம் வீரர்களை நேருக்கு நேர் சந்திக்கும்போது கன்னாபின்னாவென்று ஹிந்தியில் திட்டிக்கொள்வார்களாம். திட்டும் மொழியில் பிஹெச்டி செய்தவன் நான் என்று மார்தட்டி சிரிக்கிறார் லலித். அப்படி பேசிக்கொள்ளும் போது 1947ல் ஒரு பாகிஸ்தானிய வீரன் பத்து இந்திய வீரனுக்குச் சமானாம் என்று மார்தட்டுவார்களாம். பின்னர் அடிகொடுத்த பின்னர் 1971ல் ஒரு பாகிஸ்தானிய வீரன் ஐந்து இந்திய வீரனுக்கு சமானம் என்றவர்கள் திரும்பத் திரும்ப செம்மையாக அடிபட்ட பிறகு ஒரு இந்திய வீரனுக்கு பத்து பாகிஸ்தானிய வீரன் சமன் என்று ஒத்துக்கொண்டார்கள் என்றபோது அவையில் எழுந்த கரவொலி முழு சென்னைக்கே கேட்டிருக்கும்.
செங்குத்தாக ஏறும் மலைப்பிரதேசங்களில் முன்னேறுவது லேசுப்பட்ட காரியமல்ல என்பதற்கு பல உதாரணங்களை லலித் சொன்னார். துணி மூடாத பிரதேசங்களில் ஊசியை வைத்துக் குத்துவதுபோலத் தாக்கும் குளிர். தோளிலும் கைகளிலும் துப்பாக்கி குண்டு போன்ற தாக்குதலுக்குத் தேவையான பொருட்கள். பனியால் மூடிய குன்றுகளில் ஏறவேண்டும். பூட்டுகளால் பனியை உதைத்து ஓட்டையேற்படுத்தி காலை நுழைத்து மேலே இன்னொரு ஓட்டை இன்னொரு கால்.. இப்படியே மேலே ஏறவேண்டும். கேட்கவே மயிர்கூச்சமேற்படுகிறது. இவர்களே மேரா பாரத் மகான்கள்.
-32 டிகிரி செல்ஷியஸில் வீரர்களுக்கு ஏற்படும் சில தேக அசௌகரியங்களையும் அது எப்படி அவர்களது உயிருக்குக் கேடாக முடிவதையும் சொல்லும்போது நமக்கு படபடப்பாயிருக்கிறது. நேற்றுவரை நம்மோடு பேசிக்கொண்டு சிரித்துக்கொண்டு சாய் அருந்திக்கொண்டிருந்த வீரன் வியர்வையே வெளியில் வராமல் வாயிலிருந்தும் மூக்கிலிருந்து இரத்தம் வர திடீரென்று கீழே விழுந்து இறக்கும்போது எப்படியிருக்கும்?. அவர்களிடமிருக்கும் ஹெலிகாப்டரில் அந்த உடலைக்கூட அப்படியே முழுதாகக் கீழே அனுப்பமுடியாதாம். உடலை இரண்டாடகக் கூறு போட்டு மூட்டைக் கட்டி கீழே அனுப்பவார்களாம். இறைவா!! பிரேதத்தைக் கண்ட அவர்களது குடும்பம் என்ன பாடு பட்டிருக்கும்?
அவர் பேசப் பேச அவையே அமைதியாக இருந்தது. காலில் அணிந்து கொள்ளும் பூட்டுகள் எப்போதுமே ஒன்று பெரியதாக இருக்கும் இல்லையேல் காலுக்குள்ளேயே நுழையாதபடி இருக்கும். பெரிதாக இருக்கும் பூட்டுகளினால் கூட நன்மை உண்டு என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் சொன்னார். கார்கில் போரில் எதிரிகள் சுற்றிவளைத்துச் சுடுகிறார்கள். சீஃப் கமாண்டாராக லலித்தும் சில இந்திய வீரர்களும் மாட்டிக்கொள்கிறார்கள். அப்போது எதிரிகள் சுட்ட குண்டு ஒன்று லலித்தின் காலில் படுகிறது. அதிர்ஷ்டவசமாக பூட்டின் பெரிய அளவு காரணமாக நுனியில் பட்ட குண்டு காலுக்குச் சேதமில்லாமல் செய்கிறது. இதை அவர் சிரிப்போடு பகிர்ந்துகொண்டாலும் நமக்குச் சிலிர்க்கிறது.
”ஜெய் காளி” என்று அவர் கையை உயர்த்தி கோஷமிடும் போது அவரது வார்த்தையிலிருந்து வீரம் பிறந்து நமது நாடிநரம்புக்குள் புகுந்து உடம்பை ஒரு முறை விலுக்கென்று உதறிப்போடுகிறது. அப்பப்பா... என்னவொரு கணீர்க்குரல். கமாண்டர் குரல். திரையில் ஒரு சேதமடைந்த பைனாகுலரைக் காட்டினார். மயிரிழையில் உயிர் பிழைக்க வைத்த பைனாகுலர் அது. எதிரிகள் சுட்டபோது பைனாகுலரின் இடதுபுறம் நுழைந்து வலதுபுறம் சென்றது என்றும் அதை இன்னும் பத்திரமாக பொக்கிஷம் போல் வைத்திருப்பதாகவும் சொன்னார்.
மூன்று இரவுகள் நான்கு பகல் பல்லில் பச்சைத்தண்ணீர் கூடப்படாமல் காவல் காத்ததைச் சொன்ன போது ஓடிப்போய் கட்டிப்பிடித்து உச்சி மோந்து நமஸ்காரம் செய்யவேண்டும் போல இருந்தது. ரியல் ஹீரோ. ராசாய்யா நீ!! அடிக்கடி “ஜெய் காளி” என்று விண்ணுக்கு கையைக் குத்தி கோஷமிடும்போது நம்மையறியாமல் ஒரு தாய்நாட்டுப் பற்றோடு வீர உணர்ச்சி எழும்புகிறது. ஐடிஸி கிராண்ட் சோழா குளிரூட்டப்பட்ட அறையில் கார்கிலைக் கொண்டு வந்து காட்டினார்.
கார்ப்பரேட்டுகளில் பணிபுரிவதற்கும் கமாண்டாராகப் பணி புரிந்ததற்கும் என்ன வித்தியாசம் என்று கூட்டத்தில் ஒருவர் கேட்டார். கமாண்டராகப் பணி புரிந்த போது என்னுடைய கையசைப்பிற்கு ஆயிரம் வீரர்கள் என்னவென்றே கேட்காமல் எதிரிகள் மேலே குண்டு மழை பொழிவார்கள். கார்ப்பரேட்டில் சேர்ந்த பின்னர் தனக்கு ஒரு டீ வேண்டும் என்பதற்காக கை கால் எல்லாவற்றையும் அசைத்தபின்னரும் ஒருவர் ஆயாசமாக வந்து நின்று பின்னால் சொரிந்துகொண்டே ”ஜி.. இன்னும் கொஞ்ச நாழி ஆவும்” என்றாராம். கூட்டம் சிரித்தது.
கார்ப்பரேட்டுகளுக்கு எதாவது செய்தி சொல்ல விரும்புகிறீர்களா? என்றொரு கேள்வி. கார்ப்பரேட்டுகளில் லீடர்கள் இல்லை என்றார். எவருமே முன்னால் நின்று சாதகபாதகங்களை தன் தலைமேல் ஏற்றிக்கொண்டு பணிபுரிய விரும்புவதில்லை. பிழை ஏற்பட்டால் தனக்குக் கீழ் பணிபுரிபவன் மேல் போட்டுவிட்டு தப்பிப்பிழைக்க எண்ணுகிறார்கள். இதனால் ஒருபயனும் இல்லை. கார்ப்பரேட்டுகளில் லீடர்கள் வேண்டும் என்றார்.
உரை முடித்து லலித் ராய் கீழே வந்து அமர்ந்தவுடன் கார்கிலில் நமக்காகப் போரிட்டவரின் கையைப் பிடித்துத் தொட்டுப்பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்தது. ஓடினேன். கையைக் குலுக்கிவிட்டு ஒரு முறைக் கட்டிக்கொண்டேன். கார்கில் குளிரில் விரைக்க நின்று துப்பாக்கித் தூக்கிச் சண்டையிட்டது போல உடம்பு சிலிர்த்துக்கொண்டது. செல்ஃபி எடுத்து திருப்தியடைந்துகொண்டேன்.
செல்ஃபிக் குறிப்பு:
என்னுடன் எனது பாஸ் ரவீந்திரன் மற்றும் கம்யூனிகேஷன் கல்பனா. பின்னால் உதடு கடித்துச் சிரிப்பவர் எனது நெடுநாள் நண்பர் முரளி ஜெகன்னாதன். டாடா ஆள்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails