Monday, February 27, 2012

பரோபகாரி லக்ஷ்மி


புதிதாய்ப் பார்ப்பவர்களுக்கு லக்ஷ்மி அப்படி ஒன்றும் சத்புத்திரனில்லைதான். ஃபில்டர் காஃபிக்கு பழகிய அவரது நாக்கு சரக்குக்கும் சப்புக்கொட்ட மறுக்கவில்லை. உள்ளுக்கு தீர்த்தவாரி ஆகும் போது அரைப் பாக்கெட் வில்ஸ். பாக்கெட்டில் தட்டி வாயில் சொருகிக்கொள்வார். சிகரெட் புகை வளையம் வளையமாக ஊதும் போது பாக்கெட் கிழித்துப் பான்பராக். வாயில் பராக் மணக்க முக்கு பங்க் கடையில் புகை கசியும் வாயோடு பார்த்தவர்களுக்கு அவர் மலையாள திலகன் சிகப்பாக தமிழ்நாட்டுக்கு வந்திறங்கியதுப் போலத் தோன்றும். ஒவ்வொரு நாளும் போத்தல்களில் சிறைப்பட்ட ’பழைய சாமியார்’, ’மாவீரன்’ போன்ற எல்லாவற்றுக்கும் அடிநாதமாகிய புகழ்பெற்ற தீர்த்தவாரிகள்தான் ஏனைய அவருடைய கெட்டபழக்கங்களை அந்நாளுக்கு நிர்ணயம் செய்கிறது. போன செண்டென்ஸ் நீங்கள் படித்து முடிக்க எடுக்கும் கால அவகாசத்தில் ஒரு கட்டிங் உள்ளேயிறங்கியிருக்கும்.

நானாவிதமான பழக்கங்கள் இருந்தும் வீட்டுக்கும், நண்பர்களுக்கும் வேலை செய்த பேங்கிற்கும் லக்ஷ்மி சொக்கத் தங்கம். 22 கேரட். லாஹிரி வஸ்துக்கள் அவரது அன்றாடக் கடமைகளில் எப்பவுமே காலை நீட்டிக் குறுக்கிட்டதில்லை. பாங்க்கில் கஸ்டமர்களை பார்க்க ஆரம்பித்தாரென்றால் எல்லாவற்றையும் முடித்து ஏறக்கட்டிவிட்டுதான் தயிர்சாத லன்ச் பாக்ஸைத் தொடுவார். குடித்துவிட்டு ரோட்டில் நாலுபேருடன் சட்டை கிழிய கலாட்டா செய்தார், வேஷ்டி அவிழ்ந்து ஜட்டியோடு ப்ளாட்ஃபார்மில் தெருநாயோடு விழுந்து கிடந்தார் போன்ற அவப்பெயர்கள் எப்போதும் அவருக்கு கிடையாது. ஜெண்டில் குடியர். ”மோந்து பார்த்தாலே சரக்கோட லக்ஷனம் தெரியாதா?” என்று மதிவாணன் பெண் கல்யாணத்தில் லக்ஷ்மி புது சித்தாந்தம் படித்தபோதுதான் அவருடைய மகிமை பலருக்கு புரிந்தது.

ரயிலில் கஷ்டப்பட்டுத் தம் பிடித்து அப்பர் பர்த் ஏறும் உயரம். அங்கொன்றும் இங்கொன்றுமாய் பிசுறு பிசுறாய் முடி வளர்ந்த முன்தலை. அதைப் பற்றி கேட்டால் “35 வயசுலேர்ந்தே எனக்கு ஹேர் கட் செலவு மிச்சம். பார்பர் ஷாப்ல அசிங்க படம் இன்னும் ஒட்றானா மாரிமுத்து?” என்று எதிர்கேள்வி கேட்பார்.

குட்டி குட்டி முட்புதர்களாய் கருகரு புருவங்கள். ஹிரன்யகசிபுவின் ரத்தம் குடித்த நரசிம்மர் போல வெற்றிலைப்பாக்கு குதப்பி உதடோரங்களில் சின்ன சிகப்பு திட்டுக்கள். நாசியிலிருந்து வெளியே எட்டிப் பார்த்த ஸ்டே வயர் முடிகள் இரண்டு. பழங்காலத்து ஆண்டென்னா போல வளர்ந்த காதோரத்து புசுபுசு ரோமங்கள். முதலிரண்டு பட்டன் போடாத பாக்கெட்டிலும் மாரிலும் சிறு சிறு தீவுகளாய் வெற்றிலைக் கறை படிந்த அரைக்கைச் சட்டை. மாலை நேரங்களில் பரிஜாரகன் கட்டும் அழுக்கு வேஷ்டி போன்ற ஒன்று இடுப்பில். ருத்ராட்ச பார்டர் போட்டது. வலது கையில் ந்யூஸ்பேப்பரில் பொட்டலம் கட்டப்பட்ட கும்பகோணம் வெற்றிலை, கை சீவலும் சுண்ணாம்பும்.

பிரதிமாதம் டாண்ணு ஒன்னாம் தேதி காலை பத்து மணிக்கு நெற்றியில் ஸ்ரீசூர்ணத்துடன் மேலே சொன்ன காஸ்ட்யூமுடனும் எஸ்.பி.ஐ ஏ.டி.எம் வாசலில் லக்ஷ்மி சாரைப் பார்க்கலாம். ஆமாம். அவர் ஆறு வருஷத்துக்கு முன் ரிடையர் ஆகிவிட்டார். பென்ஷன் வித்ட்ராயல் பண்ண வருவார்.

”மஞ்சத்தூள் அம்பது கிராம், அச்சுவெல்லம் ஒரு கிலோ, பெருங்காயப் பவுடர் சின்னது அம்பது கிராமோ நூறு கிராமோ, மிளகு அந்த ப்ளாஸ்டிக் கவர்ல போட்டது வேண்டாம் நாற்ரது... வேற வாங்குங்கோ... கோதுமை ரவா அரைக்கிலோ... சன்னமா இருக்கறது... போன தடவ மாதிரி மோட்டா மோட்டாவா வாங்கீடாதீங்கோ... உப்புமாவுக்கு மிக்ஸில ஒருதடவை பொடிச்சுப் போட வேண்டிருக்கு.. கேட்டேளா....” என்று மாமியின் குரலுயர்ந்த அதிகாரத்துடனும் மங்களகரமான மஞ்சள்தூளுடனும் தயாராகும் மாசாந்திர சாமான் லிஸ்ட்டை ஒரு ஸ்லிப்பில் குறித்துச் சட்டைப் பையில் சொருகிக்கொண்டு ”பை கொடும்மா” என்று பதவிசாக வாங்கி தோளில் போட்டு பிரதி மாதம் ஐந்து தேதிக்குள் மளிகை வாங்கிக்கொண்டு வந்து வீட்டில் இறக்கிவிடுவார்.

ஏசி டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோர்ஸையெல்லாம் எட்டிக் கூட பார்க்கமாட்டார். செல்வன் அண்ணாச்சிக் கடையில் லிஸ்ட்டைக் கொடுத்து வாசலில் போட்டிருக்கும் குட்டை ஸ்டூலில் உட்காருவார். அரசியல் வம்பு பேசமாட்டார். ராமன் ஆண்டாலென்ன ராவணன் ஆண்டாலென்ன என்பது அவரது கட்சி. கைப் பொட்டலத்தைப் பிரித்து வெற்றிலை எடுத்து செல்லமாக நீவி காம்பு கிள்ளி சீவல் சுண்ணாம்பு சேர்த்து போட்டுக்கொண்டு கம்மென்று வீதியைப் பார்க்க உட்கார்ந்துவிடுவார். புகையிலையை ஒரு சின்ன உருண்டையாய் உருட்டி வாய்க்குள் அதக்கிக்கொள்வார். “சார்! ரெடி” என்று செல்வனின் குரல் ஓங்கி ஒலித்ததும் பையை வாங்கி தோளில் போட்டுக்கொண்டு வீட்டுக்கு வருவார்.

”லக்ஷ்மி.... இருபதினாயிரம் குறையறது.. டேலி ஆகலை... என்ன பண்றதுன்னு தெரியலையே” என்று டெல்லெர் நாராயணன் கவலையாய் கையைப் பிசைந்தபோது ”டோண்ட் வொர்ரி நானா, கண்டுபிடிச்சுடலாம். எல்லோரும் நமக்கு தெரிஞ்சவாதானே” என்று தைரியப்படுத்தி ஆபத்பாந்தவனாக காத்து ரட்சித்தார்.

அன்றைக்கு ட்ரான்ஸாக்‌ஷன்ஸ் லிஸ்ட் எடுத்து ஒவ்வொருத்தராக காண்டாக் செய்து கடைசியில் பேர்ல் எக்ஸ்போர்ட்ஸ் அற்புதராஜிடம் போயிருந்ததைக் கண்டுபிடித்து வாங்கிக்கொடுத்தார். “சாரி சார்! நானும் கவனிக்கலை. இப்பத்தான் பார்த்தேன். ரெண்டு நூறு ரூபா கட்டு அதிகமா இருக்கு” என்று ஆபிஸ் பையனிடம் அற்புதராஜ் பணம் கொடுத்து அனுப்பும் போது இரவு 9 மணி ஆயிருந்தது.

“லக்ஷ்மி.. ஒரு வாரம் முன்னாடி தான் எம் பொண்ணுக்கு சிசேரியன் ஆயிருக்கு. மாப்பிள்ளை ஒன்னுத்துக்கும் ப்ரயோஜனம் இல்லை. ஹாஸ்பிடலுக்கு பணம் தரனும். பகவானே! இப்டி சோதிக்கிறியே... எனக்கு உன்னை விட்டா யார் இருக்கா? இப்ப என்ன பண்ணுவேன்னு பாத்ரூம்ல அழுதேன். பகவான் உன் ரூபத்தில உதவி பண்ணினார்” என்று நாராயணன் அப்படியே லக்ஷ்மி சாரின் கையைப் பிடித்துக்கொண்டு ஒரு குரல் அழுதார். ஒரு சின்ன சலனம் கூட காட்டாமல் கூரையை நோக்கி கையை காண்பித்துவிட்டு பாங்கை விட்டிறங்கி நடையை கட்ட ஆரம்பித்துவிட்டார்.

”ஒன்னும் இல்லை. நகருங்க.. அப்டியே கொஞ்சம் அவரைக் காத்தோட்டமா விடுங்க. அவர் ரிலாக்ஸ் பண்ணிக்கட்டும். சார் உங்களுக்கு ஒன்னுமில்லை. பயப்படாதீங்க. நான் டாக்டரைக் கூப்பிட்ருக்கேன்” என்று கிணற்றடியில் வழுக்கி விழுந்த ஈ.பி. ஜெயராமன் அப்பாவை கொண்டு வந்து ஹாலில் கிடத்தி உதவி செய்தபோது பக்கத்தில் நின்ற ஈ.பி.ஜெ அம்மா கையெடுத்து கும்பிட்டார்கள். பெண்ணுக்கு தலைப் பிரசவம் என்று ஜெயராமனும் அவரது மனைவியும் யூ.யெஸ் பறந்து போயிருந்தார்கள்.

காலையும் மாலையும் வீட்டிற்குள் தலையை நீட்டி ஒரு எட்டுப் பார்த்துக்கொண்டது லக்ஷ்மி சார்தான். தெருவில் யாருக்கு என்னவென்றாலும் அவரை முதல் வரிசையில் பார்க்கலாம். அடித்துப் பெய்த மழையில் டாக்டரை காரேற்றிவிட்டு வந்த லக்ஷ்மியை அவரது மனைவி “ஜுரம் வந்தா என்ன பண்றது. பெத்துப்போட்ட ஒரு பயலும் பக்கத்துல இல்ல.” என்று படபடவென்று பொரிந்தபோது ”ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்தாசை பண்ணத்தானே மனுஷ்ய ஜென்மம் எடுத்துருக்கோம்” என்று நிதானமாக சொல்லிவிட்டு தலையை துவட்டிக்கொண்டு  சாப்பிட உட்கார்ந்துவிட்டார். நீங்க நினைக்கிறது கரெக்ட். சாப்படறதுக்கு முன்னாடி ஒரு கட்டிங் போட்டுவிட்டுதான் வந்தார்.

அடுத்த மாதம் ஊருக்கு வந்திறங்கிய பின்னர் ஈ.பி. ஜெயராமன் அரை மணி லக்ஷ்மி சார் கையைப் பிடித்துக்கொண்டு அப்படியே உருகிவிட்டார். “சார்! ரொம்ப தேங்க்ஸ். ரொம்ப தேங்க்ஸ். நாங்க அப்டியே துடிச்சுப் போய்ட்டோம். என்ன பண்றதுன்னு தெரியலை. கையும் ஓடலை. காலும் ஓடலை. அங்க அவளுக்கு துணையா இருக்கறதா இல்ல இங்க இண்டியாவுக்கு ஓடி வர்றதான்னு. அவருக்கே வர்ற மார்ச் வந்தா தொன்னூறு முடியறது. நீங்க இல்லைன்னா.... எங்க வாழ்நாள்ல இத நாங்க மறக்கவே மாட்டோம்.”

இவ்வளவுக்கும் ஒரு சின்ன புன்னகையை உதிர்த்துவிட்டு அசையாமல் கேட்டுக்கொண்டிருப்பார். ”சரி... பார்ப்போம்..” என்று முடித்துக் கொண்டு கைகுலுக்கிவிட்டு நகர்ந்துவிடுவார். ஏழு மணி சுமாருக்கு ஒயின் ஷாப் சென்று பார் பாலிடிக்ஸில் ஈடுபடாமல் வாயில் கடகடவென்று சரித்துக்கொண்டு நிதானமாக வீடு வந்து சேருவார். தெருமுனையில் ஒரு தம் அடிப்பார். வாசலில் உட்கார்ந்து ஒரு பத்து நிமிஷம் பான்பராக் அரைத்து துப்பிவிட்டு நேரே கொல்லைப்புறம் சென்று கைகால் அலம்புவார். சப்ளாங்கால் போட்டுக்கொண்டு தரையில் உட்கார்ந்து மோர் சாதத்துக்கு மாங்காத் தொக்கு தொட்டுக்கொண்டு சாப்பிட்டுவிட்டு வெறும் தரையில் அக்கடான்னு கட்டையை நீட்டிவிடுவார். ஃபேன் க்ரீச்சிடும் சத்தமெல்லாம் காதுக்கு ஏறவே ஏறாது.

பெரிய பையன் ஆஸ்திரேலியாவில் நெட்வொர்க்கிங் எஞ்சினியர். சின்னவன் இங்கேயிருந்து அமெரிக்க நேரத்திற்கு வண்டியனுப்பி ஆட்களை ஏற்றிக்கொண்டு வந்து வேலை பார்க்கும் ஒரு கால் செண்ட்ரில் மேனேஜராக வேலை பார்க்கிறான். “கோமா! யார் கையையும் எதிர்பார்த்து நாம இல்லை. அவாவா அவாவா வேலையைப் பார்த்துண்டு இருந்தா போதும். யாருக்கும் கஷ்டம் கொடுக்காம கடைசி வரைக்கும் இப்படியே இருந்து கரை சேர்ந்துட்டோம்னா அது போரும்டி” என்று அடிக்கடி சொல்வார்.

என்ன கேட்டீங்க?

இப்ப என்ன அவருக்கா?

”ப்ரீத்திங் ப்ராப்ளமா இருக்குன்னு சிரமப்பட்டார். லொக்கு லொக்குன்னு இருமினார். உடம்பு ஒரேடியா ஜில்லிட்டுப்போய் குளிப்பாட்டி விட்டா மாதிரி வேர்வை ஓடறது. எனக்கு வெலவெலன்னு ஆயிடுத்து...” மாமி யாரிடமோ அங்கலாய்த்துக் கொண்டிருந்தாள். “கொழந்தைக்கு மொட்டை அடிச்சுக் காது குத்தறோம். எல்லோரும் ஃபங்ஷனுக்கு வந்து இறங்கிட்டாங்க. இந்த டயத்ல போய் நாம ஹாஸ்பிட்டல்ல நிக்க முடியுமா? சொல்லுங்க?” இது ஈ.பி. ஜெயராமன். ரெண்டு நாளா லக்ஷ்மி பேச்சு மூச்சில்லாம ஜி.ஹெச்ல படுத்துருக்கார். ”மம்மி! டு ஐ நீட் டு கம்?”  என்று ஆஸ்திரேலியா எஞ்சினியர் கேட்கிறான். ”இந்த வாரம் ஃபுல்லா நைட் ஷிஃப்ட்டு. சனி ஞாயிறு வந்து பார்க்கறேம்மா” இது உள்ளூரில் இருக்கும் சின்னவன். பரோபகாரியான லக்ஷ்மி சார் வாயிலும் மூக்கிலும் ட்யூப் சொருகி தலைமாட்டில் உள்ள மானிட்டரில் பச்சைக் கோடுகள் ஏற்ற இறக்கங்களுடன் ஓட சத்தமேயில்லாமல் எவரையும் ஹிம்சிக்காமல் சாந்தமாக படுத்திருக்கிறார்.

யாராவது போய் ஹெல்ப் பண்ணுவீங்களா?

பட உதவி: http://wvs.topleftpixel.com/

-

Wednesday, February 22, 2012

கிண்டில்

கிண்டில் என்பது 3000 புத்தகங்கள் அடங்கிய அடுக்கி வைக்கப்பட்ட ஒரு அலமாரி நம்முடைய பாண்ட் பாக்கெட்டில் எப்போதும் இருப்பது போல. புத்தகப் புழுக்களுக்கு ஒரு வரப்பிரசாதம். அமேசான் இணையதளத்தில் லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தங்கள் இலவசமாக தரவிறக்கிக்கொள்ள கிடைக்கிறது. இதில் ஷேக்ஸ்பியர், டால்ஸ்டாய், தாஸ்தாயேவ்ஸ்கி (இவரது பெயரை உச்சரிக்கும்போது விஸ்கி ஞாபகம் வருவதை தவிர்க்கமுடியவில்லை), சார்லஸ் டிக்கன்ஸ், ஜேன் ஆஸ்டின், மஹாத்மா காந்தி என்று பல அமர காவியங்கள் படைத்த நாயகர்கள் எழுதிய புத்தகங்களும் அடக்கம். கிண்டிலுக்கென்று சல்லிசாக நேற்று அச்சேறிய புத்தகங்களும் நேற்றைக்கே கிடைக்கின்றன. 

டவுன்லோட் செய்துவைத்துக்கொண்டு காலையில் பாத்ரூம் கம்மோடில் உட்கார்ந்து கொண்டு படிக்கலாம். இல்லையேல் நெரிசலான பஸ்ஸில் இடிபாடுகளுக்கு இடையே ஜன்னலோர யுவதியை லுக் விட்டுக்கொண்டேயும் படிக்கலாம். கையில் பிடித்திருப்பது சுலபம். சுமையில்லை. மணிக்கட்டு வலிக்காது. இதில் அமுக்குவதற்கு ரெண்டே பட்டன் தான். அடியில் பவருக்கு ஒன்று நடுவில் மெயின் மெனுவுக்கு இன்னொன்று. பைலட் கேபின் போல ஆயிரம் பட்டன்கள் கொடுத்து ஆங்காங்கே அழுத்தச் சொல்லாததால் குழப்பமேயில்லை. திரையில் தோன்றும் மற்றதெற்கெல்லாம் அதன் மேலேயே டச்சிங் டச்சிங்தான். 

கிண்டிலின் முழு முதல் அட்வாண்டேஜ் அதன் ஈ-இங்க் டெக்னாலஜியில் உருவாக்கப்பட்டத் திரை மற்றும் இளவம் பஞ்சு போல இருக்கும் அதன் எடை. ஈ-இங்க் பற்றிய விசேட அறிவியல் அறிவு இங்கு தேவையில்லை எனினும் தெரிந்தால் அது நமக்கு மேலும் சுவாரஸ்யமளிக்கும்.

மொபைல், லாப்டாப் மற்றும் கணினித் திரைகள் எல்.சி.டி என்ற தொழில்நுட்பத்தில் தயாரானவை. இவைகளுக்கு சுயமாகவே வெளிச்சமிடும் தன்மை உண்டு. மின்சாரத்தின் உபயத்தில் ஒளிர்ந்து முன்னால் படங்களையும், எழுத்துக்களையும் நம் பார்வைக்கு விடும். இதனால் பன்னிரெண்டு மணி வெய்யிலில் வேர்க்க விறுவிறுக்க நடுரோட்டில் சென்றுகொண்டிருக்கும் போது யாராவது மொபைலில் அழைத்தால் மர நிழலுக்கு ஒதுங்கி சிகரெட் பற்ற வைப்பது போல ஸ்கிரீனை கையால் பொத்தி கண்களை இடுக்கி சிரமப்பட்டு யாரென்று பார்க்க வேண்டியிருக்கிறது. இல்லையேல் யாராவது கடன்காரனது காலை எடுக்கவேண்டியதாகிவிடும். எப்போதும் திரை ஒளிர்வதற்காக உறிஞ்சும் மின்சாரத்தால்தான் பாட்டரி கற்பூரம் போல கரைகிறது. சீக்கிரம் தீர்ந்துவிடுகிறது.

பல லட்சம் நுண்ணிய குழல்களுக்குள் கருப்பு மற்றும் வெள்ளை மசியினால் ஆன பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கக்கூடிய குட்டியோண்டு மைக்ரோ சைஸ் மாத்திரைகளை போட்டு மிதக்கவிட்டிருக்கிறார்கள். ஒரு வாசகத்தின் முடிவில் ஃபுல் ஸ்டாப் உருவாக்குவதற்கு மிதக்கும் கருப்பு மாத்திரைகளை திரையின் முன்னுக்கு கொண்டுவந்தால் அந்த இடத்தில் ஃபுல் ஸ்டாப் ரெடி. இப்படியாக திரையில் “A" போடுவதற்கு அதன் கோடுகளின் பாதையில் கருப்பு மை மாத்திரைகள் திரையின் மேல் எழும்பி வரும். ஏனைய இடங்களில் வெள்ளை மசி மாத்திரைகள் மிதந்து கொண்டிருக்கும். இதன் காரணத்தால் ஒரு முறை திரையில் ஒளிர்வது அப்படியே அதில் ஸ்டிக்கர் போல ஒட்டவைத்ததாகிவிடும். 

எல்.சி.டி போலல்லாமல் காண்பித்துக்கொண்டே இருப்பதற்கு மின்சாரம் தேவையில்லை. மீண்டும் அடுத்த பக்கம் திருப்பினால் அந்த பக்கத்து வாசகங்களை திரையில் பொருத்திவிட்டு சமர்த்தாக உட்கார்ந்துகொள்ளும். இதனால் விடியவிடியப் படித்தாலும் தூக்கம் கெட்டதால் கண் எரியுமேயன்றி கிண்டிலினால் கண்கள் சிரமப்படுவதில்லை. அந்தப் பிரச்சனைக்கு அது ஜவாப்தாரி ஆகாது. ஒரு முறை முழு சார்ஜ் சாப்பாடு போடுவது ஒரு மாதம் வரை நாம் படிக்க ஏதுவாக கிண்டிலை போஷாக்காக ஓட வைத்திருக்கிறது. இது தான் ஈ-இங்க் டிஸ்ப்ளேயின் வெற்றி ரகசியம்.

பின்னால் ஒளிரும் தன்மையில்லாததால் பெட்ரூமில் விளக்கணைத்த பின்னர் புள்ளைக்குட்டிகள் தூங்கியவுடன் தலைமாட்டுக்கருகில் வைத்துக்கொண்டு நடுநிசி வரைக்கும் படிக்கமுடியாது. ஒரு மெட்ராஸ் கொசு சைஸ் எல்.ஈ.டி லைட்டாவது அதன் கொண்டையில் சொருகிக்கொள்ள வேண்டும். கிட்டத்தட்டக் காகித புஸ்தகம் போலத்தான். வெளிச்சம் ஏற ஏற படிப்பது சுகம். அரைகுறை வெளிச்சத்தில் படித்தால் சீக்கிரம் சங்கரநேத்ராலயாவில் அப்பாயிண்ட்மெண்ட் ஃபிக்ஸ் செய்ய வேண்டிவரும். ஏற்கனவே சாளேஸ்வரம் வந்தவர்கள் கண்ணின் ஃபோகல் லெங்த்துக்கு தக்கவாறு எழுத்துக்களை குண்டாகவோ சன்னமாகவோ வைத்துக்கொள்ளலாம். அர்த்தம் தெரியாத வார்த்தைகளை தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் அப்படியே திரையில் அழுத்திப் பிடித்தால் அமெரிக்கன் டிக்‌ஷனரி திரையில் தோன்றி “இந்தா பிடி” என்று விளக்கத்தை அள்ளித் தெளிக்கிறது.

இன்னும் தமிழ்ப் புத்தகங்களுக்கு கிண்டில் இடம் தரவில்லை. தமிழை ஆட்கொள்வதற்கு தொழில்நுட்பம் வளரவேண்டும். காதாரக் கேட்க வேண்டும் என்று விரும்பினால் புத்தகத்தை படித்துக் காண்பிக்கும் “Text-to-Speech" வசதியும் இருக்கிறது. பெண் குரலில் கேட்டால்தான் உங்கள் மனதுக்குப் பதியும் என்றால் அதையும் மாற்றிக்கொள்ளலாம். வாயில் வாழைப்பழம் வைத்துக்கொண்டு பேசும் அமெரிக்க ஆக்செண்டில் இருப்பதால் புரியுமா என்று பார்க்கவேண்டும். புரியவில்லை என்றால் ஒரு டச்சில் நிதானமாக படிக்கவைக்கலாம். இல்லையில்லை நான் பீட்டர், ஷெல்லி பைரன் ஷேக்கு போன்றோர் என் உறவினர் என்று நீங்கள் சொன்னால் மூச்சு விடாமல் படிக்கச்சொல்லியும் கேட்கலாம். 

ஒரு புஸ்தகம் படித்துக்கொண்டிருக்கும் போது தூக்கம் கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தால் அப்படியே மூடிவைப்பது போல பொசுக்கென்று அணைத்துவிடலாம். அடுத்தமுறை மெனுவில் அந்த புஸ்தகத்துக்கு போனால் நேற்றைக்கு ராத்திரி விட்ட இடத்தில் மறுபடியும் திறக்கிறது. இங்கொன்றும் அங்கொன்றுமாய் பத்து புஸ்தகத்தை தஸாவதானித்தனமாக ஒரே நேரத்தில் படிப்பது எளிது. இரண்டு கைகளால் ஒரே நேரத்தில் இரண்டு ஆவணங்களில் கையெழுத்திடும் கலை போல இரண்டு கண்களால் இரண்டு புஸ்தகம் படிக்க முடிந்தால் அதிசீக்கிரமே ஞானியாகிவிடலாம் என்பது திண்ணம்.

வைஃபை என்கிற கம்பியில்லா இணைய இணைப்பு மூலமாக புத்தகங்களை சில நொடிகளில் இறக்கிவிடலாம். சயிண்டிஃபிக் அமெரிக்கன் இணையதளம் சிபாரிசு செய்த மூளையைக் கூராக்கும் பத்து நாவல்கள் அமேசானில் இலவசமாக கிடைக்கிறது. அதன் சுட்டி இங்கே: http://www.scientificamerican.com/article.cfm?id=fiction-stories-that-sharpen-your-mind நான் இறக்கிய முதல் புத்தகம் எது தெரியுமா? ஷேக்ஸ்பியரின் மெக்பத். Fair is foul, and foul is fair: Hover through the fog and filthy air என்று படித்துக்கொண்டிருக்கிறேன். எதிர்காலத்தில் இந்த ஈ-இங்க் டெக்னாலஜி கோலோச்சும் என்பதில் திசுவளவும் ஐயமில்லை!

#கிண்டிலில் பல மாடல்கள் உள்ளன. 1500 புத்தகம் சேர்த்து வைத்துக்கொள்ளும் அளவிலிருந்து கிடைக்கிறது. 3G தொலைத்தொடர்பு வசதியுடனும் உள்ளது. கிண்டில் ஃப்யர் என்ற புத்தும்புது மாடல் கலர்த்திரையோடு மார்க்கெட்டில் உலவுகிறது.

##இப்பதிவின் முகப்புப் படம் அமேசான் கம்பெனியார் அவர்களது வலையில் இழுத்துப் போட்டிருந்தது!! 

### தொழில்நுட்பப் பதிவெழுதி ரொம்ப நாளாச்சு!

Monday, February 20, 2012

அமலா பால்


#இப்ப புரிஞ்சுருக்குமே! எனக்கு எழுதவே நேரமில்லைன்னு.

##அடியேன் விளையாட்டா கொலாஜிய இது ஃபேஸ்புக்ல 50 ஷேருக்கு மேல போய்கிட்டு இருக்கு.

Tuesday, February 14, 2012

கதையின் தலைப்பு கடைசியில் உள்ளது!


"எவ்வளவு ஆவும்?"
"அம்பது கோடி"
"அம்பது கோடி? டூ மச். ரொம்ப ஜாஸ்தி"
"அந்தக் காலத்த நினைச்சு பாரு...இது மாதிரி இன்ஸ்டென்ட்டா முடியுமா? பார்த்து, பேசி, பழகி, ஜல்சா பண்ணி...."
"இருக்கலாம்.. ஆனாலும் ரேட்டு ரொம்ப ஜாஸ்தி.."
"இந்த ஐட்டத்துக்குதான் அம்பது கோடி.. வேற ஏதாவது சப்பையைக் காமி ரேட் குறையுமான்னு பார்க்கலாம்"
"நானே போய் ஒருதடவை பேசி என் அதிர்ஷ்டத்தைப் பார்த்துடலாம்.."
"நாங்களா தடுக்கறோம்.. போய் பாருங்க.."
"கொஞ்சம் பார்த்து சொல்லுப்பா..." என்று ஐம்பதாவது முறையாக மானம் போக மண்டியிட்டு கேட்காத குறையாக கேட்டுவிட்டேன். ஆசை யாரை விட்டது.

There are two tragedies in life. One is not to get your heart's desire. The other is to get it. அப்டீன்னு பெர்னார்ட் ஷான்னு ஒரு ஆள் ரொம்ப வருஷங்களுக்கு முன்னாடியே சொல்லியிருக்கான்.

இந்த விலை படியாத போதுதான் ”ச்சீ..சீ.. இந்தப் பழம் புளிக்கும்னு” பல இளைஞர்கள் விர்சுவல் ரியாலிட்டி பக்கம் தாவிடறாங்க.

"இங்க பாருப்பா ஜீவன்... நீ நரசுக்கு தெரிஞ்ச பார்ட்டின்னுதான் இந்த ரேட்டு.. முடியாதுன்னா ஆள விடுப்பா.. கவர்ன்மென்ட்டுல கூட ஏக கெடுபிடியா இருக்கு.. இதுக்கு தண்டனை என்ன தெரியுமா? HPZ(Highly Polluted Zone) ஜெயில்ல ஆறு மாசம் கடுங்காவல். பழைய பாட்டரி, இருபதாம் நூற்றாண்டு கம்ப்யூட்டர் மானிடர், இத்துப்போன டி.வி, எலெக்ட்ரானிக் ஐட்டங்கள் எல்லாத்தையும் அடிச்சுத் துவைச்சு ரீ-சைக்கிள் பண்ற இடம். ஒரு மாசம் அங்க உள்ள இருந்துட்டு வந்தா தெரியும். தா பாரு.. இந்த இந்தப் பக்க காதும் அந்தப் பக்க கண்ணும் ஏன் இப்படி கருப்பா சூம்பிப் போன மாதிரி இருக்கு தெரியுமா? போன ஜூன்ல உள்ள போயிட்டு வந்தேன்.. அதனாலதான்.. அதெல்லா எதுக்கு உனக்கு.. "

புரோக்கர் கறார் பேர்வழி. கொஞ்சமும் விலை இறங்குவதாக இல்லை. ஆதி காலத்தில் ஏதோ இளவட்டக் கல்லாம். ஊருக்கு வெளியே மரத்தடியில் இருக்குமாம். தலைக்கு மேலே அதைத் தூக்கி நிரூபிச்சா போதுமாம். அப்படி இருந்தா எவ்வளவு ஈசி.

போன வாரம் ப்ரௌனி வீட்டுல கூட ஏதோ பழைய படத்துல பழந்தமிழன் ஒரு ஆள் வெள்ளை வேஷ்டி சட்டை போட்டுக்கிட்டு இருந்தான். ஒரு வயசான ஆளு. அந்த மாதிரி ஒரு பெரிய கல்லை எடுத்து அசால்ட்டா அந்தண்டை பக்கம் போட்டுட்டு ஒரு சிரி சிரிச்சுட்டு போனார். படம் பேரு சரியா தெரியலை, ஏதோ "மல்லு வேட்டி கட்டி இருக்கு.. அதுல மஞ்ச வந்து ஒட்டிக்கிச்சு" அப்பிடின்னு ஒரு பாட்டு பாடிச்சு. கீழே க்ளிப் போட்டு பாட விட்டாமாதிரி அவஸ்தையில பாடாம சுகமா இருந்தது அந்த இசை.

ஆனா இந்த மெதட் இப்பதான் லேட்டஸ்ட் ஹிட் ஆயிருக்கு. 100% உத்திரவாதம். நாம நினைச்சதை நிச்சயமா அடையலாம். போன வாரம் அந்த ஒட்டடை குச்சி நரசிம்மன் கூட நூறு மாடி "Splendor" பஜார் முழுவதும் பளபளக்க ராஜநடை போட்டு கைகோர்த்து கூட்டிட்டு போனபோது பாதிபேர் இரை விழுங்க வாய்திறக்கும் முதலை மாதிரியும், உள்நாக்கு தெரியும்படியும் "ஆ" காட்டி கண்ணால் பார்த்ததை நெஞ்சுக்குள் விழுங்கினார்கள். யாரோ நகாசு வேலை நன்றாக தெரிந்த பயோ டெக்னாலஜிஸ்ட் தான் இப்படி திறமை முழுவதும் காண்பித்து இதில் இழைத்து விளையாடியிருக்கவேண்டும். எல்லாமே ஒரு மில்லி மீட்டர் குறையாம பார்த்து பார்த்து அளந்து செஞ்சு ஆயில் போட்டு அசெம்பிள் பண்ணினாமாதிரி.

நான் முடிவு செய்து விட்டேன், அடைந்தால் அனாமிகா இல்லையேல் விஷ காஸ் ஸ்டேஷன் சென்று ப்ராணஹத்தி செய்துகொள்வதென்று. இப்படி தன்னுயிரை மாய்த்துக்கொள்ள ஏதுவாக மக்களுக்காக ஊருக்கு ஒன்றாக அரசு அமைத்திருக்கும் "விஷ வாயு கொட்டகை' க்கு ஒரு அநேக கோடி நமஸ்காரம். சிடிசன் கார்டை பிளாக்-ல் விற்றால் ஐம்பது கோடி கிடைக்கலாம். "காதல் நரம்பு" ஊசியை அந்த புரோக்கர் உதவியுடன் அவளுக்கு ஏற்றிவிட்டால், நம்மை ஓரக்கண்ணால் பார்த்தாலே அவளுக்கு நெஞ்சில் காதல் சுரக்கும். இந்த நூற்றாண்டில் நானும் நிஜ காதல் கொண்டேன் என்று எல்லோரிடமும் ஐ.பி பிராட்காஸ்ட் செய்துகொள்ளலாம். வெந்துபோவார்கள். எல்லாம் பயோகெமிஸ்ட் அருள் இருந்தால் நடக்கும். நடக்குமா பார்க்கலாம்.

(இந்த இடத்தில் ஜீவன் தன் வாயால் சொன்ன கதை முடிகிறது. இக் கதையின் அடிச் சொருகல் கீழே)

ஸிந்தெடிக் ரோடில் டிராஃபிக் அதிகமாக இருந்ததால் தன்னுடைய எரிவாயு இருசக்கர வாகனத்தில் 'Flight Mode'ஐ அழுத்தி லேன்ட் ஆகும் விமானத்தில் அடிபடாமல் ஒரு 'கட்' கொடுத்து லோ ஃபிளையிங்கில் ஆகாய மார்கமாக சிடிசன் கார்டை பிளாக் மார்க்கெட்டில் விற்க பறந்தான் ஜீவன்.

இந்தச் சம்பவம் நடந்த 3030 AD யில் வெகுஜனங்கள் Virtual Reality -இல் கல்வி, காதல், கலவி மூன்றையும் திகட்ட திகட்டப் பெற்றார்கள். ஜீவன் போன்றோர் ரத்தமும் சதையுமாக உயிரோட்டமுள்ள ஒரு பெண்ணின் கழுத்தில் இருக்கும் காதல் நரம்பில் ஏவப்படும் அவர்கள் பற்றிய தகவல் அடங்கிய விசேஷ ஊசியால் உயிர்க்காதல் வரம் வாய்க்கப்பெற்றார்கள்.

இந்தக் காதலர் தின சிறப்புக் கதைக்கு TAGS #சயின்ஸ் ஃபிக்ஷன், காதல் கதை
-----------------------------------------------------
கதையின் தலைப்பு: “காதல் நரம்பு”
---------------------------------------------------------

Sunday, February 12, 2012

பாரீஸ் பாரீஸ்


பாரீஸ் போய் ரொம்ப நாளாச்சு. லண்டன் பாரீஸ் இல்லை. நமக்கேது அவ்வளவு ஹைவேஜு. காளிகாம்பாளும் கந்தகோட்டமும் அருள்பாலிக்கும் பாரீஸ். கனம் கோர்ட்டார் அவர்கள் நீதிதேவதைக்குக் கண்ணைக் கட்டிவிட்டு குழுமி நின்று நீதியைக் கட்டிக் காக்கும் சென்னையின் பாரீஸ். மூ.நாற்றத்தோடு மன்னைக்கு பஸ்ஸேரும் அந்தக்கால திருவள்ளுவர் பஸ் நிலையம் இருந்த பாரீஸ். ரோட்டை நோண்டிப் போடாத அக்கால பாரீஸ். தருமமிகு சென்னையின் பாரிமுனை.

இந்தக் குழந்தைக்கு ஒரு அப்பாம்மா வேணும் என்று கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு போனால் அது விரும்பியது போலக் கிடைத்துவிடும் என்று இந்தக் குழந்தையை ஒருவர் ஃபேன்ஸி கூரை வாங்க கையைப் பிடித்து அழைத்துப்போனார்.

பாரீஸ் வழக்கம் போல ஜேஜேவென்று இருந்தது. பழக்காரர்களும், ஆட்டோக்களும் கொஞ்சமும் அவர்களது நெறி பிசகாது பாதிரோட்டில் தங்களது வேலைகளை கடமையாய் செய்துகொண்டிருந்தார்கள். இன்னமும் ”புரட்சித்தலைவர் வாழ்க” என்று இரட்டை இலை, எம்ஜியார் படம் போட்ட ஒரு அற்புத ரிக்ஷாவைப் பார்தேன். கையைக் கட்டிக் கொண்டு ரிக்ஷா பின்னால் சிரித்தார் எம்ஜியார். சமீபத்தில் தீயில் பற்றிக்கொண்ட அரசாங்க எழிலகத்தைச் சீர் செய்துகொண்டிருந்தார்கள். ”சாவுகிராக்கி” திட்டு வாங்காமல் ஒருவாராக நீந்திக் கரையேறி ஃப்ளவர் பஜார் போலீஸ் ஸ்டேஷன் அருகில் தட்டுத்தடுமாறி வந்தேன். மொஸார்ட்டின் கீதம் போல சென்னையில் அமுக்கப்படும் அனைத்து ஹார்ன் சப்தங்களும் ஒருசேரக் கேட்டேன்.

போலீஸ் ஸ்டேஷன் அருகில் இருக்கும் 10x10 இடத்தில் நூறு நாற்சக்கர வாகனங்களை பலவந்தமாகக் கிஸ் கொடுக்க வைத்து அந்தப் பட்டியில் அடைத்துவைத்திருந்தார்கள். வரம்பு மீறிய சில இரண்டு சக்கரங்களும் கலப்பு மணம் செய்து கொண்டு காரோடு சேர்த்து அணைத்துவைக்கப்பட்டிருந்தது. டோக்கன் போடும் பையன் லங்கோடு அளவு இருக்கும் ஒரு சந்தில் “ரிவர்ஸ்ல வந்து உடுங்க சார்” என்று என்னுடைய ட்ரைவிங் திறமையை பரிசோதித்தான். எட்டு போடச்சொல்வதெல்லாம் வேஸ்ட். ஆர்.டி.ஓ ஆபீஸில் செக்கிங் இன்ஸ்பெக்டர் வேலைக்கு நிச்சயம் உபயோகப்படுவான்.

மயங்கினேன். தயங்கினேன். ”அப்டியே அந்த சிக்னலாண்ட போ சார். பாலல் பார்க்கிங் கீது”ன்னான். சிக்னலாண்ட வரைக்கும் தெளிவாகப் புரிந்தது. அப்புறம் கொஞ்சம் சிக்கலாக இருந்தது. போ என்று உரிமையுடன் ஒருமையிலும் சார் என்று மரியாதையும் கலந்து கூப்பிடும் மொழிச்சிறப்பு சென்னை மாகானத்துக்கே சொந்தமானது என்று விளங்கியது. முதல் சுற்றில் மங்காராம் எதிரே மரத்தடியில் இரண்டு லக்ஸுரி கார் ஸ்பேஸில் உட்கார்ந்து பூத்தொடுத்துக் கொண்டிருந்த அம்மாவிடம் “ஏம்மா இங்க பார்க்கிங் இருக்கு” என்று கேட்டேன். வெற்றிலைச்சாறை புளிச்சென்று துப்பிவிட்டு “இங்க அல்லா இடமுமே பார்க்கிங்குதான். வேல முஞ்சா கெளம்பிடுவாங்கோ...” என்று கையை அரைவட்டமடித்துச் சொன்னது “இப்பூவுலகே ஒரு பார்க்கிங் ஸ்லாட்தான். வியாபாரம் முடிந்தவுடன் கிளப்பிக்கொண்டு போய்விடுகிறோம்” என்கிற வாழ்க்கைச் சித்தாந்தத்தை எளிமையாக விளக்கியது.

நேர்த்திக்கடனாக கல்யாணம் ஆவதற்கு 108 அடிப்பிரதக்ஷினம் வேண்டிக்கொண்டு அம்மன் கோயிலில் பிரதக்ஷிணம் வரும் கன்னிப் பெண்கள் போல ஐந்து முறை சலிக்காமல் அந்த ஏரியாவைச் சுற்றினேன். இரண்டு பேர் நடந்து சுலபமாகக் காரைத்தாண்டி நடக்கும்போது கோட்டை ஸ்டேஷனில் இறங்கி பொருமையாக நடந்து வந்திருந்தால் கூட இந்நேரம் வாங்கிக்கொண்டு வீட்டுக்குப்போய் மம்மு சாப்பிட்டிருக்கலாம் என்று மனஸ் திட்டியது. பார்க்கிங் இடத்தை கண்களால் ஸ்கேன் செய்யும்போது தான் மெட்ராஸ் பாஷை பாலல் என்பது ஆங்கில Parallel என்று புரிந்தது. பார்க்கிங்கில் கேஷ் பேக்கோடு ஒழுங்குபடுத்தும் கலெக்ஷன் ஏஜெண்டை காணோம். ஆறாவது முறை முன்பு ஃபளவர் பஜார் போ.ஸ்டேஷன் அருகே காண்பித்த லங்கோட்டை பாதியாய் கிழித்த இடத்தில் வண்டியை நிறுத்தி பார்க்கிங் கிங்கானேன்.

இரண்டு ஆள் சேர்ந்து உள்ளே நுழைய முடியாத ஒரு சந்தருகில் “தேவராஜ முதலித் தெரு இப்படிப் போளாங்களா?”ன்னேன். “ஷ்ட்ரெயிட்டா போயி ரைட்டு திரும்பி லெஃப்ட்ல போ”ன்னார். கரெக்ட்டாக தப்பாக போனோம். கொஞ்சம் ஹிந்தி, கொஞ்சம் தெலுங்கு, நிறைய தமிழ் காதில் விழுந்தது. லெஃப்ட் போய் ரைட் திருப்பினால் ஒரு முட்டுசந்து. இடப்பக்கம் முந்தானையுடன் முக்காடு போட்ட வடக்கத்திய மாதாஜி கல்லாவில் உட்கார்ந்திருந்தார். ஒரு ரூபா காயின் நெற்றிப்பொட்டோடு இருந்த அவருக்கு கையில் ஒரு சூலம் கொடுத்தால் புடவை கட்டிய கல்கத்தா காளி போல இருப்பார். அவருடைய ”ஆவோஜி”க்கு முன்னால் ஒரு அவசர யூடர்ன் எடுத்தோம்.

நெருக்கமான சந்தில் மக்கள் அன்போடும் ஆதரவோடும் இருக்கிறார்கள் என்பதற்கு தேவராஜ முதலித் தெருவை எடுத்துக்காட்டாக சொல்லலாம். எல்லாக் கடைக்காரர்களும் பொருட்களை கடை உள்ளும் டெலிவரியை ரோட்டிலும் அமைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் ஈஷிக்கொண்டு நடந்தார்கள். காதலர்க்கு ஏற்ற இடம். மூன்று சக்கர சைக்கிள், ”சீறும் பாம்பை நம்பு! சிரிக்கும் பெண்ணை நம்பாதே” ஆட்டோ, கினிங் கினிங் என்று சினுங்கும் சைக்கிள், சைக்கிளில் சமோசா விற்கும் பாய்,  தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் விற்கும் பட்டை போட்ட வியாபாரி என்று இத்தனை இரைச்சலிலும் சம்ப்ரோக்ஷனம் கண்ட கேசவபெருமாள் கோயிலில் இருந்து எம்.எஸ்.சுப்புலெக்ஷ்மி பக்தி மணம் கமழ “குறையொன்றுமில்லை..” பாடிக்கொண்டிருந்தார். இவர் கடை ஷீட்டை அவர் கடை வாசலில் போட்டு அறுக்கலாம். தப்பில்லை. சகோதர பாசத்துடன் விட்டுக்கொடுக்கிறார்கள். அவர்களுக்கு கிராக்கி கிடைக்கும் வரை!

இரண்டு மூன்று கடை ஏறியிறங்கி பேரம் படிந்து ஷீட் வாங்கிக்கொண்டு வரும் போது கேசவப்பெருமாள் கோயில் ஒரு கதவு அடைத்துவிட்டார்கள், சமோசா பாய் தெருவோர டீக்கடையில் டீ அடித்துக்கொண்டிருந்தார், சனிக்கிழமை வாங்கிய பேமெண்ட்டில் மில்லி அடித்து பெண்டுலம் போல ஆடிக்கொண்டு ஒரு தொழிலாளி சென்று கொண்டிருந்தான், கல்லாவில் நூறையும் ஐநூறையும் ரகம் வாரியாக பிரித்து ஒரு கடை முதலாளி சொட்டை வியர்க்க எண்ணிக்கொண்டிருந்தார்(கையில் மோதிரம் ஜொலித்தது), இரவுக் கன்னி ஒருத்தி ஷோல்டர் பேக்கோடு வாடிக்கையாளரை எதிர்பார்த்து ஒதுங்கியிருந்தாள், “நாளைக்கு வேணா எனக்குத் துட்டு தரவேண்டாம் பாய்! ஆனா இன்னிக்கு குடு” என்று யாரோ அஷ்டலெக்ஷ்மி பெற்ற பெரியவர் ஒரு கடை வாசலில் கெஞ்சிக்கொண்டிருந்தார், மங்காராம் வாசல் பூக்கடைக்காரி தண்ணீர் தெளித்த பூவோடு வீட்டிற்கு கிளம்பிக்கொண்டிருந்தாள். என் சேப்பாயியை திருகி கிளப்பிக்கொண்டு வரும் போது இன்னொரு சாயந்திரத்திற்கு தயாராக பாரீஸ் உறங்கப்போயிற்று.

படம்: நன்றி:- www.thehindu.com

Wednesday, February 8, 2012

தவளைப் பாடம்

ஒரு குரூப்பாக பாழுங்கிணற்றைத் தாண்டி தவ்விச் சென்ற தவக்களைகளில் இரண்டு கால்தவறி அதற்குள் தொபகடீரென்று விழுந்துவிட்டது.

இரண்டு தவளைகளும் முழுத் தெம்பையும் உபயோகித்து குதித்து எம்பிப் பார்த்துக்கொண்டிருந்தன.

இதை மேலேயிருந்து வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த சக தவக்களைகள் “உஹும்.. இது ரெண்டும் பூட்ட கேஸு. இனிமே இவன்களால நிச்சயமா எந்திரிச்சு வெளியே வரமுடியாது.” என்று தலையாட்டி பெட் கட்டி விவாதித்துக்கொண்டிருந்தன.

கரைத் தவக்களைகளின் இந்தக் கேலி சம்பாஷனையைக் கேட்ட கிணற்றில் விழுந்த ஒரு தவக்களை திராணியற்று ஸ்தம்பித்துப்போய்விட்டது. சிறிது நேரத்தில் ஹார்ட் அட்டாக் வந்து அந்த இடத்திலேயே உயிரைவிட்டது.

இன்னொரு தவளை விடாமல் எம்பியது. அந்தத் தவளை அண்ணாந்து பார்த்து தப்பிக்க மூச்சுமுட்டக் குதிக்கும்போதெல்லாம் கிணற்றுக்கட்டையில் குழுமியிருந்த தவளைகள் கைகொட்டிச் சிரித்து அதன் முயற்சியை பழித்தன.

விடாக்கொண்டனாக தொடர்ந்து எழும்பி கடைசியாக ஒரு க்ளைமாக்ஸ் ஜாக்கிசான் துள்ளலில் வெளியே வந்து குதித்துவிட்டது அந்த தவக்களை. 


ஹீரோயிஸம் காட்டிய அந்தத் தவளையை எல்லாத் தவளையும் சூழ்ந்துகொண்டு “டேய்! ஹீரோ. எப்படிடா அவ்ளோ ஆழத்திலிருந்து தப்பிச்சே” என்று தோளைத்தட்டி விசாரித்தபோது திருதிருவென்று விழித்த தப்பித்த தவக்களை “என்ன?” என்று ஜாடையாக கையை ஆட்டியது.

ஐந்தாறு முறை எல்லாத்தவளையும் கூக்குரலிட்டு கேட்டபோதும் பதிலலிக்காததால் ஒரு மோட்டா தவக்களை வாயருகில் கையை கொண்டு வந்து “பேசமாட்டியா?” என்று அபிநயத்தது.

”பஹ்..”என்று சிரித்த அந்தத் த.தவளை, “ச்சே..ச்சே... நல்லா பேசுவேன். ஆனா காதுதான் சுத்தமாக் கேட்காது”ன்னுது.

நீதி: வாழ்க்கையில முன்னேறனும்னு நினைச்சா அதற்கு தடையா அனாவசிய டயலாக்ஸ் வரும்போது காதுக்கு “கே” இனிஷியல் மாட்டிக்கோங்க. உருப்படலாம்.

Monday, February 6, 2012

கமெண்ட்டரிக் காலங்கள்


சமீபத்தில் வழக்கம்போல இந்தியாவை ஆஸி. பின்னிப் பெடலெடுத்துக் கொண்டிருந்த இறுதி டெஸ்ட் கிரிக்கெட் பந்தயத்தை வானொலியில் நேர்முக வர்ணனை செய்துகொண்டிருந்த ப்ரொஃபெஸர் ரவி சதுர்வேதிக்கு இவ்வாண்டின் விளையாட்டு வர்ணனைக்காக பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது. வானொலியில் கிரிக்கெட் நேர்முக வர்ணனை கேட்பது அலாதியானது. சில நேர்முக வர்ணனையாளர்களின் கமெண்ட்டரி சிக்ஸர்களும், பவுண்டரிகளும் நம்மை நேரே ஸ்டேடியத்திற்கு அழைத்துச் செல்ல வல்லவை. கண்ணில்லாத திருதிராஷ்டிரனுக்கு சஞ்சயன் மஹாபாரதப் போர் கமெண்ட்டரி கொடுத்தது போன்றவை அவை.


டிவிக்களின் சர்வாதிகாரம் இல்லாதக் காலங்களில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ட்ரான்சிஸ்டர்கள்தான் லவ்வர்கள். பெரும்பான்மையான இந்தியனுக்கு இரத்தத்தில் ஊறிய சாராயம்.... ஸாரி! சமாசாரம் கிரிக்கெட். ப்ளாஸ்டிக் பாலோ ரப்பர் பாலோ அல்லது பவுன்சரில் மண்டையைப் பிளக்கும் விக்கி ப்ராண்ட் கார்க் பாலோ எதாகிலும் சுயசேவைத் திட்டத்தின் கீழ் தயாரித்த மட்டையைக் கொண்டு லொட்டுலொட்டென்றுத் தட்டிக்கொண்டிருப்பார்கள். சென்னையை விட மன்னையில் ஓடியாட இடம் ஜாஸ்தி. அடித்து ஆடலாம். சரி! இப்ப கமெண்ட்டரி கேட்போம்.

சிகப்பு கலரில் உள்ளங்கையகல செவ்வகப் பொட்டி. முன்பக்க கீழ் முக்கால் பகுதி ஸ்பீக்கருக்கு புள்ளிப்போட்ட ஓட்டையும் மேல் கால் பகுதியில் மெகாஹேர்ட்ஸும் நம்பரும் போட்டிருக்கும். உச்சியில் குடுமி போல கருப்புக் கயிறு கைப்பிடி. கமெண்ட்டரி கேட்க சரியான கம்பானியன் இந்த பானஸோனிக் கம்பெனியாரின் தரமிகு தயாரிப்பு. டெஸ்ட் மாட்ச் ஒரு நாள் என்ற போட்டி பேதமில்லாமல் ஓயாமல் கமெண்ட்டரிக்குக் காது கொடுப்போம். ”செய்திகளுக்காக டெல்லி அஞ்சல்...” என்று சொல்லி ஒரு பத்து பீப்பீப்புகளுக்கப்புறம் “ஆல் இண்டியா ரேடியோ, யே ஆகாஷ்வாணி ஹே.....” என்ற கட்டைக்குரல் “பிரதமமந்த்ரி நைதில்லிமே” ஆரம்பிக்கும்போது க்ரீஸில் உயிர் உசலாடிக்கொண்டிருந்த மனீந்தர் சிங் இந்நேரம் அவுட்டா நாட் அவுட்டா என்று நெஞ்சு திக்திக்கென்று பீதியில் அடித்துக்கொள்ளும்.

”இப்ப யார் இவனுங்கள்ட நாட்டு நடப்பைக் கேட்டா?” என்றுத் திட்டி ஏஐஆரை வாயாரச் சபிப்போம். முப்பது நிமிஷம் ஆங்கிலம், முப்பது நிமிஷம் ஹிந்தி என்று நேரம் பிரித்துக்கொண்டு நேர்முக வர்ணனை நடைபெறும். தெரிந்தது ஏனோதானோ ”ஏக் காம் மே ஏக் கிஸான் ரகுதாத்தா” ஹிந்தி. ஏக் தோ தீன், சார், சே, சக்கா, பச்சீஸ், அக்லிகேன் போன்ற வார்த்தைகளையும் விளையாடும் மட்டையாளரின் ஆட்ட சுபாவத்தையும் வைத்து ஹிந்தி வர்ணனைகளை ஒருமாதிரி புரிந்துகொண்டு ஒப்பேத்துவோம். “ஏக் சோ அட்டாரா தீன் கிளாடியோன் அவுட்....” என்று மூச்சு விடாமல் வர்ணித்தால் எங்களைப் பொருத்தவரையில் அது பாண்டித்ய ஹிந்தி. அதற்கு எங்களது மொழியறிவு பத்தாது. ”மூனு பேருக்கு மொத்த ஸ்கோர் எவ்ளோடா?” என்று அக்கம்பக்கம் விஷாரத் பூர்வாத் முடித்த பண்டிட்ஜீக்களிடமும் அத்யாபக்குகளிடமும் கையேந்தி ஹிந்திப் பிச்சை எடுத்து தெரிந்துகொள்வோம். அவர்களும் கை கால் விரல்களை விட்டு தோராயமாக எண்ணிச் சொல்வார்கள்.

ந்யூமராலஜி போல கமெண்ட்ரியாலஜி என்று ஒரு ஆட்ட ஆருடம் உண்டு. முக்கியமான இறுதிப் பந்தயத்தில் ஆங்கில வர்ணனையில் இந்தியாவுக்கு மளமளவென்று விக்கெட் சரிந்தால் அது அந்த மேட்சிற்கு ராசியில்லாத கமெண்ட்ரியாகிவிடும். இன்னும் ஒரு படி மேலே போய் விக்கெட் விழும்போது சொன்ன வர்ணனையாளர் ராசியில்லாதவர். ஒவ்வொரு முறையும் ஆங்கிலம் ஆரம்பிக்கும் போதும் இஷ்ட தெய்வத்திடம் ”விக்கெட் விழக்கூடாதே” என்று மனமுருக ப்ரார்த்தித்துக்கொண்டே பக்கத்தில் இருக்கும் ஸ்ரீராமுக்கு மொட்டை போடுவதாக வேண்டிக்கொள்வோம். நெஞ்சோடு சேர்த்து ரேடியோவை அள்ளியணைத்துக் காதையும் கொடுப்போம். சில சமயங்களில் இந்த அராசி அபாக்கிய நிலை ஹிந்தி கமெண்ட்ரிக்கும் வரும்.

எங்கள் வகுப்பு சிவா நெஞ்சுரம் மிக்கவன். சிக்ஸ் ஃபூட்டர். அவ்வளவு லேசில் யாருக்கும் பயந்துவிடமாட்டான். பத்தாவது படிக்கும்போதே கால்சட்டை பாக்கெட்டில் ட்ரான்ஸிஸ்டர் வைத்துக் கொண்டு ஹீரோயிஸம் காட்டி அசத்தியவன். நெடுநெடுவென்று வளர்ந்திருந்ததால் என்னைப் போல் மாப்பிள்ளை பெஞ்ச் கோஷ்டி. அவன் காதிற்கு மட்டும் துல்லியமாக கேட்கும் விதத்தில் ஆர்டர் செய்து வாங்கியது போல அந்த பானஸோனிக் ட்யூன் ஆகியிருக்கும். வகுப்பில் அவ்வப்போது அவனைக் “ஸ்கோர் என்ன?” கேள்வியாய் கழுத்து சுளுக்க திரும்பிப் பார்ப்போருக்கெல்லாம் நோட்புக்கில் கடைசிப் பேப்பரைக் கிழித்து ஸ்கோர்போர்டாய் மாற்றி பென்சிலால் எழுதிக் காண்பிப்பான். லாஸ்ட் பெஞ்சில் புறப்பட்ட அந்த பேப்பர் ஸ்கோர்போர்ட் முன் பெஞ்ச் வரை ஒரு வலம் வரும்.

ஒரு முறை கை தவறுதலாக ட்ரான்ஸிஸ்டர் காதோரத்தில் இருக்கும் வால்யூம் வளையத்தில் பட்டு “சே ரன்!!” என்ற உற்சாக உச்சஸ்தாயி கமெண்ட்டரி வாத்தியார் காதில் விழக்கூடாதென்று “ஆ” என்று க.பெஞ்சு மக்கள் அனைவரும் அலறி, “என்னடா அங்க சத்தம்?”என்ற வாத்தியார் மிரட்டலுக்கு “என் காலை மிதிச்சிட்டான் சார்” என்று ஐந்து பேர் கோரஸாகக் காரணம் கத்தினோம். ஏதோ வெறுங்காலில் அசிங்கத்தை மிதித்தது போன்ற பார்வையை எங்கள் மீது உதிர்த்து “உக்காருங்கடா”ன்னார். ஆனால் எங்களுக்கு அசிங்கமாக இல்லை. கூட இருந்து குழி பறிக்கும் கருங்காலிகளின் சதிவேலையால் வகுப்பறையில் ட்ரான்ஸிஸ்டர் கேட்பது கண்டுபிடிக்கப்பட்டு வகுப்பறையில் ரெய்டு நடந்தது. தடயங்கள் ஆதாரங்கள் எதுவும் கிடைக்காத பட்சத்தில் பள்ளி வாசலில் முழுமேனியையும் தடவி ஸ்கான் செய்து அனுப்பினார்கள். தடவுகையில் கண்ட இடங்களில் கை படும் போது எங்களது பத்தினித்தன்மை கொஞ்சம் கெட்டது. கிரிக்கெட்டில்லா வகுப்பு பாழ் என்ற புதுமொழிக்கேற்ப போட்டிக்காலங்களில் வகுப்பறை வாட்டிவதைத்தது.

பள்ளிக்கூட வாசலில் ரெங்கன் நினைவு பாஸ்கட் பால் கோர்ட் உண்டு. டொம் டொம்மென்று நிலமதிர பந்து தட்டி விளையாடுவார்கள். தென் திசையில் வடக்குமலையான் போல நாமமணிந்து சேவை சாதிக்கும் சாமியின் கடை இருக்கும். அது ஒரு பொட்டிக்கடை. பீடி சிகரெட் விற்பனை கிடையாது. சாக்பீஸ், கடலை பர்பி, தேன் மிட்டாய் அப்புறம் பக்கத்தில் பிள்ளையார் கோவில் இருந்ததால் சூடம், பழம், தேங்காய் கூட விற்றதாக ஞாபகம். மன்னையிலேயே டென்னீஸ் ராக்கெட்டுகளுக்கு சல்லிசாக அங்கே தரமான நெட் பின்னப்படும். சாமி ஒரு உயர்ந்த மனிதர். உயரத்திலும் உள்ளத்திலும். சதா கை நரம்பு புடைக்க ராக்கெட்டுக்கு நரம்பு கோர்த்துக்கொண்டிருப்பார்.

சாமிக்கு பின்புறம் திருவாசி போல மார்க்கோனி காலத்தில் வடிவமைத்த வால்வ் ரேடியோப் பொட்டி ஒன்று முக்காலமும் பேசிக்கொண்டிருக்கும். ஆன் செய்து வால்வ் கொஞ்சம் சூடனா பின்புதான் படிப்படியாக அதன் குரல் உயரும். அதன் சேஸிஸ் மரத்தாலானது. அவருக்கு திரிக்காலமும் அப்பொட்டிதான் உற்ற துணை. கிரிக்கெட் போட்டிக் காலங்களில் காலை பதினோரு மணி ரீசஸ் ப்ரீயடில் பள்ளிக் காம்பௌண்ட் சுவர் எக்கி “ஸ்கோர் என்ன?” என்று குரல் கொடுத்தால் சட்டென்று “ஸ்ரீகாந்த் 30, சாஸ்திரி 10” என்று உடனடி ஸ்கோர் சொல்வார். ஒரே ஆளுக்கு திரும்பத்திரும்ப ஜோசியம் கேட்டால் பேசப் பழகின கிளி கூட கடுப்பாகும் ஆனால் சாமி எள்ளளவும் கோபித்துக்கொள்ளமாட்டார். கிரிக்கெட் ஸ்கோர் சேவையில் தன்னை பூரணமாக அர்பணித்துக்கொண்டார். நிறைய ஸ்கோர் கேட்கும் டிமாண்ட் ஏறியவுடன் ஒரு ஸ்லேட்டும் சாக்பீஸும் கொண்டு தாற்காலிக ஸ்கோர்போர்டு தயாரித்து மன்னையின் முதல் அதிகாரப்பூர்வ ஸ்கோரர் அந்தஸ்த்தைப் பெற்றார்.  டெஸ்ட்டோ ஒன் டேவோ எதாயிருந்தாலும் கேட்ட மாத்திரத்தில் ஓட்ட எண்ணிக்கை நிச்சயம் பெறலாம்.


ஆரம்பத்தில் வடக்குத்தெரு கோபால் அப்பாவுக்கு கிரிக்கெட் பிடிக்காது. அவர் ரெங்கராஜன் சார். சின்ஸியர் ஹெட்மாஸ்டர். ஓயாமல் நாங்கள் விளையாடிய கிரிக்கெட் அவருக்கு அந்த அயர்ச்சியைக் கொடுத்திருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் அடிக்கடி நாங்கள் எங்கள் மூச்சுக் காற்று அவர்மேல் படும் தூரத்தில் பார்த்துக் கேட்டுப் பேசி கிரிக்கெட்டை சுவாசித்ததால் எங்களிடமிருந்து அவ்வியாதி அவருக்கும் சுலபமாக கிருமித்தொற்று போல ஏற்பட்டு அவரை விடாமல் பிடித்துக்கொண்டது. ஒரு சர்வதேச கிரிக்கெட் தொடரின் முழு அட்டவணையையும் மனப்பாடமாக சொல்லும் அளவிற்கு அவரது ஆர்வம் அசுர வேகத்தில் வளர்ந்தது. கூடிய சீக்கிரத்தில் ஒரு நடமாடும் மட்டைப்பந்து அட்டவணையானார். அவர்களது கருப்பு பிலிப்ஸ் ட்ரான்ஸிஸ்டர். பெரிய பேட்டரி போடவேண்டும். அதற்குக் கச்சிதமாகத் தோலுறை வாங்கி மாட்டி அதைக் கௌரவித்திருப்பார். கிரிக்கெட் இல்லா இரவுகளில் பத்துமணிக்கு அப்பாலும் விவதபாரதி ஒலிபரப்பும் கர்நாடக இசைக்கச்சேரிகள் கேட்பார். மொத்தத்தில் சார் எப்போதும் ரேடியோவும் காதுமாக இருப்பார்.

சென்னையில் போட்டி நடக்கும்போது விடாமல் கமெண்ட்டரி கேட்போம். பெரும்பாலும் பொங்கல் விடுமுறையில் போட்டி நடக்கும். ஒருமுறை எங்களது விபரீத ஆசையில் டி.வியில் மாட்ச் ஓடிகொண்டிருக்க ராமமூர்த்தியும் அப்துல் ஜப்பாரும் பக்கத்தில் ரேடியோவில் வர்ணித்துக்கொண்டிருந்தார்கள். அது டிவியும் ரேடியோவும் கைக் கோர்த்த ஜுகல்பந்தி. ”கால்திசையில் வந்த பந்தை ஆன் திசையில் அடித்து ஆடினார் ஸ்ரீகாந்த். ஆகாய மார்க்கமாக வந்த பந்து ஆளில்லா பிரதேசத்தில் விழுந்து ஒரு எழும்பலில் எல்லைக்கோட்டை கடந்தது. நான்கு ரன்கள்!” வர்ணனைகளுக்கு நடுவே ரங்காச்சாரி என்ற முதுபெரும் ஆட்டக்காரரின் சிறப்புக் கண்ணோட்டமும் உண்டு. அவர் ”ஸ்ரீகாந்த் இப்படி அடிச்சிருக்கவே வேண்டாம். அவன் ஆடினது தப்பாட்டம்” என்று அவன் இவன் போட்டு ஏகவசனத்தில் பேசுவார். அவர் ஜகதலப்பிரதாப ஸ்பின்னர் என்றும் ப்ராட்மேனையே டக் அவுட் ஆக்கியிருக்கிறார் என்பதும் ஊர்ஜிதம் செய்யப்படாத செவிவழிச் செய்தி.

பல வருடங்களாச்சு! தூய தமிழில் கமெண்ட்டரி கேட்டு! கூத்தபிரான், ராமமூர்த்தி, அப்துல் ஜப்பார்.... நேயர்களே உங்களை எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டு மைதானத்திற்கு வரவேற்கிறேன். பூவா தலையாவில் கெலித்த இந்திய அணி மட்டை பிடிக்க உத்தேசித்துள்ளார்கள்... முதலில் ஆடுவதற்கு ஸ்ரீகாந்தும்......

பின் குறிப்பு: இந்தக் கட்டுரை, அக்கப்போர், அனுபவம் கட்டுரை.காம்மில் இடம்பெற்றது.

பட உதவி: www.thehindu.com

Friday, February 3, 2012

எண்பது

எண்பதுக்கு முன்:
இந்தக் கதையில் மூன்று ப்ரேக் பாய்ண்ட் உள்ளது. எந்த ஒன்றிலும் நீங்கள் வெளியே வந்து விடலாம். தொடரும்படி இருந்தால் முழுவதுமாகவும் படிக்கலாம். உங்கள் விருப்பம்!


வாழ்க்கை ஒரு அரை சைன் வேவ்னு சொல்றேன். மொதோ முப்பது வருஷம் ஏறினா அடுத்த முப்பது வருஷம் இறங்குது. வயசாக வயசாக ஆண்டவன் ஒன்னொன்னா கழட்டிவிட்டுக்கிட்டே வரான். அத அப்படியே மனசார ஏத்துக்கனும். ச்சும்மா அதுகூடப் போராடாக்கூடாது. என்ன நா சொல்றது?

கண்ணு தெரியலையா? வயசானப்புறம் கண்டதையும் பார்க்காதே கைக்குக் கிடைச்சதெல்லாம் படிக்காதேன்னு அர்த்தம். பேசாம மூடிக்கிட்டு ”ராமா..ராமா”ன்னு ராமஜெபம் பண்ணு. போறவழிக்கு புண்ணியம் உண்டு. என்ன நா சொல்றது?

காது கேட்கலையா? அப்பாடி! ரொம்ப நல்லது. “இந்த மாமனார் கிழத்துக்கு வேற என்ன வேலை?”ன்னு நறநறன்னுப் பல்லைக் கடிக்கறது காதுல விழாது. ஆனந்தமா ம்யூட் மோட்ல சொச்ச வாழ்நாள கழிச்சுடவேண்டியதுதானே? என்ன நா சொல்றது?

பல்லு விழுந்துடுச்சா? சுத்தம். பேரப் பசங்க சீடை முறுக்கு சாப்பிடட்டும்னு விட்டுடனும். எனக்கும் ரெண்டுன்னு இளிச்சுக்கிட்டே அல்பமா போய் கைய நீட்டக்கூடாது. பொடிச்சது இடிச்சத சாப்டுக்கவேண்டியதுதான். என்ன நா சொல்றது?

கை கால் முட்டி வலிக்குதா? சூடுபரக்க மூவ் தடவி தேச்சுவிட்டுக்கிட்டு பம்பரமா சுத்தனும்னு யார் கேட்டா? ஹாயா ஹால் சோஃபால உட்கார்ந்து ஃபோன் கால் அட்டெண்ட் பண்ணிக்கிட்டு வீட்டைப் பார்த்துக்க வேண்டியதுதானே. என்ன நா சொல்றது?

ஷுகர், பீ.பின்னா வாயக்கட்டுப் படுத்தனும். அரைக்கிலோ ஸ்ரீகிருஷ்ணா மைசூர்பா வாங்கி ஸ்வீட்பாக்ஸோட மொக்கக்கூடாது.  வாய்க்கு மானசீகமா ஒரு கட்டுப் போட்டுக்கனும் சார்! சாப்படறது பேசறது எல்லாத்துக்கும் சேர்த்துதான் சொல்றேன்.

*************ப்ரேக்பாய்ண்ட் 1 (விளக்கம் கடைசியில் பார்க்க)

பக்கத்தில் இருந்தவரின் தொடையை சிவக்கத் தட்டி தட்டிப் பெரிய பிரசங்கம் செய்துகொண்டிருந்தார் திரு.மகுடேஸ்வரன்(80), 18, சோலையப்பன் ஸ்ட்ரீட், மயிலாப்பூர், சென்னை-4லிருந்து.

”சார்! நீங்க உள்ள போகலாம்” என்றான் அந்தப் பையன். கதவைத் திறந்து உள்ளே நுழைந்தார்.

“டாக்டர் சார்! நடந்தா இறைக்குது.தெம்புக்கு மருத்தே தரமாட்டேங்கிறீங்க. பேட்டரி ஃபுல்லா இருந்தாலும் ரொம்ப சன்னமா கேட்குது. போன மாசமே இந்த பைஃபோக்கல எந்த கண்ணாஸ்பத்திரியில மாத்தலாம்னு கேட்டேன். நீங்க எதுவும் சொல்லவே இல்லை. மேல் செட்டு பரவாயில்லை. கீழ் செட்டு அங்கங்க குத்தி ஈறெல்லாம் புண்ணாகுது. எவ்ளோ நாள் தான் முட்டிக்கு மூவ் தடவறது? நல்ல ஆர்த்தோ யாரையும் சஜ்ஜஸ்ட் பண்ண மாட்டீங்களா? பேசாம இன்சுலின் ரெண்டு ஷாட்டா போட்டுக்கிட்டா? ” பெரிய யானை லிஸ்ட் போட்டார் மகுடு.

டாக்டர் புருவம் உயர்த்தினார். 

*************ப்ரேக்பாய்ண்ட் 2 (விளக்கம் கடைசியில் பார்க்க)

டாக்டர் சிக்குக்கோலம் வரைந்த ப்ரிஸ்கிரிப்ஷனை பார்த்துக்கொண்டே வந்தவரிடம் வரவேற்பறை பெண்மணி கிண்டலாகக் கேட்டாள்.

“சார்! எல்லோருக்கும் இது தேவையா அது தேவையான்னு இலவசமாப் பெரிய அட்வைஸ் கொடுத்தீங்க.. நீங்களும் ஒன்னுவிடாம எல்லாத்துக்கும் பார்த்துக்கிட்டுதானே வந்தீங்க”

“அம்மா!”. நீங்கள் இந்த வாக்கியம் படித்துமுடிக்கும் இடைவெளி கொடுத்தார். “வீட்ல எல்லாரும் ஆபீஸ் போனதுக்கபுறம் நாந்தானே எல்லாவேலையும் செய்யனும். தெம்பா இருக்கவேண்டாமா?”

ஸ்நேகமாய் சிரித்தாள் அந்தப் பெண்.

**************ப்ரேக்பாய்ண்ட் 3 (கடைசி ப்ளீஸ்)

”பேத்திக்கு ஹோம் வொர்க் சொல்லித்தர கண்ணு நல்லாத் தெரியுனும். ரோட்ல ட்யூஷனுக்கு கொண்டு போய் விட்டுட்டு வர்றதுக்கு காது கேட்கணும். ரேஷனுக்கும் இல்ல சூப்பர் மார்க்கெட் போய் சாமான் வாங்கிட்டு வர்றதுக்கு கை கால் தெம்பா இருக்கனும். பல்லு போனா சொல்லு போச்சு. யாராவது ஃபோன்ல பேசுனா நா பதில் சொல்றது புரியலைங்கறாங்க. அதான் புதுசா பல்லு கட்டிக்கலாம்னு இருக்கேன். பேரன் காட்பரீஸைப் புட்டு ஒரு வாய் ஆசையா “தாத்தா இந்தா”ன்னு சொல்லும்போது வேண்டாம்னு சொல்ல முடியுமா. அந்த சந்தோஷத்துக்காக ரெண்டு ஷாட் இன்சுலின் போட்டுக்கிட்டாலும் பரவாயில்லை.”

வாயடைத்துப் போனாள் வரவேற்பு பெண். ஃபீஸை கொடுத்துவிட்டு ஸ்கூட்டியேறிப் பறந்தார் மகுடு.
-சுபம்

ப்ரேக்பாய்ண்ட் 1-ல் இந்தக் கதையை முடித்தால் வயதில் பெரியவர்களை அபவாதம் செய்த பாவம் வந்து சேரும்.

ப்ரேக்பாய்ண்ட் 2-ல் இந்தக் கதையை முடித்தால் ”ஊருக்கு உபதேசம் செய்யும் மகுடு” என்றாகிவிடும்.

ப்ரேக்பாய்ண்ட் 3-ல்  இந்தக் கதையை முடித்தால் “வீட்டுக்கு உழைக்கும் நல்லவர் மகுடு”

-சுபத்தில் இந்தக் கதையை முடித்தால் ஒருவருக்கும் பங்கம் இல்லாமல் சுபம் என்று அர்த்தம்.

பின் குறிப்பு: ஒரு கதை நாலு முடிவு. எனக்கு புது ட்ரை! ஒரு வீடு இரு வாசல் மாதிரி ஒரு வீடு நாலு கொல்லைப்புறம்.

படம் நன்றி: http://grantdeb.com/
-

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails