Friday, March 23, 2012

ஈ காஃபி

*********** பேப்பர் பெரியவர் **********
ஒரு நூறு மீட்டர் தள்ளி அந்தப் பெரியவர் நடந்து வந்துகொண்டிருந்தார். கையில் 40 micronக்கு குறைவாய் மாசு ஏற்படுத்தும் ஒரு கேரி பேக். அதிலிருந்து இரும்புச் சத்துக் கீரை அதிகப்படியாக துறுத்திக்கொண்டு தெரிந்தது. மலச்சிக்கலும் இருக்காதாம். பெங்களூர் தக்காளி தனது சிகப்பின் அதிக வேவ்லெங்த்தினால் கண்ணுக்குப் புலப்பட்டது. அகிலேஷ் யாதவ் முதல் மந்திரியாக தேர்தெடுக்கப்பட்ட மாலைமலர் கையில் படித்துக்கொண்டு வந்தது பக்கத்தில் வந்தபோது தெரிந்தது.

அவர் சுவாரஸ்யமாக பேப்பர் படித்துக்கொண்டு இடது ஓர சாலையில் ஊர்ந்து வரும்போது அவருடைய காலை உரசிக்கொண்டு ரெண்டு நாய் சண்டை போட்டுக்கொண்டது அவருக்கு தெரியவில்லை. அவசரமாக பிள்ளையை கையில் பிடித்துக்கொண்டு போன பெண் டேஷ் செய்வது போல வந்து கடைசி நொடியில் கட் அடித்தது அவருக்கு தெரியவில்லை. சைக்கிளில் ட்யூஷன் போட்டு வந்த பையன் இடிக்காமல் துள்ளி ஒதுங்கியது அவருக்கு தெரியவில்லை.

நான் நின்றுகொண்டிருந்த இடத்தைத் தாண்டியும் அந்த பேப்பர் படிக்கும் மோன நிலையில் ஒரு யோகியைப் போல சென்றுகொண்டிருந்தார். இவர் வீட்டிற்கு எப்படி போய் சேருவார் என்று ஆவலாக திரும்பிப்பார்த்தேன். நான் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து அடுத்த பில்டிங்கிற்குள் நுழைந்தார். வைத்த கண்ணை எடுக்காமல் பேப்பர் படித்துக்கொண்டே!

அதிசயமாக இருக்கிறதே என்று நினைத்துக்கொண்டே தலையைத் திருப்ப எத்தனித்தபோது அது நடந்தது.

“டமார்” என்று ஒரு ஆஜானுபாகுவான மாமி மேல் மோதினார்.

“என்ன எழவோ! ரோட்லேர்ந்தே பேப்பர் படிச்சுண்டே வர பழக்கம். ஒரு நாள் எவனாது ஒரேடியா ஏத்திட்டுப் போய்டப்போறான். வைகுண்டத்தில போயும் மாலைமலர் படியுங்கோ!!”

தொடர்ந்த வசவுகளைப் பார்க்கும் போது நிச்சயம் அவரது மனைவியாகத் தான் இருக்கவேண்டும். ஒரு செகண்ட் பேப்பரிலிருந்து கண்ணை எடுத்தார். அலட்சியமாக ஒரு பார்வை பார்த்தார். திரும்பவும் படித்துக்கொண்டே மாடிப்படி ஏற ஆரம்பித்தார். இந்த செய்கையில் உறுதியாக சொல்கிறேன், அவர் அந்த ஆ.பெண்மணியின் கணவராகத்தான் இருக்கவேண்டும்.

************** நதியில் ஆடும் பூவனம் *************** 
பழைய பேப்பர் போடும் ஆதி கடையில் இன்னும் கொஞ்சம் நாழி இருக்க மாட்டோமா என்கிற ஆவல் எழுந்தது.

“சார் இந்தாங்க!” என்று அழுக்குக் கல்லாவைத் திறந்து காசு எடுத்துக் கொடுத்தும் அவ்விடத்தை அகல மனம் வரவில்லை.

பின்னாடி எஸ்.பி.பி தூண்டில் போடுகிறார். எப்படி நகர்வது. அந்தப் படம் சரியாகப் போகவில்லை. புதுமுகம் கண்ணன் சரியாக நடிக்கவில்லை. கதை சுகமில்லை. என்றெல்லாம். பாரதிராஜாவுக்கு அடிதான்.

ஆனால், ராஜாவும் எஸ்.பி.பியும் புகுந்து விளையாடிய படம். இந்த ஸ்டேட்டஸோடு அட்டாச் செய்த பாடல் அற்புதமான மெலோடி.

கறுப்பு ராதாவை நதியில் ஆடும் பூவனம் என்று வைரமுத்து கவிஞர்களின் கவித்துவ புரட்டோடு எழுதியிருந்தாலும்... கேட்க..கேட்க.... எஸ்.பி.பி நெஞ்சை அள்ளும் பாடல்...

இரண்டாவது சரண ஆரம்பத்திற்கு முன் எஸ்.பி.பியின் அமர்க்களமான ஆலாபனைக்கு ராதாவின் சாணி மிதிக்கும் பரதநாட்டியம் கர்ண கொடூரமாக இருப்பது அவசியமில்லாமல் ஞாபகம் வந்தது.

ஜானகியும் எஸ்.பி.பியும் ஹம்மிங்கில் மங்களம் பாடி முடிந்தவுடன் கிளம்பினேன். பாடிய இடத்தை நான் பார்த்த பார்வையில்....

“சார்! இது எஸ்.பி.பி. டிவிடி.”

“என்னென்ன பாட்டெல்லாம் இருக்குப்பா?”

மாஸ்டரிலிருந்து பிரிண்ட் போட்டு கருப்பாக ஜெராக்ஸ் எடுத்து உள்ளடக்கம் தயார் செய்திருந்தார்கள். தூசி தட்டி எடுத்துக் காண்பித்தான்.

ஒன்று விடாமல் எல்லாமே என்னிடம் இருந்தது.

“வேணுமின்னா காப்பி பண்ணிக்கிட்டு குடுங்க..”

“வேண்டாம்பா”

“பிடிக்கலையா?”

”சுருக்” என்று நெஞ்சுக்குள் நெருஞ்சி ஏறியது. சிரித்துக்கொண்டே சொன்னேன்.

“எஸ்.பி.பியோட எல்லாமே எங்கிட்ட இருக்கு! அவனொரு பாட்டு ராக்ஷசன்!!”

http://www.youtube.com/watch?v=W02st3WU-sE

************* சாஸ்திரிகளுக்கு நன்றி **************
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சி மாபெரும் வெற்றியாம். கோட் சூட்டுடன் சூர்யாவை நிற்க வைத்து போஸ்டர் அடித்து ஒட்டி தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்கள்.

சமீபத்தில் வீட்டில் நடத்திய கணபதி ஹோமத்திற்கு கூட நல்ல ஆதரவு. விமரிசையாக நடந்தது. வீதிக்கு வீதி போஸ்டர் அடித்து ஒட்டலாம் என்று விரும்புகிறேன்.

“கணபதி ஹோமத்தை சிறப்பாக நடத்தித் தந்த கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளுக்கு அநேக கோடி நமஸ்காரங்களும், நன்றிகளும்”

அரச இலைப் பிள்ளையார் படத்தைப் போட்டு.... :-)

********** ஈ காஃபி *************
ஈ விழுந்த காஃபியை திருப்பிக் கவுண்டரில் கொடுத்தால் புதுசாக ஒரு காஃபி போட்டுக் கொடுத்தார்கள். ரிட்டர்ன் காஃபியை வீணாக்காமல் அப்படியே வைத்திருந்தார்கள்.

காஃபியை உறிஞ்சிய பின் பச்பச்சென்று கையில் ஒட்டியதை ஈரத்தண்ணீரில் தொட்டு துடைத்துக்கொண்டு வரும்வரை அக்காஃபி அங்கேயே தவமிருந்தது.

கடையை விட்டு அகலும் போது இருவர் காஃபி டோக்கனுடன் கவுண்ட்டரை அடைந்தனர். கண்ணை விட்டகலாமல் அக்காஃபியும் இருந்தது. எச்சரிக்கலாமா? கூடாதா? என்ற எண்ணத்தின் பின்னல்களின் இடைவெளியில் எழுந்த கேள்வி.

ஈ ரெண்டு பேரில் ’ஈ’ காஃபி எவருக்கு?

********** ராத்திரி பாடல்கள் **********
இது போல் மையிருட்டில் எடுக்கப்படும் பாடல்களுக்கு

அத்தியாவசியத் தேவை ஆறு
1. பெட்ருமாஸ் லைட்
2. ஒரு கூடாரம்
3. ஒரு தேன் நிலா
4. கேம்ப் ஃப்யர்
5. அழகான ஜோடி
6. ராஜாவின் இசையில் பாடல்

தேவையில்லாதவை ஆறு
1. பளபள ட்ரெஸ்
2. தேவதைக் கூட்டம்
3. இயற்கைக் காட்சி
4. ஆடம்பர செட்
5. காதைக் கிழிக்கும் இசை
6. விசுக்விசுக்கென்ற நடனம்

#அமலா மாதிரி ஒரு பொண்ணு கிடைச்சா மம்மூட்டி ஏன் லோலோன்னு அலைஞ்சு லாலான்னு பாட மாட்டார்?

www.youtube.com/watch?v=OWm9kRMfcGQ

******* ப்ளேன் ஓட்டக் கற்றுக்கொண்டேன் ******
“என் வயிற்றில் ஏதோ கவ்வியது. முதன்முதலாக பூமி ஈர்ப்பை இப்படி எதிர்த்துச் செல்கிறேன். வேகமான லிஃப்டில் அல்லது மிக வேகமாக ஊஞ்சலில் மேற்செல்வது போல உணர்ச்சி என்று சொல்லலாம். அதனுடன் கூட நம் ஸீட்டுக்கு அடியில் ஒன்றுமில்லை என்று உணர்ச்சி. அதற்கு ஈடாக பூமியில் ஒன்றும் கிடையாது. எனக்குப் பயமாக இருந்தது. லலிதா சஹஸ்ரநாமம் சொல்ல வேண்டும் போலிருந்தது”

#என் வசம் இருக்கும் சுஜாதா புத்தங்களை ஃபிக்ஷன், நான் - ஃபிக்ஷன் என்று இரு வரிசைகளாக அடுக்கினேன். தராசில் வைத்து நிறுத்தது போல சமமாக வந்து நிற்கிறது.

## மிஸ் தமிழ்த்தாயே நமஸ்காரம்! புஸ்தகத்தில் “ப்ளேன் ஓட்டக் கற்றுக்கொண்டேனி”லிருந்து...

###முதன் முதலாக பறக்கும் படபடப்பை, அனுபவத்தை வாத்தியார் போல யார் எழுத முடியும்? சூப்பர்ப்!! வணக்கம் வாத்யாரே!
*********** புழல் ஏரி *********


-

Saturday, March 17, 2012

பாகஸ்தன்


சிகப்பு ரோஜாக் கடைகளை சாலையோரத்தில் சேலைக்கு பார்டர் கட்டியது போல பரப்பியிருந்தார்கள். ரோஜாவின் சுகந்தமும் ஆண் வாடையும் அந்தப் பிராந்தியம் முழுவதும் கமழ்ந்தது. சுற்றிலும் அழகான ஆடவர்கள் நிறைய பேர் வெறும் மார்போடு திரிந்தார்கள். எல்லோருமே பல வயசுகளில் “டா”க்கள். இன்ன டிசையன் என்று புரியாத மாதிரி நெஞ்சிலும் புஜங்களிலும் வர்ணமயமான டாட்டூக்கள் சதும்ப குத்தியிருந்தார்கள். பரவலாக எல்லோர் முகங்களிலும் மகிழ்ச்சி ததும்பியிருந்தது.

"There are many roses in my garden. But you are my red rose". திரும்பத் திரும்ப இந்த வார்த்தைகள் என் ந்யூரான்களில் ஸ்க்ராலர் மெஸேஜ் போல எழுத்தெழுத்தாக சிற்றெறும்பு போல ஓடுகிறது. இந்த வார்த்தைகளை நான் உச்சரிக்கும்போதே என் உள்நாக்கு வரைத் தித்தித்தது. நான்கு வருடங்களுக்கு முன்னர் இதே நன்நாளில் ஒரு சுபவேளையில் தான் என் பார்ட்னரை நான் ”வெற்றிக் கட்டிடம்” முன்பு நிற்க வைத்துப் பார்த்தேன். காதல் நினைவுகளோடு பயணிப்பது தேவசுகம் தரும் உன்னத காரியம். ”ஐ லவ் யூ” என்று பார்த்தவுடன் பொசுக்கென்று சொல்லிவிட்டேன். அதனோடு சேர்த்துச் சொன்னது தான் இந்தப் பாரா ஆரம்பத்தில் தொடங்கும் அந்த ஆங்கில ரோஸ் வாசகம்.

மணம் முடிந்து ஒரு வருடம் கழித்து ஒரு நாள் காலை என் பார்ட்னர் ”சரி! பிள்ளை பெற்றுக்கொள்கிறேன்” என்றதும் ஹீலியம் ஏற்றிய பலூன் போல ஜிவ்வென்று விண்ணில் மிதந்தேன். அந்த மாதம் ரேஷனில் கொடுத்த சாராயம் முழுவதும் புட்டி புட்டியாகக் குடித்துத் தீர்த்தேன். கட்டாந்தரையில் கை கால் பரப்பி நீச்சலடித்தேன். “நீ அதிர்ஷ்டக்காரன்டா!” என்று அலுவலகத்தில் தேநீர் குடிக்கும்போது பாஸ் தோளைத் தட்டி அக்குள் வியர்வை ஈரத்தோடுக் கட்டிப்பிடித்துப் பாராட்டினார். அவர் தெளித்துக்கொண்டிருந்த அந்த அதீத பாடி ஸ்ப்ரே வாசம் எனக்கு நெடியேறியது முதற்கொண்டு நேற்று நடந்தது போல இருக்கிறது.

இந்த நினைவுச் சுருள்  திரைப்படம் போல மூளைக்குள் ஓடிக்கொண்டிருக்கும்போது மேகங்களுக்கிடையில் ஹெலிபஸ்ஸில் ஆபீஸில் வந்து இறங்கிவிட்டேன். இன்றைக்கு அரை மணி கூவத்தின் மேல் ஏர் ட்ராஃபிக்கால் மூக்கைப் பிடிக்க நிறுத்திவிட்டார்கள். இந்த கேடு கெட்ட அரசாங்கம் செண்ட்டட் ஸ்ப்ரேயர்கள் இல்லாத ஹெலிபஸ்களை பறக்க விடுகிறார்கள். படுபாபிகள். ஆபீஸில் நுழையும் போது மணி 05:33 PM என்று அலுவலகக் கடிகாரம் காட்டியது. காதுகளில் மாட்டியிருந்த கடுக்கனில் தொங்கிய மைக்ரோ ரிஸீவர் செவி துடிதுடிக்க கிணுகிணுத்தது. நீலக்கலரில் மினுக்கியது. எனக்கான பிரத்யேக அலைவரிசையில் யாரோ அழைக்கிறார்கள். “ஜீவன் ஹியர்” என்று க.காதைக் கொடுத்தேன்.

“ஜீவன்! உங்களுக்குப் பையன் பொறக்கப்போறான்” எதிர்முனையில் டாக்டர் சுபச்செய்தி சொன்னார்.

“தேங்க்யூ டாக்டர்! எப்போ வரணும்?” அடுத்த க்ஷணம் அங்கிருக்கும் அவசரத்தில் கேட்டேன். மேனியெங்கும் ஒரு இனம்புரியாத சந்தோஷம் ஊடுருவிப் பரவியது. இப்போதே விண்ணில் பறக்க ஆரம்பித்திருந்தேன்.

“ஒரு டூ ஹவர்ல இங்கே வந்துடுங்க”

“சரி”

“ஹாங்... மறக்காம பர்த் சர்டிஃபிகேட்டுக்கு ஒரு அப்ளிகேஷன் ஃபார்ம் வாங்கிட்டு வந்துடுங்க”

“ஓ.கே. தேங்க்யூ டாக்”

பாஸிடம் ஓடினேன். தலையைக் கவிழ்த்துப்போட்டு கம்ப்யூட்டரில் மூழ்கியிருந்தார். விஷயம் சொன்னேன். “ஜீவன்! ஆல் தி பெஸ்ட்” கைகுலுக்கி விடைகொடுத்தார். சிரித்ததில் சட்டையை மீறி பிதுங்கிய தொப்பை குலுங்கியது. எனக்கு என் பிள்ளைத்தாச்சிப் பார்ட்னரின் தொப்பை ஒரு ஃப்ளாஷ் போல கண் முன் தோன்றி மறைந்தது.

இவ்வுலகில் இனிமேல் நானும் ஒரு தகப்பன். நினைக்க நினைக்கப் பெருமிதமாய் இருந்தது. சமூகத்தில் அந்தஸ்து உள்ள பெரிய மனுஷன். கரு சுமக்க என் பார்ட்னர் ஒத்துக்கொண்டதே நான் செய்த பூர்வ ஜென்மப் புண்ணியம் என்றார்கள். ஆஸ்பத்திரியில் அவ்ளோ பேரும் கண் வைத்து விட்டார்கள். முதலில் பார்ட்னருக்கு திருஷ்டி சுத்திப்போட வேண்டும்.

நான் சென்றதும் ஆபரேஷன் தியேட்டருக்கு பார்ட்னரை உருட்டிச் சென்றார்கள். என்னை அருகிலிருக்கச் சொன்னார்கள். ஓட்டை வாயைத் திறக்காமல். கிஞ்சித்தும் தாமதிக்காமல் சர்க். சர்க். சர்க். வயிற்றைக் கீறி எடுத்துவிட்டார்கள். பிரச்சனை எதுவுமில்லை. அரை மணி கழித்து பார்ட்னருக்கு கை குலுக்கினேன். இருவரும் சந்தோஷத்தில் மிதந்தோம். இருவர் முகத்திலும் பரிபூரண திருப்தி.

3 கிலோ எடை. என் முழங்கையளவு பட்டு மேனி. இப்புண்ணிய பூமியில் அவதரித்த இன்னொரு ஆண் மகவு.

”கங்ராட்ஸ். ஹார்மோன்ஸ் கொடுத்து ப்ளஸண்டா இம்ப்ளாண்ட் செய்ததற்கப்புறம் நீங்க ரெண்டு பேரும் காட்டின ஆர்வம் இருக்கே. அப்பப்பா அபாரம். ரெகுலர் செக்கப், வெயிஸ்ட் செக்கிங்னு டெடிகேஷனோட அசத்திட்டீங்க. லைஃப் பார்ட்னர்ஸ்னா இப்படிதான் இருக்கனும். நீங்க ரெண்டு பேரும் உதாரணமாத் திகழறீங்க. உங்க பையன் தான் 3050-ல் 35வது பில்லியன் பேபி. ரெண்டாவதுக்கு ப்ளான் பண்ணினீங்கன்னா நிச்சயம் நீங்கதான் பெத்துக்கனும்” டாக்டர் என்னிடம் கை குலுக்கினார். பேபியின் கண்ணத்தில் செல்லமாகத் தட்டினார்.

எல்லாமே ஜீன் ப்ரோக்ராம்டு. எல்லோருக்கும் ஆம்பிளைப் பிள்ளை.

பார்ட்னருக்கு காஜு கட்லி வாங்கி ஊட்டி விட்டேன். ருசித்துச் சாப்பிட்டான்.

“கொஞ்சம் இருங்க” என்று சொல்லி அவன் மீசையில் ஒட்டியிருந்த பீஸை தட்டிவிட்டேன்.

மனம் விட்டுச் சிரித்தான் பார்ட்னர்.

இது ஆண்களின் உலகம்.

[இதே போல் “இது பெண்களின் உலகம்” என்ற வாசகம் எழுதிய டீ ஷர்ட்டோடு தம்ப்ஸ் அப் செய்து மகளிரிணம் கொக்கரிக்கும் அதிசுவாரஸ்யக் கதையும் இருக்கிறது. நீங்க கேட்க ரெடியா?]

பட உதவி: http://www.legaljuice.com

Sunday, March 11, 2012

பட சேஷ்டைகள்

முகப்புஸ்தகத்தில் சில சேஷ்டைகள் செய்தேன். என் ஆத்ம நண்பர்களாகிய உங்களுடைய பார்வைக்காகவும் இங்கே.


பதினாறு வருடங்கள் பாரதக் கிரிக்கெட் அணிக்கு சுவராய் உழைத்து இன்று சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் வாலுக்கு இந்த வாலின் வணக்கம்!





குதூகலமாக கிரிக்கெட் விளையாடும் இளம் ரத்தங்களைப் பார்த்த போது ஒரு ஏக்கப் பெருமூச்சு வந்தது. நமக்கு வயசாயிடிச்சுன்னு யாரும் நினைக்கப்போறீங்க. காலங் கார்த்தால நமக்கும் விளையாட நேரமில்லையேன்னு ஒரு சின்ன வருத்தம். அம்புட்டுதேன்! 
#நேரம்: காலை 7:30 மணி
 ##இடம்: வேளச்சேரி ரயில் நிலையம் அருகில்



Saturday, March 10, 2012

ராகுல் திராவிட்: ஓய்வு பெறும் இந்தியப் பெருஞ் சுவர்


டெண்டுல்கர் கங்குலி போன்று புகழின் உச்சாணிக் கொம்பிற்கு சரசரவென்று ஏறியவர் இல்லை திராவிட். அவர்கள் ஆக்‌ஷன் கிங்ஸ். பந்து வீசுபவர்களை ”ஒத்தைக்கு ஒத்தை வாடா” என்று முண்டு தட்டுவார்கள். தங்களது ஆக்ரோஷமான அடிதடி ஆட்டத்தால் அவர்களை அடக்கியாள நினைப்பவர்கள். இந்த வரிசையில் சமீபமாக முன்னந்தலையில் கேசமிழந்த வீருவும் அடக்கம். திராவிட்டின் பாணி இவர்களுக்கு எதிர்த்திசை. பந்து வீசுபவரின் திராணியை சோதிப்பது. ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்றழைக்கப்பட்ட ஷோயப் அக்தர் பௌண்டரி லைனில் இருந்து ஓடிவந்து தெம்பத்தனையும் ஒன்று திரட்டி உசுரைக் கொடுத்து பந்து வீசினால் முன்னங்காலை தூக்கி வைத்து தலையை கவிழ்த்து சர்வமரியாதையாக ஒரு “லொட்” வைப்பார். ஸ்பின்னர் வீசிய பந்து என்றால் பந்து மட்டையுடன் ஒட்டிக்கொண்டுவிடும். ஒரு இன்ச் அகலாது. அடுத்த பந்திற்கு ரா.பி.எக்ஸ் இன்னும் ஒரு 200 மீட்டர் ஓடவேண்டும். ஒரு ஓவரில் ஒரு கி.மீ நாயாய் பேயாய் அவர் ஓடிக் களைத்த பின் ஆறாவது பந்தில் ஒரு ஃபுல்டாஸோ அல்லது ஓவர் பிட்ச்சோ போட்டால் தலைவர் கவர் ட்ரைவ் அடித்து பௌண்டரிக்கு விரட்டுவார்.

பந்து வீசுபவர்களை பொறுமை இழக்கச் செய்து வெகு விமரிசையாக வெறுப்பேற்றி, சுவரின் மேல் பட்ட பந்தானது எப்படி சுவருக்கு எந்த சேதமும் விளைவிக்க முடியாமல் சிதறி ஓடுகிறதோ அதைப் போல இந்தியப் பெருஞ்சுவராய் நின்றார் திராவிட். ஆரம்ப காலங்களில் சுவராய் மட்டும் இருந்தவர் காலங்கள் உருண்டோட அனுபவமும் பயிற்சியும் கைக் கோர்க்க கான்கிரீட் சுவரானார். 

ஆசிய நாடுகளை தவிர்த்து பவுன்சி ட்ராக்ஸ் தயார் செய்யப்படும் வெளிநாடுகளில் நம்மவர்கள் மண்ணை கவ்வுவார்கள். பரதநாட்டியம் குச்சிப்புடி போல மட்டைப்புடி டான்ஸ் ஆடுவார்கள். முட்டிக்கு கீழ் வரும் பந்துகளை அனாயாசமாக அடித்துவிளையாடும் வீரர்கள் “விர்ர்ர்ர்ரூம்” என்று முகத்துக்கு நேரே சீறி வரும் பந்துகளுக்கு பயந்து ஒதுங்கிவிடுவார்கள். முகத்தில் அடிபட்டால் அப்புறம் அவலட்சணமாக விளம்பரத்தில் வரமுடியாது. டப்பு வராது. பாக்கெட் நிரம்பாது. திராவிட் மற்றும் வி.வி.எஸ். லெக்ஷ்மன் போன்றோர் இந்தக் கலையில் விற்பன்னர்கள். ஒரு முனையில் நிற்க வைத்து ஏத்து ஏத்து என்று ஏத்தினாலும் ஃபார்வேர்ட் ஷார்ட் லெக் வைத்து பவுன்ஸர் போட்டாலும் காலடியில் பந்து விழும்படி டொக்கு வைத்து விளையாடுவார்கள். முன்னால் கக்கூஸில் உட்கார்ந்திருக்கும் போஸில் திராவிட்டின் கால் புறத்தில் ஃபீல்டிங் செய்பவர் மண்ணைக் கவ்வுவார்.

திராவிட்டின் கிரிக்கெட் பயணம் நிதானமானது. கடந்து வந்த பாதை ஸ்திரமானது. அவரது முதல் ஆட்டத்திலேயே ஜெயத்தோடு தனது கிரிக்கெட்டிற்கு பிள்ளையார் சுழி போட்டார். ஸ்ரீலங்காவிற்கு எதிராக இந்தியாவிற்காக அவர் களமிறங்கிய முதல் ஒரு நாள் பந்தயத்தில் நமது அணி வெற்றிபெற்றது. அதில் அவர் அடித்த ஸ்கோர் ஒற்றை இலக்கம்தான். 3 ரன்கள். கிரிக்கெட்டர்களின் புண்ணிய பூமியான லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் வாழ்க்கையை தொடங்கினார். அதில் அவருக்கு 95 ரன்கள் கிடைத்து. ஐந்தில் நூறை விட்டார். 

96-ல் தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கியவருக்கு 97-ல் தென்னாப்பிரிக்க பயணம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அந்நிய தேச பிட்ச்களின் அதிகப்படியான பௌன்ஸர்களை திறமையாக எதிர்நோக்குவதற்கு ஒரு உபாயம் செய்தார். சின்னசாமி ஸ்டேடிய பெவிலியன் படிகளை தற்காலிக ஆடுகளமாக்கினார். டென்னிஸ் பந்தை நனைத்து வெயிட் ஏற்றி பக்கத்திலிருந்து அரைக்குத்து குத்தி பௌன்ஸர் எறியச் சொல்லி கால் கடுக்க கழுத்து சுளுக்க பயிற்சி செய்தார். விளைவு? மட்டை மேல் பலன். அந்த சீரிஸில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். அலன் டொனால்ட், லான்ஸ் குளூஸ்னர் போன்றோர் முக்கிப் பார்த்தும் முடியாது தோற்றார்கள். நன்கு பூசிய சுவராக நின்று இந்தியாவை அணைகாத்தார்.

கர்நாடக கிரிக்கெட் அசொஸியேஷனின் சம்மர் கேப்பில் பதினெட்டு வயதுக்குள் இடம்பெற்றிருந்த இளம் வீரர்களிடம் கோச் கேகி தாராபூர் கேட்ட கேள்வி “இங்க எவ்ளோ கீப்பர் இருக்கீங்க?”. ஒரு பயல் கையைத் தூக்கவில்லை. யாரும் இல்லை. ஒருவர் மட்டும் தைரியமாக கையைத் தூக்கினார். அவர் திராவிட். அவரும் கீப்பர் இல்லைதான். அப்போது வயது 13. கிரிக்கெட் ஆர்வத்தில் எதையும் செய்வதற்கு தயாராக இருந்திருக்கிறார் திராவிட். கடைசிக் காலம் வரை சப்ஸ்ட்டிட்யூட் கீப்பராக அவரை இந்திய அணி பிரமாதமாக உபயோகப்படுத்தியது.

பியூசி படிக்கும்பொழுது பெற்றோருக்குத் தெரியாமல் நண்பர் ஒருவரின் வீட்டில் ஒரு நாள் காலை பார்ட்டி ஒன்று ஏற்பாடாகியிருந்தது. இரவில் என்றால் வீட்டில் மாட்டிக்கொள்வோம் என்று பகலில் வைத்திருந்தார்கள். திராவிட்டுக்கு பார்ட்டி என்றால் உசுர். அன்றைக்கே KSCAவின் சீனியர் டிவிஷன் லீக் மேட்சும் இருந்தது. மறுநாள் காலை பார்ட்டிக்கு திராவிட்டை எதிர்பார்த்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காலையில் ஃபோன் செய்து “டேய்! நா மேட்சுக்கு போறேன்” என்று வருத்தமே படாமல் பார்ட்டிக்கு டாட்டா காட்டிவிட்டாராம். அதே வருடம் அக்கௌண்டன்ஸி பாடப்பிரிவில் கல்லூரியிலேயே இரண்டாவதாக வந்தார். ஒட்டுமொத்த கல்லூரிகளுக்கு மூன்றாவதாய் வந்தார். படிப்பிலும் கான்கிரீட் போல கெட்டி என்று நிரூபித்திருக்கிறார். ஹிந்தி டீச்சருக்கு மருத்துவ செலவுகள் அதிகரித்தபோது தன்னிடம் இருந்ததை தாராளமாக அவருக்கு கொடுத்து உதவியதில் அவரது தயாள குணம் தெரிகிறது.

ஃபீல்டில் டொக் வைத்து பெருமளவில் ஒன்றும் இரண்டுமாக பொறுக்கும் ராகுல் திராவிட் ரசிகர்களின் நெஞ்சங்களில் விண்ணைத் தொடும் mighty சிக்ஸராக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

பட உதவி: www.skysports.com

Friday, March 9, 2012

கணவர்களின் லக்ஷணங்கள்

மனைவிகள் கணவ ஜந்துக்களுடன் தினமும் பழகித்தான் பார்க்கிறார்கள்
அவைகளுடன்தான் தினந்தோறும் டிஃபனும் டின்னரும் போஜிக்கிறார்கள்
அவர்கள் அவசியமில்லாமல் குழந்தை வளர்ப்பில் மூக்கை நுழைப்பார்கள்
மண நாட்களை மறந்துத் தொலைப்பார்கள்
மொத்தமாக சொதப்பியதை ஒரு காவிய முத்தத்தில் ஈடுகட்ட நினைப்பார்கள்
பொறுக்கமுடியாமல் அவர்களது அபத்தத்தை இடித்துரைத்தால்
பரமசாந்தமாக ஒரு பார்வை சிந்தி குமிழ் சிரிப்பை உதிர்ப்பார்கள்
இவ்வளவு அழிச்சாட்டியங்கள் செய்தபிறகும் மனைவி
சொல்பநேரத்தில் சமாதானமாகி விடுவார்கள் என்று பகற்கனவு காண்பார்கள்
கோப்பையில் ஊற்றுவதற்குள் சரக்கை அப்படியே சரித்துக்கொள்வார்கள் 
சற்றே அவர்கள் பயணிக்கும் பாதையை கவனிக்கத் தொடங்கினால் உங்களால் பலிகடாவாகப் போகும் தியாகசீலர்கள் போல வெளியே நடிப்பார்கள்
கோல்ஃப் விளையாட உற்சாகமாக ஐந்து மைல் நடப்பவர்கள் வீட்டுக்கு கூடமாட உருப்படியாக ஒத்தாசை செய்வதில் வாழைப்பழ சோம்பேறியாகிவிடுவர்
பெண்களுக்கு காரணகாரியங்களும் புரிவதில்லை மதிநுட்பமும் பத்தாது என்று பினாத்துவார்கள்
பத்தினிகள் பின் தூங்கி முன் எழ சந்தர்ப்பமே தரமாட்டார்கள்
நீங்கள் பூசும் சாதாரண சாயங்களுக்குக்கூட உங்களை பேயோட்டும் சாமியாரினியாக நினைப்பார்கள்
பிறத்தியார் வியாதியை சொஸ்தப்படுத்துவதில் தீரராகவும் வீரராகவும் இருப்பவர்; தும்மலும் வயிற்றுவலியும் தனக்கென்று வந்துவிட்டால் மரித்து விடும் அவஸ்தையில் வியாதி கொண்டாடுவார்கள்.
இருவரும் ஏகாந்தமாக இருக்கையில் உங்களைப் பற்றி சட்டை செய்யாதவர்கள் பார்ட்டியில் சாண்ட்விச்சும் வெண்ணையுமாக படைத்துப் புருஷ சேவை நாடகம் புரியும் போது அவர்களை நாலு சாத்து சாத்தத் தோன்றும்
இல்வாழ்வில் கணவர்கள் ஹிம்சையானவர்கள்
இப்படியாக பல பிணக்கங்கள் இருந்தாலும் கடவுளின் அனுக்கிரஹத்தால் மனைவியரின் அன்பில் பின்னிப் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆக்டன் நாஷை வாத்தியார் அறிமுகப்படுத்திதான் தெரியும். இரத்தினச் சுருக்கமாக நாலைந்து வரிகளில் மண வாழ்க்கை சிறக்க என்று க.பெ-ம்மில் ”தப்பென்றால் ஒத்துக்கொள்! சரியென்றால் பொத்திக்கொள்” என்று நாஷை தமிழ்ப்படுத்தி அறிமுகப்படுத்தியிருந்தார். அவரது அறிமுகங்கள் என்றுமே சோடை போனதில்லை. நாஷைப் படித்ததில் எனக்குப் பிடித்த ஒன்றை இங்கே நானும் தமிழ்ப்’படுத்தி’யிருக்கிறேன். வாத்தியார் is uncomparable!!


நேற்றைக்கு மகளிர் தினத்தில் அடக்கஒடுக்கமாக இருந்த ஒருசில கணவன்மார்களின் சுயரூபம் இன்று பலருக்குத் தெரிந்திருக்கலாம். இந்தக் கவிதை அதற்கு சான்றாகவும் இருக்கலாம். நாஷின் ஒரிஜினல் இங்கே: http://www.poemhunter.com/poem/what-almost-every-woman-knows-sooner-or-later/


-

Thursday, March 8, 2012

ஸகியே!

குழந்தையின் மழலையை ரசிப்பது போல இந்தக் கவிதை மாதிரி வாக்கியங்களையும் ரசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். சகல துக்கங்களையும் பொறுத்துக்கொள்ளும் ஸகிக்களுக்கு வந்தனம்.

சேலையில் தொட்டில்  கட்டி  
சாலை வேலை பார்க்கும் அம்மாவுக்கும்

கலர் புடவை கட்டி
காக்கி சட்டை போட்டு
ஆட்டோ ஓட்டும் அம்மணிக்கும்

பத்து செங்கல்லை தூக்கும் சித்தாளாய்
வேலை பார்க்கும் பெரியாளுக்கும்

நாலு வீடு பத்து பாத்திரம் தேய்த்து
நாலு எழுத்து படிக்க அனுப்பும் தாயம்மாவுக்கும்


கல் கணவனிடமும்  புல் புருஷனிடமும்  
குப்பை கொட்டும் குணவதிகளுக்கும்

அந்நியனாய் அயல் தேசம் சென்ற புதல்வனிடம்  
கண்ணியமான பாசத்திற்காக ஏங்குபவளுக்கும் 

உயிரை ஒருவனுக்கு கொடுத்து உடம்பை 
மற்றவனுக்கு கொடுத்தவளுக்கும்

வறுமையில் தன்னை தொலைத்து கரு அறையில்
சிவப்பில் வாழும் 'அவளு'க்கும்

குடும்பத்தை பேண பஸ் பயண
கூட்டத்தில் இடிபடுபவளுக்கும்

காதலிப்பவளுக்கும்
காதலித்து கைவிடப்பட்டவளுக்கும்

நேரிலும்  நிழலிலும்,
விண்ணிலும் மண்ணிலும்
இக பர சுகமளிப்பவளுக்கும்

என் சிரம் தாழ்ந்த
மனம் கனிந்த
மகளிர் தின வாழ்த்துக்கள்.
-இது கவிதை அல்ல கவிதை மாதிரி
--இது ஒரு மீள் பிரசுரம்

Wednesday, March 7, 2012

நா ஆட்டோக்காரன்...

கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தின் வாசலில் எப்போதும் 'ஜே ஜே' என்று தேர் கூட்டம் திருவிழா கூட்டம் போல இருக்கும். ரேஸ் கோர்ஸ் எதிரில் கிண்டி தொடர்வண்டி நிலையம் உள்ளதால் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள இடம். இந்த ஜென்மமே ரேஸ் விளையாட எடுத்தது போல கர்ம சிரத்தையாக ஒரு கூட்டம் எப்போதும் அங்கே சுற்றி அலைவதுண்டு. ரேஸில் தோற்ற பாபப்பட்ட ஆத்மாக்கள் நாளை எப்படி ஜெயிப்பது என்ற நினைப்பிலும், ஜெயித்த கோஷ்டியினர் நாளை எப்படி இன்னும் அதிகம் கெலிப்பது என்று அந்தரத்தில் பறந்தும் சாலையை கடந்த வண்ணம் இருப்பர்.

இருசாராரிலும் ஒரு சிலர் கார், பஸ் மற்றும் சைக்கிளைக்கூட இருபக்கமும் போக விடாமல் ரோடில் நின்று லாப நஷ்ட கணக்குளையும் அன்றைய செலவாணியையும் பற்றி தீவிர கலந்துரையாடலில் ஈடுபட்டிருப்பதை காணலாம். இதற்கிடையில் ஒரு காரின் இடது பக்க கண்ணாடியில் தனது முகம் பார்க்க வருவதுபோல் வந்த ஒரு ஆட்டோ அப்படியே அதன் முன் சென்று பிள்ளையாரை பிரதக்ஷிணம் வரும் பக்தன் போல் இடமிருந்து வலம் திரும்பி, வலது பக்கத்தில் பல இடையூறுகளை கடந்து வந்து கொண்டிருந்த எம்.டி.சி பேருந்தை நிற்க வைத்து வலது கோடி ரேஸ் கோர்ஸ் சுவர் பக்க ஓரத்தில் இருந்த தனது "xxxx xxxx சங்க ஸ்டாண்டு" வில் நின்றது.

அதன் ஓட்டுனர் ஒரு பீடியை எடுத்து பற்றவைத்தார். கணேஷ் பீடி பிடிப்பது ஒன்றுதான் இப்புவியில் இந்த தருணத்தின் அதிமுக்கியமான வேலை என்று ஒரு பஸ், கார் போன்றவற்றை நிறுத்திய வெற்றியின் களிப்பு அவர் முகத்தில் தெரிந்தது. இவ்வளவு நடந்தது ஒன்றுமே தெரியாததுபோல தன்னுடைய சக நண்பருடன் தினத்தந்தியில் வந்த அன்றைய முக்கிய கள்ளக்காதல் சம்பவங்கள் பற்றிய விவாதத்தை தொடர்ந்தார்.

இது போல் நிகழ்ச்சிகளை சென்னையில் பலரும் எதிர்கொண்டிருக்கலாம். சில பல நிகழ்வுகளின் அடிப்படையில் இந்த கீழ்வரும் ஆட்டோ வகைகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.

1. அச்சம் தரும் (அச்சமற்ற)ஆட்டோ
ஏதோ ஒரு எஃப்.எம் பாட்டு அலறிக் கொண்டிருக்கும். முன் சீட்டில் காக்கி சட்டைக்கு பதில் கலர் சட்டை உட்கார்ந்திருக்கும். ஒட்டுபவருக்கு முன் பகுதி முடியில் கட்டாயம் சிகப்பு வண்ண சாயம் பூசியிருக்கும். சீட்டில் இடம் இருந்தால் கூட எப்போதும் ஓவர்லோடு அடிக்கும் போது ஒருவரை பக்கத்தில் உட்கார்த்தி சவாரி அடித்த பழக்கத்தால் கொஞ்சம் இடம் விட்டு ஒரு 45 டிகிரி சாய்வாக ரோடை பார்க்க உட்கார்ந்திருப்பார். ஆட்டோவின் பின் புறம் சிவப்பு/மஞ்சள் வண்ணத்தில் ஆங்கில எக்ஸ் குறி அல்லது ஃபார்முலா ஒன் நம்பர் மிக பெரியதாக இரண்டு அல்லது மூன்று முறை ஸ்டிக்கராய் ஒட்டப்பட்டிருக்கும். இதுதான் அச்சமற்ற ஆட்டோவின் அடையாளங்கள். இவர்கள் லெஃப்ட்ல இன்டிகேட்டர் போட்டு, ரைட்ல கையை காட்டி, நேராக நகைச்சுவை நடிகர் விவேக் சொன்னது போல் செல்வார்கள்.  எதாவது கேட்டால் காண்டாகி விடுவார்கள்.

2. தக்ஷிணாமூர்த்தி ஆட்டோ
கைலி அல்லது லுங்கி உடுத்தியிருப்பார். பேண்ட் கிடையாது. எப்போதும் கண்கள் வெளியே எங்கோ பார்த்துக் கொண்டிருக்கும். ஒரு காலை மடக்கி சிவன் கோவிலில் கோஷ்ட தக்ஷிணாமூர்த்தி அமர்ந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கும்படி உட்கார்ந்திருப்பார். பின்புறம் ஒபாமாவே வருவதாக ஓசை வந்தாலும் மெய்வருத்திக் கொள்ளமாட்டார். ஆட்டோ இருபது கிலோமீட்டர் வேகத்தில் சென்றால் அது அதிசயம். அவர் மட்டும் சாலை வரி செலுத்துபவர் போல நடு சாலையில் செல்வார். சில தக்ஷிணாமூர்த்திகள் இந்தப் பாராவின் முதல் வரியை பொய்யாக்கும் வகையில் பேண்ட்டோடும் உலவுவார்கள்.

3. சவாரி ஆட்டோ
ரோடில் மையமாக இருபது கி.மீயில் இம்மியளவும் வலது இடது திரும்பாமல் ரசமட்டம் பிடித்தாற்போல் ஒரே நேர்கோட்டில் சென்றால் அது சவாரி ஆட்டோ. ஹார்ன் அடித்து முன்னால் சென்று முறைத்தால் “போடா கய்தே” என்னும் பட்டம் உங்களுக்கு நடுரோட்டில் வழங்கப்படும்.

4. சவாரி எதிர்நோக்கும் ஆட்டோ
சாலையின் இடது ஓரத்தில் இருந்து பத்து அடி உள்ளே மித வேகத்துடன் சென்று கொண்டிருக்கும், மனைவி பிள்ளைகளுடன் பிராணாவஸ்தையில் நிற்கும் கணவர்களைப் பார்த்தோ, யாரையோ எதிர் நோக்கும் உதட்டுச் சாய புஷ்டியான இளம் பெண்ணிடமோ, தேமேன்னு ஓரமாக நிற்கும் தேசல் பாட்டியையோ சாலையின் இருமருங்கிலும் பார்த்தால் சடாரென்று எந்த பக்கமாக இருந்தாலும் பல்டியடித்துத் திருப்பி தலையை வெளியே நீட்டி "எங்க போணும்?" என்றால் அது சவாரி எதிர்நோக்கும் ஆட்டோ. ஆனால் நீங்கள் எந்தத்திசைக்கு கூப்பிடுகிறீர்களோ அத்திசைக்கு கும்பிடு  போட்ட “அங்கெல்லாம் வராது” என்று பதிலுரைப்பர்.

5. "டர்" ஆட்டோ
ஒரு தகர டப்பாவில் கயிறு கட்டி, தார் சாலையில் கட்டி வேகமாக இழுத்தால் வரும் சப்தம் கேட்டால் அது ஒரு நவீன யுக சப்த ஆட்டோ. ஊர் திருவிழாக்களில் மரணக்கிணறு என்று ஒரு ஐட்டம் உண்டு. கிணறு போன்ற ஒரு பள்ளத்தில் படிகட்டி ஒரு மோட்டார்பைக்கில் காது குடையும் சப்தத்துடன் வேகமாக மேலும் கீழும் மரணவேகத்தில் ஒட்டுவர். அதுபோன்று "டர்ர்ர்ர்ர்ர்ர்ர்................................." என்ற ஒலியுடன் ஒளி என சென்று கேட்டவர்களின் காதை கே. காதாக மாற்றும் ஒலி மாசு ஆட்டோ.

6. "ஷேர்" ஆட்டோ
ஆண் பெண், மணமானவர் ஆகாதவர், கிழவன் கிழவி, குளித்தவர் குளிக்காதவர், உடலுக்கு/சட்டைக்கு நாற்ற மருந்து அடித்தவர் அடிக்காதவர், ஒல்லி பெண் குண்டு பையன், ஒல்லி பையன் குண்டு பெண்மணி, மொபைலில் சதா சிரித்துப் பேசிக்கொண்டே பயணம் செய்பவர், வெளியே வேடிக்கை பார்த்து உள்ளே பக்கத்து பெண்ணின் பேச்சை கேட்பவர்கள், நடுத்தர வயது, முடி உள்ளவர், முன் பின் சொட்டை, மஞ்சள் துணிப்பை வைத்திருப்பவர், ஆபீஸ் பேக் சுமப்பவர், இளவயது ஜோடி, சில்லரை வைத்திருப்பவர் இல்லாதவர், அரசுப் பணி தனியார் பணி சொந்த 'தொழில்' செய்பவர், சேலை அணிந்திருப்பவர் சுடிதார் போட்டவர், கண்ணாடி அணிந்தவர் அணியாதவர், ஹிந்தி பேசுபவர் 'தமிலில்' பேசுபவர்கள் என பால், மொழி, இன, மத வேறுபாடுகளின்றி ஒரே சவாரியில் அரை பஸ் கூட்டத்தை ஏற்றி பயணத்திற்கு பத்து ரூபாய்க்கு வருவது இந்த பங்குச்சந்தை(ஷேர்) ஆட்டோ.

இந்த பிரிவுகளுக்கு அப்பாற்பட்ட நல்ல உள்ளம் படைத்த ஆட்டோகாரர்கள் இப்பட்டியலுக்காக என்னை மன்னிப்பார்களாக! ஏதேனும் தவறிருப்பின்.

பின் குறிப்பு: இதை எழுதும் போது வெகு தொலைவிலிருந்து எஸ்.பி.பி "நான் ஆட்டோக்காரன்.... ஆட்டோக்காரன்..... நாலும் தெரிஞ்ச ரூட்டுக்காரன்"  என்று ரஜினிக்காக பாடிக்கொண்டிருப்பது மெலிதாக காதில் விழுந்தது.
படம் நன்றி: http://www.rickshawchallenge.com
 -

Tuesday, March 6, 2012

ஆத்ம பயம்

 அரை மைலுக்குப் அப்பால் மத்தியான ஒற்றைக் காகம் செல்ஃபோன் டவரிலிருந்து கரைந்தால் உங்கள் வீட்டு டமார செவிட்டுப் பாட்டிக்குக் கூட காது கேட்கும் ஓர் அமைதியான பகுதி. நிர்ஜனமான வீதிகள். விரோதமாய்ப் பிரிந்திருக்கும் தனித் தனி வீடுகள். இரவு எட்டு மணிக்கு மேல் தாய்மார்கள் தனியாக நடந்து வந்தால் தாலிப் பறிப்பு சம்பவங்கள் அசால்டாக நடக்கும் இடம். பகலில் கூட தெரு நாய்கள் சங்கம் வைத்துத் தெரு பிரித்துக்கொண்டு தனது ராஜ்ஜியத்தை நடத்திக்கொண்டிருக்கும். இப்படி ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு புறநகர்ப்பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்திருந்தான் விஷ்ணு. “டாய்.. டாய்... இது அநியாயம்டா.. துளிக்கூட டிஸ்டர்பன்ஸ்ஸே கூடாதுன்னு இப்டி ரிமோட்டா வீடு பார்த்தியாடா?” என்று பார்த்தி ஏற்கனவே இடுப்பைக் குத்தி கண்களைச் சிமிட்டி கேலி செய்திருந்தான்.

அனிதா அங்கு வந்த முதல் நாளே “எப்பங்க ஆபீஸ்லேர்ந்து வருவீங்க. தனியா இருக்க எனக்கு ரொம்ப பயம்மா இருக்கு” என்று ஏக்கம் பாதி பயம் பாதி கலந்து கேட்டாள்.

“சீக்கிரம் ஓடி வந்துடுவேண்டா புஜ்ஜிக் கண்ணு” என்று செல்லமாக கண்ணத்தில் தட்டி பதில் சொன்னான்.

“நீங்க ரொம்ப பிசியா? ஆஃபீஸ் போனா ஃபோன் பண்ண மாட்டீங்களா?” அடுத்த நாள் ஷூ மாட்டும் போது காதருகே உஷ்ணமாகக் கேட்டாள். புலனனைத்தும் விழித்துக்கொண்டது.

“நாந்தான் அங்க ஆல் இன் ஆல். நெனைப்பெல்லாம் உன்ன சுத்தியே வந்தாலும் பேச முடியாதுடா ராஜா” இம்முறையும் கண்ணத்தில் ஒரு செல்லத்தட்டும் இச்சும் வைத்து ஒரு மந்தகாசப் புன்னகையும் உதிர்த்தான்.

அனிதா ரெண்டு வாரமே ஆன புத்தம் புதுப் பொண்டாட்டி. மறுவீடு, கறி விருந்து என்ற சொந்தங்களின் உபசரிப்பு தாக்குதல்களிலிருந்து தப்பித்து திருச்சியிலிருந்து சென்னைக்கு வந்து ஒரு வாரம் தான் ஆகியிருந்தது. தாலியில் பூசியிருந்த கஸ்தூரி மஞ்சள் இன்னமும் கமகமத்தது. தலைக்குக் குளித்து துண்டோடு கொண்டை போட்டிருந்தாள். இந்த காஸ்ட்யூமிற்கு நீங்கள் யூகித்தது போலவே நெற்றியில் சின்ன விபூதித் தீற்றல். உச்சி வகிட்டில் ஸ்ரீவித்யா குங்குமம்.

தலை முழுகிய கேசத்திலிருந்து நீர் சிந்தி பின்புற ஜாக்கெட்டில் மேப் வரைந்திருந்தது. கைகளில் மருதாணி கருத்திருந்தது. சூடு உடம்பு. எந்நேரமும் இந்நேரமும் முதலிரவு மயக்கத்தில் இருந்தாள். முகத்தில் ’அந்த’ சந்தோஷப் பூரிப்பு ’ஏ’த்தனமாகத் தெரிந்தது. அவர்கள் இருவரும் அடல்ஸ் ஒன்லியாக குடும்பம் நடத்திக்கொண்டிருந்தார்கள்.

விஷ்ணு பக்கத்தில் வரும்போதெல்லாம் அவளுக்குள் ஒரு புதுவித மின்சாரம் பாய்ந்தது. பாலீஷ் போட்ட இறக்குமதி சைனா ஆப்பிளாய் வெட்கத்தில் கண்ணம் சிவக்கும். கால்கள் கட்டாந்தரையில் சிக்குக் கோலம் போடும். நிலம் நோக்குவாள். அவனிடமிருந்து நிறைய எதிர்பார்ப்பாள்.

இன்று ஞாயிற்றுக்கிழமை. விஷ்ணு பத்து மணிக்குத்தான் எழுந்து சோம்பலாகப் பல் துலக்கினான். ப்ரூ காபி உறிஞ்சிய பின் “ஏய்! இங்க வா” கைலியை சுருட்டி கால்களுக்கிடையே சொருகிக்கொண்டு ஹஸ்கி வாய்சில் குழைந்தான். அவன் நின்று கூப்பிட்ட இடம் அவர்களது கட்டிலறை. அவனது “வா”வில் ரகசிய ஆசை நிறையவே கலந்திருந்தது. வெளியே காதலர்களுக்கேற்ற பருவநிலை நிலவியது. மேகமூட்டத்துடன் சிலுசிலு காற்று வீசியது. சமீபத்தில் பால் சொம்பு ஏந்தி அலங்கரித்த அறை சென்ற நினைவுகள் அவளுக்குள் திரும்பவும் வட்டமிட்டன. விஷ்ணு தலை உத்திரத்தை இடிக்கும் உயரம். திருமாலே பூவுலகிற்கு இறங்கிவந்து விஸ்வரூபம் எடுத்து நின்றமாதிரி கையை இடுப்பில் வைத்துக்கொண்டு நிற்பான்.

பின்னாலிருந்து தடிமாடு வில்லன் கட்டையை எடுத்து ஆவேசமாய் தோளில் அடித்து உடைக்கும் வலுவுள்ள தேக்கு மாதிரி தோள்கள். கொலுசு ஜலஜலக்க அடிஅடியாய் அனிதா அவனை நெருங்கினாள். ஆசையையும் காதலையும் அவளது கண் காட்டிக்கொடுத்தது. ஜன்னல் கதவு வெட்கமில்லாமல் திறந்திருந்தது.

தொட்டால் பற்றிக்கொள்ளும் இடைவெளியில் வந்து நின்றாள். அவளை விழுங்கிவிடுவது போல பார்த்தான் விஷ்ணு. இப்போது அவளுக்குள் பட்டாம்பூச்சி சிறகடித்துப் பறந்தது. கண் துடித்தது. எவ்வளவு சினிமா பார்த்திருக்கிறோம். அதே ஃபீலிங். டி.வியில் ஏதோ சேனலில் “கட்டிப்பிடி கட்டிப்பிடிடா கண்ணாளா கண்டபடி கட்டிப்பிடிடா” என்று அவர்களுக்காக சிச்சுவேஷன் சாங் ஒளிபரப்பிக்கொண்டிருந்தார்கள்.

“என்ன?” தெரியாதது போலக் கேட்டாள்.

“இன்னும் பக்கத்தில நெருங்கி வா” ஆர்வமாகக் கூப்பிட்டான்.

“வேலை நிறையா இருக்குங்க.” போலியாகச் சொன்னாள்.

“இதுவும் வேலைதான்” ஆர்டர் போட்டான்.

“சொன்னாக் கேளுங்க.. இல்லைனா மத்தியானம் வயித்துக்குப் பூவா கிடையாது” பொய்க் கோபம் காட்டினாள்.

“பரவாயில்லை. இதே மாதிரி ஒரு வருஷம் கூட அன்னம் தண்ணி இல்லாம இப்படியே இருக்கலாம் தெரியுமா?” ஆசையை அப்படியே காண்பித்தான்.

“சாப்பிடலைன்னா எப்படி மத்த வேலையெல்லாம் செய்யறதாம்” மீண்டும் ஊடல்.

“அடிக் கள்ளி!” இழுத்து அணைத்தான். முடிந்தது.

“ச்சீ. நா உள் வேலையெல்லாம் சொன்னேன்” அவனின் கரங்களுக்குள் அடைக்கலமாகி பனியனை மீறிய ரோம நெஞ்சில் டம்டம்மென்று குத்தினாள்.

”நானும் அதைத்தான்...” குறும்பாக இறுக்கினான். இடைக் கரும்பு நசுங்கியது. சாறு பிழியும் நேரத்தில்....

“டப்..டப்..டப்....” வாசல் கதவு பலமாகத் தட்டப்பட்டது. 

யாரது காமன் பூஜையில் கரடி?

“யாரு?”

பதிலில்லை.

”யாரு?”

அந்த மத்தியான செல்ஃபோன் டவர் காகம் கரைவது தெளிவாகக் கேட்டது.

டக்கென்று கதவு திறந்தாள் அனிதா.

இரு காவலர்கள் சீருடையில் நின்றிருந்தனர்.

இருவருக்கும் பகீரென்றிருந்தது.

“காலேஜ்லேர்ந்து ரமேஷ் கூட சுத்தினோம். அவனைச் சுத்தமா மொட்டையடிச்சு அவன் கிட்ட இனிமே பசையில்லைன்னு தெரிஞ்சவுடனே “நீங்க என் அண்ணன் மாதிரி”ன்னு அடிச்சு சொன்னோம். அந்த துக்கத்தில பாலக்கரைக்கு பக்கத்தில தூக்கி மாட்டி செத்துட்டானே. நம்மளோட லெட்டர், ஹேர் பின் எதாவாது போலீஸ் கைக்குச் சிக்கி விசாரணைக்கு வந்துட்டாங்களோ.” அனிதாவின் மனசு அடித்துக்கொண்டது.

”அடக்கடவுளே! தமிழரசி பெரிய மனுஷன் வீட்டு பொண்ணு. மெரினா, பீச், சுண்டல் அலுத்துப் போய் மகாபலிபுரம் அழைச்சுக்கிட்டுப் போயிருந்தோம். அங்கே மழை சொட்ட சொட்ட பெய்த போது அவளோட வளைவுகள் நம்மை வளைச்சப்போ ட்ரெஸ் மாத்தறத்துக்கு ரூம் எடுத்து கொஞ்சம் அப்படி இப்படி நடந்துக்கிட்டோம். ரெண்டு மாசத்துக்கப்புறம் கண்ணீரும் கம்பலையுமா அவ வந்து நின்னப்போ கையை விரிச்சுட்டு டேக்கா கொடுத்துட்டு ஓடி வந்துட்டோம். அவ அப்பங்காரன் கேஸ் கொடுத்துட்டானோ” விஷ்ணு ஏகத்துக்கும் கலவரமானான்.

”ஹலோ! என்னாச்சுங்க.. ரெண்டு பேரும் பேசாம சிலையாயிட்டீங்க”

“உ.....ங்க...ளுக்கு என்ன வேணும்” அனிதா மென்று விழுங்கிக் கேட்டாள்.

“நீங்க புதுசா குடி வந்துருக்கீங்க. இங்க நிறைய கொலை, கொள்ளைன்னு நடக்குது. இந்த ஏரியா ஸ்டேஷனுக்கு புதுசா மொபைல் வந்துருக்கு. அதான் வீடு வீடா எச்சரிச்சு அந்த நம்பர் கொடுத்துட்டு போலாம்னு வந்தோம்”

எழுதிக் கொடுத்தார். குறித்துக்கொண்டார்கள்.

“தேங்கஸ்!” கோரஸாக சொன்னார்கள்.

போலீஸ் ரெண்டும் போன பிறகு, தங்கள் காவியக் காதலை மீண்டும் தொடர்ந்தார்கள்.

பத்து நிமிடம் காதலாய்க் கடந்திருக்கும்.

”டப்..டப்...டப்... “ வாசல் கதவு மீண்டும் பலமாகத் தட்டப்பட்டது.


யாரது?

தமிழரசியா? ரமேஷா?

படம் நன்றி: http://www.townlog.com

-

Monday, March 5, 2012

அட்ரெஸ்

 "சார்! இந்த அட்ரெஸ் எங்க இருக்கு தெரியுமா?"

"........."

"இது...”

"கிட்ட கொண்டா. ஓ.. பீமாராவ் அப்பார்ட்மெண்ட்ஸா! ஷ்ட்ரெய்ட்டா போய் ஃப்ர்ஷ்ட் லெஃப்ட்டு அப்புறம் ஒரு பெரிய நாட்டார் கடை வரும். அத்தத் தாண்டி ஒன்னு.... ரெண்டு..... மூனாவது லெஃப்ட்”

“அதோ அந்த மரத்தடிக்கு கீழ ஒரு சிகப்பு கலர் இன்னோவா நிறுத்தியிருக்கே அதுக்கு அப்புறமா வர்ற லெஃப்ட்டா?”

“ஆமா. அங்க ஒரு பொடிப்பய குரங்குபெடல்ல சைக்கிள் ஓட்டிக்கிட்டு போறானே அது தாண்டி”

“அவன் ரைட்லன்னா போறான்”

“இல்ல.. அதையும் தாண்டி ஒரு ஆன்ட்டி போவுதில்ல, அங்க ஒரு லெஃப்ட் இருக்குங்க”

“நடு ரோட்ல ஆட்டோவும் அதுக்கு ஓரமா ஒரு ஸ்டாண்ட்டும் இருக்கே அதுக்கு பக்கத்திலயா?”

“ஆமாமா...”

“தேங்க்ஸ்”

***

”இந்த அட்ரெஸ்..”

“அச்சச்சோ! இது இந்த ஏரியாவுல வராதுங்களே! வந்த வழி தப்புங்க. ஒன்னு பண்ணுங்க...இப்ப வர்ற இம்மீடியட் லெஃப்ட்ல கட் பண்ணி கடைசி லெஃப்ட்ல திரும்புங்க”

“இங்க தான் மூனாவது லெஃப்ட்லன்னு சொன்னாங்களே”

“தப்பு சார்! சொன்னாக் கேளுங்க... நீங்க இப்ப வர்ற லெஃப்ட்ல திரும்பி கடேசில ரோடு முட்டற வரைக்கும் போங்க.. அங்க போயி ஒரு லெஃப்ட் எடுங்க! அங்க கேளுங்க கரெக்ட்டா சொல்லுவாங்க”

“தேங்க்ஸ்ங்க”

“ம்... போய்ட்டு வாங்க..”

*****

“இந்த அட்ரெஸ்.....”

“ஹலோ.. இப்பதானே சொன்னேன்.. முத லெஃப்ட் அப்புறம் மூனாவது லெஃப்ட்”

“அங்க அப்பார்ட்மெண்ட்டும் இல்ல.. ஈ காக்கா இல்ல. மனுஷ வாடையே காணோம்ங்க”

“அப்ப... நேரா போய் ரெண்டாவது லெஃப்ட்ல திரும்பிப் பாருங்களேன்”

“நீங்க எங்கூட வந்து கொஞ்சம் வழி காமிக்கமுடியுங்களா?”

“எனக்கு வேலை இருக்குப்பா..”

“நா அலையுற அரை மணி நேரமா இங்க தான் உட்கார்ந்திருக்கே. என்னப்பா வேலை உனக்கு.”

“ஹலோ. நக்கலா! சும்மா போய்யா!”

“ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்களேன்”

“சரி..சரி... பார்க்க பாவமா இருக்க... வண்டிய எடு... காட்டுறேன்...”

*********

“யோவ். நிறுத்துய்யா.. ரெண்டாவது லெஃப்ட்டுக்கு பதிலா ஃபாஸ்டா நேராப் போறியே!”

“பரவாயில்ல... ஒரு டிக்கெட் கெடச்சுதுல்ல...”

“என்னய்யா சொல்ற...”

”பீமாராவ் அப்பார்ட்மெண்ட்ல ஒருத்தருக்கு இன்னியோட ஆயுசு முடியது. தூக்கிக்கிட்டு வரச்சொன்னாங்க.. அதுக்குதான் வாடகைக்கு சைக்கிள் எடுத்து அலைஞ்சுகிட்டு இருந்தேன். ஒன்னும் தகயலை...”

“யோவ்.. யோவ்.. நிப்பாட்டு...நிப்பாட்டு... ஒன்னும் புரியலை... நீ யாரு...”

“நான் யமதர்மன் டீம்ல அப்பெரண்டீஸா போன அஷ்டமில நல்ல மரணயோகத்தில ஜாயின் பண்ணியிருக்கேன். இன்னிக்கு தான் என்னோட முதல் பூலோக அசைன்மெண்ட். வெறுங்கையோட திரும்ப முடியுமா?.. ம்.. சொல்லுங்க...”

“டேய்.. சும்மா.. அரைபெடல் போட்டு சைக்கிள்ல தள்ளாடிக்கிட்டு போகும்போது எனக்கு குதிக்கத்தெரியாதுன்னு நினைச்சியா... டபுள்ஸ் அடிச்சே எமலோகத்துக்கு கொண்டுபோய்டுவியோ! கிறுக்கனா நீ! போடாங்.....”

“வேணாம்... சொன்னாக்கேளுங்க... குதிக்காதீங்க... வேணாம்... ”

***********

“கங்கிராட்ஸ்... பீமாராவ் அப்பார்ட்மெண்ட்ஸ் கேஸ் கிடைக்கலைன்னாலும் இவன தூக்கிக்கிட்டு வந்துட்ட....”

“எவனாயிருந்தலும் தண்ணி லாரி வரும்போது குறுக்கால குதிப்பான்னு சொன்னீங்க.. அதே மாதிரி நடந்தது பாஸ்”

“இந்தா.... அடுத்தது இதுதான் அட்ரெஸ்....”

-
பட உதவி: www.ebay.in

பின் குறிப்பு: முழுவதும் வசனமாக ஒரு கதை.
-

Friday, March 2, 2012

மாமா மோமோ

சிரங்கு சொறிவதைப் போல முனைப்போடு முகப்புஸ்தகத்தில் எழுதுகிறேன். அப்படி எழுதியதிலிருந்து பலருக்கு பிடித்ததை தொகுத்து திண்ணைக் கச்சேரியாக இங்கே......

********* டாக்டர் *****************
அங்கே ஒரு திருவிழாக் கூட்டம் நின்றுகொண்டிருந்தது. வாசலில் போர்டு இன்னமும் “அவுட்” காட்டிக் கொண்டிருந்தது. ”இன்னிக்கி வருவார்ல” உர்ரென்று மூஞ்சியை வைத்துக்கொண்டு சிடுசிடுவென்று ஒருத்தர் கேட்டார். “நிச்சியம் வருவார்ங்க. எவ்ளோ தடவ சொல்றது” பேச்சில் காரம் சேர்த்தார் சேரை இழுத்துப் போட்டவர். டாக்டர் வரும்வரை இவர்களை கட்டி மேய்க்கவேண்டியது அவரது அன்றாட வேலை.

வெளியில "இன்” போட்ருக்கீங்க. இது ஒரு வெண் தாடிக்காரரின் சந்தேகம். பெரிய வயசில்லை. நாற்பத்தெட்டு ஐம்பதிருக்கலாம். வாட்சை திருகிக்கொண்டே இருந்தார். என்ன அவசரமோ? “நேத்தியிலிருந்து மாத்தலை சார்”. இது கம்பௌண்டர். ”யாருமே அவங்க அவங்க வேலையை ஒளுங்கா செய்ய மாட்டேங்கிறாங்க. அதான் இப்படி இருக்கோம்” இந்தியத் திருநாட்டின் தற்போத நிலைமையை நினைத்து வேதனைப்பட்டு கூரையைப் பார்த்து புலம்பினார் அந்த வெ.தா.

“நாங்க தான ஃப்ர்ஸ்ட்டு?” ஒரு இழுத்துப் போர்த்திய அம்மாளும் அவருடைய லெக்கின் போட்ட பத்தாவது படிக்கும் பெண்ணும் காயர் பாடிக் கேட்டார்கள். “நாங்க ஆறு மணிக்கே வந்து மொதல்ல பார்த்துட்டு போனோம்” முன்னால் கேட்டவர்களை அடிக்க வராத குறையாக பக்கத்தில் டெரர்ராக ஒரு மத்திம வயது ஜோடி பிளிறியது. சேரை இழுத்துப்போட்டவர் இப்போது இந்தியாவிற்கு யார் பிரதமர் என்பது போல குழம்பினார்.

டாக்டர் உள்ளே சென்று சேரில் உட்காருவதற்கு முன்னர் ரெண்டு பேர் தள்ளுமுள்ளுவில் பாய்ந்து நுழைந்துவிட்டார்கள். முன்னால் வந்தவருக்கே முன்னுரிமை என்ற பொது கோட்பாட்டில் ஒருவர் பின் ஒருவராக சென்றுவந்தார்கள். வெளிவருபவர்களில் சிலர் சீட்டோடு, சிலர் சிரிப்போடு, சிலர் புஜத்தில் பஞ்சு வைத்து தேய்த்துக்கொண்டே என்று.

பத்து பேஷண்ட்டுகள் போயிருக்கும் என்று நினைக்கிறேன். வெளியே ஆங்காங்கே அரைத் தூக்கத்தில் இரண்டொருவர் உட்கார்ந்திருந்தார்கள். ”சார் நீங்க போங்க” என்று வழி காண்பித்தார். கிண்டிலை மூடினேன். தாஸ்தாவேய்ஸ்கியின் ”வெள்ளை இரவுகள்” கிண்டிலில் படிக்க ஆரம்பித்து “FIRST NIGHT" முடிந்து “SECOND NIGHT" ஆரம்பித்திருந்தேன். இரவு பதினொன்னரை காட்டியது க்ளினிக் கடிகாரம்.

கிண்டிலின் உபயத்தில் “என் முறை எப்போ?” என்று மற்றவர்களுடன் சரி நிகராக கோதாவில் இறங்காமல் இருந்தது அதன் பெரும் பயனே ஆகும் என்று இந்த கதா காலேட்சேபத்தை முடிப்பதுதான் சாலச் சிறந்தது!

****** ஆதர்ஷ தம்பதிகள் ************
பாதாள சாக்கடைக்காக குதறிக்கிடந்த வீதியில்
மேடு பள்ளங்களுக்கிடையில் இன்ச்சிங் செய்து
பாசமாக திருமதியை இறக்கி ஏற்றி
மொபட்டை ஓட்டிச் சென்றதில்
மிளிர்கிறது காதல்!!

#தாத்தா பாட்டியான தம்பதிகள்!
********** மாமா மோமோ **********

”மாமா மோமோ சாப்பிட்றியா”

“என்னது”

“மோமோ”

மருமான் கேட்க அப்போதுதான் அந்த சைனாக்காரன் கடையைப் பார்த்தேன். ஃபுட் வேர்ல்ட் கீழே சப்பை மூக்கோடு கொழக்கட்டை சொப்பு பிடித்துக்கொண்டிருந்தான். ஜீன்ஸ் போட்ட தலைவிரி கோல இளம்பெண் ஆர்டர் கொடுத்துக்கொண்டிருந்தாள். இங்கு சைவ, அசைவ மோமோக்கள் கிடைக்கும் என்று போர்டு வைத்திருந்தார்கள்.

ஆர்வமாய் நெருங்கிப் பார்த்தேன். சதுர்த்திக்கு பிள்ளையார் நைவேத்தியத்திற்கு வீட்டில் வெல்லக் கொழக்கட்டை செய்வார்களே அதே போல ஒரு வஸ்து. அதே மாவுதான் என்று நினைக்கிறேன். வரிவரியாக டிசையன் போட்ட மார்டன் கொழக்கட்டை. ஃபாஸ்ட் புட் கடைகளில் ஆஸ்தான இடம் வகிக்கும் கோஸ், கேரட், உருளை மூன்றும் சீவியது கொத்துகொத்தாக ஒரு மூலையில் குவித்து இருக்க..

“ஒன் வெஜ் மோமோ” என்று கேட்டால் பூரணத்துக்கு பதிலாக அதை அடைத்து இண்டக்‌ஷன் அடுப்பில் ஏற்றி வேகவைத்து தருகிறார்கள். நான் வெஜ் மோமோ என்றால் சிக்கன், மட்டன் பீஸ் வைத்து சுட்டுத் தருகிறார்கள். அப்புறம் மேலே சிகப்பு பச்சை என்று கலர்க்கலராக சாஸ் தெளிப்பது இது போன்ற சகல ஐட்டங்களுக்கும் சம்பிரதாயமான ஒன்று.

வாசலில் சிறுமலரில் ஒன்னாவது படிக்கும் ட்ராயிங் புக் விற்றுக்கொண்டிருந்த பெண்ணுக்கு சீஸ் ஃப்ராங்கி ஒன்று தானம் செய்துவிட்டு வந்தேன்.

மோமோவை கிட்ட நெருங்கி பார்த்ததோடு சரி! எட்டடி தலைதெறிக்க ஓடிவந்துவிட்டேன். நாளைக்கு ஆஃபீஸ் போகனும். :-)

******* அவ்வை சண்முகி ********
ஞாயிற்றுக்கிழமைகளில் அவ்வை சண்முகியாக மாறப் போகிற அனைத்து ஆண் சிங்கங்களுக்கும் ஹாப்பி வீக் எண்ட்! :-)

********* கொள்ளை காசு *********
அடுத்த ஜென்மத்தில ஒரு கார்பென்ட்டராகவோ அல்லது ஒரு எலெக்ட்ரீஷியனகவோதான் பிறக்கனும். அதுவும் தருமமிகு சென்னையில் பிறக்கனும். அதுவும் ஆர்.வி.எஸ் வீட்டுக்கு வேலை செய்யனும்.
கொள்ளை காசு! :-)

******* அலைவரிசை **************
”ஹள்ளோ”, ”வண்கம்” சொல்லும் எஃப்.எம் ரேடியோ ஜாக்கிகள் எல்லோரும் இன்றைக்கு ஒருவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்லியிருக்கனும். யாரும் சொன்னதா தெரியலை. ரேடியோ அலைவரிசை ட்ரான்ஸ்மிட்டரைக் கண்டுபிடித்த Heinrich Hertz-ன் பிறந்தநாள். கூகிள் முதல் பக்கத்தில் டூடுல் போட்டு கொண்டாடுகிறது. பாவம் மனுஷன் அல்பாயுசுல போயிட்டார். சாகும்போது 36 வயது.

பிற்காலத்தில் அவரது கண்டுபிடிப்புகள் பற்றி கேட்டபோது அவர் சொன்னது “எனக்குத் தெரிஞ்சு ஒன்னுமில்லை!”. எவ்ளோ அடக்கம். ரேடியோ அலைவரிசைகள் கூட நிர்வாணக் கண்களுக்கு தெரிவதில்லை.

*********** சிவராத்திரி **************
அடியேன் சென்று தரிசித்து படமெடுத்த கோயில்களிலிருந்து எடுத்து கொலாஜ் செய்து சிவராத்திரியன்று ஃபேஸ்புக்கில் பகிர்ந்தது.


-

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails