Showing posts with label பொங்கல் வாழ்த்து. Show all posts
Showing posts with label பொங்கல் வாழ்த்து. Show all posts

Monday, February 1, 2016

தாத்தாவின் சந்தோஷம்

நான் அமைதியாகக் காத்திருந்தேன்.

”இன்னும் கொஞ்சம் நவுருங்க... அப்படி...அப்பிடி..” என்று ஒரு பெரியவர் முன்னும் பின்னும் ஓடியாடிக் கெஞ்சியதையும் மிஞ்சி எனக்கு முன்னால் அடாவடியாகக் கோணலாக சூப்பர்ப்பை நிறுத்திய இளைஞனுக்கு முப்பது தாண்டியிருக்காது. குபேரனின் கொள்ளுப் பேரன் என்பது அவனது நடையுடை பாவனையில் தெரிந்தது. காரிலிருந்து ஸ்டைலாக இறங்கி அவன் கையைக் கோர்த்த யுவதிக்கு ஏகத்துக்கு துணிப் பஞ்சம். காசிருந்தும் வஸ்திர செல்வம் சேரவில்லை. நேராகப் பார்ப்பவர்கள் கட்டாயம் பக்கத்தில் முட்டிக்கொள்ளும் அபாயம் இருக்கிறது. அவர்கள் நகர்ந்தவுடன் என் முறை. 

அவர் கருநீலக் கலரில் சட்டையும் பேண்டும் அணிந்திருந்தார். தும்பைப்பூவாய் வெளுத்த தலை. நெற்றியில் மணக்கும் சந்தனம். அதன் கீழே முப்பாத்தம்மன் குங்குமம். வீட்டு நிலைமை இந்த வயதில் அவரை வேலைக்கு நெட்டித் தள்ளியிருக்கவேண்டும். எழுபது வயது என்று சொல்வது கூட குறைச்சலாக இருக்கலாம். மாயமந்திரத்துக்கு கட்டுண்டது போல அவர் காட்டிய திக்கெல்லாம் சென்றேன். வலது ஓர சுவற்றை ஒட்டி சேப்பாயியைப் போட்டு ஒடுக்கிக்கொண்டு இறங்கினேன். “பரவாயில்ல.. லெஃப்ட்ல இன்னும் கொஞ்சம் வாங்க...” என்று சிரித்தார். அவருக்கு பரம திருப்தி. அவரது வேலைக்கு நிபந்தனையின்றி ஒத்துழைத்து நிறுத்திவிட்டு பாட்டா படியேறினேன்.

ஷூ வாங்கிக்கொண்டிருக்கும் போதும் கண்ணாடி தாண்டிய பார்வை வெளியே அவர் மீதே விழுந்தது. நுழையும் கார்களுக்கும் செல்லும் கார்களுக்கும் முன்பின் சைகை காண்பித்து மாடாக உழைத்துக்கொண்டிருந்தார். ”அந்த மாடல் எடுங்க...” என்று அலமாரியைக் காண்பித்தேன். அங்கே அவருக்குக் கால் இடறியது. புது ஷூக்குள் என் கால் நுழைய மறுத்தது.

எல்லாம் வாங்கிக்கொண்டு வந்து காரை எடுக்கும் முன் அவரிடம் ஓடினேன். கையில் கொஞ்சம் பணத்தைத் திணித்தேன்.

“ஹாப்பி பொங்கல்!” என்றதும் தலையை ஒரு பக்கமாகச் சாய்த்து “என்ன?” என்பது போல ஆட்டினார். காது கேட்கவில்லை. “ஹாப்பி பொங்கல்” என்று கொஞ்சம் வால்யூம் கூட்டினேன்.

“தாங்க்ஸ்” என்று பல் தெரிய சிரித்தார். ரிவர்ஸ் எடுத்து மீண்டும் சாலையில் வண்டியைத் திருப்பி நேரே செல்லும் வரை ரியர்வ்யூவில் அவரைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். உதட்டிலிருந்து புன்னகை கழலவில்லை.

“அந்தத் தாத்தா ஏன் உன்னைப் பார்த்து சிரிச்சுண்டே இருந்தார்?”

“அவரை க்ரீட் பண்ணினேன்”

“என்னான்னு?”

“ஹாப்பி பொங்கல்!!”

கையில் காசு அழுத்தியதைச் சொல்லவில்லை. பணமில்லாமல் அன்பான அனுமுறையிலும் இன்சொல்லும் பிறத்தியாருக்குச் சந்தோஷம் தரமுடியும் என்று குட்டிக்குத் தெரியட்டும்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails