Monday, July 9, 2012

அலமாரியில் உறங்கும் புத்தகங்கள்


ஆசைப்பட்டு வாங்கிய புத்தகங்களில் சில ஒரு சில மென்மையானப் புரட்டல்களுக்கப்புறம் அலமாரியில் பத்திரமாக உறங்குகின்றன. இவையிவை நல்லவை என்று நண்பர்கள் பரிந்துரைக்கும் போது ஆர்வ மிகுதியில் அதன் மேல் காதல் பெருகி சட்டென்று ஃப்ளிப்கார்ட்டுக்குள் புகுந்து பட்டனைத் தட்டி ஆர்டர் செய்துவிடுவது இப்போதெல்லாம் வழக்கமாகிவிட்டது. இதுவரை வாங்கியதெல்லாவற்றையும் முழுசாகப் படிக்காமல் புதுசு புதுசாக புத்தகம் வாங்கும் போது ஒரு வித குற்ற உணர்ச்சி மேலெழுந்து வரும். இனி கையிலிருப்பதைப் படிக்காமல் வாங்கக்கூடாது என்கிற சபதம் குடிகாரன் பேச்சுப் போல இருக்கக்கூடாது என்று வைராக்கியமாக இருந்தாலும் அதுவும் நீண்ட நாட்கள் நிலைப்பதில்லை.

ஒரு மாதம் முன்பு அலுவல் சம்பந்தமாக டாட்டா கம்யூனிகேஷன்ஸுக்குச் செல்லும்போது அம்பத்தூர்-ஆவடி சிக்னலில் ரைட் எடுத்ததும் புஸ்தக நெடி பலமாக அடித்தது. வலதுபுறத்தில் புழுதிப் புகைக்கிடையில் NCBH ன் அச்சுக்கூடமும் விற்பனைக்கூடமும் சேர்ந்திருந்தது. நா.வானமாமலைப் பற்றிச் சென்ற வாரத்தில் ஒரு நாள் புத்தகப்பேச்சில் கார்த்தி மிகவும் சிலாகித்துக்கொண்டிருந்தார். NCBH தான் வானமாமலையின் பெருவாரியான புத்தகங்களுக்குப் பதிப்பாளர்கள் என்றும் சொன்னார். சென்ற சனிக்கிழமை அலுவலகத்திலிருந்து சீக்கிரம் மூட்டையைக் கட்டிவிட்டு NCBH-சிற்கு விஜயம் செய்தேன். ஒரு மணிநேரம் தீராத ஆசையில் மொய்க்கும் வண்டாய் சுற்றிச் சுற்றி வந்து கீழ்கண்ட புத்தகங்களைச் சொந்தமாக்கிக் கொண்டேன்.

  1. இக்கால இலக்கியம் - நா.வா நூல் தொகுப்பு - என்சிபிஹெச்
  2. உணர்வுகள் சிந்தனைகள் - கட்டுரைத் தொகுதி - நீல பத்மநாபன் - என்சிபிஹெச்
  3. வரலாறும் வக்கிரங்களும் - டாக்டர் ரொமீலா தாப்பர் தமிழில் நா.வானமாமலை - என்சிபிஹெச்
  4. தமிழர் வரலாறும் பண்பாடும் - நா.வானமாமலை - என்சிபிஹெச்
  5. பழங்கதைகளும் பழமொழிகளும் - நா.வானமாமலை - என்சிபிஹெச்
  6. கம்பரும் ஷேக்ஸ்பியரும் - பேரா. கி. நடராசன் - பாவை பப்ளிகேஷன்ஸ்
  7. பிசிராந்தையார் - நாடகம் - பாரதிதாசன் - பாவை பப்ளிகேஷன்ஸ்
  8. காகிதத்தின் கதை - நா.வானமாமலை - என்சிபிஹெச்
  9. ரப்பரின் கதை - நா.வானமாமலை - என்சிபிஹெச்
  10. இரும்பின் கதை - நா.வானமாமலை - என்சிபிஹெச்
  11. தமிழர் நாட்டுப் பாடல்கள் - நா.வானமாமலை - என்சிபிஹெச்
சரியாக அச்சாகியிருக்கிறதா என்று வீட்டிற்கு வந்து ஒரு முறை ப்ரௌஸ் செய்தபோது கிடைத்த சில தகவல்கள் கீழே....

இசை ரசனை இல்லாத மாந்தர்கள், கொம்பும் வாலும் இல்லாத மிருகங்களுக்குச் சமம் என்று பர்த்ரு ஹரி கூறுகிறார் - “உணர்வுகள் சிந்தனைகள்”- நீல பத்மநாபன்.

கன்னனுக்குப் பிறகு கொடையில்லை கம்பனுக்கு பிறகு கவிதையில்லை என்று பாரதி பாடினான் - “கம்பரும் ஷேக்ஸ்பியரும்” - பேரா. கி. நடராசன்

யானை தெருக்குப்பைகளை வாரிக்கொண்டிருக்கிறது - (அக்காலத்தில் யானை குப்பை வாரியிருக்கிறது போலும்) - ”பிசிராந்தையார்” - பாரதிதாசன்

ரப்பரின் கதை - பசங்களை உட்கார்த்தி வைத்து தாத்தா கதை சொல்வது போல எழுதப்பட்டிருப்பது குழந்தைகளை ஈர்க்கும். சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார் வானமாமலை.

இவையன்றி ஞாயிறு கையிலங்கிரி கபாலிக்கு அருகில் இருக்கும் கிரி ட்ரேடிங்கில் இரண்டு புஸ்தகங்கள் வாங்கினேன்.
1. ஜெயகாந்தன் முத்திரைக் கதைகள் - கவிதா பப்ளிகேஷன்
2. கம்பன் கவிநயம் - வாரியார் ஸ்வாமிகள் - குகஸ்ரீ வாரியார் பதிப்பகம்.

இந்த மாதக் கணையாழியில்(ஜூலை’12) அசோகமித்திரனின் கட்டுரையைப் படித்தபின்னர் இந்தப் ”புத்தகம் வாங்கிப் படிக்கா”க் கலக்கம் அறவே தீர்ந்தது.  இத்தாலிய எழுத்தாளரான ஆல்பர்ட்டோ மொராவியாவின் டூவிமன் நாவலை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கி இந்த ஜுன் 2012ல் படித்ததாக எழுதியிருக்கிறார் அசோகமித்ரன். இக்கலியில் என் கலக்கம் தீர்த்த அவர் வாழ்க!

#வீட்டம்மாவிற்கு அசோகமித்திரனின் இந்தக் கட்டுரையைக் கண்ணில் காட்டியே இன்னும் கொஞ்சம் புத்தகம் வாங்கலாம். நேரம் கிடைக்கும் போது படிக்கலாம். ரசிக்கலாம். கொண்டாடலாம்.

பட உதவி: lifehack.org

Saturday, July 7, 2012

குடும்ப நீதி - கணவனார் கவனம்


"என்னங்க...” என்று மனைவி ஆரம்பிக்கும்போதே “எதற்கு” என்று புரிந்துகொண்டு “ஏன்” கேட்காத கணவன் “எப்படியும்” பிழைத்துக்கொள்வான்.

#குடும்ப நீதி (1/420)

”க்க்கும்” என்கிற மனைவியின் லேசானத் தொண்டைச் செருமலிலேயே ”இதைச் செய்யக்கூடாது” என்று சமயோசிதமாக விழித்துக்கொள்ளுபவனுக்கு எந்நாளும் வாழ்க்கையில் சங்கடம் இல்லை!

#குடும்ப நீதி (2/420)

”எனக்கு ஒன்னும் வேண்டாங்க...” என்கிற மனைவியின் மாடுலேஷனில் இடம் பொருள் ஏவல் புரிந்துகொண்டு "என்ன வேணும்" என்று சாமர்த்தியமாகத் தெரிந்துகொள்ளும் கணவனுக்கு வாழ்க்கையில் இல்லை இடர்தானே!

#குடும்ப நீதி (3/420)

பைசாப் பெறாத விஷயத்திற்கு “ஒரு தடவ மரியாதையாச் சொன்னாக் கேட்கமாட்டே...” என்று ஆரம்பித்து சகட்டுமேனிக்குத் தன் பிள்ளைகளை கணவன் காதுபட மனைவி திட்டுவது அவனுக்கும் சேர்த்துதான் என்று சுதாரித்துக்கொள்பவன் அடுத்த முறை பிடிபடாமல் இருக்க இன்னும் நேர்த்தியாகத் திருட்டுத்தனம் செய்ய முயற்சிப்பான்.

குடும்ப நீதி (4/420)

மனைவியின் ”இந்தப் புடவை எப்ப எடுத்தது தெரியுமா?” என்ற கேஷுவலான கேள்விக்குப் பேந்தப் பேந்த முழித்து ஹி..ஹி என்று பல்லைக் காட்டிக்கொண்டிருக்கும்போது  “இதெல்லாம் உங்களுக்கெங்க ஞாபகம் இருக்கப்போவுது?” என்கிற பெருமூச்செறிந்த தீவீரமான இரண்டாவது கேள்வியில் அந்த அப்பாவிக் கணவன் விழித்துக்கொள்வான்.

#குடும்ப நீதி (5/420)

"ஹெஹ்ஹே.. நானெல்லாம் டெர்ரர். நா ஒரு பார்வை பார்த்தாலே எம் பொண்டாட்டிக்கு சப்தநாடியும் அடங்கிடும்” என்று சம்பந்தமே இல்லாமல் நொடிக்கொருதரம் அடிக்கடி பொது இடங்களில் அலட்டிக்கொள்ளும் கணவன்மார்கள் சர்வநிச்சயமாக வீட்டில் பொட்டிப்பாம்பாக அடங்கி மனைவியின் திறம் வியந்து செயல் மறந்து தாள் பணிந்துச் சரணாகதியடைந்திருக்கிறார்கள் என்பது தெளிவு.

#குடும்ப நீதி (6/420)

“என்னாச்சு. ஏன் இன்னிக்கி லேட்டு?” என்கிற மனைவியின் அடிக்குரல் அதிரடிக் குரலாக வானம் கிடுகிடுக்க கேட்கும் போது அல்வா, மல்லிப்பூ, அர்ச்சனா ஸ்வீட்ஸ்... இத்யாதி இத்யாதிகளில் இலகுவாக சரிக்கட்டி விடலாம் என்று நம்புபவனின் கதி அதோகதிதான்.

#குடும்ப  நீதி (7/420)

”நீதான் இவ்வுலகத்திலேயே சொக்கவைக்கும் பேரழகு! உன் கைப்பக்குவம் யாருக்காவது வருமா? உன்னோட வத்தக் குழம்பு மாதிரி இந்த ஊர்ல ஒருத்தியாலும் வைக்கமுடியாது! அஞ்சாவது ஆறாவது பசங்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கிற உன்னோட திறமையைப் பார்த்தால் உன்னால அஞ்சாறு ஐஏஎஸ்ஸையே உருவாக்க முடியும் போலருக்கே!” என்பது போன்ற புரை தீர்ந்த நன்மை பயக்கும் புகழுரைகளை அடிக்கடி மனைவி மேல் அள்ளி வீசுபவனது மணவாழ்க்கையில் மணம் வீசுவது நிச்சயமே!

#குடும்ப  நீதி (8/420)

மிடில் ஷிஃப்ட்டாக இருக்கலாம், அதிகாலையில் எழுந்திருந்து மார்னிங் ஷிஃப்ட்டுக்கு சீக்கிரம் ஓடுபவனாகவும் இருக்கலாம், அல்லது குடும்பத்திற்காக உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்ந்துபோனவனாகவும் இருக்கலாம். யாராயிருந்தாலும் அவன் தான்

"பின் தூங்கி முன் எழுவான் ப(த்)தி(னன்)!!"

#குடும்ப நீதி (9/420)

மனைவியை நோக்கிக் கூறும் மெய்யுரையோ பொய்யுரையோ புகழுரையோ எவ்வுரையும் தனதுரையாகயும் நுண்ணுரையாகவும் அளவுரையாகவும் தெளிவுரையாகவும் இருத்தல் நலம். அதுவன்றி சம்சாரத்தில் அடிபட்ட கணவன்மார்களின் அச்சுப்பிச்சு அருளுரைகளைக் கேட்டு வந்து வீட்டில் உளறுரையாகவோ அறவுரையாகவோ பேருரையாகவோ உரைப்பவனின் முடிவுரை இல்லா நொய்நொய்யுரைகள் அந்த ”துரை”க்கு உதவாக்கரை பட்டத்தையே பெற்றுத் தரும்.

#குடும்ப நீதி (10/420)

##குடும்ப நீதியின் முதல் அதிகாரம் "கணவனார் கவன” த்திற்கு இத்தோடு ஃபுல்ஸ்டாப் வைக்கப்படுகிறது.

பட உதவி: http://www.awomensclub.com/

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails