Showing posts with label பெங்களூரு. Show all posts
Showing posts with label பெங்களூரு. Show all posts

Friday, August 19, 2016

கோபியுடன் டின்னர்

பெங்களூருவின் பூர்வகுடியர்களுக்கு இந்த சாலை அடைக்கும் போக்குவரத்து ஹார்ட் அட்டாக் தரக்கூடிய ஒன்றாகத்தான் இருக்கமுடியும். இரண்டு குட்டி யானைகள்(TATA ACE) ஜோடி போட்டுக்கொண்டு வந்தால் ரோடு நிரம்பிவிடுகிறது. சாலைகள் கூடுமிடங்களில் ஒரு பக்கத்துக்கு கஞ்சத்தனமாக இருபது விநாடிகள் கொடுக்கிறார்கள். ரொம்ப நேரம் காத்திருந்து கண் அசந்து தூங்கிய பிரகிருதிகள் விழித்தெழுந்து... சுதாரித்து... கியர் மாற்றி நகர்வதற்குள் மீண்டும் சிகப்பு விழுந்து பெப்பே காட்டி சிரிக்கிறது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை போ.போலீஸ் தலையைக் காணவே காணோம்.
பிரிகேட் ரோட், கமர்ஷியல் ஸ்ட்ரீட்டுகளில் ஈருயிர் ஓருடலாக இரட்டை வாழப்பழமாய் சிலர் திரிந்துகொண்டிருந்தார்கள். ஆட்டோகாரர்களின் முகத்தில் தமிழர் அடையாளம் ஒட்டியிருந்தது. ரிச்மன்ட் சர்க்கிள் சிக்னலில் கை முழுக்க கயிறு கட்டியிருந்த டாக்ஸி டிரைவர் அசப்பில் புனித் ராஜ்குமார் போலிருந்தார்.
கோரமங்கலா. ஜக்கசந்த்ரா எக்ஸ்டன்ஷன். சர்ஜாபூர் மெயின் ரோடிலிருந்து முதலாம் பிரதான சாலை ஒன்று சரேலென்று பிரிகிறது. கொஞ்ச தூரத்தில் நவீன மோஸ்தரில் நின்றிருக்கும் யுதிவகளும் யுவன்களும் கையில் கிளாஸ் பிடித்திருக்கிறார்கள். அதில் ஊற்றியிருக்கும் திரவம் ப்ரௌன் கலரில் இருக்கிறது. அந்த திரவத்தின் மீது ஏதோ மிதக்கிறது. பக்கத்தில் சென்றால் பதினெட்டு படி மேல் வீற்றிருக்கும் ஐயப்பன் போர்டு போட்ட "ஐயப்பா டீ சென்டர்". நாயர் படு பிஸி. "லெமன் டீ... ஹனி போட்டு..." வேணுமான்னு கேட்டார். ஹனி போட்டு டீ குடிச்சேன்னு என் ஹனிக்கு தெரிஞ்சா வில்லங்கமாயிடும். "ஆர்டினரி லெமன் டீ" கேட்டுவிட்டு சுற்றி நோட்டம் விட்டேன். குறைந்தது இருபது பேர் சுவாரஸ்யமாகக் குடித்துக்கொண்டிருந்தார்கள். (இந்தக்) குடி நல்லது.
நாயர் தனியாள் இராணுவம். டீ போடு. லெமன் பிழி. ஹனி வேணும்னா கல. நாலு துளசி பத்ரம் சேர். "சாரே.... ச்சாய்" விளி. குடித்த க்ளாஸ்களை சேகரி. கழுவு. டீ போடு.. லெமன் பிழி... infinite loop. அவரின் சுறுசுறுப்பு குடிப்பவருக்கும் தொற்றிக்கொள்ளும். கோரமங்கலா, ஜக்கசந்திராவாசிகளுக்கு மத்தியில் ஐயப்பா நாயர் பிரசித்தியாயிருக்கக்கூடும். டீ விசுவாசிகளின் உன்னத ஜாயின்ட்.
மாலை நான்கு மணிக்கு சுமாரான ட்ராஃபிக்கிலிருந்த கோரமங்கலா ஐந்தரைக்கு கோர முகம் காட்டி மங்களம் பாடியது. பெங்களூருவில் கார் வைத்திருக்கும் அனைவருமே சாலையில்தான் ஜாகையிருக்கிறார்கள். மாசாமாசம் சபரிமலைக்குப் போகும் கோபியைப் பார்க்க ஆவல். “இன்னிக்கி நம்ம வீட்லதான் டின்னர்...” என்று அன்பால் கட்டி பாசத்தால் அடித்துப்போட்டார் கோபி.
எந்த ஒரு சிக்னலுக்கு முன்னரும் இரண்டு அக்ஷௌஹிணி சேனை வாகனங்கள். லேசாக மழை பிடித்துக்கொண்டது. இரண்டு கியர்கள் கொண்ட சிக்கனக் கார்களை பெங்களூரு சந்தையில் சுலபமாக விற்கலாம். ஒரு சிக்னலுக்கும் அடுத்த சிக்னலுக்கும் டாப் கியரே இரண்டுதான். கியர்கள் இரண்டொழிய வேறில்லை. க்ளட்சே சரணம். ப்ரேக்கே ஆயுதம்.


காஃபி போர்டிலிருந்து ஜேபி நகருக்குள் செல்வதற்குள் இரண்டு முறை சென்னை-பெங்களூரு முனையத்திலிருந்து முனையம் பறந்துவிடும் தூரத்தில் இருக்கிறது. "உங்க ஏரியா எவ்ளோ மணி நேரத்தில இருக்கு?" என்று பெங்களூருவின் தூரங்கள் கிலோமீட்டருக்குப் பதிலாக நிமிஷங்களில் கணக்கிடப்படுகிறது. நான் வாகனக்காட்டில் தொலைந்துவிடாமல் இருக்கிறேனா என்று கால் மணிக்கொருதரம் “சார்! எங்க இருக்கீங்க?” என்று கோபி அட்டென்டென்ஸ் எடுத்துக் கேட்டுக்கொண்டார்.
பதினைந்து மாடிகளுக்கு இரு ப்ளாக்குகளாக ஆயிரம் குடும்பங்கள் பேசி, சிரித்து, உண்டு , உறங்கி, ரோட்டிலேயே வண்டிகளில் இரண்டு மணி நேரங்கள் தவழ்ந்து வந்து இங்கே நிம்மதியாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். நான்காம் மாடி பால்கனியிலிருந்து தூரத்தில் நத்தையாய் ஊர்ந்து செல்லும் வாகனங்கள் தெரிந்தது. “பத்து மணிக்காவது சரியாயிடுமா?” என்று கவலையாய்க் கேட்டேன்.. “பத்தரை பதினொன்னு வரைக்கும் இருக்கும் சார்” என்று கிலியைக் கிளப்பினார்.
சுடச்சுட தோசையும் (”ஓ! பொடி தோசையா இருக்கு! சாருக்காக ஸ்பெஷல்”), சப்பாத்தியும் மணக்கும் ஆலூ சப்ஜியுமாக செய்து போட்ட கோபியின் மனைவிக்கும், சாதாரணமான ஒரு மாலையை அசாதாரணமாக்கிய குருசாமி கோபிக்கும் நன்றி சொல்லி மாளாது.
மீண்டும் தங்குமிடம் செல்வதற்கு பீதியோடு ரோடு ஏறினேன். பூர்வ ஜென்ம புண்ணியத்தினாலும் கோபி வீட்டில் கிடைத்த சாஸ்தா தரிசனத்தாலும் அதிசீக்கிரத்தில் வந்தடைந்தேன்.
அடுத்த அத்தியாயத்தில் கணேசனைப் பற்றி எழுதணும்.

பெங்களூரு நாட்கள்

”மென்னியை முறிக்கும் ட்ராஃபிக். முதல்நாள் ராத்திரியே போய் படுத்துண்டாதான் பெங்களூர் ஏர்போர்ட்ல அடுத்த ஃப்ளைட் பிடிக்க முடியும்” என்று ஏகத்துக்கும் நிமிண்டி விட்டார்கள். அரைக்கிலோ கறி பார்க்கும் ஆர்வத்தில் வெறிநாய் துரத்தும்போது வீதியில் ஓடுவது போல கிளம்பி இரண்டு முகூர்த்தத்துக்கு முன்னாடியே ஊரை விட்டு தள்ளி வைத்திருந்த ஏர்போர்ட் அடைந்தேன்.
சென்னை கோயம்பேடு பஸ்ஸ்டாண்ட் கூட்டத்தில் ஐம்பது பேரே குறைவாக இருந்த பெங்களூரு ஏர்போர்ட். மிதமிஞ்சி ஐடி அபிவிருத்தியாகிவிட்டபடியால் இந்திய சீதோஷ்ணையால் முகம் சிவந்த வெள்ளைக்காரர்கள் நடமாட்டம் மிகுந்து இருந்தது. நூற்றுக்கு தொன்னூற்றொன்பது புள்ளி தொன்னுற்றொன்பது பேர் எதனாலோ ஈரமாயிருந்த தரைமேல் பையை உருட்டிக்கொண்டு சுத்தமே சுகாதாரமாகச் சென்றார்கள். நம்மைக் கடந்தால் மஸ்க் பாடி ஸ்ப்ரே மூக்கைத் துளைத்து கூவத்தில் இறங்கிக் குளிக்கும் நிலைமை ஏற்பட்டால் கூட நமக்கே துர்கந்தம் தெரியாதபடி செய்தது. வயதான பாட்டியோடு பெட்டி தள்ளிக்கொண்டு வந்த ஜீன்ஸ் பேண்ட் பொக்கைத் தாத்தா எடுத்துக்கொண்ட செல்ஃபியை எனது மனசும் படம் பிடித்துக்கொண்டது. வாழ்நாளுக்கும் மறக்காத லவ் சீன்.
ஆசிஷ் ஏறும் போதே வானிலை கொஞ்சம் துஷ்டத்தனமாக இருக்கிறது என்கிற முன்அறிவிப்போடு வண்டியை எடுத்தார். கொஞ்சம் கொஞ்சமாக மூக்கை மேலே தூக்கி விமானம் ஏறிக்கொண்டே இருந்தது. ரவுடி மேகங்களின் ஆதிக்கம் அதிகம் இருந்ததால் அவ்வப்போது உதறியது, வண்டியும் உள்ளமும். இறக்கைக்கு நேர் சீட் என்னுது. ஏதாவது ஒரு உதறலில் இறக்கையில் பொருத்தியிருக்கும் ஸ்கூரு கழண்டுவிடுமோ என்று கண்ணாலேயே டைட் பண்ணிக்கொண்டிருந்தேன். தரையில் சென்றால் எதாவது மரத்தடியில் நிறுத்தி ரிப்பேர் செய்வது போல வெயிட்டான மேகத்தில் நிறுத்தி டயர் மாற்றிக்கொள்வது போல ஏற்பாடு இல்லையே என்று நினைத்துக்கொண்டேன். அப்படி ஒரு ஆப்ஷன் இருந்தால் பெங்களூரு கோரமங்கலா ஐயப்பா டீ செண்டர் நாயரை அங்கே கடை போட சொல்லவேண்டும். (இன்னொரு பதிவில் ஐயப்பா டீ செண்டர்)
முன்னால் அமர்ந்திருந்த மாமாவிற்கு வேதனையோ வேதனை. ட்ரெயினில் அடுத்த ஸ்டேஷன் எப்போது வரும் என்று ஜன்னல் எட்டிப் பார்ப்பது போல ஜன்னலையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். தனியாய் அலைந்த ரவுடி மேகம் இன்னும் கொஞ்சம் வஸ்தாது மேகங்களைக் கூட்டிக்கொண்டு வந்து விமானத்தை மோதி குலுக்கியது. கரகரவென்று ஸ்பீக்கரில் ஆசிஷ் வேறு புரியாதமாதிரியே பேசிக்கொண்டிருந்தார். இவ்வளவு கூத்திலும் எனக்கு தி.மோகனாம்பாள் பாலையா நினைவுக்கு வந்து “ரொம்ப ஆட்டமா இருக்கே.....” முதுகுக்குப் பின்னால் கேட்பது போல் இருந்தது.
ஸ்பெஷல் சில்ரனுக்கு உதவுங்களேன் என்று ஒரு முறை உண்டியல் தூக்கினார்கள். காசு போட எத்தனிப்பதற்குள் பின்னால் சென்று மறைந்த்விட்டார்கள். நாற்பத்தைந்து நிமிடத்தில் சென்னையில் இருப்போம் என்று உறுதியோடு எடுத்த ஆசிஷ் நாற்பதாவது நிமிடத்திலேயே கார்கோ அருகில் தரையிறக்கி ... ஆசுவாசப்படுத்திக்கொண்டு.. சித்த நேரம் கழித்து உருட்டிக்கொண்டு போய் அரைவலில் இறக்கிவிட்டார்.
வாசலில் ஈயாய் மொய்த்த டாக்ஸிகாரர்களைத் தவிர்த்து எதிரில் பிரிஜ்ஜாண்ட பீடியில் இருக்கும் ஆட்டோகாரர்களிடம் தஞ்சமடைந்தேன். “இருநூறு தர்றியா? நூத்தம்பது?” என்று பேரம் பேசிக்கொண்டிருக்கும் போது இடது ஓரமாய் சென்று கொண்டிருந்த பேட்டை ஆட்டோக்காரர் என்னை அடையாளம் கண்டுகொண்டு “இங்க வாம்மா...” என்று கொத்திக்கொண்டு போனார்.
ஊருக்கே ஜிலுஜிலுன்னு ஏஸி போட்டிருந்த ஊரிலிருந்து ஊரையே பாய்லரில் போட்டு கொதிக்க வைத்திருக்கும் இடத்திற்கு வந்துவிட்டேன். வீட்டிற்குள் நுழைந்ததும் ஏஸி ரிமோட்டை தேடியது கைகள்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails