Showing posts with label கல்யாணம். Show all posts
Showing posts with label கல்யாணம். Show all posts

Saturday, May 9, 2015

கல்யாணமே வைபோகமே

டைரக்டர் வசந்த் ”நா சாப்பிடறா மாதிரி இல்லை... உங்களைப் பார்த்துட்டுதான் உட்கார்ந்தேன்..” என்று பட்டுக்கோட்டை பிரபாகரிடம் ( Pattukkottai Prabakar) சொல்லிக்கொண்டிருந்தார். எதிர் வரிசையின் ஓரத்தில் தோசைக்கு ஒத்தாசையாக பனீர் தொட்டு வாயில் தள்ளிக்கொண்டிருக்கும்போது என் காதில் விழுந்தது. பிகேபிக்கு இன்னும் ஏன் யாரும் ஹீரோ சான்ஸ் தரவில்லை என்கிற கேள்வியில் நிமிர்ந்து அவரைப் பார்த்தேன். ”ஏன் தரவில்லை..” ஸ்க்ராட்ச் விழுந்த ஆடியோ சிடி பாட்டு போல ரிப்பீட்டில் துள்ளியது.

கேப்டன் கட்சியின் பேனர்களும் அவரது பளீர் சிரிப்பைத் தாங்கிய பதாகைகளும் வழிநெடுக நிறைத்திருந்தன. தப்பான மண்டபமா என்று சேப்பாயியின் ப்ரேக்கில் கால் வைக்கும் போது உள்ளே இரவைப் பகலாக்கிக்கொண்டிருந்த விளக்குகளில் சில கள்ளத்தனமாக கண் சிமிட்டி அழைத்தன. உள்ளே நுழைந்தால் அது ஒரு கல்யாண கிராமம். பேலேஸ் பேலேஸாகக் கட்டியிருந்தார்கள். ஜானுவாசத்துக்கு சௌகரியமாய் வாசலில் பிள்ளையார் கோயில். கொளப்பாக்கம் இவிபி ராஜேஸ்வரி. பின்னால் காடு வளர்த்து ரிசார்ட் கட்டி வாடகைக்கு விட்டால் தேனிலவு கொண்டாட ஏழு கடல் ஏழு மலை தாண்ட வேண்டாம். நிச்சயதார்த்தம் முதல் தேனிலவு வரை. பேக்கேஜ்.

ழுத்தாளர், நண்பர், எனது பேட்டைக்காரர், பாண்டி பஜார் நாயுடு ஹாலில் முதன்முதலில் பார்த்து நண்பரான திரு. நளினி சாஸ்திரி என்று எழுத்தாளர்களின் இலக்கிய வட்டத்தில் அறியப்படும் Sekar Ramamurthy அவர்களின் புத்திரனின் திருமணம். தங்கமான மனுஷர். கூட்டமான கூட்டம். அதிலும் அதே டெசிபலில் அலைவரிசை மாறாமல் அன்பாக விசாரித்தார்.

பிரம்மாண்டமான மேடையேறி வினு வர்ஷித்தையும் ( Vinu Varshith ) ஜனனியையும் வாழ்த்தினேன். வினுவின் பக்கத்தில் நிற்பவர்கள் வளர்ந்த குழந்தையாக வீடியோவிலும் புகைப்படத்திலும் தெரிவார்கள். பையன் ”உயர்ந்த மனிதன்”. நளினி சாஸ்திரி ஜிகுஜிகுவென்று மாப்பிள்ளைக்குப் போட்டியாக ஜொலித்தார். முகத்தில் இளமை பிரகாசமாகச் சுடர்விட்டது. கவிதாயினி மதுவர்ஷினியையும் குசலம் விசாரித்துவிட்டு இறங்கினேன். போஜன அறைக்குச் சென்றபோது கேட்டதை முதல் பாராவில் எழுதி உங்களை இப்பதிவுக்குள் கையைப் பிடித்து உள்ளே இழுத்தேன்.

கால் கி.மீக்கு பளபளக்கும் பாத்திரங்களில் நானாவித பதார்த்தங்களை அடுக்கியிருந்தார்கள். பாத்திரத்துக்குப் பாத்திரம் பரபரப்பாக பரிமாறினார்கள். (ப்பா.. போன வரியில் எவ்ளோ பா..பா..ப...ப) உள்ளுக்குள் சம்மனமிட்டு அமர்ந்திருக்கும் சர்க்கரை ஆசான் நான்கே ஐட்டங்களோடு தட்டை மடக்கி சாப்பிட விரட்டினான். சாப்பாட்டிற்குப் பிறகு பழம் சாப்பிட்டால் அஜீரணமாகும் போன்ற சிக்கலான வைத்திய ஆலோசனைகளை சஞ்சய் ராமசாமியாக மறந்துவிட்டு ஒரு தொண்ணை நிறைய, கொய்யா, ஆப்பிள், ஆரஞ்சு சுளை, அண்ணாசி, தர்பூசனி என்று பலவர்ண சாலட்டோடு மண்டபத்திலிருந்து கிளம்பினேன். ராஜேஸ்வரியின் மதில் சுவருக்கு அந்தப் பக்கம் உடமஸ்தர்கள் சென்னை ஏர்போர்ட்காரர்களாம். சுருள் முள்வேலிக்கு அப்பாலே இருந்த டவரில் ஒரு போலீஸ்காரர் பொம்மையாக நின்றிருந்தார். அவரது எண்ணக் குதிரையில் எங்கு ஓடிக்கொண்டிருக்கிறாரோ?

ஏரோப்ளேனை இவிபியின் கொல்லைப்புற கார் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு பேப்பரிலும் ஆளாய்பேயாய் லைவ் ரிலேக்கு அலையும் இருபத்துநான்கு பெருக்கல் ஏழு செய்தி சேனல்களிலும் இடம்பிடிக்கும் திருமண ஜோடி யாராக இருக்கும் என்ற அதீத கற்பனையில் சேப்பாயில் வந்து கொண்டிருந்தேன்.

தூரத்தில் முழு நிலவு காய்ந்துகொண்டிருந்தது. வெண் திட்டாய் பஞ்சு மேகம் தலைகாணிபோல பக்கத்தில். வினுவர்ஷித்துக்கும் ஜனனியும் வாழ்நாள் முழுக்க இந்தப் பூரண சந்திரனைப் போன்ற பொலிவுடனும் குளிர்ச்சியுடனும் (Be cool.. பில்குல்...) வாழவேண்டும்.... “ஆஹா.. இன்ப நிலாவினிலே...”.

Tuesday, July 29, 2014

எழுத்தாளர் வீட்டுக் கல்யாணம்

எழுத்தாளர் இரா.முருகன் சார் பையன் கல்யாணம் என்று சென்னை நகரமே இரண்டு நாட்களாகத் திமிலோகப்படுகிறது. எங்கே பார்த்தாலும் ட்ராஃபிக் ஜாம். சென்னையின் ஒட்டுமொத்த வாகனாதிகளும் கல்யாணக் களை வந்த டிநகரையேக் குறிவைத்து ஜானுவாசம் போல நகர்ந்துகொண்டிருந்தனர். நண்பர்கள் எல்லோரும் மண்டபத்தில் குவிந்து விட நானும் என் மனைவியும் ஜோடிப்புறாயிரண்டு கூட்டத்தைத் தவற விட்டு தடுமாறியதைப் போல தவியாய்த் தவித்தோம். ரொம்ப ஓவரா இருக்கோ? ஃபுல்ஸ்டாப். “க்ரேஸியும் கமலும் நாளைக்குதான் வராளாம்” மண்டபத்தை அடைவதற்குள் அனன்யாவின் கிசுகிசு SMS.

மண்டபத்திற்கு கொல்லைப்புறம் வசிக்கும் அனன்யா என்கிற ”நேரந்தவறா காரிகை”யைத் தவிர்த்து ”ஏழு மணிக்கெல்லாம் டாண்ணு இருக்கணும்” என்று சூடமேற்றிச் சத்தியம் செய்தவர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக மண்டபம் சேர்ந்தோம். எத்தனை மணிக்குன்னு குழுமினோம்ணு டயம் சொல்லத் தெரியலை. கிண்டிக்கு முன்னாலிருந்தே ஜியெஸ்டி ரோட்டில் அடிக்கு ஒரு போலீஸ் அலெர்ட்டாக நின்றுகொண்டிருந்தது. “ஏர்போர்ட்லேர்ந்து அம்மா வர்றாங்க போல...” என்றாள் வாமபாகம். “முருகன் சார் வீட்டுக் கல்யாணத்துக்கா?” என்ற என்னுடைய யதார்த்தக் கேள்விக்கு “ஆமாம்” என்று பட்டென்று சொல்லிவிட்டு ஜன்னல் பக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். பாவப்பட்ட பெண் ஜென்மம். எவ்ளோதான் பொறுத்துப்போகும்.

தியாகராய நகர் பிரதேச மண்டபங்களில் ரெண்டு மாருதி 800ம் ஒண்றரை ரேவோ மின் காரும் வைக்குமளவுக்கு விஸ்தாரமாகப் பார்க்கிங் இருக்கும். மண்டப ஓர சந்தில் அங்கே குடியிருப்போர் சபிக்கா வண்ணம் சேப்பாயியைப் பத்திரப்படுத்திவிட்டு வெற்றி வீரனாய்த் திரும்பினால் வீகேயெஸ் காரை ஒதுக்குவதற்கு இடம் தேடிக்கொண்டிருந்தார். கடைகடையாய் ஏறி நண்பர்களின் சார்பில் கிஃப்ட் வாங்கிக்கொண்டு வந்த மஹானுபாவர். ச்சே. நுழைந்ததும் டைனிங் ஹால் கண்ணில்படும் மண்டபங்கள் மணமக்களைக் கூடப் பார்க்கவிடாமல் மனதைக் கெடுத்துவிடுகின்றன. முதல் மாடியில் ராதிகா பார்த்தசாரதி மேடமும் அனன்யாவும் சிரித்துச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தது ரிசப்ஷன் கலகலப்பையும் மீறி க்ரௌண்ட் ஃப்ளோரில் காதில் கேட்டு அந்தப்பக்கம் இழுத்தது. தினம் ஒரு கதை, ஒரு கவிதை, ஒரு கட்டுரை என்று ஃபேஸ்புக்கையே பிரித்து மேயும் நெய்வேலி இலக்கியச் சுடர் ஈஷா மாலாவும் தனது எழுத்துப்பணியை ஒரு நாள் நிறுத்திவிட்டு கல்யாணத்திற்கு வருகை புரிந்து சிறப்பித்தார்கள். மௌளி அண்ணா அமைதியாக தூணுக்குப் பின்னால் மறைந்திருந்தது தெரியாமல் “மௌளி அண்ணா எங்கே?” என்று கண்கள் பூக்கத் தேடிக் கண்டடைந்தேன். கையில் புத்தகமில்லாததால் கூட்டத்தைப் படித்துக்கொண்டிருந்தார்.

கிஃப்ட் கொடுத்து ஜோடியை வாழ்த்தி ஃபோட்டோ வீடியோ எடுத்துக்கொள்ள ஸ்க்யூ பண்ணின S போலக் க்யூ ஹால் நீளத்துக்கு நீண்டிருந்தது. “ரொம்ப நாழியாகுமோ?”

“இல்ல ஆர்வியெஸ். இந்த ரோல இதுக்கு மேலே ஆட்கள் சேரலை. அதனால ஒரு பத்து நிமிஷம் இருந்தோம்னா மேடைக்குப் போய்டலாம்” என்று மௌளி அண்ணா நம்பிக்கையூட்டினார். இரண்டு நிமிடத்தில் இருபது பேராய் அந்த வரிசை அசுர வளர்ச்சியடைந்தது. டின்னர் முடித்துவிட்டு வந்து கிஃப்ட் கொடுக்கலாம் என்று “போர்த்திக்கொண்டு படுத்தல், படுத்துக்கொண்டு போர்த்தல்” தத்துவத்தைக் கடைபிடிக்க ஏகமனதாக ஒத்துக்கொண்டு பந்திக்குப் பறந்தோம். பசித்த புலியாக ரிசப்ஷன் ஹாலிலேயே கட்லட்டைப் புசித்துக்கொண்டிருந்த வல்லபானந்தமயீக்கு இந்த முடிவில் கொள்ளை சந்தோஷம்.

கைக்கும் வாய்க்கும் உக்ர சண்டை நடக்கும் டின்னர் ஹாலில் மிருதங்கிஸ்ட் ஈரோடு நாகராஜனைச் சந்தித்தோம். புன்னகை பூக்கூடையாய் நிரம்பிய முகம். ஜென்மாந்திர பழக்கம் போல பேசத் தொடங்கிய கணத்திலிருந்து பச்சென்று ஒட்டிக்கொண்டோம். ப்ரவாகமாய்ப் பேசினார். சிறிது நேர லோகாதய அரட்டைக்குப் பின்னர் டின்னருக்குள் இறங்கினோம். டொமேடோ சூப்பிலிருந்து விருந்து ஆரம்பம். பாஸுந்தியை எப்படிச் சொட்டுச் சொட்டாகச் சாப்பிட்டால் நாக்கிலிருந்து தித்திப்பு இறங்க லேட்டாகுமோ அந்த அளவு ஸ்பூனோடு இலையிலிருந்த கப்பிற்குள்ளிருந்துச் சுண்டி இழுத்தது. “உங்களை நம்பி மூணு ஜீவன் இருக்கு. உங்க நல்லத்துக்கு சொல்றேன்..” என்று மௌளி அண்ணா சோதர பாசத்தில் அக்கறைப்பட்டதில் ஒரு ஸ்பூன் மட்டும் நாக்கில் வைத்துக்கொண்டேன். இதை எழுதுவும் வரை நாவினிக்கிறது. நினைத்தாலே இனிக்கும்.

இரண்டு முறை பிஸிபேலாபாத் உ.வறுவல் தொட்டுக்கொண்டும், ரசஞ்சாம், தெத்தியோன்னத்தோடும் மெல்லக் கரையேறினேன். ”சோத்தால அடிச்ச சுவரு”ன்னு கைலாய ப்ராப்தியடைந்த என் சாரதா பாட்டி முதுகுப்பின்னாலிருந்து காதில் ரஹஸ்யம் பேசினாள். எனக்கு நானே சிரித்துக்கொண்டேன். ஈரோடு நாகராஜ் அவர்களின் சிஷ்யகோடி என்று அறிமுகப்படுத்திக்கொண்ட கிருஷ்ணர் கருமமே கண்ணாக சாப்பிட்டதில் சப்ளையர்கள் அவரை மொய்த்துப் பண்டமிட்டது கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது.

நண்பர்கள் அனைவரும் தயாராய் இருக்க மணமக்களுடன் ஃபோட்டோவும், இடமிருந்து வலதாகக் கேமிராக் கண் ஸ்லோமோஷனில் நகர வாயெல்லாம் பல்லாக வீடியோவும் எடுத்துக்கொண்டோம். முருகன் சார் கையில் பில் ப்ரைசன் புஸ்தகம் தஞ்சமிருந்தது. மாப்பிள்ளைக்கு இன்னொருதரம் கை நீட்டியது போது “லுங்கி டான்ஸ்...லுங்கி டான்ஸ்..” என்று முணுமுணுத்துப் பாடி சிரித்துக்கொண்டே கை குலுக்கினார். அவர் பார்த்த திசையில் அவரது ஸ்நேகிதர்கள் அந்தப் பாடலுக்கு அலுக்கிக்குலுக்கி முதல் மாடி அதிர நாட்டியம் ஆடிக்கொண்டிருந்தார்கள். மேடையிலிருந்து இறங்கும்போது என் நடை நர்த்தனமாகியதை அதிர்ஷ்டவசமாக யாரும் பார்க்கவில்லை. மாப்பிள்ளைக்கும் பெண்ணிற்கும் இதுபோன்ற சந்தோஷங்கள் வாழ்நாள் முழுக்க நிலைத்திருக்கட்டும் என்று வாழ்த்திக்கொண்டே வீடு வந்து சேர்ந்தேன்.

எங்கள் கும்பலிலிருந்து தப்பிய ஜேயார் சாருக்கும் அலுவலகத்தை தனது சுண்டி விரலில் கோவர்த்தனகிரியாகத் தூக்கும் ராசகோபாலனாருக்கும் இந்தக் கல்யாணப் பதிவு சமர்ப்பணம்!

#எழுத்தாளர்கள் ப.ரா, ஜெயார், வல்லபா, அனன்யா போன்றவர்கள் பக்கம் பக்கமாக எழுதிச் சிலாகித்த அஷ்வின் கல்யாண வைபோகம் இந்த ஆர்வியெஸ்ஸாலும் கிறுக்கப்பட்டது என்று சரித்திரத்தில் இடம் கிடைக்கட்டும் என்ற நப்பாசையில் ஜய வருஷம், வைகாசி மாசம், இருபத்து ஒன்றாம் திகதி எழுதப்பட்டது

ஊசித் தொண்டை.. பானை வயிறு...

முஹூர்த்தம் முடிந்த கையோடு சிக்கனமாக ரெண்டு வரி “ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தேமே...”யென்று ஃப்ளைட் பிடிக்கப் போகும் அவசரகதியில் வாசித்தார். பின்பு “சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா...”வை நிறுத்தி நிதானித்து அலங்காரமாக நாகஸ்வரத்தில் வாசித்தார். ”செல்வக்களஞ்சியமே...” வரும்போது மேடையில் மணமக்களின் கல்யாணக் கோலத்தோடு காதுக்கு அப்படியொரு இனிமையாக இருந்தது. அனுபவஸ்தர். தூக்கிய நாகஸ்வரத்திலிருந்து ஸ்வரங்கள் குப்பென்று பிரவாகமாகக் கிளம்பி மண்டபத்தை நிறைத்தது. ஒத்து ஆங்காங்கே விழுந்து புரண்டாலும் பின்னாலையே வழி பிசகாமல் ஓடிவந்தது. தவில்காரர் தொப்பியில் விரல்களால் கபடி ஆடினார். வாத்தியம் வார்பிடிக்கப்பட்டு அவர் சொன்னதையெல்லாம் தப்பாமல் கேட்டது. நாதலயம். என்னுடன் சேர்த்து குறைந்தது ஐந்தாறு தலைகள் ரசிகரஞ்சிதமாக கோர்வையாக ஆடியது. காவிரியாற்றங்கரை ஆட்களாக இருக்கக்கூடும்.

”சார்! ஜூஸு”ன்னு திராட்சை ரஸத்தை வலியக் கையில் திணித்தார்கள். பட்டென்று கண் முன்னே வெள்ளைக் குர்த்தாவில் வைரமுத்து நெடுநெடுவென்று தோன்றி “திராட்சை தின்பவன் புத்திசாலியா? பழரசம் குடிப்பவன் குற்றவாளியா?” என்று தோம் கருவிலிருந்தோமிலிருந்து ரெண்டு வரி படித்துக் காண்பித்தார். யாரும் அறியாமல் ஒரு மிமி உதட்டை விரித்து புன்னகைத்துக் கொண்டேன். அருகம்புல் ஜூஸ் குடிக்கும் அருகதையுள்ள அடியேன் இந்த ஜூஸ் குடிக்கவில்லை என்பது இச்சபையோர்க்கு ஒரு உபரி தகவல்.

திருமண அரங்கு நிறைந்திருந்தது. விடுமுறை நாளானதால் அனைவரின் முகத்திலும் அவசரமில்லாமல் சாந்தி நிலவியது. சில சாந்திக்கள் ஸ்தூலமாகவும் அங்கே உலவக்கூடும். தொன்னூறு சதவிகிதம் குடும்பமாக அவுட்டிங் வந்திருந்தார்கள். WWF அதிகம் பார்க்கும் பொடியன் ஒருத்தன் இன்னொருத்தனை ஃபுட்பாலாக உருட்டி ரகளை செய்துகொண்டிருந்தான். பாட்டி பிடித்து இழுத்துக்கொண்டிருந்தாள். சரேலென்று உள்ளே வந்த அம்மணி முதுகில் ஒன்று வைத்து தரதரவென்று இழுத்துச்சென்றாள். அப்பொடியனின் அம்மா என்பது முகஜாடையில் தெரிந்தது. தாத்தா சக தாத்தாக்களோடு “அப்பெல்லாம்...” பேசிக்கொண்டிருந்தார். க்ளைமாக்ஸாக அவரது மடியில் தஞ்சமானா அப்பையன் முழு சீனும் பார்த்த என்னை ஓரக்கண்ணால் பார்த்தான்.

தரைதளத்தில் முஹூர்த்தம். இரண்டாவது மாடியில் சாப்பாடு. ஞாயிற்றுக்கிழமை பதினொன்றிலிருந்து பனிரெண்டு முஹூர்த்தம் சா.ராமர்களுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட ஒன்று. எண் சான் உடம்பிற்குப் பிரதானமான வயிற்றுக்கு டிஃபனைக் காட்டி சாப்பாட்டையும் காட்டலாம். லிஃப்ட்டில்லாமல் நடந்து ஏறுபவர்களுக்கு நல்ல அப்பிடைஸர். ஐந்தாள் அகல லிஃப்ட்டுக்கு ஐம்பது ஆட்கள் தேவுடு காத்தார்கள். அதிலும் முட்டி தேய்ந்த வயசானவர்களுக்கு வழி விடாமல் முதல் ரோவில் சாம்சங் டேபும் கையுமாக மேஜர் ஆன மைனர் பசங்கள். கெக்கேபிக்கேன்னு சிரித்துக்கொண்டு.

செவன் கேக் மாதிரி இனிப்பு ஒன்று பரிமாறினார்கள். ரவையோண்டுக் கிள்ளிச் சுவைத்துப்பார்த்தேன். என் வாழ்நாள் பூராவும் நான் சாப்பிட்ட சர்க்கரையெல்லாம் உருக்கிச் செய்த பட்சணம் அது. சுதாரித்துத் தெளிவதற்குள் இலை நிரப்பி “ம்... ஆரம்பி... அடுந்த பந்தி வைட்டிங்..” என்று சாதத்தை சிப்பல் சிப்பலாக இறக்கினார்கள். வாழக்கா கறமது. பீன்ஸ் பருப்புசிலி. பொடிப்பொடியா பீன்ஸை நறுக்கி, ஒவ்வொன்றாய் பொறுக்கி அதற்குள் பருப்பை ஸ்டஃப் செய்தா மாதிரி உசிலி. சமையற்காரர் கைக்குத் தங்கக் காப்பு போடணும். கேரட்டும் கொத்துமல்லியையும் பூத்தூவலாய்த் தூவி இலைக்கு ஒரு தயிர்வடை. கதம்ப சாம்பார் சாதத்துக்கு தயிர்வடை தேவப்பிரசாதமாக இருந்தது.

பூசணிக்காய் மோர்க்குழம்பு. வெண்டி ஃப்ரை ஸ்னோ பௌலிங் பால் போல உருண்டன. ஃப்ரிஸ்பீ சைஸ் அப்பளம் சுயேட்சை வேட்பாளர்கள் போல சம்பிரதாயமாக இலைத் தேர்தலில் சுலபமாகச் சீட் பிடித்தன. பின்னாலையே கமகம தக்காளி ரசமது வந்தது. வண்டலுக்கே வண்டி சாதம் உள்ளே இறங்கும் சுவை. கடைசி நேரத்தில் பிசைந்த சாதத்திற்கு வெண்டி ஃப்ரை துணைக்கு வந்து பதவியேற்பை இன்னும் பிரமாதப்படுத்தியது. திருக்கண்ணமுது ஒரு கரண்டி சாதித்தார்கள். கொஞ்சூண்டு எடுத்து நுனி நாக்கில் இருக்கும் இனிப்புச் சுவை மொட்டுகளை நனைத்துக்கொண்டேன். அவைகளுக்குத் திருப்தி.

இந்தத் தயிர் சாதம் சாப்பிடாதவர்களுக்குச் சொர்க்கக் கதவு திறக்காது என்பது திண்ணம். வாயில் இஞ்சி நிரடும் போது நாக்கால் சாதத்தை இழுத்து ஒருதரம் மென்று தின்ன வேண்டும். காரத்தில் சதும்ப ஊறிய பொடி மாங்காயை வாய்க்கு வாய் வைத்து உள்ளே தள்ளிக்கொண்டிருக்கும் போதே அடுத்த பந்தி ஆட்கள் பசித்த புலி போல எதிரில் நின்றிருந்தார்கள்.

வெற்றிலை பாக்கில்லாமல் ட்யூட்டி ஃப்ரூட்டியில் மடித்த பீடா தயாராய் இருந்தது. எனக்கு உசிதமில்லை. மண்டபத்துக்கு கீழே வந்து தாம்பூலப் பையை வாங்கிக்கொண்டு வெளியே நடக்கும் போது “இது யாரு தெரியுதா?” என்று அப்பா ஒரு வாமனரை அறிமுகப்படுத்தினார். ஹெஹ்ஹே என்று சிரித்துக்கொண்டே ”சௌக்கியமா..” கேட்டுக் கை கொடுத்தேன். “தம்பி சரியா சாப்பிடறதில்லையோ... இளைப்பா இருக்கே..” என்று குசலம் விசாரித்தார்.

சேப்பாயியைக் கிளப்பும் போது என் பாட்டி அடிக்கடி சொல்வதை என் பெண்ணிடம் ரகசியமாகக் காதில் சொன்னேன். என்னவா? இப்படி காதைக் கொடுங்கள். உங்களுக்கும் சொல்கிறேன்.

“சிலபேருக்கு பானைத் தொண்டை. ஊசி வயிறு. தம்பி மாதிரி ஆட்களுக்கு ஊசித் தொண்டை. பானை வயிறு”

பல்லாண்டு வாழ்க

நாயனக்காரர் “நகுமோ” வாசிக்க மண்டபத்துள் நுழைந்தேன். தவில்காரர் நாயனக்காரருக்கு உபகாரமாகத் தட்டிக்கொண்டிருந்தார். எல்பி ரோட்டில் எழுத்தாளர் Vidya Subramaniam அவர்களின் புதல்வியின் திருமணம். மண்டப வாசலில் கதம்பமாகக் கார்களின் தோரணம். உள்ளே திரும்பும் திசையெங்கும் பட்டுப்புடவைகளின் சரசரப்பு. மல்லிப்பூ வாசம். கேங்காக உட்கார்ந்து அரட்டை, சிரிப்பொலிகள். சந்தோஷமான சூழ்நிலை.

டிவியில் விரத கோலியாரின் பாட்டிங் பார்க்கிறா மாதிரி நேரடி ஒளிபரப்பு பார்த்துக்கொண்டிருந்த பாட்டியைத் தாண்டி மேடையில் நின்றிருந்தவரிடம் அருகில் சென்று கையசைத்து அட்டெண்டென்ஸ் போட்டுவிட்டு இருக்கையில் அமர்ந்தேன்.

Revathy Venkat முன்னரே ஆஜர். ”பத்து டு பதினொன்னுங்கிறது சாப்பிடறவங்களுக்கு நல்ல முஹூர்த்தம்.” என்று சொல்லிவிட்டு “கரெக்ட்டா ப்ரென்ச் மாதிரி சாப்பிடற நேரம். எர்லி முஹூர்த்தம்னா டிஃபன் மட்டும்தான் சாப்பிட முடியும்” என்ற அங்கலாய்ப்போடு என் வாயரட்டையை ஆரம்பித்த போது.......

வாத்திய இசை ”அசையும் பொருட்கள் நிற்கவும்” என்னும் திருவிளையாடல்தனமாகப் பட்டென்று நிற்க மேடையில் தோன்றினார் புரோகிதர். “மாங்கல்யதாரணம் ஆகப்போறது. அதுக்கப்புறம் சப்தபதியெல்லாம் முடிஞ்சு மாப்பிள்ளை பொண்ணை கீழே இறக்கிவிடறேன். எல்லோரும் கை குலுக்கலாம். கிஃப்ட் தரலாம்” என்று மண்டபத்தின் கடைசி சேர் ஹியரிங் எய்ட் தாத்தாவுக்கும் கேட்கும்படியான ஒரு உடன்படிக்கை அறிக்கை வாசித்துவிட்டு கெட்டி மேளத்துக்கு ஒத்தை விரலை ஆட்டினார்.

”உங்களைப் பத்தி அம்மா சொன்னாங்க....” என்ற மணப்பெண்ணிடம் “என்ன... தொறந்த வாயை மூடமாட்டேன்...னா...” என்று கேட்டுக்கொண்டே கிஃப்ட் கொடுத்த கையோடு டைனிங் ஹாலுக்கு விரைந்தோம். கச்சிதமான மெனு. “எங்க தம்பிக்கு குழம்பு, ரசம், மோர் தவிர வேறெதுவும் சாப்பிடத்தெரியாது”ன்னு பாட்டி பெருமையாகச் சொல்லுவாள். ரொம்ப நாள் கழித்து ஆமவடை. ரசஞ்சாத்துக்கு தொட்டுக்கொண்டேன். விரல்நீள வெண்டிக்காய் மோர்க்குழம்பு. வாழக்காய்க் கறியோடு தேவாமிர்தமாக இருந்தது. பாயசமாசை நெட்டித் தள்ள பக்கத்தில் பார்த்தேன். பர்மிஷனோடு கொஞ்சம் குடித்தேன். நாக்கு ஒட்ட “தித்திக்குதே..”.

தயிர் சாதத்துக்கு புளியிஞ்சி. பிரமாதம். இன்னும் ரெண்டு கவளம் உள்ளே இறங்குவதற்கு ஒத்தாசையாய் கட் மாங்காய் ஊறுகாய். ஜுகல்பந்தியாய் சாப்பிட்டுவிட்டு பந்தியை விட்டு எழுந்திருந்தோம். அசட்டுத் தித்திப்பு பீடாக்களைத் தவிர்த்து தண்ணீரில் மிதந்த தளிர் வெற்றிலைகளைத் தேர்ந்தெடுத்துத் தாம்பூலம் தரித்துக்கொண்டு மேடத்திடம் விடைபெற்றோம்.

மணமக்கள் பல்லாண்டு வாழ்க!!

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails