Tuesday, July 29, 2014

பல்லாண்டு வாழ்க

நாயனக்காரர் “நகுமோ” வாசிக்க மண்டபத்துள் நுழைந்தேன். தவில்காரர் நாயனக்காரருக்கு உபகாரமாகத் தட்டிக்கொண்டிருந்தார். எல்பி ரோட்டில் எழுத்தாளர் Vidya Subramaniam அவர்களின் புதல்வியின் திருமணம். மண்டப வாசலில் கதம்பமாகக் கார்களின் தோரணம். உள்ளே திரும்பும் திசையெங்கும் பட்டுப்புடவைகளின் சரசரப்பு. மல்லிப்பூ வாசம். கேங்காக உட்கார்ந்து அரட்டை, சிரிப்பொலிகள். சந்தோஷமான சூழ்நிலை.

டிவியில் விரத கோலியாரின் பாட்டிங் பார்க்கிறா மாதிரி நேரடி ஒளிபரப்பு பார்த்துக்கொண்டிருந்த பாட்டியைத் தாண்டி மேடையில் நின்றிருந்தவரிடம் அருகில் சென்று கையசைத்து அட்டெண்டென்ஸ் போட்டுவிட்டு இருக்கையில் அமர்ந்தேன்.

Revathy Venkat முன்னரே ஆஜர். ”பத்து டு பதினொன்னுங்கிறது சாப்பிடறவங்களுக்கு நல்ல முஹூர்த்தம்.” என்று சொல்லிவிட்டு “கரெக்ட்டா ப்ரென்ச் மாதிரி சாப்பிடற நேரம். எர்லி முஹூர்த்தம்னா டிஃபன் மட்டும்தான் சாப்பிட முடியும்” என்ற அங்கலாய்ப்போடு என் வாயரட்டையை ஆரம்பித்த போது.......

வாத்திய இசை ”அசையும் பொருட்கள் நிற்கவும்” என்னும் திருவிளையாடல்தனமாகப் பட்டென்று நிற்க மேடையில் தோன்றினார் புரோகிதர். “மாங்கல்யதாரணம் ஆகப்போறது. அதுக்கப்புறம் சப்தபதியெல்லாம் முடிஞ்சு மாப்பிள்ளை பொண்ணை கீழே இறக்கிவிடறேன். எல்லோரும் கை குலுக்கலாம். கிஃப்ட் தரலாம்” என்று மண்டபத்தின் கடைசி சேர் ஹியரிங் எய்ட் தாத்தாவுக்கும் கேட்கும்படியான ஒரு உடன்படிக்கை அறிக்கை வாசித்துவிட்டு கெட்டி மேளத்துக்கு ஒத்தை விரலை ஆட்டினார்.

”உங்களைப் பத்தி அம்மா சொன்னாங்க....” என்ற மணப்பெண்ணிடம் “என்ன... தொறந்த வாயை மூடமாட்டேன்...னா...” என்று கேட்டுக்கொண்டே கிஃப்ட் கொடுத்த கையோடு டைனிங் ஹாலுக்கு விரைந்தோம். கச்சிதமான மெனு. “எங்க தம்பிக்கு குழம்பு, ரசம், மோர் தவிர வேறெதுவும் சாப்பிடத்தெரியாது”ன்னு பாட்டி பெருமையாகச் சொல்லுவாள். ரொம்ப நாள் கழித்து ஆமவடை. ரசஞ்சாத்துக்கு தொட்டுக்கொண்டேன். விரல்நீள வெண்டிக்காய் மோர்க்குழம்பு. வாழக்காய்க் கறியோடு தேவாமிர்தமாக இருந்தது. பாயசமாசை நெட்டித் தள்ள பக்கத்தில் பார்த்தேன். பர்மிஷனோடு கொஞ்சம் குடித்தேன். நாக்கு ஒட்ட “தித்திக்குதே..”.

தயிர் சாதத்துக்கு புளியிஞ்சி. பிரமாதம். இன்னும் ரெண்டு கவளம் உள்ளே இறங்குவதற்கு ஒத்தாசையாய் கட் மாங்காய் ஊறுகாய். ஜுகல்பந்தியாய் சாப்பிட்டுவிட்டு பந்தியை விட்டு எழுந்திருந்தோம். அசட்டுத் தித்திப்பு பீடாக்களைத் தவிர்த்து தண்ணீரில் மிதந்த தளிர் வெற்றிலைகளைத் தேர்ந்தெடுத்துத் தாம்பூலம் தரித்துக்கொண்டு மேடத்திடம் விடைபெற்றோம்.

மணமக்கள் பல்லாண்டு வாழ்க!!

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails