Tuesday, July 29, 2014

அனுவாவி

”சங்கரா டிவியில் வரும் ஸ்ரீ ட்ராவல்ஸ் Ad மாதிரி நீ எப்போதும் வருஷா வருஷம் கோயில் குளமின்னு உன் இஷ்டத்திற்கு க்ஷேத்திராட டூர்தான் இழுத்துண்டு போவே...” என்கிற ஸ்திரமானக் குற்றப்பத்திரிகையை என் வாண்டுகள் இவ்வருஷத்திய ஏப்ரலில் வாசித்தார்கள். கர்மேந்திரியங்களுக்கு தண்ணி காண்பிப்பதை விட ஞானேந்திரியங்களை புஷ்டியாக வைத்துக்கொள்ள கோயில்குளங்கள்தான் ஒத்தாசையாக இருக்கின்றன என்பது என் கட்சி. இந்த முறை மலை, அருவி, இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் என்று உல்லாஸ் சுற்றுலா போவதாக ஏகமனதாக முடிவெடுத்து என்னையும் கையைப் பிடித்து ராஜபார்வை கமலாகக் கூட்டிக்கொண்டு போனார்கள். கையில் தடியில்லாமல் அவர்கள் இழுத்த இழுப்பிற்கு சென்றேன்.

சென்ட்ரலுக்குள் செல்வதற்கு யாத்ரிகர்களை வரிசைக் கட்டி ஸ்கேன் செய்தார்கள். யாரைத் தடவினாலும் குட்டி போட்ட பூனை மாதிரி கீச்கீச்சென்று கத்திய மெட்டல் டிடக்டர்களை அதனைப் பிடித்தவர்களே அலட்சியம் செய்தார்கள். பளாட்ஃபாரத்தில் ஆங்காங்கே கோடு கோடாய் ஈரத்தரை. “இழு” பைகளை சப்பரமாக இழுத்தபடி அரைட்ராயர் ஸ்கர்ட் அணிந்த பொடிசுகள். லேஸும் கையுமாக ஒரு பம்ளிமாஸ் சிறுவன். அம்மாவின் கேரியர் இடுப்பில் கையில் பிஸ்கோத்துடன் ஒரு மழலை என்று கோடை விடுமுறையின் கடைசிக் கட்ட ரயிலடி. சதாபிஷேகம் கண்டது போலிருந்த சதாப்திக்கு பச்சைப் பசேல் என்று அப்பரண்டிஸ் பெயிண்டரை விட்டுக் கோணலும் மாணலுமாய் கோச்சுக்கு கோச் body வர்ணம் தீட்டியிருந்தார்கள். ஏறி உட்கார்ந்ததும் ”ரெயில்நீர்” பாட்டிலை முன்சீட்டின் முதுகில் எனக்காகச் சொருகினார் ஐயார்சிடிசி பணியாளர். ஒவ்வொரு சீட்டும் பரோபகார சீட். நமக்குப் வாழ்வியல் படிப்பினை புகட்டும் சீட்.

கோயம்புத்தூரிலிருந்து கோடானுகோடி பேர்களுக்கு ஃபேஸ்புக் வாயிலாக அருள்பாலிக்கும் மகானுபாவர் ஸ்ரீஸ்ரீ கேகே அண்ணாவின் Krishnamurthy Krishnaiyer பிறந்தநாளில் அவரது வீட்டில் தொபகடீர் என்று ஆசிபெறுவதற்காகக் குதித்தோம்.

Chitra Krishnamurthyயின் காஃபியின் அதீத ருசியில் சற்றுக் கிறங்கிப் போய் சதாப்தியின் செல்லக் குலுக்கல்களோடு அமர்ந்திருக்கையில் “ஒரு சீனிக் ப்யூட்டியான இடமிருக்கிறது... போலாமா?” என்று கொக்கி போட்டார் கேகே அண்ணா. செல்ஃபோனை அமுக்கி மந்திரமாய் அவர் பேச மாயாஜாலமாய் அடுத்த செகண்ட் உறுமிய வாகனம் வாசலில் வந்து நின்று ஹாரனடித்ததில் கோவையில் கேகேவின் அக்மார்க் பாட்ஷாத்தனம் தெரிந்தது.

அனுவாவி. கோவையிலிருந்து பெரிய தடாகம் செல்லும் பாதையில் இடதுபுறம் போர்டு வைத்திருக்கிறார்கள். கல்லும் மண்ணும் சரசரக்கத் திரும்பினால் சொற்ப கிமீயில் அமைதியான மலையடிவாரத்தை அடைகிறோம். அகஸ்தியர் கோயிலருகே இருக்கும் நெடுமரத்தின் அடியில் வண்டியை வாகாக நிறுத்தலாம். படிகளின் ஆரம்பத்தில் கடைபோட்டிருந்த குட்டி குட்டி பொம்மைகள் விற்கும் வியாபாரி ஒருவர் சாக்குப்பைக்குள் கரடி, பார்பி, குரங்குகளைப் போட்டுக்கொண்டே “ஆறு மணிக்கெல்லாம் கோயில் மூடிருவாங்க... வெரசாப் போங்க...” என்று நமக்குக் கீ கொடுத்தார்.

ஏறுவதற்கு முன்னர் டீம் கேப்டன் கேகேயண்ணா “இராமாயண காலத்தில்... சஞ்சீவி பர்வதத்தை அனுமன் தூக்கிக்கொண்டு போகும்போது அவருக்கு தாகம் எடுத்ததாம். இந்த மலைப் பிராந்தியத்தைக் கடக்கும் போது முருகப்பெருமானை வேண்டிக்கொண்டாராம். அப்போது அங்கு காட்சியளித்த ஆறுமுகப்பெருமான் தனது வேலால் இம்மலையில் குத்த தண்ணீர் பீறிட்டதாம். அதைக் குடித்து தாகத்தைத் தணித்துக்கொண்டு அனுமன் இலங்கைக்கு விரைந்தானாம். வாவி என்றால் ஊற்று. அனுமனுக்காக ஊற்று உருவாக்கியதால் இதற்கு அனுவாவி என்று பெயர்.. ம்.. வாங்க ஏறலாம்...” என்று பிரசங்கத்தை இரத்தின சுருக்கமாக முடித்துக்கொண்டு முன்னேறினார்.

நாலு படி சிரமப்பட்டு தம் பிடித்து ஏறினால் சரளமாக நடக்கக் கொஞ்சம் சமதளம்... மீண்டும் செங்குத்தாக ஆறு படி... அப்புறம் கொஞ்சம் சமதளம்.. என்று தட்டிக்கொடுத்து தட்டிக்கொடுத்துச் சீராக மலையில் தூக்கிவிடுகிறார்கள். பத்து படி ஏறியபின் “யானையெல்லாம் வருமுங்க... கொளந்தைங்களை கையில் புடிங்க.. சாக்கிரதை...” என்று பொம்மை வியாபாரி பின்னாலிருந்து பூச்சாண்டி காட்டினார். “வரும்.. வரும்..” என்று குணா கமல் வசனநடையில் கேகேயண்ணாவும் தலையையாட்டி அதை ஆமோதித்தார்கள்.

படிகளின் இருபுறமும் மரங்கள் இயற்கைப் பந்தல் போட்டிருக்கிறது. காற்றில் அசையும் மரங்களின் “ஷ்...” ஓசையே அலாதியானது. அந்த “உஷ்..உஷ்”ஷில் பெண்டாட்டிக்கு அடங்கும் புருஷர்கள் போல நம் வாய் கப்சிப்பாக அடங்கிப்போகிறது. ஐந்தே முக்காலுக்கு ஏற ஆரம்பித்தால் சட்டை பொத்தானைக் கழட்டிவிடும் வேகத்தில் மலைக் காற்று வீசுகிறது. தூரத்தில் தெரியும் மலைகள் படுத்திருக்கும் பெரிய கஜராஜனின் முதுகு போலக் காட்சியளிக்கிறது. அரசல்புரசலாக மரங்களுக்கிடையில் பெரிய காது போல அசைந்து தெரிந்ததெல்லாம் திருமூலரின் வாக்கைச் சத்தியமாக்கியது. மரத்தில் மறைந்தது மாமத யானை... மரத்தை மறைத்தது மாமத யானை....

பாதி தூரத்தில் இடும்பன் சன்னிதி வருகிறது. ஆசுவாசப்படுத்திக்கொள்ள சிமெண்ட் பால் ஊற்றி வழித்துவிட்ட பென்ச் இருக்கிறது. அதிக வெயிட் போட்டவர்கள் தங்களை அமைதி படுத்திக்கொள்ளலாம். நானும் சின்னவளும் நடை சார்த்திவிடப் போகிறார்களே என்று இரண்டிரண்டு படிகளாகத் துள்ளி ஏறினோம். ”அரோகரா.. அரோகரா...”. குன்றிருக்கும் இடமெல்லாம் குமரனிருக்கும் இடம்.

சன்னிதியை அடையும் கடைசிப் படியில் அரபிந்தோ தாடியுடன் உட்கார்ந்திருந்த ஒருவர் யாரிடமோ குசுகுசுவென்று ரகஸியமாகப் பேசிக்கொண்டிருந்தார். இந்த இம்சையைக் கேட்டுக்கொண்டிருந்தவரின் கண்களில் கூரிய ரம்பத்தின் அறுவை வலி தெரிந்தது.

வள்ளி தெய்வானையுடன் அருள்பாலிக்கும் சுப்ரமண்யர் சன்னிதியில் யாருமில்லை. குருக்கள் இடதுபுறமிருக்கும் அனுமன் சன்னிதியின் பிரகாரத்தில் உட்கார்ந்து காய்கறி நறுக்க இன்னொருவருக்கு ஒத்தாசை செய்துகொண்டிருந்தார். எங்களது குழுவில் அனைவரும் வந்து சேர்ந்தவுடன் சுருக்கமாக ஒரு தீபாராதனைக் காட்டி ஒரு சிட்டிகை விபூதிப் பிரசாதம் தந்தார். பரந்த நெற்றியுடைய எனக்கு அது யதேஷ்டமாகவில்லை. இன்னும் கொஞ்சம் வாங்கி பட்டையடித்துக்கொண்டேன். திருநீரினால் நெற்றி மணத்தது. பிரதக்ஷிணம் பண்ணினோம். கீழே பொம்மை வீடுகளாய் இரைந்து கிடந்தன. ஒற்றையடிப் பாதையாய் தெரிந்த தார்ரோட்டில் எறும்பு போல வாகனம் ஒன்று நகர்ந்தது. ”இந்த மலையை ஏறி அப்படியே அந்தப் பக்கம் இறங்கினால் மருதமலை” என்று வாயால் வழி காண்பித்தார் குருக்கள் மாமா.

”மேலே இருக்கிறது அருணாசலேஸ்வரர் கோயில். அதுக்கும் மேலேதான் முருகன் வேலால குத்தின அனுமன் சுனை இருக்கு. அதோ இங்க ஒரு இடத்தில அந்தத் தண்ணீ ஓடி வருது பாருங்கோ...” என்று பாறைகளில் கால் இன்ச் பைப்பில் ஒழுகும் நீர் போல ஒரு இடத்தைக் காண்பித்தார். படமெடுத்துக்கொண்டேன்.

“ஸ்ரீராம்.. ஜெய்ராம்.. ஜெயஜெயராம்....” சொல்லி பக்கத்திலிருந்த அனுமன் சன்னிதியையும் வலம் வந்தோம். அனுமன் சன்னிதியில் தீபாராதனைக் காட்ட குருக்கள் வருவார் என்று எதிர்பார்த்த எனக்கு முகத்தில் வெண்ணையைப் பூசினார் ஆஞ்சநேயர். யாரும் டிஸ்டர்ப் பண்ணாத ஆஞ்சநேயர் அற்புத தரிசனம்.

ஏறியதை விட இறங்குவது எளிது. இதுவும் ஒரு வாழ்க்கைத் தத்துவம்தான்.

கடைசிப் படியில் பொம்மைகள் கட்டிய கோணி மூட்டையைக் கட்டி புறப்படுவதற்கு ரெடியாக இருந்தார். “யானை எதுவும் கண்ணுக்குப் பட்டிச்சா?” என்று கொங்கு தமிழின் ஏற்ற இறக்கங்களுடன் கேட்டார். “இல்லை...” என்று நானும் சின்னவளும் சேர்ந்திசையாகத் தலையாட்டினோம். “அப்பா.. மொதல்லெல்லாம் ஏறும் போது ஒண்ணும் தெர்லப்பா.. ஆனா கொஞ்ச தூரத்துக்கப்புறமும் நீ குதிச்சுக் குதிச்சு ஏறினபோது உம்பின்னாடியே ஓடி வந்தேனா.. அப்போ.. “ என்று மௌனமானாள். “அப்போ...” என்று கேட்டு Pauseலிருந்த அவளை மீண்டும் Play செய்தேன்.

“காதுக்குள்ளே டப்...டப்ன்னு ஹார்ட் பீட் கேட்டுச்சுப்பா...” என்று சிரித்தாள்.

மலையடிவார அகஸ்தீஸ்வரர் கோயிலில் இரண்டு மூன்று தாடிகள் சகஜமாகத் தென்பட்டன. கையில் கமண்டலத்துடன் நின்ற திருக்கோலத்தில் அகஸ்தியர் காட்சியளித்தார். பக்கத்தில் கொட்டைப்பாக்களவு லிங்கம் ஒன்று. தேவாரம் பாடுவார் என்றென்னிய என் எண்ணத்தில் திருநீரைப் போட்டுவிட்டு “நமஸ்தே அஸ்து பகவன்...” என்று ருத்ரம் சொன்னார் சின்ன தாடி. சன்னிதியோரத்தில் ஸ்டூலில் சித்தர் தாடியில் அமர்ந்திருந்த இன்னொரு பெரியவர் என்னை அருகே கூப்பிட்டு........

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails