Tuesday, July 29, 2014

காசு.. பணம்.. துட்டு.. மணி..மணி...

இடது கையில் லாவகமாகப் பிடித்துக்கொண்டார். தலையை ஒய்யாரமாகச் சாய்த்து வலது கையால் “சரக்..சரக்..சரக்..”கென்று எண்ணினார். மீண்டும் வலது கையில் கொத்தாக பிடித்துக்கொண்டார். இடது கையால் சரக்...சரக்..சரக்... மீண்டும் இடது கைக்கு மாற்றி ஒரு சரக்..சரக்..சரக்.. மீண்டும் வலதுக்கு மாற்றும் போது நண்பருக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.. ”போதும்பா.. குடு.. சரியாத்தான் இருக்கும்...” கல்லா ஆசாமி அப்படி மாஞ்சு மாஞ்சு எண்ணிய வெயிட்டான பணம்..... சில்லறையாக நூத்தி முப்பத்தேழு ரூபாய்.

இப்படி மந்திரித்துவிட்டது போல பணம் எண்ணுவது சிலருக்கு சீக்கு. சிலருக்கு சாக்கு. (”கணக்கு குறைஞ்சா நீங்களா வந்து கட்டுவீங்க?”) கார் சர்வீஸ் சென்டர் கேஷியர் சுத்த மோசம். கை மாற்றி கை அசராமல் ஆயிரம் தடவை எண்ணுவார். அவர் எதிரே சகஸ்ர கைகளுடன் சாட்சாத் விஷ்ணுவே விஸ்வரூபம் எடுத்து வந்தாலும் கைக்கு ஒரு நோட்டுக் கொடுத்து எண்ணச் சொல்லுவார். அந்தக் கேஷியர் மாற்றி மாற்றி எண்ணும் போது நமக்கு கை கடுக்கும். கால் வலிக்கும். கண்ணைக் கட்டும். ஒரு தடவை ஏழாயிரத்து நூத்தைம்பது ரூபாய் சில்லறையாகக் கொடுத்துவிட்டு நான் பட்ட பாடு நாய் கூட படாது. பணத்தை விட்டு கண்ணை எடுக்காமல் எண்ணிக்கொண்டேயிருந்தார். சளைக்கவேயில்லை.

சர்வீஸ் அட்வைஸரிடம் வாய் விட்டு கேட்டுவிட்டேன். “ஏம்ப்பா. நான் வேணா கஸ்டமர் வெயிட்டிங் ரூம்ல போய் ரெஸ்ட் எடுத்துக்கட்டா? இவர் எண்ணி முடிச்சப்புறம் கூப்பிடுப்பா...”. “ஏங்க சரியாதான் இருக்கு... ரெசிப்ட்டைக் குடுங்க...” என்று அவரிடம் எனக்காகப் பரிந்த சர்வீஸ் அட்வைஸரிடம் “நீங்க கட்டக் கடேசியா ஒரு தடவை எண்ணிக் குடுத்துடுங்களேன்.. ப்ளீஸ்” என்று நீட்டினார். அப்படியே அந்தக் கல்லாப்பெட்டியில் மடக்கிப் போட்டு ஜீனி பூதம் போலப் பல்லாயிரக்கணக்கான வருஷங்களுக்குப் பூட்டி விட ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது.

மன்னையின் ஒரு அரசு வங்கிக் கேஷியர் ஒருவர் இதற்கெல்லாம் பல படிகள் மேல். எண்பதுகளிலேயே இந்தக் கவுண்ட்டிங் நோயின் இறுதிக் கட்டத் தாக்கத்தில் இருந்தார். அவர் பணம் எண்ணிக் கொடுத்தால் அப்போதுதான் ஆர்பிஐயினர் சுடச்சுட அச்சடித்து காய வைக்காமல் கையில் கொடுத்தது போல இருக்கும். ரிடையர் ஆகும்போது நாக்கு வறண்டு சொட்டு சலைவா கூட இல்லாமல் “நோ ஸ்டாக்” விழுந்துவிடும் அபாயம் அவருக்கு இருந்தது. நம் கைக்கு வரும் நோட்டு பூரா பிசுபிசுன்னு எச்சில் ஒட்டும்.

மடி ஆசாரமாக வந்த மாமா ஒருத்தர் இந்த கேஷியர் கையால பணத்தை வாங்காமல் “கோயிலுக்கு போயிண்டிருக்கேன். எச்சக் கையோட போக முடியுமா? பூரா நோட்டையும் ஈரத்துணியால சுத்தமா துடைச்சுத் தரச்சொல்லுங்கோ...”ன்னு மானேஜரிடம் மல்லுக்கு நின்னார். “உன் நாக்கிலேயே இருக்கு.. அறுத்துப் போட்டுடுவியா?” என்று குபீரென்று கிளம்பி எதிர் கேள்வி கேட்டார் கேஷியர். “அப்டீன்னா. கார்த்தால கொல்லைப்புறம் போற வரைக்கும் உன் உடம்பிலேயே வெளிக்கி இருக்கு. அதுக்காக இடுப்புக்குக் கீழே வெட்டிப் போட்டுடுவியா?” என்று பதிலுக்கு இவர் எகத்தாளமாகக் கேட்க பழி சண்டை. ரத்தக்களறியாகாமல் கூட்டத்தினர் விலக்கிவிட்டார்கள். நோட்டையெல்லாம் துளிர் வெற்றிலையை துடைப்பது போலக் கர்சீப்பால் துடைத்துக் கொடுத்தார் மானேஜர்.

வீதிவீதியாக வீடுவீடாக ஃபைனான்ஸ் வசூலுக்கு வரும் அன்பர் ஒருவர் ஐந்து விநாடிகளில் பத்து நோட்டு மாயாஜாலம் போல எண்ணுவார். என்றைக்காவது விரலாவது நோட்டாவது கிழிந்து தொங்கப்போகிறது என்று அச்சப்படுவேன். சில முன்னெச்சரிக்கை முத்தண்ணாக்கள் நோட்டை இரண்டுபுறமும் ஸ்கேன் செய்து, சீரியல் நம்பர்களைப் படித்து மனப்பாடம் செய்துகொண்டு, காந்தி சிரிப்பதைப் பார்த்துத் தானும் சிரித்து, பத்து தாள்களை பதினைந்து நிமிடம் எண்ணி வரிசையில் நிற்பவர்களின் பிபியை ஏற்றிவிட்டு வேடிக்கைப் பார்ப்பார்கள்.

இப்படி நூத்தி முப்பத்தெழு ரூபாய்க்கு ஹோட்டல் கொடுக்கும் தன் முழு மாசச் சம்பளத்துக்கும் எண்ணிய அந்த மகானுபாவரை உங்களிடம் காண்பித்தால் துரத்தித் துரத்தி அடிப்பீர்கள். இல்லியா பின்ன.... எவ்ளோ பெரிய வ்யாசம் எழுத எனக்கு சப்ஜெக்ட் குடுத்துட்டார் அந்த மனுஷர்!!

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails