Tuesday, July 29, 2014

தத்வமஸி

சபரிமலைக்கு விரதமிருக்கிறேன். ஹரிஹரபுத்ரன் ஐயன் ஐயப்பன். அபிஷேகப் ப்ரியனான சிவாம்சமும் அலங்கார ப்ரியனான விஷ்ணுவாம்சமும் நிறைந்த பரம்பொருள். பரமேஸ்வரனின் ஞானமும் ஸ்ரீமன் நாராயணனின் மோகினி ஸ்வரூப லாவண்யமும் சேர்ந்து மகா தேஜஸோடு சைவ-வைஷ்ணவ பேதம் பார்க்க முடியாத ஜோதி ஸ்வரூபனாக அவதரித்தவன் ஐயப்பன்.

பம்பா நதி தீரத்தில் ஸ்நானம் செய்துவிட்டு மேலே ஏறும் சிறியபாதைதான் எங்களது. பதினான்கு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஐயப்ப விரதம். வரும் ஆடி( ஆகஸ்ட்) மாசம் மலையேற்றம். அதுவரையில் இராமாயணம், மஹாபாரதம் போன்ற இதிகாசங்கள், நளோபாக்கியாணம் சாவித்ரி உபாக்கியாணம் போன்ற புண்ணிய சரித்திரங்கள், புவனம் போற்றும் குருமார்களின் புனித வரலாறுகள், தேவாரம், திருவாசகம், திருப்புகழ், பிரபந்தங்கள் போன்றவற்றிலிருந்து இச்சிறியோனின் அறிவுக்கு எட்டியவைகளையும் அடியேனுக்கு ஏற்பட்ட ஆன்மிக அனுபவங்களையும் பகிரப்போகிறேன். நோ கலாய்த்தல். நோ நையாண்டி. நோ நக்கல். நோ அக்கப்போர். பக்தியோகமாக எழுதத் திராணியிருக்கும் வரை எல்லாமே பக்கா சைவ/வைஷ்ணவ/கௌமார/காணாபத்ய/சாக்த/சௌமார ஷன்மத போஸ்ட்ஸ்!

காலையில் எங்கள் பேட்டையிலுள்ள ஐயப்பன் கோவிலுக்குச் சென்றிருந்தேன். பதினெட்டுப் படிகளுக்கு முன் ”தத்வமஸி” என்று கோயில் முகப்பில் போர்டு தொங்கியது. சாந்தோக்கிய உபநிஷத்தில் ஸ்வேதகேதுவிற்கு அவனது பிதாவும் குருவுமாகிய உத்தாலக ஆருணி ஒன்பது முறை தத்வமஸி என்று அழுத்தம் திருத்தமாக உபதேசித்திருக்கிறாராம். தத்+த்வம்+அஸி என்று பதம் பிரித்து தெய்வத்தின் குரலில் வியாக்யானம் செய்திருக்கிறார் மஹா பெரியவா. தத்-பரமாத்மாவான ப்ரம்மம், த்வம்-ஜீவாத்மாவாகிய ஸ்வேதகேது(அல்லது எழுதும் நான்; படிக்கும் நீங்கள்), அஸி-இருக்கிறாய். நீயே ப்ரம்மமாக இருக்கிறாய் என்று உபதேசிக்கிறார்.

அஷ்டாவக்ர கீதையில் ப்ரம்ம ஞானம் பெறுவது பற்றி ஜனக மகாராஜா வேதாந்த நூல் ஒன்றில் படித்தது பற்றி இப்படியாக வரும். ”குதிரையின் சேணத்தில் ஒரு காலை வைத்து இன்னொரு காலை விசிறி குதிரையின் முதுகில் போடும் நேரத்திற்குள் ப்ரம்ம ஞானம் ஏற்படும்”. இதைத் தெளிவாக்காத பண்டிதர்களையும், முனிவர்களையும் பிடித்துச் சிறையில் அடைத்தான் ஜனகன். அஷ்ட இடங்களில் கோணலாக இருக்கும் அஷ்டாவக்கிரர் அம்மன்னனின் சபைக்கு வந்து அனைவரையும் விடுவித்து அவனுக்கு ப்ரம்ம ஞானம் வழங்கிய கதை மிகப் பிரசித்தம்.

மன்னையில் ஒரு முறை ஐயப்பன் பூஜைக்கு கோலம் போடும் போது யாரோ ஒரு மாமி சரணம் “ஐ”யப்பாவுக்கு பதில் ஐயின் கொம்பைச் சுழித்து “ஜ”யப்பா என்று எழுதியிருந்தார்கள். வாசலில் நின்று சிரித்தவர்களைப் பார்த்து ”ஐயப்பனை நம்பினால் ஜெயம்தானே, அதைத்தான் கோலப்பூர்வமாக எழுதியிருக்கிறார்கள்” என்று மாற்றிப்படித்துக் காண்பித்து ஒப்பேற்றினேன்.

”சார்! சபரிமலைக்குப் போறீங்களாமே! எப்போ டிஸம்பர் ஜனவரில மகரஜோதிக்கா?” என்று ஆர்வமாகக் கேட்ட அலுவலக நண்பரிடம் “சந்நியாசம் போற அளவுக்கு இன்னமும் வைராக்கியம் வரலைங்க... அடுத்த மாசம் சபரிமலைக்கு போறேன்...” என்று அடக்கமாக முடித்துக்கொண்டேன். இரவு ஸ்நானம் செய்து ஐப்பனுக்கு சரணம் சொல்லிவிட்டேன். புலியின் மேல் கனகாம்பீர்யமாக உட்கார்ந்து கொண்டு வில்லாளி வில்லனாக வீரமணிகண்டனான ஐப்பனுக்கு கற்பூரார்த்தி ஆயிற்று. கற்பூர ஜ்வாலை படும் ஐயப்பன் படம் மனசுக்கு இதமாக இருக்கிறது. ஊதுபத்தி தாழம்பூவாய் மணத்தது. நாற்பது நாட்கள் நலமாகக் கழிய ப்ரார்த்தித்துக்கொண்டேன்.

பூதநாத ஸதானந்த சர்வ பூத தயாபரா, ரக்ஷ ரக்ஷ மஹாபாஹோ சாஸ்த்ரே துப்யம் நமோ நமஹ!!

#ஸ்வாமியே_சரணம்_ஐ(ஜ)யப்பா!

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails