Tuesday, July 29, 2014

குரு பூர்ணிமா

”கட்டை விரலை வெட்டிக் குடுன்னு கேட்ட ஒருவர் குருவா? என்னய்யா இது நாட்ல அந்யாயமா இருக்கே!”

“அவர் குருதாங்க...”

“இதுவா குருவின் லக்ஷணம்?”

“கதை தெரியாதா? ’நீங்கதான் என் மானசீக குரு. என்ன தட்சணை வேணும்.. ப்ளீஸ் கேளுங்க...’னு ஒத்தைக்கால்ல நின்னான் ஏகலைவன். உன்னிடமிருக்கும் சிறந்ததைக் கொடுன்னு கேட்டார் துரோணர்”

“ம்.. அப்புறம்...”

“வில்லாளிக்குச் சிறந்தது அவனது கட்டை விரல். சட்டுன்னு வெட்டிக் கொடுத்துட்டான்...”

“யோவ்... நீயென்ன துரோணருக்கு சப்பைக் கட்டா? ”

“இல்லீங்க.. இது கிருபானந்தவாரியார் மகாபாரதச் சொற்பொழிவுல சொன்னது... இதுல ஏகலைவன் எவரெஸ்ட்டுக்குப் போய்ட்டான். துரோணர் மேலேயும் துளி பழி இல்லை... இதையே இன்னொரு மாதிரியும் சொல்வாங்க...”

“எப்படி?”

”நாட்டுல துப்பாக்கி வச்சுக்கணும்னா லைசன்ஸ் வேணும்..ஓகேவா?”

“ஆமாம்..”

“அது மாதிரி அந்த காலத்துல சில வித்தைகள்.. ராஜாவுக்கு மட்டும்தான் தெரியணும்னு இருந்தது.....”

“அதனால...”

“நாயோட வாயை அம்பாலக் கட்டுற வித்தையை க்ஷத்திரியனான அர்ஜுனனுக்கு துரோ சொல்லிக்கொடுத்தார் ப்ரோ..”

“சரி ப்ரோ...... கத்துக்கொடுக்கட்டும்.. அதுக்கு இவன் கட்டை விரலை ஏன் வெட்டணும்? ப்ரோ... ”

“அதான் சொன்னேனே ப்ரோ... லைசன்ஸ் இல்லாம துப்பாக்கி வச்சுக்கிற மாதிரி.. இந்த வில் வித்தையை கிராதனான ஏகலைவன் துரோவுக்கு தெரியாம மானசீகமாகக் கத்து வச்சுக்கிட்டான்..”

“என்னது? கிராதகனா?...”

“கிராதன்பா.. கிராதன்னா.. வேடன்னு அர்த்தம்.. கண்ணப்ப நாயனாரும் கிராதன்தான்.. இப்ப புரியுதா?”

“ஓ.. கிராதன்தான்... கிராதகன்னு மருவியிருக்குமோ... சரி...சரி.. மேட்டருக்கு வா....துரோணரை ஜஸ்டிஃபை பண்ணு.. அவர் பக்கம் கொடி பிடி...”

“ராஜாவுக்கு சமமா ஒரு வித்தையை சாமான்யன் இன்னொருத்தன் நாட்ல வச்சுக்கிட்டா.. அது ரொம்ப அபாயகரமான விஷயம்.... எல்லாம் நாசமப்போயிடும்...”

“எப்படி சொல்ற?”

“ராணுவத்துல இருக்கிற முக்கியமான வெப்பனை உங்க வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரன் வச்சுகிட்டு திண்ணையில ஒக்காந்திருந்தா... நீ சும்மாயிருப்பியா? உனக்கு அது சேஃபா?”

“ஐயய்யோ.. நா செத்தேன்... வெளிய தல காட்டவே முடியாதே... ”

“அந்த லாஜிக்தான் இங்கேயும்..ராஜ்ய பரிபாலனம் செய்யும் ராஜகுலமான க்ஷத்ரிய அர்ஜுனனுக்குத் தெரிஞ்ச தனுர் வித்தையை வேடுவனான ஏகலைவனுக்குத் தெரிஞ்சா.. வேற எதாவது அல்ப விஷயங்களுக்கு உபயோகிச்சுட்டான்னா... தொந்தரவுதானே... அதான் கறாரா விரலை வாங்கிட்டார்...”

“முன்னாடி.. அவனே தன்னிச்சையாக் கொடுத்தான்னு சொல்லிட்டு.. அதை வாரியார் சொன்னார்னு சொன்னே... இதை யாரு சொன்னா?... உன்னோட குருவி மூளைக்கு இதெல்லாம் எட்டாதே!!,,, சொல்லு.. சொல்லு.. யாரு சொன்னா? ”

“இது பக்தர்களால அண்ணான்னு அன்போடு அழைக்கப்படற ஸ்ரீக்ருஷ்ணப்ரேமி ஸ்வாமிகளோட மகாபாரத ப்ரவசனத்துலேர்ந்து...”

**

குரு. எந்த வித்தைக்கும் குரு கிருபை தேவைப்படுகிறது. குருவே சரணம். தெய்வத்திற்கு ஒரு படி மேல். பிதாவுக்கு அடுத்த படி. வியாஸாச்சாரியாள் ஆதி குரு.

இப்ப கொஞ்சம் பரமாச்சார்யாள் சொன்னது....

குருபரம்பரை பற்றி குருமார்களின் வரிசையொன்றை தெய்வத்தின் குரலில் மஹாபெரியவா பட்டியலிடுகிறார். அதி சுவாரஸ்யம். அத்வைத சம்பிரதாயத்தில் தேவர்களான தெக்ஷிணாமூர்த்தி, தத்தர், நாராயணர், பிரம்மாவும் அதற்குப் பிறகு விசிஷ்டர், சக்தி, பராசரர் மற்றும் வியாஸர் என்று சந்ததியாய் தோன்றிய ரிஷிகளும் குருமார்கள். வியாஸரின் புத்திரரான சுகப்பிரம்மம் பிரம்மச்சாரி. அங்கிருந்து பிள்ளை வழியாக வந்த குருமார்கள் வம்சம் அறுபட்டுப் போய் அதற்குப் பிறகு சன்னியாசிகளும் சீடர்களாகி குருமார்களாக தொடர்கிறார்கள். கௌடபாதர், கோவிந்த பகவத்பாதாள், சங்கர பகவத்பாதாள் ....

சித்தர் பாட்டு ஒண்ணு.....

குரு மேனி கண்டு, குரு நாமம் செப்பி, குரு வார்த்தைக் கேட்டு, குரு உரு சிந்தித்தலைப் பற்றி திருமூலரின் திருமந்திரமான கீழ்வரும் பாடல் அற்புதமானது.

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே

யோக முத்திரையுடன் அருள்பாலிக்கும் தென்முகக் கடவுளான சிவகுருவானாலும், பிரம்புடன் வகுப்பறை பாடம் சொல்லித்தரும் உபாத்தியாய குருவானாலும் இருவருமே ஞானகுரு. அறிவு புகட்டுபவர்கள்.

எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த அனைத்து குருமார்களுக்கும் என் நமஸ்காரங்கள். வாழ்வியல் பாடமெடுத்தவர்களுக்கு வந்தனங்கள். லட்சம் கிரந்தம் எழுதிய வியாஸருக்கு தெண்டன் சமர்ப்பித்த விஞ்ஞாபனம். ஸ்பெஷல் சல்யூட்!

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails