Tuesday, July 29, 2014

கல்யாணபுரம் ஆராவமுதன்

காலையில் வாக்கிங் கெட்டுது. சின்னவளுக்கு ஷூ கைங்கர்யம் செய்துகொண்டிருந்த போது கணீரென்று டிவியிலிருந்து ”ப்ரஹ்லாத சரித்திரத்தை நாரதர்...” என்று ஒரு கர்ஜிக்கும் குரல். நெருப்பென நின்ற நெடுமாலாக ஆகிருதியான சரீரம். கோல்ட் ஃப்ரேம் கண்ணாடி. கையில் சப்ளாக்கட்டை. நெற்றியில் திருமண். பேச்சின் இடையிடையே வால் மிளகை(?) வாய்க்குள் இப்படியும் அப்படியும் நகர்த்திக்கொள்கிறார்.

மார்கழி சீசனில் டிக்கெட் போட்டு அகாடமியில் வாய்ப்பாட்டு கச்சேரி செய்யுமளவிற்கு செழிப்பான சாரீரம். சமஸ்கிருதம், செந்தமிழ், இங்க்லீஷ் என்று கலந்து கட்டி மணிப்பிரவாள நடை. ”இதுதான் ப்ரைமரி.. மத்ததெல்லாம் செகண்டரின்னு பகவத் நிந்தனைல ஈடுபடறான் ஹிரன்யகசிபு...” என்று காலேட்சபத்துக்கு நடுப்பற ரசிகாளை புன்னகைக்கிற வைக்கிற ஸ்டைலிஷ் இங்க்லீஷ். பாகவத ஸ்லோகங்களையும் இடையிடையே கம்பனின் பாசுரங்களையும் ராகமாக இழுத்து நிரவலில் நம்மை மயக்கும் போது அந்த வயலின் வாசித்த அம்மணி நன்கு ஒத்துழைத்தார். வயலினும் அவர் குரலும் ”நாராயணா....” என்ற சொக்குப்பொடியில் பிசிறில்லாமல் ஐக்கியமாகி நம்மை மெய்மறக்கச் செய்வதும் இறைநிலையே!

”சந்தனக் காட்டுல நீயெங்கடா முள்ளுச் செடியா பொறந்தேன்னு ப்ரஹ்லாதனைப் பார்த்து அவனோட வாத்யார்கள் கேக்கறாளாம்.. அசுர குலம் சந்தனக் காடாம்.. எப்டி... அசுர குலம் சந்தனக் காடாம்.. நான் சொல்லலை.. பாகவத ஸ்லோகம் இது... ஹிரன்யகசிபு அப்டி மிரட்டி வச்சுருக்கான்...ஆனா பாருங்கோ... ஹரிங்கிற பகவன் நாமாவை யார் சொன்னாலும் தெவிட்டாமல் இனிக்கும். ஹரி இல்லைன்னு சொல்றவன் கூட வெளியில ஹரின்னு சொல்லமாட்டேனே தவிர்த்து காதுல விழுந்தா வேண்டாம்னு சொல்லமாட்டான். ருசியான நாமம். ஹரின்னா சிம்மம் என்று ஒரு கூட அர்த்தம் உண்டு.. வாத்யார்கள் ஹரிநாமம் சொல்லக்கூடாதுன்னு சொன்னாலும் ப்ரஹ்லாதன் சொல்றச்சே வேண்டாம்னு சொல்லலையாம்.. அவனா சொல்றதை நிறுத்தினதும்.... நிறுத்துடான்னு ஃபுல்ஸ்டாப் வச்சாலாம்...”

ஹிரி நாமாவைப் பற்றி சிலாகிச்சதும் ஜேசுதாஸ் பாடிய “என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்.. ஸ்ரீ ரங்க நாயகன்..” பாடல் பிரத்யேகமாக என் செவிக்கு மட்டிலும் கேட்டது. அதில் “ஹரி..ஹரி..ஹரி.. என தினம் ஸ்மரி...” என்று வரும் வரிகள் இந்த ஹரிகதா காலேட்சேபம் நடத்திய கல்யாணபுரம் ஆராவமுதன் ஸ்வாமி பாடியதைச் சத்தியமாக்கும்.

”எஸ்பிபி அப்பாவும் இப்படி நின்னுண்டே தான் ஹரிகதா சொல்லுவாராம். கேள்விப்பட்ருக்கேன்..” என்று அம்மாவிடம் சொல்லிக்கொண்டே ஃபேஸ்புக் ஜோதியில் இருக்கிறாரா என்று மேய்ந்தேன். ம்.. இருக்கிறார். ஸ்நேகிதனாகி ஐக்கியமாகலாம் என்ற ஆசையில் விண்ணப்பித்திருக்கிறேன்.

வாக்கிங் கெட்டாலும், ’ஹரி’க்கிங் கிடைச்சுது.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails