Showing posts with label சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர். Show all posts
Showing posts with label சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர். Show all posts

Monday, February 1, 2016

ஹரே ஸ்ரீ கிண்டியாயை நமஹ:

"சுதா! இன்னும் கொஞ்சம் சாம்பார் ஊத்து...” என்று தோசை சுட்டுப் போடும் “ரமா”வைப் பார்த்து குரல் விட்டால் தீர்ந்தது கதை. தோசைத்திருப்பியை பழுக்கக் காய்ச்சி நாக்கில் இழுத்துவிடுவார்கள். ரமா வைஃப். சுதா வேறவொரு மகானுபாவரோட வைஃப்.
இது ஒரு சீன்.

மனசு மொத்தமும் ஒரு காரியத்தில் லயித்துக் கிடக்கும் போது எதிரில் யாராவது வந்து வாயைப் பிடுங்கினால் ”ம்ம்ம்ம்”மென்று வாய்மூடி நிமிஷ நேரம் ஸ்கூட்டர் விடுவது என்னைப்போல அநேகருக்கு இருக்கும் பழக்கம். அப்போது அவர்களின் பெயர்களைத் தப்பிதமாகக் கூப்பிடும் வியாதி எனக்குண்டு. வினயா என்பதற்கு பதிலாக மானஸா என்றோ, சங்கீதாவை கீர்த்திகா என்றோ கூப்பிட்டு மெர்சல் ஆக்குவேன். (மானஸாவும் வினயாவும் என் புத்ரிகள், கீர்த்திகா என் சோதரி)
இது இன்னொரு சீன்.

இதுபோல டங் ஸ்லிப் கேஸ்களை Freudian Slips என்பார்கள். ஆழ்மன துவாரத்தில் அவர்களைப் பற்றிய அபிப்பிராயங்கள் ஒன்றாக இருக்கலாம் அல்லது அவர்கள் இருவரையும் இணைக்கும் ஏதோ ஒன்று நமக்கு பிரியமானதாக இருக்கலாம் என்று உளவியல் காரணங்கள் உள்ளன.
இது போல அகஸ்மாத்தாக மாற்றிக் கூப்பிடும்போது கூட “மனசுல இருக்கிறது தானே வெளியில வரும்?” என்று முகத்தைத் தோள்பட்டையில் களுக்கென்று இடித்து நம் காலை வாரிவிடுவார்கள். இப்படி மனசுல இருக்கிறதுதானே வாயில வரும் என்பதற்கு ப்ரம்மஸ்ரீ அனந்தராம தீக்ஷிதர்வாள் உபன்யாசத்தில் கேட்ட கதை. என்னோட கை விஷமத்தோட சேர்த்து... இதோ....

*

ஒரு உஞ்சவிருத்தி ப்ராம்மணர். தெனமும் வீதிவீதியாப் போயி “ஹரே ஸ்ரீ கிருஷ்ணாயை நமஹ”ன்னு ஒவ்வொரு ஆத்து வாசல்லயும் நிப்பார். கெடைக்கற பிக்ஷையை வாங்கிண்டு வந்து சமைச்சு சாப்பிடுவார். ஒரு நாள் ஒரு ஆத்துல வெள்ளி கிண்டி வாசல் திண்ணையில இருந்தது. இந்த மனுஷருக்கு கொஞ்சம் கை நீளம். வெள்ளியைப் பார்த்ததும் இன்னும் பெருசா நீண்டுடுத்து. லவட்டிப்புட்டார்.

அதுக்கப்புறம் ஒரு மாசம் அந்தத் தெரு பக்கமே போகலை. பயம். திரும்பத் திரும்ப ஒரே தெருல பிக்ஷை. என்னடா இந்த ப்ராம்மணர் தெனம் வந்து நிக்கறாரேன்னு ஒருத்தரும் வாசல் பக்கம் எட்டிப் பார்க்கல்லே. பிக்ஷை சுலபமா கிடைக்கல்லே. சரி.. அதான் ஒரு மாசமாச்சேன்னு திரும்பவும் கிண்டி திருடின அதே தெருவுக்குப் போனார். அதே ஆத்து வாசல்ல நின்னார்.

”யாரு”ன்னு அவாத்துல மாமி உள்ளேருந்து கேட்டுண்டே வாசலுக்கு வந்தவுடனே... வாய் தப்பிப் போய்..

“ஹரே ஸ்ரீ கிண்டியாயை நமஹ”ன்னு உளறிக்கொட்டினார்...

ஆஹா.. திருடன் ஆம்புட்டுன்னுட்டான்னு... அவாத்துல கடோத்கஜன்களா இருந்த நாலஞ்சு பசங்களா ஓடி வந்து வளைச்சுப் புடிச்சிப்புட்டான்கள்..
மனசுல இருக்கிறதுதானே வாக்குல வரும்?

எனக்கு இருட்டுன்னா பயம்....

சரி.. சின்னதாவே முடிச்சுக்கிறேன். ஸ்ரீராமன் சிருங்கிபேரபுரத்தில் சீதா லக்ஷ்மணனுடன் முகாமிட்டிருக்கிறான். வேடர்குல குகனின் ராஜாங்கத்துக்குட்பட்ட இடம். இரவு சீதையும் ராமனும் சயனித்திருக்க லக்ஷ்மணன் வில்லோடு காவல் காக்கிறான். “உங்களுக்கும் சிரமம் வேண்டாம்.. தாங்களும் நித்திரைக்குப் போகலாம். நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று குகன் வலிய வந்து வற்புறுத்துகிறான். ”இல்லையில்லை.. எனக்கு தூக்கம் வரவில்லை.. அண்ணாவுக்கு நான் காவல் நிற்கிறேன்...” என்று லக்ஷ்மணன் மறுத்து “நீங்கள் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்..” என்று குகனை போகச் சொல்கிறான்.

குகனும் அந்த இடத்தைவிட்டு நகர்வதாயில்லை. இருவரும் குறுக்கும் நெடுக்குமாக நடை போட்டுக்கொண்டு விடிய விடிய காவல் புரிகிறார்கள். [கடைசியில் பரதன் தேடிக்கொண்டு வந்தவுடன் அவனிடம் “இமைப்பிலன் நயனம்” என்று லக்ஷ்மணனின் புகழ்பாடுகிறான் குகன் என்பது வேறு கதை.]

ராமன் பதினான்கு வருடங்கள் காடாள வந்தவுடன்... பரதன் சக்கரவர்த்தியாக பட்டம் கட்டிக்கொண்டு அவனின் ஆளுகைக்கு உட்பட்ட இந்த குகனிடம் ராமனைத் தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியிருக்கலாம் என்று லக்ஷ்மணனுக்குச் சந்தேகம். பரதன் லக்ஷ்மணனிடம் சொல்லி ராமனை வேலை தீர்க்கச் சொல்லியிருக்கலாம் என்பது குகனின் ஐயம்.

மேற்கண்ட இந்த காட்சிக்கு சேங்காலிபுரம் ப்ரம்மஸ்ரீ அனந்தராம தீக்ஷிதர்வாள் நகைச்சுவையாகச் சொல்லும் திருஷ்டாந்தம் கீழே...

“ஒருத்தன் பாம்பேலேர்ந்து வந்த வைர வியாபாரி. இன்னொருத்தன் மெட்ராஸ் ஆளு. ரெண்டு பேருமா ஹோட்டல்ல ரூம் போட்டு உக்காண்டு வியாபாரம் பேசறான்கள். பாம்பே ஆள் முன்னாடி வைரம் வைரமா குமிச்சுக் குமிச்சுக் ஏழெட்டுக் கூறு கட்டி வச்சுருக்கான். மெட்ராஸ் ஆள் நிறையா முத்துக் கல்லு, சேப்புக் கல்லு, மரகதக் கல்லுன்னு பத்து கூறு கட்டி குமிச்சு தன் முன்னாடி வச்சிருக்கான்.

ரெண்டு பேருமா ”உங்களைப் போல உண்டா?” ஆஹா... நீர் அப்படி.. நீர் இப்படி..ன்னு உம்மைப் போல நியாயஸ்தன் லோகத்துல உண்டா? நீரே சத்தியசந்தன்...ன்னு புகழ்ந்து பேசிண்டு வியாபாரம் பண்ணிண்டிருக்கான்கள். திடீர்னு லைட்டு போயிடுத்து. கும்மிருட்டு. முன்னாடி யாரு இருக்கான்னே தெரியல... ரூம்ல இவனுங்க ரெண்டு பேர் மட்டும்தான். உடனே ரெண்டு பயலும் என்ன பண்ணினான்கள் தெரியுமோ? படக்கன்னு ஒருத்தொனக்கொருத்தன் அடுத்தவனோட ரெண்டு கையையும் கெட்டியமாப் பிடிச்சுண்டுட்டான்.

”என்னடா? இப்படி பிடிச்சிக்கிறியேன்னு கேள்வி கேட்டுண்டு.. ரெண்டு பேருமே எனக்கு இருட்டுன்னா பயம்னு சேர்ந்தே சொல்றான்கள்.... இந்தப் பயல்களுக்கு இருட்டா பயம் அங்க... முன்னாடி குமிச்சிருக்கிறதில ஒண்ணு ரெண்ட எடுத்து பாக்கெட்ல போட்டுண்ட்டா என்ன பண்றதுங்கிற பயம்... அந்த மாதிரி இருக்கு லக்ஷ்மணனும் குகனும் சேர்ந்து காவல் காத்தது.....”


‪#‎இராமாயணம்‬

பக்தன் Vs பக்தன்

பக்தன் Vs பக்தன்
================
மண்டியிட்டு பீஷ்மர் யுத்தபூமியில் அமர்ந்திருக்க தேர்சக்கரத்தை கையில் ஏந்தியவண்ணம் பரந்தாமன் அவரைக் கொல்ல உக்கிரமாக நின்றிருந்தான். ஹிந்தி வாயசைவுக்கு தமிழ் வார்த்தைகள் பட்படாரென்று தெரித்தன. விஜய் மஹாபாரதம். 

அனந்தராம தீக்ஷிதரின் ஸ்ரீமத் பாகவத சப்தாக உபன்யாசத்தில்...
”நாளை கிருஷ்ணனை ஆயுதம் ஏந்த வைக்கிறேன்” என்று பீஷ்மர் சூளுரைத்ததற்காக தன்னுடைய பிரதிக்ஞையையும் உதறிவிட்டு ஆயுதம் ஏந்தி நின்றான். பீஷ்மர் வாசுதேவனின் பரமபக்தர். பக்தனின் சொல்லைக் காப்பாற்ற வேண்டும் என்ற நிர்பந்தத்தில் ஆயுதம் ஏந்தி நின்றான்.

தன்னுடைய உயிர் நண்பனும் இன்னொரு பரம பாகவதனுமான அர்ஜுனனை அன்று சரமாரியாய் அம்பு மழை பொழிந்து அடித்துக் காயப்படுத்திக்கொண்டிருந்தார் பீஷ்மர். ஆகையால் அர்ஜுனனைக் காக்கும் பொருட்டும் சக்கரம் ஏந்தி பீஷ்மரைச் சும்மா மிரட்டினாராம்.

பக்தன் Vs பக்தன் சண்டையில் இரண்டு பேருக்குமே கட்சி கட்டி கிருஷ்ணர் நின்றதை ரொம்ப அழகாக விளக்கியிருந்தார் தீக்ஷிதர்வாள்.

Monday, October 26, 2015

கொ.கு.அ.கூ.வே‬

ஒரு பரம தரித்ரன் வீட்டுக்கு ஒருநாள் திருடன் வந்துட்டானாம். பாதம் தரையில பட்டும் படாமலும் மொதக்கட்டு இரண்டாம் கட்டைத்தாண்டி பதமா ரேழிக்குள்ள நுழைஞ்சுட்டான். அதான் தரித்ரன் வீடாச்சே.... சுத்தமா துடைச்சுக்கிடக்கு... ஒண்ணுமில்லே... வீட்டுக்கு உடமைக்காரி ரேழில படுத்துண்டிருக்கா... புருஷங்காரன் வெளியூர் போயிருக்கான்... அவளுக்கு திருடன் நுழைஞ்சது தெரிஞ்சுபோச்சு... வீட்ல ஒரு தம்படி கிடையாது... இப்படி வந்து மாட்டினுட்டானே திருடர் பிரகிருதின்னு..... அவனுக்காகப் பரிதாபப்பட்டாளாம்....
அவனும் கொல்லையோட வாசல் அலைஞ்சுப் பார்த்துப்பிட்டு... என்னடா இது ஒண்ணுமே தேரலை...விடியாமூஞ்சி வீட்டுக்குள்ள வந்து மாட்டினுட்டோமே... இவ்ளோ தூரம் வந்துட்டோம்... ஒண்ணுமேயில்லாம வீட்டுக்குப் போறது செய்யற தொழிலுக்கு இழுக்காச்சேன்னு...ரெண்டு மூணு ஜாமமா தயங்கித் தயங்கி வீட்டுக்குள்ளேயே சுத்தறான்...கால் ஓஞ்சுபோச்சு... ஏதும் ஆம்படலை.... கடைசியா சமையக்கட்டுல ஒரு ஓரமா ஈர உமி கிடந்ததை பார்த்துப்புட்டான்....சரி... வந்தத்தத்துக்கு உமியை அள்ளிண்டு போய்டுவோம்னு.. ஹால் மித்தத்துல நிலா பிரகாசமாத் தெரிஞ்சுதாம்.. அதனால அந்த வெளிச்சத்துல இடுப்புல கட்டிண்டிருந்த வேஷ்டியை அவுத்து கீழே விரிச்சுட்டு.. உமியை அள்ள உள்ள போனானாம்....
அவன் சமையக்கட்டுக்குப் போனபோது... ஹால்ல முழிச்சுண்டே படுத்துண்டு இருந்தவ... அந்த வேஷ்டியை சுருட்டிண்டு வாசல் ரூமுக்குள்ள போய் கதவைச் சாத்திண்டாளாம்... இடுப்புல வஸ்திரமில்லை... ரெண்டு கை நிறைய உமியை அள்ளிண்டு.... இன்னும் ரெண்டு கையில்லையே.. இந்த ஐஸ்வர்யத்தை அள்ளிண்டு போகன்னு....வந்து பார்க்கிறான்.. ஹால் தரையிலே விரிச்சிருந்த வேஷ்டியைக் காணலை... இது ஏதுடா வம்பாப் போச்சு... கௌபீனம் கூட இல்லாம வந்துட்டுமே...வேஷ்டியையும் காணலையே.. இப்ப என்னடா பண்றதுன்னு... இப்டியே வீதியிலே போனா ஊர்ல யாரெல்லாம் பயப்படுவாளோன்னு... வெளிறிப்போயி சுத்திமுத்தி தேடறான்...
அப்போ வாசல் ரூம்லேர்ந்து “ஐயோ.. திருடன்..திருடன்....”ன்னு ஜன்னல்ல நின்னுண்டு சத்தம் போட்டாளாம் அந்த வீட்டுக்காரி... கௌபீனம் இல்லைன்னாலும் பரவாயில்லைன்னு வாசல் தாண்டி அந்த ஜன்னல் கிட்டே ஓடி வந்து அந்த திருடன் ஆங்காரமா..... “அடியே.... நீ கொள்ளைக் குடுத்த அழகுக்கு கூப்பாடு வேறயோடி.....”ன்னு கேட்டுப்புட்டு அப்படியே ஓடிப்போயிட்டானாம்...
பி.கு: சே.அ.தீக்ஷிதர்வாள் பாகவத சப்தாகத்தில் சொன்ன ஜோக். லோக க்ஷேமார்த்தம் எழுதிப்பார்த்தேன். 
smile emoticon

Thursday, October 15, 2015

சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர்வாள்

இன்றைக்கு ரொம்ப விசேஷமான நாள். ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியும் கிருஷ்ண பரமாத்மாவும் தோள்மேல் கைபோட்டுக்கொண்டு அனுக்கிரகம் பண்ண அடியேன் கிரஹத்துக்கு எழுந்தருளியிருக்கிறார்கள். ஸ்ரீராமநவமியும் ஸ்ரீஜெயந்தியும் எங்கியாவது ஒண்ணா வருமோ? மஹாப்ரளயம் வந்தாக் கூட திரேதாயுகமும் துவாபரயுகமும் சேருமோ? சக்ரவர்த்தித் திருமகனும், மாடு மேய்க்கும் கோபாலனும் ஏககாலத்தில் யாரிடமாவது எழுந்தருளியிருக்கிறார்களா? மரியாதை புருஷோத்தமனும் லீலா புருஷோத்தமனும் யார் வீட்டு வாசல்படியாவது தாண்டி வீட்டிற்குள் பிரவேசித்திருக்கிறார்களா? ஆச்சரியமான ஆச்சரியம்.
மத்தியானமாக அம்மாதான் ஃபோன் பண்ணினாள்.
“கார்த்தி.... கூரியர் வந்துருக்குடா... பெரிய பார்ஸல்.. புக்ஸ் எதுவும் ஆர்டர் பண்ணினியா?”
“எங்கேயிருந்து வந்துருக்கும்மா?”
“சேலம்...”
“ஓ! வெரி குட். பிரிச்சுப் பாரு... நானும் வந்து அனுபவிக்கிறேன்...”
டொக்.
இரண்டு நாட்களுக்கு முன்னால் ஆர்டர் பண்ணினேன். இன்று இரண்டு பேரும் பரிவார தேவதைகளோடு பறந்து வந்துவிட்டார்கள். புண்ணியம் செய்(த) மனமே.. மனமே... “ஸ்ரீராம ராம ராமேதி.. ரமே ராமே மனோரமே....” பாட்டி இராத்திரி பாயில் உட்கார்ந்து உரக்கச் சொல்லுவாள். பின்பு "ஹே ப்ரபோ"ன்னு முணுமுணுத்துக் கட்டையை நீட்டுவாள். “க்ருஷ்ண..க்ருஷ்ண...” என்று உத்தரணி தீர்த்தம் விடுவாள்.
ஆஃபீஸிலிருந்து வீட்டிற்குள் நுழைந்தவுடன் ”எங்கே..எங்கே”ன்னு பக்தி டோஸுக்குப் பரபரத்தேன். ப்ரம்மஸ்ரீ அனந்தராம தீக்ஷிதர்வாள் உபன்யாசம் பண்ணிய ஸ்ரீ ராமாயணம் மற்றும் ஸ்ரீ மஹாபாராதம் இரண்டும் எம்பித்ரீ ஆடியோ சிடிக்களாக சோஃபாவில் வசித்தது. ஓடோடிப்போய் மூஞ்சி கைகால் அலம்பிவிட்டு நெத்திக்கு ஒத்தை இட்டுக்கொண்டு பேக்கைப் பிரித்துப்பார்த்தேன். சீதாலக்ஷமன ஹனுமன் சமேத பட்டாபிஷேக ராமர் படம் போட்ட இராமாயண பேக்கும், பார்த்தனுக்குச் சாரதியாய் பக்தனுக்கு சாரத்யம் பண்ணிக்கொண்டு பாஞ்ச சன்யம் ஊதும் கிருஷ்ணன் படம் போட்ட மூன்று மஹாபாரத பேக்கும் தரிசனம் ஆயிற்று. ராமாயணம் 28 ஸிடி, மஹாபாரதம் 78 ஸிடி. துளசி வாசனை. மகிழ்ச்சிக்கு எல்லையேது?
“போன ஜென்மத்துல புண்ணியம் பண்ணியிருந்தாதான் பகவத் குணம் கேட்கணும்னு தோணுமாம்...” என்று ஸ்ரீமத் பாகவத சப்தாகத்தில் தீக்ஷிதர்வாள் அழுத்தம்திருத்தமாகச் சொல்லியிருக்கிறார். புண்ணியம் செய்திருக்கிறேன். டபுள் புண்ணியம். எப்படியென்றால் ஸ்ரீரமண சரிதம் ஆடியோ புஸ்தகம் பாம்பே கண்ணன் அனுப்பினார். இந்த உபன்யாசங்கள் முடியும் வரை சேப்பாயியில் பாட்டு, ஜோக்குகளுக்கு உபவாசம் இருக்கப்போகிறேன். ஐந்தாம் வேதத்தையும் நடையில் நின்றுயர் நாயகனைப் பற்றி பகவத் குணம் கேட்டும் சில நாட்கள் இம்மானுடப் பிறவியில் கழியட்டுமே!

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails