Showing posts with label ஜெயமோகன். Show all posts
Showing posts with label ஜெயமோகன். Show all posts

Saturday, May 9, 2015

பழந்தமிழ்ப் பண்பாட்டின் சேர நாட்டு எச்சங்கள்

தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை மெயில் வந்தவுடன் மே இரண்டாம் தேதியை மூளையின் ஒரு ந்யூரானில் சதக்கென்று குத்திக்கொண்டேன். தக்கர் பாபாவில் ஜெயமோகனின் ”பழந்தமிழ்ப் பண்பாட்டின் சேர நாட்டு எச்சங்கள்”. வாசகர்கள் நான்கு பக்கம் படித்து முடிப்பதற்குள் நாற்பது பக்கம் எழுதிக் குவிக்கும் ஜெமோவை இதுவரை நேரில் சந்தித்ததில்லை. ஐந்தரை மணி நிகழ்ச்சிக்கு ஐந்தேகாலுக்கு நுழைந்துவிட்டேன். தக்கர் பாபா வினோபா அரங்கத்தில் ஜேஜேயென்று கூட்டம்.

கோபுவும் பத்ரியும் அறிமுகவுரையாற்றிய பிறகு ஜெமோ பேச ஆரம்பித்தார். ஜெமோவுக்கு ஆற்றொழுக்கான நடை. பேச்சில் உறுதியும் நம்பிக்கையும் தெரிந்தது. பழந்தமிழ் பண்பாடு பற்றி பேச ஆரம்பிக்கும் முன் நமது வரலாறுகள் இயற்றப்பட்டதை விரிவாகப் பேசினார். வெளிநாட்டிலிருந்து இந்திய வரலாறு எழுதப்பட்டால்தான் அதை ரெஃபரென்ஸுக்கு எடுத்துக்கொள்ளும் உள்ளூர் அநியாயத்தைச் சாடினார்.

சூதர்கள் மன்னர் குடி பாடுவதற்காகவே இருந்தார்கள். ராஜாதிராஜர்கள் மட்டுமன்றி குட்டிக் குட்டி ராஜாக்களுக்குக் கூட அவர்களது குலவரிசையைப் பாடுவதற்கு ஆட்கள் இருந்தார்கள். இது வரலாறு சொல்வதில் முதல் வகை. இரண்டாவது வகை தொன்மங்கள். Myths. மூன்றாவதாக புராணக் கதைகள் வருகின்றன. மார்டர்ன் ஹிஸ்டரியில் இவையெல்லாம் ஒத்துக்கொள்வதில்லை.

நவீன வரலாற்றுக்குச் சான்றுகள் தேவை. ஆதாரங்கள் தேவை. படிக்கும் நான்கு பேர்களும் ஒத்துக்கொள்வது போன்ற தரவுகள் தேவை. ஆனால் நான்கு பேரால் எப்படியும் மாற்றியமைக்கும்படியும் வரலாறு அமையலாம். எனக்கு வடிவேலுவின் புலிகேசி படம் ஞாபகம் வந்தது. பூஞ்சையாய் எலிக்குட்டி போலிருக்கும் புலிகேசியை கட்டுமஸ்தான பாடியோடு வரையைச் சொல்லி “வருங்கால சந்ததியினர் தெரிந்துகொள்ளட்டும்..” என்று கேலியாகச் சிரிப்பார்.

வரலாற்றின் அடுக்குகள் பற்றி ஜெமோவின் வ்யாசம் இங்கே: http://www.jeyamohan.in/74443#.VUUCrPmqo7J
குமரிமாவட்டத்தைப் பற்றி பேச ஆரம்பித்தவுடன் தலைப்பின் உள்ளே தொபகடீர்னு குதித்தார். குமரி மாவட்டம் இன்னமும் நாகரீகத்தால் பழந்தமிழ்ப் பண்பாட்டை பல இடங்களில் பழகி வருகிறது என்பதற்கு தரவுகளை சரசரவென்று அள்ளித் தெளிக்க ஆரம்பித்தார். பேசும் மொழியில் வேற்று மொழிகள் கலக்காமல் புனிதத் தமிழாக இருக்கிறது என்றார். இப்படித்தானா அல்லது எனது புரிதல் அதுவா என்று ஒரு பிசுபிசுப்பு நியாபகம் இங்கே. சொற்பொழிவு கேட்டவர்கள் தெளிவுபடுத்தலாம்.

அ.கா. பெருமாளுடன் கண்ணகி கோவில்களாக சேர நாட்டில் சுற்றியதைப் பற்றி விவரிக்கையில் செங்கனூர் கோவிலில் கிழக்கு வாசல் வழியாக நுழைந்தால் சிவனும் மேற்கு வாசல் வழியாக பார்த்தால் பகவதியும் அருள்பாலிப்பதைப் பற்றி பேசினார். இன்னமும் குமரி மாவட்டத்தில் சித்திரம் வரைந்து வழிபடும் ஆதிகாலப் பழக்கம் இருப்பதைச் சுட்டிக் காட்டினார். வரலக்ஷ்மி விரதத்திற்கு கலசத்திலும் சுவற்றிலும் படம் வரைந்து கும்பிடுவதை நானும் வல்லபாவும் பேசிக்கொண்டோம்.

பூ ஆடை உடுத்தி புதுப்புனல் நீராடுவது தொன்றுதொட்டு வரும் குமரிமாவட்ட பழக்கம். சிறுவயதில் ஜெமோவே பூ ஆடை உடுத்தி புதுப்புனல் நீராடியதைக் குறிப்பிட்டார். முகத்தில் லேசான சிரிப்பு. அவ்வருடத்திய முதல் சரக்கொன்றைப் பூப்பதை அவர் ஊரின் மஹாதேவர் கோவிலில் விழாவெடுத்துக் கொண்டாடுவதையும் அதுவே புதுவருடப் பிறப்பிற்கான அறிவிப்பாகவும் எடுத்துக்கொள்வார்களாம். கேரள நாளிதழ்களில் அதுவே தலைப்புச் செய்தியாக இடம்பெறும் முக்கியத்துவத்தைப் பற்றியும் சொன்னார்.

தமிழக கோவில்களின் ஆகம வழிபாடுகளைப் போலில்லாமல் கேரள கோவில்களின் கையசைவின் மூலம் நடக்கும் கோயில் உபசாரங்களும் தாந்த்ரீக சடங்குகள் பற்றியும் சொல்லி அதுவே ஆதி வழிபடாக இருந்தது என்றும் ஹ்ரீம். க்லீம் போன்ற ஓசைகளே மந்திரங்களானதையும் விவரித்தபோது வழிபாட்டின் வழியாக பண்பாடு தெரிந்தது.

எதையும் இலையில் சுருட்டி வேக வைத்தோச் சுட்டோ சாப்பிடுவது பழங்குடிகளின் பழக்கம். இன்னமும் குமரி மாவட்டத்தில் இலையில் சுருட்டி வைத்து செய்யப்படும் அப்பங்கள் பற்றிய விரிவான ஜெமோவின் கட்டுரை இங்கே: http://www.jeyamohan.in/5387#.VUT0tJNUyVA
பழந்தமிழர் பழக்கமான பெண்ணுக்கு மையல் கண்டால் வேலனை வரவழைத்து வெறியாட்டு நடத்துவதை தன் ஊரில் பார்த்த சான்றிருப்பதைப் பற்றிப் பேசினார்.

அருவிபோல பேசிக்கொண்டே வந்தவர், சரியாக ஒரு மணி நேரத்தில் சட்டென்று நிறுத்திவிட்டுச் சரசரவென்று மேடையிறங்கிவிட்டார். தினமணி இணையதளத்திற்கு ஒரு தொடர் எழுதித் தர முடியுமா என்று விண்ணப்பித்துக் கொண்டபோது “ஒரு புது நாவல் எழுதணும்னு பார்க்கிறேன்..அதுக்கே நேரமில்லை...” என்று சிரித்தார்.

ஐபேட், ஹாண்ட் பேக் போட்டு சீட் பிடித்து வைத்த வல்லபா, வீகேயெஸ்ஸுக்கு மனமார்ந்த நன்றிகள். ராதிகா சித்ரா நாகேஷ் மேடங்களோடு ஒரே வரிசையில் அமர்ந்து பார்த்தது மிகவும் சந்தோஷம். கட்டு புஸ்தகங்கள் எடுத்து வந்து ஆட்டோகிராஃப் வாங்கிய ராசகோபாலனாரை ஜெயமோகன் அறிவார்ந்த விஷயங்கள் சொல்லும்போது பார்த்துக்கொண்டது பரவச அனுபவமாக இருந்தது. விருமாண்டி மீசையில் வி. சந்திரசேகரன் சார் கம்பீரமாக வந்திருந்தார். நிகழ்ச்சி முடிந்து பேசிக்கொண்டிருக்கும் போது பாலு சார் சங்கீத பூஷணம் என்ற வரியில் சங்கீதத்தை பூசணும் என்று வா.விளையாடினார். வழக்கம் போல வெங்கட் சுப்ரமணி அடக்க ஒடுக்கத்துடன் அமர்ந்து சிரத்தையாகக் கண்டு களித்தார்.

இந்தக் கட்டுரை எழுத குறிப்புகள் எடுத்துக்கொடுத்த ராதிகா மேடத்திற்கு எனது விசேட நன்றிகள்.

படம்: வீகேயெஸ்

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails