Showing posts with label அன்பு சூழ் உலகு. Show all posts
Showing posts with label அன்பு சூழ் உலகு. Show all posts

Friday, August 19, 2016

என் பெயர் வெங்கடசுப்பிரமணியன்

சட்டை மடிப்பு கலையாத வண்ணம் இவ்வளவு நாள் பயணம் செய்தாயிற்று. மாநகர போக்குவரத்தில் கூட்டம் பார்க்காவிட்டால் அவ்வளவு ஸ்ரேயஸாக இருக்காது. இன்று காலையில் மடி பே.நியிலிருந்து ஆலந்தூர் ர.நி பார்க்க ஒரு சுமால் பஸ் போயிருக்கவேண்டும். ஓடவில்லையாம். நிறுத்தத்திற்கு வரும்போதே நடத்துனர் கடைசிப் படியில் நின்று உக்கிரமாகக் கடமையாற்றிக்கொண்டிருந்தார். கூட்டத்தின் தீவிரத்தைப் பார்க்கும் முன் சுமால் பஸ்ஸின் மொத்தக் கொள்ளளவைப் பார்த்துவிடலாம்.
ஓட்டுனர் இருக்கைக்குப் பின்புறம் ஆறு வரிசை. வரிசைக்கு ஒன்றரை பேர் உட்காரலாம். ஆனால் பசைபோட்டு ஒட்டியதுபோல ரெவ்வெண்டு பேராக இருந்தால் பன்னிரெண்டு பேர். கடைசி வரிசை மகளிர் ஸ்டிக்கர் அடித்தது. கொடி இடையர்கள் ஏழு பேரும் சற்றே பருத்த சரீரமுடையவர்கள் ஐந்துபேரும் அமரலாம். இதுவரை பதினேழு. இடதுபுறம் முன்படிக்குப் பின் மூன்று வரிசை. ஆறு பேர். இருபத்துமூன்று. ட்ரைவர் கேபின் இடதுபுறம் இரண்டு சோலோ சீட்டுகள். மொத்தம் இருபத்தைந்து பேர் உட்காரலாம்.
இரண்டு ஸ்பெஷல் இருக்கைகள். ஒன்று ஓட்டுனருக்கு(நமக்குக் கிடையாது) மற்றொன்று நடத்துனருக்கு (அவர் மனதுவைத்தால் அமரலாம்).
நுட்பமான கனரக வாகன ஓட்டும் பணி தெரிந்தாலொழிய அந்த சந்துபொந்துகளில் புகுந்து வந்துவிடமுடியாது. ஆதம்பாக்கத்தைத் தொடுவதற்கு முன்னர் வரும் வேளச்சேரி பைபாஸ் வரை ஒருவர் மீது ஒருவர் ஆடை உரச நெருக்கமாக நின்று கொண்டு வந்தோம். இன்னும் பத்து பேர் ஏறியவுடன் முன்னால் இருப்பவர் சுவாசித்தது போக மிச்சமிருக்கும் ஆக்ஸிஜன் எனக்கும் கிடைக்குமளவிற்கு முண்டியடித்தார்கள்.
உள்ளே ஓடும் ரோடுகள் துண்டில் கிழித்த கோமண அளவுதான். அதில் ஒரு மணல் லாரி, தண்ணீர் லாரி, நூறு கார்கள், எண்பது சைக்கிள்கள், இருநூறு பைக்குகள் என்று அந்தப் பேட்டையின் ஒட்டு மொத்த வாகனாதிகளும் வீதிக்கு வந்துவிட ஸ்மால் பஸ்ஸுக்கு ஸ்மால் இடம் கூட கிடைக்காமல் திணறியது. பதினைந்து நிமிடத்திற்கும் மேலாக ஒரு பஸ் நகரவில்லை என்றால் அதன் பின்னால் குறைந்தது இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுக்கும் என்பது சென்னை போக்குவரத்தின் அடிப்படை விதி.
ஏற்கனவே புளிமூட்டையாய் அடைந்து கிடந்த பேருந்தில் முதுகில் ஒரு பையோடு கொஞ்சம் பூசிய உடம்போடு ஒரு பையன் ஏறினான். என் பக்கத்தில் வந்து நின்று என்னை கடைசி வரிசையில் உட்கார்ந்திருந்தவர்களின் மடியில் உட்காரும்படி ஒதுக்கினான். விழுந்துவிடக்கூடாது என்று பின் பக்க பெயர்ப்பலகையின் அடிபாகத்தை கெட்டியாகப் பற்றிக்கொண்டேன். அவ்வளவு நெருக்கத்திலும் வெள்ளையாச் சிரித்தான். என்னோடு சேர்ந்து ஏறிய ஒரு நண்பருடன் நான் பேசிக்கொண்டிருந்தேன்.
“டே புத்தகமெல்லாம் எடுக்கலை.. அடுத்த வாரமாதான் பிரிச்சுப் பார்க்கபோறேன்...” பின்னால் இரைச்சல். திரும்பினால் அந்தப் பையன் யாரோ நண்பனிடம் மொபைலிக்கொண்டிருந்தான்.
“காஞ்சூரிங் பார்ட் 2 பார்த்துட்டேன். செம்ம..செம்ம... பயத்துல....” அதற்கப்புறம் சத்தத்தைக் குறைத்து வாயோடு பேசிக்கொண்டான். “சுச்சா போயிட்டேண்ட்டா”ன்னு சொல்வானோன்னு மனசுக்குள் ஒரு ஆர்விஎஸ் பேசினான்.
ஸ்மால் பஸ் இன்னும் பிதுங்கி வழிந்துகொண்டிருந்தது.
“க்ரீம்ஸ் ரோடு போகுமா?”
காதில் ஏதோ ரகசியம் போல கிசுகிசுத்தான். பெண்மை கலந்த குரல்.
“இது போகாதுப்பா. ஆசர் கானா... கிண்டி இறங்கிக்கோ... அங்கே கேட்டுப் போய்க்கோ....”
என் பேச்சைத் தொடர்ந்தேன்.
“இன்னிக்கி ரொம்ப கூட்டமில்ல....” நெளிந்தான் பையன்.
“ம்..”
ஆதம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷன் கடந்தபோது சாலையில் நெரிசல் இல்லை.
“இனிமே கூட்டமிருக்காதில்ல....” வெகுளித்தனமான கேள்வி.
“வாழ்க்கையில எப்போ சுகம் வரும் எப்போ துக்கப்படுவோம்னு தெரியாத மாதிரி சென்னையில எப்போ எங்கே கூட்டமிருக்கும்னு தெரியாது... “
கூட வந்த நண்பர் சிரித்தார்.
“எது சொந்த ஊரு?” அவர் கேட்டார்.
“தஞ்சாவூர்”
பையனின் பதிலில் திரும்ப ஒரு முறை அவனை ஊடுருவிப் பார்த்தேன். காவேரி ஜில்லா. நம்ம பேட்டை. இனம்புரியாத ஒரு பாசம். தூரத்தில் கம்பியை எக்கிப் பிடித்திருந்த பிடியைத் தளர்த்தி பாக்கெட்டிலிருந்து சிணுங்கிய ஃபோனை சமாதானப்படுத்தினேன்.
அமர்ந்திருந்த நண்பர்... “யேய்.. நானும் தஞ்சாவூர்தான்...”. அவர் எனக்குப் புதிதாக அறிமுகமானவர். அவரையும் ஒரு முறை உற்று நோக்கினேன்.
“நீங்க எந்த ஊரு சார்?” அவர் விசாரித்தார்.
“தஞ்சாவூரு பக்கத்துல...” என்று ராஜா பாடலுக்கு நடுவில் இசையணைத்தையும் நிறுத்தி அமைதி காப்பதுபோல மூன்று விநாடிகள் இடைவெளி விட்டேன்.
இருவரும் ”நான் எந்த ஊரோ?” என்று அறியும் ஆவலில் கிளைமாக்ஸ் கேட்க காத்திருந்தனர்.
“மன்னார்குடி”
இருவருக்கும் அத்தனை மகிழ்ச்சி. அப்புறம் நண்பர் பூண்டியில் படித்தேன் என்றார். அந்தப் பையன் அஞ்சலையம்மாள் மகாலிங்கத்தில் இஞ்சினியரிங் படிப்பதாகவும் இங்கே இண்டெர்னுக்கு வந்திருப்பதாகவும் கதை தொடர்ந்தது.
“சார்.. அச்சச்சோ சட்டையைப் பாருங்க..” பதறினார் நண்பர்.
எக்கிப் பிடித்திருந்த கையை செல்ஃபோன் சிணுங்கியபோது பாக்கெட்டில் விட்டதில் உஜாலா விளம்பரத்துக்கு தயாரான வெள்ளைச் சட்டையில் ஓர் அழுக்கு.
“மெட்ரோவுல தண்ணி கிடைக்கும். நான் துடைச்சு விடறேன்...”
அந்தப் பையன் “சார்.. என் பாக்கெட்ல கர்சீப் இருக்கு.. துடைச்சுக்கோங்க... இன்னிக்கி எதாவது மீட்டிங் இருக்கப்போவுது..”
“தம்பி.. நெஜமாவே இன்னிக்கி மீட்டிங் இருக்கு. வெள்ளைச் சட்டை நல்லாயிருக்குமேன்னு....”
இருவரும் மிகவும் வருத்தப்பட்டார்கள். உதவுவதற்கு போட்டி போட்டார்கள். காலத்தின் கோலமாக பேருந்தின் ஒரு மூலையில் நசுங்கிக் கிடந்தாலும் காவிரிக்கரை மைந்தர்கள் என்றதில் ஒரு அன்புப் பிணைப்பு உருவானது வாஸ்தவம்தான்.
பேசிக்கொண்டிருந்தோம். பெயர் கேட்கும் வைபம் நடந்தது. எல்லோரும் பெயர் சொல்லிக்கொண்டோம். என் பெயரைச் சொன்னேன். அந்தப் பையன் நிறுத்தி நிதானமாகச் சொன்னான்.
“என் பெயர் வெங்கடசுப்பிரமணியன்”
அடிக்குறிப்பு: எழுத்தாளர் ஆதவனின் ஆகச் சிறந்த படைப்பு “என் பெயர் ராமசேஷன்”. மிகவும் அற்புதமாக மத்யமர் வகுப்பு பையன் ராமசேஷனின் அபிலாஷைகளைப் படம் பிடித்த அதியற்புதமான நாவல் எ.பெ.ரா. நண்பர்களுக்கு என்னுடைய பிரத்யேக சிபாரிசு.

ஓடும் பேருந்தில் ஏறாதே!

தொழில்முறை நூறு மீட்டர் ஓட்டக்காரன் போல ஓடி வந்து ஏறினான் அந்தப் பையன். கல்லூரிப் படிக்கவேண்டிய வயசு. ஒரு காதில் பட்டன். தலையை அழிச்சாட்டியமாகக் கலைத்துப் போட்டிருக்கிறான். பாண்ட் பாக்கெட்டிலிருந்து இரு செவிக்கும் ஒயர் ஓடி அவனை ஒலிகொடுத்து உயிர்த்திருக்கச் செய்திருந்தது.
“இம்மா நேரம் நின்னுக்கிட்டிருந்தேன். வண்டியை எடுக்கும் போது பொசுக்குன்னு வந்து ஏற்ரியே” சுள்ளென்று ஆரம்பித்தார் எம்டிசி பஸ் ஓட்டுனர். அத்துமீறி ஏறிய பையனை அறைந்து சாத்துவது போல அடுத்த கியரை அடித்து மாற்றினார். சாயந்திரம்தான் வண்டி மாற்றியிருப்பார் என்பது அவரது அழியாத சந்தனக் கீற்றில் புரிந்து கொள்ள முடிந்தது.
”சாரிண்ணா..” என்று சொல்லிவிட்டு எனக்கு முன்னால் காலியாய் இருந்த சீட்டில் அமர்ந்து பின்னால் திரும்பிப் பார்த்தான்.
“ஒன் அம்மா அப்பால்லாம் திரும்பி வூட்டுக்கு வருவேன்னு நம்பிதானே வெளில அனுப்பறாங்க?” அவருக்கும் இன்னும் அடங்கவில்லை.
“சரிண்ணா. விடு...” என்று சட்டென்று சொன்னான் அந்தப் பையன். கொஞ்சம் எரிச்சலடைந்திருந்தான்.
“என்ன விடு... என்ன விடுங்கறேன்... அடிபட்டு போய்ட்டன்னு வையி... அப்ப விடுன்னு சொல்ல முடியுமா? ம்.. உன்னால சொல்ல முடியுமா? சொல்லு...” அவருக்கு ஏகத்தும் ரேங்கிவிட்டது.
“அதான் சாவலயில்ல.. உன்னாண்ட பேசிக்கிட்டுதானே இருக்கேன்.. ச்சும்மா போவியா...” பையன் பேச்சில் வால்யூம் ஏற்றினான்.
இந்த சந்தர்ப்பத்தில் பஞ்சாயத்து பண்ண யாராவது உள்ளே வர வேண்டுமே என்று காத்திருந்தேன். அறுபது வயசில் குடும்ப பாரம் தாங்கும் பெரியவர் ஒருவர் கியர் பாக்ஸுக்கு தள்ளி கம்பிக்கு ஒரு கையும் கைப்பையுக்கு ஒரு கையுமாக தள்ளாடிக்கொண்டே உள்ளே நுழைந்தார்.
“ஏம்ப்பா... உன் நல்லத்துக்கு தானே சொல்றாரு... இப்படி துடுக்கா பேசிறியே”
இப்போது ட்ரைவருக்கு இன்னும் ஏறிக்கொண்டது.
“இதெல்லாம் திருந்தாதுப்பா... எங்கினியாவது வீலுக்குள்ளாற போயிடும்.. வாயைக் கட்டி வயித்தைக் கட்டி துட்டு போட்டு அப்பன் ஆயி படிக்க வச்சதெல்லாம் வீணாப் போயி.. அவனுங்களும் ரோட்டுக்கு வந்து.. இவனும் மேலப் போயிருவான்... அப்புறம்..”
ட்ரைவர் ஓய்வதாகத் தெரியவில்லை. சாலையின் பள்ளங்களும் பக்கத்து ஓட்டிகளின் அலறும் ஒலிப்பான்களும் அவருடைய உபதேசத்தை ஒழுங்காகக் கேட்க விடவில்லை. ட்ரைவரின் தீராக் கோபம் வண்டியின் விலுக்கென்று இழுவையிலும் நச்சென்று சடனாகக் குத்தும் ப்ரேக்கிலேயும் உணர்ந்துகொள்ள முடிந்தது. அவரிடம் வசவு வாங்கிக்கொண்டிருந்த பையன் பின்னாலிருந்து சம்மன் இல்லாமல் ஆஜரான பெருசை பார்வையாலேயே எரித்து பஸ்பமாக்கிவிடுவான் போலிருந்தது.
”இப்போ இவ்ளோ கோச்சிக்கிறியே.. கை கால் முறிஞ்சு வூட்ல காலை நீட்டி படுத்துக்கிட்டேன்னு வச்சுக்க.... அப்ப என்னாத்த பண்ணுவ? தோ இவரை முறைப்பியா.. இல்ல என்னை வந்து முறைப்பியா? ம்.. என்ன பண்ணுவே?”
இரு பெருசுகள் அணி சேர்ந்து தன்னை தாக்குவதை அறவே வெறுத்தான் அப்பையன். பின்னால் திரும்புவதும் முன்னால் பார்ப்பதுமாக பிராணாவஸ்தையில் நெளிந்தான். இதற்கு ஒரு முடிவு கட்டுவது போல விருட்டென்று எழுந்திருந்தான். பின்னால் நின்றிருந்த பெருசு அலர்ட் ஆகியது. முதுகு தொங்கு பையிலிருந்து முழங்கையளவு உருட்டுக் கட்டை எடுத்து ”உள்ளத்தை அள்ளித் தா” போல நடு மண்டையில் நச்சென்று போட்டுவிடுவானோ என்று மிரண்டது.
”மச்சான்... இங்கே ஒரே அலும்பா இருக்குடா... ரெண்டு பெருசு என்னை வச்சு செய்யறாய்ங்க...இதுக்கு ஒங்கடியே பரவாயில்ல போல்ருக்கு..” என்று சத்தமாக சொல்லிக்கொண்டே பின்னால் வேகமாக நகர்ந்தான்.
ட்ரைவர் அதற்குபின்னர் எதுவும் பேசவில்லை. கடமையில் கண்ணாயிருந்தார். படியில் நிற்பவர்களை “உள்ள வா.. உள்ள வா...” என்று பேச்சால் இழுத்துப் போட்டார். அவரது தோரணையே மாறிப்போனது. நிறுத்தத்துக்கு நிறுத்தம் பலர் ஏறினர், சிலர் இறங்கினர். வண்டியின் மொத்தக் கொள்ளளவு குறையாமல் வண்டி சென்றுகொண்டிருந்தது.
கிண்டி எஸ்டேட். வண்டி நிறுத்தப் போவதற்குள் முன் படிக்கட்டிலிருந்து இறங்க எத்தனித்தான் அந்த பையனும் அவனது நண்பனும்.
“ஏறுப்பா.. இதோ நிறுத்தப்போறேன்...” டிரைவர் ஆரம்பித்தார்.
படியில் பக்கத்தில் நின்றவன் காதில் சொல்லி இருவரும் ஹெஹ்ஹே என்று சிரித்துக்கொண்டார்கள்.
”தம்பி... உன் வயசுல எனக்கொரு மவன் இருந்தான். படு சுட்டி. இதுபோல வண்டி மாறி வண்டி ஏறியிறங்கி ஓடுற வண்டியில சாகசம் காட்டித் திரிஞ்சான். ஜீன்ஸ் பேண்டு கால்ல தடுக்கி ஒரு சனிக்கிழமை வீலுக்குப் போயிட்டான். கூழாப் போன பாடியை தூக்கிட்டுவந்து கொடுத்தாங்க.... இனிமே உன் இஷ்டம்..” என்று கருணாரசத்தோடு சோகம் பிழிய மினி ப்ரசங்கள் செய்தார் ட்ரைவர்.
அந்தப் பையனுக்கு ஏதோ குறுகுறுவென்று இருந்தது. தப்பு செய்கிறோமோ என்று அப்போதுதான் அவனுக்கு உரைத்தது. படிக்கட்டிலிருந்து சடசடவென்று ஏறி மேலே வந்தான். ட்ரைவர் பின்னால் வந்து நெருங்கி நின்று “நெசம்மாவே சாரிண்ணா... அவசரத்துல ஏறிட்டேன்.. இனிமே செய்ய மாட்டேன்.... நானும் எங்க வீட்டுக்கு ஒரே பையந்தான்....”
நடத்துநர் இருமுறை “கிளம்பலாம்” விசில் கொடுத்தும் நகராமல் இருவரும் பேசிக்கொண்டார்கள். வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு நிம்மதி. மெதுவாக கீழே இறங்கிச் சென்றான். ஓட்டுநர் கண்ணில் தூசி விழுந்துவிட்டது போல. புறங்கையால் கண்களைத் துடைத்துக்கொண்டு வண்டியைக் கிளப்பினார்.
இவருக்கு திட்டவேண்டும் என்றும் அவனுக்கு எகிறவேண்டும் என்றோ மனதில் கிடையாது. அந்த சூழ்நிலைக்கு இருவரும் காரசாரமாகப் பேசிக்கொண்டார்கள். வயதில் பெரிய ட்ரைவரினால் அந்தப் பையனுக்கு இரண்டு நிமிடத்தில் புத்தி புகட்டி திருத்த முடிந்தது. இனிமேல் ஜென்மத்துக்கும் அந்தப் பையன் ஓடிப்போய் பஸ் ஏற மாட்டான். நிச்சயம்.

அன்பு கண்டக்டரும் அருமையான ஆட்டோகாரரும்..

மணி இரவு பத்தேகால். அம்பத்தூர் தொ.பேயிலிருந்து அலுத்துச் சலித்து வேளச்சேரி புகுந்த வண்டியிலிருந்து இறங்கி எங்கள் பேட்டைக்கு அடுத்த பஸ் பிடிக்க சிக்னல் தாண்டி ஓடினேன். அந்தப் பக்கம் ஷேர் ஆட்டோக்களின் சாம்ராஜ்யம். அரசுப் பேருந்துகள் அத்தனை மணிக்குப் பிறகு குறைவுதான்.
"மடிப்பாக்.மடிப்பாக்..." என்று மைசூர்பாக் போல குரலெழுப்பிய ஆட்டோவுக்குள் நூறு சதம் நிரம்பியிருந்தது. கடைசியாக வந்த ஒரு மேடத்துக்காக "நீங்க முன்னாடி வாங்கன்னு" ஒரு தேசலான பையனை தனது மடியில் குழந்தையில் போல உட்காரவைத்துக்கொண்டு அந்த அம்மணிக்கும் இடம் கொடுத்து ஆட்கொண்டார் ஆட்டோக்கார். "இடமில்லையா" என்ற ஏக்கத்துடன் பார்த்த என்னைக் கண்டால் இரக்கம் வந்துத்தொலைக்குமென்று பாராமுகமாக வண்டியை எடுத்துவிட்டார். சரி. இடமில்லை. ஒதுங்கினேன். வயிறு "பாவி! சீக்கிரம் எதாவது கொடுடா?" என்று தீவிர போராட்டம் நடத்திக்கொண்டிருந்தது.
அடுத்த "மடிப்பாக்.. மடிப்பாக்..." சத்தம் பின்னால் கேட்டது. இன்னொருவர் தனது பரந்த ஆட்டோவை ஷ்டார்ட் செய்து கிளம்பத் தயாரானார். ஷேர் ஆட்டோவின் பின் வரிசைக் கொலுப்படி சிக்கல்கள் எனக்கு அத்துப்படியானதால் அவரோடு பல்லிப் போல ஒட்டிக்கொண்டு முன்னால் அமர்ந்தேன். ஆக்ஸ் அல்லது அது போல மேனிக்கு செயற்கை சுகந்தமூட்டும் வஸ்து தெளித்துக்கொண்டு கமகமக்கும் மைனர்வாசனையோடு இருந்தார். இரவு பத்து மணிக்கு எனர்ஜி ததும்பியது.
இரண்டுமுறை சம்பந்தி உபசாரமாக வீதியில் இறங்கி அழைத்தார். சிலர் விரோதமாகத் திரும்பிக்கொண்டார்கள். சிலர் தூரத்திற்கு பார்வையைத் துரத்தி வராத பஸ்ஸுக்கு வாக்கப்பட காத்திருந்தார்கள். இரண்டு மூன்று நிமிடங்கள் கடந்திருக்கும்.
"சார்... எறங்குங்க...." என்றார் பரபரப்பாக.
"ஏன்?"
கையைப் பிடித்து கீழே இறக்கிவிடும் தோரணையில் "பின்னாடி நம்ம ஏரியா பஸ்ஸு வந்திருக்கு. இறங்குங்க..." என்றார்.
தனது சவாரியை இறக்கிவிடும் ஆட்டோகாரரா? மெய்மறந்து அந்த தியாகியையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
"சார்.,...போங்க.. சீக்கிரம்.. பொன்னியம்மன் கோயில்தானே கேட்டீங்க... பத்து நிமிசத்துல போயிரலாம்.. எனக்கு இனிமே சவாரி ஏற கால் அவருக்கு மேலே ஆவும். அதுக்குள்ளே நீங்க வீட்டுக்கே போயிடுவீங்க... ம்.. இறங்குங்க..."
இறங்கி ஓடிப்போய் பஸ்ஸில் தொற்றிக்கொண்டேன். கீழ்க்கட்டளை தாண்டி தாம்பரம் செல்லும் பேருந்து. புதுசாக பளபளவென்று இருந்தது. அழுதுவடியாத பளிச் விளக்குகள். காலுக்கடியில் நறநறவென்று குப்பையில்லை. வேளச்சேரி பாலம் ஏறும்போது அந்த ஆட்டோ தியாகசீலர் கண்ணுக்குள் வந்தார். இரண்டு நாட்களுக்குள் நான் பார்க்கும் இன்னொரு அன்பொழுகும் ஆட்டோ!
உள்ளே பஸ் கண்டக்டர் வாலிப வயசு.
"பொன்னியம்மன் கோயில் ஓண்ணு"
சில்லறை தா என்றெல்லாம் அடாவடி செய்யவில்லை. சாவுகிராக்கி போன்ற வசவுகள் இல்லை. பயணச்சீட்டுக்காக கைகள் நீட்டும் பத்து ரூபாய்த் தாள்களுக்கு மிச்சமாக ஒரு ரூபாய் நாணயங்களை கையில் பொத்தி வைத்திருந்தார். டிக்கெட்டும் சில்லறையும் சேர்த்துச் சேர்த்து வாரிவிட்டார். நல்ல துடிப்பான இளைஞர்.
அவர் முன்னால் நகர அந்த நடத்துனர் இருக்கையில் சங்கோஜத்துடன் அமர்ந்தேன். ஓட்டுனர் இருக்கைக்கு அருகிலிருந்து ஆரம்பித்து நின்று உட்கார்ந்து வளைந்து ஒடிந்து இருப்பவர்களுக்கெல்லாம் மின்னல் வேகத்தில் ப.சீட்டு வழங்கிவிட்டு பின்னுக்கு பறந்து வந்தார். எனக்கு நாற்காலி ஆசை என்றைக்கும் கிடையாது. அவர் அருகில் வந்ததும் எழுந்திருக்க எத்தனித்தேன். எனது தோளைப் பிடித்து அழுத்தி....
“உக்காருங்க சார்.. பரவாயில்லை...” என்று சிரித்தார் மாணிக்கமாய்.
ஒவ்வொரு நிறுத்தத்திற்கும் வெளியே பார்த்து விசில் அடித்து டிக்கெட் கொடுத்து பரபரவென்று இயங்கிக்கொண்டிருந்தார். என்னுடைய நிறுத்தம் வந்தது. எழுந்தேன். பின் படிக்கட்டருகில் ரஜினி போல காந்தமாய் நின்றிருந்தார். அவரது தோளைச்சுற்றிக் கையைப் போட்டு “Thank you my dear" என்றேன். காதோடு காதாக. உடனே குபீரென்று வாய்கொள்ளாச் சிரிப்பு. வேறெதுவும் வாய்வார்த்தையாகச் சொல்லவில்லை.
இறங்கி வீட்டுக்கு நடக்கும் போது ஞாபகம் வந்தது. இரண்டு நாட்களுக்கு முன் இதே “Thank you my dear"யை என்னிடம் ஒரு பார்வையற்றக் கிழவர் ஸ்மால் பஸ்ஸில் இடம் கொடுத்தபோது நா தழதழக்கச் சொன்னார். அதுவே மறுபடியும் என்னிடமிருந்து இயல்பாய்க் கிளம்பியிருக்கிறது.
சவாரியென்றும் பாராமல் பஸ்ஸேற்றி விட்ட ஷேர் ஆட்டோகாரர், தான் ஓய்ந்து போனாலும் அலைந்து திரிந்து வந்த ஒருவனுக்கு இடமளித்த இந்த பஸ் கண்டக்டர் என்று அனைவருக்கும் பிரதானமாக அடி நெஞ்சில் அன்பு ஊற்று இருக்கிறது. விரும்பாத சூழ்நிலைகள் சில நெருக்கித் தள்ள வெறுப்படைகிறார்கள். சூழ்நிலைக் கைதிகளாய்ச் சில சமயங்களில் சுள்ளென்று எரிந்து விழுகிறார்கள். உலகமே மாயையாய்த் தெரியும் போது விரக்தியில் உள்ளம் மரத்து விடுகிறது. நீ யார் அவன் யார் என்றெல்லாம் பேதமில்லாமல் வெறுக்கத்தோன்றுகிறது. மற்றபடி இது.............
அன்பு சூழ் உலகு!

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails