Thursday, April 29, 2010

காதல் விளையாட்டு


ஒரு நாலைந்து நாட்களாக பெங்களூரு வாசம். நல்ல வெய்யில். நல்ல ட்ராபிக். நல்ல சாப்பாடு. இன்னும் பல நல்ல நல்ல....  என்னதான் தலை போகிற காரியமாக இருப்பினும் நம் இலக்கிய எழுத்துப்பணியை விடக்கூடாது என்பதற்காக இந்த பதிவு. தீவிரமான வேலைப்பளு இருந்தாலும் சாப்பிட கொள்ள வெளியே சென்று வந்தபோது கண் நிறைத்த ஒரே நேரத்தில் இரு காதல் சம்பவங்கள்...

முதல் ஜோடி
சென்ற வாரத்தில் ஓர் நாள் இரவு பெங்களூரு குவீன்ஸ் ரோடு சந்திப்பில் இருந்த "மஸ்த் கலந்தர்" என்ற ரெஸ்டாரென்டுக்கு உணவருந்த சென்றிருந்தோம். நாங்கள் உட்கார்ந்திருந்த மேஜைக்கு முன்னால் என் கண்ணெதிரே ஒரு ஜோடி. இருவருமே ஜீன்ஸ் டீ ஷர்ட் அணிந்திருந்தார்கள். பேச்சில் மென்பொருள் வாசம். ஏதோ ஒரு எக்ஸ்.ஒய்.இசட் சாப்ட்வேர் 'கம்பனி'யாக இருக்க வேண்டும். அந்த பெண் 'பட்டர் நான்' சாப்பிட்டுக் கொண்டிருந்தாள், அவள் சாப்பிடும் அழகை அந்தப் பையன் பார்த்து ரசித்தும் ருசித்துக் கொண்டும் இருந்தான். சாப்பிடும் போது ஒரு வாய்க்கும் மறு வாய்க்கும் இடையிடையே பக்கத்தில் பார்த்து வாயை இப்படியும் அப்படியும் சுழித்தும் சிரித்தும் பேசிக்கொண்டிருந்தாள். பதிலுக்கு அந்த ஆண் சிநேகிதன் அந்த பெண் சிநேகிதியிடம் காதருகே ஏதேதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தார். கேட்கக்கூடாத பேசக்கூடாத ஏதோ 'கெட்ட காரிய' ஜோக் எதையோ பரஸ்பரம் பரிமாறியிருக்கக்கூடும். சிரிப்பு மேலும் அதிகமாகியது. கிளம்பும் வரை அந்தப் பெண் சாப்பிடும் போது கூட தோளில் கைபோட்டு மேனியில் கண் போட்டு தன் கூரிய மூக்கால் அப்பெண்ணின் கழுத்தருகே  வாசனை பிடித்துக் கொண்டே இருந்தார் அந்த முறுக்கேறிய வாலிபர்.

இரண்டாவது ஜோடி
வலது கோடி மூலையில் ஒரு மேஜையை ஆக்கிரமித்துக் கொண்டனர். இந்த முறை ஓரிரு நாள் தாடி மீசையுடன் ஒரு யுவனும், குட்டை பாவாடை அணிந்த ஒரு யுவதியும். அந்தப் பெண்ணிற்கு கையில் அரிப்பு ஏற்ப்பட்டிருக்க கூடும். அந்தப் பையனின் முகத்தில் கையை வைத்து அடிக்கடி உரசிப் பார்த்துக்கொண்டிருந்தார். போன ஜோடி போலல்லாமல் இதில் பையன் கொஞ்சம் கூச்ச சுபாவத்துடன் நாணி கோணி அமர்ந்திருந்தான். அப்படியும் அந்தப் பெண் விடுவதாக இல்லை. தன்னுடைய உள்ளங்கையையும் புறங்கையையும் மாற்றி மாற்றி தன் பாய் பிரண்ட்டின்  ஒவ்வொரு கன்னத்திலும் வைத்து ஜுரம் அடிக்கிறதா என்பது போல் பார்த்துக் கொண்டிருந்தது. காதல் ஜுரம் கண்டு பிடிக்க முயற்சி செய்தது என்று நினைக்கிறேன். இந்த கூத்தை காண சகிக்காத அந்த சர்வர் மிக சீக்கிரமாக அந்த புலாவை கொண்டு வந்து பரிமாறினார். சாப்பிடும் போது தன்னுடைய தேக்கரண்டியால் கொஞ்சம் கொஞ்சமாக பிள்ளைக்கு சோறுட்டும் அம்மா போல புலாவை ஊட்டிவிட்டுக் கொண்டிருந்தது அந்த கு.பா.

இந்த இரு காதல் விளையாட்டுக்களை கண்டு களித்துக் கொண்டு இரவு உணவை சாப்பிட்டு முடிக்கும் போது பத்து மணிக்கு மேல் ஆகிவிட்டிருந்தது. நினைத்துப் பார்க்கையில் காதலர்க்கும் இரவிற்கும் உள்ள நிலையான பந்தம் புரிந்தது. என்ன சரிதானே?

Tuesday, April 27, 2010

ஸ்மைல் ப்ளீஸ்

இந்தப் பதிவு முழுக்க முழுக்க ஒரு புகைப்படக் கருவியின் விளம்பரமேயன்றி நீங்கள் நினைப்பதுபோல் வேறொன்றுமில்லை.
நிக்கான் கேமராவின் புதிய விளம்பரம் ஒன்றைத்தான் கீழே பார்க்கிறீர்கள். இந்த இரண்டு நண்பிகள் தங்கள் வேனிற்கால விடுமுறையை இவ்வாறு இரண்டே ஆடைகள் கொண்டு உல்லாசமாக கழிக்கிறார்கள். அதை ஒரு நண்பிதான் புகைப்படம் எடுக்கிறார் என்று நம்பப்படுகிறது. 

இந்த விளம்பரத்தில் உள்ள  மாடல் கேமரா பன்னிரண்டு முகங்கள் வரை தானாகவே கண்டுகொள்ளும் என்று விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள்.  ஒரு ராவணனும் கூட இரண்டு பேரும் அடங்கும். உங்களுக்கு இந்தப் படத்தில் எவ்வளவு முகம்  தெரிகிறது என்று பின்னூட்டமிட்டு தெரிவியுங்கள். 

கீழே இருக்கும் படத்தில் தயவு செய்து கட்டமிட்டு காண்பித்திருக்கும் பகுதிகளை மட்டும் பார்க்குமாறு கண்டிப்பாக அறிவுறுத்தப்படுகிறார்கள். வேறெங்கும் உங்கள் கண்கள் மேய்ந்தால் அதற்க்கு இந்த பதிப்பாளரும் பதிவும் பொறுப்பல்ல...

படத்தின் மேல் சொடுக்கி 'முழு'வதையும் காண்க...


நீ ஏன் இறந்து போனாய்?

தனது தாயிற்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய ஜோவிற்கு ஒரே ஆச்சர்யம். பக்கத்தில் இருக்கும் மற்றொரு கல்லறை அருகில் அமர்ந்து ஒருவன் நீண்ட நேரமாக, "நீ ஏன் இறந்து போனாய்?" என்று நொடிக்கொருதரம் கேட்டுக்கொண்டு இருந்தான்.  இவ்வளவு அன்புபும் பாசமும் கொண்டு இருப்பவனுக்கு இப்படி ஒரு சோகம் நிகழ்ந்து விட்டதே என்று பாவப்பட்டு, தன்னிடம் இந்த துக்க செய்தியை அவன் பகிர்ந்து கொண்டால் அவனுடைய சோகம் கொஞ்சம் குறையும் என்று எண்ணி, ஜோ அவனிடம்  "ஏம்பா இவ்வளவு சோகமா ரொம்ப வருத்தப்பட்டு அழுது கொண்டிருக்கிறாயே , இறந்து போனது யார்?" என்று கேட்டான்.

அதற்க்கு அழுதவன் அளித்த பதில்
"இல்லை, இது என் மனைவியின் முதல் புருஷனின் கல்லறை"

Wednesday, April 21, 2010

பார்வை ஒன்றே போதுமே - 3. மாதவி

மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்.மானும் மீனும் கொண்ட கண்கள் இரண்டும் பேசும் புகைப்படங்கள் கீழே. தில்லு முல்லு, டிக் டிக் டிக்... மற்றும் ராஜ'பார்வை'யிலிருந்து மாதவியின் மயக்கும் கண்கள்.

Photobucket

Photobucket

Photobucket

Photobucket
Photobucket
Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Tuesday, April 20, 2010

செல்லமே 'செல்'லம்!

நல்ல அழகு. நல்ல கலர். பார்த்தால் நிச்சயம் திரும்பி பார்க்கத் தூண்டும் தோற்றம். நேற்றுதான் லக்மேயில் பேஃசியல், பெடிகியூர், மேனிகியூர், ஐ ப்ரோ எல்லாம் முடிந்திருக்க வேண்டும். அப்படியொன்றும் பெரிய சர்வ அலங்கார பூஷினியாக இல்லை. வெள்ளை கலர் நிகே டீ-ஷர்ட், கருப்பு நிற ஜீன்ஸ் அவ்வளவுதான். சற்றைக்கொருதரம் என்னைப் பார்த்து அழகாக சிரித்தது அந்த நிலவு. நாமோ ஒரு குடும்பஸ்தன். எப்போது பார்த்தாலும் நம்மை பார்த்து சிரித்தால் என்ன செய்வது என்று ஒரே கலக்கம். மிகவும் வெட்கத்துடனும்(?), கூச்சத்துடனும் "அம்மாடி, எனக்கு கல்யாணம் ஆகி புள்ள குட்டி எல்லாம் இருக்கு. ஒரு பத்து பதினஞ்சு வருஷத்துக்கு முன்னாலன்னா ஒ.கே" அப்படீன்னு சொல்லலாம்னு பார்த்தா, சங்கீத சானல்களில் வரும் 'தமிள்' பேசும் மங்கையர் போல் காதை மறைக்கும் கார்குழலை ஒதுக்கும்போது அந்த "நீலப் பல்" (Blue Tooth) அந்தப் பெண்ணின் பெரிய வளையம் மாட்டிய  காதை  நிறைத்திருந்தது. அந்தக் காது வளையத்திற்குள் ரோடில் வித்தை காண்பிக்கும் பெண் நுழைந்து வரலாம். அவ்வளவு பெருசு அந்த வளையம்.
போன வாரத்தில் ஒரு நாள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காலை ஐந்து நாற்பத்தைந்துக்கு  நடந்த சம்பவம் இது.

மேற்கண்ட சம்பவம் போல், இரு சக்கர வாகனத்தில் தனக்கு தானே பேசிக்கொண்டு போவது, பேருந்திலோ, மின்சார ரயிலிலோ ஏதோ ஒரு மூலையை பார்த்து பேசிக்கொண்டோ, சிரித்துக்கொண்டோ இருப்பது, பக்கத்தில் இருக்கும் சுற்றத்தையும், நட்பையும் மறந்து கட்டை விரலால் அமுத்து அமுத்து என்று அழுத்தி (அதற்க்கு வாயிருந்தால் அழும்) மெசேஜ் அனுப்புவதையும்,இன்ன பிற மொபைல் சேஷ்டைகளை அன்றாடம் நாம் கண்டு களித்து வருகிறோம். இந்த கைபேசி பற்றிய சில  சுவாரஸ்யமான  செய்திகள் கீழே வரைபடமாக..... 
 

Cell Phone Features
Via: Cell Phones

விடாதே, பிடி, துரத்து ......



இணைய மேய்தலில் கிடைத்த ஒரு குறும்படம் இது.  நிஜமா அல்லது போலியா என்பது உங்கள் விருப்பத் தேர்வு. இந்த கார் போல் ஓடிய என் கற்பனைக் குதிரை கொடுத்த கதை இது.

ஆண்ட்ரியாவின் டாடிக்கு இது சுத்தமாக பிடிக்கவில்லை. என்னுடைய பனை மட்டை முற தொப்பியும், எங்கு பார்த்தாலும் கன்னா பின்னா என்று பட்டன் வைத்த சட்டையும், ஒரு அழுக்கு நீல  ஜீன்ஸ் பேண்டுமான  கௌபாய் ஸ்டைல் வாழ்க்கை எனக்கே சில சமயம் பிடிக்காத போது, தன்னுடைய இரண்டாவது தொடுப்பின் செல்லக் கிளியை  இதுபோன்ற ஒருவன் கொத்திக்கொண்டு போக எந்த அப்பன் சம்மதிப்பான். காதலுக்கு கண்ணும் இல்லை கௌபாயும் இல்லை என்று அந்த மற்றும் எந்த ஆண்ட்ரியாவின் தகப்பனுக்கும் சர்வ நிச்சயமாக தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான்.


சரியாக பதினொன்று முப்பத்தைந்துக்கு அந்த அரசாங்க பத்திர பதிவாளர் கட்டிடத்துக்கு தன் அப்பனுடன் வந்த என் ஆள் சொத்துப் பத்திரம் கைஎழுத்தானதும் அதோடு பறந்து சென்று "கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிபோய்டலாம்" என்று முன்னமே திட்டம் தீட்டியிருந்தாள். அதை திறமையாக செய்து முடிக்கவேண்டியது என்னுடைய வேலை. "டேடிங்கில் எப்போதும் கோட்டை விடும் நீ இந்த வேலையையாவது  உருப்படியாக செய்" என்ற நக்கலும் நையாண்டியும் கலந்து பேசும்போது அந்த டேடிங்  வார்த்தையில் விழுந்தேவிட்டேன் நான்.  நீங்கள் மேலே பார்க்கும் ஆரம்ப காட்சியில் இருப்பது அந்த சார்பதிவாளர் கட்டிடம் தான். அவள் வெளிவந்தவுடன் நான் வெடித்த அந்த நாட்டு குண்டுதான் நீங்கள் பார்க்கும் அந்த  ஐஸ்லாந்து எரிமலை வெடிப்பட்டாசு காட்சி.

தனது இரண்டாவதின் மேல் ஒரு கண்ணும், இரண்டாவது பெற்றதின் மேல் இன்னொரு  கண்ணும் எப்போதும் வைத்திருக்கும் 'ஆண்ட்ரியா அப்பன்' போலீசுக்கும் தன் தனி கூலிப்  படைக்கும் சொல்லிவைத்திருந்தான் போலும். நான் நினைந்த அளவிற்கு அவளை கவர்ந்து வருவது அவ்வளவு சுலபமாக இல்லை. அவளை கைப்பிடித்து காரில்   உள்ளுக்கிழுத்தவுடனேயே ஹாலிவுட் பட ரேஞ்சிற்கு ஒரு கார் சேஸ் காட்சிக்கு என்னை இழுத்து வந்து விட்டான். திருடிய காரில் பெட்ரோல், மண்ணு, மட்டை இருக்கிறதா என்று தெரியவில்லை. நெஞ்சத்தை திருடியவளை அருகில் அமர்த்தி, மூன்று செகண்டில் ஐந்து கியர் மாற்றி ஒரே சீராக இழுத்ததில் இடது கைப் பக்கம் ஜன்னலோரத்தில் உட்கார்ந்திருந்த அந்த அமர்க்களமான அழகுப் பிசாசு என் மடியில் தஞ்சமடைந்தது.

முதல் சர்கிள் திரும்பியதும் சைரன் அலற வந்த போலீசுக்கு திருடன் விளையாட்டு காண்பித்து நூறுக்கு மாறி பார்க் உள்ளே காரின் மூஞ்சியை காண்பித்து அந்த ஒன்வேயில் நூற்று ஐம்பதை தொட்டபோது இன்னும் இரண்டு காவலர் திலகங்கள் போட்டியில் கலந்துகொண்டனர்.  மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருந்தபோது குறுக்கு மறுக்காக நான்கு இரவுச் சோதனை கார்களை நிறுத்தினாலும் பிய்த்துக்கொண்டு சென்றுவிட்டேன். இந்தியாவில் எப்போதும் இதுபோல் கார்கள் நின்றுகொண்டிருக்கும் என்று அந்த அவசரகதியில் சென்றுகொண்டிருந்தபோதும் என்னுடைய உலகப் பொது அறிவை மேம்படுத்திக்கொண்டிருந்தாள்  என் உயிரை எடுக்கப்போகும் காதலி.

மேம்பாலம் கடந்து செல்கையில் ஓரமாக காஃபி ஷாப்பில் டீ குடித்துக் கொண்டிருந்த இன்னும் ரெண்டு பெரிய சிறிய போலீஸ் ஆபீசர்கள் ஆட்டக் களத்தில் எங்களுடன் சேர்ந்து கொண்டார்கள். டீ குடித்துக் கொண்டிருந்த போலிசார்களுக்கு 'தண்ணி' காட்ட நான் ஆரம்பித்த போது இன்னும் நான்குபேர் இந்த காரோட்டத்தில் சேர்ந்து இருந்தார்கள். மேலே பறந்த அந்த  விமானத்தில் தன்னுடைய "பெரியம்மா" பறந்து கொண்டிருக்கிறாள் என்ற மேலதிக தகவலைச் சொல்லி என் பெரிய மாமியாரின் (ஆன்டிரியா அப்பாவின் முதல் தாரம்) பயணத் தகவலை அதிமுக்கியமாக அந்தநேரத்தில் என்னுடன் பகிர்ந்து கொண்டாள். எங்களை விரட்டி விரட்டி கடைசியாக அந்த விமான ஒடுகளத்தை தாண்டி போனபோது சுற்றி வளைத்து சாரை சாரையாக வந்த அத்துணை காரும் மோதி இந்த உலகத்தில் இருந்து எங்களுக்கு மோட்சம் அளித்து நாங்கள் மேலுலகம் சென்றபோது மோதிய இடத்தில் இருந்து காதல் சின்னம் புறப்பட்டது விண்ணில் இருந்து எங்களுக்கு தெரிந்தது.

உங்களுக்கும் தெரிந்ததா?

Sunday, April 18, 2010

4056830968

முன்குறிப்பு: இந்த ப்ளாக் எழுத ஆரம்பித்த நாளில் நான் எழுதிய ஒரு சிறுகதை. நிறைய பேர் வந்து போகாத காலத்தில் எழுதியதால் இந்த மீள்பதிவு.


"4056830968" என்ன நம்பர் இது. காலையில் இருந்து நூற்றி தொண்ணூற்று ஒன்றாவது முறையாக என்னுடைய இடது, வலது மூளைகளை கசக்கி பிழிந்து பயன்படுத்தி பார்க்கிறேன். கொஞ்சமும் விளங்கவில்லை. துண்டுச் சீட்டில் வரைந்து என்னிடம் விசிறிவிட்டு சென்றுவிட்டாள்.  சுடோகுக்குக்  கூட இவ்வளவு நான் பிரயத்தனப்பட்டதில்லை. இது மொபைல் நம்பரும் இல்லை. "மஞ்சள் பக்கங்களை" புரட்டி புரட்டிப் பார்த்து  கை சோர்ந்து போனது. ஓரிரண்டு மெத்த படித்த முதல் பெஞ்சு புத்திசாலிகளுக்கு SMS அனுப்பி கூட கேட்டாயிற்று. "என்னடா மாமா இது " என்று என்னிடமே திருப்பி போன் போட்டுக் கேட்டார்கள். விஷமக்காரன் ஒருவன் "எவடா மடங்கினா. கோடு வேர்ட்ல பேசறா" என்றான் சற்று புரிந்தது போல.
நான்கு மணிக்குக்  St.Joseph's ஸ்கூல் மணியடித்து பள்ளிச் சிறுவர், சிறுமியர் மகிழ்ச்சியாக வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். காலையில் கல்லூரி செல்லும்முன் குனிந்த தலையை 25 டிகிரி திருப்பி விழி சாய்த்து தாக்கிய ஷைலஜா விட்ட அம்புப் பார்வை இன்னமும் என்னை விடாமல் தாக்கிக்கொண்டிருந்தது. 'கடவுள் பார்த்த பக்தன் போலே கையும் காலும் ஓட வில்லை' என்று எனக்காகவே காலையில் பாடிய என் வீட்டு எஃப் எம்  என்னை பித்தம் கொள்ள வைத்தது.

பூமா தேவி அவளுடைய உயிர்த்தோழி.  சூரியன் காணாத சூரியகாந்திப் பூவாக நிலம் நோக்கிய அவளது பார்வை வேறுங்கும் படாது  பொதுவாக. அழகை ரசிக்கத் தெரியாத ஒரு ஆட்டோரிக்ஷா  அறிவிலி ஒருநாள் அவளிடம் "ஊட்ல சொல்லிட்டு வன்டியா' என்று வைத போது, "மலரிடம் இருந்து சொல்லிக்கொண்டா வாசனை புறப்படுகிறது?" என்று நினைத்துக்கொண்டேன். அன்றிரவு பி. ஜெயச்சந்திரன் எனக்காக முழு நிலாக் காயும் என் வீட்டு மொட்டை மாடியில் பாடிய "மல்லிகை நடந்தது மண்ணில் அதன் வாசனை மிதந்தது விண்ணில்" செவியை நனைத்து உள்ளத்தில் இனித்தது. நிலா சிரித்த அந்த இரவு விடியவே கூடாது என்று என் இஷ்ட தெய்வங்களை வேண்டிக்கொண்டேன்.  ஒரு கண நேரம் லேசர் போல பாய்ந்த அந்தப் பார்வை பட்டதில் என்  உடம்பு குளிர்ஜுரம் கண்டுவிட்டது.

அம்மாவிடம் பாட்டு கற்றுக்கொள்ள வரும் இவள் எப்போது புடவையை தூக்கி சொருகிக் கொண்டு சமையல் கற்றுக்கொள்ள மருமகளாக வருவாள் என்று தினம்தினம் மனம் ஏங்கியது. அவள் "தாயே யசோதா உந்தன் ஆயர் குல... " என்று பாடும் போது இந்த கண்ணனைப் பற்றி அவன் அம்மாவிடம் முறையிடுவது போலிருக்கும் எனக்கு. "குழலினிது யாழினிது என்பர் ஷைலஜா சொல் கேளாதோர்" என்று மனதிற்குள் அடிக்கடி சொல்லிக்கொண்டேன். அந்தப் பாடலை மட்டும் அவளை விட அழகாக சுதா ரகுநாதனால் கூட பாட முடியாது எனப்பட்டது  எனக்கு. அவளுடைய பேச்சும் பாட்டும் ஒன்றுபோல் இருந்தன. சங்கீதம் பேசினாள் அவள். ஞாயிற்றுக்கிழமைகளை  என்னோடு சேர்ந்து என் வீட்டு சுவர்களும்  வெறுக்க ஆரம்பித்தன. அன்று சங்கீத வகுப்புக்கு  விடுமுறை."ஷைலூ வாசல்ல நிக்காதே" என்ற அம்மாவின் குரலுக்கு உடனே கட்டுப்படும் வீட்டிற்கு அடங்கிய அடக்கமான பெண். எப்படி இந்த சீட்டை எழுதினாள்? என்று இடைவிடாது ஒரு கேள்வி என்னுள் கேட்டுக்கொண்டிருந்தது.

எப்போது வருவாள் என்று வழியெங்கும் விழிபரப்பி சென்ற இரண்டு பாரா ஞாபகங்களுடன் காத்திருந்தேன். தூரத்தில் தேர் அசைவது தெரிந்தது. நிச்சயம் அவள் தான். அவள் கணக்கில் பெண் புலி என்று கேள்வி. ஒரு அழகுச் சேனையை  தனியனாக எதிர்க்கும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவளிடம் நெருங்கிக் கேட்டேன் " எனக்கும் கணக்குக்கும் நூறு மைல். துண்டிச் சீட்டில் காலையில நீ  என்ன எழுதின?. அது என்ன நம்பர்?".
அந்தப் பேசா மடந்தையிடம் இருந்து பதிலுக்கு ஒரு SMS வந்தது ஆங்கிலத்தில் 
"Please type those nos in yr mob by creating new msg with T9 dictionary ON". 

பின் குறிப்பு.
நீங்களும் உங்கள் மொபைலில் அந்த நம்பர்களை அடித்துப் பார்த்து இந்தக் கதை நாயகன் கண்ணனுக்கு முன் தெரிந்து கொள்ளுங்களேன் ஷைலஜாவின் எண்ணத்தை.

Monday, April 12, 2010

ஜனசமுத்திரம்

ஞாயிற்றுகிழமை குடும்ப சகிதமாக மெரீனா பீச், ஷாப்பிங் என்று  சுற்றிவிட்டு இராச்சாப்பாடு மயிலை சரவணபவனில் என்ற திட்டத்தோடு கிளம்பினோம். விடுமுறை என்பதால் ட்ராபிக் அவ்வளவாக இல்லாவிட்டாலும் நமது ஆட்டோ தோழர்கள் தங்களது வித்தைகளை ஆட்கள் குறைந்த சென்னை வீதிகளில் காண்பித்துக்கொண்டிருந்தார்கள். ஒரு ஐகானுடன் சோழாவரம் ரேஸ் கணக்காகவும், திரைப்படங்களில் ஹீரோயினை கடத்திக் கொண்டுபோகும் வில்லனை வளைத்துப் பிடிக்க துரத்தும் ஹீரோ போன்றும் விடாமல் துரத்தி, முந்தும்போது ஐகானுக்கு இரண்டு மூன்று விழுப்புண்களை ஏற்படுத்தினார். தன் வண்டியில் கோடு போட்ட  ஆட்டோவுக்கு குறுக்காக நிறுத்தி இறங்கிய ஐகான் முதலாளி என்ன செய்யப்போகிறார் என்ற கிளைமாக்ஸ் சீனை பார்க்க விடாமல் என் குடும்பம் "என்ன வேடிக்கை? நீங்க போங்க டைம் ஆவுது" என்று விரட்ட நான் என் வண்டியை விரட்டினேன்.






marina beach



பீச்சாங்கரை செல்லலாம் என்றால் கரையில் மக்கள் கடலும், சாலையில் வாகனங்கள் கடலும் அலைமோதியது. சில இடங்களில் காரை விட டூ வீலர் நல்லது, இன்னும் சில இடங்களில் டூ வீலரை விட சைக்கிள் நல்லது, எல்லா இடங்களுக்கும் "நடை ராஜா" நல்லது. கரை ஓரமாகவே காரை உருட்டிக்கொண்டு சென்றதிலேயே சமுத்திரராஜனை கன்னத்தில் போட்டுக்கொண்டார்கள் என் கண்மணிகள். டி.ஏ.வியில் எல்.கே.ஜி சீட்டுக்கு அப்ளிகேஷன் வாங்க நிற்கும் கூட்டம் போலவும், அன்னிய தேசம் அமெரிக்கா செல்ல 'விசா' எடுக்க கவுன்சலேட் வாசலில் நிற்கும் கண்ணிமானவர்கள் போலவும், முதல் நாள் இரவே நம் நண்பர்கள் அல்லது உறவுகள் யாரையாவது அனுப்பி கர்சீப் போட்டோ, துண்டு போட்டோ நின்றால் தான் கார் நிறுத்தம் கிடைக்கும் என்ற நிலைமை அங்கு நிலவியதால் "எங்கே நிறுத்துவது" என்ற யோசனையுடன் தலையை திருப்பி புஷ்பா தங்கதுரையின் 'ஞே' என்று முழித்துக்கொண்டிருக்கையில், எதிர்தார்ப்போல் ஏ.ஐ.ஆர் வாசலிலேயே சில பிரகஸ்பதிகள் வண்டியை விட்டு சென்றிருந்தனர். அதில் சில இன்னோவா, குவாலிஸ் போன்ற பெரியகுடும்ப கார்கள்.

இப்படி எல்லோரும் நடைவண்டி போல வண்டி ஒட்டிக்கொண்டு சென்றதால் கண்ணகி சிலையிலிருந்து சாந்தோம் மற்றும் அடையார் செல்ல வேண்டிய எல்லோரும் வலுக்கட்டாயமாக 'பீச்' பார்க்கவேண்டியதாயிற்று. அந்த இருட்டில் கடல்  அலை கூட தெரியவில்லை, ஒரே மனித தலைகளும், பெட்ரோமாக்ஸ் விளக்கோரம் இருக்கும் பஜ்ஜி கடைகளும்,தள்ளுவண்டி ஐஸ்கிரீம் கடைகளும், அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ளே நிறுத்திவைத்திருந்த கார்களும் தான் கண்ணுக்குப்பட்டன. ஏனைய காவலர்கள் போலல்லாமல் அதிசயமாக தேசலாக நின்ற ஒரு டிராபிக் கான்ஸ்டபிள் கையை ஆங்காரமாக மேலும் கீழும் ஆட்டி எல்லோரையும் வேகமாக போகச்சொல்லி சமிக்ஞை செய்துக்கொண்டிருந்தார். அவர் கை ஆட்டும் வேகம் கூட யாரும் செல்லாமல் அவரை படுத்திக்கொண்டிருந்தார்கள். பட்டம் விடலாம், ஐஸ்கிரீம் சாப்பிடலாம்,மணலில் விளையாடலாம் என்ற பல கனவுகளுடன் வந்த என் பெண்களுக்கு பெருத்த ஏமாற்றம்.

அந்த காவலரின் ஆங்கார கையாட்டுதலுக்கு கீழ்படிந்து வலது ஓரமாக சென்று பயணத் திட்டத்தின்படி அடுத்த இலக்கான சரவணபவன் நோக்கி வண்டியை செலுத்தினேன். மெரீனா தந்த ஏமாற்றம் சரவணபவன் தராது என்ற நம்பிக்கை அந்தக் கடை வாசலிலேயே பொய்த்துப்போனது. மாடவீதியில் பட்சணம் மொய்க்கும் ஈக்கள் போல சரவணபவனைச் சுற்றி ஒரே கூட்டம்.  இந்தப்பக்கம் அந்தப்பக்கம் போக முடியவில்லை. தேர்க்கூட்டம் திருவிழாக்கூட்டம் நின்றது. இங்கே அங்கே ஒரு ஐந்து டிகிரி கூட திரும்பவிடாமல் காரின் இரண்டு புறமும் சைக்கிளும் பாதசாரிகளும் நூல் பிடித்தாற்போல் சென்றுகொண்டிருந்தார்கள். இங்கேயும் கார் நிறுத்ததில் ஒரு சின்ன சைக்கிள் வைக்கக்கூட இடம் இல்லை. பெண்டாட்டி பிள்ளை குட்டிகளை இறக்கிவிட்டு விட்டு இரண்டு கார்களுக்கு பின்னே தேமேன்னு பத்து நிமிடங்கள் நின்றவுடன் ஏதோ இரண்டு புண்ணியவான்கள் சீக்கிரம் சாப்பிட்டு விட்டு "பா..." என்று ஏழுருக்கு ஏப்பம் கேட்க எழுந்ததால் என் காருக்கு இடம் கிடைத்தது.

காருக்கு இடம் கிடைத்த சந்தோஷத்தில் முதல் மாடி ஏறி ஏ.சிக்கு சென்றால் அங்கே ஒரு கல்யாணத்தின் காலை டிபன் அளவிற்கு கூட்டம் காத்திருந்தது. அங்கே வெள்ளையில் நின்ற மேற்பார்வையாளரிடம் பெயர் கொடுத்து வரிசையில் காத்திருந்தோம். சரவணபவன் ரூல்ஸ் தெரியாத ஒரு வயதான அம்மணி நேராக உள்ளே நுழைய, அவரைப் பிடித்து தள்ளாத குறையாக 'அன்பாக' சொல்லி வெளியேற்றினார் அந்த மே.பா. "ஜெயில்ல மணி அடிச்சா சோறு இங்கே சூப்பர்வைசர் கூப்பிட்டால் சோறு" என்று நான் அடித்த ஜோக்கை பசிக்கொடுமையில் இருந்த என் குடும்பமும் சுற்றி இருந்த கூட்டம்மும் துளிக்கூட ரசித்ததாக தெரியவில்லை. இருபது நிமிட இடைவேளைக்குப் பிறகு சூப்பர்வைசர் கூப்பிட்டு சாப்பிடப் பணித்தார். "அப்பிடைசர் டோமாடோ சூப் வேண்டுமா" என்று கேட்ட சர்வரிடம் "கால் கடுக்க நின்றதே அப்பிடைசர்தான்" என்று சொல்லி திருப்தியாக சாப்பிட்டு வெளியேறினோம். பசியோடு நின்று சாப்பிட்டாலும் உணவின் தரமும், போஜனத்திற்கு பிறகு பக்க விளைவுகள் எதுவும் இல்லாததாலும் கார் எப்போதும் சரவணபவன் நோக்கியே செல்கிறது.

Sunday, April 11, 2010

நம்ம வாத்தியார்

மிகவும் 'கஷ்டப்பட்டு' (பவர் கட், ஐ.பி.எல், ஆதர்ச ஹீரோவின்(அ)ஹீரோயினின்  புதுப்படம், உள்ளத்தை ஹிம்சை செய்யும் பக்கத்துவீட்டு பேரிளம் பெண், இத்யாதி இத்யாதிகள் இந்த 'கஷ்டப்பட்டு' வில் அடக்கம்) பலவருடங்கள் படித்து(வேறு வேறு வகுப்புகளில்!), பல்வகை  சிரமங்கள்( மார்க் கட்ஆப்க்கு (cut-off)  கம்மியாக வாங்கி அதற்காக அப்பாவிடம் சஹஸ்ரநாம அர்ச்சனை வாங்கி, கல்லூரி அப்பிளிகேஷேன் உரிய நேரத்தில் கொடுக்காமல், எண்ட்ரென்ஸ் சரியாக எழுதாமல் இதுபோன்ற  மேலும் பல 'மல்'கள் இந்த சிரமங்களில் அடங்கும்) அனுபவித்து  ஒரு கல்லூரியில் அங்கே இங்கே கதர் வேட்டி சட்டைகளிடம் "நம்ம பையன் கொஞ்சம் பார்த்து செய்யுங்க ஸார்" என்று சிபாரிசு வாங்கி சேர்ந்து, அந்தக் கல்லூரியின் முதல் நாளன்றே உங்கள் பேராசிரியர் "தம்பிகளா. உங்க எல்லோருக்கும் கூட கொறைச்சி மார்க் போட எனக்கு இஷ்டமில்லை. நீங்கெல்லாம் தங்கக் கம்பீங்க. அதனால நீ காலேஜுக்கு வந்தாலும் சரி இல்லைன்னா  'கட்' அடிச்சிட்டு உன் கேர்ள் பிரண்ட்டோட மெரீனா, காந்தி மண்டபம்ன்னு சுத்துனாலும் சரி நூத்துக்கு நூறு மார்க் தரேன். நீ லைப்ல ஜாலியா இரு. கொண்டாடு" அப்படின்னு  சொன்னா நீங்கள் என்ன செய்வீர்கள்?

"மாதா, பிதா, குரு, தெய்வம்ன்னு நம்ம முன்னோர்கள் சரியாத்தான் சொல்லியிருக்காங்கடா" என்று நண்பர்களிடம் ஒப்புக் கொள்வீர்கள். கல்லூரி வாசலில் "நம்ம வாத்தியார்" என ஆளுயர வினையல் பதாகை வைத்து அவரை கொண்டாடி மகிழ்வீர்கள் இல்லையா? கனடாவில் ஒரு பேராசிரியர் இயற்பியல் நான்காம் ஆண்டு (நம்ம ஊர்ல மொத்தமே மூனு வருஷம் தானே!) மாணவர்களுக்கு தன்னுடைய முதல் வகுப்பிலேயே எல்லோருக்கும் 'முதல் வகுப்பு' மதிப்பெண்கள் வழங்கி  மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சியும் நிர்வாகத்திற்கு நிஜ அதிர்ச்சியும் அளித்திருக்கிறார். அங்கெல்லாம் மார்க் நம்பர்ல இல்லை. A+ அப்படின்னு ஒரு கிரேடு வழங்கி சிறப்பித்திருக்கிறார். "முட்டை மார்க் வாங்கியிருக்கான்" என்று எந்த அப்பாவும் தன் பையனை அவமானப்படுத்த முடியாது. ஏதாவதொரு ஆங்கில எழுத்தை மதிப்பெண்ணாக வழங்கினால் நம்மூர்லயும் இந்த "வாத்து முட்டை" சமாச்சாரங்கள் ஒழியும்.  "இவுங்கெல்லாம் ஏம்ப்பா நம்ப ஊர்ல இல்லாம போய்ட்டாங்க" என்று நீங்கள் மனதிற்குள் கேட்பது எனக்கு காதில் கேட்கிறது.  
 
அந்தப் பேராசிரியர் பெயர் பேரா.ரன்குர்ட். ஒட்டாவா பல்கலைக்கழக நிர்வாகம் இப்போது அவரை தற்காலிக பணிஇடைநீக்கம் செய்திருக்கிறது. பேரா.ரன்குர்ட்டிடம் "ஏன் ஸார் இப்படி செஞ்சீங்க" என்று கேட்டதற்கு " மாணவர்களை வெறும் "செய்தி பரிமாற்றம் செய்யும் இயந்திரம்' ஆக உருவாக்குவதற்கு எனக்கு விருப்பமில்லை. படித்ததை வாந்தி எடுத்து மார்க் வாங்கி இவர்களால் எவருக்குமே பிரயோஜனம் இல்லை. எல்லோருமே விஞ்ஞானிகள் ஆவதற்கு தகுதியானவர்கள்."  என்று ஒரு அமர்களமான பதிலளித்துள்ளார்.  இதற்கிடையில் நம்மூர் போல அங்குள்ள பேராசிரியர் சங்கங்கள் போர்க்கொடி தூக்கி அறப்போராட்டம் அறிவித்துள்ளன. 'கல்வி சுதந்திரம்' பறிபோனதாக அலறுகின்றன. 

இந்த மார்க் விஷயத்தில் என் பள்ளி நாட்களில் நடைபெற்ற சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. ஏழாம் வகுப்பு படிக்கும்(?) போது என்னுடைய ரிப்போர்ட் கார்டில்  "Not Satisfied" என்று என் தகப்பனார் எழுதி கையொப்பமிட்டு விட்டார். என் தகப்பனாரின் 'அதிருப்தி' என் வகுப்பாசிரியரை மிகவும் ரணகளப்படுத்திவிட்டது.  'அதிருப்தி'யின் காரணம் என்னவென்று அறிய மிகவும் ஆவலாக இருந்தார். ஆகையால் "உங்க அப்பாவை அழைச்சுக்கிட்டு வா" என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவருடைய சந்தேகம் என்னவென்றால் என் தந்தையின் 'அதிருப்தி',  அவர் பாடம் நடத்தியதிலா அல்லது நான் வாங்கிய மதிப்பெண்களிலா என்பதுதான். மிகவும் தூணுக்கும் கம்புக்கும் ஓடியாடி அலைந்து ( have to run from pillar to post ) அப்பாவை பள்ளிக்கு அழைத்துவந்து நிலைமையை சரிக்கட்டினேன்.

இவ்வளவு நடந்த பிறகும் பேரா.ரன்குர்ட் (Prof. Rancourt) "நாம் மாணவர்களை ஒழுக்கமாக கீழ்ப்படிந்து நம்முடைய மூளையை பின்பற்ற சொல்லித் தருகிறோம்.  இந்த மதிப்பெண் மற்றும் கிரேடு  முறைகள் நமது கல்வி முறைகளை விஷப்படுத்தி மாணவக் கண்மணிகளை எதையும் முழுமையாக கற்றுக்கொள்ள தடையாகவும் இருக்கின்றன." என்கிறார். 

நம்ம வாத்தியார்  சொல்லறது சரிதானோ? அப்புறம் எப்படி 'கோல்ட் மெடல்', கேம்பஸ் இன்டெர்வியூ, பெரிய கம்பெனி வேலை போன்ற விஷயங்கள் எல்லாம்.

Friday, April 9, 2010

திருந்திய குடிகாரனும் பள்ளத்தில் விழுந்த காதலனும்

சமீபத்தில் நான் ரசித்த இரண்டு ஜோக்ஸை இங்கே தருகிறேன். ஒன்று சைவம் அடுத்தது  அசைவம். சைவமா அசைவமா அல்லது இரண்டுமா என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன். வயதுக்கேற்ப தேர்வு செய்து படியுங்கள். இந்த ப்ளாக்ஐ படிப்பவர்கள் அனைவரும் பெரியமனிதர்கள் (வயதில், அறிவில், புத்திசாலித்தனத்தில்) ஆகையால் பிடித்ததை படிப்பது சரவணபவனில் உங்களுக்கு பிடித்த சாம்பார் இட்லி சாப்பிடுவதை போல. இது உங்கள் சாய்ஸ். அசைவத்தை படித்துவிட்டு எனக்கு ஜீரணம் ஆகவில்லை என்று கூறினால் அதற்க்கு நான் ஜவாப்தாரி அல்ல. 


சைவம் - திருந்திய குடிகாரன் 


ஒரு உயர்ந்த ரக பாரில் ஓரத்தில் தனியாக உட்கார்ந்து மூன்று கிளாஸ்களில் பீர் வாங்கி ஒருவர் உள்ளே தள்ளிக்கொண்டிருந்தார். அடித்த சரக்கு பத்தாமால் மீண்டும் ஒரு முறை எழுந்து சென்று சரக்கு ஊற்றித் தருபவரிடம் மூன்று கிளாஸ்களில் பீர் கேட்டார். சரக்கு ஊற்றித் தருபவர் சற்று நேரம் பார்த்துவிட்டு,

"ஸார், நீங்க தப்பா நினைக்கலைன்னா ஒன்னு கேக்கறேன், ஒவ்வொரு கிளாஸா வாங்கி குடிச்சா இன்னும் நல்ல இருக்குமே.நா கிளாஸ்ல ஊத்தும்போதே நுரை அடங்கி உள்ள போய்டுதே ஆனா நீங்க மூணு மூணு கிளாஸா வாங்கி குடிக்கிரீங்களே...இதில இதோட நிஜ டேஸ்டே இல்லாம போய்டுமே" என்றான்.

"இல்லப்பா, நாங்க அண்ணன் தம்பி மூனு பேர். அண்ணன் துபாய்ல இருக்கான், தம்பி கனடாவில இருக்கான், நான் இங்க லண்டன்ல இருக்கேன். சின்ன வயசிலேர்ந்தே நாங்க மூணு பேரும் ஒன்னாதான் சரக்கடிப்போம்.  நாங்க மூனு பேரும் ஆளுக்கு ஒரு மூலையா  பிரிஞ்சு போனதால, சரக்கு சாப்பிடறதா இருந்தா மூனு கிளாஸ்ல வாங்கி, மத்தவங்க ஞாபகார்த்தமா அந்த சரக்கை சாப்பிடனும்னு ஒரு சத்தியம் பண்ணிருக்கோம். என் தம்பி அண்ணன் ரெண்டு பேருமே இதை செஞ்சுட்டுதான் குடிப்பாங்க. அதனாலதான்" என்றார் அந்த குடிமகன். ஆச்சர்யமாக பார்த்தான் அந்த 'சரக்கூற்றி '. (Bar tender)

இதேபோல  தினமும் அந்த பாருக்கு சென்று அமர்ந்து மூன்று மூன்று கிளாஸ்களில் பீர் வாங்கி மோர் போல குடித்து தன் தொப்பையை வளர்த்து வந்தார் அந்த அன்பர். ஒரு நன்னாளில், இரண்டு கோப்பையில் மட்டும் பீர் தரச்சொல்லி வாங்கி குடித்தார்.

இதைக்கண்ட சரக்கூற்றி சரக்கப்பன் மிகவும் சங்கடப்பட்டான். நேரே அவரிடம் சென்று "ரொம்ப ஸாரி ஸார், இப்படி ஆகும்ன்னு நான் நினைக்கலை" என்று சோகராகம் பாடினான்.
"ஏம்ப்பா என்னாச்சு" என்றார் அந்த குடிமன்னர்.
"இல்லை எப்போதும் நீங்க உங்க பிரதர்ஸ் ஞாபகார்த்தமா மூனு கிளாஸ்ல வாங்கி  குடிப்பீங்க. உங்க பிரதர் யாராவது இறந்துவிட்டாங்க போலிருக்கு இன்னிக்கி இரண்டு கிளாஸ்ல  மட்டும் ஊத்தி குடிக்கிறீங்க" என்றான்.

அந்த இரண்டு கிளாஸ் பீரையும் நிதானமாக சிப் பண்ணி குடித்துவிட்டு முழு போதையுடன் சொன்னான் அந்த சரக்கு மன்னன்
"யாருக்கும் எதுவும் ஆகலை, நேற்றையோடு நான்தான் குடியை நிறுத்திட்டேன்பா, அதான் என் பிரதர்ஸ்க்காக இரண்டு கிளாஸ் மட்டும்".

இதைகேட்ட சரக்கூற்றிக்கு போதை தெளிய ரெண்டு நாள் ஆனது. 

அசைவம் -  பள்ளத்தில் விழுந்த காதலன் ( 18+)


18 மற்றும் 20 வயதே பூர்த்தியான காதலர்கள் இருவர் மகிழ்ச்சி பொங்க ஆரவாரத்துடன் மேற்கூரை திறந்த ஆடம்பரமான காரில் வேகமாக ஒரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்கள். "இன்னும் வேகமா போ... வேகமா போ..." என்று அந்த காதலி அவனை ரேஸ்  குதிரை போல் விரட்டியவண்ணம் இருந்தாள். செயல்களில் குறும்புத்தனம் கொப்பளித்த அந்த காதலன் "நான் இன்னும் வேகமாக போக வேண்டும் என்றால் நீ உன் மேலாடையை கழற்றி வெளியே வீசினால் நான் இன்னும் வேகமாக போவேன்" என்றான்.

காதலனின் ஆசை/கட்டளைக்கு இணங்க அவள் கணநேரத்தில் உடனே கழற்றி வெளியே வீசி எறிந்தாள். "இன்னும் வேகமா போ வேகமா போ..." என்று கத்தி குதித்து துள்ளி துள்ளி ஆடியபடி கேட்டாள். காதல் பித்து தலைக்கேறிப் போன அந்த காதலன் "இன்னும் வேகமாக போக நீ உன் அரையாடையையும் கழற்றி வீசினால் நான் போவேன்" என்றான். அதையும் செய்தாள் அந்த அன்பிற்கினியவள். அரையாடை மற்றும் மேலாடை இல்லாமல் இருந்த காதலியை கண்டு இன்னும் வேகம் (மோகம்?) பொங்க படு வேகமாக ஓட்ட ஆரம்பித்தான்.

கட்டற்ற வேகத்தில் சென்ற அந்த கார் தன் கட்டுப்பாடு இல்லாமல் ஒரு பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. மிகவும் கஷ்டப்பட்டு அந்த காதலி காரிலிருந்து தப்பித்து வெளியே வந்தாள்.  காதலன் மாட்டிக்கொண்டு கஷ்டப்பட்ட நிலையில் காதலியை "ஏய்! யாரையாவது போய் உடனே அழைத்துக்கொண்டு வந்து என்னை காப்பாற்று" என்றான். "போடா, உன்னால் நான் என் எல்லா துணிகளையும் கழற்றி வீசிவிட்டேன். நான் எப்படி சென்று யாரையாவது உதவிக்கு கூப்பிடுவேன்" என்று நாணி கோணினாள். "ஆபத்துக்கு பாபமில்லை, கீழே உன்னுடைய ஷூவைக் கொண்டு மூடிக்கொண்டு சென்று உதவி கேள்" என்று வலியால் துடித்துக்கொண்டு கேட்டான் அவன்.

காதலனைக் காப்பாற்ற தன்  மானம்  போனாலும்  பரவாயில்லை என்று  வேறு வழியில்லாமல் கீழே ஷூவால் மறைத்துக்கொண்டு உதவிக்கு ஓடினாள்.  ஏதிரே தென்பட்ட அந்த தீயணைப்பு படை வீரரிடம் ஷூ கையை எடுக்காமல், " ஐயா என் காதலன் இங்கே பள்ளத்தில் விழுந்துவிட்டான். வெளியே வர கொஞ்சம் உதவுங்கள். ப்ளீஸ்" என்றாள். அந்த வயதான தீயணைப்பு படை வீரர் செய்வதறியாது திகைத்து மூர்ச்சையுற்று கீழே சரிந்தார்.


Wednesday, April 7, 2010

ரயில் பயணங்களில்..... (ஜட்டியுடன்!)

முன்குறிப்பு:  இது ஒரு அடல்ட்ஸ் ஒன்லி பதிவு அல்ல. தலைப்பை கண்டு ஏமாந்து இதை படிக்காமல் தவிர்த்தால் நீங்கள் எடுத்த இந்த மனித ஜென்மத்தின் பலன் கிடைக்காமல் போகலாம். ஆண்/பெண் இருபாலாரும் சகஜமாக இதைப் படிக்கலாம். பார்க்கலாம் ( இணைத்திருக்கும் வீடியோவை).

நீங்கள் படித்து ரசிக்கப்(?) போகும் இந்த ப்ளாக் யூத்புல் விகடனில்  குட்ப்ளாக்ஸ் பகுதியில்  இடம் பெற்றுள்ளது. இதைக்கண்டு சொன்ன எங்கள் ப்ளாக் (http://engalblog.blogspot.com) ஸ்ரீராமுக்கு நன்றி. கீழே அந்த சுட்டி கொடுக்கப்பட்டுள்ளது.
http://youthful.vikatan.com/youth/Nyouth/Blogs.asp


இந்த செய்தியை மூன்று நாளைக்கு முன் இன்டெர்நெட்டில் படித்தவுடன் இதை பற்றி எழுதலாமா வேண்டாமா என்று மனதிற்குள் சாலமன் பாப்பையாவை பெரிய சிகப்பு ராஜா சேரில் நடுவராக உட்கார வைத்து "கால் சட்டை இல்லாப் பயணங்கள் பற்றி எழுதுவது இவ்வுலகிற்கு நன்மை பயக்குமா  அல்லது தீமை பயக்குமா அல்லது  பைசாவுக்கு பிரயோஜனம் இல்லையா" என்ற தலைப்பு கொடுத்து  பட்டிமன்றத்தில் வாதிட்டு பார்த்ததில், "சும்மா எழுதுய்யா... உலகத்தில நடக்காததையா சொல்ற... இது ஆண்களுக்கு நன்மை பயக்கும்(எப்படி என்று கேட்காதீர்கள்), பெண்களுக்கு தீமையில் முடியும்(இதற்கும் எப்படி என்று கேட்காதீர்கள்), மொத்ததில இதை செய்வது  ஒன்றும் பைசாவுக்கும் பிரயோஜனம் இல்லை(இது எல்லோருக்கும் தெரிந்ததே). அதனால  நீ இத எழுதறதில ஒன்னும் தப்பு இல்லையா... உம்ம்ம். ஆரம்பிங்க.." என்று தீர்ப்பளித்தார். நடுவர் பாப்பையாவின் நேர்மையான தீர்ப்புக்கு தலை வணங்கி அந்த (அ)சம்பவத்தை எழுதுகிறேன்.

நியூயார்க் நகரத்தில் ஒவ்வொரு ஜனவரி மாதமும் நம் தாய்த்திருநாட்டில் நடக்கும் தனுர் மாத பஜனை போல் நடக்கும் ஒரு விழா கால்சட்டை அணியா சுரங்க ரயில் பயணம். "ஐயே! என்ன இதெல்லாம். இதைப் போய் யாராவது ப்ளாக்ல எழுதுவாங்களா?" என்று நீங்கள் முகம் சுளிப்பது தெரிகிறது. என்ன செய்வது படித்ததில்/பார்த்ததில் இருந்தே இரவுத்தூக்கம் இல்லாமால் நான் பட்ட அவஸ்தையால்தான் இந்த பதிவு. ஒரு பித்து பிடித்தது போன்ற ஒரு மனநிலை. யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம். 

இரண்டாயிரத்து இரண்டில் ஒரு ஏழு பேர் துவக்கி வைத்த இந்த இயக்கம் இப்போது ஐயாயிரம் பேர் கலந்து கொண்டு சிறப்பிக்கும் அளவிற்கு மாபெரும் ஒரு இலட்சிய கொள்கை இயக்கமாக விரிவடைந்திருக்கிறது. இலட்சியம் என்னவென்றால் நம்முடைய இடுப்புக் கீழ் உள்ள பாகங்களை சுதந்திரமாக எல்லோருக்கும் தரிசனம் செய்ய ஏதுவாக ஜட்டியுடன் பயணம் செய்வது. வேனிற்காலங்களில் ஒரு நாள் முழுவதும் முழு  பேன்ட் அணிந்து சூட்டால் ஏற்படும் "கச கச" அசௌகரியங்களால் இரவு கைலி அல்லது அரைக்கால்சட்டை அணிந்து இளைப்பாறுபவர்களை இவ்வுலகில் நாம் கண்டதுண்டு.  ஆனால் பட்டப் பகலில் வெட்ட வெளியில் ஒரு சுரங்கபாதை ரயில் போக்குவரத்தை இவ்விதம் புனிதப்படுத்தும் ஆட்களை இப்போதுதான் பார்க்கிறோம். 

 

இந்த கண்கொள்ளா(?) காட்சியை கண்டு மிரளும் சில நிகழ்படங்களை  நாம் மேற்கண்ட வீடியோவில் காண்கிறோம். நீங்கள் மேலே கண்டு களித்த இந்த யூட்யூப் காட்சியை நூறு மில்லியன் மக்கள்  பார்த்து பயனடைந்திருப்பதாக இம்ப்ரூவ் எவரிவேர் (இந்தப்  புனிதப் பயணத்தை ஒருங்கிணைப்பவர்கள்) தங்களது வலைத்தளத்தில் தெரிவிக்கிறார்கள். ரீலில் கண்டே நாம் அதிரும் காட்சிகளை ரியலில் கண்ட போது மக்களுக்கு என்ன ஒரு மன நிலை இருந்திருக்கும் என்று நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். ஏழு குறும்புத்தனமான ஆசாமிகளால் ஆரம்பிக்கப்பட்ட இந்த கூத்து இப்போது அற்பத்தனங்களின் கொண்டாட்டமாக ஒரு மாபெரும் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.  

இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பயணத்தை  சில சிறப்பு முகவர்களும் (Special Agents), ஒருங்கினைப்பாளர்களும் மற்றும்  தன்னார்வ தொண்டர்களும்  மனமுவந்து இச் சேவையை ஒவ்வொரு வருடமும் பிரதி ஜனவரி மாதம் செய்கிறார்கள். சிறு சிறு குழுக்களாக பிரிந்து சென்று ஒரு ரயிலின் சில பெட்டிகளை தெரிவு செய்து பெட்டியில் ஏறியவுடன் கீழே அணிந்திருக்கும் ஆடையை அகற்றி எல்லோருக்கும் பொது தரிசனம் அளித்த வண்ணம்,  தங்களுடைய  ஆடையை அகற்றியது பற்றிய பிரஞ்கையே   இல்லாமல் ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு வீட்டில் காலையில் நம்பர் இரண்டு போகும் போது படிப்பது போல படிக்கிறார்கள்.  

படித்த ரெண்டு பேர் ( நிறைய பேர் கூட இருக்கலாம்) "இப்போ இதனால என்ன? யார் பேன்ட் போட்டா என்ன? போடலன்னா என்ன?" என்று கேட்கலாம். "போடலன்னா என்ன?" என்பதைதான் இந்தப் பதிவில் நீங்கள் கண்டு/படித்து ரசித்தீர்கள். 

யார் என்ன சொன்னால் என்ன, இது போல சில அபூர்வ சிந்தனைகள் கொண்டவர்கள் , எதையும் செய்யும் ஆற்றல் உடையவர்கள் அவர்களுடைய செயலில் "கருமமே" கண்ணாயினர்.

Monday, April 5, 2010

ஒரு பழ வியாபாரியின் சம்பாஷனைகள்



சாலையின் மையத்தில் கட் அடித்து அதிவீரசாகசங்கள் செய்யும் ஆட்டோ இல்லாத, இப் பூலோகத்தில்  எதைப்பற்றியும் கவலைப்படாமல் நட்ட நடு ரோடில்  ஓடும் மிதிசைக்கிள் கண்ணில்படாத, இருதயமே நிற்கும் அளவிற்கு பின்னால் "பாங்...பாங்.." என்று ஹாரன் அடித்து இம்சை செய்யும் சொகுசு(?) பேருந்து புழங்காத சாலையில் நேற்றிரவு பத்து மணியளவில்  பழம் வாங்க பழமுதிர்சோலை சென்றிருந்தேன். டாஸ்மாக் பழரசம் அருந்தி சக பிரதர்களுடன்(பி-யையும் ர-வையும் கொஞ்சம் இழுத்து படிக்கவும்) நடு ரோடில் ஆனந்த தாண்டவம் ஆடிக்கொண்டிருந்த இந்த நாட்டின் வருவாய்க்கு பெரிதும் உதவும் உள்ளங்களை தாண்டி பழக்கடையில் புன்னகையில் பழரசம் ததும்ப கனி விற்ற அந்த பழக்கடைக்காரருடன் நடந்த உரையாடலை அப்படியே கீழே தருகிறேன். ஒவ்வொரு வரிக்கும் அவரின் அந்த மலர்ந்த சிரித்த முகம் இதை டைப் செய்யும்போது என்னை புன்னகை மன்னன் ஆக்கியது.

"அந்த திராட்சை எப்படி?"
"கிலோ என்பது ரூவா ஸார்"
"ஒரு கால் கிலோ குடுங்க.."
"அங்க இருக்கே அந்த திராட்சை எவ்வளவு?"
"அதே விலை தான்"
"ஏன் அங்கே வச்சிருக்கிங்க?"
"இங்க இடம் இல்லை. அதான்...அங்க இருக்கறதும் அதே லாட்டு தான். அதிலேர்ந்து வேணுமா? வேணும்னா தரேன். வேற ஸார்"
"ஆரஞ்சு எவ்வளோ?"
"அறுவது ரூபா கிலோ"
"ஓரத்தில இருக்கறதுக்கும், இங்க இருக்கறதுக்கும் என்ன வித்தியாசம்?"
"ரெண்டும் ரெண்டு ஓரத்தில இருக்கு.. அவ்வளவுதான்..."
"வெல..தரம்...."
"எல்லாம் ஒண்ணுதான்... கடைக்கு அந்த பக்கமா வரவங்களும் பாக்கட்டுமேன்னுதான் அந்த பக்கம் வச்சிருக்கோம். சொல்லுங்க வேற.."

*****
ஒரு கிரே கலர் ஷார்ட்ஸ்-வெள்ளை டிஷர்ட் அணிந்த டூ-வீலர் இளைஞன் கையில் கருப்பு ஹெல்மெட்டுடன்,
"அண்ணே, அந்த திராட்சை கொடுங்க...."
"எவ்வளவு"
"ஒரு கிலோ... கிழே இருக்கறதுக்கும் மேலே இருக்கறதுக்கும் என்ன வித்தியாசம்?"
"அது பச்சை, இது கருப்பு அவ்வளவுதான்... இரண்டையுமே சாப்பிடலாம்.. அல்வா மாதிரி இருக்கும்"
"அல்வா சாப்பிடறதுக்கு நாங்க ஆனந்தபவன் போவோம், இங்கே ஏன் வரோம்."
"இன்னிமே இங்கயும் வந்து அல்வா சாப்பிடுங்க.. திராட்சை அல்வா.. ஹி ஹி..."
*****

"ஸார். நீங்க சொல்லுங்க. வேற என்ன வேணும்?"
"ஆப்பிள் என்ன வெல"
"நூத்தி நாப்பது"
"கொஞ்சம் பாத்து சொல்லுங்க"
"ரொம்ப நாளியா ஒன்னொன்னா பாத்து, நல்லதா பொறுக்கி வெச்சிருக்கோம்... அப்படியே அள்ளிட்டு போங்க."
"ஒரு அரை கிலோ போடுங்க"

இப்படியே தொடர்ந்து பழம் தேடி வந்த மொத்தப் பறவைக்  கூட்டத்திடமும் ஒரு எம்.பி.ஏ லாவகத்துடன் என் கண் எதிரேயே பத்து நிமிடத்தில் ஐந்நூறு ரூபாய்க்கு வியாபாரம் செய்தார்.

"அடுத்த முறை வாங்க ஸார்..."
"சரிங்க"

பையிலும் கடையிலும் பழம் பளீரென சிரித்தது.

பின்குறிப்பு: ராஜா ரவி வர்மாவின் இந்த கலை ஓவியத்தில் இருக்கும் களையான பெண்ணின் சிரிப்புக்கு ஒத்தது அக்கடைக்காரரின் புன்னகை. 'கனி' சுவைக்காக இந்த படம் இந்த பதிவில்.

Saturday, April 3, 2010

புரட்சி எழுத்தாளன்

ரெண்டு நாளா ஒண்ணுமே எழுதலை. என்ன பண்ணுறதுன்னு புரியலை. ஏப்ரல் ஒண்ணாம் தேதி முட்டாள் தினம். முட்டாள் தினத்தை பத்தி எழுதலாம்னா யாராவது உன் தினத்தைப் பத்தி நீ எழுதலைன்னா தான் அதிசயம் அப்படின்னு ஒரு கமெண்ட் அடிச்சா என்ன பண்றதுன்னு கப்சிப்ன்னு ஆயிட்டேன். இந்த இலக்கிய பணி ஆற்றுவதற்கு வந்த பின்னே எழுதாம எப்படி இருக்கறதுன்னு ஒரே கவலையோட சேர்ந்து மனசு பூரா  நெகிழ்ச்சி வேறு. இப்படி ஆகும்னு நான் கொஞ்சம் கூட நினைக்கல.

இன்றைக்கு என்ன எழுதறதுன்னு பார்த்தா, இன்னைக்கும் ஒன்றும் இல்லைதான். ரெண்டு மூனு பேர் போன் பண்ணி
"என்ன சார் சைட் அப்டேட்டே ஆவல. என்ன பண்றீங்க. உங்களோட எழுத்தை படிச்சுட்டு யாராவது ஆள் செட் பண்ணி அடிச்சிட்டாங்களா?" என்று ஒரே நக்கலும் நையாண்டியுமாக  கேள்வி வேற.
"இல்லைங்க மனசுல கிரியேட்டிவ் ஐடியா எதுவும் தோணலை. அதான்..." இப்படி கொஞ்சம் உண்மையைச்   சொன்னாலும்,
"ரெண்டு நாள் முன்னாடி சல்லாப சாமியார் பத்தி எழுதினீங்களே.. அவர்தான் உங்களுக்கு ஆள் உட்டாருன்னு நெனச்சோம்..."
"சேச்சே..." என்ற என்னுடைய பதிலை லட்சியம் செய்யாமல் ...
"ஸார் ரொம்ப ஜாக்கிரதையா இருங்க... இப்பெல்லாம் ரௌடின்னு சொல்லிக்கிறவன் கூட இவ்வளோ தில்லாலங்கடி வேலை செய்யறது கிடையாது. காவி டிரஸ் போட்டுக்கிட்டு இவனுங்க பண்றது தான் ஊர்ல பெரிய அயோக்கியத்தனமா இருக்கு... "
"உங்க அட்வைஸ்சுக்கு  நன்றிங்க..." என்று போனை கட் செய்யப்போகும் போது "
நீங்க ஒரு பெரிய எழுத்தாளர்... உங்களோட நடை நிறைய பேருக்கு அப்படியே அவுங்க மனசை  உங்களுக்கு கொடுக்கனும் போல இருக்குன்னு என்கிட்டயே சொல்லி இருக்காங்க...குறிப்பா பொண்ணுங்க..."  என்று சொல்லி மீண்டும் என்னை உசுப்பேத்தினார் அந்த வாசக அன்பர். ஒருவழியாக தப்பித்து சரி உலக மகா எழுத்தாளனாயிட்டோம் இப்படி ஏதாவது இரண்டு பேர் கிளப்பிவிட்டுகிட்டுதான் இருப்பாங்க என்று நினைத்து உடம்பை ரணகளம் பண்ணிக்கொள்ளாமல் மூன்று நாள் முடிந்த தேய்பிறை பௌர்ணமி நிலவின் வெளிச்ச வானத்தைப் பார்த்துக்கிட்டு சும்மா வெட்டியா உக்காந்திருந்தேன்.

தேமேன்னு உட்கார்ந்திருந்த நேரம் வாசலில் நிழலாடியது. ரெண்டு பேர் வாசலில் நிற்பது தெரிந்தது. வெள்ளை ஜிப்பாவும், வேட்டியும் கண்டபோதே ஒரு சந்தேகம் இருந்தது. கையில் அந்த "நித்ய பிரம்மச்சாரி" புத்தகத்தை பார்த்ததும் சந்தேகம் ஊர்ஜிதமானது. அந்த புத்தகத்தில் என் எழுத்தின் சக்தியால் அவரால் தென் தமிழகத்தில் ஒரு அஞ்சாறு ஆசிரமம் அமைத்து கொஞ்சம் சில்லரை பார்க்க முடிந்தது.
"சாமி ரொம்ப வருத்தப்பட்டாரு.."
"ஏன்?"
"நீங்க பன் டி.வில கொடுத்த பேட்டி..."
"ஆமா... கொடுத்த வாக்கை காப்பாத்தனும்னு இருக்காயா அவனுக்கு. என்னமா எல்லார்ட்டயும் வெட்டி நாயம் பேசுறான்.."
"நிச்சயம் காப்பாத்துவாருங்க. இந்த இக்கட்டு நேரத்தில போயி....இப்படி கன்னாபின்னான்னு வாய்க்கு வந்தபடி..... "
"என்னய்யா வந்து போயி... இக்கட்டுன்னு பார்தானாயா அவன்... எல்லாத்தையும் பொதுப்படையா பண்ணிக்கிட்டு திரியறான்...நம்மால வெளியில தல காட்ட முடியுதாயா?"
சத்தம் கொஞ்சம் அதிகம் ஆனதும் என் பக்கத்துக்கு வீட்டு பேங்க் மேனேஜர் சம்சாராம் ஏதோ போல பார்த்துவிட்டு தன் பதின்ம வயது ஜீன்ஸ் அணிந்த  பெண்ணை அவசரவசரமாக உள்ளே இழுத்து அழைத்துச் சென்றது.
"நீங்க கையிலே வச்சிரிக்கீங்களே... இந்த புத்தகம்.. என்னோட உழைப்புயா... இதுல இருக்கிற மாதிரியா இருக்கான் அவன்....பொறுக்கி.. பொம்பளை பொறுக்கி.." இன்னும் பி.பி ஏறி உரத்த குரலில் கத்த ஆரம்பித்தேன்.
"இதை கொடுத்துட்டு வரச்சொன்னாரு.... மீதியை அப்புறமா.." என்று தயங்கி தயங்கி இழுத்தார்கள். பின்னாலிருந்து ஒரு பெட்டியை எடுத்தார்கள்.
ப்ரீப்கேஸ்சை பார்த்ததுமே சற்று புரிந்தது போல் இருந்தது.  அதை திறக்க முற்றிலும் புரிந்து வாயடைத்து விக்கித்து நின்றேன். எல்லாம் சலவை ஆயிரம் ரூபாய் நோட்டாக மாயாவதிக்கு போட்ட மாலை போல இல்லாமல் உதிரிக் கட்டுகளாக  பெட்டியில் படுத்திருந்தது. இதை முன்னமே பார்ததிருந்தால் இவ்வளவு சத்தமே  போட்டிருக்க மாட்டேன். நமக்கே இவ்வளவு என்றால், போலீஸ், கவர்ன்மெண்ட், பெரும்புள்ளி, கரும்புள்ளி, கூட்டாளி, எதிராளின்னு எவ்வளோ பேருக்கு பல சைஸ்ல பெட்டி போயிருக்கும்ன்னு நினைத்தேன்.
"சரி சரி... அதை அங்க  வச்சிட்டு போங்க...அப்புறமா வந்து பார்கிறேன்னு சொல்லுங்க..." என்று வழியனுப்பி வைத்தேன்.

"அவர் ஒரு மகான். தீர்க்கதரிசி. அவர் கை பட்டால் தகரம் தங்கமாகும். அவருக்கு ரசவாதம் தெரியும். ஸ்தூல சரீரமாக ஓரிடத்தில் ஒரு பெண்ணுடன் இருந்தாலும் சூட்சும சரீரமாக ஒரே நேரத்தில் அவரால் பல இடங்களில் அவதாரம் எடுத்து தோற்றமளிக்க முடியும்.............." என்று "நித்ய பிரம்மச்சாரி - II" புத்தகத்தை எழுதுவதற்கு ஆரம்பித்திருந்தேன் மறுநாள் மாலையில் என்னுடைய புது மடிக்கணினியில்.பாங்கிலும் என் கல்லா நிரம்பியிருந்தது.

பின்குறிப்பு: இது ஒரு கதை, கதை , கதை தான்  என்று உங்கள் தலையில் அடித்து சத்தியமாக கூறிக்கொள்கிறேன்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails