Showing posts with label Tamil Heritage Forum. Show all posts
Showing posts with label Tamil Heritage Forum. Show all posts

Saturday, May 9, 2015

பழந்தமிழ்ப் பண்பாட்டின் சேர நாட்டு எச்சங்கள்

தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை மெயில் வந்தவுடன் மே இரண்டாம் தேதியை மூளையின் ஒரு ந்யூரானில் சதக்கென்று குத்திக்கொண்டேன். தக்கர் பாபாவில் ஜெயமோகனின் ”பழந்தமிழ்ப் பண்பாட்டின் சேர நாட்டு எச்சங்கள்”. வாசகர்கள் நான்கு பக்கம் படித்து முடிப்பதற்குள் நாற்பது பக்கம் எழுதிக் குவிக்கும் ஜெமோவை இதுவரை நேரில் சந்தித்ததில்லை. ஐந்தரை மணி நிகழ்ச்சிக்கு ஐந்தேகாலுக்கு நுழைந்துவிட்டேன். தக்கர் பாபா வினோபா அரங்கத்தில் ஜேஜேயென்று கூட்டம்.

கோபுவும் பத்ரியும் அறிமுகவுரையாற்றிய பிறகு ஜெமோ பேச ஆரம்பித்தார். ஜெமோவுக்கு ஆற்றொழுக்கான நடை. பேச்சில் உறுதியும் நம்பிக்கையும் தெரிந்தது. பழந்தமிழ் பண்பாடு பற்றி பேச ஆரம்பிக்கும் முன் நமது வரலாறுகள் இயற்றப்பட்டதை விரிவாகப் பேசினார். வெளிநாட்டிலிருந்து இந்திய வரலாறு எழுதப்பட்டால்தான் அதை ரெஃபரென்ஸுக்கு எடுத்துக்கொள்ளும் உள்ளூர் அநியாயத்தைச் சாடினார்.

சூதர்கள் மன்னர் குடி பாடுவதற்காகவே இருந்தார்கள். ராஜாதிராஜர்கள் மட்டுமன்றி குட்டிக் குட்டி ராஜாக்களுக்குக் கூட அவர்களது குலவரிசையைப் பாடுவதற்கு ஆட்கள் இருந்தார்கள். இது வரலாறு சொல்வதில் முதல் வகை. இரண்டாவது வகை தொன்மங்கள். Myths. மூன்றாவதாக புராணக் கதைகள் வருகின்றன. மார்டர்ன் ஹிஸ்டரியில் இவையெல்லாம் ஒத்துக்கொள்வதில்லை.

நவீன வரலாற்றுக்குச் சான்றுகள் தேவை. ஆதாரங்கள் தேவை. படிக்கும் நான்கு பேர்களும் ஒத்துக்கொள்வது போன்ற தரவுகள் தேவை. ஆனால் நான்கு பேரால் எப்படியும் மாற்றியமைக்கும்படியும் வரலாறு அமையலாம். எனக்கு வடிவேலுவின் புலிகேசி படம் ஞாபகம் வந்தது. பூஞ்சையாய் எலிக்குட்டி போலிருக்கும் புலிகேசியை கட்டுமஸ்தான பாடியோடு வரையைச் சொல்லி “வருங்கால சந்ததியினர் தெரிந்துகொள்ளட்டும்..” என்று கேலியாகச் சிரிப்பார்.

வரலாற்றின் அடுக்குகள் பற்றி ஜெமோவின் வ்யாசம் இங்கே: http://www.jeyamohan.in/74443#.VUUCrPmqo7J
குமரிமாவட்டத்தைப் பற்றி பேச ஆரம்பித்தவுடன் தலைப்பின் உள்ளே தொபகடீர்னு குதித்தார். குமரி மாவட்டம் இன்னமும் நாகரீகத்தால் பழந்தமிழ்ப் பண்பாட்டை பல இடங்களில் பழகி வருகிறது என்பதற்கு தரவுகளை சரசரவென்று அள்ளித் தெளிக்க ஆரம்பித்தார். பேசும் மொழியில் வேற்று மொழிகள் கலக்காமல் புனிதத் தமிழாக இருக்கிறது என்றார். இப்படித்தானா அல்லது எனது புரிதல் அதுவா என்று ஒரு பிசுபிசுப்பு நியாபகம் இங்கே. சொற்பொழிவு கேட்டவர்கள் தெளிவுபடுத்தலாம்.

அ.கா. பெருமாளுடன் கண்ணகி கோவில்களாக சேர நாட்டில் சுற்றியதைப் பற்றி விவரிக்கையில் செங்கனூர் கோவிலில் கிழக்கு வாசல் வழியாக நுழைந்தால் சிவனும் மேற்கு வாசல் வழியாக பார்த்தால் பகவதியும் அருள்பாலிப்பதைப் பற்றி பேசினார். இன்னமும் குமரி மாவட்டத்தில் சித்திரம் வரைந்து வழிபடும் ஆதிகாலப் பழக்கம் இருப்பதைச் சுட்டிக் காட்டினார். வரலக்ஷ்மி விரதத்திற்கு கலசத்திலும் சுவற்றிலும் படம் வரைந்து கும்பிடுவதை நானும் வல்லபாவும் பேசிக்கொண்டோம்.

பூ ஆடை உடுத்தி புதுப்புனல் நீராடுவது தொன்றுதொட்டு வரும் குமரிமாவட்ட பழக்கம். சிறுவயதில் ஜெமோவே பூ ஆடை உடுத்தி புதுப்புனல் நீராடியதைக் குறிப்பிட்டார். முகத்தில் லேசான சிரிப்பு. அவ்வருடத்திய முதல் சரக்கொன்றைப் பூப்பதை அவர் ஊரின் மஹாதேவர் கோவிலில் விழாவெடுத்துக் கொண்டாடுவதையும் அதுவே புதுவருடப் பிறப்பிற்கான அறிவிப்பாகவும் எடுத்துக்கொள்வார்களாம். கேரள நாளிதழ்களில் அதுவே தலைப்புச் செய்தியாக இடம்பெறும் முக்கியத்துவத்தைப் பற்றியும் சொன்னார்.

தமிழக கோவில்களின் ஆகம வழிபாடுகளைப் போலில்லாமல் கேரள கோவில்களின் கையசைவின் மூலம் நடக்கும் கோயில் உபசாரங்களும் தாந்த்ரீக சடங்குகள் பற்றியும் சொல்லி அதுவே ஆதி வழிபடாக இருந்தது என்றும் ஹ்ரீம். க்லீம் போன்ற ஓசைகளே மந்திரங்களானதையும் விவரித்தபோது வழிபாட்டின் வழியாக பண்பாடு தெரிந்தது.

எதையும் இலையில் சுருட்டி வேக வைத்தோச் சுட்டோ சாப்பிடுவது பழங்குடிகளின் பழக்கம். இன்னமும் குமரி மாவட்டத்தில் இலையில் சுருட்டி வைத்து செய்யப்படும் அப்பங்கள் பற்றிய விரிவான ஜெமோவின் கட்டுரை இங்கே: http://www.jeyamohan.in/5387#.VUT0tJNUyVA
பழந்தமிழர் பழக்கமான பெண்ணுக்கு மையல் கண்டால் வேலனை வரவழைத்து வெறியாட்டு நடத்துவதை தன் ஊரில் பார்த்த சான்றிருப்பதைப் பற்றிப் பேசினார்.

அருவிபோல பேசிக்கொண்டே வந்தவர், சரியாக ஒரு மணி நேரத்தில் சட்டென்று நிறுத்திவிட்டுச் சரசரவென்று மேடையிறங்கிவிட்டார். தினமணி இணையதளத்திற்கு ஒரு தொடர் எழுதித் தர முடியுமா என்று விண்ணப்பித்துக் கொண்டபோது “ஒரு புது நாவல் எழுதணும்னு பார்க்கிறேன்..அதுக்கே நேரமில்லை...” என்று சிரித்தார்.

ஐபேட், ஹாண்ட் பேக் போட்டு சீட் பிடித்து வைத்த வல்லபா, வீகேயெஸ்ஸுக்கு மனமார்ந்த நன்றிகள். ராதிகா சித்ரா நாகேஷ் மேடங்களோடு ஒரே வரிசையில் அமர்ந்து பார்த்தது மிகவும் சந்தோஷம். கட்டு புஸ்தகங்கள் எடுத்து வந்து ஆட்டோகிராஃப் வாங்கிய ராசகோபாலனாரை ஜெயமோகன் அறிவார்ந்த விஷயங்கள் சொல்லும்போது பார்த்துக்கொண்டது பரவச அனுபவமாக இருந்தது. விருமாண்டி மீசையில் வி. சந்திரசேகரன் சார் கம்பீரமாக வந்திருந்தார். நிகழ்ச்சி முடிந்து பேசிக்கொண்டிருக்கும் போது பாலு சார் சங்கீத பூஷணம் என்ற வரியில் சங்கீதத்தை பூசணும் என்று வா.விளையாடினார். வழக்கம் போல வெங்கட் சுப்ரமணி அடக்க ஒடுக்கத்துடன் அமர்ந்து சிரத்தையாகக் கண்டு களித்தார்.

இந்தக் கட்டுரை எழுத குறிப்புகள் எடுத்துக்கொடுத்த ராதிகா மேடத்திற்கு எனது விசேட நன்றிகள்.

படம்: வீகேயெஸ்

சரித்திரத்தைப் புதினப்படுத்துதல்

எண்பதுகளின் மன்னை நேஷனல் ஸ்கூல். ஆறாவது செக்ஷன்களை தடுப்பில் பிரித்த சங்கர ஹால். தரையில் உட்கார்ந்த ஆறாவது ஏழாவதில் வி. தியாகராஜன் சார் ஹிஸ்டரி வாத்தியார். ஒரு கண்ணில் பூ விழுந்திருக்கும். அமர்க்களமான ட்ரெஸ்ஸிங் சென்ஸ். கூலிங் க்ளாஸில் சைக்கிளில் வந்திறங்குவார். ஒவ்வொருத்தர் காதுக்கும் பிரத்யேகமாக விழுவது போல பாடம் நடத்துவார். அக்பரோ... பாபரோ... அப்போதெல்லாம் வரலாறு பக்கம் தலைவைத்துப் படுத்ததில்லை. இப்போது வில்லியம் Dalrylmpleனின் The Last Mughalலும் Jhon Keayயின் Inda - A Historyயும் புரட்டிப்பார்க்க ரவையோண்டு ஆர்வம் தலைதூக்கியிருக்கிறது.

Tamil Heritage Trustசங்கத்தினர் பிரதி மாதம் முதல் சனிக்கிழமை சரித்திரம் மெச்சும் பயனுள்ள பல கூட்டங்களை தி.நகர் தக்கர் பாபாவில் டக்கராகக் கூட்டுவர். (ஆவிபறக்கும் டீ காஃபியிம் பருகத் தருவார்கள்) இந்த வாரம் சரித்திர புதினங்கள் எழுதும் ஆர். வெங்கடேஷ். Fictionalising History என்பது தலைப்பு. சமூக நாவல்கள் எழுதி மெசேஜ் சொல்லி லோல்படுவதைக் காட்டிலும் சரித்திர நாவல் எழுதி வம்படிபடாமல் இருக்கலாம்.... யாரும் சர்ச்சை கிளப்பாதவரை... என்று கேஷுவலாக சொன்னார். நல்ல பன்ச். சரிதான். சோழர்களோ பாண்டியர்களோ பல்லவராஜனோ உயிர்த்தெழுந்து சிரச்சேதம் செய்ய வாளெடுக்கப்போவதில்லை.

ஒரு மணிநேரம் மாலிக் காபூர், அலாவுதீன் கில்ஜி, முகம்மது பின் துக்ளக், பதூதா, பாண்டியர்கள், மருது பாண்டியர்கள், சோழர்கள், பல்லவர்கள், நாயக்கர்கள் என்று ராஜாதி ராஜாக்களை சம்பவங்களில் சுவையாகக் கோர்த்து ஒவ்வொருத்தராகக் கொண்டு வந்து பார்வையாளர்கள் பக்கத்தில் அரூபமாக அமர்த்தினார். காட்டாற்று வெள்ளம் போல தங்குதடையில்லாமல் சரித்திர நிகழ்வுகளைப் பொழிகிறார். “டினிங்.. டினிங்...” என்று சிந்தையைக் கலைத்து வந்து விழும் அகால எஸ்ஸெம்மெஸ்ஸை ஒரு நொடி பார்த்துவிட்டால் போச்சு. அங்கே மாலிக் காபூர் கோஹினூர் வைரத்தை லவட்டிக்கொண்டு போன நிகழ்வை மிஸ் பண்ணிடுவிடுவோம். அப்படியொரு வேகம் சொற்பொழிவில். சம்பிரதாயமான தமிழில் பேசி கூட்டத்தில் மிலிட்டரி விறைப்பு ஏற்படுத்தவில்லை. பக்கத்தாத்து ரிடையர்ட் ஸ்டேஷன் மாஸ்டர் மாமா திண்ணையில் உட்கார்ந்து மணிப்பிரவாளமா பேசுவாரே... அந்த மாதிரி ஆங்கிலமும் தமிழும் டிஎன்ஏ ஸ்ட்ரக்சர் மாதிரி பிண்ணிப் பிணைந்த ஒரு பேச்சு நடை. அரங்கு நிறைந்த ஹாலில் ஆர்வமாய்க் கலந்திருந்த ஆங்கிலேயப் பெண்மணிக்கும் புரிய வேண்டாமா?

வரலாற்று நிகழ்வுகளை புனைவுகளின் ஊடே சொல்லும்போது இருக்கும் சுதந்திரத்தையும் சௌகரியத்தையும் பற்றி பேசினார். சித்தூர் ராணி பத்மினி, மதுராந்தகத் தேவர் போன்ற கதாபாத்திரங்களின் புனைவுத்தன்மையின் வாயிலாக கதாசிரியர்களின் திறமையை எடுத்துப்பேசினார். புனைவுகளால் கோர்க்கப்படும் வரலாற்று நிகழ்வுகள் சுலபமாக மக்களிடம் சென்றடைகிறது என்ற உண்மையை அழுத்திக்கோடிட்டார். ஏழாவதில் ஹிஸ்டரி வகுப்பில் பராக்கு பார்த்தது பளிச்சிட்டது.

மாலிக் காபூரின் ஸ்ரீரங்கம் மதுரை படையெடுப்புகள் இந்திய சரித்திர வரலாற்றில் கறுப்புப் பக்கங்கள். கொள்ளையடித்துக்கொண்டு போனான். கட்டிடங்களை தரைமட்டமாக்கினான். மீண்டும் மீண்டும் செழித்தது எவ்வாறு? ஐந்தாறு பாண்டியர்கள் ஹைரார்கி சார்ட் போட்டுக்கொண்டு மதுரையை அரசாண்டதை விவரித்தார். கோஹீனூர் வைரத்தை வைத்திருந்த மன்னன் ஒருவனின் தலையில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றி “எங்கேடா வைரம்?” என்று மிரட்டிக் கேட்பினும் வாய் திறக்க மறுத்ததைச் சொல்லும் போது மனிதர்களின் வினோத ஆசைகளின் உக்கிரம் புரிந்தது. கல்கியின் பொன்னியின் செல்வனின் தொடர்ச்சியாக காவிரி மைந்தன் எழுதியதைப் பற்றிச் சொன்னார். பொன்னியின் செல்வன் என்று ராஜராஜசோழனுக்கு கல்கி வைத்ததைப் பற்றிய ஹேஷ்யப் புதிர் ஒன்றைப் போட்டார்.

வல்லத்தரசன் வந்தியத்தேவன் நீராடி ஓடிய காவிரியை பொன்னி நதியின் செல்வனாக அவனுக்கு அடைமொழி தராமல் ஆனால் தஞ்சையிலிருந்து நாற்பது கி.மீ தூரத்தில் ஓடிய பொன்னியை ராஜராஜனுக்கு ஏற்றிச் சொன்னது எப்படி என்று ஒரு கேள்வியை எழுப்பி கச்சியப்ப சிவாச்சாரியார் ஓரிடத்தில் சொன்ன பொன்னியை கல்கி எடுத்தாண்டிருப்பதைச் சொல்லிச் சிலாகித்தார். பிரசங்கத்தில் இந்த இடம் எனக்கு கொஞ்சம் பிசுபிசுப்பாய்தான் ஞாபகம் இருக்கிறது. தீட்டிய முளைக்குள் பிரதியெடுத்தவர்கள் திருத்தலாம்.

அலாவுதீன் கில்ஜி எண்ணற்ற மங்கோலியர்களைக் கொன்று குவித்து அவர்களது மண்டையோடுகளை நகர எல்லையில் பிரமிடு போல குவித்து வைத்து மிரட்டியதைச் சொல்லிவிட்டு சரித்திரத்தில் வரும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் ஒரு கதையாக வடிக்கும் வாய்ப்பிருப்பதை எடுத்துக்கொடுத்தார். ஸ்ரீரங்கம் கோவிலிலிருக்கும் ஒரு அர்ச்சாவதாரத்தின் கண்களில் இருந்த ஆர்லாஃப் வைரங்களைப் பற்றிச் சொல்லும் போதும், அழகிய மணவாளர் போன்றே தில்லையம்பல நடராசப் பெருமானை முகம்மதிய படையெடுப்பின் போது ஒருமுறை திருஆரூரில் கொண்டு வந்து வைத்துக்கொண்டதைப் பற்றியும் ஆச்சரியமான பல வரலாற்றுத் தரவுகளை அசால்ட்டாக அள்ளித் தெளிக்கிறார்.

சமீப காலங்களில் கூவம் நதிக்கரை ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார். இரண்டாயிரம் கி.மீ கங்கை, எண்ணூறு கீ.மி காவிரி போன்ற நதிக்கரை நாகரீகக் கதைகள் போல திருவிற்கோலத்திலிருந்து சென்னை வரை ஓடிவரும் எழுபத்தி சொச்சம் கி.மீ கூவத்திற்கும் கீர்த்திமிகு கதைகள் பல உண்டாம். திருவிற்கோல கூவம் பற்றி சொல்லும் போது அங்கிருக்கும் ஈஸ்வரன் ஆறுமாதங்கள் வெண்மையாகவும் ஆறுமாதங்கள் சிகப்பாகவும் மாறும் தன்மை கொண்டவர் என்று உபரி தகவல் ”டொய்ங்” என்று மூளையிலிருந்து வந்து விழுந்தது. கோயம்பேடு கோயிலில் (எந்த கோயில்?) சீதாதேவியின் கர்ப்ப சிலை வடித்திருக்கிறார்களாம். விருந்திட்ட ஈஸ்வரராகிய திருக்கச்சூர் ஆலக்கோயில் மதிலுக்கு உட்புறத்தில் ராஜராஜசோழனைப் பற்றிய கல்வெட்டுகள் வெளியே உள்ளூர் சோழர்களை “திரிலோகச் சக்கரவர்த்தி”க்கிய கல்வெட்டுகள்.

மப்பேடு சிங்கீஸ்வரர் கோயிலுக்கு நானும் என் அணுக்க தோழர்களும் சென்றிருக்கிறோம். “கோபுர தரிசனம் கோடி புண்ணியம்” என்று கன்னத்தில் போட்டுக்கொண்டு திரும்பிவிட்டோம். ”ஆஞ்சநேயர் பாடின இடம்... வீணையோட ஹனுமார் சிலை ஒண்ணு இருக்கும் பாருங்க... உங்க பசங்களைப் பாடச் சொல்லுங்க.. பாட்டு நல்லா வரும்...” என்று ஒரு ஆஸ்திக அன்பர் அருளிச்செய்தார். வெங்கடேஷ் அந்த கோபுரத்தில் ஸ்ரீரங்கநாதர் போல தலைக்குக் கையைக் கொடுத்து படுத்திருக்கும் ஒரு மானுடரின் சுதையைப் பற்றிச் சொன்னார். யாரவர்? என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு மதுரை கோயிலெல்லாம் கட்டுவதற்கு உறுதுணையாக இருந்தவர் என்று கண்டுபிடித்ததைச் சொன்னார். அவர் பெயர் அரியநாத முதலியார்.

கூவக்கரை சிந்தாதிரிப்பேட்டையின் ஒரு குட்டி வரலாறு பேசினார். தெருக்கள் நேராக இருக்குமாம். டெக்ஸ்டைல்ஸ் நிறைய விற்ற இடம். காஞ்சி ஆரணி போன்ற ஊர்களிலிருந்து வரும் வியாபாரிகளை ஈர்க்கும் விதமாக விசாலமான தெருக்கள் என்றார். சில மாதங்களுக்கு முன்னர் ஓரமாக நடந்து சென்ற போது கட் அடித்து ”சாவுகிராக்கி..” என்று அர்ச்சித்து “வூட்ல சொல்லிட்டுவண்ட்டியா?” என்று குசலம் விசாரித்த சி.பேட்டை ஆட்டோகாரர் கண்முன் வந்தார். முதன் முதல் மோட்டார் கம்பெனி சிம்ஸன்ஸ். முதல் மிருகக்காட்சி சாலையாக குரங்கும் சிறுத்தையும் அமைந்த இடம். சிறுத்தையில்லாத போது குறைந்த கூட்டம். மெடிகல் காலேஜ் அவார்ட்டில் இடம் பெறும் பெண்மணியின் பெயர். அவர் பேசப்பேச அறையில் கூவம் மணத்தது.

ஆயிரங்களிலேயே வாழ்ந்துகொண்டிருக்கும் இரண்டாயிரங்களின் மனிதர் எழுத்தாளர் ஆர்.வெங்கடேஷ். ( Venkatesh Ramakrishnan )
சரித்திரத்தின் புனிதம் கெடாமல் புதினப்படுத்துதல் சிறப்புதானே!

பின்குறிப்பு: நேற்றிரவே எழுதியிருந்தால் இன்னும் கொஞ்சம் நினைவில் இருந்திருக்கும். என் ந்யூரான்களின் பலம் இவ்வளவுதான். இன்னும் சில சம்பவங்கள் நினைவிருந்தாலும் பெயரும் ஊரும் ஞாபகத்திற்கு வர பிகு பண்ணுகிறது. Balasubramanian Natarajan Radhika Parthasarathy, Chitra Nagesh , Rangarathnam Gopu, Badri Seshadri, Kishore Mahadevan, Vaidyanathan Ramamurthy போன்ற ஆர்வலர்களும் கலந்துகொண்டார்கள். அவர்களில் ஒருவரோ அல்லது வரலாற்றைக் கரைத்துக் குடித்து ஏப்பம் விட்டவர்களோ மேற்கூறிய சம்பவங்களை அலசலாம். என்னை அடித்துத் துவைக்காமல்.

Monday, December 8, 2014

புதுக்கோட்டையிலிருந்து ராஜேந்திரன்....

புதுக்கோட்டை காலஞ்சென்ற என் மாமனார் ஊர். ஐயனார் மீசையில் ஆகிருதியானவர். பக்கத்திலிருக்கும் பொன்னமராவதி அழகிய நாச்சியம்மன் அவர்களது குலதெய்வம். சிலப்பதிகாரக் கண்ணகி மதுரை செல்லும் வழியில் தங்கி இளைப்பாறிய கோயில். சரி தலைப்புக்கு வருவோம். அங்கே வாழ்ந்த சாதாரண மனிதர்களின் வாழ்வின் ஊடாக புதுக்கோட்டையின் வரலாறு கேட்க ஆவலாக தி.நகர் தக்கர் பாபாவினுள் நுழைந்தேன். வினோபா ஹாலில் ரங்கரத்னம் கோபு ( Rangarathnam Gopu) மைக்கில் இருந்தார். கிஷோர் மஹாதேவன் ( Kishore Mahadevan ) சமர்த்தாக கடைசி வரிசையிலிருந்து சிரித்தார். தட்டிக்கொண்டு முன்வரிசைக்கு விரைந்தேன்.

தமிழ் ஹெரிடேஜ்ஜினரின் டிசம்பர் மாதப் பேச்சுக் கச்சேரியின் தேதி கொடுத்துக்கொண்டிருந்தார் கோபு. கோபுவின் சரமாரியான ரஜினி ஸ்டைல் அறிவிப்புகளுக்கு அடுத்து பத்ரி (Badri Seshadri ) இன்றைய பேச்சாளர் ராஜேந்திரனைப் பற்றி அறிமுகவுரையாற்றினார். ”ராஜேந்திரன் புஸ்தகக்கணக்கில் கைப்பட சங்கு ஊதுபவர்.... வெடி போடுபவர்..என்று புதுக்கோட்டை மனிதர்கள் பற்றி எழுதிவைத்திருக்கிறார்...” என்று பேசும் போது பத்ரிக்கு இயல்பாய் ஒரு சிரிப்பு வருகிறது. வசீகரமாகயிருக்கிறது. பார்க்க படம்.
"Town of Temples" என்று எப்படி கும்பகோணம், காஞ்சீபுரம் போன்ற ஊர்களைச் சொல்வோமோ அதுபோல “Town of Tanks" என்று புதுக்கோட்டையை அழைக்கலாம் என்றார். பல்லவன் குளம் என்கிற குளம் ஊருணியாம். ஊருணி என்றால் ஊறி நிரம்பும் அந்தக் குளத்தின் நீரை அள்ளிப் பருகலாம். அதற்கு ஒரு காவலாளி இருந்தாராம். சோப்பு போட விடாமல் பாதுகாத்து வந்தார் என்ற செய்தியைச் சொன்னார். மன்னையின் ஹரித்ராநதி, கிருஷ்ண தீர்த்தம், தாமரைக் குளம், யானை விழுந்தான் குளம், ஐயனார் குட்டை என்று நீர்நிலைகள் கண் முன்னே டிக்கர் டேப்பாக ஓடியது.
மூன்று ரூபாய் ஐம்பது காசுக்கு தன் மகளை விசாலாக்ஷியிடம் விற்ற வேலாயி கதை சொன்னார். விற்ற காசுக்கு புடவை வாங்கிக்கொண்டாளாம் அந்த அம்மணி. திரும்பவும் வீட்டு வேலைகள் செய்து மூன்றரை ரூபாய் பணம் சேர்த்து விற்ற மகளை வாங்கப் போன கதை ஒரு சிறுகதை எழுதத் தூண்டியது.
கூட்டத்திற்கு எழுத்தாளார் சா. கந்தசாமி வந்திருந்தார். சச்சின் டெண்டுல்கர் சுயசரிதை வெளியான பின்பு தினமணியில் அவர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். சாதாரணர்களின் சுயசரிதையில்தான் நிறைய தெரிந்துகொள்ள முடியும் அப்படியெதுவும் இருக்கிறதா என்று தெரியவில்லை என்ற தொணியில் எழுதியிருந்த கட்டுரை அது. மராத்திய காம்ளே என்கிற காய்கறி விற்கும் பெண்ணின் சுயசரிதை பற்றி டெஹெல்காவில் ஒரு முறை படித்திருக்கிறேன். வெள்ளிக்கற்றையாய் தோளில் புரண்ட அவர் கேசத்திற்கு மேலே மகுடமாய் ஒரு சிகப்புத் தொப்பி அணிந்திருந்தார். பார்வையாளர்கள் மத்தியில் நடுநாயகமாக அமர்ந்திருந்தார்.
ராஜேந்திரன் உடன்கட்டை ஏறும் சதியைப் பற்றி பேசினார். புதுக்கோட்டை விஜயரகுநாத தொண்டைமானின் மூன்றாவது மனைவி உடன்கட்டை ஏறிய செய்தியில் அபின் கொடுத்து அவரை வி.ர.தொண்டைமானின் இறுதி ஊர்வலத்தில் அழைத்துச் சென்றதைச் சொன்னார். பெண்களை போகப்பொருளாக உபயோகித்த ஆணாதிக்க சமுதாயத்தின் அட்டூழியம் என்று சீறினார். பக்கத்திலிருந்து சைனா மற்றும் அயல்நாடுகளிலிலும் அமுலில் இருந்த சதியைப் பற்றி வலது காதில் ரகசியமாய் உதிரிக் குறிப்பு கொடுத்தார் கோபு.
பத்து பிள்ளைகளில் ஒருவராய் பிறந்த சுப்பையா என்கிறவர் அவர் மனைவிக்கு கோயில் கட்டினாராம். குஷ்பூவுக்கே கோயில் கட்டும் இப்புண்ணிய பூமியில் இப்போது இந்த செய்திக்கு வீரியம் இல்லாமல் போனாலும் அடுத்தது அந்த சுப்பையாவைப் பற்றி சொன்ன செய்தியில் குலுங்கிச் சிரிக்கவேண்டியதாயிற்று. அவருக்கும் பத்து பிள்ளையாம். அவரும் அவர் மனைவியும் எப்போதும் சண்டையில் இருந்தார்களாம். சுருட்ட பாயும் முரட்டுப் பொண்டாட்டியும் உபயோகப்படாது என்று சொல்வார்களாம்... என்று சொல்லி Pause கொடுத்து அதற்கான விளக்கத்தைக் கொடுக்க கன்னம் சிவந்தார்.
ஃபோர்த் ஃபார்முக்கு ஃபிஃப்த் ஃபார்முக்கும் நடந்த கால்பந்து போட்டியில் தோற்ற போதும் சோமு என்ற தனது நண்பனுக்குக் கண்ணாடி பரிசளித்தது பற்றிச் சொன்னபோது கொஞ்சம் கரைந்தார். ஊரார் நேரம் தெரிந்துகொள்வதற்கு பீரங்கியால் மதியம் பன்னிரெண்டு மணிக்கு ஒரு வெடியும் மீண்டும் இரவு எட்டு மணிக்கு ஒரு வெடியும் போட்டார்களாம். அந்த வெடிபோட்ட மனிதரைப் பற்றிச் சொன்னார். அப்புறம் சங்கு ஊதும் சங்குமணியைப் பற்றிச் சொன்னார். அந்த ஊரில் போட்ட ப்ராம்மண போஜனம், நவராத்திரி கன்யா பூஜை போன்றவற்றை விஸ்தரித்தார்.
காலணா அரையணா பூரி வாங்குவதற்கு புதுக்கோட்டையிலிருந்து கானாடுகாத்தான் வரை நடந்து சென்ற ப்ராம்மண பையன்கள். பூரி என்பது ப்ராம்மண போஜனத்திற்கு பிறகு வைத்துக்கொடுக்கும் தட்சணை. பூமீஸ்வரர் பள்ளியில்தான் அழ.வள்ளியப்பா மற்றும் கல்கி சதாசிவம் ஆகியோர் படித்தார்களாம்.
கடல் பகுதிகளால் சூழாத போதும் உப்பு சத்தியாகிரகத்தில் பங்கு கொண்ட ஊர் என்ற குறிப்பைத் தந்தார். நஞ்சை நிலம் வறண்டு வெடிக்கும் போது அந்த வெடிப்புகளில் கிடைக்கும் உப்பை எடுத்துச் சுண்டக் காய்ச்சி எடுத்த உப்பை மலைமலையாய்க் குவித்துப் போராடினார்கள் என்றார். ஒரு சுபயோக சுபதினத்தில் மன்னர் பரம்பரை ஆசாமியான இரண்டாம் சிவாஜி மரித்துப்போனார் என்று சொன்னதில் அவருக்கு மகிழ்ச்சியாக இருக்க முடியாது. அவ்வளவு படுத்தின ஆசாமியோ?
“கார்த்திகையும் அதுவுமா எங்கியோ கூட்டத்துக்குப் போய்ட்டான்... “ என்கிற அம்மாவின் வசவு சஞ்சயனுக்கு குருக்ஷேத்திர யுத்தம் தெரிந்தது போல காட்சியாய் ஓடியது. கோபுவிடம் உத்தரவு வாங்கிக்கொண்டு பத்ரிக்கு கண்ணால் சொல்லிக்கொண்டு சேப்பாயின் காதில் “சீக்கிரம்” என்று ஸ்டார்ட் செய்து விரைந்தேன். மனசு மீட்டிங்கில் இருந்ததால் “Over ?" என்று கோபுக்கு சைதை தாண்டும் போது டெக்ஸ்ட் செய்தேன். ஏழே முக்காலுக்கு முடிந்ததாம். முழுவதும் இருக்க முடியவில்லை.
சாதாரண மனிதர்கள் என்று ராஜேந்திரன் பேசியதைத்தான் வாத்தியார் ஸ்ரீரங்கத்து தேவதைகளாக எழுதினார். நான் மன்னார்குடி டேஸ் என்று எழுதும் உண்மை கலந்த கதைகளும் அதை ஒட்டித்தான். எவ்வளவு வயசானாலும் ஊர் ஞாபகங்கள் நிழலாய்ப் பின் தொடர்ந்து வரும் என்பது பேராசிரியர் (தி.மு.க) போலிருந்த ராஜேந்திரனின் பேச்சில் வர்ணமயமாகத் தெரிந்தது.
சாதாரண மனிதர்கள் பற்றிய பதிவாகையால் நான் சில வருடங்களுக்கு முன்னர் “ஐவர்” என்று எழுதிய என் ப்ளாக் பத்தியிலிருந்து “பட்டக்கா”வை கடைச் சேர்ப்பாக சேர்க்கிறேன்.
ஊர்: மன்னார்குடி
இடம்: கீழப்பாலம் அய்யனார் குட்டை அருகில் 
மனுஷி: பட்டக்கா

பெயரில் பட்டக்காவாக இருந்தாலும் அது ஒரு பக்காக் கிழவி. பட்டாக இல்லாமல் கரடுமுரடாக இருக்கும் கார்மேகக் கிழவி. வரும் ஐப்பசியில் தொண்ணூறாம். லபோதிபோ என்று கத்திக்கொண்டு ஆடு மேய்த்துக்கொண்டிருந்த போது பார்த்தது. உடம்பில் ஒரு புடவையை சுற்றிக்கொண்டு நின்றது. ஜாக்கெட் இல்லாமல் விறகுக் கரியாய் இருந்த பட்டக்கா ஒரு வயதான கருஞ் சிலை போல ஓரத்தில் சாய்ந்திருந்தது. கண்ணும் காதும் அவள் போட்ட சாப்பாட்டிற்கு வஞ்சனை செய்யாமல் இன்னமும் உழைத்துக் கொண்டிருந்தன. என்ன ஒரு தீர்க்கமான பார்வை! இரண்டாம் முறை "ஆ.." என்று வாய்க்கு வேலை வைக்காத காது.
"என்னக்கா? எப்படி இருக்கே?" குசலம் விசாரித்தாள் அம்மா.
"ஒரு கொறவும் இல்லம்மா" என்று நொண்டியடித்துக்கொண்டே சொன்னது பட்டக்கா.
"மவன் ஒழுங்கா பார்த்துக்கரானா?" பக்கத்தில் நின்ற மாரியைப் பார்த்து வம்பு வளர்த்தது என் அம்மா.
"நீங்கெல்லாம் ஊரை விட்டு போயிட்டீங்க..." என்று கண்களில் நீர் முட்ட கையை விரித்து ஆரம்பித்ததை பார்த்து மாரி முறைத்தான்.
இதற்கு முன்னர் லாரி கிளீனர் மாரிக்கு தனியாக காசு கொடுத்திருந்தேன். பட்டக்கா நிலைமையறிந்து பர்சுக்குள் கையை விட்டதும் முட்டிக்கொண்டிருந்த நீர் தாரை தாரையாய் வழிந்தது. வேண்டாம் என்று சொன்னாலும் கையை பிடித்து பணத்தை திணிக்கையில் கட்டிப் பிடித்துக் கொண்டு குமுறிக் குமுறி அழுதது. எலும்பும் தோலுமாக இருந்தாலும் வைரம் பாய்ந்ததாக இருந்தது. உழைத்த கட்டை. ஓய்வறியா உழைப்பாளி.

"ஏ..க்கே...ஏ...ஹே..ஹே.." என்று குச்சியை தரையில் அடித்து ஆடு மேய்த்துக்கொண்டு ஓடிய பட்டக்கா ரெண்டடிக்கு நாலடி இடத்தில் சருகு போல மடிந்து சரிந்திருந்தது ரொம்ப நேரம் என்னை தொந்தரவு செய்தது.
இப்போ.. பட்டக்கா மரிச்சாச்சு.
எழுத்தாளர் சார்வாகனை அழைத்துக்கொண்டு சென்றது Chitra Nagesh மேடம்தான் என்று நினைக்கிறேன். கண்களால் எக்கிப்பார்த்தேன். பேச முடியவில்லை.

Monday, December 1, 2014

மொட்டை மாடி இலக்கியங்கள்

திருவான்மியூரில் இன்று தமிழ் ஹெரிடேஜ் மீட்டிங். ஞானத்தின் நுழைவுவாயில் போல ஒரு சின்ன ரோட்டில்நுழைந்து இடது திரும்பி முட்டு சந்தில் ஏழெட்டு வீடு தாண்டி மாடியில் மீட்டிங். காஃபி டீ பிஸ்கட் கட்டையில் வரவேற்க அந்த மொட்டைமாடி கொட்டாய்க்குள் நுழைந்தேன். காட்டமான இலக்கிய வாசனை அடித்தது.


Badri Seshadri இறையனார் அகப்பொருள் மற்றும் மதுரைக் காஞ்சி பற்றிய சிறுகுறிப்புகள் தந்து மேலும் படிக்கத் தூண்டினார். இரண்டு பாடலையும் எடுத்துக்கொண்டு வரிக்கு வரி கவிநயம் பாராட்டப் போவதில்லை என்று ஆரம்பித்தார். குமரிக்கண்ட லெமூரியா பற்றியும் முதல் இடை கடைச் சங்கங்கள் பற்றியும் துளித்துளி சொல்லிவிட்டு எடுத்துக்கொண்ட விஷயத்துக்கு வந்தார்.

Rangarathnam Gopu வைத் தெரியும். இரண்டு மூன்று இலக்கியக் கூட்டத்தில் பழக்கமானவர். பக்கத்தில் உட்கார்ந்தால் அவரது தொடை தட்டிப் பேசுமளவிற்கு நண்பரான வரலாற்றாய்வாளர். கிழக்கு பத்ரி நாற்திசையிலும் பிரபலம். தெரியும். Balasubramanian Natarajan சார் எம்ஜியார் குல்லாவில் வந்திருந்தார். முதல் வரிசையில் உட்கார்ந்திருந்தவரைக் கும்பிட்டேன். ஏனையோர்கள் எனக்குப் பரிச்சியமில்லாதவர்கள். இலக்கிய ஆர்வலர்கள். கூட்டம் முழுவதும் பார்வையாளர்கள் மத்தியிலிருந்து நிறைய கேள்விகளும் பதில்களும் முழங்கியது இரசிக்கும்படி இருந்தது.

சங்க காலத்தில் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் எழுதிவிட பொருளதிகாரம் எழுத ஆளில்லை என்றவுடன் இந்த அகப்பொருளை இறையனாரே செப்பேட்டில் எழுதி நக்கீரனார் அதற்கு உரை எழுதினாராம். பலர் இதற்கு உரையெழுத ஊமைப் பையன் ஒருவன் நக்கீரனாரின் உரைக்கு பதத்துக்குப் பதம் கண்ணீர் சொரிந்தானாம். அதுவே சிறந்த உரையென்று எடுத்துக்கொண்டார்களாம். அந்த ஊமைப் பையன் முருகன் அவதாரம் என்று பிற்பாடு கூகிள் தேடலில் கிடைத்தது.

உரையெழுதியவர் கணக்காயனார் மகன் நக்கீரனார். கணக்காயனார் என்பவர் ஆடிட்டர் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். சின்னக் கவுண்டரில் கேப்டன் “நீங்களெல்லாம் நினைக்கிறது போல அவரு ஸ்கூல் வாத்தியாரில்லை. குஸ்தி வாத்தியார்...” என்று பஞ்சாயத்து சொல்வது போல பின்வரிசையில் இருந்து ஒருவர் கணக்காயர் என்பது ஆசிரியர் என்றார். இறையனார்:இறைவனார், தலைவர்:தலையர் போன்ற பதங்களுக்கிடையில் ஒட்டிக்கொண்டு வரும் வித்யாசத்தை விளக்கினார். எங்கள் தலைவர், சொட்டைத் தலையர் போன்று இறையனார் என்பது பெயராகவும் இறைவனார் என்றால் கடவுளாகவும் இருக்கலாம் என்று சொன்னார். திரும்பிப் பார்த்தேன். கண்ணாடியில் சிரித்தார்.

பனிரெண்டு வருஷங்கள் பாண்டிய நாடு வறண்டுபோனது. அங்கிருந்த சங்கப் புலவர்களையெல்லாம் வேறு நாட்டிலிருந்துவிட்டு மீண்டும் செழிப்பானதும் வரச்சொன்னானாம் பாண்டி நாடன். திரும்பவும் அவர்கள் வந்ததும் எழுத்தும், சொல்லும் இலக்கணம் கண்டது. பொருளதிகாரத்தை இறைவனார் எழுதினார் என்பது கதை.

மதுரைக் காஞ்சி பற்றி பத்ரி ஆரம்பித்ததும் பக்கத்திலுள்ளவர் ”காஞ்சி...” என்று இழுத்ததும் “காஞ்சீபுரமல்ல.. இது காஞ்சித் திணையில் எழுதிய பாடல்...” என்று பத்ரி சிரித்தார். தலையாலங்கானத்து செரு வென்ற நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு மாங்குடி மருதனார் இயற்றிய 782 வரி பா. மா. மருதனார் இராத் தூங்கா மதுரையை வர்ணிக்கிறார். மருதம், முல்லை, நெய்தல், பாலை, குறிஞ்சி என்று ஐவகை நிலங்களை வர்ணிக்கிறார். பாலை நிலம் என்பதை பாலைவனம் என்று தப்பர்த்தம் செய்து கொள்பவர்கள் கொஞ்சம் நிற்க. முல்லை மற்றும் குறிஞ்சியின் திரிபே பாலையாகும். அதாவது காடாகவுமில்லாமல் மலையாகவுமில்லாமல் ரெண்டுங்கெட்டான் நிலப்பரப்பு பாலையெனப்படுகிறது.

மாங்குடி மருதனாரைச் சொல்லும் போது ஊரில் மாங்குடியாரை நினைத்துக்கொண்டேன். மாங்குடி மருதனார் நெடுஞ்செழியனின் அவைப் புலவர். எவ்வளவு மெய்கீர்த்திகள் பாடினாலும் கடைசியில் வீடுபேறு பற்றி எடுத்துச் சொல்லி “வாராது காண் கடை வழிக்கே” கணக்காக நெடுஞ்செழியனுக்கு உபதேசிக்கிறார்.

இறையனார் அகப்பொருள் மற்றும் மதுரைக் காஞ்சியின் அறிமுகம் இங்கே நடந்து கொண்டிருக்கும் போது பக்கத்து மொட்டை மாடியில் தெய்வத்தின் குழந்தை ஒருவருக்கு அவரது தாயார் நடைபயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தார். அது கொஞ்சம் வளர்ந்த குழந்தை. பதினாலு பதினஞ்சு வயசிருக்கலாம். நீல வண்ண பனியனும் வெள்ளை கால் நிஜாரும். தலையைத் தூக்கி வாயை ”ஊ..ஊ”என்று என்னவோ பண்ணிற்று. அதன் கையைக் கோர்த்து விரல்களை நீவி விட்டுக்கொண்டு நடந்த அந்த அம்மாவின் கண்களில் வாத்சல்யமும் அன்பும் கருணையும் பொங்கிற்று. காதை இங்கே கொடுத்துவிட்டு கண்களை அங்கே அலைபாய விட்டேன். மனசும் துடித்தது. இறைவா! சக்தி கொடு.

இந்த மொட்டை மாடியில் சங்க இலக்கியங்களும் அந்த மொட்டை மாடியில் வாழ்விலக்கியமும் இன்று ஒருசேர எனக்குப் பரிமாறப்பட்டன. இரண்டுமே அமரத்துவம் வாய்ந்தவை. நெஞ்சிலிருந்து நீங்காதவை.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails