Monday, December 8, 2014

புதுக்கோட்டையிலிருந்து ராஜேந்திரன்....

புதுக்கோட்டை காலஞ்சென்ற என் மாமனார் ஊர். ஐயனார் மீசையில் ஆகிருதியானவர். பக்கத்திலிருக்கும் பொன்னமராவதி அழகிய நாச்சியம்மன் அவர்களது குலதெய்வம். சிலப்பதிகாரக் கண்ணகி மதுரை செல்லும் வழியில் தங்கி இளைப்பாறிய கோயில். சரி தலைப்புக்கு வருவோம். அங்கே வாழ்ந்த சாதாரண மனிதர்களின் வாழ்வின் ஊடாக புதுக்கோட்டையின் வரலாறு கேட்க ஆவலாக தி.நகர் தக்கர் பாபாவினுள் நுழைந்தேன். வினோபா ஹாலில் ரங்கரத்னம் கோபு ( Rangarathnam Gopu) மைக்கில் இருந்தார். கிஷோர் மஹாதேவன் ( Kishore Mahadevan ) சமர்த்தாக கடைசி வரிசையிலிருந்து சிரித்தார். தட்டிக்கொண்டு முன்வரிசைக்கு விரைந்தேன்.

தமிழ் ஹெரிடேஜ்ஜினரின் டிசம்பர் மாதப் பேச்சுக் கச்சேரியின் தேதி கொடுத்துக்கொண்டிருந்தார் கோபு. கோபுவின் சரமாரியான ரஜினி ஸ்டைல் அறிவிப்புகளுக்கு அடுத்து பத்ரி (Badri Seshadri ) இன்றைய பேச்சாளர் ராஜேந்திரனைப் பற்றி அறிமுகவுரையாற்றினார். ”ராஜேந்திரன் புஸ்தகக்கணக்கில் கைப்பட சங்கு ஊதுபவர்.... வெடி போடுபவர்..என்று புதுக்கோட்டை மனிதர்கள் பற்றி எழுதிவைத்திருக்கிறார்...” என்று பேசும் போது பத்ரிக்கு இயல்பாய் ஒரு சிரிப்பு வருகிறது. வசீகரமாகயிருக்கிறது. பார்க்க படம்.
"Town of Temples" என்று எப்படி கும்பகோணம், காஞ்சீபுரம் போன்ற ஊர்களைச் சொல்வோமோ அதுபோல “Town of Tanks" என்று புதுக்கோட்டையை அழைக்கலாம் என்றார். பல்லவன் குளம் என்கிற குளம் ஊருணியாம். ஊருணி என்றால் ஊறி நிரம்பும் அந்தக் குளத்தின் நீரை அள்ளிப் பருகலாம். அதற்கு ஒரு காவலாளி இருந்தாராம். சோப்பு போட விடாமல் பாதுகாத்து வந்தார் என்ற செய்தியைச் சொன்னார். மன்னையின் ஹரித்ராநதி, கிருஷ்ண தீர்த்தம், தாமரைக் குளம், யானை விழுந்தான் குளம், ஐயனார் குட்டை என்று நீர்நிலைகள் கண் முன்னே டிக்கர் டேப்பாக ஓடியது.
மூன்று ரூபாய் ஐம்பது காசுக்கு தன் மகளை விசாலாக்ஷியிடம் விற்ற வேலாயி கதை சொன்னார். விற்ற காசுக்கு புடவை வாங்கிக்கொண்டாளாம் அந்த அம்மணி. திரும்பவும் வீட்டு வேலைகள் செய்து மூன்றரை ரூபாய் பணம் சேர்த்து விற்ற மகளை வாங்கப் போன கதை ஒரு சிறுகதை எழுதத் தூண்டியது.
கூட்டத்திற்கு எழுத்தாளார் சா. கந்தசாமி வந்திருந்தார். சச்சின் டெண்டுல்கர் சுயசரிதை வெளியான பின்பு தினமணியில் அவர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். சாதாரணர்களின் சுயசரிதையில்தான் நிறைய தெரிந்துகொள்ள முடியும் அப்படியெதுவும் இருக்கிறதா என்று தெரியவில்லை என்ற தொணியில் எழுதியிருந்த கட்டுரை அது. மராத்திய காம்ளே என்கிற காய்கறி விற்கும் பெண்ணின் சுயசரிதை பற்றி டெஹெல்காவில் ஒரு முறை படித்திருக்கிறேன். வெள்ளிக்கற்றையாய் தோளில் புரண்ட அவர் கேசத்திற்கு மேலே மகுடமாய் ஒரு சிகப்புத் தொப்பி அணிந்திருந்தார். பார்வையாளர்கள் மத்தியில் நடுநாயகமாக அமர்ந்திருந்தார்.
ராஜேந்திரன் உடன்கட்டை ஏறும் சதியைப் பற்றி பேசினார். புதுக்கோட்டை விஜயரகுநாத தொண்டைமானின் மூன்றாவது மனைவி உடன்கட்டை ஏறிய செய்தியில் அபின் கொடுத்து அவரை வி.ர.தொண்டைமானின் இறுதி ஊர்வலத்தில் அழைத்துச் சென்றதைச் சொன்னார். பெண்களை போகப்பொருளாக உபயோகித்த ஆணாதிக்க சமுதாயத்தின் அட்டூழியம் என்று சீறினார். பக்கத்திலிருந்து சைனா மற்றும் அயல்நாடுகளிலிலும் அமுலில் இருந்த சதியைப் பற்றி வலது காதில் ரகசியமாய் உதிரிக் குறிப்பு கொடுத்தார் கோபு.
பத்து பிள்ளைகளில் ஒருவராய் பிறந்த சுப்பையா என்கிறவர் அவர் மனைவிக்கு கோயில் கட்டினாராம். குஷ்பூவுக்கே கோயில் கட்டும் இப்புண்ணிய பூமியில் இப்போது இந்த செய்திக்கு வீரியம் இல்லாமல் போனாலும் அடுத்தது அந்த சுப்பையாவைப் பற்றி சொன்ன செய்தியில் குலுங்கிச் சிரிக்கவேண்டியதாயிற்று. அவருக்கும் பத்து பிள்ளையாம். அவரும் அவர் மனைவியும் எப்போதும் சண்டையில் இருந்தார்களாம். சுருட்ட பாயும் முரட்டுப் பொண்டாட்டியும் உபயோகப்படாது என்று சொல்வார்களாம்... என்று சொல்லி Pause கொடுத்து அதற்கான விளக்கத்தைக் கொடுக்க கன்னம் சிவந்தார்.
ஃபோர்த் ஃபார்முக்கு ஃபிஃப்த் ஃபார்முக்கும் நடந்த கால்பந்து போட்டியில் தோற்ற போதும் சோமு என்ற தனது நண்பனுக்குக் கண்ணாடி பரிசளித்தது பற்றிச் சொன்னபோது கொஞ்சம் கரைந்தார். ஊரார் நேரம் தெரிந்துகொள்வதற்கு பீரங்கியால் மதியம் பன்னிரெண்டு மணிக்கு ஒரு வெடியும் மீண்டும் இரவு எட்டு மணிக்கு ஒரு வெடியும் போட்டார்களாம். அந்த வெடிபோட்ட மனிதரைப் பற்றிச் சொன்னார். அப்புறம் சங்கு ஊதும் சங்குமணியைப் பற்றிச் சொன்னார். அந்த ஊரில் போட்ட ப்ராம்மண போஜனம், நவராத்திரி கன்யா பூஜை போன்றவற்றை விஸ்தரித்தார்.
காலணா அரையணா பூரி வாங்குவதற்கு புதுக்கோட்டையிலிருந்து கானாடுகாத்தான் வரை நடந்து சென்ற ப்ராம்மண பையன்கள். பூரி என்பது ப்ராம்மண போஜனத்திற்கு பிறகு வைத்துக்கொடுக்கும் தட்சணை. பூமீஸ்வரர் பள்ளியில்தான் அழ.வள்ளியப்பா மற்றும் கல்கி சதாசிவம் ஆகியோர் படித்தார்களாம்.
கடல் பகுதிகளால் சூழாத போதும் உப்பு சத்தியாகிரகத்தில் பங்கு கொண்ட ஊர் என்ற குறிப்பைத் தந்தார். நஞ்சை நிலம் வறண்டு வெடிக்கும் போது அந்த வெடிப்புகளில் கிடைக்கும் உப்பை எடுத்துச் சுண்டக் காய்ச்சி எடுத்த உப்பை மலைமலையாய்க் குவித்துப் போராடினார்கள் என்றார். ஒரு சுபயோக சுபதினத்தில் மன்னர் பரம்பரை ஆசாமியான இரண்டாம் சிவாஜி மரித்துப்போனார் என்று சொன்னதில் அவருக்கு மகிழ்ச்சியாக இருக்க முடியாது. அவ்வளவு படுத்தின ஆசாமியோ?
“கார்த்திகையும் அதுவுமா எங்கியோ கூட்டத்துக்குப் போய்ட்டான்... “ என்கிற அம்மாவின் வசவு சஞ்சயனுக்கு குருக்ஷேத்திர யுத்தம் தெரிந்தது போல காட்சியாய் ஓடியது. கோபுவிடம் உத்தரவு வாங்கிக்கொண்டு பத்ரிக்கு கண்ணால் சொல்லிக்கொண்டு சேப்பாயின் காதில் “சீக்கிரம்” என்று ஸ்டார்ட் செய்து விரைந்தேன். மனசு மீட்டிங்கில் இருந்ததால் “Over ?" என்று கோபுக்கு சைதை தாண்டும் போது டெக்ஸ்ட் செய்தேன். ஏழே முக்காலுக்கு முடிந்ததாம். முழுவதும் இருக்க முடியவில்லை.
சாதாரண மனிதர்கள் என்று ராஜேந்திரன் பேசியதைத்தான் வாத்தியார் ஸ்ரீரங்கத்து தேவதைகளாக எழுதினார். நான் மன்னார்குடி டேஸ் என்று எழுதும் உண்மை கலந்த கதைகளும் அதை ஒட்டித்தான். எவ்வளவு வயசானாலும் ஊர் ஞாபகங்கள் நிழலாய்ப் பின் தொடர்ந்து வரும் என்பது பேராசிரியர் (தி.மு.க) போலிருந்த ராஜேந்திரனின் பேச்சில் வர்ணமயமாகத் தெரிந்தது.
சாதாரண மனிதர்கள் பற்றிய பதிவாகையால் நான் சில வருடங்களுக்கு முன்னர் “ஐவர்” என்று எழுதிய என் ப்ளாக் பத்தியிலிருந்து “பட்டக்கா”வை கடைச் சேர்ப்பாக சேர்க்கிறேன்.
ஊர்: மன்னார்குடி
இடம்: கீழப்பாலம் அய்யனார் குட்டை அருகில் 
மனுஷி: பட்டக்கா

பெயரில் பட்டக்காவாக இருந்தாலும் அது ஒரு பக்காக் கிழவி. பட்டாக இல்லாமல் கரடுமுரடாக இருக்கும் கார்மேகக் கிழவி. வரும் ஐப்பசியில் தொண்ணூறாம். லபோதிபோ என்று கத்திக்கொண்டு ஆடு மேய்த்துக்கொண்டிருந்த போது பார்த்தது. உடம்பில் ஒரு புடவையை சுற்றிக்கொண்டு நின்றது. ஜாக்கெட் இல்லாமல் விறகுக் கரியாய் இருந்த பட்டக்கா ஒரு வயதான கருஞ் சிலை போல ஓரத்தில் சாய்ந்திருந்தது. கண்ணும் காதும் அவள் போட்ட சாப்பாட்டிற்கு வஞ்சனை செய்யாமல் இன்னமும் உழைத்துக் கொண்டிருந்தன. என்ன ஒரு தீர்க்கமான பார்வை! இரண்டாம் முறை "ஆ.." என்று வாய்க்கு வேலை வைக்காத காது.
"என்னக்கா? எப்படி இருக்கே?" குசலம் விசாரித்தாள் அம்மா.
"ஒரு கொறவும் இல்லம்மா" என்று நொண்டியடித்துக்கொண்டே சொன்னது பட்டக்கா.
"மவன் ஒழுங்கா பார்த்துக்கரானா?" பக்கத்தில் நின்ற மாரியைப் பார்த்து வம்பு வளர்த்தது என் அம்மா.
"நீங்கெல்லாம் ஊரை விட்டு போயிட்டீங்க..." என்று கண்களில் நீர் முட்ட கையை விரித்து ஆரம்பித்ததை பார்த்து மாரி முறைத்தான்.
இதற்கு முன்னர் லாரி கிளீனர் மாரிக்கு தனியாக காசு கொடுத்திருந்தேன். பட்டக்கா நிலைமையறிந்து பர்சுக்குள் கையை விட்டதும் முட்டிக்கொண்டிருந்த நீர் தாரை தாரையாய் வழிந்தது. வேண்டாம் என்று சொன்னாலும் கையை பிடித்து பணத்தை திணிக்கையில் கட்டிப் பிடித்துக் கொண்டு குமுறிக் குமுறி அழுதது. எலும்பும் தோலுமாக இருந்தாலும் வைரம் பாய்ந்ததாக இருந்தது. உழைத்த கட்டை. ஓய்வறியா உழைப்பாளி.

"ஏ..க்கே...ஏ...ஹே..ஹே.." என்று குச்சியை தரையில் அடித்து ஆடு மேய்த்துக்கொண்டு ஓடிய பட்டக்கா ரெண்டடிக்கு நாலடி இடத்தில் சருகு போல மடிந்து சரிந்திருந்தது ரொம்ப நேரம் என்னை தொந்தரவு செய்தது.
இப்போ.. பட்டக்கா மரிச்சாச்சு.
எழுத்தாளர் சார்வாகனை அழைத்துக்கொண்டு சென்றது Chitra Nagesh மேடம்தான் என்று நினைக்கிறேன். கண்களால் எக்கிப்பார்த்தேன். பேச முடியவில்லை.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails