Wednesday, December 24, 2014

விஜய் சிவா - கச்சிதமான கச்சேரி

நேற்று மாலை ம்யூஸிக் அகாதமி கேண்டீனில் வீகேயெஸ்ஸுடன் வெஜ் ரோலும் ஸ்ட்ராங் காஃபியும் குடித்துவிட்டு அரங்கத்தினுள் சென்றேன். எதிர் டேபிளில் சப்புக்கொட்டிக்கொண்டு ஹார்லிக்ஸ் அல்வா சாப்பிட்டுக்கொண்டிருந்தவரைப் பற்றியெல்லாம் எழுதப்போவதில்லை. அவர் எப்பவோ அல்வா தொட்ட ஆட்காட்டி விரலை விழுங்கியிருந்தார். என்னுடைய உபயதாரர் ரசிக சிரோன்மணி Rajagopalan Venkatramanஏற்கனவே ஆஜராகியிருந்தார். பயபக்தியோடு அவரருகே சமர்த்தாக அமர்ந்துகொண்டேன்.

பாடகர் விஜய் சிவாவின் மடியில் உட்கார்ந்து கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சுவது போல இரண்டு பக்கமும் இசை பக்தாஸ் அமர்ந்திருந்தார்கள். ரெண்டு தம்பூரா. கடம் சந்திரசேகர சர்மா. வயலின் ஸ்ரீராம்குமார். ம்ருதங்கம் ஜே. வைத்தியநாதன். ஆமாம். முறுக்கு மீசையுடன் பாகவதர் கட்டிங்கில் இருப்பாரே.. அவர்தான்.. மிருதங்கத்துடன் பேசிக்கொண்டே வாசிக்கிறார் போலிருக்கிறது. அதுவும் சகஜமாகப் பேசுகிறது.

ராகமெல்லாம் அக்கக்காகப் பிரித்து விஸ்தரிக்கும்படியான வித்வத் எனக்குக் கிடையாது. சங்கீத ஆர்வமிக்க ஒரு காவிரிக்கரை ஓர பாமரனின் பார்வையில் இந்த கச்சேரியை விவரிக்க இயலுமா என்று பார்க்கிறேன். ராகதாளமெல்லாம் ராஜகோபாலன் எழுதுவார்.

நாமசங்கீர்த்தனம் யார் பாடினாலும் சட்டென்று உள்ளுக்கு இழுத்துவிடும். பதங்கள் சிறுசு. எல்லாமே நாமாவளி டைப். நாமளும் கூடவே “ராதா.. ரமணா... வனமாலி.. கோபாலா.. ” என்று கோரஸாகப் பாடிக்கொண்டே போய்விடலாம். ஆனால் கர்நாடக சங்கீதம் கேட்பதற்கு பொறுமை வேண்டும். ஆலாபனையாக ஆரம்பித்து பதம்பதமாக பாடகர் விஸ்தரித்து பாட்டுக்குள் செல்லும் போது கண்முன்னே ஸ்வர்க்கத்தைக் காட்டுவார்கள். நாமும் கண்ணை மூடிக்கொண்டு அங்கே சிறிது நேரம் சஞ்சரிப்போம். கர்நாடக சங்கீதத்தில் வரும் ப்ருகாக்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதைப் பாடுவது லேசுப்பட்ட காரியமில்லை என்று அதிசயக்கும் போது ”வம்சம்” பார்க்க யாராவது எழுந்து போனால் வெறுப்பாகிறது.

காதை சிவாவுக்கு கொடுத்துவிட்டு கண்ணையும் கருத்தையும் சிவனேன்னு வாட்ஸப்பில் கொடுத்திருந்த முன்சீட்டு மாமா "will be there by sharp 8:30" என்று டெக்ஸ்டியதை மட்டும் பார்த்துவிட்டேன். அதற்கப்புறம் அவ்வப்போது பளிச்சிட்ட அந்த ஐஃபோனை பார்க்கக்கூடாது என்று சங்கல்பம் செய்துகொண்டு மேடையில் கண்ணைக் குத்தினேன். விஜய் சிவாவின் குரலில் ஒரு டெம்ப்ட்டிங் மிருது இருக்கிறது. தென்றல் நம்மைத் தடவுவது போல ஆலாபனைகளில் கிறங்கடிக்கிறார். கச்சேரியிலிருந்தே நேரடியாக எழுதியிருந்த சில கமெண்ட்டுகளை இங்கே இட்டு நிரப்புகிறேன்.

*
ஊத்துகாட்டின் மரகதமணிமயசேலா...கோபாலா... காலாடாத கை தட்டாத ஜனமில்லை... ஜூலாவில் உட்கார வச்சு வீசி ஆட்டினா மாதிரி பரம சௌக்கியமாக.....அமிர்தமாக பொழியறார் சிவா..
*
Rk shriramkumarன் ஃபிடிலுக்கு... மகுடிக்கு மயங்கின சர்ப்பமா எல்லார் தலையும் ஆடறது...
*
ஃபர்ஸ்ட் கியர் போட்டு செகன்ட் கியர் மாத்தி சடசடவென வேகம் பிடித்து டாப் கியருக்கு லகுவாகப் போகும் விஜய் சிவாவின் இசை வண்டியில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். இது தரையில் உருளும் வாகனமில்லை. அந்தரத்தில் ஜிவ்வென்று மிதக்கிறது. ஜி... இப்போ காம்போஜி...
*
தமிழ்த் தியாகராஜர் பாபநாசம் சிவனின் "காண கண் கோடி வேண்டும்"மில் மாணிக்கம் வைரம் நவரத்னாவில் நிரவல்.... அகாதமி தகதகவென்று ஜொலிக்கிறது.... வைத்தியநாதன் ம்ருதங்கத்திலும் ஶ்ரீராம்குமார் வயலினிலும் வெளிச்சம் காட்டி இன்னும் மினுமினுக்க வைக்கிறார்கள். இதைக் கூட நான் கண்ணை மூடிக்கொண்டு மெய்மறந்து டைப்புகிறேன்.
*
வைத்தியநாதனின் தனி... விசேஷ லய மிஷின் கன் எடுத்து பரவலா சுட்டா மாதிரி.... தத்திதொம்... அரங்கமெங்கும்..
*
நடுநடுவே வீகேயெஸ்ஸிடமிருந்து வந்து விழுந்த ஆஃப் தெ ஃபீல்ட் கமெண்ட்ஸ்...
Vk Srinivasan இங்கே கேண்டீனில் மேத்தி சப்பாத்தி, சேமியா கிச்சடி, வெஜ் ஸ்பிரிங் ரோல் முடிஞ்சு போச்சு. புதுசா ரவா கிச்சடி ரெடி.
*
Vk Srinivasan வயிற்றுக்கும் காதுக்கும் ஈயப்படுகிறது. சொர்க்கம்.
*
ஆதியந்தமில்லாத சரவெடியை முன்னாலும் பின்னாலும் கொளுத்தி விட்டா மாதிரி கடமும் ம்ருதங்கமும் சேர்ந்து முழங்குகின்றன.... காதுக்கு சுகமாக...
*
இன்னமும் சொல்லவோ.. உன் மனம் கல்லோ பாறையோ... கோபல க்ருஷ்ண பாரதியின் நந்தனார் சரித்திரத்திலிருந்து.... மனசைப் பிடித்து உலுக்குகிறார் சிவா... மாஞ்சியாம்... Rajagopalan Venkatraman சொல்றார்... நான் மாஞ்சு மாஞ்சு போறேன்.. கண்களில் நீர் வரவழைக்கும் கீர்த்தனம்... திருப்புன்கூர் திருத்தலம் கண் முன்னே வருகிறது... சபாஷ்..
*
திருப்பாவையிலிருந்து மாலே மணிவண்ணாவும்... நாம சங்கீர்த்தனமாக நாதபிந்து கலாவும்... கச்சேரியின் துக்கடா டெஸர்ட்ஸ்... ம்.. யம்மி... டேஸ்ட்டி...
*
கச்சேரி பூர்த்தியான பின்னர் நான் ஒரு ஆனியன் ரவாவும் வீகேயெஸ்ஸும் வல்லபாவும் ஸ்ட்ராங் ஹார்லிக்ஸும் குடித்துவிட்டு வந்தோம். இந்த சீசனில் நான் நேரடியாக அனுபவிக்கும் முதல் கச்சேரி.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails