Tuesday, July 29, 2014

மழை...நெரிசல்..இறைவா..

பக்கத்து வீட்டுக் கோகுல் (வயசு 3) நடுவாசல்ல வந்து நின்னு சொட்டு உச்சா போனால் கூட சென்னை நகரமெங்கும் ட்ராஃபிக் ஜாம் ஆகிவிடுகிறது. ஒரே ”பாம்..பாம்.” “த்தோடா.. போப்பா முன்னால...”. ”லெஃப்ட்ல வாங்கு...” “இன்னும் ரெண்டு அவுரு ஆவுமாம்ப்பா..” ”ஒண்ணு போ.. இல்லே ஒத்து...” போன்ற பாஷைகள் நிறைந்த சென்னையாகிவிடும்.

கல்யாண வீட்டில் பன்னீர் தெளிப்பது போல வானம் லேசாகத் தூறல் போட்டால் இருசக்கராதிகள் ஆக்ஸிலைத் திருக அச்சப்படுகிறார்கள். நியாயம்தான். அசந்தால் மேன்ஹோலை திறந்து வைத்து ஸ்வாகா செய்துவிடுவார்கள்.

கௌரவாதிகள் பீமனுக்கு சாப்பாட்டில் விஷத்தை வைத்துக் குண்டு கட்டாகக் கல்லைக் கட்டி அவனைக் கடலில் எறிந்த போது அவன் நேரே ஜிங்குன்னு போய் பாதாளலோகத்தில் இறங்கினானாம். அங்கு ஆட்சி செய்த நாகராஜா வைர வைடூர்யங்களைப் பரிசளித்து நாலு நாள் விருந்தாளியாக வைத்து ஈடு ஈடாகக் கொழக்கட்டையெல்லாம் பண்ணிப் போட்டுக் குஷிப்படுத்தி பூலோகம் அனுப்பினானாம். நாமெல்லாம் பீமனல்ல. வெறும் மேன். மேன்ஹோலில் விழுந்தால் நேராக மேலோகம்தான். யம கிங்கரர்கள் எண்ணெய்ச் சட்டியில் நம்மை ஜட்டியோடு இறக்கி ராஜோபசாரம் செய்வார்கள். டேக் கேர் மேன்.

போரூர் பகுதியில் மீட்புப் பணிகள் நடப்பதற்கு தொந்தரவாக இருக்கக்கூடாதென்று கோயம்பேடு திசையில் வண்டியை விட்டேன். கோயம்பேட்டிற்கு ஐந்தாறு கி.மீக்கு முன்பே எதிரே சுனாமி வருவதுபோல மக்கள் சின்னாபின்னமாகத் தெறித்து வண்டியோட்டினார்கள். ஊருக்கு உழைக்கும் நல்லவர் இருவர் “ரெண்டு பக்கமும் வண்டியெல்லாம் முட்டிக்கிட்டுக் நிக்கிது. அப்படியே திரும்பிப் போய்டுங்க..” என்று உதவிக் குரல் கொடுத்தனர். நின்ற மேனிக்கு அப்படியே திரும்பிய சில ஆர்வக்கோளாறு அபிஷ்டுக்கள் பின்னால் நின்ற வண்டியின் பம்பரை பதம் பார்த்து பேரம் பேச நின்றார்கள். பேரம் படியும் போது அவர்களுக்குப் பாதை தெரியக்கூடும்.

குல தெய்வமான ஏழுமலையானை வேண்டிக்கொண்டு இன்ச் இன்ச்சாக சக்கரத்தைத் திருப்பி கைகள் ஸ்டியரிங்கோடு பின்னிக்கொள்ள வளைத்து வந்த வழியே திரும்பினேன். எப்போது மழை வந்தாலும் தத்தளிக்கும் கோயம்பேட்டை மீட்கும் கட்சிக்குதான் அடுத்த தேர்தலில் எனது வெற்றி வாக்கை அளிப்பேன். கோயம்பேட்டைக் காபந்து செய்பவர்களே கோட்டையை ஆளட்டும்.

“எங்கடா வந்திண்டிருக்கே?”

“போரூர்மா...”

“அச்சச்சோ.. ஏன்டா?”

“கோயம்பேடுல ட்ராஃபிக் ஜாம்”

“அதெப்படி உனக்குத் தெரியும்?”

“போய்ட்டு திரும்பி வந்தேன்...”

“அங்க போய்ட்டு ஏன் போரூருக்கு திரும்பி வந்தே?”

“தாண்டி போக முடியாமதான்...”

“திரும்ப முடிஞ்சுதா?”

“ம்... “

“திரும்ப முடிஞ்சுது.. தாண்ட முடியலையாடா?”

“ஆமா.”

“ஏன்?”

“வண்டி ஒரு டன் வெயிட்டுமா. நானென ஆஞ்சநேயரா.. சஞ்சீவ பர்வதத்தை தூக்கறா மாதிரி வண்டியையும் சேர்த்து தூக்கிண்டு வர்றதுக்கு...”

“நக்கலாடா?”

“இல்லம்மா..”

“கிண்டலா?”

“நான் திரும்பவும் கோயம்பேட்டுக்கே போய்டறேன்மா.. வச்சுடட்டுமா?”

என்னைப் பெற்ற தெய்வத்துடன் சம்பாஷித்தது.

ஃபோனை எடுத்தால் ஐம்பது கேள்விக்கு மிகாமல் அசராமல் கேட்கும் நற்குணம் வாய்த்த நல்லாள். காலிரண்டையும் கழற்றி வீசிவிடும்படி வலித்தது. சிக்னல் போடாமல் ஹெட் சிக்னல் செய்து பாபம் செய்தவர்கள், ஸ்விஃப்ட்டை நடைவண்டியாய் பாவித்து நடுரோட்டில் ஓட்டும் உத்தம வயோதிகர்களைப் பரிகசித்தவர்களை, டாங்க்கர் டாங்க்கராகத் தண்ணீரைக் காசுக்கு விற்றவர்களை, மீட்டரையும் சிக்னலையும் துச்சமாக மதிக்கும் ஆட்டோவாலாக்களை, இழுத்து வந்து மழைக்காலத்தில் சென்னையில் காரோட்ட விடவேண்டும் என்ற ஆங்காரத்துடன் வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தேன்.

“கோயம்பேட்டுக்கே போய்டறேன்னு சொன்னே!” கையில் சாம்சங்கில் கேண்டி க்ரஷ் சாகாவுடன் அம்மா.

ச்சே! நா போறேம்பா... நா போறேன்...

இறைவா! ட்ராஃபிக்கிலிருந்து என்னை காப்பாற்று. ஆட்டோக்களையும் மாநகர பஸ்களையும் நானே பார்த்துக்கொள்கிறேன்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails