Tuesday, July 29, 2014

கற்பூர நாயகியே கனகவல்லி

வார்பிடித்த மேளங்களின் இடிமுழுக்கத்துடன் இரட்டை நாகஸ்வரத்துடன் சிம்மவாஹினியாக பொன்னியம்மன் பவனி வந்துகொண்டிருந்தாள். கும்பாபிஷேக தினக்கொண்டாட்டத்தை சாக்ஸஃபோன் கச்சேரி வைத்து சிறப்பிக்க ஏற்பாடாயிருக்கிறது போலிருக்கிறது. இருவர் ஜோடியாக ஏற்றி இறக்கி வாசித்தார்கள். வாசிப்பில் ஒத்து மெயின் என்றெல்லாம் இனம் காண முடியாதபடி ஒத்தாக இருந்தது.

”கற்பூர நாயகியே கனகவல்லியை...” சுழற்றிச் சுழற்றி சாக்ஸ் காற்றாலேயே அடித்தார்கள். சாக்ஸ் கண்டமேனிக்குக் கதறியது. கத்ரி கோபால்நாத் கவனமாக இருக்க வேண்டும். கண்ணாப்ரேஷன் கூலிங் க்ளாஸ் அணிந்த வெற்றுடம்புப் பெரியவர், காது வைத்த மஞ்சள்பையில் அர்ச்சனையுடன் ஒரு அம்மணி, வாய் பூராவும் ஒரு கௌளி வெற்றிலையைக் குதப்பி; மகிஷ வதத்திற்குப் பின்னர் இரத்தம் குடித்து வழிந்த காளிகாதேவி போல உதட்டோரங்களில் ரெண்டு சொட்டுக் காவி நீர் தெரிய ஒருத்தர் என்று ஐந்தாறு பேர் நாற்காலியில் அமர்ந்து எதிரில் சாக்ஸஃபோன் அசைவதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். பாவம்! வீட்டில் என்ன பிரச்சினையோ?

அம்மனின் திருவீதியுலா முடியும் தருணத்தில் நாதஸ்ஸும் சாக்ஸும் ”நீயா? நானா?” என்று மோதும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. மேடையிலிருந்த சாக்ஸில் இப்போது எல்லார் ஈஸ்வரியின் அடுத்த பாட்டைத் தம் கட்டிக்கொண்டிருந்தார்கள். தெருவிலிருந்த துடிப்பான நாதஸ்வரகாரர் புதுரத்தம் பாய வீறுகொண்டு எழுந்து இங்கிலீஷ் நோட்ஸ் வாசித்தார். தலை வித்துவான் தோரணையில் ஆடியது. அந்தப் பிரதேசமே கிடுகிடுக்க அவருக்கு சப்போர்ட்டாக மேளங்கள் முழங்கின. மேடையிலிருந்த சாக்ஸ்ஸஸ் பார்ட்டி சற்றுநேரம் அமுக்கி வாசிக்கவேண்டியதாயிற்று. நாதஸ்ஸுக்கு சக்ஸஸ். மின்னல் பொழுதிற்கு அந்த நாதஸ்வரக்காரர் சிக்கல் சண்முகசுந்தரமாய்த் தெரிந்தார்.

கற்பூரார்த்தியில் அம்மன் தரிசனம் ஆனதும் தாமதிக்காமல் வீட்டுக்கு விரைந்து வந்துவிட்டேன்.

கச்சேரி கேட்டுக்கொண்டிருந்தவர்களும் வீடு திரும்பியிருக்கவேண்டுமே என்று இப்போதும் கவலையாக இருக்கிறது.

#தாயே_காப்பாத்து!

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails