Monday, September 16, 2013

ஊதா கலரு ரிப்பன்


நேற்று ரெண்டாம் ஆட்டம் வ.வா.சங்கம் போயிருந்தேன். புது படத்திற்கு சத்யத்தில் எலைட் டிக்கெட் கிடைக்க நீங்கள் பூர்வ ஜென்மத்தில் ஐந்தாறு ஏழைக் கலாரசிகர்களுக்குச் சினிமா டிக்கெட் எடுத்துக்கொடுத்து இண்டெர்வெல்லில் கை நிறைய தீனியும் வாங்கிக்கொடுத்துத் தொண்டு புரிந்திருக்கவேண்டும். நானொரு புண்ணியாத்மா என்பது அனைவரும் அறிந்ததே. எனக்கு அந்த அதிர்ஷ்டமிருந்தது.

‘ஏ’ரோவில் பீரோ மாதிரி குஷ்பூ தனது ஸ்நேகிதகளுடன் அமர்ந்து வி.தா.வருவாயா பார்த்தபோது நானும் உடனிருந்தேன். அதாவது அவரிடமிருந்து ஐந்தாறு ரோக்களுக்கு கீழே. கலகலப்பு மசாலா கேஃப் பார்த்தபோது மிர்ச்சி சிவா என் தலைக்கு ரெண்டு ரோ மேலே அமர்ந்திருந்ததை அகஸ்மாத்தாக கண்டுபிடித்த என்னிடம் ”கூட்டத்திற்கு காட்டிக் கொடுக்காதீர்கள்” என்று கண்ணாலையே கெஞ்சி சீட்டோடு பொட்டலமாக முடங்கிக்கொண்டார். பிழைத்துப்போகட்டும் என்று விட்டுவிட்டேன். இந்த வரலாற்று நிகழ்வுகளுக்குப் பின்னர் இன்றுதான் சத்யத்தில் சினிமா பார்க்கிறேன். ”இந்தப் படத்தோட ஹீரோயின் இன்னிக்கி நம்ம கூட படம் பார்க்க வர்றாங்கலாம்” என்று பலகணி ஏறும்போது ஜெர்க் விட்டேன். என்னுடன் வந்தவர்களும் சகபடியேறிகளும் என்னைப் பார்வையாலேயே தாயம் உருட்டினார்கள்.

ரெண்டாம் ஆட்டமானாலும் காலை மிதித்துக்கொண்டு இருட்டில் சீட் தேடும் கூட்டம் இன்னமும் தியேட்டர்களில் உலவுகிறது. அந்தக் காலத்தில் திரை மூலைகளில் கலடியாஸ்கோப் வளையல்களுக்கு நடுவே ஜிகுஜிகுன்னு டைட்டில் போடும் உத்தி போல ஏதோ ரிப்பன் ரிப்பனாக உருவித் தலைப்புப்போட்டார்கள். படம் பற்றி இன்னும் எழுதவேயில்லை. அதற்கு முன்னாலேயே இவ்வளவு ராமாயணமா என்று கூவுபவர்களுக்கு ஒரு வார்த்தை. சிரிப்பொலி, ஆதித்யா சேனல்களில் துணுக்குத் தோரணம் பார்த்து ரசிப்பது போல சீனுக்கு சீன் ஒட்டவைத்த பிட் காமெடிகள். அவ்வளவுதான். கதை என்ன? கலை என்ன? அப்படியெல்லாம் சாங்கோபாங்கமாகக் கேட்பவர்கள் சத்தியஜித் ரே படங்களை முக்கு கடையில் வாடகைக்கு எடுத்து வீட்டு சோஃபாவில் லேஸ் சகிதம் கண்டு ரசிக்கவும்.

சிவகார்த்திகேயன் பாய் நெக்ஸ்ட் டோர் போல இருக்கிறார். வெட்டியாக பொழுது போக்கி பஞ்சாயத்து மேடையில் பகலிலேயே தூங்கி பரோட்டா சூரியுடன் தெருத் தெருவாக ஊர் சுற்றி மைனர் குஞ்சாக வலம் வருகிறார். அப்படியொன்றும் வசதியானவரும் அல்ல. காதல் மற்றும் பல படங்களில் அம்மைவட்ட மூஞ்சியுடன் கரகரத் தொண்டையுடன் பயமுறுத்தும் ”காதல்” அப்பாவெல்லாம் வேஷ்டி கட்டிய காமெடியனாகக் காட்டி பயம் தெளிய வைத்தார்கள். சிவா மற்றும் சூரி இணைந்து வரும் காட்சிகளிலெல்லாம் சூரியின் வசன பன்ச் ரசிக்கவைக்கின்றன. மீசை முறுக்கோடு வரும் சத்யராஜ் கடமை கண்ணியம் கட்டுப்பாடு போல நடித்து காட்சிக்கு காட்சி இறுக்கமாயிருக்கிறார். இந்தப் படத்தின் மொழியோடு இணைந்திருப்பது போல இல்லை. துப்பாக்கியோடு சத்யராஜ் மல்லுக்கட்டும் காட்சிகள் நம்மை பிராண்டுகின்றன.

ஸ்ரீதிவ்யாவாம். ஹீரோயின். பாவாடை சட்டையிலும் சரி புடவையிலும் சரி பாந்தமாக இருக்கிறார். ஒரு ஆங்கிளில் பாய் ஃப்ரெண்டுகளை மிரட்டும் அஞ்சலியின் சாயல் தெரிகிறது. வேலைவெட்டியில்லாத பசங்களைத் துரத்திக் காதலித்துக் கரையேறும் பெண்களைக் காட்டி இன்னும் எவ்வளவு படம் எடுப்பார்களோ தெரியவில்லை. திடீர் ஷாக் கொடுக்கிறோம் பேர்வழி என்று வைக்கும் ட்விஸ்ட் காட்சிகள் மொக்கையாக இருக்கின்றன. ஒரு நாளிரவு லதாபாண்டியும் போஸ்பாண்டியும் (நாயகி,நாயகன்) கோழிக்கூடைக்குள் மறைந்து சரசம் செய்யும்போது சத்யராஜ் பால்கனி வந்து எட்டிப்பார்க்கிறார். நாமும் கையும்களவுமாகப் பிடிக்கப்போகிறார் என்று நினைக்கும் போது ”எங்கப்பாவுக்கு தூக்கத்தில நடக்கிற வியாதி” என்று முத்துப்பற்கள் தெரிய குழந்தையாய்ச் சிரிக்கிறார் ஸ்ரீதிவ்யா. சகிக்கவில்லை. ஸ்ரீதிவ்யாவின் சிரிப்பைச் சொல்லவில்லை. சீனைச் சொன்னேன்.

இண்டெர்வெல்லுக்கு அப்புறம் ஏசியை நிறுத்தி கரெண்ட் மிச்சம் பண்ணும் வழக்கம் இன்னும் சினிமாக் கொட்டாய்களில் இருப்பது புலனானது. பின்னால் அமர்ந்திருந்த சில வாலிபர்கள் வருத்தப்படும் அளவிற்கு அவ்வப்போது ஓலமிட்டார்கள். காலேஜ் ஆர்வியெஸ் கண்ணுக்கு வந்து அதையும் ரசிக்கச் சொன்னான். காதல் தோல்வியில் சிவகார்த்திகேயன் சில பன்ச் வசனங்கள் பேசும்போது பாதிக்கப்பட்ட தேவதாஸர்கள் கரவொலியெழுப்பியும் விசிலடித்தும் தன் மனவேதனையைப் போக்கிக்கொண்டார்கள். ”திரிஷா இல்லைன்னா திவ்யா” காலத்திலும் கா.தோல்வியில் தத்துவப்பாடல் கேட்கும் க்ரூப் அவர்கள் என்று தெரிகிறது.

ஒரு சீனில் காதல் தோல்வியடைந்து விரக்தியில் இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு அவரது தந்தையே “காதல் தோல்வி மருந்து” சாப்பிடு என்று காசு கொடுப்பது முகம் சுளிக்கவைக்கும் சீனாக இருக்கிறது. குடிக்கும் போதும் புகைபிடிக்கும் போது “உடல் நலத்திற்கு தீங்கானது” என்று சப்டைட்டில் போடுவோர் இது போன்று லாகிரி வஸ்துகள் மேல் மோகத்தைத் தூண்டும் காட்சிகள் வரும்போது திரையின் பாதத்தில் “இது மனநலத்திற்கு தீங்கானது” என்று போடவேண்டும். காதலனில் பிரபுதேவாவும் அவரது அப்பாவாக வரும் எஸ்பிபியும் சேர்ந்து பீர் குடிப்பார்கள். இது ஷங்கர் ஆரம்பித்துவைத்த ஆட்டம். கிராமங்களில் நடக்கும் ஆடல்,பாடல் நிகழ்ச்சியின் ஸ்ட்ரிப் டீஸ் வகையறா யோக்யதையைத் தைரியமாகக் காண்பித்தற்கு இயக்குனரைப் பாராட்டலாம்.

இமானின் இசை. கரகாட்டக்காரனின் முந்தி முந்தி விநாயகரே பாடலுக்கு கரோகி கொடுத்தது போல ”வருத்தப்படாத வாலிபர் சங்கம்” என்ற பாடல். அந்த டர்டர்ரென்று உருமும் உருமி மொதற்கொண்டு அப்படியே. ஊதா கலரு ரிப்பன் ஹிட். கேஷுவலான பாடல். ரெண்டு மாசம் கேட்கலாம். அப்புறம் காது மடங்கிக்கொள்ளும். மற்றபடி சொல்லிக்கொள்ளும்படி எதுவுமில்லை. கும்கியின் வாசனை பல பாடல்களில் இருக்கிறது.

நான் கடவுளில் வரும் டிஎம்டி இரும்புக் கம்பி தேக மொட்டைத்தலையர் இந்தப் படத்தில் காது குடைந்துகொண்டே வருகிறார். எதுவும் வலுவான காரணமில்லாமல் சிவனாண்டி சத்தியராஜும் இன்ன பெயர் என்று காதில் விழாத அந்த மொ.தலையரும் அடித்துக்கொண்டு “உன் பொண்ணு இழுத்துக்கிட்டு ஓடிடுவாடா” என்று சாபம் கொடுக்கிறார் மொ.தலையர். அதைப் பொய்யாக்க தன்னுடைய இரண்டு பெண்களையும் பள்ளிப்பருவத்திலேயே மணம் முடித்துக்கொடுக்கிறார். மூன்றாமவள் தான் படத்தின் ஹீரோயின். அவளுக்கும் சிவகார்த்திகேயனுக்கும்.......

இதற்குமேல் படத்தைப் பற்றி சொல்வதற்கு எதுவுமில்லை. நேரத்தை விரயம் செய்ய முடிந்தவர்கள் வருத்தப்படாமல் வாலிபம் பொங்கப் பார்க்கலாம்.

[முதல் பாராவில் கத்தரி விழுந்து இந்த தினமணி இணைப்பில் வெளிவந்தது. ]

7 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்ல விமர்சனம்.....

இப்போதெல்லாம் படம் பார்க்கும் அளவிற்கு பொறுமை இல்லை மைனரே.....

Geetha Sambasivam said...

// புது படத்திற்கு சத்யத்தில் எலைட் டிக்கெட் //

அப்படின்னா என்ன?

// மிர்ச்சி சிவா//

யாருங்க அவரு?

//சிவகார்த்திகேயன் பாய் நெக்ஸ்ட் டோர் போல இருக்கிறார். //

ஹிஹிஹி, யாராக்கும் இவரு??

//வெட்டியாக பொழுது போக்கி பஞ்சாயத்து மேடையில் பகலிலேயே தூங்கி பரோட்டா சூரியுடன் //

பரோட்டாக் கடைக்காரரா?

ஸ்ரீதிவ்யாவாம். ஹீரோயின். //

ஹிஹிஹி., அ.வ.சி.

// காதலனில் பிரபுதேவாவும் அவரது அப்பாவாக வரும் எஸ்பிபியும் சேர்ந்து பீர் குடிப்பார்கள். இது ஷங்கர் ஆரம்பித்துவைத்த ஆட்டம். //

கஷ்டம், கஷ்டம், இப்படி எல்லாமா படம் வந்திருக்கு?? நல்லவேளையா எதுவ்ம் தெரியலை. :(

வருத்தப்படாத வாலிபர் சங்கம்னதும் நம்ம. வ.வா.ச. பதிவு னு நினைச்சுட்டேனே! ஏமாந்துட்டேனே! இப்படி ஒரு படம் வந்திருக்கு?????????????????

Geetha Sambasivam said...

தொடர

RVS said...

@வெங்கட் நாகராஜ்

எனக்கும் நேரமில்லைதான். தியேட்டர் பக்கம் ரொம்ப நாள் ஆச்சு. அதான் எட்டிப் பார்த்தேன்.

RVS said...

@Geetha Sambasivam

மேடம்! ரொம்பக் கேள்வி கேக்கிறீங்க.... இனிமே நான் படத்துக்கு போற மாதிரி இல்லை.. அப்படியே போனாலும் எழுதமாட்டேன்.. ஆமா... :-)

Geetha Sambasivam said...

//மேடம்! ரொம்பக் கேள்வி கேக்கிறீங்க.... இனிமே நான் படத்துக்கு போற மாதிரி இல்லை.. அப்படியே போனாலும் எழுதமாட்டேன்.. ஆமா... :-)//

ஹிஹிஹிஹி, அது!!!!!!!!!!!!!!! அந்த பயம் இருக்கட்டும்! :))))))

மாதேவி said...

வ.வா.சங்கம் படம்பார்த்து வருத்தப்படாமல் இருக்கவேணும். :))

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails