Thursday, November 27, 2014

நரியப்பன் - காகாஸ்வரன்

”நாம் இனிமே இந்த மரத்துக் கிளையில் இருக்கக்கூடாது... வேற அட்ரெஸுக்கு போயிடணும்..” சிணுங்கியது பெண் காகம். ஆண் காகம் வருத்தம் தோய்ந்த முகத்துடன் “கா....” என்று ஈனஸ்வரத்தில் கரைந்தது.
”என்னுடைய முட்டைகளையெல்லாம் அந்த கரும் பாம்பு தின்றுவிடுகிறது. நமக்கு சந்ததியே இல்லாமல் செய்துவிடும் போலிருக்கிறதே...” என்று அழுதது. 

“இதே மரக்கிளையில்தான் நான் பிறந்தேன். வளர்ந்தேன். உன்னைக் கல்யாணம் செய்து கொண்டேன். இதோ குடும்பம் நடத்துகிறேன். இங்கிருந்து என்னைக் கிளம்பச்சொல்லாதே.. ப்ளீஸ்...” என்றது.

“எனக்கென்ன பதில்?” முறைத்தது பெண் காகம்.

“இதை புத்திசாலித்தனமாக அணுக வேண்டும். என்னுடைய நண்பன் குள்ள நரியப்பனிடம் ஆலோசனை கேட்கிறேன். அவன் புத்திசாலி...” என்று கூறி சிறகடித்துப் பறந்து சென்று நரியை அழைத்து வந்தது.

சினிமாக்களில் எல்லோரும் திரை பார்க்க பின்னணி இசை ஒலிக்க காதுகளில் ரகசியம் பேசி தலையை மட்டும் ஆட்டிக்கொள்வார்களே.. அது போல நரி பேச காகம் தலையசைத்து விட்டு சிரித்தபடி பறந்தது. மரத்தின் மேல் அமர்ந்திருந்த காகாயினிக்கு எதுவும் புரியவில்லை.

சிறிது நேரத்தில் ஆண் காகம் எதையோ தூக்கிக் கொண்டு வந்து மரத்தினருகில் இருந்த பாம்புப் புற்றுக்குள் பொத்தென்று போட்டது.

“என்னது அது?” என்று விசாரித்தது மனைவி காகம் காகாயினி.

“பொறுத்திருந்து வேடிக்கையைப் பார்...” என்று ஒரு இறக்கையால் காகாயினியை அணைத்து புற்றின் மீதிருந்து கண்ணெடுக்காமல் அமர்ந்திருந்தது புருஷன் காகாஸ்வரன்.

சிறிதுநேரத்தில் ஐந்தாறு ஆட்கள் அந்தப் புற்றருகில் அவசர அவசரமாக சூழ்ந்துகொண்டார்கள். கையிலிருந்த கோடாலியாலும் ஈட்டியாலும் அந்தப் புற்றை இடித்துத் தரைமட்டமாக்கினார்கள். பாம்பை அடித்துக் கொன்று விட்டு அங்கே பளபளவென்று ஜொலித்த வைர அட்டிகையை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டனர். பொண்டாட்டி காக்காவுக்கு ஏகப்பட்ட சந்தோஷம்.

இறக்கையால் கட்டிப் பிடித்து அலகோடு அலகாக முத்தமிட்டு “எப்படி இது
நடந்தது?” என்று வெற்றிக் கதை கேட்டது.

“ராணி பக்கத்துக் குளத்திற்கு தினமும் குளிக்க வருவார்கள். அவரது நகையை கொத்திக் கொண்டுவந்து பாம்புப் புற்றில் போட்டுவிடு. வீரர்கள் ஓடி வந்து புற்றை அழித்து பாம்பையும் கொன்று போடுவார்கள். நீ இந்த மரத்தை விட்டு நகராமல் மகிழ்ச்சியாக காலம் தள்ளலாம்... என்று நண்பர் நரியப்பன் ஐடியா கொடுத்தார். பாம்பு பக்கிரி தீர்ந்தான்” என்று சொல்லி இறக்கைகளைச் சடசடத்தது.

“கா..கா...கா..கா..” என்று இருவரும் டூயட் பாடினார்கள்.

சுபம்.

*
பாட்டி வடை சுட்டக் கதையில் காகத்தை பாடச் சொல்லி ஏமாற்றிய நரி இந்தக் கதையில் அதற்கு உபகாரம் செய்து பாவத்தைக் கழுவிக்கொண்டது.

பின் குறிப்பு: இக்கதையின் மூலம் கன்னடம். ஏகே ராமானுஜன் தொகுத்து ஆங்கிலத்தில் எழுதிய இந்திய நாட்டுப்புறக் கதைகள் புஸ்தகத்திலிருந்து உருவினேன். கதைக் கருவைச் சிதைக்காமல் என் போக்குக்கு கேரெக்டர் பெயர் கொடுத்து எழுதி இறுதியில் க்ளைமாக்ஸ் இணைத்து சுபம் போட்டது அடியேனின் துடுக்குத்தனம்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails