Thursday, November 27, 2014

கணபதி முனி - பாகம் 16 : சுக்லாம்.. பரதரம்.. விஷ்ணும்... ப்ராம்மண ஸ்வாமி......

ஒரு நாள் தனது அத்யந்த சிஷ்யரான விஸ்வநாதனுடன் அருணை மலை ஏறினார் கணபதி. ”ஏனிந்த திடீர் கிரியேற்றம்?”. விஸ்வநாதனுக்கு கேள்வி மண்டையைக் குடைந்தது. மௌனமாகக் குருவைப் பின் தொடர்ந்தார் விஸ்வநாதன். மலையேறுவதின் நோக்கம் சட்டென்று புரியவில்லை. காற்று வீசி தலையைக் கலைக்க விரூபாக்ஷி குகையை வந்தடைந்தனர். கணபதி உள்ளே நுழைந்தார். யாருமில்லாமல் ”ஹோ...”வென்று இருந்தது.

”ப்ராம்மண ஸ்வாமி இங்கேதான் இருப்பார் என்று ஓடிவந்தேன் ..” கண்களைக் குகையைச் சுற்றிலும் இண்டு இடுக்கு விடாமல் தீவிரமாக ஓட விட்டார் கணபதி. ஊஹும். காணவில்லை. சற்று நேரம் இப்படியும் அப்படியும் தேடினார்கள். கீழே அண்ணாமலையாரின் கோபுரம் கம்பீரமாக விண்ணுக்கு வளர்ந்து நிற்பது தெரிந்தது. “சரி.. அவரை அடிவாரத்தில் தரிசிப்போம்...” என்று இருவரும் மலையிலிருந்து விடுவிடுவென்று இறங்கி நேரே பத்மநாபஸ்வாமி ஆஸ்ரமத்திற்கு விரைந்தனர்.

உள்ளே நுழைந்ததும் கண்ணெதிரே கௌபீனத்தோடு ஞானஸ்வரூபமாய் ப்ராம்மண ஸ்வாமி ஒரு மூலையில் சாந்தம் ததும்ப அமர்ந்திருந்தார். அவரைக் கண்ட உடனேயே காசியில் “துர்க்காமந்திர் யோகி” சொன்னது நினைவுக்கு வந்தது. துர்க்காமந்திர் யோகி என்ற நாமகரணத்துடன் சாட்சாத் சிவபெருமானே விஜயம் செய்து கணபதியுடன் பேசியது, கடிதத்தில் கணபதியின் கோட்டோவியத்தை வரைந்தது, போன்ற அற்புதங்களை இத்தொடரை விடாமல் படித்து வருபவர்களுக்கு நியாபகம் இருக்கலாம். அந்த யோகி “ஸ்தூலசிரஸ்” என்று அன்று காசியில் கணபதிக்கு விளக்கிய சன்னியாசத் தன்மைகள் நிரம்பப் பெற்றவராக ப்ராம்மணஸ்வாமி தெரிந்தார். கருணை பொழியும் கண்களுடன் அவரிடம் ஒரு பிரம்ம தேஜஸ் சுடர்விட்டதைக் கணபதி கண்டுகொண்டார். ஆன்மிகத்தின் உச்சத்தில் அவர் தெய்வாம்சமாக அமர்ந்திருப்பது கணபதியின் ஞானக் கண்ணுக்குப் புலப்பட்டது.

யோகிகளும் ஞானிகளும் சத்சங்கமாகக் கூடிய அந்த ஆஸ்ரமத்தில் சிறிது நேரம் இருவரின் கண்கள் மட்டுமே பரஸ்பரம் பேசிக் கொண்டன. சதஸில் நடுநாயகமாக வீற்றிருந்த பத்மநாபஸ்வாமிக்கு கணபதியின் சம்ஸ்கிருத பாண்டித்தியத்தின் அசர அடிக்கும் தன்மை தெரியும். அங்கே நிலவிய மௌனத்தைக் கலைத்து ”கணபதி! சுக்லாம் பரதரம் விஷ்ணும் என்கிற கணேச ஸ்லோகத்திற்கு பாஷ்யம் சொல்லேன்.....” என்று ஆரம்பித்துவைத்தார்.

வெல்லக்கட்டியாய் அந்த விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய ஆரம்பித்தார். அன்று ஆஸ்ரமத்தில் குழுமியிருந்தவர்கள் பூர்வ ஜென்மத்தில் மஹா புண்ணியம் செய்திருக்கவேண்டும். அந்த குட்டியோண்டு நாலுவரி பிள்ளையார் ஸ்லோகத்திற்கு நானாவிதமான விளக்கங்களைப் பகிர்ந்துகொண்டார். அக்ஷரம் அக்ஷரமாக நிறுத்திப் பொருள் சொன்னார். பக்தஜனம் பிளந்த வாயை மூடாமல் கேட்டுக்கொண்டிருந்தது. 

இப்பிரசங்கத்திலிருந்து சூட்சுமமாக எழுந்த ப்ரவண ஸ்வரூப விக்னேஸ்வரர் அந்த ஆஸ்ரமம் முழுவதும் ஆக்கிரமித்தார். பத்மநாபஸ்வாமி பக்திப் பரவசமடைந்தார். இந்தக் கூட்டத்தில் சலனமேயில்லாமல் ஒரு மூலையில் ப்ராம்மண ஸ்வாமி சிவனேன்னு அமர்ந்திருந்தார். கொடுத்த விளக்கங்களுக்கெல்லாம் சிகரம் வைத்தார்ப்போல “சுக்லாம் பரதரம் விஷ்ணும்..”மை ப்ராம்மண ஸ்வாமியோடு ஒப்புமைப்படுத்தி அதிரடியான பிரவசனத்தில் இறங்கினார். ஆச்சரியத்தில் கூட்டம் நிமிர்ந்தது.

”கௌபீனம் அணிந்திருப்பதால் அவரே சுக்லாம்பரதரா. முற்றும் உணர்ந்து சர்வவியாபியாக இருப்பதால் அவரே விஷ்ணு. சந்திரனைப் போல ஜொலிக்கிறார். மனம், ஐம்புலன்கள், சிந்தனை, சுயம் ஆகியவற்றை வென்ற சதுர்புஜர். அமைதி கொஞ்சும் முகத்தவராதலால் ப்ரச்சன வதனர். தன்னிடம் சரணாகதியடைந்து தியானிப்பவர்களின் வாழ்வில் இடறும் தடைகளைக் களைகிறார்”

இதைக் கேட்கக் கேட்கப் பக்தர் கூட்டம் பேருவுவகை அடைந்தது. கரவொலி எழும்பி ஆசிரமக் கூரையைத் தட்டியது. எதற்கும் சலனமில்லாமல் அமர்ந்திருந்த ப்ராம்மண ஸ்வாமி சன்னமாக புன்முறுவல் பூத்தார். அகவொளி வாய் வழியே தவழ்ந்து வந்து பளிச்சிட்டது.

சரியாக ஒரு மாதம் கழித்து கணபதியின் மனைவி விசாலாக்ஷியும் ஐந்து வயது மகன் மஹாதேவ சாஸ்திரியும் அருணாசலத்திற்கு வந்திறங்கினார்கள். வந்த கையோடு இருவரையும் அழைத்துக்கொண்டு ப்ராம்மண ஸ்வாமியை ஆசிரமத்தில் தரிசித்து குடும்ப சகிதம் நமஸ்கரித்தார். ஆசீர்வாதம் பெற்றார். ஆனால் இன்னமும் ப்ராம்மண ஸ்வாமியை அவரே கதியென்று முழுச் சரணாகதியடைய கணபதிக்கு உத்தரவாகவில்லை. காலம் உருண்டது. கணபதி திருவண்ணாமலையில் நிலைகொண்டார்.

இதற்கிடையில் கல்பாத்தி ராமஸ்வாமி என்கிற சிஷ்யர் கணபதி அருணாசலேஸ்வரரைத் துதித்து இயற்றிய ஹரசகஸ்ரத்தை அவரது கிராமத்துக்கு படியெடுக்கக் கொண்டு சென்றார். எதிர்பாராத விதமாக அவர் அங்கேயே இறந்துவிட ஹரசகஸ்ரம் தொலைந்து போனது ஏனைய சிஷ்யர்களுக்கும் பக்தர்களுக்கும் பெருத்த ஏமாற்றம்.

*

திருவண்ணாமலையில் தபஸுக்காகத் தங்கியதிலிருந்து முறைப்படி ரிக் வேதம் கனபாடமாகக் கற்கவேண்டும் என்பது கணபதியின் அவா. காதல். வேதத்தைக் கரைத்துக் குடித்த கனபாடிகள் ஒருவரிடம் சேர்ந்து முறைப்படி ரிக் படித்தார். ஒரு வருடத்திற்குள் மனனம் செய்து சப்ஜாடாக மூளைக்குள் ஏற்றிக்கொண்டு அதற்கான பொழிப்புரைகளையும் பலர் எழுதிய பாஷ்யங்களையும் கரைத்துக் குடித்து முழுத் தெளிவு பெற்றார்.

கணபதி இப்போது வேத விற்பன்னராகிவிட்டார். வேதோக்த சடங்குகளைப் பற்றியும் இந்துமத சம்பிரதாயங்களில் ஏற்படும் இன்னபிற சந்தேகங்களையும் நிவர்த்தி செய்வது அவருக்கு முழுநேர வேலையாயிற்று. பஞ்சகச்சமும் கட்டுக்குடுமியுமாக ஒரு சிஷ்யப் பட்டாளம் அவர் பின்னால் எங்கும் சென்றது. அவர் புகழ்பாடவும் சொல் கேட்கவும் ஏராளமானோர் திரண்டனர். இப்போதும் அவரது தவத்தைத் தொடரமுடியாமல் போனது.

சென்னையிலிருந்து சாத்தஞ்சேரி ஏ. ராமஸ்வாமி என்பவர் கணபதியைக் காண பிரத்யேகமாக அருணாசலத்திற்கு ஒரு நாள் வந்திருந்தார். ஹை கோர்ட்டில் கிளர்க் உத்யோகம். பார்த்த கணமே தொபேரென்று நெடுஞ்சாண்கிடையாக கணபதியின் பாதங்களில் விழுந்து சேவித்தார். கணபதியின் பாதாரவிந்தங்களைத் தொடும் போது ராமசாமிக்குள் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி பொங்கியது. பூரணமான ஏதோ ஒன்று உள்ளத்தை மொத்தமாக நிறைத்தது. ஜென்மஜென்மாந்திரமாகப் பழகிய அத்யந்தர் ஒருவரை ஸ்பரிசித்தது போல உள்ளம் இனித்தது. பரமானந்தத்தில் திளைத்து தன்னை சிஷ்யனாக்கிக்கொள்ளும்படி விஞ்ஞாபனம் செய்தார். அவருடைய அதிர்ஷ்டம் “சரி.. ” என்று கணபதியும் உடனே ஒத்துக்கொண்டார்.

அவ்வப்போது இருவரும் விஸ்ராந்தியாக உட்கார்ந்திருக்கும் வேளைகளில் கோர்ட் ராமஸ்வாமியின் பூர்வாசிரமக் கதைகளைக் கேடறிந்தார் கணபதி.

“எனது பாட்டனார் பக்திப் பழம். இஷ்ட தெய்வங்களைத் துதித்து ஏராளமான கிருதிகளை இயற்றியுள்ளார். பல உபநிஷத்துக்களுக்கு ஆளை இழுத்துப்போடும் பாஷ்யங்களை எழுதியுள்ளார். தியோசாஃபிகல் சொஸைட்டியினர் அதை அச்சிட்டு வெளியிட்டுள்ளனர். உபநிஷத் ப்ரம்மம் என்றே அவரை ஊர் அழைத்தது. தியாகப்ரம்மத்தின் தகப்பனாரின் ஸ்நேகிதர் அவர். தியாகராஜர் காஞ்சி விஜயத்தின்போது உபநிஷத் ப்ரம்மத்தின் ஆஸ்ரமத்தில் இளைப்பாறினார்...”

இவ்வாறாக பழைய ருசிகரமானச் செய்திகளை பகிர்ந்துகொண்டிருக்கும் போது ராமஸ்வாமிக்கு கணபதி முனி போன ஜென்மத்தில் தனது பாட்டனார் உபநிஷத் ப்ரம்மம்தான் என்று ஏனோ மனசில் பட்டது. அதுவே சத்தியம் என்று தீர்மானித்தார்.

”ஸ்வாமி! எங்கள் பாட்டனாரே உங்கள் ரூபத்தில் இப்புவியில் அவதரித்திருக்கிறார் என்று எனக்குப் படுகிறது. அவரது ரத்தசம்பந்த சந்ததியினாரன எங்களுக்கு உங்கள் அருளாசி வேண்டும். மேலும் எனக்கும் மந்திர தீக்ஷை அளித்து காத்தருள பணிகின்றேன்” என்று கைகூப்பி காலடியில் அமர்ந்தார். அவருக்கு கணபதி ”கணேச மந்திர” தீக்ஷை அளித்தார்.

இதிலிருந்து பிரதி மாதம் ராமஸ்வாமி ஐயர் சென்னையிலிருந்து அருணாசலத்திற்கு வந்து கணபதியை தரிசிப்பதை வழக்கமாக்கிக்கொண்டார். ஒவ்வொரு முறையும் “நீங்கள் ஒரு முறையாவது சென்னைக்கு எங்கள் அகத்துக்கு எழுந்தருள வேண்டும்.” என்று கைகூப்பி அன்பொழுக அழைப்பார். அதற்கு இசைந்து ஒரு முறை கணபதி சென்னைக்கு வந்தார். ராமஸ்வாமி ஐயரின் அம்மா தொண்டு கிழம். கூன். கண் பார்வை போய் பல வருடங்களாகிவிட்டது. கணபதியின் காலில் விழுந்து நமஸ்கரித்தார்.

ராமஸ்வாமியின் கையைத் தொட்டுக் கூப்பிட்டு “பல வருஷத்துக்கு மின்னால் இந்தத் திருவடியின் ஸ்பரிசத்தை உணர்ந்திருக்கிறேன்” என்று சொன்னபோது அவருக்கு மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றன. உபநிஷத் ப்ரம்மம்தான் கணபதியாக அவதரித்திருக்கிறது என்பதை தெய்வசாட்சியாக நம்பினார். முதிய அன்னையை விட்டு அகல மனமில்லாததால் தூர பிரதேசங்களிலிருந்து வந்த பல உயரிய பதவிகளை உதறினார் ராமஸ்வாமி ஐயர். இத்தகைய தாய் பக்தியைக் கண்டு ராமஸ்வாமியை மெச்சினார் கணபதி.

கணபதி முனியின் வருகையை அறிந்து அடுத்த நாள் பஞ்சகச்சமும் குடுமியுமாக மூவர் ராமஸ்வாமி ஐயரின் கிரஹத்துக்கு வந்தனர். அதில் டாம்பீகமாக இருந்தவர் பஞ்சாபக சாஸ்திரி. வக்கீல் தொழில். தேஜஸாக இருந்தவர் வேதம் வெங்கடராய சாஸ்திரி. புகழ் பெற்ற சம்ஸ்க்ருத பண்டிட். மூன்றாமவர் பெஸ்ட் அண்ட் கோ அதிபர் தண்டலம் சுப்ரமண்ய ஐயர். எல்லோரும் பல சமாசாரங்களைப் பேசிக் கொண்டிருக்கும் போது கணபதி ஒரு சம்ஸ்க்ருத ஸ்லோகத்தை மடமடவென்று மாரியாகப் பொழிந்தார்.

அது....

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails