Thursday, November 27, 2014

கணபதி முனி - பாகம் 19 : வேத வாழ்வே தேவ வாழ்வு

”..இப்படி எழுதுவது ஒன்றும் பிரமாதமான கார்யம் இல்லை” என்று சற்று எள்ளல் கலந்து அலட்டலாகப் பேசினார் அந்த எழுத்துக்காரர்.

கூட்டம் சலசலத்தது. சிலர் ”கணபதிக்கு வேண்டப்பட்ட ஆளாயிருக்கும்..” என்று சந்தேகித்தனர். அறையின் மற்றொரு ஓரத்தில் கூடியவர்கள் ”சுதர்ஸனே எழுதிக்கொடுத்திருப்பாரோ..” என்று கிசுகிசுத்துப் புருவம் சுருக்கினர். ஆளுக்காள் இப்படிக் கட்சி கட்டிப் பேசிக்கொண்டிருந்தாலும் அனைவரும் ”எழுதற அந்த ஆள் தகிடுதத்தம் செய்யறவன் போல்ருக்கே.. சரியில்லைப்பா...” என்று தீர்மானித்தனர்.

இப்போது சுதர்ஸனே கணபதியின் திறமையை நேரடியாக அறிய முன்னுக்கு வந்தார். அஷ்டாவதனத்தின் பிற அவதானங்களுக்கான குறிப்புகளை பலரும் பல திசையிலிருந்து கணபதிக்கு கொடுத்துக்கொண்டிருக்க இடையிடையே ஒரு சம்ஸ்க்ருத எழுத்தும் அவரை நோக்கி வீசப்பட்டது. கொடுக்கப்பட்ட எழுத்துகள் வரிசையிலில்லாமல் கன்னாபின்னாவென்று சிதறியிருக்கும். அவதானங்கள் முடிந்த பிறகு அந்த எழுத்துகளை ஒன்று திரட்டி பொருட்சுவை பொங்கும் பாவாக வடிக்கவேண்டும். இதற்கு வ்யஸ்தாக்ஷரி என்று பெயர். அஷ்டாவதனக் கலையில் உச்சி சிகரம் போன்றது.

இந்த கார்யத்தை சுதர்ஸன் தன் கையில் எடுத்துக்கொண்டார். சின்னச் சின்ன துண்டுக் காகிதங்களில் ஒவ்வொரு எழுத்தாக எழுதி கணபதியிடம் காண்பித்துவிட்டு வாங்கி வைத்துக்கொள்வார். பொதுவாக ஒவ்வொரு எழுத்தாகக் கொடுத்து அஷ்டாவதனம் செய்பவரின் பார்வையில் வைக்கப்பட்டிருக்கும். ஆனால் சுதர்ஸன் அந்த துண்டுக் காகிதத்தை வாங்கி மடியில் சொருகிக்கொண்டார். சிலர் வெகுண்டனர். “இவர் செய்வது துர்கார்யம்” என்று பகிரங்கமாகக் குரல் கொடுத்தார்கள். கணபதியின் காதுக்கு எட்டியது.

“ப்ரிஸிடெண்ட் சித்தப்படியே நடக்கட்டும்...” என்று சிரித்தார் கணபதி. கண்களில் தீக்ஷண்யம் தெரித்தது. கூட்டம் அமைதியானது.

சுதர்ஸன் கொடுத்த அக்ஷரங்களைக் கோர்த்து முழு பாட்டாகப் படித்தார். அவையோர் மொத்தமும் ஆஹாக்காரம் போட்டு அசந்து போன அந்தப் பாட்டு கீழே.

அப்ஸாம் த்ரப்ஸாம் அலிப்ஸாம் சிரதரம் அசரம் க்ஷீரமத்ராக்ஷம் இக்ஷும்
த்ரக்ஷாம் ஸாக்ஷாதஜக்ஷம் மதுரஸம் அதயம் த்ராகவிந்தம் மரந்தம்
மோசாம அசமமந்யோ மதுரிமகரிமா ஸங்கராசார்யவாசம்
ஆசாந்தோ ஹந்த கிந்தைரலமபி ச ஸுதா ஸாரஸி ஸாரஸீம்னா

அவதானம் முடிந்து அவை கலையும் நேரத்தில் ஒரு ஸ்லோகத்தைக் கொடுத்து வியாக்கனம் சொல்லச் சொல்வார்கள். காவியங்களிலிருந்து ஒரு எளிய ஸ்லோகத்தைக் கையில் கொடுத்து அர்த்தம் கேட்பார்கள். ஆனால் இம்முறை சுதர்ஸன் தான் கேட்ட வ்யஸ்தாக்ஷரியின் அர்த்தம் கேட்டார். சபையோர் திடுக்கிட்டனர். கணபதி அனாயாசமாக பொருள் கூற ஆரம்பித்தார்.
“கொடுத்த பாடலில் எக்கச்சக்கத் தவறுகள். இலக்கண விதிமீறல்கள் ஏராளம்.. லோகத்தில் புழங்கும் மலிவான இலக்கியத்துக்கு இதுவே சான்று ” என்று சுதர்ஸனைக் கூர்ந்து பார்த்து ஒரு பிடிபிடித்தார்.

சுட்டிக்காட்ட முடியுமா என்று சுதர்ஸனின் கண்கள் பரபரத்தது.

ஒவ்வொன்றாக நிதானமாகச் சொல்ல ஆரம்பித்தார் கணபதி.

”சாப்பிடும் பாலாடையைக் குடித்ததாகவும் பருகும் பாலை சாப்பிட்டதாகவும்...” என்று மௌனித்தார். சபையோர் ஒருவரோடு ஒருவர் முகம் பார்த்துக்கொண்டனர். ப்ரிஸிடெண்ட் ஆசனத்தில் அமர்ந்திருந்த சுதர்ஸனுக்கு ஏதோ போலாயிற்று. கரும்பு சாறு, திராக்ஷை, தேன் என்று உபயோகித்தவைகளில் தாறுமாறாக இலக்கணமே பார்க்காமல் சாப்பிட்டது, குடித்தது, உறிஞ்சியது என்று முரண்பாடாக முன்னுக்குப்பின் எழுதியிருந்ததை படித்துக் காண்பித்தார்.

பாட்டை அக்கக்காகப் பிரித்துக் காண்பித்த கணபதியைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்த சுதர்ஸன் நெளிந்தார். தான் செய்தது பெருந்தவறு என்று உணர்ந்தார். திடுமென்று நாற்காலியிலிருந்து எழுந்தார். நான்கே தப்படியில் கணபதியை நெருங்கி அணைத்துக்கொண்டார். வேடிக்கைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்த கூட்டம் கரவொலி எழுப்பியது. டாக்டர் க்ருஷ்ணஸ்வாமி இருவருக்கும் பொன்னாடை போர்த்தினார். ஒரு பண முடிப்பை கணபதிக்குக் கொடுத்தார். சண்டையும் சச்சரவுமாக முடியவிருந்த இலக்கியக் கூட்டம் சௌஜன்யமாக நிறைவடைந்தது.

இந்த நிகழ்வுக்குப் பிறகு கணபதி தங்கியிருந்த அறையில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. நிலைவாசல் படியில் எப்போதும் ஒரு பத்து பேர் காத்திருந்தார்கள். புகழுரைகளால் கணபதியை குளிரக் குளிர அடித்தார்கள். இவைகளிலிருந்து எப்போதுமே விலகி இருப்பதையே கணபதி விரும்பினார். மெய்கீர்த்தி கோஷங்களிலிருந்துத் தப்பித்து பஞ்சாபகேச சாஸ்திரி வீட்டில் தங்கினார். அங்கிருந்த சங்கர சாஸ்திரி என்பவர் இவரது சீடரானார்.

இதற்குள் கணபதியின் சம்ஸ்க்ருத இலக்கிய பாண்டித்யமும் அறிவாற்றலும் நினைவாற்றலும் சென்னை நகரெங்கும் காட்டுத்தீயாய்ப் பரவியது. பெரும்பாலான மாணவ சமுதாயம் அவரால் கவரப்பட்டது. மாணவர்களிடம் பாரத கலாசாரத்தைப் பற்றி வலியுறுத்திப் பேசினார் கணபதி. அனைவரும் அதைக் கட்டிக்க்காக்க முன் வரவேண்டும் என்று தூண்டிவிட்டார். சங்கர சாஸ்திரியும் பார்க்கும் மாணவ வர்க்கத்திடம் இதைப் பற்றி பேசி பெரிய மாணவர் சேனையை ஒன்று திரட்டினார்.

மாலை நேரங்களில் மெரீனாவில் கூடினார்கள். மங்கிய விளக்கொலியில் கணபதி பிரகாசமாகவும் பிரதானமாகவும் அமர சுற்றிலும் அமர்ந்து கலாசார பிரசங்கங்கள் கேட்டார்கள். பாரதத்தின் பழமையான கலாசாராத்திற்கு புத்துணர்வு ஊட்ட என்னென்ன செய்யவேண்டும் என்று விவாதித்தார்கள். மாணவர்களின் அபரிமிதமான ஈடுபாடு கணபதிக்கு இதில் மேலும் சுவாரஸ்யத்தைக் கொடுத்தது. வேதங்களிலிருந்து நிறைய எடுத்துக்காட்டுகளைக் கூறி வலிமையான முன்னணியான ஒரு சமூகத்தை உருவாக்க பாடுபடுவோம் என்று இளரத்தங்களை முடுக்கிவிட்டார். அவர்களது பாதையைச் செப்பனிட்டுச் சீராக்கினார்.

திருவண்ணாமலையில் ரிக் வேதம் கற்றுணர்ந்ததிலிருந்து பாரத தேசம் கலாசாரத்தில் வழுக்கிக்கொண்டிருப்பது கண்டு வெந்து போனார். சென்னை மெரீனாவில் மாணவர்களுக்கு தினமும் அவர் ஆற்றிய உரையிலிருந்து ஒரு சில பகுதிகள் கீழே.

”வேதம் படித்த ரிஷிகளின் வாழ்வியல் மனிதர்களுக்கு ஒரு முன்மாதிரி. அதில் பூலோகத்து இன்பங்களும் ஆன்மிக அனுபவமும் வேத ஈடுபாட்டோடுக் கலந்திருக்கும். இதிலிருந்து விலக விலக மானுட குலம் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. மேற்கத்தியர்கள் மெய்யின்பம் உணராமல் புலனின்பங்களைக் கொடுக்கும் லோகாயாத விஷயங்களில் நாட்டம் கொண்டு புதுசுபுதுசாக கண்டுபிடிக்கிறார்கள். ஸ்தூல சரீரத்திற்கு மட்டும் உற்சாகம் அளித்துப் போஷாக்காக்கப் பேயாய்ப் பாடுபடுகிறார்கள். ஆனால் புராதன காலத்து ரிஷிகள் ஆன்ம பலத்துக்கும் உரம் சேர்க்கும் வகையில் வாழ்க்கை முறையை திட்டமிட்டு வகுத்தார்கள்.

ஆரோக்கியம், அறியாமை, வறுமை ஆகியவற்றிலிருந்து மனிதகுலத்தை காப்பாற்றும் ஆற்றலை அக்காலத்து ரிஷிகளும் முனிபுங்கவர்களும் பெற்றிருந்தார்கள். அவர்களை சிந்தனையை மொத்தமாகக் குவித்து அதிலே செலுத்தினார்கள். காலங்கள் செல்லச் செல்ல மனிதர்கள் வேதங்களின் அருமையை உணராமல் வாயால் இயந்திரத்தினமான வேதங்களைச் சொல்லி சம்பிரதாயங்களையும் சடங்குகளையும் ஏற்படுத்தி பிரயோஜனமேயில்லாமல் மலிவுபடுத்தினர். வேத மந்திரங்களின் சான்னித்யத்தையும், பொருளையும் உணராமல் கடனுக்குத் தீ வளர்த்து யாகமும் ஹோமங்களும் செய்தார்கள். அப்போதிலிருந்து வேதத்தையும் வேத வாழ்வையும் புறந்தள்ளி ஆன்மிகத்தின் சிகரத்திலிருந்து படிப்படியாக இறங்கி தரையைத் தட்டும் நிலைக்கு வந்தார்கள்.

ஆனந்தமயமான வேத வாழ்விலிருந்து விலகி சோம்பேறித்தனமாக குடித்தனம் செய்தார்கள். சமுதாயம் இப்படித் தட்டுக்கெட்டு நிலைதடுமாறிப் போனதை ஆதாயமாகக் கொண்டு இப்புண்ணிய தேசத்தை அயல்நாட்டினர் படையெடுத்து கைப்பற்றினார்கள். மக்கள் வலிமை இழந்தார்கள். கண்ணியத்தைக் காற்றில் பறக்க விட்டார்கள். சுயமரியாதை இல்லாமல் திரிந்தார்கள். போலி கவிஞர்களும் எழுத்தாளர்களும் மக்களை திசை திருப்பி ஓட விட்டார்கள். ஒட்டுமொத்த சமுதாயமும் ஆண்டாண்டு காலமாக இந்த மண் காத்து வந்த பெருமைகளை மறந்து மடமையில் சாய்ந்தனர். பாரதம் இருளடைந்தது.”

வேத வாழ்வின் மகத்துவத்தை கணபதி வாயிலாகக் கேட்ட மாணவர்கள் பலர் மெய்சிலிர்த்தனர். அத்தகைய மகோன்னதமான வாழ்விற்கு ஈர்க்கப்பட்டனர். ஏக்கப்பட்டனர். மாணவர்களின் தொடர் ஈடுபாட்டால் கட்டுண்ட கணபதி திருவண்ணாமலை திரும்பவே மறந்தார். இரவுபகல் தொடர்ந்து மாணவர்களுடன் வேத விசாரத்தில் பொழுது பறந்தது. இந்த விடுமுறையும் முடிவுக்கு வந்தது.

ப்ரொஃபஸர் ரெங்கையா நாயுடு கணபதியை அனுதினமும் சந்தித்தார். ஈக்களைப் போல மாணவர்கள் கணபதியை மொய்ப்பதைக் கண்டார். அகழ்வாராய்ச்சி மற்றும் வரலாற்று நிகழ்வுகளைப் பற்றி இருவரும் ஒருநாள் பேசிக்கொண்டிருந்தனர்.

“வரலாற்றுக்காரர்கள் கதை எழுதுபவர்களை மிஞ்சிய கல்பனா சக்தி படைத்தவர்கள்...” என்று சிரித்தார் கணபதி.

ரெங்கையா நாயுடுவுக்கு புரியவில்லை. மையமாகத் தலையாட்டினார்.

"உங்கள் வீட்டில் தங்கம் வெள்ளியிலான ஆபரணங்கள் உபயோகப்படுத்துவீர்கள். சரியா?”

”ஆம்”

“அப்படியே மண் சட்டிப் பானை மடக்கு என்று மண்பாண்டங்களும் புழக்கத்தில் இருக்கும்.. இல்லையா?”

“ம்..நிச்சயமாக.. வெயில் காலத்தில் மண்சட்டியிலிருந்து அருந்தும் குளிர் நீர் அமிர்தமாயிற்றே...”

“யாரேனும் வரலாற்று ஆய்வாள ரத்தினம் உங்கள் வீட்டுக்கு விஜயம் செய்தால் நாம் இன்னும் கற்கால மனிதர்கள் என்று நினைத்துக்கொள்வார்கள்...” சொல்லிவிட்டு இடி இடியென சிரித்தார் கணபதி. ரெங்கையா நாயுடுவுக்கு இவர் எங்கேயோ இடிக்கிறார் என்று கொஞ்சம் புரிந்தது.

“அகழ்வாராய்ச்சியாளர்கள் கருங்கல் கத்தியைக் கண்டு பிடித்தால் அது அக்கால போர்வீரர்கள் உபயோகப்படுத்தியது என்று முடிவுக்கு வரக்கூடாது.”

“கல் கத்தி வேறெதெற்கு?”

“ஏன்.. எதாவது கற்சிலையின் கையில் கொடுத்த கத்தியாக இருக்கக்கூடாதா?” என்று எதிர்கேள்வி கேட்டார். ரெங்கையா நாயுடு மௌனம் சாதித்தார். அர்த்தம் புரிந்தது. இப்போது கணபதி சூடானார். தொண்டையைச் செருமிக்கொண்டு..

“வேத காலத்து ரிஷிகள் ஆடுமாடு மேய்த்துக்கொண்டு, நதி, நிலம், நீர், ஆகாயம், மலை, வாயு, அக்னி முதலிய இயற்கையின் படைப்புகளால் கால்நடைகளுக்கு சேதாரம் வந்துவிடக்கூடாது என்று அந்த இயற்கையை தெய்வங்களாக கும்பிட்டார்கள் என்று வரலாற்று பக்கிரிகள் எழுதுகிறார்கள். ” பேச்சில் காரம் இருந்தது.

”இன்னும் சில மேதைகள் வேத மதத்தை புனருத்தாரணம் செய்விக்க வந்ததே பௌத்தம், ஜைனம், இஸ்லாம் மற்றும் கிருஸ்துவம் என்று கொடிபிடித்தார்கள். அரைகுறை ஞானம் படைத்த குறைமதிக் கவிஞகளும் எழுத்தாளர்களும் வேத மதத்தை இப்படித் திரித்து எழுவதில் ஆனந்தம் அடைந்தார்கள்.

வேதங்களின் ஸ்லோகங்கள் ஆன்மிகத்தின் உச்சம். பொது இடங்களில் நாம் கேட்கும் புராண இதிகாசங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. வேதகாலத்திற்கு அப்பால் எழுதப்பட்டன புராணங்கள். பக்தியையும் இலக்கியத்தையும் வளர்க்கும் பொருட்டு எழுதப்பட்டவை இவை. கொஞ்சத்துக்கு கொஞ்சம் வேதத்தோடு தொடர்பு இருந்தாலும் துரதிர்ஷ்டவசமாக மக்களை வேத வாழ்விலிருந்து வெகு தூரத்துக்கு இழுத்து வந்துவிட்டது.”

ரெங்கையா நாயுடு திறந்த வாய் மூடவில்லை. கணபதியின் விசாலமான வேத அறிவு அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இப்படி பொரிந்து தள்ளியபிறகு ஆழமான ஒரு மௌனத்திற்கு கணபதி சென்றுவிட்டார். பக்கத்தில் வெகுநேரம் காத்திருந்த ரெங்கையா நாயுடு வீடு திரும்பினார்.

சாயந்திரம் வழக்கம் போல மெரீனாவில் கணபதி. ஆர்ப்பரிக்கும் அலைகளுக்கு அருகாமையில் சாந்தியாக அமர்ந்திருந்தார். காலையிலிருந்து அலைபாய்ந்த அவரது மனதிற்கு ஒத்தடம் கொடுப்பது போல இதமானக் காற்று வீசியது. ப்ரொஃபஸர் நாயுடு கணபதியின் முதுகருகே உட்கார்ந்து கடலலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

அலையோசை. ஒன்றுமே பேசாமல் கணபதி. சமுத்திரத்தையே வேடிக்கைப் பார்த்துக்கொண்டு ரெங்கையா நாயுடு. நாற்புறமும் சூழ்ந்த இந்த அமைதியைக் கலைக்க
“இன்றைக்கு ஏன் இவ்வளவு ஆதங்கப்படுகிறீர்கள்? என்னவாயிற்று?” என்று ஆதரவாகத் தோள் தொட்டார். கணபதி சற்றுநேரம் நாயுடுவை ஊடுருவிப் பார்த்தார். பின்பு.....

பி.கு: ஆங்கில மூலத்திலிருந்து தமிழ் வடிவ சம்ஸ்க்ருத ஸ்லோக உபயதாரர் ஸ்ரீமான் Ramkumar Narayanan
‪#‎காவ்ய_கண்ட_கணபதி_முனி_19‬
‪#‎கணபதி_முனி‬

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails