Thursday, November 27, 2014

பரப்ரம்மம்

”உக்காரு”ன்னா உட்கார்ந்துப்பா. ”படுத்துக்கோ”ன்னா கட்டையை நீட்டிடுவா. பக்கத்துல டிவி ஓடினாலும் பார்வை உத்தரத்தில் எத்தையோ தேடும். "காஃபி இந்தா”வுக்கு “ஆ” பிளக்கையில் தொண்டைக்குள் நாலு வாய். ஆஃபீஸ் விட்டு எத்தனை மணிக்கு வந்தாலும் இரண்டொரு வார்த்தைகளாவது பேசாமல் வேறு வேலை பார்ப்பதில்லை என்று எனக்குள் சங்கல்பம்.

“ஏன் இப்பெல்லாம் பேசறதேயில்லை?” காதருகில் போய் சத்தமாகக் கேட்டேன்.

” “

“பேச மாட்டியா?”

சுழன்று அடங்கும் பம்பரம் போலத் தலையைத் திருப்பி
“எ-ன்-ன -- பே-ச-ணு-ம்-?” தொண்டைக்குள் சல்லடை சொருகியது போல ஒவ்வொரு வார்த்தையாகக் கமறல் கலந்து வந்தது.

“எதாவது பேசு”

“ “

“எதாவது..”

“ “

நாங்கள் அமைதியான இரண்டு நிமிடங்களில் டிவி சீரியலில் நூறு வார்த்தைகள். திட்டினார்கள். சபித்தார்கள். சூளுரைத்தார்கள். உன்னை விட்டேனா பார் என்று கொக்கரித்தார்கள். இங்கே அடர் மௌனம். அவளெதிரேயே முகத்தைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறேன்.

“எதாவது பேசு...”

திரும்பவும் எ-ன்-ன---பே-ச-ணு-ம்-? என்று திக்கித் திணறி வார்த்தைகள் வந்து விழுந்தன. சட்டென்று தாவாங்கட்டையைத் தூக்கிக் கேட்டேன்.

“ஐ லவ் யூ”

மின்னல் பொழுதில் அவளிடமிருந்து வார்த்தை வந்தது.

“ஐ லவ் யூ”

என்னைக் குளிப்பாட்டி, ட்ராயர் போட்டுவிட்டு, பௌடர் பூசி, வகிடெடுத்துத் தலை வாரி விட்டவள் நீலா சித்தி. சற்று முன்னர் ஐலவ்யூ சொன்னவள். பள்ளி ஆசிரியையாக பல வருடங்கள் பல வாண்டுகளுக்கு “அ-அம்மா/அன்பு” என்று பிரம்பில்லாமல் சொல்லிக்கொடுத்தவள். இப்போது முடியாமல் சுருண்டு கிடக்கிறாள். டிமென்ஷியா. பார்க்கின்ஸன்ஸ்.

ஐலவ்யூ கேட்டவுடன் அவ்வளவுதான். எழுந்து வந்துவிட்டேன். டிஃபன் சாப்பிட்டேன். கொஞ்ச நேரம் சூப்பர் சிங்கர் பார்த்திருப்பேன். பசங்களுடன் அந்தாக்‌ஷரி விளையாடினேன். விஸ்வரூபம் சில பக்கங்கள் படித்தேன். ஃபேஸ்புக் பார்த்தேன். இரண்டு தம்ப்ளர் நீர் பருகினேன். படுத்துவிட்டேன். இது நடந்து இரண்டு மூன்று நாட்களாவது ஆகியிருக்கும். அப்போதிலிருந்து அந்த ஐலவ்யூ இன்னமும் காதுக்குள் தம்பூரா ஸ்ருதியாய் ரீங்காரமிடுகிறது.

‪#‎நீலா_ஐ_லவ்_யூ‬

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails