Thursday, November 27, 2014

ஆண்டு விழா!

”ச்சே... சனியன்... செத்தப்பறமும் இந்த இருமல் வந்துதுப்பா...”
“Huh, atleast one animal has come"
**

முதல் வசனம், பள்ளி ஆண்டு விழாவில், சிவகாமியின் சபதத்தில் காபாலிகையாக நடித்த பெரியவள் வினயா, நாகநந்தி அடிகள் குத்தியவுடன் தரையில் விழுந்து கிடக்கும் பொழுது வந்த இருமலை அடக்கிக்கொண்டு காரில் வீடு திரும்பும் பொழுது இருமிக்கொண்டே சொன்னது.
இரண்டாவது வசனம், Alice in Wonderlandலில் வால்ரஸாக நடிக்க க்ரீன் ரூமிற்குள் நுழைந்த சின்னவள் மானஸாவைப் பார்த்து ஒரு பொடியன் அடித்த காமெண்ட்.

ஆலிவர் ட்விஸ்ட்டில் நுனி நாக்கு ஆங்கிலத்தில் பொளந்துகட்டினார்கள். பீட்டர்..பீட்டர் என்று கல்லூரிக் காலத்தில் வயல்காட்டோரம் பேசிக்கொண்டு போனது நினைவுக்கு வந்தது. கையில் திருவோட்டுடன் பௌல் டான்ஸ் ஆடினார்கள். பௌல் ஏந்தும் ஆலிவர் ட்விஸ்ட்டின் சாம்பிள் இங்கே. http://www.youtube.com/watch?v=sZrgxHvNNUc . பலரின் ”வாட்”டைக் காணத் தவறாதீர்கள். அடுத்த முறை இதில் ஒரு வாட் உங்கள் வாய்க்கு வசப்படட்டும்.
மை ஃபேர் லேடியில் வாயில் ‘a' நுழையாத பெண் அபாரமாக நடித்தாள். "The rain in spain stays mainly in the plain" http://www.youtube.com/watch?v=uVmU3iANbgk என்கிற இந்த தொடுப்பில் இருப்பது போலவே கண்முன் தோன்றினார்கள்.

முழுக்க முழுக்க சம்ஸ்க்ருதத்தில் காளிதாசனின் சாகுந்தலம் நடித்தார்கள். அழுத்தம் திருத்தமான உச்சரிப்பு. என்னைப் போன்ற சம்ஸ்க்ருத அஞ்ஞானிகள் வியக்கும்படியாக இருந்தது. சகுந்தலையாக நடித்த குழந்தை பின்னிப் பெடலெடுத்தது. மோதிரம் கிடைத்த மீனவன் சென்னைத் தமிழ் போல இழுத்து இழுத்து சம்ஸ்க்ருதம் பேசினான். ரசிக்கும்படி இருந்தது. துர்வாசர் ஸ்ப்ரிங் வைத்த பாதரட்சை அணிந்தது போல பூமிக்கும் ஆகாசத்துகுமாகக் குதித்தார். பார்த்த நம் மனசு பந்தாகத் துள்ளியது.

ஷேக்ஸ்பியரையும் விடவில்லை. ஒத்தெலோ மெக்பத் என்று முக்கியமான காட்சிகளைக் கடைந்தார்கள். கடைசியில் பாவனமான ஸ்ரீமத் இராமாயணமும் அரங்கேறியது. ஆஞ்சநேயர் பையன் வேஷம் போட்டுக்கொண்டு காரிடாரில் செல்ஃபி எடுத்துக்கொண்டபோது பக்கத்திலிருந்து புன்னகைத்தேன். உதட்டைச் சுற்றி சிகப்படித்திருந்த வாயைத் திறந்து முத்துப்போன்ற வெள்ளைகளைக் காண்பித்தான். ஆஞ்சு கொள்ளை அழகு.

ராமர் பட்டாபிஷேகத்தின் போது சூலாயுதபாணியாக சிவன் வந்தார். பக்கத்தில் பார்வதியைத் தேடினார். பச்சை வண்ணமாய் குடுகுடுவென்று ஓடிவந்தது சேர்ந்துகொண்டது ஒரு வாண்டு. பரதன் பளபளவென்று இருந்தான். நடித்தவர்கள், பார்த்தவர்கள் என்று அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி அப்பியிருந்தது.

விழா முடிந்து வீட்டிற்கு வரும் போது ஒரு யூ டர்ன். வாழ்க்கையும் அப்படியே ஒரு யூடர்ன் அடித்து அண்ட்ராயர் காலத்துக்குச் செல்லாதா என்ற ஏக்கம் பிறந்த போது “அப்பா.. நான் எப்படி நடிச்சேன்..” என்று பிள்ளைகள் கோரஸாகச் சுரண்டினர்.

“சூப்பர்...”

‪#‎வாழ்க்கை_ஒரு_வரம்‬

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails