Tuesday, July 5, 2011

நாலாவது பொண்டாட்டி


நல்ல அடர்த்தியான கும்மிருட்டு. நாளைக்கு விடியவே கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு கண ரோஷமாயிருக்கிறது வானம். கை தேர்ந்த கொத்தனார் யாரோ வண்டி வண்டியாய் கண் மை எடுத்து சாந்து குழைத்து நேர்த்தியாக வானத்திற்கு பூசிவிட்டிருக்கிறார்கள். மேலே ஒரு பொட்டு வெளிச்சத்தைக் கூட காணோம். அந்த செம்மண் சாலை இருளோன்னு இருந்தது. ஐந்து நிமிடமாக நடந்தாலும் என் கண்ணுக்கு பழகாத இருட்டு பூச்சாண்டி காட்டியது. கண்களை கைகளால் கசக்கிக் கொண்டேன்.

வூட்ல இருப்பாளா? வெளியில சொந்தக்காரவுங்க வூட்டுக்கு எங்கனா போயிருப்பாளா? இன்னிக்கி என்ன கிழமை? இருப்பாளா? இது வேற. அப்பப்போ உள்ளேர்ந்து எழுந்து உக்காந்துகிட்டு இருப்பாளா.. இருப்பாளான்னு  கேட்டுக்கிட்டே இருக்கு. ச்சீ. அடங்கு.

சாலையின் இரு புறமும் மழைக் குளிப்பாட்டிய வயக்காடு "ஹோ.." என்று பரந்து அசதியாய் படுத்திருந்தது. உழுது, களை பறித்து, நாற்று நட்டு ரொம்பவும் சிரமப்படுத்தியிருந்தார்கள். ஊருக்குள்ளேயே வீதியில் ஒரு தெரு விளக்கு எரியாது. இங்கே வெளியே சொல்லவும் வேண்டுமா. கருமாத்தூர் சிமிண்டு பாலம் ஏறி இறங்கினதும் "புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்". பேரிரைச்சல். படபடவென்று நின்றது டவுன் பஸ். பஞ்சர். "களுத! கிளம்பும்போதே டயர தட்டி பார்க்கச்சொன்னேன்ல..மயிரப் புடுங்கினியோ. பஸ் ஸ்டாண்டுக்கு வர்ற காலேஜு பொண்ணுலேர்ந்து கல்யாணமான பல்லு போன கெளவி வரை நாக்கத் தொங்கப்போட்டு பார்க்கற... வேல சொன்னா ஞாபகம் இருக்கமாட்டேங்குது." வயசாளி டிரைவர் இளம் பயிற்சி நடத்துனரை கொளுத்தி விடுவது போல பார்த்து கோபாக்கினியில் பற்றிக்கொண்ட பட்டாசாய் படபடவென்று சீறினார். 

முனகிக்கொண்டே சரசரவென்று பஸ் மேல் ஏறிய ப.நடத்துனர் ஆளுயர ஜாக்கி ஏற்றும் இரும்புக் கம்பியையும், ஸ்டெப்னி டயரையும் டிரைவர் தலையில் இறக்கும் ஆர்வத்துடன் "டிங்" என்று பஸ்ஸின் மாடியிலிருந்து கீழே வீசினான். விழுந்து ஒருமுறை குதித்து அடங்கியது. முண்டாசு கட்டிய ஒருவரும் அவருடைய நண்பரும் பீடியை பற்ற வைத்துக்கொண்டு கைலியை மடக்கிக்கொண்டு கால்வாய் ஓர புதர் பக்கம் ஒன்றுக்கு இருக்க ஒதுங்கினர். ஊரைக்கூட்டிய ஓசை காதில் விழாமல் ஒன்றிரண்டு பேர் பேருந்தில் உட்கார்ந்து சுகமாக தூங்கிக்கொண்டிருந்தார்கள். இன்னமும் அரை மணி ஆகும் போலிருந்தது. "மாமா.. உனக்கு ஒரு தூது விட்டேன் அந்தி மாலக் காத்து வழியா... வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு"ன்னு ஜானகி ஸ்பீக்கரில் கொஞ்சிக்கொண்டிருந்தார். அவளைப் பற்றிய சிந்தனை என்னைப் பிடரியில் அடித்துத் துரத்த நான் இறங்கி மெதுவாக ஊரைப் பார்க்க நடக்க ஆரம்பித்தேன்.

கடைசியா பார்த்து ஒரு வருஷம் இருக்குமா? செகப்பு ரவிக்கை, செகப்பு சீலையில செப்புச் சிலையா பார்த்தது. அவ புடவை கட்ற அழகே தனி. புடவையே அவ தேகத்துக்கு அளவெடுத்து தச்சா மாதிரி பாந்தமா உடம்போட ஒட்ட ஒட்ட கிச்சுன்னு கட்டிப்பா. முன்னையும் பின்னையும் பார்க்கறதுக்கு 'தின்'னுன்னு கிழங்காட்டம் இருப்பா. சாயங்காலம் ஒரு பந்து மல்லிப்பூவை தலையில சுத்திகிட்டு வரும்போது பார்க்கறவங்க தலை கிறுகிறுன்னு சுத்தும். அழகான ராட்சஷி. ச்.ச்.ச்சு... மனசு உச்சுக் கொட்டியது.

"கிர்க்.கிர்க்.கிர்க்." என்று சுவர்க்கோழிகள் தங்களுக்குள் சத்தமாக காதல் சண்டை போட்டுக் கொண்டு இருக்கின்றன. மழை விட்டு அரை மணி நேரம் ஆயிருக்கும். நாட்டுத் தக்காளியை நசுக்கி அரைத்து மெழுகினார்ப்போல இருந்தது என் ஊருக்கு போகும் அந்தச் செம்மண் ரோடு. "பட்..பட்..பட்.." என்ற எனது ஹவாய் செருப்பின் காலடி ஓசை கிர்க்..கிர்க்குடன் தாளவாத்தியமாய் சேர்ந்து கொண்டது. "ஸ்...ஸ்...." என்ற சன்னமான சத்தத்துடன் ஊதலும் சாரலுமாய்க் காற்று வீசுகிறது. நாலடிக்கு ஒரு முறை முகத்தில் ஒரு துளி மழை விழுகிறது. ஊதக் காற்று தலை கோதிக் கலைக்கிறது. சின்னவயசில் தூங்க வைக்க மடியில் படுக்கவைத்து அம்மா இப்படித்தான் தலை கோதுவாள். கூடவே அரிசியையும் புடைத்துக்கொண்டு மடியை ஆட்டிக்கொண்டே நான் தூங்க ஏதோ பாடுவாள். புண்ணியவதி பூவும் பொட்டுமாய்ப் போய்ச் சேர்ந்துவிட்டாள்.

மேலிரண்டு பட்டன் அவிழ்ந்த சட்டை வழியே நுழைந்து பருவக் காதலி போல மாரைத் தடவி சில்லிடுகிறது குளிர்க்காற்று. அதோ அங்கே தொடுவானத்தில் பளீரென்று மின்னல் வெட்டுகிறது. தரை மீது கொண்ட அதீத ஆசையில் அடங்காமல் பலமுறை மின்னல் ஃபோட்டோ பிடித்துக் கொள்கிறது வானம். பூமி அசந்த நேரத்தில் மின்னல் கீற்று ஒன்று அசுர முத்தமிட்டு திரும்பியது. தூரத்திலிருந்து பார்த்த எனக்கே உடம்பிற்குள் மெகாவாட் மின்சாரம் ஏறியது போலிருந்தது.

அன்னிக்கி ஆடி வெள்ளிக்கிழமை. ஆத்தாளுக்கு வேண்டிகிட்டு விடியற்காலையில தலை குளிச்சு தண்ணி சொட்டும் நுனில முடிச்சு போட்ட விரிந்த கூந்தலோடு ஆடி அசங்கி நடந்து வந்தப்ப, ஆத்துல குளிச்சுட்டு கைலியும் தோள்ல துண்டுமா அவ எதிர்ல குரூப்பா வந்த எங்களுக்கு எவனுக்கு  கண்ணு கட்டுப்பாட்ல இருந்துச்சு. பொறந்ததிலேர்ந்து இதுவரைக்கும் பொம்பளையே பாக்காத மாதிரி "ஆ"ன்னு வா பொளந்து அவளையே முழுங்கிடறா மாதிரி பார்த்துகிட்டு வந்ததுல குறுக்குத் தெரு கரண்டு கம்பத்துல மோதி சம்முகத்துக்கு நெத்தில பொரிவிளங்கா உருண்டையா கும்முன்னு வீங்கிப்போச்சு. அப்ப ஓரக்கண்ணால பார்த்து வாய் பொத்தி "களுக்"ன்னு மேனி குலுங்க சிரிச்சுட்டு ஓடினாளே.... பாவி.. பாவி.. உசுர உலுக்கிட்டா... அடடா.. இது விடமாட்டேங்குதே.

இன்னும் ஒரு கிலோ மீட்டர் போனால் ரெட்டிபட்டி ஐயனார் கோவில் வரும். கொஞ்சம் விறுவிறுவென்று நடந்தால் ஐந்து நிமிடத்தில் போய்விடலாம். ஆஹா.. இந்த இரவு நேரத்தில் மூக்கை தடவுகிறது ஒரு சுகந்தம். ரோஜாப்பூ வாசனை கும்மென்று அடித்தது. யாராவது பதியன் போட்டிருக்கிறார்களா? மல்லியைப் பார்க்கப் போகும் வழியில் ரோஜா. பெயரில் கடைசி "கா" வை வெட்டிவிட்டால் பழமான மல்லியாய்விடுவாள். என் கருப்பு மல்லிகா. நமது தேசத்தின் பிரதான கலர். ஓ. சுடுகாட்லேர்ந்து வர வாசனையா? தெற்கால இருந்த சுடுகாட்டை இங்க மாத்திப்புட்டானுன்களா? எந்த ஜாதிக்காரன் எவன் தெரு வழியா பொணம் போகக்கூடாதுன்னு தகராறு பண்ணினானோ? ஊருக்குள்ள எவனை வெட்டினானுங்களோ? எவனை ஊரு கடத்தினானுன்களோ? யாரோ நிம்மதியா மேலப் போய்ச் சேர்ந்திருக்காங்க. வாழ்க. செத்தவருக்கு வாழ்க சொல்ற மொத ஆள் நானாதாயிருக்கும். 

 ஒரு பந்து மல்லிப்பூவை தலையில பூப்பந்தலா போட்டுக்கிட்டு சோமுத்தேவர் பேத்தி சடங்குக்கு வந்திருந்தப்ப, மண்டபத்ல விசேசத்துக்கு வந்திருந்தவங்க மேடையில அலங்காரமா இருந்த சடங்கான பொண்ண பார்த்த நேரத்தைவிட சாதாரண தாவணியில சிம்பிளா இருந்த இவளைப் பார்த்து ஜொள் விட்டது தான் ஜாஸ்தி. ஆம்பளை பொம்பளை வித்தியாசம் இல்லாம ஊர்க் கண்ணே அன்னிக்கு அவ மேலத்தான். மேலக்குடி நாட்டாமைப்  பெருசு எம்.ஜி.யார் சரோஜாதேவி தோளைப் புடுச்சு ரத்தம் கட்டுற அளவுக்கு அமுக்கரா மாதிரி இவளை அமுக்கிணப்ப அந்தப் பல்லு போன கிழத்தை ஒரேடியா நசுக்கிடலாமான்னு தோணிச்சு.  ஆம்பளைக்கு ஒத்தக் கையால உமி மூட்டை தூக்குற தெம்பு இருக்குற வரைக்கும் பொம்பளை ஆசை இருக்குமாம். மல்லி கிட்ட சொல்லணும். இந்த மாதிரி ஆட்கள் கிட்ட ஜாக்கிரதையா இருக்க சொல்லி.  "இப்ப இதுக்கு ஒத்துப்பாளா?". டேய். அடங்கு. 

அந்த இடை பெருத்த ரெட்டைப் புளியமரம் தாண்டி சோத்தாங் கைப்பக்கம் ஒன்று...இரண்டு..மூணு...நாலாவது சந்து கடைசியில தான் அவன் வீடு.

"சளக்..ப்ளக்". ச்சே. கால் செருப்பு சேற்றோடு புதைந்துகொண்டது. ஆட்சிக்கு வந்தா அத்தத் தரேன் இத்தத் தரேன்னு வாய் கிழிய பேசுறானுங்க. ஒரு ரோடு போட துப்பில்லை. ஒரு தடவை ஆட்சிக்கு ஒரு வப்பாட்டி வீதம் நாலு பொம்பளைங்களை கட்டிக்கிட்டது தான் மிச்சம். ஊருக்கு எதுனா செஞ்சானா. நாள் கிழமை பண்டிகை ஊர்த் திருவிழா எல்லாத்துக்கும் அவனுக்கு தான் மொத மரியாதை. தலைப்பா கட்டி, கையில சொம்பு கொடுத்து சாமி முன்னாடி கொண்டுபோய் நிறுத்திடுரானுங்க. ஊஹும். இந்தச் சமுதாயமே சரியில்லை. சரியான பொம்பளை பொறுக்கி.

மாரியாத்தாளை மனசார கும்புட்டு ஊர்சனம் மகிழ்ச்சியா சித்திரை திருவிழால கொண்டாட்டமா இருந்தப்ப தான் அது நடந்தது. படபடன்னு புல்லட்டுல செயினு, மோதரம்ன்னு மாட்டிக்கிட்டு பட்டு வேட்டியில பகட்டா வந்தான். பளிச்சுன்னு தாவணி போட்டுக்கிட்டு பச்சத் தண்ணியில கழுவுன நாகப்பழம் மாதிரி பளபளன்னு வந்திருந்தா மல்லிகா. பூசாரி பொம்பளைங்களா பார்த்து பக்கத்துல கூப்பிட்டு துண்ணூறு போட்டுக்கிட்டு இருந்தான். பலூன்காரன்கிட்ட பச்சபுள்ளங்க கூட நின்னுகிட்டு பலூன் ஊதிக்கிட்டு இருந்தவள பயபுள்ள நேரா வந்து மேல கை வச்சான். கைய உடு உடுன்னு வளையல் உடைய திமிறினா. உட்டானா. ஊர்ப் பெரிய மனுசன். கூட்டத்தில கேட்க நாதியில்லை. நா சும்மா இருக்க முடியுமா. பூமாலை குரங்கு கைக்கு போயடப்போவுதுன்னு ஆத்தாளுக்கு இளநீ வெட்ட வச்சுருந்த அருவாளை தூக்கிக்கிட்டு ஓடினேன். அல்லக்கை எல்லாரும் தெறிச்சு ஓடிட்டானுங்க. கண்ணை மூடி தொறக்கறதுக்குள்ள நெருங்கி ஒரே போடு போட்டேன். தடுக்கறதுக்கு கைய தூக்கினான். பரதேசி. மணிக்கட்டோட வந்துருச்சு.

சேற்றுக் காலைத் தரையில் தேய்த்துக்கொண்டே நடந்தேன். நாலாவது சந்து திரும்பினேன். தெருமுனை மாரியாத்தாள் முப்பொழுதும் பக்தர்களுக்கு அருள்புரிந்து அசதியாய் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாள். கோவில் வாசலில் ஜீரோ வாட் பல்பு கசிந்து கொண்டிருந்தது. தெருக்கோடியில் இருந்த ஒரே விளக்கும் படபடத்து எந்நேரமும் உயிரை விடத் தயாராக இருந்தது. கோவில் வாசலில் கீழத்தெரு பாப்பாத்தி அம்மாள் கணுக்காலில் கொசுவை தட்டி பரட்பரட்டென்று ரத்தம் வர சொரிந்து காலில் வரிவரியாய் வெள்ளைக்கோடு பொட்டு விட்டு புரண்டு படுத்தாள். பாவம். இன்னமும் கோவிலில்தான் படுக்கிறாள். புள்ள டவுன்ல பெரிய ஆபீசர். மருமவ ஒரு பிடி சோறு போட மாட்டேங்கறா. அவங்கவுங்க விதி. "பட்". ச்சே. செருப்பின் வார் அறுந்துவிட்டது. ரத்தக்கண்ணீர் எம்.ஆர்.ராதா போல காலை இழுத்துக்கொண்டே நடந்து போனேன்.

"பர்ட்..பர்ட்" என்று அறுந்த செருப்பு மண்ணுடன் தொடுத்த போராட்ட ஓசை கேட்டு அரைகுறை தூக்கத்தில் விழித்தெழுந்த தெரு நாய்கள் இரண்டு "ஊ..ஊ.லொள்ள்ளோள்" என்று பெருங்குரலெடுத்து குரைத்துக் கொண்டு என்னுடன் சண்டைக்கு நெருங்கி வந்தது. சத்தம் கேட்டு பட்டாமணியார் வீட்டு திண்ணையில் படுத்திருந்த அம்மா ஆடு தலை தூக்கிப் பார்த்தது.

ரத்தம் சொட்ட சொட்டக் கை அறுந்து தொங்குது. திருவிழால ஒரே அமளி. குறுக்கு மறுக்கா கைலியை தூக்கிகட்டிக்கு ஹேய் ஹோய் ன்னு சத்தம் போட்டுக்கிட்டு ஒடரானுங்க.  அவனோட உறமுறைல இருந்தவனுங்க எல்லாப் பயலும் கட்டையும் கையுமா என்னைய அடிக்கறதுக்கு ஓடிவரானுங்க. சம்முகமும், குமாரும் "போடா.. போடா"ன்னு என்னை விரட்டினானுங்க. இவ எங்கடா போனான்னு திரும்பி பார்த்தப்ப பயத்துல திரும்பி என்னைய ஒரு பார்வ பார்த்தா பாருங்க. கண்ணாலையே உசுரை உருவி வெளியே எடுத்துப் போட்டுட்டா. வெறும் சவமாத்தான் அங்கேயிருந்து ஓடினேன். ரெண்டு நாலு செங்கல் சூளையிலும், கோபாலு மாமாவோட தென்னத் தோப்புல ஒளிஞ்சிருந்தேன். அவளை விட்டானா அந்தப் பாவி. அவங்க அம்மாவை மிரட்டி ஒரு மஞ்சக் கயித்தை அவ கழுத்துல கட்டி ஆசை நாயகியா நாலாம் நம்பரா வச்சுக்கிட்டான். ராத்திரி பதினொரு மணிக்கு இந்தக் கலியாண சேதியை சொன்னான் கோபாலு. சட்டை கூட போடாம ஓடினேன்.  

"அனாதை பயலுக்கு அர்த்த ராத்திரியில இங்க என்ன வேலை?" இதைத்தான் வேலு பூசாரி ஒரு வருசத்துக்கு முன்னாடி இந்த தெருவிற்கு அகாலத்துல அவள பார்க்க வந்தபோது கேட்டார். ஊர் கூடி வேடிக்கைப் பார்த்தது. முத்துராசுவின் மூன்று மாதக் கைக்குழந்தை கூட எனக்காக வீலென்று வீரிட்டு அழுதது. அறுபது வயசுல துளிக்கூட வெட்க மானம் இல்லாமல் நாலாவது பொண்டாட்டியா இவளைக் கட்டிகிட்டானே. இல்ல இல்ல வச்சுகிட்டானே அவனை கேட்க வக்கில்லை. என்னையக் கேட்குரானுங்க. பணாதப் பசங்க. அந்த ராத்திரி போலீஸ் வந்து என்ன ஜீப்ல ஏத்தும் போது அவ கண்லேர்ந்து ரெண்டு சொட்டு விழுந்தது. பழச நினைச்சுக்கிட்டேன். வலது பக்கத்திலேர்ந்து ஒரு பூனை சரேல்னு ஓடி மணியக்காரர் வீட்டு சந்துல போய்டுச்சு. சகுனம் சரியா இருக்கா? ஊக்கும். எனக்கு சகுனம்தான் கொறச்சல்.

தூங்கியிருப்பாளா? வாறதுக்கு முன்னால ஒரு ஃபோன் பேசியிருக்கலாமோ. அன்னிக்கி மட்டும் அவந்  தலைய சீவியிருந்தோம், பாவம் இன்னிக்கி இந்த நிலைமையே எம்மல்லிக்கு வந்திருக்காது. அவனும் வூட்டல இருப்பானா? பார்த்துக்கலாம். இடுப்பில வச்சுருக்கேன். இந்த தடவை நேரே மார்ல ஒரே சொருவுதான். அப்புறமா வாரதப் பார்த்துக்கலாம்.

தெருக்கோடியில் அவள் வீட்டு வாசலில் கீற்றுப் பந்தல் போட்டிருந்தது. சவுக்குக் கம்பில் ஜோடியாக ரெண்டு டியூப் லைட் கட்டியிருந்தார்கள். மழை கழுவிய மதி வீட்டு வெளித் திண்ணையில் ஐந்தாறு பேர் படுத்து உருண்டு கொண்டிருந்தார்கள். பந்தலோரத்தில் "வாடகைக்கு" என்று முதுகில் எழுதியிருந்த நாற்காலிகள் மடித்துப் போடப்பட்டிருந்தது. வாசலில் உதிரியாய் இருந்த ரோஜாக்கள் மீது ஈ மொய்த்துக்கொண்டிருந்தது. ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கிறது. ஒரு சிகப்பு நாய் வாலை ஆட்டிக்கொண்டு வாசலோடு ஓடியது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கூப்பிட்டேன்.

"மல்லிகா".  மல்லியில் ஆரம்பித்து "கா" காற்றில் கரைந்தது. காற்றும் ஓசையும் சரிவிகிதத்தில் கலந்து வெளியே வந்தது.

வீட்டுக்குள்ளிருந்து ஒரு சப்தமும் வரவில்லை. சுற்றிப் பார்த்தால் ஏதோ விபரீதம் நடந்த வீடு போல இருக்கிறது. கொசகொசவென்று சொந்தபந்தங்கள் பேச்சு சத்தம் கொல்லையிலிருந்து கேட்கிறது. எச்சிலை விழுங்கி விட்டு மீண்டும் கூப்பிட்டேன்.

"ம..ல்..லி..கா.."

யாரோ அவசரவசரமாக வரும் காலடி சத்தம் கேட்டது. கண்ணை உருட்டி உள்ளேயே எட்டி பார்த்துக் கொண்டிருந்தேன். அரைகுறை வெளிச்சத்தில் மல்லிகா நடந்து வருவது போல இருந்தது. நிழலாக பார்த்தபோதே தெரிந்தது, ஒரு வருடத்தில் கொஞ்சம் சதை போட்டிருந்தாள். இத்தனை மணிக்கு மேல் தண்ணீர் தூக்க போகிறாளா? இடுப்பில் சின்னக் குடம் ஒன்று இருக்கிறதே!

"யாரு?" கேட்டுக்கொண்டே முன் வாசல் சுவிட்சை தட்டினாள். விளக்கொளியில் சோர்வாக எதிரே நின்றாள். அவள் இடுப்பில் இருந்த குழந்தை என்னைப் பார்த்து சிரித்தது.

"நீயா?" அதிர்ந்தாள்! ஒரு நிமிடம் பேச வார்த்தையில்லாமல் கண்ணோடு கண் பார்த்துக்கொண்டு அசையாமல் நின்றோம். கைக்குழந்தை சிணுங்கியது.

எனக்கு வயிற்றிலிருந்து ஒரு ரப்பர் பந்து எழுந்து வந்து தொண்டையை அடைத்தது. கையில் இருக்கும் குழந்தையை காட்டி "யாரு இது?" என்று சந்தேகமாகக் கேட்டேன். அதுவாக இருக்கக்கூடாதேன்னு குலசாமியை வேண்டிக்கொண்டேன்.

"எம்மவன்" என்றாள் சுரத்தில்லாமல். சாமியும் ஏமாற்றிவிட்டது.

"உம் புருஷன் எங்க..." கேட்டுக்கொண்டே கண்ணை உள்ளே உலாவவிட்டேன்.

"மத்தியானம் கறிக்கொளம்பு தின்னுபுட்டு இங்க சுருக்குங்குதுன்னு மாரைப் பிடிச்சுக்கிட்டாரு. அப்படியே சரிஞ்சவருதான் திரும்ப எந்திரிக்கவேயில்லை. பொளுதுசாயத்தான் கொண்டு போய் காட்ல வச்சுட்டு வந்தோம்.." என்று சொல்லிவிட்டு குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள். வரும் வழியில் அடித்த ரோஜா மணம் இப்போது சுகந்தமாக இருந்தது எனக்கு.

"அப்பாடி! செத்தான் எதிரி. இனி நமக்கு நல்ல காலம்." என்று மகிழ்ச்சியில் பூரித்தேன்.

"இல்ல. இப்ப என் கையில இருக்கிறது எனக்கும் அவருக்கும் பொறந்தது. இதுக்கு மேல..." என்று சோர்வாக இழுத்தாள்.

"உம்புள்ளை எம்புள்ளை" அவளை ஆதரவாகப் பார்த்தேன்.

".............."

"சம்மதம்ன்னு வாயத்திறந்து சொல்லு...இப்படியே இறங்கி வந்துரு. எங்கயாவது போயிடலாம்.." கெஞ்சினேன்.

"............."

"ஒரு கிழவனுக்கு நாலாவது பொண்டாட்டியா இருக்கலாம். பொண்டாட்டி கூட இல்ல வப்பாட்டி. எனக்கு மொத பொண்டாட்டியா இருக்க மாட்டியா?" ஆதங்கத்தில் கோபமாகக் கேட்டேன் நான்.

"பிடிச்சோ, பிடிக்காமலோ, நாலாவதோ, அஞ்சாவதோ அவருக்குன்னு மனைவியாத்தான் வாக்கப்பட்டேன். அவரைக் கட்டிக்கிட்டு அவருக்கு மட்டும்தான் முந்தி விரிச்சேன். புள்ள பெத்துக்கிட்டேன். இன்னிக்கி வாய்க்கரிசி போட்டு அவரை தூக்கிட்டு போய்ட்டாங்க. அவர் ஞாபகார்த்தமா இன்னிக்கி என் கையில அவரோட வாரிசு. வேறென்ன வேணும். இப்ப உன்கூட வந்தா நாளைக்கு உனக்கு ஏதாவது ஆயிடிச்சுன்னா வேற யாராவது வந்து அவன் கூட வரியான்னு கூப்பிடுவான். இப்படி ஒருத்தன் போயி இன்னொருத்தன் கூட போயிகிட்டு இருந்தா தாலி கட்டின வேசின்னு ஊருக்குள்ள சொல்லமாட்டாங்க... " என்றாள் உறுதியாக.

தொள்ளைக்காது பாட்டி ஒருத்தி தள்ளாமையாக நடந்து வருவது தெரிந்தது. எதுவும் பேச எனக்கு நாக்கு எழும்பலை. ஆனால் அதற்குமேல் அங்கே நிற்பது இருவருக்கும் நல்லதில்லை என்று எனக்குப் பட்டது. அவளை மொத தடவை பார்த்ததிலேர்ந்து ஆரம்பித்து அவன் கையை நா வெட்டிட்டு ஜெயிலுக்கு போனது வரை சினிமா மாதிரி ரீல்ரீலாய் வந்துட்டுப் போச்சு.

அவள் வீட்டிலிருந்து படி இறங்கி நடக்க ஆரம்பித்த என்னை ஒரு நாய் தெருக்கோடி வரை மௌனமாக வந்து வழியனுப்பியது. சின்ன சின்னத் தூறலாக ஆரம்பித்து மீண்டும் "சோ" என்று பெருமழை பேயாக அடிக்க ஆரம்பித்தது. அறுந்த செருப்பை ஓரமாக தூக்கி எறிந்துவிட்டு, அப்படியே சொட்டச் சொட்ட நனைந்து கொண்டே கால் போன திக்கில் போய்க்கொண்டிருக்கிறேன். ஒருவனுக்கு நாலாவதாக வாக்கப்பட்டு விதவையான வப்பாட்டி அவளைப் பிடித்தவனுக்கு முதல் பொண்டாட்டி என்கிற ஸ்தானத்தை விட பெரிய ஆளா? என்ற கேள்வி இடியாய் இடித்து மண்டையைக் குடைந்து கொண்டிருக்கிறது. உங்களுக்கு பதில் தெரியுமா?


-

29 comments:

சமுத்ரா said...

நட்சத்திர வாழ்த்துக்கள்..

இராஜராஜேஸ்வரி said...

நட்சத்திரத்திற்கு நட்சத்திர வாழ்த்துக்கள்.

தக்குடு said...

'திரை கதை எழுத எவன் எவனுக்கெல்லாமோ வாய்ப்பு கிட்டர்து! எங்க மைனருக்கு மட்டும் கிடைச்சா எவ்ளோ நல்லா இருக்கும்!'னு ஏக்கத்தோட சொல்ல தோனுது! PC Sriram-மோட காமிராவுக்கு சமமான வீரியத்தை பதிவு முழுதும் உணர்ந்தேன். வாழ்த்துக்கள்!

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

மழை பெஞ்சு முடிஞ்சும் தூவானம் விடாத வானம் போல அவனோட கேள்வி அவனுக்கு. மல்லிகாவோட நியாயம் அவளுக்கு.இதுல குறுக்கால பூந்து நாமென்ன சொல்ல?

கிராமத்தின் ஒரு மழை ராத்திரி அச்சு அசலாய்.

ஃப்ளாஷ்பேக்கும் நறுக் அண்ட் சுறுக்.

அடிக்கடி கிராமத்துப்பக்கம் போய்ட்டு வாரும் கதையில.

ஸ்ரீராம். said...

அபார வர்ணனைகள். அசத்தல் வரிகள்.

அப்பாதுரை said...

'உங்களுக்கு பதில் தெரியுமா?' தேவையில்லையோ?

உள்ளே இழுத்துப் படிக்க வைத்திருக்கிறீர்கள். சுவாரசியம்.

raji said...

அசாத்தியமான வர்ணனைகள்!

1.தலை கோதும் காற்றை தாய்க்கும்
மார் தடவும் காற்றை பருவக்காதலிக்கும் ஒப்பிடல் அருமை

2.ஹவாய் செருப்பின் பட் பட் காலடி ஓசை சுவர்க்கோழியின்
கிர்க் சத்ததிற்கு தாளவாத்தியமாய் அமைந்தது நல்ல லயம்

3.//பச்சத்தண்ணியில கழுவின நாகப்பழம் மாதிரி//-நல்ல கற்பனைதான்

4.//ஒருவனுக்கு நாலாவதாக வாக்கப்பட்டு விதவையான வப்பாட்டி அவளைப் பிடித்தவனுக்கு முதல் பொண்டாட்டி என்கிற ஸ்தானத்தை விட பெரிய ஆளா?//

இந்த ஒன் லைனை நல்ல நடையுடன் ஒரு முழு நீளக்கதையாய் மாற்றும் வித்தை அறிந்துள்ளீர்கள்
claps to u

இளங்கோ said...

முதலில் இருட்டு, மல்லிகை பூ வாசம் என, ஏதோ பேய்க் கதை போல இருக்குதுன்னு நெனச்சேன்.
நல்லா காதல் கதை, வர்ணனை என அசத்திட்டீங்க போங்க.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

வர்ணனைகள் காட்சிகளாக விரிகிறது. அசத்தலான நடை. வித்தியாசமான சிந்தனை.

RVS said...

@சமுத்ரா

Thanks. ;-)

RVS said...

@இராஜராஜேஸ்வரி
தொடர் வாசிப்பிற்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மேடம்! ;-))

RVS said...

@தக்குடு
ரொம்ப ரொம்ப நன்றி தக்குடுண்ணா! ;-)))

RVS said...

@சுந்தர்ஜி
நன்றி ஜி! ;-))

RVS said...

@ஸ்ரீராம்.
மிக்க நன்றி!!

RVS said...

@அப்பாதுரை
ஓரளவிற்கு தேறிட்டேனோ?
நன்றி தல. ;-))

RVS said...

@raji
ரசித்துப் படித்ததற்கு மிக்க நன்றி ராஜி! ;-))

RVS said...

@இளங்கோ
வாழ்த்துக்கு நன்றி தம்பி. ;-)

RVS said...

@வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)
தன்யனானேன் மேடம்! ;-))

பத்மநாபன் said...

வட்டார மொழியிலும் இப்படி வெளுத்துக்கட்டுகிறீர்களே...இதற்கு வாசிப்பு தாண்டி அதற்கு மக்களோடு மக்களாக பேசி பழகி உள் வாங்கினால் தான் முடியும்..

காட்சியமைப்புகளை எழுத்தில் கொண்டுவரும் அழகு நாளுக்கு நாள் மெருகேறி வருகிறது...

பத்மநாபன் said...

கிராமிய நடை கை கூடி வருகிறது கதையில்.. வாசித்தல் தாண்டி மக்களோடு மக்களாக பேசி பழகினால் தான் இவ்வளவு சாத்தியம்...

காட்சியமைப்பை எழுத்தில் கொண்டுவரும் அழகு நாளுக்கு நாள் மெருகேறி வருகிறது.....

RVS said...

@பத்மநாபன்
கிராமங்களில் வாழ்ந்ததன் பலன்.நன்றி பத்துஜி! ;-))

மோகன்ஜி said...

ஆர்.வீ.எஸ்! கொஞ்சம் லேட்! கதையை நிஜமாகவே பின்னியிருக்கிறீர்கள். கண்ணை இந்தப்பக்கம் அந்தபக்கம் வைக்கவிடாமல் உங்கள் பதிவில் ஒன்றிவிட்டது. வித்தியாச முயற்சி. கலக்குங்க !

RVS said...

@மோகன்ஜி
அண்ணா! மிக்க நன்றி. ;-)

Yaathoramani.blogspot.com said...

ஜெயகாந்தன் அவர்களின் யுகசந்தி கதையைத்தான்
ஒரு சர்குலர் காம்போசிஷனுக்கு அடிக்கடி உதாரணமாகச் சொல்வார்கள்
அதே நேர்த்தி தங்கள் படைப்பிலும் கண்டு ரசித்தேன்
தரமான படைப்பு
தங்கள் பதிவைத் தொடர்வதில் பெருமிதம் கொள்கிறேன்

மாதேவி said...

அருமையான நடை வாழ்த்துக்கள்.

சாந்தி மாரியப்பன் said...

கதையை படிச்சப்புறம், சமநிலைக்கு மீள அவ்ளோ சட்னு முடியலை. நேர்த்தியான எழுத்து நடையில் அருமையாயிருக்கு.

RVS said...

@Ramani

சார்! பாராட்டுக்கு மிக்க நன்றி. ;-)

RVS said...

@மாதேவி
நன்றி சகோ. ;-)

RVS said...

@அமைதிச்சாரல்
சில சமயம் இது போல அமைஞ்சிடுது... ஹி..ஹி.. நன்றி சகோ. ;-)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails