Friday, September 23, 2011

இளமுருகு::தமிளு::இராமசாமி



இளமுருகு
----------------
என்னையும் அந்த முனை உடஞ்ச சிமெண்ட் பென்ச் மேல படுத்திருக்கிற விகாரமான சொரி நாயையும் தவிர்த்து இந்த பஸ் ஸ்டாப்ல வேற யாருமே இல்லை. நா மட்டும் தனியா ஊருக்கு போற ரூட் பஸ்ஸுக்கு காத்துக்கிட்ருக்கேன். ஈசான மூலையில வானம் கண் மையாக் கருத்திருக்கு. அதோ அந்தக் கண்ணுக்கெட்ற தூரத்தில அந்த ரெட்டை மொட்டை மாட்டு வண்டி திரும்பற தார்ரோட்டு வளைவுக்கு அப்பால பளிச் பளிச்சுன்னு மேகத்த குத்திக் கிழிச்சுக்கிட்டு மின்னல் வெட்டுது. டமார் டமார்னு காது கிழிய அதிர்வேட்டா பொளக்குது வானம். சாரக் காத்து ஆளத் தூக்குற மாதிரி பலமா வீசுது. கிழக்கால பொத்துக்கிட்டு ஊத்துது. ஒரே சிலுசிலுன்னு இருக்கு. ரொம்ப நேரமாயிட்டுதோன்னு பார்த்தா மணி நாலு தான் ஆவுது.

சாயந்திரம் நாலு மணிக்கே கும்மிருட்டா இருட்டிக்கிட்டு வந்துடிச்சு. தார்ரோட்டைச் சுத்திலும் பச்சைப் பசேல்னு வயக்காடு. மூணு போகம் வெளையுற பூமி. குருவை நட்ருக்காங்க. ஆத்தில புதுத் தண்ணி. வரப்பு ஓர வாய்க்கால்ல தண்ணி சலசலன்னு கோரைப்புல்லை ஆட்டிவுட்டுக்கிட்டே வெள்ளமாப் பாயுது. பக்கத்துல யாருமே இல்லையா அதனால எங்கயோ காக்காங்க கூட்டமா கத்தற சத்தம் நல்லாக் கேக்குது. கொஞ்ச நேரத்துக்கு ஒரு தடவை “ஹோ...”ன்னு அலறி வீசுற ஒவ்வொரு பேய்க் காத்துக்கும் இந்த “இரத்தினத்தம்மாள் நினைவு பேருந்து நிறுத்தம்” மேல உரசிச் சாஞ்சுகிட்டிருக்கிற அந்தப் பெரிய பூவரசு மரம் தலையை சிலுப்பிக்கிட்டு ஆட்டமாய் ஆடுது. எப்படியும் இந்தத்தடவ அவளப் பார்த்திடலாம்னு நினைச்சு தான் இங்க வந்தேன். இன்னிக்கும் முடியல. ஒவ்வொரு தடவயும் லீவுக்கு ஊருக்கு வர்ற போது பாக்கனும்னு ட்ரை பண்றேன். முடியமாட்டேங்குது.

மேல் சட்டை பட்டன் கழண்டு என்னோட பாவப்பட்ட நெஞ்சு போல படபடன்னு காத்துல அடிச்சுக்குது. பக்கத்து கிராமத்துக்கு “பாபி ஐஸ்” பொட்டிக் கட்டி குச்சி ஐஸ் விக்கப் போனவன் சைக்கிளை காத்து அலேக்கா தூக்க மிதிக்க முடியாம தூரத்தில ஆடி அசஞ்சு வரான். ஊர்ல சுந்தரத்தம்மா வூட்ல சண்ட வந்தப்போ அவுங்க தம்பி சம்சாரம் “நீங்க நல்லாவே இருக்க மாட்டீங்கடா.. நாசமத்துப் போயிடுவீங்க”னு மண்ண வாரி தூத்துனது போல ரோட்லேர்ந்து புழுதியும் குப்பையையும் காத்து வாரி சுத்தி சுத்தி அடிக்குது. பேலன்ஸ் இல்லாம அவனோட ஹைதர் அலி காலத்து சைக்கிள் அது இஷ்டம் போல ரோட்டை அளக்குது. மட்கார்டு, செயின் கார்டு, பாருக்கெல்லாம் செவப்பு பெயிண்ட் அடிச்சு வச்சுருக்கான். சைக்கிள் மிதிச்சு களைச்சுப் போயி வந்தவன் யாருமே இல்லாத அத்துவான ரோட்டில தனியாளா ஒதுங்கி நிக்கிற என்னப் பார்த்தவுடனே

“யாரு.. மாட்டாஸ்பத்திரி டாக்டர் தங்கராசு மவனா?”

ஒத்தக் கண்ணை இடுக்கிப் பார்த்த ஐஸ்காரனுக்கு என்னை அடையாளம் தெரிஞ்சிடிச்சி. ஆள் உயரம் கம்மியா சைக்கிள் பார் உசரத்துக்கு இருந்ததால சர்க்கஸ்காரன் சாமர்ஸட் அடிக்கிற மாதிரி குதிச்சு இறங்கினான். குதிச்ச வேகத்துல ஹவாய் செருப்பு வார் பட்டுனு விட்டிடுச்சு. பஸ் ஸ்டாப் சுவத்தில ஒட்டியிருந்த “முத்து” ரஜினி முகத்து மேல பின்னால ஐஸ் பொட்டி கட்டின வண்டியை சாச்சுப்புட்டு செருப்பைக் கையில எடுத்து வாரை நுழைச்சுகிட்டே என்னைப் பார்த்து ஈன்னு இளிச்சான்.

“தம்பி எங்க இம்புட்டு தூரம்?”

“இல்ல.. இங்க கொஞ்சம் வேலை இருந்திச்சு... அதான்..”

“இந்த வயக்காட்டுல அப்டி என்ன வேல” வாரை நுழைக்க முடியாம இடுப்புல அரணாக்கயிரில தொங்கிகிட்டு இருந்த ஊக்க எடுத்து செருப்போட சேர்த்து போட்டுவிட்டான்.

“அப்பாவுக்கு தெரிஞ்சவங்க ஒருத்தவங்க இருக்காங்க. அவங்களைப் பாக்கலாம்னு....” தயங்கித் தயங்கி இழுக்கறேன் நானு. ச்சே.. என்ன மனுஷன் நானு. எவனோ ஒரு குச்சிஐஸ்காரன் கேள்விக்கெல்லாம் பதில் சொல்றேன்.

“இங்க யாரு தம்பி ஒங்களுக்கு தெரிஞ்சவங்க இருக்கப் போறாங்க? இங்கேருந்து வடக்கால கண்டியர் பங்கு தாண்டினா கீளயூரு. தெக்கால ஊர்லாம் ரொம்ப தொலவு. நடந்து போவ முடியாது. கீளயூருல யாரையாவது பாக்க வந்தீங்களா?”

அவன் உடற மாதிரி இல்ல. பதிலுக்கு பதில் எதிர் கேள்வி கேக்கறான். எனக்கு செம எரிச்சல். என்னன்னுட்டு இவன்ட்ட சொல்லுவேன். அவள இவனுக்கு தெரியுமா? இல்ல யாருன்னு சொன்னா புரிஞ்சுப்பானா. சுத்தக் கேனப்பய..

“இல்லிங்க... நமக்கு தெரிஞ்ச ஒருத்தங்க...”

“தம்பி.. இருவது வருசமா சுத்துப்பட்டு பதினெட்டுப்பட்டி சனங்களுக்கு நாந்தான் பொட்டியில கட்டிக்கிட்டு போயி ஜில்லிப்பு குடுக்கறேன். “பாம்..பாம்”னு சத்தம் கேட்டவுடனே அரையிலேர்ந்து டவுசர் அவுர ஓடிவந்து எங்கிட்ட பால் ஐஸ் வாங்கிச் சாப்டவனெல்லாம் இப்ப சிங்கப்பூர்ல சொகமா இருக்கானுவ. எனக்கு தெரியாம யாரு இங்கின புதுசா குடி வந்துடப்போறாங்க......... சொல்லுங்க தம்பி”ன்னு சொல்லிட்டு வெட்கமே இல்லாம கைலியை அண்ட்ரவர் தெரிய வாரிசுருட்டித் தூக்கி மூஞ்சியை துடச்சிக்கிட்டான்.

யாரு யாருன்னு விடாம அரிக்கிறான். யார் எக்கேடு கெட்டுப் போனா இவனுக்கு என்ன... ஐஸ் வித்தோமா.. வீட்டப் பாக்க போனமான்னு இல்லாம... பாவி! அடச்சே இந்த சமயத்தில பஸ்ஸு வேற வரமாட்டேங்குது....

போச்சு. ஒன்னு ரெண்டு தூத்தலா மழ ஆரம்பிச்சுடுச்சு. இந்த ஐஸ்காரன் இப்போதைக்கு கிளம்பமாட்டான். அப்படியே நனஞ்சுக்கிட்டே பொடிநடையா கிளம்பவேண்டியதுதான்..

“தம்பி... தம்பி... என்ன கிளம்பிட்டீங்க” ஐஸ் விக்கறதுக்கு கூவுகிற மாதிரியே என்னைக் கூப்புடறான்... என்னோட சட்டை நனைந்தாலும் பரவாயில்ல.. நான் அவனை சட்டை செய்வதாயில்லை.....

தமிளு
----------

புல்லுக்கட்டு இல்லனா கூட எம்பின்னாடியேத் தான் முட்டிகிட்டே வரும் இந்த கொழுத்துக் கருத்த ராமு. போற வளியில பூரசு மரத்லேர்ந்து இல பறிச்சிப் போட்டா துள்ளிக்கிட்டு குசியாத் தின்னும். எங்கூட வாரதா இருந்தா அதோட புள்ளக்குட்டிங்களைக் கூட பின்னால வருதான்னு பாக்காது. “ம்.மே..ம்..மே”ன்னு செல்லமா கனைச்சுக்கிட்டே ரெண்டு காலுக்கு நடுவுல வந்துப் பாயும். முந்தாநாளு வந்த கோவத்துல ரெண்டு போட்டேன். பெருமாளு டீக்கடை வரைக்கும் ரோசமா பாஞ்சு ஓடிப்போயிட்டு திரும்பவும் வந்து திண்ணையில பேசாம படுத்துகிச்சு. பொல்லாது. அஞ்சறிவு இருந்தாலும் அம்புட்டு அன்பு எம்மேலே. இவ்ளோ பிரியமா இருக்கறதுகள எப்படி அடிச்சி சாப்பிட மனசு வரும்.ஆயிர்ரூவாயிக்கு தரியான்னு பாக்கும்போதெல்லாம் கேக்கறாரு அப்துல்லா பாய். நா முடியாதுன்னுட்டேன்.

கால் முட்டியில அடிபட்டு போன வாரம் நாயித்துக்கிளம ஒரே அலறலா அலறிச்சு. ஓடிப் போயி டவுனு ஆஸ்பத்திரில கட்டு போட்டுகிட்டு வந்தேன். அதுக்கு முத வாரம் புளுக்கைகு பதிலா தண்ணி தண்ணியா ஒரே களிசல். என்னத்த தின்னு வச்சுதுன்னு தெரியல. பொளுது விடிஞ்சதும் ஆசுபத்திரிக்கு தூக்கிகிட்டு ஓடினேன். இதுவரைக்கும் ரெண்டு மூனு தடவ ஆசுபத்திரிக்கு அளச்சிக்கிட்டு போயிருக்கேன். டாக்டர் ஐயா போனதுக்கப்புறம் ஏதோ இராமசாமி ஐயா அங்க டவுனுல இருக்கிறதுனால நம்ம பொளப்பு ஓடுது.

ஒன்னுத்துக்கும் உதவாத அப்பங்காரன் உசுரோட இருந்தா என்ன செத்தா என்ன. எப்போ பாத்தாலும் பாட்டிலும் கையுமா ஒரே குடி. சாப்பாட்டுக்கு பொறவு தண்ணி குடிக்க கூட வொயினு பாட்டிலுதான் சவத்துக்கு. உடம்பில ரத்ததுக்கு பதிலா சாராயமா ஓடுது. வாயிலேர்ந்து எச்சி ஒளுகிக்கிட்டு, செம்பட்ட தலையோட, எப்பவுமே இடுப்புலேயே நிக்காத வேட்டி. அம்மாவ ரத்தம் குடிக்கிற அட்டப்பூச்சி மாதிரி உறிஞ்சி கால்ல போட்ருந்த தம்மாத்தூண்டு மெட்டி வரைக்கும் எல்லாத்தையும் கொஞ்ச கொஞ்சமா உருவிட்டான். இவந் தொந்தரவு தாங்காம ஒரு நா கர்கள்ல அரளி விதய அரச்சிக் குடிச்சிப்புட்டு உசிர உட்டுப்புட்டா என்னப் பெத்த மவராசி. தாவணி போட்ட சின்னப் புள்ளயா இருக்கேன்னு பாவப்பட்டு தொணைக்கு வந்த சின்னம்மாவை ஒரு நா போதயில கைய புடுச்சி இளுத்துப்புட்டான் எங்கப்பன் படுபாவி!

குய்யோ முறையோன்னு அளுதுகிட்டு “டீ தமிளு... இந்தக் குடிகாரபய கூட ஒரு நிமிசங் கூட இருக்காதடீ. நீயும் கண்காணாம எங்கனா ஓடிப்போயி பொளச்சுக்க”ன்னு மூக்க சிந்திக்கிட்டே ராவோட ராவா அதும்பாட்டுக்கு ஊட்டுக்கு ஓடிப் போயிரிச்சு. அன்னியிலேர்ந்து இன்னிக்கி வர இந்தாளுக்கு சோறாக்கிப் போட்டு கவனச்சிக்கிட்டு வரேன். ”எப்பப் பாத்தாலும் குடிக்கிறியே... உம் பொண்டாட்டியத்தான் இதுக்கு பரிகொடுத்தே உம் பொண்ணையுமா”ன்னு அக்கம்பக்கத்துல நாலு பேர் நாயம் கேட்டதுக்கு திரும்பவும் போய் குடிச்சிப்புட்டு வந்து வேட்டி அவுர ரோட்ல நின்னுக்கிட்டு கெட்ட கெட்ட வார்த்தல திட்டிக்கிட்டு ஒரே கூச்சல். பேசறதுல பாதி வார்த்த குளறுது. “இழ யாழுக்கு பொழ்ந்ழா. அதச் சொழ்ழாம இவழ பெழ்ழவ போழ்ட்டா”னு கன்னாபின்னானு பினாத்தல்.

டவுனுல அரிசி மண்டி ராமசாமி ஐயா எங்க ஊருல கொஞ்சம் மருவாதயான ஆளு. பட்டாளத்துல வேலை பாத்துட்டு இப்ப இங்கின அரிசி கட வச்சுருக்காரு. சிகிரெட்டு பத்த வக்கிற தடிமாடுங்க கூட ராமசாமி ஐயாவப் பாத்து அத கீளப் போட்டு கால்ல நசுக்கிடும். அம்புட்டு மருவாத. ரொம்ப தங்கமான மனுசன். அவரு கூட ரெண்டு மூனு தடவ எங்கப்பனப் பஞ்சாயத்துப் பண்ணிப் பார்த்தாரு. உஹும் மனுசன் திருந்திற வளியா தெரியலை. பத்தாதுக்கு ஊரு பூரா செத்துப்போன எங்கம்மாவையும் என்னையும் பத்தி அசிங்க அசிங்கமா உளறவேண்டியது. இதனால எனக்கு மட்டுமா அவமானம், பாவம் அந்த ஐயாவுக்கும் மானம் போவுது.

எப்படியாவது இதுக்கு ஒரு வளி பொறக்கணும்னு நானும் இந்த பேச்சியம்மாவை வேண்டிகிட்டுதான் இருக்கேன்! ஆத்தா கண்ணு தொறந்தா எதுவும் நடக்கும்....... மள விட்டுதான் ஊட்டுக்கு கிளம்பனும்... மண்டபத்துல ஒரு லைட்டு கூட கெடையாது. பூசாரியோட வெள்ள மீசய அரை வெளக்குல பாத்தாலே பயம்மா இருக்கு...கருத்த ராமு கிடந்து தவிப்பான்...

இராமசாமி
----------------

பேருந்து நிலையம் அருகில் இருக்கும் மனோன்மணி விலாஸ் பள்ளிக்கூடத்தில் பத்தாம் வகுப்பு ’ஆ’ பிரிவில் நான் மாவட்டத்திலேயே முதல் மாணாக்கனாக ஜொலித்த போது எனது தந்தையார் தவறிவிட்டார். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? நான் இப்படித்தான். என்னை ‘தமிழ்’ இராமசாமி என்ற அடைமொழியுடன் தான் ஊரார் அழைப்பார்கள். தூய தமிழில் திகட்ட திகட்ட இலக்கியம் பேசுவது எனக்கு அச்சு வெல்லத்தை பொன்னி அரிசியுடன் கலந்து தின்பது போலப் பிடிக்கும். உடனே சமஸ்க்ருதம் கலக்காமல் பேசுவீர்களா? பௌர்ணமியை முழுநிலவு என்று தான் விளிப்பீர்களா? துட்டு என்பது சுந்தரத் தெலுங்கா? என்று கேள்விக் கணை தொடுக்கக்கூடாது. எனக்குத் தெரிந்த வரை நான் சுத்தத் தமிழ் பேசுகிறேன். இராணுவத்தில் நாட்டுக்காக தொண்டாற்றிய போது மேலதிகாரிகள் இந்திப் பயிலச் சொன்னார்கள். மறுப்பேதும் சொல்லாமல் கற்றுக்கொண்டேன். தமிழ் எனக்கு அம்மா என்றால் இந்தி சிறிய தாயார். இரண்டும் கலந்து மணிப்ரவாளமாகக் கூட பேசத்தெரியும். இருந்தாலும் நான் ஒரு தமிழ் ப்ரியன். அவ்வளவுதான். வெறியனல்ல.

இரசீது, கடைப் பெயர்ப்பலகை, அரிசியின் ரகங்கள் மற்றும் விலைப்பட்டியல் போன்ற அனைத்தையும் எனது கடையில் தூய தமிழில் பார்த்துவிட்டு என் மீது பிரியத்துடன் மருத்துவர் ஐயா எனக்கு ஆத்ம நண்பரானார். நல்ல கெட்டிக்கார மருத்துவர். தமிழ்ப் பித்தர். சைவத் திருமுறைகள் அனைத்தையும் நடுநிசியில் எழுப்பிக் கேட்டாலும் மனப்பாடமாக ஒப்பிப்பார். ”நால்வர் காட்டிய வழி“ என்று ஒரு ஐம்பது பக்க புத்தகத்தை எழுதி சொந்தச் செலவில் அச்சேற்றினார். உத்தமமான கொள்கைகள் கொண்டவர். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரைப் போல வாடிய மிருகங்களைக் கண்டு வருந்துபவர். வாய் பேசமுடியாத விலங்கினங்களின் நோய் தீர்ப்பது அரிதான காரியம். அதை மிகச் செவ்வனே செய்வார்.

பொதுவாகவே உயிர்களிடத்தில் பேரன்பு செலுத்தும் அவருக்கு வாழ்க்கையில் அடிமட்டத்தில் அடிபடும் ஏழை ஜீவன்களைக் கண்டால் மனம் பாகாய் இளகி விடும். காட்டிலும் மேட்டிலும் ஆடுமாடு மேய்த்துக் கஷ்ட ஜீவனம் நடத்தும் மக்களுக்கு இலவசமாக நிறைய உதவிகள் புரிவார். சித்திரைத் திருவிழாவின் கடைசியில் தேரோட்டம் நடைபெறும் சமயத்தில் கீழையூர் இரத்தினம் ஒரு கிடேரி கன்றுக்குட்டி வேண்டும் என்ற ஆசையில் அவளது காறாம் பசுவை கால்நடை மருத்துவமனைக்கு ஓட்டிக்கொண்டு வந்தாள். அடுத்த வேளை சோற்றுக்கே திண்டாடும் நிலையிலும் பசுவை பராமரிக்கும் அவளது ஜீவகாருன்ய குணம் அவருக்குள் இருந்த தயாள குணத்தை கொம்பால் முட்டித் தூண்டியது. மாட்டிற்கு இலவச வைத்தியம் செய்தார்.

அடுத்த வேளைக்கு பொங்குவதற்கு அரிசி வாங்க என்னைக் கைக் காட்டினார் தங்கமான மனசுக்காரர் தங்கராசு. அரிசி மண்டியில் மதியம் போக்கற்று உட்கார்ந்திருந்தபோது பவளவாய் திறந்து முத்துப் பற்கள் தெரிய சிரித்தபடி அழகாக அசைந்து வந்தாள் இரத்தினம். அப்போது
”நாற்குணமும் நாற்படையா, ஐம்புலனும் நல்லமைச்சா,
ஆர்க்கும் சிலம்பே அணிமுரசா - வேற்படையும்
வாளுமே கண்ணா, வதன மதிக்குடைக்கீழ் 
ஆளுமே பெண்மை அரசு ”
என்று புகழேந்தியாரின் நளவெண்பாவில் மூழ்கி சந்தோஷப்பட்டுக்கொண்டிருந்தேன். அட்சரம் பிசகாமல் அந்த வரிகளை ஒப்புமைப்படுத்துதல் போல எதிரே அழகின் அரசாட்சிக்கு அத்தாட்சியாக நின்றாள்.

நானும் என்னால் இயன்றதைக் கொடுத்துதவினேன். கிராமத்திலிருந்து நகரத்திர்க்கு வரும்போதெல்லாம் என் அங்காடிக்கும் ஒரு எட்டு வந்து எட்டிப் பார்த்துப் போனாள். ஒரு முறை பார்த்ததற்கு மறுமுறை இன்னும் அழகாகத் தெரிந்தாள். நாளுக்கு நாள் மெருகேறினாள். ஊரிலும் கால்நடை மருத்துவமனையிலும் அவள் தலை அடிக்கடி தென்பட்டதால் தங்கராசு வீட்டில் அரசல்புரசலாக இரத்தினத்தைப் பற்றி அவதூறு பேச ஆரம்பித்தார்கள். இரத்தினத்தின் கணவன் ஒரு கண்கண்ட அசுரன். அவன் அவளது துர்பாக்கியம். வேளாவேளைக்கு சாப்பிடுவதற்கு பிரச்சனை ஏதும் இல்லை என்று தெரிந்ததும் கட்டவிழ்த்துவிட்ட காளையாக எங்கும் திரிந்தான். எல்லா நேரத்திலும் குடித்துக் கும்மாளமடித்தான். கும்மாளமடிப்பதோடு திருப்தியடையாமல் அவளையும் போட்டு அடித்துத் துவைத்தான் அழகை ஆராதிக்கத் தெரியாத அந்த மூர்க்கன்.


அவனுடைய இம்சை பொறுக்கமுடியாமல் ஒரு நாள் ஆசிரியை தேவியின் வீட்டு அரளி விதையை அரைத்து அவள் ஓட்டி வந்த அந்த பசுவின் சீம்பாலில் கரைத்து குடித்து தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டாள். இரத்தினம் இறந்த முதல் வருட நினைவு நாளன்று கீழையூரில் நிழற்குடை திறந்த அன்று இரவு தங்கராசும் ஒரு விபத்தில் இறந்தார். இருவருடங்களில் வைரமாக இருந்த இரத்தினம் மற்றும் தங்கம் இரண்டையும் இழந்து தவித்தேன். இரத்தினத்தம்மாள் இறந்து ஐந்து வருடங்கள் ஆகியும் இளமுருகு வீட்டில் கொதிப்பு அடங்கவில்லை. சரி... மணி ஒன்பது அடிக்கிறது. வீட்டில் தருமு காத்திருப்பாள். கிளம்பலாம் என்று கடையை அடைத்தேன். கொத்துசாவியை பையில் போட்டுக்கொண்டு வாசலில் இறங்கி எனது இருசக்கர வாகனத்தை உதைக்கும் போது

“என்ன மாமா வீட்டுக்கு கிளம்பிட்டீங்களா?” அட. நம்ம இளா.

“என்னப்பா இப்படி தொப்பலா நனஞ்சுகிட்டு வரே” என்ற கேள்விக்கு “ஹும்” என்று விரக்தியாகச் சிரித்தான். கீழையூரிலிருந்து வருகிறான் என்று புரிந்துகொண்டேன்.

“என்னிக்கு ஊருக்கு?” என்று கேட்டு அவனை பிற குசலங்கள் விசாரித்து திசைதிருப்பி வீட்டுக்கு அனுப்பினேன்.

மரகதம் தியேட்டர் தாண்டும் போது இரவுக் காட்சிக்கு கூட்டம் ரோடு வரை தவமிருந்தது. ஒரே நாளில் கடல் நீரனைத்தையும் நிலத்தில் கொண்டு வந்து சேர்ப்பது போல மழை கனமாகப் பிடித்துக்கொண்டு கொட்டித் தீர்க்கிறது. இது போல ஒரு அடர்மழை நாள் இரவில் அரிசி மண்டியில் இரத்தினத்துடன் ஏற்பட்ட அந்தரங்கப் பழக்கம் படிப்படியாக வளர்ந்து தமிழ்செல்வி என்று அவளுக்கு ஒரு பிள்ளை கொடுக்கும்வரை வந்ததை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். இறக்கும்வரை இரத்தினத்தை உள்ளங்கையில் வைத்து தாங்கினேன், தமிழ்செல்வியைப் பார்க்கும்போதெல்லாம் அவளைப் பெற்றவன் என்ற வகையில் அவள் தனிமையை எண்ணி எண்ணி உள்ளுக்குள் புழுங்குகிறேன். உருகுகிறேன். ஊர் மரியாதையை ஏற்க எண்ணவெல்லாம் தாங்கிக்கொள்ள வேண்டியிருகிறது.

இரத்தினத்துடனான எனது பழக்கம் தனக்கு வீட்டில் பூசல் உண்டாக்கியது என்றறிந்து என் சட்டையைப் பிடித்து “படுபாவி! நீ நல்லாயிருப்பியா?” என்று சண்டையிட்ட தங்கராசுவை திட்டமிட்டுத் தீர்த்துக்கட்டியது நான் தான் என்ற இரகசியத்தைப் இப்போது உங்களுக்கு மட்டும் சொல்கிறேன். தயை கூர்ந்து யாரிடமும் சொல்லிவிடாதீர்கள். தங்கராசுவை எப்படி எங்கே கொன்றேன் என்று கதை கேட்கவும் உட்கார்ந்துவிடாதீர்கள். இதோ எனது வீடு வந்துவிட்டது. தருமு வாசலில் காத்திருக்கிறாள்! தமிழ் வாழ்க. என்னுடைய பிள்ளை ’தமிழு’ம் வாழ்க!!

பின் குறிப்பு:  மூன்று கதாபாத்திரங்கள் வழியாக இந்தக் கதையை நகர்த்தியுள்ளேன். இதுவும் என்னுடைய புதுமுயற்சி. ஒவ்வொரு பாத்திரமும் கடைசியில் ஒன்றாக கோர்க்கப்பட்டுள்ளது.

பட உதவிக்கு இணையத்திற்கு ஒரு நன்றி. கிரடிக்ட் கொடுப்பதற்கு வலைத்தளம் மறந்துவிட்டேன்!

-

26 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்ல முயற்சி நண்பரே... நன்றாக இருக்கிறது சிறுகதை...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

நல்ல புதுமையான முயற்சி... Vantage Point படத்தை திரும்ப திரும்ப பாத்து புரிஞ்சுட்ட மாதிரி ரெண்டு வாட்டி படிச்சு புரிஞ்சது. நீங்க இலக்கியவாதி ஆகிட்டீங்ககரதுக்கு இதுவே சாட்சி....:) ஜோக்ஸ் அபார்ட்... நல்ல பதிவு

RAMA RAVI (RAMVI) said...

முதலில் தனிதனி கதை என்றுதான் நினைத்தேன்,கடைசியில் படித்தபொழுது புரிந்தது.
வித்யாசமான முயற்சி. நன்றாக இருக்கு. பகிர்வுக்கு நன்றி.

raji said...

வித்தியாசமான முயற்சியில் வெற்றியும் பெற்றிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.

வழக்கம் போல் கதை நடை சுவாரசியம் மிகுந்ததாய் இருந்தது.

அப்பாதுரை said...

பிரமாதம். தமிளுவைப் படிக்கத் தொடங்கியதும் புரியத் தொடங்கியது. very ice.

சுமார் முப்பது வருடங்களுக்கு முன் ஒரு தமிழ்த்திரைப்படம் வந்தது. மூன்று வெவ்வேறு கதைகள் கடைசியில் சேரும் வித்தியாசமான படம். முத்துராமன் நடித்த படம். பெயர் மறந்து விட்டது. வருடக் கணக்கில் தேடிக்கொண்டிருக்கிறேன். யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.

இந்தக் கதை படித்ததும் அந்தப் படம் ஞாபகம் வந்து விட்டது. கதைக்கும் படத்துக்கும் சம்பந்தமில்லை :)

அப்பாதுரை said...

அதவின் இலக்கியவாதி கமென்ட்.. வளிமொலிகிறேன்.

Unknown said...

மைனர் வாள் கலக்கிட்டேள்

ஒரு ஒரு இடமும் பாத்து பாத்து செதுக்கிய
சிற்பம் போல

அழகாய் கிராமத்து வர்ணனைகள்
அந்த பேச்சும் அப்படி
வாழ்க வளமுடன் தொடரட்டும் உங்கள் பணி

இமா க்றிஸ் said...

முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டீர்கள். கதையைக் கொண்டுபோயிருக்கும் விதம் மிகவும் நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள். @}->--

ரிஷபன் said...

ஒவ்வொரு முறையும் நீங்கள் வித்தியாசமாய் செய்யும் முயற்சிகள் எனக்கு பொறாமையை தருகின்றது.
கொண்டு வந்து முடித்த விதம் அருமை.

Anonymous said...

காதல் கணினி ????

ADHI VENKAT said...

வித்தியாசமான சிறுகதை முயற்சி. வாழ்த்துக்கள்.

மாதேவி said...

புதிய முயற்சி. நன்றாக இருக்கிறது.

பத்மநாபன் said...

அ.த அ.து இருவரும் இலக்கியமுயற்சி என்று பயப்படுத்தினாலும் தைரியமாக உள்ளே நுழைந்து படித்தே விட்டேன்... புதுமை... நல்லாவே கதையை நகர்த்திறிங்க....

RVS said...

@வெங்கட் நாகராஜ்
முதல் வாழ்த்துக்கு நன்றி தல! :-)

RVS said...

@அப்பாவி தங்கமணி
இளக்கியமா?... ஐயய்யோ.... இதோ ஓடிட்டேன்!!

பாராட்டுக்கு நன்றி அ.த. :-)

RVS said...

@RAMVI
நன்றிங்க மேடம். ஏதோ ட்ரை பண்றேன். :-)

RVS said...

@raji

நன்றிங்க லாஜி! :-)

RVS said...

@அப்பாதுரை
தலைவரே தொடர்ந்து ரெண்டாவது தடவையா உங்ககிட்டேயிருந்து பாராட்டு.... மிக்க நன்றி.. அடுத்ததும் புச்சா ட்ரை பண்றேன். :-)

RVS said...

@அப்பாதுரை
தலைவரே தொடர்ந்து ரெண்டாவது தடவையா உங்ககிட்டேயிருந்து பாராட்டு.... மிக்க நன்றி.. அடுத்ததும் புச்சா ட்ரை பண்றேன். :-)

RVS said...

@siva
நன்றி சிவா! :-)

RVS said...

@இமா
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க... அடிக்கடி வாங்க. :-)

RVS said...

@ரிஷபன்
நன்றி சார்!

RVS said...

@Anonymous

வரும்..வரும்.. :-)

RVS said...

@கோவை2தில்லி
நன்றி சகோ!! :-)

RVS said...

@மாதேவி
நன்றிங்க.. என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம்? :-))

RVS said...

@பத்மநாபன்
தலைவரே! உங்களுக்கு பயமா? பாலைவனத்தில் மற்றவர்களுக்கு பயம் காட்டும் உங்களுக்கா பயம்? :-))
பாராட்டுக்கு நன்றி ரசிகமணி சார்! :-)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails